-6-
141) சத்திய யுகம் என்று அழைக்கப்படும் முதல் யுகத்தில் மக்கள் பேராசை, தீய,எதிர் மறை எண்ணங்கள் இல்லாதவர்களாக, தூய்மையானவர்களாக, ஆத்திரம் மற்றும் பழிவாங்கும் செயல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருக்கும் குணாதிசயங்களை பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதை பிரம்மா உணர்ந்தார். எனவே சத்ய யுகத்தில் அவர்களை வழி நடத்தவும் பாதுகாக்கவும் அதிக தெய்வீக சக்திகள் தேவை இருக்காது; ஆனால் நேர்மை குறைந்து கொண்டே செல்லும் அடுத்தடுத்த யுகங்களுக்கு மட்டுமே அதிக அளவிலான தெய்வங்கள் தேவைப்படும் என்பதையும் பிரும்மா உணர்ந்து இருந்தார். எனவேதான் பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு, சத்ய யுகத்தில் தொடங்கி நான்காவது யுகத்தின் இறுதி வரை யுக யுகமாக பல்வேறு வடிவங்களிலும் தோற்றங்களிலும் அதிக எண்ணிக்கையில் தெய்வங்கள் தோன்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்தார்.
142) ஒவ்வொரு புதிய யுகத்தின் தோற்றத்திலும் மனிதர்களின் மன எண்ணங்கள், தூய்மை மற்றும் நல்ல பண்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்லும்; கலியுக தோற்றத்தில் மனிதர்களின் எண்ணங்களிலும், வாழ்விலும் தூய்மை, மனிதாபிமானம் போன்றவை பெருமளவிலான வீழ்ச்சியை அடைந்திருக்கும் என்பதையும் பிரம்மா நன்கே அறிந்து கொண்டு இருந்தார்.
143) யுக துவக்கத்தில் படைக்கப்பட்ட ஆத்மாக்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த யுகங்களில் மெல்ல மெல்ல பெருகிக் கொண்டே இருக்கும் என்பதை பிரம்மா அறிந்திருந்தார்; எனவேதான் ஒரு மன்வந்தரம் எனும் கால அளவு முடியும் வரை அவர்கள் அனைவரும் வாழ்வதற்கு தேவையான அளவிலான நிலப்பரப்பும் இருக்கும் வகையில் செயல் பட்டார். மானிடர்கள் மன நிலையும், பண்புகளும் அந்தந்த நிலத்தின் தன்மைக்கேற்பவே அமைந்து இருக்கும் என்பதினால், அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்வார்கள் என்பதையும் பிரும்மா உணர்ந்து இருந்தார். அந்த எண்ணத்தில்தான் அதிக அளவிலான குலதெய்வங்கள் தோன்ற வேண்டும் என்பதற்கான செயல் திட்டத்தையும் செய்து வைத்தார். அதனால்தான் திரேதா யுகத்தில் இருந்து துவங்கி யுக யுகமாக நாம் அதிக எண்ணிக்கையிலான தெய்வங்களை பல்வேறு உருவங்களில் பார்க்கின்றோம்.
144) சத்திய யுகத்தில் ஆன்மாக்கள் குடியேற நிலம் தயார் செய்யப்பட்ட பிறகு, பிரம்மாவின் படைப்புகள் மெல்ல மெல்ல அறிவாற்றல் கொண்டவர்களாக மாறத் துவங்கினார்கள். மிகக் குறைவான அளவிலேயே தெய்வ வழிபாடு எனும் பழக்கம் துவங்கி சில தெய்வங்களை வழிபடும் நிலை இருக்க, அதுவே மெல்ல மெல்ல திரேதா யுகம் மற்றும் துவாபர யுகங்களில் விரிவடையத் துவங்கியது. மனிதர்களின் அறிவு விரிவடையத் தொடங்கியதும், ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் நமக்கு மீறிய எதோ சக்தி உள்ளது என்பதாக நம்பத் தொடங்கினர். அந்த கண்களுக்கு தெரியாத சக்தியிடம் தம்மை பாதுகாக்குமாறு பிரார்த்தனை செய்தனர். இதுவே தெய்வ வழிபாட்டிற்கு அடித்தளமிட, அதுவே குல தெய்வங்கள் வழிபாடாக விரிவடைந்தது.
145) வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, மரங்கள், மலைகள், பாறைகள் மற்றும் இயற்கையினால் ஏற்பட்டிருந்த சில வடிவங்களைக் கொண்ட பாறைகளையும் வணங்கினர் என்பதாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.எதோ சக்தியினால் இயங்கும் இடி, மின்னல் மற்றும் மலைகளை தாம் வணங்காவிடில் அவை தமக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று அச்சம் கொண்டார்கள். எனவே, குறிப்பிட்ட வடிவம் அல்லது தோற்றங்களைக் கொண்ட தெய்வங்கள் ரிக்வேத காலத்தில் இல்லை என்பதையும், அனைத்தும் சத்ய யுகத்திலிருந்துதான் தொடங்கியது என்பதையும் ஒருவர் உறுதியாக நம்பலாம்.
146) ஆன்மீக குருமார்களின் கூற்றின்படி, சத்ய யுகம் என்பது நேர்மை மற்றும் சத்தியத்தைக் கடைபிடித்தவர்கள் நிறம்பிய பொற்காலம் என்பதாக கருதப்பட்டது. மானிடர்களின் ஒவ்வொரு வெளிப்பாடும்,செயலும் தூய்மையான இலட்சியத்திற்கும் மனித நேயத்திற்கும் நெருக்கமாக இருந்தது. பாகவத புராணத்தின்படி, ஆரம்ப யுகத்தில் மேன்மையான ஒழுக்கம் என்பது நான்கு கால் தூண்களில் நின்றது; அந்த தூண்களே எளிமை, தூய்மை, இரக்கம் மற்றும் உண்மை என்று அழைக்கப்பட்டன.
147) சத்ய யுகம் என்பது ஆறு முதல் ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது மக்களின் அறிவு நல்ல முறையில் முன்னேறத் துவங்கி இருந்தது. அது கருணை, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் புரிந்திருந்த நிலையில் இருந்த காலமாக இருந்தது.
148) மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்; மக்களிடையே பெருமளவிலான ஆன்மீக விழிப்புணர்வும் இருந்தது.’149) அதுவே தக்க சமயம் எனக் காத்திருந்த ரிஷிகள், துறவிகள் மற்றும் முனிவர்கள், பல நிலப்பரப்புகளில் சென்று மக்களிடையே பல்வேறு தெய்வத் கதைகளை பரப்பி, தெய்வங்களிடம் சரணாகதி அடைந்தால் மட்டுமே மக்களை தெய்வங்கள் காத்து அவர்களை நல்வழியில் செல்ல வைப்பார்கள் என்பதாக அவர்களை நம்ப வைத்தார்கள். அது தெய்வ நம்பிக்கை பரவ இன்னொரு காரணமாக அமைந்தது. ‘150) துவக்கத்தில் வெளியாகி இருந்த நிலப்பரப்பு நிலத் திட்டுகளாகவும், விலங்குகள் ஆக்கிரமித்து இருந்த புதர்கள் நிறைந்த காடுகளாகவும், குகைகளைக் கொண்டதாகவும் இருந்தன. மிக சிறிய அளவிலேயே மனிதர்கள் அங்கிருந்தார்கள். ரிக் வேத காலத்தில் தெளிவற்ற மனநிலையில் இருந்த மக்கள் கற்கள், பாறைகள் மற்றும் மரங்களை நீண்ட காலமாக திறந்த வெளிகளில் வழிபட்டு வந்தனர். அசாதாரணமான, கண்களுக்கு தெரியாத ஏதோ ஒரு ஆவி அங்கு வகிக்கின்றது என்று நினைத்துக் கொண்டு அவற்றின் அருகில் செல்லவே பயந்தார்கள்; தூரத்திலிருந்து நின்றபடியே தம்மைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தனர்.’151) பயத்தினால் தெய்வ சக்திகள் உள்ளதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் துவங்க வேண்டும் என்று விரும்பிய பிரம்மாவின் நுட்பமான நாடகத்திற்கு ஏற்றாற்போலவே அனைத்தும் நடந்தேறின. அதே போலவே அந்த பகுதிகளில் தங்க வேண்டிய கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் இருந்த தெய்வங்கள் அங்கு வந்து தங்கி இருந்தவாறு, தம்மிடம் மக்கள் சரண் அடையும்வரை மக்களிடையே இருந்த பய உணர்வை அதிகப் படுத்திக்கொண்டே இருந்தார்கள்.
152) மக்களின் பய உணர்வை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரிஷிகள், துறவிகள் மற்றும் முனிவர்களுடன் கூடி இருந்த மகரிஷிகள், அந்த பயத்தையே ஒருவித வழிபாட்டு முறையாக மாற்றும் வழியாக பயன்படுத்திக் கொண்டனர். கண்களுக்கு தெரியாத சக்திகள் – தெய்வங்கள்- மேல் லோகத்தில் இருந்து பூமிக்கு வந்து மக்களை நல்வழிப்படுத்தி பாதுகாக்கின்றன என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார்கள்; அவற்றை வாய்மொழி கதைகளாக பரப்பினர். ஆகவே கண்களுக்கு புலப்படாத சக்திகளை, தெய்வம் என்பதாக நினைத்து வணங்குவது சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கலாம் என்று நம்புவது நியாயமானது. அப்போதுதான் மனிதர்களும் தோன்றத் துவங்கி இருந்தார்கள். பிரதான தெய்வங்களால் வெளியிடப்பட்ட இரண்டாம் நிலை தெய்வங்களும் மெதுவாக பல பகுதிகளில் மின்னல்கள், இடி முழக்கம், பயமுறுத்தும் ஒலிகள், போன்றவற்றின் மூலம் தோன்றத் துவங்கி குறிப்பிட்ட சில தெய்வங்களாக மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் மாறின. அந்த தெய்வங்களே பிற்காலத்தில் குல தெய்வங்களாக மாறினார்கள்.
153) ஒவ்வொரு நிலப் பகுதிகளிலும் கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் தோன்றியவண்ணம் இருந்தன. வழிபாட்டு முறை என்பது, ஆந்த்ரோபோடியா வகையைச் சேர்ந்த முதல் பழமையான விலங்கினங்கள் (மனிதர்கள் உட்பட பெரிய மூளை கொண்ட குரங்குகள் மற்றும் குரங்குகள்) மானிடர்களாக மாறத் துவங்கிய காலமான ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கி இருக்கும் என்பதை ஒருவர் புரிந்துகொண்டால் போதுமானதாக இருக்கும். விலங்குகள் உருவான 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வங்கள் வணங்கப்பட்டதற்கான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. எனவே, தெய்வ வழிபாடும் தெய்வீக தோற்றமும் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்றே கருத வேண்டி உள்ளது.
154) இரண்டாவது நிலை தெய்வங்கள் என்பவர்கள் முதல் நிலை தெய்வங்களின் நிழல் தெய்வங்கள் ஆவர். அவர்கள் முதல் நிலை தெய்வங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்கள். அவர்களும் பிரதான தெய்வங்களின் தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து வெளியான தெய்வங்களே என்பதினால் அவர்களுக்கும் அளவில்லாத தெய்வ சக்திகள் இருக்கும். அவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தெய்வங்களின் அதிகார எல்லைகளைத் தாண்டிய அளவிலான எல்லைகளில் அதிகாரம் செலுத்த முடியும். அவர்களால் தங்கள் அதிகாரத்தையும் தெய்வீக சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குடும்பங்களை வழிநடத்தவும் பாதுகாக்கவும் முடியும்.
155) முதலாவது மற்றும் இரண்டாவது நிலை தெய்வங்களுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? இரண்டாம் நிலை தெய்வங்கள் பெரும்பாலும் முதல் நிலை தெய்வங்களின் வெளிப்பாடு ஆகும். அத்தியாவசியமான நேரத்தில் இரண்டாம் நிலை தெய்வங்களில் சில தெய்வங்கள் கண்களுக்கு தெரியாத சக்தியின் உடலுக்குள் இருந்து பிரும்மா மூலம் நேரடியாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றாலும் அவர்களது அதிகார வரம்பில் உள்ள பூமியின் பகுதிகள் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும். அவர்கள் அங்கு உள்ள தெய்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்கள் மூன்றாம் முதல் ஐந்தாவது நிலையிலான தெய்வங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார்கள். பொதுவாக அவர்கள் குல தெய்வங்கள் ஆவது இல்லை ஆனால் அவர்கள் மூலம் வெளியான சில தெய்வங்கள் பிற்காலத்தில் குல தெய்வங்கள் ஆயின.
156) மூன்றாம் நிலை தெய்வங்கள் என்பவர்கள் இரண்டாம் நிலை தெய்வங்களின் கீழ் பணி புரியும் தெய்வங்கள் ஆவார்கள். அவர்கள் கண்களுக்கு தெரியாத சக்தியின் உள்ளே இருந்த லோகத்தில் இருந்தபோது செய்த சில பாவத் செயல்களினால் சாபம் பெற்று இருந்த கணங்கள் அல்லது அசுர சக்திகளை அழிக்க மூல தெய்வங்கள் நிகழ்த்திய யுத்தங்களில் பங்கேற்றவர்களாக இருப்பார்கள். முதலில் அவர்கள் மனிதர்களாகவோ அல்லது விலங்குகளாகவோ பிறப்பு எடுத்த பின்னர் கிராம தெய்வங்களாகவும், ஊர்க் காவல் தெய்வங்களாகவும், உள்ளூர் தெய்வங்களாகவும் மாறினர்.
அவர்களில் சிலர் பிரதான தெய்வ ஆலயங்களின் காவல் தெய்வங்களாகவும் இருந்தனர். அவர்கள் கிராம தெய்வங்களாக மாறியவுடன், அவர்கள் வெளிப்பட்ட ஊரின் எல்லைகளைப் பாதுகாப்பதைத் தவிர, பல பகுதிகளில் இருந்த மற்ற தெய்வங்களுக்கும் உதவி செய்பவர்களாக உள்ளனர். ஒரு சில கிராம தெய்வங்கள் இரண்டாவது நிலை தெய்வங்களின் அவதாரங்களாகவும் இருந்தார்கள்.
157) குலதெய்வ வழிபாடு என்ற கருத்து இந்தியாவின் தெற்குப் பகுதியில் மட்டுமே உள்ளது, அதே நேரத்தில் வடக்கில் இவ்வளவு பெரிய அளவிலான வழிபாடு கிடையாது. அங்கு குறிப்பிட்ட ஜாதிகளுக்கும், இனத்தவர்களுக்கும் மட்டுமே அவரவர்களுக்கென்ற சில தெய்வங்கள் உள்ளன. அவற்றை அவர்களது இஷ்ட தெய்வங்கள் என்று கூறுகின்றார்கள். பொதுவாக அங்கெல்லாம் சிவலிங்கம், பார்வதியின் பல்வேறு தேவி அவதாரங்கள் மற்றும் ஹனுமார் வழிபாடே நிறைய உள்ளன.
158) வட இந்தியாவில் கிராம தெய்வங்கள் என்ற கருத்து பெரும்பாலும் தெரிந்திருக்கவில்லை. பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசாவில் பல இடங்களிலும் உள்ள பழங்குடியினர் மட்டுமே கிராம தேவதைகளை வணங்குகிறார்கள். இல்லையெனில் கிராமங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் மற்றும் அவற்றின் நுழை வாயில்களில் சிவ கணங்கள், பாம்புகள், பார்வதியின் பல்வேறு அவதார தேவிகள், மோகினிகள், யோகினிகள், காளி மற்றும் பைரவர் ஆகியோர் காணப்படுகின்றார்கள். அவற்றிலும் சில தெய்வங்களின் உடல்கள் பாதி உடலாக அல்லது முகம் மட்டும் தெரியும் வகையில் உள்ளன. அந்த தெய்வங்கள் தங்கள் பகுதியை காவல் காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதைத் தவிர, ஹனுமாரையே பாதுகாவலர் என்பதாக நம்புகிறார்கள். பெரும்பாலான சிலைகள் அனைத்துமே தூய ஆரஞ்சு நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்டு உள்ளன. அனுமாரின் சிலைகள் உள்ள இடங்களில் அவரே வசித்து வருவதாகவும் தீமைகளின் தாக்குதல்களிலிருந்து அவரே தம்மையம் தமது ஊரையும் பாதுகாப்பதாக நம்புகின்றார்கள்.
159) கிராமப்புறங்களில் நீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் கிராம மக்களால் வழிபடும் தெய்வங்களாக இருப்பவர்களே கிராம தெய்வங்கள் ஆவர். அவர்கள் கிராம தேவதைகளாக வேத காலத்திற்கு முந்திய கால கட்டத்தில் இருந்தே இருந்துள்ளார்கள் என்கின்றார்கள். புகழ்பெற்ற கிராமக் கடவுளான காத்தவராயன், சிவபெருமானிடம் ஒரு சிறிய சாபத்தைப் பெற்ற முருகப் பெருமானின் அவதாரம் என்றும், பாவத்தைப் போக்க காத்தவராயனாகப் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு தெய்வத்தின் சாபத்தைப் பெற்று இருந்த மதுரை வீரன் மற்றொரு புகழ்பெற்ற காவல் தெய்வம் ஆவார். இவரும் சிலரது குலதெய்வமாக வணங்கப்படுகிறார். அவரே மதுரை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தையும், அவரை வழிபடும் மக்களையும் பாதுகாக்கிறார் என்பதாக ஐதீகம் உள்ளது. இவரும் சிலரது குலதெய்வமாக வணங்கப்படுகிறார். மற்ற கிராம தெய்வங்களில் ஒருவரான அய்யனார் என்பவர் ஸ்ரீ ஐயப்பனின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவரும் சிலரது குலதெய்வமாக வணங்கப்படுகிறார். சுடலை மாடன், சங்கிலிக் கறுப்பர், சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள் போன்றவர்களும் கனகாம்பிகை அம்மன் என்பவர்களும் கூட கிராம தெய்வங்களே ஆவர். சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள் போன்றவர்களும் கனகாம்பிகை அம்மன் போன்றவர்கள் ஸ்ரீலங்காவின் வன்னி பகுதியில் காவல் தெய்வங்களாக வணக்கப்படுகின்றார்கள்.
160) தேவ கணங்கள் எப்படி கிராம தெய்வங்கள் ஆயினர்? சில தேவ கணங்கள் பூமிக்கு வந்து மானிடப் பிறவி எடுத்து தவத்தில் இருக்கும்போது (தேவலோகத்தில் பாவங்களை சுமந்துகொண்டு, தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பூமியில் பிறந்தவர்கள்) அவ்வப்போது மனித அல்லது விலங்குகளின் உடலில் நுழைந்து, அவர்கள் மூலம் வீரச் செயல்களை வெளிப்படுத்தி வந்தவாறு இருப்பார்கள். அவர்களது தவ கால முடிவில் கிராம தெய்வங்களாக அல்லது காவல் தெய்வங்களாக மாறி பின்னர் சில பிரிவு மக்களுக்கு குலதெய்வங்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் கிராம தெய்வங்களானவுடன் சில பொறுப்புகளும், வரையறுக்கப்பட்ட தெய்வீக சக்திகளும் கிடைக்கின்றன. அந்த வரம்புக்குட்பட்ட அதிகாரங்களைக் பயன்படுத்தி கிராம தெய்வங்கள் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க முடியாது என்றாலும், அவர்களது பிரார்த்தனைகளை மூல தெய்வங்களிடம் எடுத்துச் சென்று அவர்களது வேண்டுகோட்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் அத்தனை குறைந்த அளவிலான தெய்வ சக்திகளை கொண்டிருந்தாலும் அந்த கிராம தேவதைகளினால் ஊரில் நுழையும் பேய் பிசாசு மற்றும் தீய ஆவிகளை விரட்ட முடியும்.
161) நான்காம் தெய்வ நிலையில் உள்ள தெய்வ கணங்கள் சில சாமானியர்களின் கனவில் தோன்றி, தம்மை அவர்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட முறையில் வழிபடும்படி கட்டளை இடுவார்கள். அவர்களது கட்டளையை ஏற்று அந்த கிராம தெய்வத்தை வழிபடும் அந்தந்த குடும்பங்களின் துயரங்களை அங்குள்ள இரண்டாம் நிலை தெய்வங்களின் உதவியுடன் குறைக்கும்போது அந்த கிராம தேவதைகளில் ஒரு சில தேவதைகளை மக்கள் தனது குல தெய்வமாக ஏற்கத் துவங்குவார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் சில குடும்பங்களும் அந்த கிராம தேவதையை குல தெய்வமாக ஏற்கத் துவங்கும்போது அந்த கிராம தேவதையும் அந்த நிலப்பரப்பில் உள்ள குல தெய்வங்களில் ஒருவராகி விடும்.
162) கிராமங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களையும் அழிவுகளையும் கிராம தெய்வங்களால் திறம்பட தடுக்க முடியும். ஆனால் பிரும்மாவினால் சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு இருந்த பேய்கள் மற்றும் தீய ஆவிகளை அவற்றினால் அழிக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவற்றை அந்த கிராமத்தில் இருந்து விரட்டியடிக்க முடியும். இப்படியாக கிராம தெய்வங்களின் செயல்திறன் அதிகரிக்கத் தொடங்கும் போது, ஒரு குல தெய்வத்திற்கான சக்தி எத்தனை தேவையோ அதன் அடிப்படையில் மேலும் பல தெய்வ சக்திகளை அந்த கிராம தேவதைகளுக்கு பிரும்மாவினால் அளிக்க முடிகின்றது.
163) இருப்பினும், நான்காவது வரிசை தெய்வங்களில் உள்ள ஒரு சில தேவதைகள் குல தெய்வமாக மாறுவதில்லை, ஆனால் அவர்கள் முழு கிராமத்திற்கும் காவல் தெய்வங்களாகவே இருந்தவாறு அங்குள்ள குல தெய்வங்களுக்கு பல வழிகளில் உதவுகிறார்கள். மேலும் அந்தந்த குலதேவதைகளின் கீழ் பணிபுரிவதன் மூலம் அவர்களின் கட்டளையை நிறைவேற்றுகிறார்கள். வெகு காலத்திற்குப் பிறகு உட்புற கிராமங்களில் உள்ள சில குழுக்கள் அவர்களை தங்கள் குல தேவதைகளாக ஏற்கின்றார்கள்.
164) ஐந்தாவது நிலை தெய்வ பிரிவில் உள்ள சில தெய்வ கணங்கள் பூமிக்கு வந்து, முன் பிறவிகளில் செய்த நற்செயல்களின் காரணமாக சில மனிதர்களின் அல்லது விலங்குகளின் உடம்பில் புகுந்து கொண்டு மெல்ல மெல்ல அந்த ஊரின் எல்லைகளை காக்கும் ஊர் காவல் தேவதைகள் ஆகி விடுவார்கள். ஊர் எல்லை காவல் தேவதைகளாக மாறிய பின்னர் மனித குலத்திற்கு நன்மை செய்யும் செயல்களை செய்வார்கள். காலப்போக்கில், அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, அந்த கிராம மக்கள் அந்த புண்ணிய ஆத்மாக்களான மானிடர்களை மரியாதையுடன் நடத்தத் துவங்குவார்கள்.
165) அந்த மனிதர்கள் அல்லது விலங்குகளின் மறைவுக்குப் பிறகு, அவர்களை அடக்கம் செய்த இடங்களில் கல்லறை அல்லது நினைவு சின்னம் அமைத்து அதை ஒரு வழிபாட்டு தலமாக ஆக்கி விடுவார்கள். இறந்து போன சரீரங்களில் உள்ள அந்த ஆத்மாக்கள் எவருடைய கண்களுக்கும் தெராயாத ஊர் காவல் தேவதையாக அல்லது ஊர் காவல் தெய்வமாக இருந்தவாறு அந்த கிராமத்தை சுற்றி வந்தவண்ணம் ஊர் ஜனங்களை காப்பாற்றி வருவார்கள். அவர்கள் ஏற்கனவே தெய்வ கணங்களாக இருந்தவர்கள், சாபத்தினால் பூமிக்கு வந்து பிறந்தவர்கள் என்பதினால் அந்த அளவிற்கான தெய்வீக சக்திகளை அவர்கள் பிரதான தெய்வங்களிடம் இருந்து பெறுவார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அந்த ஊரில் குல தெய்வங்களாகக் கூட மாறி விடுவார்கள்.
166) அடுத்து எழும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், குல தெய்வங்கள் எப்படி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன ? அனைத்து வகையான தெய்வங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் சென்று குடியேறிய பின்னர் அங்கு மட்டுமே தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள். முதலில் அவர்கள் சில கிராமவாசிகள் கனவுகளில் தோன்றி தாம் யார் என்பதை தெரிவித்த பின்னர் அவர்கள் மூலம் பிறருக்கு வெளிப்படுத்திக் கொள்வார்கள். அல்லது கிராம விழாக்களில் எவர் மீதாவது புகுந்து கொண்டு அவர்களை சாமியாட வைத்து அவர்கள் மூலம் தாம் யார், எங்கு உள்ளேன் என்பதை வெளிப்படுத்துவார்கள். மேலும் தம்மை அங்கு வந்து வழிபட்டாலோ அல்லது பிரார்த்தனை செய்தாலோ, அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றும் அவர்கள் மூலம் தெரிவிப்பார்கள்.
167) முன்னர் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு தெய்வத்திற்கும், அவர்கள் வெளிப்பட குறிப்பிட்ட சில நிலப்பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த நிலத்தில் குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். எனவே, தெய்வங்களின் அனைத்து செயல்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்ப அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்டதால், அப்படி அனுப்பப்பட்ட தெய்வங்கள் தாங்கள் விரும்பும் வேறு எங்கும் சென்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. பிரும்மாவினால் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த குடும்பங்களைத் தாண்டி அவர்களால் வேறு குடும்பங்களை தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாது.
168) கனவுகள் மற்றும் சாமியாடிகள் மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தெய்வங்கள், மேலும் சில இடங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேறு வழிகளையும் பயன் படுத்தினார்கள். அவர்கள் தங்கி இருந்த நிலங்களில் வேண்டும் என்றே செயற்கையான பிரச்சினைகளை உருவாக்கி மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்த செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த பிரச்னைக்கு நிவாரணம் காண முடியாமல், சிலரது கனவுகளிலும் சாமியாடிகள் மூலமும் கூறப்பட்ட இடங்களுக்கு சென்று அங்கு கண்களுக்கு தெரியாத அந்த தெய்வங்களை வழிபட்டு ஆராதிக்க அவர்களது பிரச்சனைகள் விலகின. இப்படியான நிலையில் மக்கள் அந்த தெய்வங்களை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டார்கள்.
169) செயற்கையான பிரச்சனைகள் கண்களுக்கு தெரியாத அந்த தெய்வங்களின் செயலால் மறைந்து விட்ட பின்னர் அவை குல தெய்வங்களாக என்றாலும் அவர்களது சக்திகளினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை முதல் அல்லது இரண்டாவது தெய்வங்களின் தலையிடுதலின் மூலம் தீர்த்து வைத்தார்கள். இந்த ரகசியம் அந்த நிலத்தில் இருந்த மக்களுக்குத் தெரியாமல் இருந்தன.
170) படிப்படியாக, ஒவ்வொரு நிலத்திலும் குடியேறிய, கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் பலரின் கனவுகளில் தொடர்ந்து தோன்றுவார்கள் அல்லது அடிக்கடி மக்களை சாமியாட வைத்து, தம்மை வழிபட வேண்டியதின் அவசியத்தை குறித்து பிரச்சாரம் செய்வார்கள். இப்படியாகவே சாபம் பெற்று பூமிக்கு வந்திருந்த தேவ கணங்களும், கிராம தெய்வங்களாக மாறி இருந்த தெய்வங்களும் காலப்போக்கில் தெய்வீக அங்கீகாரம் பெற்று, அந்தந்த இடங்களில்,மாய நிகழ்வுகளை நிகழ்த்தி தம்மை குல தெய்வங்களாகவோ அல்லது காவல் தெய்வங்களாகவோ மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பார்கள். முன்னரே கூறியபடி அவர்கள் அனைவருமே இரண்டாம் நிலை தெய்வங்களினால் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் ஆவார்கள்.
171) பல்வேறு விதங்களிலான குல தெய்வங்களை படைக்க பிரம்மா பல நாடகங்களை நடத்தினார். பூமியிலேயே நல்ல செயல்களில் ஈடுபட்டு வந்திருந்த சில மனிதர்களை முதலில் தேவ கணங்களாக மாற்றினார். வேறு சில தேவ கணங்களை விலங்கின் உடலில் நுழைய வைத்து அவற்றின் நல்ல செயல்கள் மூலம் அந்த தேவகணங்களை ஊர் காவல் தேவதையாக மாற்றினார். காலப்போக்கில் அவர்களும் செய்த சில தெய்வீக செயல்களால் அவர்கள் கிராம தெய்வங்களாக மாறுகின்றார்கள். காலப்போக்கில் அந்த தெய்வங்களும் அவர்கள் செய்த சில தெய்வீக செயல்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சில நிலங்களில் குல தெய்வங்களாக மாறுகிறார்கள். பூமியில் குல தெய்வம் அல்லது ஊர் காவல் தெய்வ வழிபாடு என்ற கருத்தை நிறுவுவதே இறுதி நோக்கமாக இருந்த பிரம்மாவின் நேர்த்தியான திட்டத்திற்கு ஏற்ப அனைத்தும் நடந்தேறின.
172) குல தெய்வங்கள் ஏன் உருவாக்கப்பட்டன ? ஒரு நாட்டின் அரசாங்கம் எப்படி பல்வேறு நிலைகளிலான நிர்வாகிகளை அடுக்கடுக்காக அமைத்து நாட்டை நிர்வாகிக்கின்றதோ, அதே போன்றே பிரபஞ்சத்தைப் படைத்த கண்களுக்குத் தெரியாத அந்த சக்தியானது மக்களை பாதுகாத்து நல்வழிப் படுத்த தெய்வ அடுக்குகளை நிறுவியது. முதல் வரிசை மற்றும் இரண்டாவது நிலை தெய்வங்கள் அனைத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், படைக்கப்பட்டிருந்த நிலத்தையும், அந்தந்த நிலங்களில் குடியேறி இருந்த மக்களைப் பாதுகாப்பதற்கும் தோற்றுவிக்கப்பட்டார்கள். பரந்து விரிந்திருந்த நிலங்களில் ஒவ்வொரு காரணங்களின் தீர்விற்காகவும் பல்வேறு அவதாரங்களை அந்த தெய்வங்கள் எடுக்க வேண்டி இருந்தது. அதனால் அவற்றால் ஒரே இடத்தில் நிலையாக தங்கி இருக்க முடியாமல் இருக்கும் என்பதினால் அவர்கள் கீழ் பணி புரிய பல்வேறு துணை தெய்வங்களை படைத்தார்கள். எனவே, அவர்களின் நிர்வாகிகளாக செயல் பட பல்வேறு தெய்வங்கள் உருவாக்கப்பட்டார்கள். இதனால்தான் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, மக்களை பாதுகாக்க மூன்றாம் நிலை முதல் ஐந்தாம் நிலையிலான தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டு சிறிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
…….அடுத்த பகுதி 173 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது