-7-

173) பெரும்பாலான குலதேவர்கள் சாபம் பெற்று, பூமிக்கு வந்து தெய்வ நிலையை அடைந்த தேவ கணங்கள் ஆவார்கள். துவக்கத்தில் சிறிய தெய்வங்களாக (மூன்றாவது தெய்வ வரிசையிலிருந்து) இருந்து காலப்போக்கில் கிராம தேவதைகள் மற்றும் குலா தெய்வங்கள் என மாறினர். பரந்த நிலத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்திருந்த சக்தியின் உடலுக்குள் தெய்வ கணங்களாக இருந்தனர். தனது உடலுக்குள் இருந்து பரந்த நிலத்தையும் கடலையும் விடுவித்த பிறகு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அவற்றை மனிதர்கள் வாழும் நிலமாக மாற்றி அமைக்கும்வரை அவருக்குள் தங்கி இருந்து கொண்டு மக்களை வழி நடத்த பயிற்சி அளிக்கப்பட நேரங்கள் அவை .
175) கண்களுக்கு தெரியாமல் இருந்திருந்த சக்தியின் உடலுக்குள் இருந்த தேவ கணங்கள் செய்த பாவங்களின் தன்மை பூமியில் பாவங்களை செய்யும் மானிடர்களின் பாவங்களின் தன்மையில் இருந்து மாறுபட்டவை ஆகும். இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை. கண்களுக்கு தெரியாமல் இருந்திருந்த சக்தியின் உடலுக்குள் இருந்தபோது தங்கள் கடமைகளை வேண்டுமென்றே தவிர்த்து வந்த தேவ கணங்களும் தெய்வங்களும் சாபம் பெற்றார்கள். அதுவே பூமியில் இருந்த மானிடர்கள் செய்யும் பாவ காரியங்களை விட மிகக் கொடிய குற்றமாகக் கருதப்பட்டது.
176) பூமிக்கு வந்து தங்கிய தேவ கணங்கள் தங்கள் சாபங்களிலிருந்து விடுதலை பெற நீண்ட காலம் போராட வேண்டி இருந்தது. அவர்களின் உண்மையான தவத் தன்மையைக் கண்ட முதல் நிலை தெய்வங்கள் அவர்களின் பாவங்களை மன்னித்து சாப விமோசனம் தந்து அவற்றை முதலில் காவல் தேவதைகள், கிராம தெய்வங்கள் என மாற்றிய பின்னர் முடிவாக குல தெய்வங்கள் எனும் அந்தஸ்தை பெற அருள் புரிந்தார்கள். ஆனால் அந்த தெய்வ லீலைகள் எதுவுமே பூமியில் இருந்த மானிடர்களுக்கு தெரியமலேயே இருந்துள்ளன. மேன்மையான ஆன்மீக குருக்கள் மற்றும் தெய்வீக அவதாரங்கள் மட்டுமே அவற்றைப் புரிந்துகொண்டன.
177) புராணத்தில் காணப்படும் பல கதைகள் மூலம் எவ்வாறு தெய்வங்கள் தங்களுடைய பாவங்களை நிவர்த்தி செய்ய கொள்ள பூமிக்கு வந்து மனித உருவெடுத்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த இடங்களுக்கு சென்று தங்கி, தவம் இருந்து சாப விமோசனம் பெற்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் தவம் இருந்த காலத்தில் அவர்களுடைய தெய்வ சக்திகளை மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்த முடியும் என்பதும் பிரும்ம விதியாக இருந்தது. அதன் காரணம் மானிட உருவங்களை எடுத்து வந்துள்ள தெய்வங்கள் சாப விமோசனம் பெற வேண்டுமானால் மானிடர்களைப் போலவே கடும் துயரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது நியதியாக இருந்தது.
178) அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தம்முடைய தெய்வ சக்திகளை பயன்படுத்திக் கொள்ள அவர்களை அனுமதித்து விட்டால், அவற்றை துஷ்பிரயோகம் செய்து தமது சாப காலத்தில் கஷ்டப்படாமல் இருந்து விடுவார்கள், அதன் பின் சாபம் என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பதாக பிரும்மா நினைத்ததினால்தான் அப்படிப்பட்ட நியதிகளை வைத்து இருந்தார். பிரார்த்தனைகள், வழிபாடுகள் போன்றவற்றின் மூலம் கர்மங்களிலிருந்து விடுதலை பெற போராடும் மனிதர்களைப் போலவே, பூமிக்கு தவம் செய்ய வந்த, சாபங்களை பெற்று இருந்த தெய்வங்களும், கடுமையாக தவத்தில் இருந்து கொண்டுதான் தங்களுடைய கர்மங்களிலிருந்து (பாவங்கள்/சாபங்கள்) விடுபட வேண்டும் என்ற கோணத்தினால்தான் அந்த விதிகள் வைக்கப்பட்டு இருந்தன.
179) எனது கட்டுரையின் முந்தைய பகுதியில், பூமிக்கு ஆன்மாக்களை பூமிக்கு அனுப்புவதற்கு முன் பிரம்மா பரந்திருந்த நிலப் பரப்பை பல்வேறு தன்மைகளை கொண்டதாக பிரித்து வைத்திருந்தார் என்பதை விளக்கி இருந்தேன். அவை ஒன்றுக்கு கொண்டு வேறுபட்ட தன்மைகளில் இருந்தன; அந்த தன்மைகள் எதிர்மறை மற்றும் நேர்மறை போன்ற தன்மைகளை கொண்டவையாக இருந்தன என்பதினால் அதில் சென்று தங்கும் ஆத்மாக்களும் அந்தந்த நிலத்தின் தன்மைகளை உறிஞ்சிக் கொண்டு விடும் என்ற நிலைப்பாட்டோடு அந்தந்த நிலங்கள் படைக்கப்பட்டு இருந்தன. எந்தெந்த ஆத்மாக்கள் எங்கெங்கு சென்று தங்க வேண்டும் என்ற முடிவை அந்த ஆத்மாக்களின் முடிவுக்கே பிரும்மா விட்டு இருந்தார் என்றாலும் எந்த அளவில் அந்த நிலத்தின் தன்மைகளை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவையும் குறிப்பிடாமல் வேண்டும் என்றே அவற்றை மர்மமாகவே வைத்து இருந்தார்.
180) பாரம்பரிய மக்கள் தமது குடும்பங்கள் காப்பாற்றப்பட வேண்டும், தாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக குல தெய்வ வழிபாட்டை மட்டும் வைத்துக் கொண்டிருக்காமல், இன்னும் பிற தெய்வங்களை வழிபடுவதிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த, தங்கள் மூதாதையர்கள் வணங்கி வந்திருந்த குல தெய்வ வழிபாட்டை முற்றிலுமாக கைவிடவில்லை.
181) குல தெய்வ வழிபாடு என்ற கருத்து, குறிப்பாக இந்தியாவின் தெற்குப் பகுதியில் மட்டுமே அதிகமாக நிலவுகிறது. இந்தக் கட்டுரை பெரும்பாலும் இந்தியாவில் உள்ள வழிபாட்டு முறையை எடுத்துக் காட்டும் முறையிலேயே அமைக்கப்பட்டு உள்ளது. பிரபஞ்சத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள தெய்வீக வழிபாட்டு முறைகளை ஒப்பிடுவதற்காக இறுதி பாகத்திலும் சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
182) பல்வேறு நிலங்களில் வசிக்கும் மக்கள் ஏதேனும் ஒரு வகைகளிலான குல தெய்வ வழிபாட்டு முறையை தொடர்கின்றார்களா? குல தெய்வ வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்ளாத மனிதர்களை வழி நடத்தி, பாதுகாத்து, பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர் யார்?
183) அனைத்து குடும்பங்களும் குல தெய்வ வழிபாட்டு முறையைக் கடை பிடிக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக குல தெய்வ வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குல தெய்வங்களை தொடர்ந்து வழிபட்டு வருகின்றார்கள். அந்த இடங்களிலேயே மீதம் உள்ள பிற குடும்பங்களும் பிற பகுதிகளில் குல தெய்வ வழிபாட்டைக் கொண்டு இருக்காதவர்களும் வேறு பல தெய்வங்களை இஷ்ட தெய்வங்கள் (விருப்பத்தின் தெய்வம்) என்ற பெயரில் வணங்கி வருகின்றார்கள். அவர்களுக்கும் அந்தந்த தெய்வங்கள் மூலம் அவர்களது பிரார்த்தனையின் தன்மைக்கு ஏற்ப பாதுகாப்பும், அருளும் கிடைத்து வருகின்றது.
184) குல தெய்வங்களுக்கு தெய்வ சக்தி எங்கிருந்து கிடைக்கின்றது? அவர்கள் அனைவரும் எங்கே குடியேறுவார்கள்? குல தெய்வங்கள் ஒரு நிலப் பரப்பில் இருந்து இன்னொரு நிலப்பரப்பிற்கு தாமாகவே சென்று வசிக்க முடியுமா அல்லது அவர்களது கட்டுப்பாட்டில் பல நிலப்பரப்புகள் இருக்குமா?
185) குல தெய்வங்கள் எந்த அளவிலான சக்திகளை கொண்டுள்ளன என்றால் குல தெய்வங்களும் பிரதான மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்களை போலவே முழுமையான தெய்வ சக்திகளைக் கொண்டுள்ளன. அதன் காரணம் அவர்கள் அனைவருமே பிரதான தெய்வங்கள் அல்லது இரண்டாம் நிலை தெய்வங்களின் சக்திக் கதிர்களில் இருந்து வெளியானவர்கள்.
186) பிரும்ம நியதிப்படி எந்தெந்த தெய்வங்கள் எங்கெங்கு அவதரிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அங்கு மட்டுமே அவர்கள் அவதரிப்பார்கள். அவர்கள் இன்னொரு குல தெய்வ நிலப்பரப்பில் சென்று அங்கு தலையிடக் கூடாது என்பது பிரும்ம நியதி ஆகும்.
187) துவக்க கட்டங்களில் குல தெய்வங்களுக்கு குறிப்பிட்ட பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் காலப்போக்கில் பூமியின் அரிப்பு, மக்கள் இடம் பெயர்வு, அரசு கொள்கைகளின் காரணம், புவியியல் மாற்றங்கள் போன்றவற்றினால் விஸ்தரிக்கும் நிலப்பரப்பு போன்றவை முதலில் குல தெய்வங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களின் நிலப்பரப்புகளை மாற்றக்கூடும். எனவே அப்படி விரிவடையும் நிலப்பரப்பு பிரம்மாவினால் வேறு எந்த தெய்வங்களுக்கும் ஒதுக்கப்படவில்லை என்றால் முதலில் குடியேறி இருந்த குலதெய்வங்கள் கட்டுப்பாட்டிலேயே அந்த விஸ்தரிக்கப்பட்ட பகுதியும் இருக்கும் என்பது மற்றொரு பிரும்ம விதி ஆகும்.
188) ஒரு நிலப்பரப்பில் இருந்த குடும்பத்தினர் எதோ ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளார்கள். காலப்போக்கில் அதில் சில குடும்பங்கள் அந்த நிலப்பரப்பில் இருந்து இன்னொரு நிலப்பரப்பிற்கு ஏதாவது ஒரு காரணத்தினால் இடம் பெயர்ந்து செல்வார்கள். அப்படி குடிபெயர்ந்து செல்லும் அந்த குடும்பத்தினரை வேறு எந்த குல தெய்வம் காப்பாற்றி வழி நடத்தும்?
189) தம்மை குலதெய்வமாக வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர் ஒரு நிலப்பரப்பில் இருந்து இன்னொரு நிலப்பரப்பிற்கு குடியேறிச் சென்று விட்டாலும், அந்த நிலப்பரப்பிற்கு சென்று அவர்களுக்கு அருள் புரியும் தெய்வ சக்தி அவர்கள் வழிபட்டு வந்திருந்த குலதெய்வத்திற்கு நிச்சயம் உண்டு. ஆனால் அதே சமயத்தில் புதிய நிலப்பரப்பிற்கு சென்று தம்மை வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பத்தாருக்கு அருள் புரியும் நேரங்களில், ஏற்கனவே அங்கு பிற குடும்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் குலதெய்வங்களின் செயல்பாடுகளில் அவை எந்த விதத்திலும் தலையிடக் கூடாது, இடைஞ்சல்களை செய்யக் கூடாது என்பது பிரும்ம நியதியாகும்.
190) அதே போல குடி பெயர்ந்து சென்றுள்ள, தம்மை வழிபட்டுக் வரும் குடும்பத்தினர் நலனுக்காக, அவர்கள் வணங்கி வந்திருந்த குல தெய்வம் அந்த குடும்பத்தினர் வசிக்கும் புதிய நிலப்பரப்பிற்கு சென்றால், அங்கு ஏற்கனவே பல குடும்பங்களுக்கு அதிபதியாக உள்ள குல தெய்வங்கள், அங்கு வரும் குல தெய்வத்தை தடுக்கக் கூடாது, அவர்களுக்கு எந்த இடைஞ்சல்களை தரக் கூடாது, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும்.

191) குல தெய்வங்களின் செயல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை சிறு உதாரணம் மூலம் பார்க்கலாம். நிலமங்களா என்ற நிலப்பரப்பில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். பிரம்ம நியதியின்படி A,B,C,D என்ற இடங்களில் வாழ்ந்து கொண்டிருந்த 25 முதல் 30 குடும்பங்களுக்கும், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு குலதெய்வம் என ஐந்து குலதெய்வங்கள் பிரும்மதேவரால் நியமிக்கப்பட்டு இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்குள்ள சுமார் 50 பிற குடும்பத்தினருக்கு அங்குள்ள குலதெய்வம் கிடையாது எனும்போது, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப அதே இடத்தில் உள்ள அல்லது வெளி மாநிலத்தில் உள்ள வேறு ஏதாவது தெய்வங்களை தமது இஷ்ட தெய்வமாக கொண்டிருக்க தடை இருக்காது. அவர்கள் வேறு மதங்களை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.
192) குல தெய்வங்களின் நிலை குறித்த இன்னொரு உதாரணம் இது. A எனும் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் தமக்கு எதிராளிகள் எனக் கருதும் B குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதகங்கள் வர வேண்டும் என்பதற்காக தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தேவதை அல்லது சில பிரதான தெய்வங்களை வேண்டிக் கொண்டு யாகம் அல்லது பிற பூஜைகளை செய்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம்.
193) ‘B’ குடும்பத்தினர் உண்மையில் A குடும்பத்தினருக்கு எதிராக எதையும் செய்பவர்கள் அல்ல மற்றும் அவர்கள் நேர்மையாகவும், முறையாகவும் குலதெய்வ வழிபாடு செய்து வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட நிலையில் A குடும்பத்தின் குலதெய்வங்கள் அல்லது A குடும்பத்தினர் வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்த வேறு எந்த தெய்வமும், அவர்கள் எத்தனைதான் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், பாதிக்கப்பட இருக்கும் ‘B’ குடும்பத்தினர் வழிபட்டு வரும் குல தெய்வங்களையும் கலந்தாலோசிக்காமல் தன் இச்சையாக A குடும்பத்தினரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாது என்பது மிகவும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும்.
194) எனவே, ‘A’ குழுவின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன், பிரார்த்தனை செய்யப்பட்ட தெய்வங்கள் முதலில் ‘B’ குழுவின் குல தெய்வங்களைக் கலந்தாலோசித்து, பிரச்சினையை குறித்து விவாதிக்க வேண்டும். ‘A’ குழுவின் பிரார்த்தனைகள் உண்மையானதாக இருந்தால், A பிரிவின் குல தெய்வம் ‘B’ குழுவின் குல தெய்வத்தின் சம்மதத்தைப் பெற்ற பிறகு ‘A’ குழுவின் நன்மைக்காக அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.
195) பிரும்ம விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால், எந்த ஒரு தெய்வங்களும் குடும்பங்களின் குல தெய்வத்தை கலந்து ஆலோசனை செய்யாமலோ அல்லது அவர்களுக்கு தெரிவிக்காமலோ ஒருதலைப்பட்சமாக ஒரு குழுவின் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்க முடியாது.
196) பிரும்ம நியதிப்படி, ஒருவரையொருவர் கலந்தாசிக்காமல், தன்னிச்சையாக தெய்வங்கள் எடுக்கும் முடிவுகள், ஒரு குல தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்களுக்குத் தீங்கு விளைவிக்குமானால், அத்தகைய செயல்கள் பிரம்ம நெறியை மீறுவதாகவும், இன்னொரு குல தெய்வத்தின் உரிமையை பறிப்பதாக இருக்கும் எனவும் கருதப்படும். ‘A’ குழுவினர் குல தெய்வம் தன்னிச்சையாக முடிவு எடுத்து அவர்களது பிரார்த்தனைகளுக்கு அருள் கொடுத்தாலும் அதற்கு பலன் கிடைக்காது. அத்தகைய தெய்வீக செயல்கள் தெய்வீக விதிமுறையை மீறுவதாகவும், மற்ற தெய்வங்களின் தெய்வீக உரிமைகளை பறிப்பதாகவும் கருதப்படும். அப்படி சட்ட விரோதமாக செயல்பட்ட தெய்வங்களின் தெய்வீக சக்தி தற்காலிகமாக பறிக்கப்பட்டு விடும் .
197) ஒவ்வொரு குல தெய்வத்தை வழிபடும் குடும்பத்தினரையும் அந்தந்த குல தெய்வங்களின் தெய்வீகக் கதிர்கள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பு கவசம் போல பாதுகாப்பதினால், மேல் கூறப்பட்டு உள்ள உதாரணத்தில் B பிரிவு குல தெய்வங்களின் முன் அனுமதியைப் பெறாமல், ‘A’ பிரிவு குடும்பத்தின் வேண்டுகோட்களை ஏற்றுக் கொண்டு தெய்வங்களினால் அனுப்பப்படும் தீய கதிர்கள் B பிரிவு மக்களை நெருங்க முடியாது. B பிரிவு குடும்பத்தின் குலதெய்வம் அமைத்துள்ள தெய்வீகக் கதிர்களினால் அவை அழிக்கப்பட்டு விடும். இப்படியாக தன்னிச்சையாக தவறான முறையில் செயல்படும் தெய்வங்களின் தெய்வ சக்திகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு விடும். அந்த தெய்வங்கள் பிரும்மனின் சாபங்களை பெறுகின்றார்கள்.

198)  இப்படித்தான் ஏதோ ஒரு வகையில் பிரதான தெய்வங்கள் கூட அறியாமலேயே தவறுகளை செய்து சாபங்களைப் பெறுகின்றார்கள். எனவே, குல தெய்வ வழிபாடு மூலம் அந்தந்த குடும்பங்களுக்குப் தேவையான பாதுகாப்பு கிடைக்கின்றது.
199) இந்த விதிமுறையிலும் ஒரு சிறிய ‘உள்விதி’ உள்ளது. அதாவது தெய்வங்கள் மனிதர்களிடையே நீதி, நேர்மை மற்றும் அன்பை நிலை நாட்டுபவை என்பதால், உண்மையில் ‘B’ குழுவானது ‘A’ குழுவிற்கு எதிராக விரும்பத்தகாத தீமைகளை செய்தவர்களாக இருந்திருந்தால், அவர்கள் தண்டனை பெறத் தகுதியானவர்கள் எனக் கருதும் B பிரிவு குடும்பத்தினரின் குலதெய்வங்கள், அவர்களுக்கு தம்மால் தரப்பட்ட தெய்வீக கதிர்களினால் ஆன பாதுகாப்பு வளையத்தை தண்டனை முடியும்வரை தற்காலிகமாக எடுத்து விடும்.

200) A பிரிவின் பிரார்த்தனைகளை ஏற்று B பிரிவு குலதெய்வத்தின் அனுமதியுடன் தரப்படும் தண்டனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன? A பிரிவின் பிரார்த்தனைகளை ஏற்று B பிரிவு குலதெய்வத்தின் அனுமதியுடன் தரப்படும் தண்டனைகள் எதிர்மறை ஆற்றல் சக்திக் கதிர்களாகி ‘B’ குடும்பத்தை அடைந்து, அவர்கள் உடலை சூழ்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் வரவுள்ள வளம் மற்றும் மகிழ்ச்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்படும். அதன் விளைவாக அவர்கள் தமது வாழ்க்கையில் முடிவற்ற மன வேதனையையும், தடங்கல்களையும் சந்தித்தவாறு இருக்க அவர்களது வாழ்க்கை சீர்குலைக்கிறது.
201) அதே சமயம், தண்டிக்கப்பட்ட ‘B’ பிரிவை சேர்ந்தவர் தமது தவறை உணர்ந்து, தண்டனையினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கோரி, தங்களது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு தொடர்ந்து, உண்மையான, நியாயமான முறையில் பிரார்த்தனை செய்து வந்தால், எந்த தெய்வம் மூலம் அவர்கள் தண்டனை பெற்றார்களோ அந்த தெய்வம் சம்மதித்தால் அவர்களது தண்டனையை சில காலத்திற்குப் பிறகு ரத்து செய்யும் அதிகாரம் ‘B’ பிரிவை சேர்ந்தவர் வணங்கி வரும் குலதெய்வத்திற்கு உண்டு. இப்படிப்பட்ட பல்வேறு வரைமுறைகளுடனான பிரும்ம நியதிகள் உள்ளன. இப்படிப்பட்ட பிரும்ம நியதி முறைகள் அனைத்துமே மானிடர்களின் சிந்தனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை, விளங்காதவை .
202) தெய்வங்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் நிலை நிறுத்துவதற்காக, தெய்வ செயல் முறைகளில் பிரும்மா இதுபோன்ற பல விதிமுறைகளை இணைத்துள்ளார். ஏன் எனில் அனைத்து தெய்வங்களும் கண்களுக்கு தெரியாமலிருந்த சக்தியின் உடலுக்குள் இருந்த தெய்வீக அலைகளில் இருந்து வெளி வந்தவர்களே என்பதினால் ஒருவரை ஒருவர் அவமானப்படுத்துவது, அல்லது இழிவுபடுத்துவது அல்லது குல தெய்வங்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிற தெய்வங்கள் செயல்படுவது போன்ற செயல்கள் தொடர்ந்தால் கண்களுக்கு தெரியாமலிருந்த சக்தியின் உடலுக்குள் இருந்து வெளி வந்த தெய்வ தோற்றங்களின் செயலை இழிவு படுத்தும் விதத்தில் அமைந்து விடும் என்பதினால்தான் இத்தகைய கண்டிப்பான விதி முறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
203) மேலே உள்ள அனைத்தும் வெளிப்படுத்துவது என்ன என்றால், மனிதர்களைப் போலவே, தெய்வங்களும் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டவை என்பதை எடுத்துக் காட்டவும், நியாயமும், நேர்மையும், தர்மமும் பூலோகத்து மக்களுக்கு மட்டும் அல்ல தெய்வங்களுக்கும் பொருந்தும் என்பதைக் காட்டுவதற்கும்தான்.
204)  தற்கால கணினியைப் போலவே, பிரும்மாவிடமும் சூப்பர் (மிக நேர்த்தியான) கம்யூட்டர் இருந்திருக்க வேண்டும் என்பதினால்தான் பரந்து விரிந்துள்ள இந்த பிரபஞ்சத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன தெய்வம், குலதெய்வம், மற்றும் தேவதைகள் அவதரிக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எந்தெந்த குடும்ப மக்களை நல் வழிப்படுத்தி பாதுகாத்து வர வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக பதிவு செய்து வைத்துள்ளார்.
205) அனைத்து தெய்வங்களும், குல தெய்வங்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த இடத்தில் சென்று அவதரிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி இருந்துள்ளார் . எந்த இடத்தில் அவர்கள் அவதரிக்க வேண்டுமோ அவற்றைக் குறித்து குழப்பமடையக் கூடாது என்பதற்காக பிரம்மா இந்த விதிமுறையை நிறுவி உள்ளார்.
206) தெய்வங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் சென்று தமது உருவில் அவதரித்தப் பின்னர் அந்த பூமியில் உள்ள ஆலயம் அல்லது வேறு எந்த இடத்தில் தாம் குடிகொள்ள வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்த பின் அங்கு தமது தெய்வ சக்திகளை இறக்கி வைத்துவிட்டு , அந்த ஊரில் உள்ள யாராவது கனவில் தோன்றியோ அல்லது சாமியாடிகள் மூலமோ தாம் இன்ன இடத்தில் இருப்பதாக தெரிவிப்பார்கள். அவர்களது கட்டளைகளுக்கு ஏற்ப உள்ளூர் ஜனங்களும் அந்த தெய்வம் கனவில் கூறிய அதே இடங்களில் அந்த தெய்வத்திற்கு ஆலயம் எழுப்பி அவர்களை அங்கேயே வழிபடுவார்கள்.
207) பிரம்மாவின் தெளிவான நியதியின்படி, தெய்வங்கள் எங்கு வெளிப்படுகிறார்களோ, அந்த இடத்தை புனிதமாகி, தமது தெய்வ சக்திகள்அங்கு இறக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு அவர்களின் வழிபாட்டு தலம் அல்லது ஆலயம் எழும்பும். அந்த இடத்தில் சென்று பிரார்த்தனை செய்பவர்களுக்கு எந்த குல தெய்வத்தை வணங்கி வருவார்களோ, அந்த தெய்வத்தின் கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஆற்றல் மிக்க தெய்வ சக்திகள் அவர்களது உடலை சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு கவசத்தை போல அவர்களை பாதுகாக்கும்.
208) தெய்வங்கள் தாம் எங்கு வெளிப்பட வேண்டுமோ அந்த இடங்களில் இருந்த கற்கள் அல்லது பாறைகளின் உள்ளுக்குள் சென்று அதை தன்னுடைய வடிவமாக மாற்றிய பின்னர், அதை பூமிக்குள் மறைத்து வைத்து விட்டு அதற்குள் தமது தெய்வீக சக்தியையும் செலுத்திய பின்னர் கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் அங்கேயே தங்கி இருந்தார்கள். உள்ளூர்வாசிகள் தமக்கு கனவுகளில் தோன்றிய அதே இடங்களுக்குச் சென்று பூமிக்குள் புதைந்து இருந்த அந்த சிலைகளை தோண்டி எடுத்து அதே இடத்தில் சிறிய ஆலயம் அல்லது வழிபாட்டு தலம் எழுப்பி அதற்குள் அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.
209) அப்படி எழும்பிய வழிபாட்டு தலங்களில் இருந்த தெய்வங்களே அந்த ஊரில் குடியேறத் துவங்கிய பல குடும்பங்களுக்கும் குல தெய்வம் ஆயிற்று. இப்படியாகவே ஒவ்வொரு கிராமத்திலும் மறைந்து இருந்த குலதெய்வங்கள் ஏதோ ஒரு வகையில் தம்மை உள்ளூர் மக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டு அங்கு வழிபாட்டு தலங்களில் அமர்ந்து கொண்டு அந்த நிலத்தில் இருந்த பல குடும்ப மக்களுக்கு குல தெய்வம் ஆனார்கள்.
210) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முதலில் வெளிப்பட்ட குல தெய்வம் மீண்டும் இன்னொரு இடத்தில் சென்று வெளிப்பட முடியுமா? இந்த கேள்வி எழக் காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் தோன்றிய அதே குல தெய்வங்களின் சிலைகள் பல இடங்களில் உள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதினால் பண்டிதர்கள், அந்த குல தெய்வத்தை எந்த ஆலயத்தில் சென்று ஆராதித்தாலும் தவறில்லை என்பார்கள்.
211) ஆனால் அந்த கூற்று தவறானது. அதே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பரந்து விரிந்து கிடக்கும் நிலங்களில் காணப்படும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே குல தெய்வத்திற்கு பூஜை செய்வதையோ அல்லது வழிபடுவதையோ பிரும்ம நியதி தடை செய்யவில்லை.
212) எந்த ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்தாலும் அந்தந்த தெய்வங்களின் அனுகிரகம் பக்தர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஆனால் அதே சமயத்தில் மூல ஆலயத்தில், அதாவது எங்கு அந்த குல தெய்வம் முதலில் தோன்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்ததோ அந்த ஆலயத்தில் சென்று அந்த குல தெய்வத்தை வணங்கித் துதிக்கும்போது கிடைக்கும் பலன்கள் பிற ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே குல தெய்வத்தை சென்று வணங்கும்போது கிடைக்காது. காரணம் அங்கு வெளிப்படும் தெய்வீகக் கதிர்களின் தன்மைகள் மூல ஆலயத்தில் வெளிப்படும் குல தெய்வத்தின் தெய்வீகக் கதிர்கள் அளவில் இருக்காது.
213)  இதை கீழ் கண்ட ஒரு உதாரணத்தின் மூலம் ஆராய்வோம். தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் ஐயனாருக்கு பல ஆலயங்கள் இருந்தாலும், சுந்தர் என்ற ஒரு குடும்பத்தினர் நாமக்கல் கிராமத்தில் (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஒரு ஆலயத்தில் இருந்த ஐயனாரை தங்கள் குலதேவதையாக வழிபட்டனர் என்பதாக வைத்துக் கொள்வோம்.

214)  சுந்தரின் குல தெய்வமான ஐயனார் சிலை போன்ற அதே உருவம் மற்றும் மற்ற எல்லா அம்சங்களிலும் மூல ஆலயத்தின் தன்மை கொண்ட ஐயனார் சிலை, வேறு பல கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்த (அவை மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, அடர்த்தியான மஞ்சள் போன்ற பிற வண்ணங்களில் காட்டப்பட்டுள்ளன) ஆலயங்களிலும் இருந்தது . சுந்தரின் குடும்பத்தினர் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் உள்ள கிராமத்திற்கு குடிபெயர்ந்து விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய தனது மூல கிராமத்திற்கு (நீல நிறத்தில்) செல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, தாம் குடி பெயர்த்து விட்ட கிராமத்தில் இருந்த ஆலயத்தில் இருந்த ஐயனாரை (அடர் மஞ்சள் நிற மண்டலத்தில்) தமது குல தெய்வமாக நினைத்துக் கொண்டு பிரார்த்தனைகளைச் செய்யத் துவங்கினார் என்பதாக வைத்துக் கொள்வோம்.
215) அவரது (சுந்தர்) பிரார்த்தனைகள் அவரது குல தெய்வத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அருள் கிடைக்குமா? சுந்தரின் பிரார்த்தனை அடர்த்தியான மஞ்சள் நிற மண்டல ஆலயத்தில் இருந்த ஐயனாரினால் ஏற்கப்பட்டு அவருக்கு ஐயனாரின் ஆசிகள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நீல நிற கிராமத்தில் அமர்ந்திருக்கும் அவரது குல தெய்வமான ஐயனாரிடமிருந்து அவருக்குக் கிடைக்கும் அதே அளவிலான அருளாசிகளை சுந்தர் பெறமாட்டார்; நீல நிற மண்டலத்தில் இருந்த அவரது குல தெய்வமான ஐயனாராலும் சுந்தர் அடர்த்தியான மஞ்சள் நிற ஆலயத்தில் இருந்த ஐயனாருக்கு செய்த குல தெய்வ சடங்குகளை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.
216)  சுந்தரரின் குல தெய்வமான ஐயனாரை அவரது சொந்த கிராமத்தில் (நீல நிறப் பகுதி) இருந்த ஆலயத்தில் சென்று வழிபட்டால் அவருக்கு அளவில்லா அருள் கிடைக்கும் என்றாலும் அவர் வேறு எந்த ஆலயத்தில் அவரை வழிபட்டாலும் அவருக்கு அதே அளவில் அவர் அருள்வார். ஆனால் அதில் ஒரு சின்ன விதி உள்ளது. சுந்தரின் குடும்ப உறுப்பினர்கள் குறைந்தது பல வருடங்களுக்கு ஒரு முறையாவது மூல ஆலயத்தில் உள்ள (நீல நிறப் பகுதி) அவரது குல தெய்வமான ஐயனாரை அங்கு சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். காரணம் வெவ்வேறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஐயனாரின் தெய்வீக சக்திகள் சுந்தர் வழிபட்ட மூல ஆலய குல தெய்வமான ஐயனாரின் சக்தியிலிருந்து வேறுபட்டவை ஆகும் (தெய்வீக சக்திகள் ஒவ்வொரு இடத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்டவை). பிற ஆலயங்களில் அதே தெய்வம் வெளிப்படுத்தும் தெய்வீக சக்திகளின் ஆற்றல் மூல ஆலயத்தில் அதே குல தெய்வம் வெளிப்படுத்தும் தெய்வீக சக்திகளை விட வெகு குறைவாகவே இருக்கும் என்பதினால் குறிப்பிட்ட இடத்தில் சென்று பிரார்த்தனை செய்யும் போது கிடைக்கும் பலன்கள் நிச்சயமாக மற்ற ஆலயங்களில் சென்று வழிபடும்போது கிடைக்காது. இதை புரிந்து கொள்ள கீழ் கண்ட படத்தைப் பார்க்கவும். 

217) மற்ற ஆலயங்களில் (பிற வண்ணங்களில் உள்ள நிலப்பரப்புகள்) அதே தெய்வங்கள் (ஐயனார்) முழு வேத சடங்குகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும்; பிரதிஷ்டை செய்யப்படும் சடங்குகளில் ஓதப்படும் மந்திர சக்திகளினால் அதே தெய்வீக சக்திகளை தன்னுள் இழுத்துக் கொண்டு தாம் பிரதிஷ்டை பட உள்ள பூமியில் அமர்ந்தாலும், சுந்தர் வணங்கிய மூல ஆலயத்தில் இருந்த குலதெய்வம் வெளிப்படுத்தும் தெய்வீக சக்தியை போல இருக்காது. அந்தந்த இடங்களில் உள்ள தெய்வங்களின் சக்தியானது அந்தந்த இடங்களின் தன்மைகேற்பவே அமைந்து இருக்கும்.
218) ஒவ்வொரு தெய்வத்தின் தனித்த தன்மை வாய்ந்த தெய்வ சக்திகளும் அவர்கள் குடி கொண்டு உள்ள மூல ஆலயத்தில் இருப்பதினால் அவற்றின் தனித்துவமான தெய்வீக அலைகளின் வீரியம் அந்த ஆலயத்தில் அனைத்து பகுதியிலும் அதிக அளவில் மிதந்து கொண்டிருக்கும். அதன் விளைவாக மூல ஆலயத்தில் சென்று வழிபடும்போது தெய்வீக ஆற்றல் மிக்க சக்தி அலைகள் பிரார்த்தனை செய்பவர்களின் உடலில் ஊடுருவி அவர்களுக்கு அதிக அளவிலான பலன்களை தருகின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை செய்யும் போது பல பக்தர்களால் உணரப்படும் அதிர்வு (Vibration) எனப்படுவது இதுவே ஆகும். நீல நிற இடங்களில் உள்ள ஆலயத்தில் தமது குல தெய்வத்தை வணங்கி துதிக்கும் குடும்பங்கள் மஞ்சள், அடர்த்தியான மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வேறு ஆலயங்களில் உள்ள அதே குல தெய்வத்தின் ஆலயங்களில் சென்று வழிபட்டால் அவர்களை அவர்களது குல தெய்வம் ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்பது அர்த்தம் அல்ல. அந்த குடும்பத்தின் ஏதாவது ஒரு குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது அவர்களது பிரதான குல தெய்வ ஆலயத்திற்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்தால், அந்த தெய்வீக அலைகள் அவர்கள் மீது தமது சக்திகளை ஊடுருவச் செய்கின்றது. குல தெய்வம் நிச்சயமாக அவர்களின் நிலையைப் புரிந்துகொண்டு அவர்களைப் பாதுகாத்து வழிநடத்தும். இதை செய்ய விட்டால், குல தெய்வத்தின் முழுமையான ஆசிகள் அந்த குடும்பத்துக்கு கிடைக்காது.
219) சில சமயங்களில் எங்கெல்லாம் சாபத்தினால் குல தெய்வங்கள் உட்பட பல தெய்வங்கள் தவத்தில் அமர்ந்து இருந்தனவோ, தமது தவக் காலம் முடிந்த பின் அதே இடத்தில் இருந்த பாறைகள் அல்லது பிற ஜடப் பொருட்களுக்குள் ஊடுருவுகின்றன (ஒவ்வொருவருக்கும் கண்ணுக்குத் தெரியாத உயிர்கள் இருந்தாலும் வெளித் தோற்றத்தில் ஜடத் தன்மை கொண்டவை). சில தெய்வங்கள் எறும்புப் புற்றுக்களிலும் சென்று அமர்ந்து கொண்டு தவம் செய்துள்ளன. இப்படியாக பாறைகள், அல்லது ஜடப் பொருட்களுக்குள் நுழைந்தவுடன் அந்தந்த தெய்வங்களின் தெய்வீக ஆற்றல்கள் அதனுள் செலுத்தப்பட்டு விடுகின்றன. காலப்போக்கில் அவை அனைத்துமே அவர்கள் விரும்பும் தோற்றத்துடன் வடிவம் பெற்று புனிதமாகி விடும். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்தந்த தெய்வங்களின் கட்டளையிட்டபடி மறைந்திருந்த அந்த சிலைகள் தோண்டியெடுக்கப்பட்டு அங்கு அமையும் ஆலய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படும்போது அந்த ஆலயங்களில் சக்தி வாய்ந்த தெய்வீக அலைகள் மிதந்து கொண்டிருப்பதை அங்கு செல்பவர்களால் உணர முடியும். தெய்வங்களிடம் இருந்து நேரடியாக வெளியிடப்படும் சக்தி வாய்ந்த தெய்வீக ஆற்றல் அலைகள் அந்த தெய்வத்தைப் போன்ற தெய்வீக சிலைகள் நிறுவப்பட்டு உள்ள மற்ற ஆலயங்களில் இருக்க முடியாது.
220) அதேபோல், அந்த தெய்வங்கள் தவம் செய்த காலத்தில் மறைந்திருந்த எறும்புப் புற்று அவர்களின் தெய்வீக சக்திகளால் நிரப்பப்பட்டு புனிதப்பட்டிருக்கும். அந்த எறும்புப் புற்றை உள்ளடக்கிய இடங்களில் ஆலயங்கள் எழும்போது , அந்த தெய்வங்களின் தெய்வீக சக்திகள் ஆலயத்திற்குள் இருக்கும் இடத்தை நிரப்பி, அங்கு வரும் பக்தர்களுக்குப் பாதுகாப்பு கவசமாக இருக்கும். அதனால்தான் நேரடியாக தெய்வங்களிடம் இருந்து வெளிப்படும் வலிமையான தெய்வீக சக்திகள் அதே தெய்வத்தின் சிலைகள் நிறுவப்பட்ட பிற ஆலயங்களில் கிடைக்காது.

  …….அடுத்த பகுதி 221 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது