-4-
81) மாணவர்களையும் ஆசிரியர்களையும் எப்படி ஒரே நிலையில் வைத்துப் பார்க்க முடியாதோ, அதே போலவேதான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களையும் படைக்கும் பிரம்மாவும் அவரது துணைவி சரஸ்வதியும் எந்த துணை தெய்வங்களையும் படைக்க அதிகாரம் பெறவில்லை. காரணம் பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிறப்பு-இறப்பு மற்றும் மறுபிறப்பு எனும் சுழற்சிகளுடன் உயிரினங்களையும் மனிதர்களையும், நிலையான மற்றும் நிலையற்ற உயிரினங்களாக படைப்பதற்காக பல்வேறு வகைகளிலான ஆத்மாக்களை வெளிப்படுத்தும் நிலையில் உள்ள பிரம்மா ஒரு ஆசிரியர் போல உள்ளார். படைக்கும் தொழிலுக்கான ஞானத்தை அவர் ஞானம் மற்றும் அறிவாற்றலின் அதிபதியாகிய சரஸ்வதியிடமிருந்து பெற்ற அறிவைக் கொண்டு செயல்படுவதினால் சரஸ்வதியும் ஆசிரியையாக உள்ளார். ஆகவேதான் இருவருக்கும் தெய்வங்களை படைக்க அதிகாரம் வழங்கப்படவில்லை.
82) கண்களுக்கு தெரியாத சக்தியானது பிரபஞ்சத்தைப் படைத்து, பரந்த நிலத்தையும் கடலையும் தயார் செய்தவுடன், அவற்றில் தேவையானவற்றை படைக்கவும், பாதுகாக்கவும், அழிக்கவும் அவற்றுக்கான தெய்வங்களை படைத்தார். விஷ்ணுவோ ஒரு ஆசிரியரைப் போல படைப்புகளைப் பாதுகாத்து வழி நடத்தி, பரந்த நிலத்தில் நீண்ட காலத்திற்கு அமைதியும் செழிப்பும் நிலவச் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அதில் இருந்துதான் குல தெய்வங்கள் அல்லது பாதுகாவலர் / குடும்ப தெய்வங்கள் என்ற கருத்து தோன்றியது.
83) பிரம்மாவின் படைப்புகளில் அசுர (அசுர) சக்திகளைத் தவிர நல்ல மற்றும் தீய எண்ணங்களைக் கொண்டிருந்த சக்திகள் கலந்திருந்தன. தீய சக்திகளின் குணங்களான தீமை காரணமாக தீய ஆன்மாக்கள் தங்கள் தவறான வழிமுறைகளை எளிதில் சரி செய்து கொள்ள மறுக்கும்; அதேபோல் அசுர சக்திகள் பிரபஞ்சத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு நிலத்தின் மக்களை தொடர்ந்து துன்புறுத்தும்.
84) எனவே ஒரு முனையில் மக்களை நல்ல வழிமுறையில் கொண்டு செல்லவும், இன்னொரு முனையில் தீயவர்களிடம் இருந்து அவர்களை பாதுகாக்கவும் தெய்வங்கள் தேவைப்பட்டது. அதே போல தீமைகளைக் கண்டறிந்து தெய்வ சட்டத்தின் கீழ் அவர்களைத் தண்டிக்க வேண்டும். இவற்றை செய்யும் பொறுப்பும் இது 3வது, 4வது மற்றும் 5வது வரிசையில் உள்ள பல தெய்வங்களின் பொறுப்பாக மாறியது. அதனால்தான் 3வது, 4வது மற்றும் 5வது வரிசையில் உள்ள பல தெய்வங்களில் பலவும் பிற்காலத்தில் குல தெய்வங்களாக மாறின.
85) மூன்றாவது முக்கிய செயலான அழித்தல் என்பதை சிவபெருமான் ஏற்று உள்ளார். பிரபஞ்சத்தில் பிறப்பு – இறப்பு -மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியில் படைக்கப்படுபவை அவற்றின் விகிதாசார அளவில் அழிக்கப்படாவிடில், படைக்கப்பட்டவை மட்டும் அல்லாமல் புதியதாக படைக்கப்படும் உயிரினங்களும் சேர்ந்து வாழ பூமியில் இடமே இல்லாமல் போய் விடும். இப்படியாக அழிக்கும் தொழிலை இந்த பரந்து விரிந்துள்ள பிரபஞ்சத்தில் சிவபெருமானால் மட்டுமே செய்ய முடியாது என்பதினால் அவருக்கு உதவியாக இருக்க  பல தெய்வங்களை தனது மனைவியான பார்வதி தேவியுடன் சேர்ந்தே படைப்பதும்  இல்லாமல், பிற தெய்வங்கள் மூலமும் அந்த செயலை சிவபெருமான் நிறைவேற்றுகிறார்.
86) சிவன் கையாளும் அழிவுச் செயல் என்பது இரண்டு வகைப்படும். உடல் ரீதியான அழிவு மற்றும் அறியாமையை நீக்குதல் என்பவைகளே அவை. ஒருவருடைய அறியாமை விலகுதல் என்பது ஞானத்தை அடைந்து, பாவங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீகப் பாதையில் செல்வதாகும். உடலை அழிக்கும் விதத்திலான மரணம் என்பதை தனது சக்தியில் இருந்து வெளிப்படுத்திய யமபெருமான் மூலம் சிவபெருமான் செய்கின்றார்
87) அதை போலவே சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் இணைந்து அவரவர் தெய்வீக ஆற்றல்களில் இருந்து பல தன்மைகளைக் கொண்ட தெய்வங்களை வெளிப்படுத்தி அவர்கள் மூலம் மானிடர்கள் மற்றும் பிற தேவ கணங்களைத் துன்புறுத்திய அசுர சக்திகளை அழிக்கிறார்கள்.   தெய்வீக வரலாற்றைப் பார்த்தால், பார்வதி தேவியின் அம்சங்களான மகிஷாசுரமர்தினி தேவி, லலிதாம்பிகை தேவி, காளி தேவி, துர்க்கை தேவி, தச மகாவித்யா தேவிகள், அன்னை மாரியம்மன் போன்ற பெண் தெய்வீக சக்திகளால் அழிக்கப்பட்ட அசுர சக்திகள் அதிகம் என்பதை அறியலாம். இப்படியாக சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியினால் வெளியிடப்பட்ட பல தெய்வங்களில் சில பிற்காலத்தில் குலதெய்வங்கள் ஆயினர்.<
88) அசுர சக்திகள் வெளிப்பட்ட நேரங்களில்,  அந்த தீய அசுர சக்திகளை அழிக்க பார்வதியைத் தவிர சிவபெருமானும் பல தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தினார், அல்லது அவர் சார்பாக தீய அசுர சக்திகளை அழிக்க தனது தெய்வீக சக்திகளை மற்ற தெய்வங்களுக்கும் தந்தார். அவர் வெளிப்படுத்திய முக்கியமான தெய்வங்களில் ஸ்ரீ முருகப்பெருமான், 64 பைரவர்கள், ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ சரபன்,  ஸ்ரீஅஸ்வத்தாமா போன்ற தெய்வங்கள் அடங்குவார்கள்.
89) சிவபெருமான் வெளிப்படுத்திய அனைத்து தெய்வங்களும் குலதெய்வங்களாகி விடவில்லை. முக்கியமாக சிவபெருமான்  வெளிப்படுத்திய சில தெய்வங்கள் மானிடர்களின் அஞ்ஞானத்தையும் அறியாமையையும் விலக்கி ஞானத்தையும் மோட்ஷத்தையும் தரும் வல்லமை பெற்ற தெய்வங்களாக இருந்தார்கள். அவர்கள் முருகப் பெருமான், வள்ளி தேவி, தக்ஷிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் ஆவர். சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்ட மிகவும் முக்கியமான தெய்வங்களில் ஒன்று சிவபெருமானின் ஒரு ரூபமான வைத்தீஸ்வரர் ஆவார். ஒரு காலத்தில் எவர் ஒருவருக்கு தம் குலதெய்வத்தை அடையாளம் காண முடியவில்லையோ அவர்களில் பலர் திருப்பதி  ஸ்ரீ வெங்கடாசலபதி பகவானைப் போலவே, ஸ்ரீ வைத்தீஸ்வர பகவானையும் தமது குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டார்கள்.
90) இப்படியாகவே பிரதான தெய்வங்களில் இருந்து தோன்றிய பல தெய்வங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு குல தெய்வங்களாக மாறின. முன்னர் குறிப்பிட்டது போல, பரந்த நிலத்தில் மக்களை வழி நடத்தவும், பாதுகாக்கவும் பெரும் அளவிலான குல தெய்வப் படை தேவைப்பட்டது. அவர்கள் ஒரே இடத்தில் இருந்தபடி செயல் பட முடியாது. அவர்களை பல குழுக்களாகப் பிரித்து அவரவர்களுக்கென்ற தனித் தனி பகுதிகளில் செல்ல வேண்டும். காரணம் அவர்களுக்குள் எந்த மோதல்களும் தோன்றக் கூடாது.
91) தெய்வங்களை உருவாக்க வேண்டிய வேலை முடிந்த பின்னர் கண்களுக்கு தெரியாத சக்தியின் அடுத்த செயல்பாடு அந்த தெய்வங்களுக்கு ஏற்ற மனிதர்களையும் படைப்பதாகும்.

92) நீரையும், நிலத்தையும் வெளிப்படுத்திய கண்களுக்கு தெரியாத சக்தி, தான் வெளிப்படுத்திய பிரும்மாவின் மனதில் ‘ தான் வெளிப்படுத்தப்பட்ட பூமி முதலில் எந்த அளவில் விரிந்திருக்கும், காலப் போக்கில் அது எப்படி இன்னும் விஸ்தீரமாகும், எத்தகைய மானிடர்கள், எந்த எண்ணிக்கையில் அந்த பூமியில் இடம் பெற வேண்டும், துவக்கத்தில் பிரும்மா வெளிப்படுத்தும் ஆத்மாக்கள் வெளிப்படுத்தும் மானிடர்கள் எத்தனை எண்ணிக்கையில் இருப்பார்கள், அப்படி அதிகரித்துக் கொண்டே செல்லும் மானிடர்களில் ஒரு பகுதியினர் எப்படி அழிவிற்கு உட்படுத்தப் படுவார்கள், பிரும்மா வெளிப்படுத்தப்பட உள்ள மானிடர்களுக்கு நல்லறிவை தரவும், வழிகாட்டவும், பாதுகாக்கவும், அவர்களில் தீயவர்களை அவ்வப்போது அழிக்கவும் எத்தனை தெய்வங்கள் தேவைப்படும் போன்ற அனைத்து கணக்குகளையும்’ பதிய வைத்தார்.
93)   கண்களுக்குத் தெரியாத சக்தியினால் உருவாக்கப்பட்ட பரந்த நிலம் படிப்படியாக விரிவடைந்தது. மெல்ல மெல்ல அதில் மனிதர்கள் தோன்றினர், தெய்வங்கள் தோன்றின, குல தெய்வங்கள் தோன்றின. அந்த வரிசையை கீழே பார்க்கவும்:
(a) கண்களுக்குத் தெரியாத சக்தி நீரையும் நிலத்தையும் வெளிப்படுத்தினார் .
(b) படிப்படியாக நிலமும் கடலும் வளர்ச்சி அடைந்தன.
(c) பிரதான தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள்.
(d) இரண்டாம் நிலை, மூன்றாவது நிலை, நான்காவது நிலை மற்றும் ஐந்தாவது நிலை தெய்வங்களின் தோற்றம்.
(e) பிரம்மாவின் படைப்பு துவக்கம் .
(f) பிரம்மா நான்கு யுகங்களில் பூமியில் பரிணாம வளர்ச்சியை நிர்ணயிக்கின்றார். அவை சத்ய யுகம், திரேத யுகம்,
துவாபர யுகம் மற்றும் கலியுகம் என்பன.
(g) யுக வாரியான படைப்புகள் உருவாக்கப்பட்டு யுகவாரியாக அழிவின் எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டது.
(h) பிரம்மா மூலம் ஏழு மஹரிஷிகள் தோன்றினார்கள்.
(i) முழுமையான செயல் திட்ட போதனை அந்த ஏழு மகரிஷிகளுக்கும் தரப்பட்டது.
(j) படைத்தவை அனைத்தும் எப்படி செயல்பட வேண்டும் எனும் ஒத்திகை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்றது. அந்த ஏழு மகரிஷிகளும் அதில் பயிற்சி தரப்பட்டது.
94) பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்த நிலம் சத்ய யுகத்தில் தொடங்கி படிப்படியாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதை பிரம்மா உணர்ந்து இருந்தார். தாம் படைத்த மானிடர்களைத் தவிர- x எண்ணிக்கை என்று வைத்துக் கொள்வோம்- ஒவ்வொரு யுகத்திலும் வானில் சுற்றித் தெரியும் ஆத்மாக்கள் பிறப்பு எடுக்கும்போது மானிடர்கள் அளவும் 2 x மற்றும் 3 x என்ற எண்ணிக்கையில் அடுத்த மூன்று யுகங்களில் பிறப்பு எடுக்கும். ஆகவே அவற்றில் படிப்படியாக சிலவற்றுக்கு மரணத்தையும் தந்து அழிக்க வேண்டும், இல்லை என்றால் பூமி பாரம் தாங்காது என்பதினால் ஒவ்வொரு யுகத்திற்குமான மக்கள் தொகை முன்னர் நிர்ணயித்த அளவை தாண்டக் கூடாது என்பதையும் உணர்ந்தே இருந்தார்.
95) கருட புராண நூலை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் அதில் காணப்படும் செய்தியின்படி சத்ய யுகத்தில், ஒரு தேவ வருடத்திற்கு (கடவுளின் ஆண்டு) ஒருமுறை 84 லட்சம் ஆன்மாக்கள் என்ற அளவில் பிரம்மா படைத்தார். ஒரு தேவ வருடம் என்றால் 306 மனித வருடங்கள் ஆகும். சத்திய யுகத்தின் ஆயுட் காலம் 1,728,000 மனித ஆண்டுகள் ஆகும் என்பதினால் அது 5647 தேவ ஆண்டுகளுக்கு சமம் ஆகும் (1728000 ÷ 306 = 5647). ஆகவே, சத்ய யுகத்தில் ஒரு தேவ வருடத்திற்கு 84 லட்சம் என்ற விகிதத்தில் உருவாக்கப்பட்ட, மனிதர்கள் மற்றும் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் போன்ற அனைத்து படைப்புகளும் உட்பட்ட ஆத்மாக்களின் மொத்த எண்ணிக்கை 474.348 மில்லியனாக இருக்கலாம்.
96) கருட புராணத்தின்படி, பிரம்மா உருவாக்கிய 84 லட்ச ஆன்மாக்களில் 21 லட்சம் முட்டைகளிலிருந்தும், 21 லட்சம் மரம் மற்றும் செடி கொடிகளிலிருந்தும், 21 லட்சம் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளிடமிருந்தும், மீதமுள்ள 21 லட்சம் புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்தும் வந்தவை என்பதாக தெரிகின்றது. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால் ஆரம்பத்தில் அவர் உருவாக்கிய ஆத்மாக்களில் சுமார் 25% மட்டுமே மனித வடிவத்தில் இருந்திருக்க வேண்டும். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால், சத்ய யுகத்தில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட 403.200  மில்லியன் ஆத்மாக்களில், 100 மில்லியன் ஆத்மாக்கள் மட்டுமே மானிட ஆத்மாக்களாக இருந்திருக்க வேண்டும்.
97) வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மானிட ஆன்மாக்களை விடுவிக்கும் முன் குறிப்பிட்ட சில செயல் திட்டங்களுக்காக முதலில் ஏழு ரிஷிகளை பிரம்ம தேவர் மனித உருவில் படைத்தார்.  ஜைமினிய உபநிஷத் என்ற நூலின்படி (The Jaiminiya Upanishad Brahmana –जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ரிஷிகளின் பெயர்கள் அகஸ்தியர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, வஷிஷ்ட மற்றும் விசுவாமித்திரர் என இருக்க பிரஹதாரண்யக உபநிஷத் (Brihadaranyaka Upanishad) என்ற நூலில் அகஸ்தியர் என்பதற்கு பதில் பிருகு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போலவே பிற பிரிவுகளை சேர்ந்த நூல்களில் ஏழு ரிஷிகளின் பெயர்கள் மாறுபட்டு காணப்படுகின்றன என்கின்றார்கள்.
98) உலகில் படிந்திருக்கும் மானிடர்களை ஏழு பிரிவுகளாக அதாவது ஒவ்வொரு ரிஷியின் குலத்தையும் கொண்ட ஏழு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வைக்கவே பிரும்மா ஏழு ரிஷிகளை படைத்தார். ஒரு குலம்  என்பது ஒரு கோத்திரத்தை, அதாவது ஒரு ரிஷியை குறிக்கும். ஒவ்வொரு பரம்பரையில் வெளிப்படும் ஒவ்வொருவரும் ஒரே ரத்த இனத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது நியதி எனும்போது இன்றும் சில ஜாதியினரில் எப்படி 2500க்கும் அதிக அளவிலான எண்ணிக்கையில் கோத்திரங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது.
99) கண்களுக்கு தெரியாத சக்தியின் உடலுக்குள் இருந்து பிரும்மா சில குறிப்பிட்ட தெய்வங்களை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தாலும், முதலில் மேன்மையான ஞானம் கொண்ட ஏழு மகரிஷிகளை படைத்த பிரும்மா, அப்படி படைக்கப்பட்டிருந்த தெய்வங்களையும் ரிஷிகளையும் உடனடியாக பூமியில் செயல்படும் நிலையில் அனுப்பவில்லை. அதன் காரணம் முதலில் அவரால் படைக்கப்பட்ட நான்கு யுகங்களும் எப்படி செயல்பட வேண்டும், எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்த அவருக்கு அதிக அளவிலான காலம் தேவையாக இருந்தது.
100)தாங்கள் படைக்கப்பட்டவுடன், ஏழு முனிவர்களும் தாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்று தெரியாமல் குழப்பமடைந்து பிரம்மாவின் முன் நின்றார்கள். அவர்களுக்கு தான் படைத்த நான்கு யுகங்கள் என்னென்ன, ஒவ்வொரு யுகத்திலும் உள்ள ஆத்மாக்களின் குணாதிசயங்கள் எப்படி அமைந்து இருக்கும், ஒவ்வொரு ஆன்மாவிற்குமான பிறப்பு -இறப்பு – மறு பிறப்பு எனும் சுழற்சி, ஆண்-பெண் கோட்பாடு, அவர்களின் ஒன்றிணைப்பு, குழந்தைகள், வாழ்வின் நெறிமுறைகள், வளமான வாழ்க்கையின் விதிமுறைகள், நல்ல மற்றும் தீய செயல்கள், பாவங்கள் என தனது படைப்பின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார். மேலும் குல தெய்வங்களின் முக்கியத்துவம், ஒவ்வொரு மானிட குலமும் அவர்கள் தோன்றும் அந்த நிலப்பகுதியில் எப்படி அவர்களால் வழி நடத்தப்பட்டு வருவார்கள் என்பதை எல்லாம் விளக்கிக் கூறிய பின் தன்னுடைய கட்டளை கிடைக்கும் வரை அவர்கள் அனைவரையும் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் மறைந்து இருக்குமாறு கட்டளை இட்டார்.
101) அந்த மகரிஷிகளை செயல் மிக்கவர்களாக்கிய பின்னர் அவர்கள் பூமிக்கு சென்று அங்குள்ள சில மானிடர்களையும் தெய்வ தூதர்களான தமது சிஷ்யர்களாக்கிக் கொண்டு அவர்களுக்கு தெய்வீகத்தின் மகிமைகள், ஆன்மீக வழி நடப்பதின் பலன்கள் என தான் கொடுத்துள்ள அனைத்து செய்திகளையும் பூலோக மக்களிடையே பரப்ப வேண்டும். அது குரு-சிஷ்ய பரம்பரையையும் உருவாக்கும் என்றார்.
102) பிரம்மாவின் போதனைகளை மனதில் ஏற்றுக் கொண்ட மஹரிஷிகள் தமக்காக உருவான பெண் ரிஷிகளையும் மணந்து கொண்டு தமது பணியை நிறைவேற்ற பூமிக்கு சென்று எவருடைய கண்களுக்கும் புலப்படாத வகையிலும்  செயல் அற்ற நிலையிலும் கோடானுகோடி ஆண்டுகளாக இருந்தவாறு பிரபஞ்சத்தின் அம்சங்களையும், பிரபஞ்சத்தில் பிரம்மா நடத்திய நாடக ஒத்திகையையும் பார்த்தவாறு இருந்தார்கள்.
103)  பிரபஞ்சத்தின் முழு தத்துவத்தையும் பிரம்மாவின் கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள மகரிஷிகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆனது. ஏனெனில் பிரபஞ்சத் தோற்றத்தின் அம்சங்கள் விரிவானதாகவும், நுணுக்கமாகவும், சிக்கலானதாகவும் இருந்தது.
104)  பிரும்மாவின் அடுத்த வேலை மனிடப் பிறவிகளை படைத்து அவர்களை பூமிக்கு அனுப்புவதுதான். ஆனால் அப்படி அனுப்பப்பட்ட ஆத்மாக்கள் உடனடியாக மானிடப் பிறவியை எடுக்கவில்லை. பிரும்மா படைத்த ஆத்மாக்கள்  முதலில் 15 முதல் 20 வகைகளிலான விலங்கியல்களாக படைப்பு எடுத்தப் பின்னரே அவர்களிடம் இருந்து ஒரு பகுதியினர் பல கோடி வருடங்களுக்குப் பிறகு, ஐந்து அல்லது ஆறு நிலைகளில் மானிடப் பிரிவுகளாக மாறினர். எதனால் இந்த நிலை ஏற்படுத்தப்பட்டது?
105) தொல்பொருள் மற்றும் மானுடவிய  விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி, பிரம்மாவின் துவக்க கால படைப்புகள் ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கின வகைகளிலும், டைனோசர்கள் மற்றும் சிம்பன்சிகள் எனப்படும் விலங்கியல்கள், செடி, கொடி, மரங்கள் என்ற அசையா பொருட்கள் உட்பட அனைத்தும் 15 முதல் 20 வகைகளிலும் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது. பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட அடர்ந்த காடுகளில் அசையும் உயிரினங்கள் வாழ்ந்து வந்தன.
106) தொல்பொருள் மற்றும் மானுடவிய விஞ்ஞானிகளின் கூற்றின்படி ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கியல்கள் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றி இருந்தாலும், அந்த விலங்கியல்கள் மெல்ல மெல்ல பரிமாற்றம் அடைந்து இரண்டு கால்களுடன் நடந்த மானிட உருவை பெற்றன. இப்படியாக வாலில்லாத குரங்குகளும், சிம்பன்சிகளும் அறிவு அற்ற மனிதர்களின் வடிவமாக மாற சுமார் ஆறு மில்லியன் ஆண்டுகள் ஆயிற்று.
107) பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின்தான் முதன்முறையாக உயிரியல் பரிணாமக் கோட்பாட்டை குறித்த கருத்தைக் கூறினார். அவருடைய உடற்கூறியல் கூற்றின்படி முதன் முதலில் ஹோமோ சேபியன்ஸ் போன்றவைகளில் இருந்து சுமார் 4 முதல் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் ஆப்பிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள். குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து இரண்டு கால் மனிதனாக மாறுவதற்கான பரிமாணம் அத்தனை மில்லியன் ஆண்டுகளாக இருந்துள்ளது என்பதாக கூறினார். ஆப்பிரிக்காவில் காணப்பட்ட ஹோமோ ஹாபிலிஸ் மற்றும் ஹோமோ எரெக்டஸ் போன்ற ஆரம்ப கால மனிதர்களின் புதைபடிவ (தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால் தடங்கள்) மாதிரி வடிவங்களை மேற்கோள் காட்டி, மனித பரிணாமத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அனைத்து வகையான நடத்தைகளையும் கொண்ட மனிதர்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றினார்கள் என்கின்றனர். ஆகவே மனிதனின் ஆரம்ப கால தோற்றங்களில் ஒன்றான, இரண்டு கால்களோடு நடக்கும் திறன் பெற்ற உயிரினங்கள் 2 முதல் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானது என்பதாக தெரிகின்றது.

  …….அடுத்த பகுதி  108 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது