-5-
108) எனவே, பிரபஞ்சம் தோன்றி சுமார் 13.799 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித இனத்தின் முதல் நிலை தோன்றி இருக்கலாம் என்றும், அறிவு இல்லாத மனிதர்கள் 6 முதல் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றி இருக்க வேண்டும் என்றும் நாம் நம்பலாம். பிரபஞ்சம் படைக்கப்பட்ட 13.699 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் குல தெய்வங்கள் உட்பட எந்த தெய்வங்களும் அவதரிக்க அவசியம் இல்லாமல் இருந்தார்கள். அந்த கால கட்டத்தில்தான் அவர்கள் தேவ ஷில்பியான விஸ்வகர்மாவின் மூலம் பல வடிவங்களை பெறத் துவங்கி இருந்தார்கள்.
109) சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தம்மை பக்குவப்படுத்திக் கொள்ளவும், பூமியில் மெதுவாக குடியேறவும், உயிரினங்களுக்கு கால அவகாசம் தரும் வகையில் பிரும்மா செயல்பட்டார். காரணம் ஒரு சதவிகித உயிரினங்கள் மானிடர்களாக உருவெடுத்த பின்னர் அவர்கள் தக்க அறிவைப் பெறவும், தங்களைச் சுற்றியுள்ளதைப் புரிந்து கொள்ளவும், மலைகள், குகைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற இயற்கையான இடங்களுடன் பழகவும், மேலும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்று.
110) ஆரம்பத்தில் பிரம்மா தனது உடலில் இருந்து நான்கு வகைகளிலான ஆத்மாக்களை விடுவித்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நான்கு வகைகளிலான ஆத்மாக்கள் மனித வடிவத்தை எடுத்து, போதுமான அறிவைப் பெற்ற பிறகு, பல குழுக்கள் அல்லது சாதிகளாகப் பிரிந்தன. அந்த நான்கும் நான்கு வர்ணங்களாகின(வர்ணங்கள் என்பது சமுதாயத்தில் மக்கள் தங்கள் தொழில் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் பிரிக்கும் ஒரு கருத்தாகும். ஆதி காலத்தில் அவை நான்கு பிரிவுகளாக பார்க்கப்பட்டன. அதாவது பிராமணர்கள் கல்வி மற்றும் அறிவைப் பெறுபவர்கள்; க்ஷத்திரியர்கள் ஆட்சியாளர்கள் மற்றும் போர் வீரர்கள்; வைசியர்கள் வணிகர்கள் மற்றும் விவசாயிகள்; சூத்திரர்கள் எனப்பட்டவர்கள் உழைக்கும் மக்கள் என பிரித்துப் பார்க்கப்பட்டார்கள்).
111) படைப்பின் பணியை துவங்கும் முன் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றும் மானிடர்கள் அந்தந்த யுகங்களின் தன்மைகளைக் கொண்டவர்களாக இருக்கும் வகையில் அவர்களை படைக்கலானார். அதே நேரத்தில் சத்ய யுகத்தில் படைத்த அனைத்து உயிரினங்களையும் உடனடியாக ஏதாவது பிறப்பு எடுக்க வைக்காமல் ஒரு பகுதி உயிரினங்கள் வான் வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கும் வகையில் படைப்பை வைத்தார். அவை மெல்ல மெல்ல சத்ய யுகத்தில் அல்லது பிற யுகங்களில் பிறப்பு எடுக்கும் என்ற நியதியையும் வைத்து இருந்தார். எதனால் அப்படி செய்தார் எனில் அப்போதுதான் ஆண் மற்றும் பெண் இனங்களின் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும், அவர்களது சேர்க்கையினால் மற்றொரு உயிர் உருவாகும் தன்மையை இருக்கும் என்பதை மானிடர்கள் அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடே ஆகும்.
112) மனிதர்கள் உட்பட பெரிய மூளை கொண்ட குரங்குகள் (Anthropoidea) வகையைச் சேர்ந்த பழமையான விலங்கினங்கள் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாலும், இரண்டு கால்களில் நடக்கத் துவங்கியவர்கள் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் பரிணமித்ததாலும், தெய்வங்களும், குல தெய்வங்களும் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியிலே தோன்றத் தொடங்கியிருக்கலாம் என்ற கருத்து வலுப்படுகின்றது. அது ஓரளவு ரிக்வேத காலத்தையும் குறிக்கிறது. ஆகவே குல தெய்வ தோற்றங்கள் மானிடப் பிறவிகள் ஒருவித அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்ட பிறகே தோன்றத் தொடங்கி இருக்க வேண்டும் என்பதாகவே நம்ப முடிகின்றது.
113) இந்த விமர்சனங்களோடு வேத நூல்கள் மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளை சற்றே பின்னுக்கு தள்ளி வைத்து விட்டு, பல நூற்றாண்டுகளாக ஆலய பூசாரிகளால் வாய்மொழியாகக் கூறப்பட்டு வந்திருந்த கதைகள், ஆன்மீக சொற்பொழிவுகள், மற்றும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் விவரிக்கப்பட்ட தெய்வ தோற்றம் பற்றிய கருத்துக்களை இனி படிக்கலாம்.
114) பெரிய அளவிலான பரந்த பூமியை மானிடப் பிறவிகள் வாழ்வதற்கு ஏற்ற முறையில் தயார் செய்த பின், அதை பல பிரிவுகளாக்கி தன்னால் படைக்கப்பட்ட முதல் முதலான ஆத்மாக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று முதல் பிறப்பு எடுக்க பிரும்மா அனுமதித்து இருந்தார். அப்படி படைக்கப்பட்டிருந்த நிலப்பகுதிகளில் நதிகள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளும், விலங்குகளும் சூழ்ந்த இடங்கள் என அனைத்துமே அடக்கம் என்பதாக தெரிகின்றது.
115) தெய்வீக தன்மைகளை உள்அடக்கி இருந்த பூமியில் குடியேறிய ஆத்மாக்களின் உடல், அந்த இடங்களில் அமைந்து இருந்த ஆன்மீக இயல்பை தாமாகவே உள்வாங்கிக் கொண்டன.
116) அதேபோல், பிற தன்மைகளைக் கொண்ட பூமியில் பிறப்பு எடுத்த ஆத்மாக்கள் அந்தந்த பூமியில் தன்மைகளை உள் வாங்கிக் கொண்டன. அதன் காரணம் பல்வேறு தன்மைகளில் பிறப்பு எடுக்கும் ஆத்மாக்கள் அப்போதுதான் நன்மை தீமைகளின் தாக்கத்தையோ அல்லது பின் விளைவுகளையோ புரிந்து கொள்ள முடியும் என்பதாக பிரும்மா நினைத்தார்.
117) தெய்வீக தன்மைகளுடன் இருந்த பூமியில் பிறப்பு எடுத்த ஆத்மாக்கள் பெரும்பாலும் துறவிகள், ரிஷிகள் மற்றும் பிற ஆன்மீக எண்ணம் கொண்ட மக்களாக மாறின; மீதமுள்ள இடங்களில் பிறப்பு எடுத்தவை, தீய எண்ணங்களையும், பிற எண்ணங்களையும் கொண்ட மானிடர்களாயினர்.
118) மனிதர்கள் வாழத் துவங்கிய பின்னர் பிரம்மாவினால் உருவாக்கப்பட்ட ஏழு மகரிஷிகளும் வேகமாக செயல்பட்டு நல்ல ஆத்மாக்கள் பிறப்பு எடுத்த இடங்களில் சென்றனர். அந்த ஏழு மகரிஷிகளும் அங்கு தங்கி இருந்து, நல்ல குணாதிசயங்களைக் கொண்ட மானிடர்களை தேர்ந்து எடுத்து, அவர்களுக்கு பல நாட்கள் உபதேசம் செய்து, அவர்களில் பலரையும் ரிஷிகள், முனிவர்கள், துறவிகளாக மாற்றினர். அப்படி போதனை செய்யப்பட்டவர்களே முதல் யுகமான சத்ய யுகத்தில் பரந்த பூமியில் தோன்றிய மனிதர்களிடையே நல்வழி போதனைகளை எடுத்துச் சென்றனர்.
119) புராணங்கள் மற்றும் இதிஹாசங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின்படி, ஒவ்வொரு மானிட நாளும் பல நூற்றுக்கணக்கான தேவ ஆண்டுகளாக கணக்கிடப்படுகிறது. பகவத் கீதை ‘பிரம்ம லோகத்தில் ஒரு நாளின் கால அளவு என்பது நான்கு யுகங்களின் கால அளவான 4,300,000 ஆண்டுகளை 1,000 த்தால் பெருக்கினால் வரும் எண்ணிக்கையில் உள்ளது எனக் கூறி உள்ளது. (குறிப்பு: https://vedabase.io/en/library/sb/3/7/33/), கருடபுராணத்திலும் பிரம்மாவின் ஒரு நாள் என்பது நான்கு யுகங்களான சத்ய, த்ரேதா, த்வாபர மற்றும் கலி ஆகிய யுகங்களின் 1,000 சுற்றுக் காலம் , அதாவது பிரும்மாவின் ஒரு நாள் என்பது மொத்தம் 4.32 பில்லியன் ஆண்டுகள் என்பதாக குறிக்கின்றது. எனவே, ஏழு மகரிஷிகளும் ஆன்மீக மனம் கொண்ட ஆன்மாக்களுக்கு படைப்பின் ரகசியங்களைக் கற்பிக்க பல ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது.
120) இப்படியாக பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து முடிந்த பின்னர் , ஏழு மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட ரிஷிகள், துறவிகள் மற்றும் முனிவர்கள் அடங்கிய பணிக்குழு மனிதர்கள் குடியேறிய இடங்களுக்குச் சென்று, தெய்வீக செயல்கள் மற்றும் நாடகங்களை நடத்தத் துவங்கி அவற்றின் மூலம் மனித குலத்திற்கு ஆன்மீக கோட்பாடுகளையும் அறிவையும் வழங்கத் துவங்கினார்கள். அதுவே தெய்வங்கள் இந்தப் பரந்த நிலத்தில் தோன்றத் துவங்கிய காலமாக அமைந்தது. அப்போது கண்களுக்கு தெரியாத சக்தியினால் வெளிப்படுத்தப்பட்ட முதல் நிலை தெய்வங்கள் பூமிக்கு வந்து மானிடர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருந்தவாறு தமது சக்திகளில் இருந்து இரண்டாம் நிலை தெய்வங்களை பூமியில் வெளிப்படுத்தத் துவங்கினார்கள்.
121) மக்களை தெய்வீகத்தில் நுழைய வைத்த வழிமுறை எப்படி துவங்கியது? மனிதர்களின் மனதில் முதலில் தெய்வ நம்பிக்கையை வளர்த்தார்கள். அடுத்து அவர்களால் புரிந்து கொள்ள முடியாத பயங்கரமான ஒலிகள் மற்றும் கண்களை கூசும் அளவிலான மின்னல் போன்றவற்றை வெளிப்படுத்தி, நம்மைத் தாண்டி எதோ தெய்வம் உள்ளது என்று மக்களை நினைக்க வைத்து பயமுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து ஒருவரின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் பாதிக்கப்பட்டன. அதன் மூலம் தம்மை வழி பாதுகாக்க தெய்வங்கள் வேண்டும் என்ற மன நிலையை ஏற்படுத்தி குல தெய்வ நம்பிக்கையை தோற்றுவித்தார்கள்.
122) பிரம்மா பிரபஞ்சத்தில் உயிரினங்களை தோற்றுவித்துக் கொண்டு இருந்த நேரத்தில், தேவலோகத்தில் தெய்வீகத் தோற்றங்கள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
123) இந்தியாவில் வழிபடப்படும் தெய்வங்களின் தோற்றம் எவ்வாறு உருவானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பரபிரும்மனின் உடலுக்குள் இருந்த லோகத்தில் தெய்வங்கள் தோன்றியதாக பண்டிதர்களால் பொதுவாக நம்பப்படுகிறது. பல புராண நூல்களிலும் அனைத்து தெய்வங்களையும் சிவபெருமானே படைத்ததாக கூறப்பட்டு இருந்தாலும், சக்தி வழிபாடு உள்ளவர்கள், ஆதி பராசக்தியே பரபிரும்மன் எனவும், அதன் ஆற்றல் பெற்ற நிலையில் உள்ளவளும் பிரம்மமாக, இறுதி உண்மை என கருதப்படும் நிலையில் உள்ளவளுமே அந்த தேவியாகும் என்கின்றார்கள். ரிக்வேதத்தில் உள்ள தேவி சூக்தம் மற்றும் ஸ்ரீ சூக்தம் எனும் கூற்றின்படி அவளே அனைத்து படைப்புகளின் கருவாக இருக்கிறாள்.
124) இன்று நாம் காணும் தெய்வங்கள் எவ்வாறு குறிப்பிட்ட தோற்றம் மற்றும் வடிவங்களைப் பெற்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பொதுவாக நம்பப்படும் கருத்து என்னவென்றால், அவர்கள் பரபிரம்ம லோகத்தில், அநேகமாக பரபிரும்மனின் பெண் சக்தி எனும் பாகத்தின் கருப்பையில் இருந்தே தங்கள் அம்சங்களையும் தோற்றத்தையும் பெற்றனர் என்கின்றார்கள்.
125) அதே நேரத்தில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி தேவி போன்ற பிரதான தெய்வங்களும் கூட பரபிரம்ம லோகத்தில் உருவானதுதானா என்பது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. எந்த தெய்வங்கள் என்னென்ன வடிவங்களையும் தோற்றங்களையும் பெற்றன? அனைத்து தெய்வங்களும் பரபிரம்ம லோகத்திற்குள் படைக்கப்பட்டு அங்கேயே தெய்வீக ஆற்றல் தரப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டனவா? தெய்வங்களின் தோற்றங்களும் அம்சங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்ததா? பதிலளிக்க முடியாத சில கடினமான கேள்விகள் இவை.
126) பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே, பல லட்ச கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களும், தேவகணங்களும் பரபிரம்ம லோகத்திற்குள் சில குணாதிசயங்கள் மற்றும் தோற்றங்களுடன் தெய்வீக ஆற்றல் பெற்று இருந்த சக்தி கணங்களாக இருந்தன என்று ஆன்மீக குருமார்கள் விளக்குகிறார்கள். பரபிரம்ம லோகம் என்று அழைக்கப்படும் ஆற்றல் மிக்க மையமாக அந்த லோகம் இருந்துள்ளது. அதில் பரபிரம்மனின் லட்சக்கணக்கான தெய்வீக ஆற்றல் கதிர்கள் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. பூமியும் பெருங்கடலும் கூட செயலாற்ற நிலையில் பரபிரும்மனின் உடலுக்குள்ளேயே இருந்துள்ளன.
127) பண்டிதர்களின்கருத்துப்படி, தனது ஆற்றல் கதிர்களை பல்வேறு வடிவங்கள் மற்றும் தோற்றங்களில் காணப்படும் தெய்வங்களாக மாற்றுவதற்கு முன், தனது உடலுக்குள் தெய்வீக சிற்பியை பரபிரும்மன் உருவாக்கினார். பரபிரம்மனின் உடலுக்குள் இருந்த அந்த தெய்வ சிற்பியே சிவபெருமான், மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி தேவி போன்ற முக்கிய தெய்வங்களை உள்ளடக்கி அனைத்து தெய்வங்களுக்கும் சில வடிவத்தையும் தோற்றத்தையும் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது.
128) தெய்வ சிற்பிவிஸ்வகர்மாவின் பாத்திரத்தைப் பற்றி ரிக் வேதத்தில் கூட குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே போலவே மேலும் சில உபநிடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. தெய்வ சிற்பி விஸ்வகர்மா தனது நாபியிலிருந்து பல உருவங்களை எடுத்து அவற்றைக் கொண்டே தெய்வங்களின் தோற்றத்தை வடிவமைத்தாராம். பண்டைய வேத காலத்தில் தெய்வ சிற்பி விஸ்வகர்மாவை தெய்வ உருவங்களை படைக்கும் த்வஸ்தாருடன் (Tvastar) ஒப்பிட்டு பார்த்தார்கள்.
129) பிற்கால புராணங்களில், விஸ்வகர்மா சில சமயங்களில் கைவினைஞர் தெய்வமான த்வஸ்தாருடன் (Tvastar) ஒப்பிடப்படுகின்றார். சில வேத இலக்கியங்கள் பிரஜாபதியும், த்வஸ்தரும் படைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதாக குறிப்பிடுகின்றன. வேறு சில நூல்களில் பிரஜாபதி ‘உயிரினங்களின் அதிபதி’ என்று குறிப்பிடப்படுகிறார், அதே நேரத்தில் த்வஸ்தார் ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்ட கருவிகள் மற்றும் பொருட்களை வடிவமைத்து உருவாக்கிய ஒரு திறமையான கைவினைஞராகக் காட்டப்படுகிறார். புராணங்கள் மற்றும் வேத இலக்கியங்களிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது – பரந்த நிலத்திற்குத் தேவையான தெய்வீகங்கள் மற்றும் பிற பொருட்களின் தோற்றத்தை வடிவமைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு கைவினைஞர்கள் பொறுப்பேற்று இருந்துள்ளார்கள் .
130) இவ்வாறு பரப்பிரும்மனின் உடலுக்குள்ளேயே உருவாக்கப்பட்ட தெய்வங்கள் அனைவருமே பரபிரம்மனுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருந்தார்கள். தெய்வங்களின் வடிவமும் தோற்றமும் பரபிரும்மனின் உடலுக்குள் உருவாகிய பின்னர், அடுத்து கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருந்த பிரபஞ்சம் அனைவரும் காணும் வகையில் வெளிப்பட்டது. ஆனால் தெய்வங்கள் எப்போது வெளிப்பட வேண்டும் என்பதை பிரம்மதேவர் மட்டுமே முடிவு செய்வார் எனும் நியதி அமைக்கப்பட்டது.
131) இந்த ரகசியம் முதலில் படைக்கப்பட்டு இருந்த மகரிஷிகளுக்கு பிரம்மாவால் கூறப்பட்டது. ஸ்ரீமன் நாராயணனும் (விஷ்ணு பகவான்) இந்த ரகசியத்தை நாரத முனிக்கு ரகஸ்ய ஸ்துதி எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகின்றது. இமயமலையில் உள்ள ஒரு குகையில் தனியாக அமர்ந்திருந்த போது, பார்வதி தேவிக்கு இந்த ரகசியங்களை சிவபெருமானே கூறினார் என்றும் அவர்களின் உரையாடலை ஒரு தெய்வீகப் பறவை கேட்டதும் அல்லாமல் அவற்றை ரிஷி மற்றும் முனிவர்களுக்கும் கூறியதாம். அதுவே வாய்வழி கதைகள் மூலம் ரிஷி மற்றும் முனிவர்களினால் பிரபஞ்சத்தில் பரப்பட்டனவாம்.
132) எதனால் பரபிரம்மனின் உடலுக்குள் தெய்வங்கள் உருவாயின? பரபிரம்ம லோகத்தில் அவரது தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து ஏதோ ஒரு வடிவில் உருவாக்கப்பட்டிருந்த தெய்வங்களுக்கு தெய்வீக ஆற்றல்கள் தரப்பட வேண்டும், அப்படி தெய்வீக ஆற்றல்கள் தரப்படாவிடில் அவர்களால் தாம் என்னென்ன நாடகங்களை பூமியில் நடத்திட வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அவற்றை பூமியில் நடத்திட முடியாது. அந்த நிலை பூமியில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதினால்தான் தெய்வங்கள் பரபிரும்மனின் உடலுக்குளேயே படைக்கப்பட்டு அவற்றுக்கு பயிற்சி மற்றும் ஒத்திகைகளும் அங்கேயே தரப்பட்டனவாம்.
133) பரபிரம்ம லோகத்தில் இருந்து பிரபஞ்சம் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் பாதியில் மானிடர்கள் வாழும் வகையிலான ஆற்றல் மிக்கதாக பூமி உருவாக்கப்பட்டு வந்திருந்தபோது, பரபிரும்மனின் உடலுக்குள் படைக்கப்பட்டு இருந்த சில தெய்வங்கள் ஒத்துகையின்போது தவறுகளை செய்து சாபங்களையும் பெற்றன. அப்படி சாபம் பெற்ற சில தெய்வங்களில் சில பிரதான தெய்வங்களும் அடக்கம் ஆகும்.
134) ஆற்றல் மிக்க பூமி உருவாக்கப்பட்ட பிறகு, அதில் பிறப்பெடுக்க ஆன்மாக்கள் அனுப்பப்பட்டபோது, பரபிரம்ம லோகத்தில் உருவாக்கப்பட்டிருந்த சில தெய்வங்களும் அதே பூமியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் சென்று கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்தன.
135) மகரிஷி வேத வியாசர் மூலம் தான் தெய்வங்களின் உருவங்கள் மனித இனத்திற்குத் தெரிந்தன, அவர் தொகுத்த நூல்களில் இந்துக் கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவப் படங்கள் வரையப்பட்டு இருந்தன என சனாதனவாதிகள் நம்பினாலும், பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த செய்திகள் அனைத்துமே வாய்மொழி வார்தைகளாகவே வெளித் தெரிந்தன. இன்னொரு நம்பிக்கை என்ன என்றால் பனை ஓலைகளில் எழுதிய முனிவர்கள், தெய்வங்களின் உருவங்களை தியானத்தில் கிரஹித்துக் கொண்டு அந்த உருவங்களை எதிர்கால சந்ததியினர் பின்பற்றுவதற்காக அவற்றை பனை ஓலைகளில் வரைந்து விட்டு சென்றிருக்கலாம். பிரபஞ்சத்தில் தெய்வங்கள் தோன்றியபோது, புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா (1848-1906) போன்ற சில தெய்வீகக் கலைஞர்களால் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் உருவங்கள் மனதில் கிரகிக்கப்பட்டு அவற்றுக்கு வடிவம் தரப்பட்டனவாம்.
136) இப்போது மூல கட்டுரைக்கு திரும்புவோம். பிரம்மாவால் மானிடர்கள் குடியேற நிலம் தயார் செய்யப்பட்ட பின்னர், பல்வேறு உயிரினங்கள், விலங்குகள் போன்றவற்றையும் நிலங்களில் நிலை நிறுத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பல்வேறு தெய்வங்களால் விடுவிக்கப்பட்ட தெய்வங்களையும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று குடியேற வேண்டிய நிலையை உறுதி செய்ய வேண்டியிருந்தது.
137) மானிடர்களுக்கான ஆத்மாக்களை பூமிக்கு அனுப்புவதற்கு முன்பு, தெய்வங்களை பல்வேறு குழுக்களாக பிரித்து, மனித ஆத்மாக்கள் செல்வதற்கு முன்பே அந்தந்த தெய்வங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று கண்ணுக்குத் தெரியாமல் குடியமர தேவையான ஏற்பாட்டை செய்ய வேண்டி இருந்தது. மக்களுக்கு எப்போது தெய்வ நம்பிக்கை வந்து தெய்வங்களை ஏற்றுக் கொள்ளும் நேரம் வருமோ அப்போதுதான்அந்தந்த தெய்வங்கள் அங்கங்கே வெளிப்பட வேண்டும் எனும் நியதியையும் உருவாக்கினார்
138) சுருக்கமாகச் கூறினால் பிரம்மா பூமியில் படைத்த மனிதர்களை வழி நடத்தவும் பாதுகாக்கவும் பல வகைகளிலான தெய்வங்கள் படைக்கப்பட்டன.
139) முதல் நிலை தெய்வங்கள் என்பவர்கள் அவரவர்களுக்கான குறிப்பிட்ட வடிவத்தில் பிரதான தெய்வங்களாக உள்ளார்கள்; அவர்கள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஆலயங்களில் குடியேறினர்; அவர்கள் சிவ-சக்தியை பிரதிபலிப்பவர்களாக இருந்தனர்; அவர்களைத் தொடர்ந்து வணங்குபவர்களின் பிரார்த்தனைகளுக்கு தேவையான அருளைத் தரும் அளவிலான மகத்தான தெய்வீக சக்திகளை கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் உண்மையாகப் பிரார்த்தனை செய்பவர்களைப் பாதுகாக்க பூமியோ, வான்வெளியோ, அல்லது கடலிலோ, எதுவாக இருந்தாலும் அவை அனைத்திலும் அவர்களால் சென்று அவர்களை பாதுகாக்க முடியும் என்ற சக்தி உள்ளது. அவர்களுக்குக் கீழ் செயல்படும் துணை தெய்வங்கள் எந்த விதத்திலாவது அச்சுறுத்தல்களை சந்திக்க நேரிட்டால் அவர்களையும் அவர்கள் பாதுகாப்பார்கள். எந்த விதங்களிலான தீய சக்திகளோ, அசுர அல்லது கொடூரமான சக்திகளோ, மக்களுக்கு துன்பத்தை தந்து, அட்டகாசம் செய்யத் துவங்கும்போது, முதல் நிலை தெய்வங்கள் பல அவதாரங்களை எடுத்து அவர்களை அழிப்பார்கள் என்ற அளவிலான சக்திகளையும் கொண்டு இருந்தார்கள்.
140) அது மட்டும் அல்ல முதல் நிலை தெய்வங்கள் பிரம்மாவின் படைப்பின் அடிப்படை விதிமுறைகளை மீறாமல் தங்கள் தெய்வீக சக்திகளை பல்வேறு நிலப்பரப்புக்களில் சென்று வெளிப்படுத்தவும், பிரயோகிக்கவும் சக்தி கொண்டிருந்தன. முதல் நிலை தெய்வங்கள் பல்வேறு தோற்றங்களிலும் பெயர்களிலும் அவதரிக்கின்றன. இதற்கான சிறந்த உதாரணம் பல ஆலயங்களிலும், பல பெயர்களிலும் வணங்கப்படும் சிவலிங்க வடிவிலான சிவபெருமான் ஆவார். அவர் மருத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், வைத்தீஸ்வரர், சொக்கநாதர், கும்பேஸ்வரர் போன்ற பெயர்களில் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அதை போலவேதான் பெண் தெய்வமான பார்வதி தேவி பல ஆலயங்களில் திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, காமாட்சி, கற்பகாம்பிகை, இராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காட்சியளிக்கிறார். பகவான் மகாவிஷ்ணு கூட வெங்கடாசலபதி, சாரங்கபாணி, ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி, பூரி ஜகந்நாதர் போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காணப்படுகின்றார். பொதுவாக அவர்கள் குல தெய்வங்களாக மாறுவதில்லை; ஆனால் வேறு அவதாரங்களில் இருக்கும்போது அவர்களில் சிலர் குல தெய்வங்கள் ஆகிறார்கள்.
…….அடுத்த பகுதி 141 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது