101) தாங்கள் படைக்கப்பட்டவுடன், ஏழு முனிவர்களும் தாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்று தெரியாமல் குழப்பமடைந்து பிரம்மாவின் முன் நின்றார்கள். பிரபஞ்சம் மானிடர்கள் வாழும் நிலைக்கு வந்தவுடன் அவர்கள் அங்கு சென்று தனது பிரதம தூதர்களாக செயல்படுவார்கள் என்பதாக பிரம்மா கூறினார். அவர் படைத்த நான்கு யுகங்கள் என்னென்ன, ஒவ்வொரு யுகத்திலும் உள்ள ஆத்மாக்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும், ஒவ்வொரு ஆன்மாவிற்குமான பிறப்பு -இறப்பு – மறு பிறப்பு எனும் சுழற்சி, ஆண்-பெண் கோட்பாடு, அவர்களின் ஒன்றிணைப்பு, குழந்தைகள், வாழ்வின் நெறிமுறைகள், வளமான வாழ்க்கையின் விதிமுறைகள், நல்ல மற்றும் தீய செயல்கள், பாவங்கள் என தனது படைப்பின் அனைத்து அம்சங்களையும் அவர்களுக்கு விரிவாக விளக்கினார். மேலும் குல தெய்வங்களின் முக்கியத்துவம், ஒவ்வொரு மானிட குலமும் அவர்கள் தோன்றும் அந்த நிலப் பகுதியில் எப்படி அவர்களால் வழி நடத்தப்பட்டு வருவார்கள் என்பதை எல்லாம் விளக்கிக் கூறிய பின் தன்னுடைய கட்டளை கிடைக்கும் வரை அவர்கள் அனைவரையும் யாருடைய கண்களுக்கும் தெரியாமல் மறைந்து இருக்குமாறு கட்டளை இட்டார்.
102) அந்த மகரிஷிகளை செயல்மிக்கவர்களாக்கிய பின்னர் அவர்கள் பூமிக்கு சென்று அங்குள்ள சில மானிடர்களையும் தெய்வ தூதர்களான தமது சிஷ்யர்களாக்கிக் கொண்டு அவர்களுக்கு தெய்வீகத்தின் மகிமைகள், ஆன்மீக வழி நடப்பதின் பலன்கள் என தான் கொடுத்துள்ள அனைத்து செய்திகளையும் பூலோக மக்களிடையே பரப்ப வேண்டும். அது குரு-சிஷ்ய பரம்பரையை உருவாக்கும் என்றார்.
103) பிரம்மாவின் போதனைகளை மனதில் ஏற்றுக் கொண்ட மஹரிஷிகள் தமக்காக உருவான பெண் ரிஷிகளையும் மணந்து கொண்டு தமது பணியை நிறைவேற்ற பூமிக்கு சென்று எவருடைய கண்களுக்கும் புலப்படாத வகையிலும் செயல் அற்ற நிலையிலும் கோடானுகோடி ஆண்டுகளாக இருந்தவாறு பிரபஞ்சத்தின் அம்சங்களையும், பிரபஞ்சத்தில் பிரம்மா நடத்திய நாடக ஒத்திகையையும் பார்த்தவாறு இருந்தார்கள்.
104) பிரபஞ்சத்தின் முழு தத்துவத்தையும் பிரம்மாவின் கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள மகரிஷிகளுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆனது. ஏனெனில் ஒவ்வொரு அம்சங்களும் மிக ஆழமானதாகவும் , நுணுக்கமாகவும், சிக்கலானதாகவும் இருந்தது.
105) பிரும்மாவின் அடுத்த வேலை மானிடப் பிறவிகளை படைத்து அவர்களை பூமிக்கு அனுப்புவதுதான். ஆனால் அப்படி அனுப்பப்பட்ட ஆத்மாக்கள் உடனடியாக மானிடப் பிறவியை எடுக்கவில்லை. பிரும்மா படைத்த ஆத்மாக்கள் முதலில் 15 முதல் 20 வகைகளிலான விலங்கியல்களாக படைப்பு எடுத்த பின்னரே அவர்களிடம் இருந்து ஒரு பகுதியினர் பலகோடி வருடங்களுக்குப் பிறகு மானிடப் பிரிவுகளாக மாறினர். எதனால் இந்த நிலை ஏற்படுத்தப்பட்டது?
106) தொல்பொருள் மற்றும் மானுடவிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின்படி, பிரம்மாவின் துவக்க கால படைப்புகள் ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கின வகைகளிலும், டைனோசர்கள் மற்றும் சிம்பன்சிகள் எனப்படும் விலங்கியல்கள், செடி, கொடி, மரங்கள் என்ற அசையா பொருட்கள் என 15 முதல் 20 வகைகளில் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது. பிரம்மாவினால் உருவாக்கப்பட்ட அனைத்துமே அடர்ந்த காடுகள், நதிக் கரைகள், குகைகள் அல்லது திறந்த வெளியிடங்களில் வாழத் துவங்கின.
107) தொல்பொருள் மற்றும் மானுடவிய விஞ்ஞானிகளின் கூற்றின்படி ஆந்த்ரோபாய்டியா (பெரிய மூளை குரங்குகள் மற்றும் குரங்குகள்) எனப்படும் விலங்கியல்கள் சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றி இருந்தாலும், அந்த விலங்கியல்கள் மெல்ல மெல்ல பரிமாற்றம் அடைந்து இரண்டு கால்களுடன் நடந்த மானிட உருவை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அடைந்து இருக்க வேண்டும். ஆனால் அவை அறிவு இல்லாத நிலையில் இருந்த மானிடப் பிறவிகளாகவே இருந்தார்கள் என்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
108) முன்னர் கூறியது போல, பரபிரும்மனால் பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு, அந்த நீரும் நிலமும் கொண்ட பூமியானது, மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் வாழத் தேவையான தன்மையை கொண்ட நிலமாவதற்கு 13.699 பில்லியன் ஆண்டுகள் தேவைப்பட்டு இருந்துள்ளது. எனவே, பிரபஞ்சம் படைக்கப்பட்ட 13.699 ஆண்டுகளுக்கும் மேலாக குல தெய்வங்கள் உட்பட எந்த தெய்வங்களின் தோற்றமும் பூமியில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதாக நாம் கருதலாம்.

109) தம்மால் படைக்கப்பட்ட உயிரினங்கள் பூமியில் மெல்ல மெல்ல குடியேறவும், சுற்றுச் சூழலுக்குப் ஏற்ப தம்மை பழக்கிக் கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படும் என்பதை உணர்ந்த பிரும்மா முதலில் தோன்றிய ஜீவன்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினரையே மானிடர்களாக மாற வைத்து இருந்தார். அப்படி மாற்றம் அடையத் துவங்கிய மானிடர்கள் பூமியில் வாழத் தேவையான அறிவைப் பெறவும், தங்களைச் சுற்றியுள்ளவற்றை புரிந்து கொள்ளவும், மலைகள், குகைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற இயற்கையான இடங்களில் சென்று வாழவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயிற்று.
110) பிரபஞ்சம் படைத்த பின்னர் படைப்பை துவங்கிய பிரும்மா, துவக்கத்தில் தனது உடலில் இருந்து நான்கு தன்மைகளைக் கொண்ட ஆத்மாக்களை விடுவித்தார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நான்கு தன்மைகளைக் கொண்ட ஆத்மாக்கள் மானிட வடிவத்தை எடுத்து, வாழ்வதற்கு தேவையான அறிவைப் பெற்ற பிறகு, பல குழுக்கள் அல்லது ஜாதிகளாக பிரிந்து கொண்டார்கள். நான்கு தன்மைகளைக் கொண்ட ஆத்மாக்களே நான்கு வர்ணங்கள் தோன்றக் காரணமாயிற்று.
111) முதல் யுகத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களும் உடனடியாக மானிட உருவை பெறாது, அவற்றில் ஒரு சதவிகிதம் ஏதேனும் ஒரு வடிவம் கொண்ட பிறப்பு எடுக்கும்வரை ஆத்மாக்களாகவே பூமியின் மீது உலாவிக் கொண்டு இருக்கும். இந்த நியதியை எதற்காக பிரும்மா ஏற்படுத்தி இருந்தார் என்றால், அதுவே ஆண் மற்றும் பெண் கோட்பாட்டை – மானிடர்களோ அல்லது விலங்குகளோ- எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து இருக்கும். ஆண் மற்றும் பெண் கலவையினால் பிறக்கும் குழந்தைகளாக பூமி மீது மிதந்து கொண்டிருக்கும் சில ஆத்மாக்கள் பிறப்பு எடுக்கின்றன. பூமி மீது மிதக்கும் ஆன்மாக்கள் ஏதோ ஒரு வடிவத்தில்- மனிதர்களாகவோ அல்லது விலங்குகளாகவோ- படிப்படியாக மாறுவதின் மூலமே ஒரு யுகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான ஜீவன்களை அந்த யுகத்தில் நிரப்பி விடும்.
112) இரண்டு கால்களில் நடந்ததாக கருதப்படும் நமது பழமையான மனித மூதாதையர் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றி உள்ளார்கள் என்றும் அந்த நேரத்தில்தான் தெய்வங்களின் தோற்றங்களும் பரந்த நிலத்தில் இருந்திருக்கலாம் என்ற கருத்து ஓரளவு ரிக்வேத காலத்தின் வருகையை குறிக்கும் வகையில் உள்ளது. வேத காலத்தில் குல தேவதை வழிபாடு தொடங்கியதாகக் கூறப்படுவதை இந்த கருத்து ஆதரிப்பது போல உள்ளது.
113) இதோடு வேத நூல்கள் மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தற்போது முடிவுறப்பட்டு ஆலய பூசாரிகளால் வாய் மொழியாகக் கூறப்பட்ட கதைகள், சொற்பொழிவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் நாம் அறிந்து கொண்ட தெய்வீக தோற்றம் குறித்த தகவல்கள் கீழே தொடர்கின்றது.
114) பூமியை உயிரினங்கள் வாழத் தகுந்த நிலமாக மாற்றி அமைத்த பின், பிரும்மா அதை பல பிரிவுகளான நிலங்களாக மாற்றி அமைத்தார். தன்னால் படைக்கப்பட்ட முதல் நிலை ஆத்மாக்கள் அவற்றில் எங்கு வேண்டுமானாலும் சென்று பிறப்பு எடுத்துக் கொள்ளும் வகையில் நியதியை வடிவமைத்து இருந்தார். அப்படி பிரிக்கப்பட்டு இருந்த நிலப் பகுதிகளில் நதிகள், ஆறுகள், காடுகள் மற்றும் மலைகளும் இருந்தன.
115) நல்ல தன்மைகளை கொண்ட நிலப்பரப்பில் பிறப்பு எடுத்த ஆத்மாக்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ள வகையில் பிறப்பு எடுத்தார்கள்.
116) அதை போலவே எந்தெந்த நிலப்பரப்புகளில் மானிட பிறவிகள் பிறப்பு எடுத்தனவோ அந்தந்த பூமியின் தன்மைகளைக் கொண்டவர்களாகவே அவர்கள் குணங்கள் அமைந்து இருந்தன. அப்படி இருந்தால்தான் நன்மை மற்றும் தீமைகளின் வேற்றுமைகளை புரிந்து கொள்ள முடியும் என்பதற்காகவே அந்த நிலையை பிரும்மா ஏற்படுத்தி இருந்தார்.
117) தெய்வீகத் தன்மைகளைக் கொண்ட நிலப்பரப்பில் ரிஷி மற்றும் முனிவர்கள் பிறப்பு எடுத்தார்கள்.
118) வெவ்வேறு நிலப்பரப்புகளில் அந்தந்த தன்மைகளிலான மானிடர்கள் சென்று தங்கியதும், பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஏழு ரிஷிகளும், எங்கெல்லாம் ரிஷி முனிவர்கள் பிறப்பு எடுத்து இருந்தார்களோ அந்த நிலப்பரப்புகளில் சென்று, தம்மை அவர்களிடம் வெளிப்படுத்திக் கொண்டு, அவர்களோடு தங்கி இருந்தவாறு, மெல்ல மெல்ல தெய்வ லீலைகளை விளக்கி, ஆன்மீக போதனைகளை தரத் துவங்கினார்கள். அதன் மூலம் சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட மானிடர்களுக்கு அவர்களால் நல்ல போதனைகளை செய்ய முடியும் என்று கருதினார்கள்.
119) ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தன; ஏழு மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட ரிஷிகள், துறவிகள் மற்றும் முனிவர்கள் அடங்கிய குழு மனிதர்கள் குடியேறிய இடமெல்லாம் சென்ற வண்ணம் இருந்து கொண்டு, தெய்வ செயல்கள் மற்றும் தெய்வங்களின் தோற்றங்களை எல்லாம் விவரித்த வண்ணம் இருந்தவாறு மனித குலத்திற்கு தேவையான ஆன்மீக அறிவை வழங்கத் துவங்கினார்கள்.
120) இந்த நிலையில்தான் முதலாவது நிலையிலான தெய்வங்கள் தம்மை உலகில் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தவாறு, தம்மால் படைக்கப்பட்ட இரண்டாம் நிலை தெய்வங்களை பூமியில் சென்று தோன்றுமாறும், அங்கு தெய்வங்களின் லீலைகளை வெளிப்படுத்தியவண்ணம் இருக்குமாறும் கூறி அனுப்பினார்கள்.
121) ஆன்மீக உலகில் மக்களை இழுத்தால்தான் தெய்வங்கள் உள்ளனர் என்பதை புரிந்து கொள்வார்கள், அதை எப்படி செய்வது? அதற்கான முதல் படியாக பயங்கரமான ஒலிகள் மற்றும் கண்களைப் பிளக்கும் ஒளிகள் போன்றவற்றை எழுப்பி, அவை அனைத்தும் கண்களுக்கு தெரியாத தெய்வங்களின் கோபத்தினால் ஏற்பட்ட செயல் என்று போதனை செய்தார்கள். அதன் மூலம் மனிதர்களின் மனதில் பயத்தை உண்டாக்கிய பின்னர், ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டிய நல்ல பண்புகள், நெறிமுறைகள் போன்றவற்றை கடை பிடித்தால் மட்டுமே தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க முடியும் என்று போதனை செய்யலானார்கள். இந்த வழிமுறைகளில் பரப்பப்பட்ட போதனைகள் பிற்காலத்தில் மக்களை வழி நடத்த தோன்ற இருந்த குல தெய்வம் எனும் கருத்தை ஏற்பதற்கு செய்யப்பட்ட முதல் கட்ட நடவடிக்கை ஆகும் .
122) இப்படியாக பிரம்மா பிரபஞ்சத்தில் ஆதிகால மனித சமூகத்தை முன்னோக்கிய நிலைக்கு எடுத்துச் செல்லாத துவங்கிய நேரத்தில் பரபிரும்மனின் லோகத்தில் தெய்வங்களுக்கு தோற்றங்கள் தரப்பட்டு வந்திருந்தன.
123) Deleted
124) இன்று நாம் காணும் தெய்வங்கள் எவ்வாறு குறிப்பிட்ட தோற்றங்களையும் வடிவங்களையும் பெற்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் அம்சங்களையும் தோற்றங்களையும் பர பிரம்மனின் உடலுக்குள் பெற்றனர் என்பதே பரந்த கருத்து ஆகும்.
125) சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி போன்ற பிரதான தெய்வங்களை யார் எவ்வாறு வடிவமைத்தார் என்பது விவாதத்திற்குரிய விஷயம். பதிலளிக்க முடியாத சிக்கலான கேள்விகளில் சில என்ன என்றால் பரபிரும்மனின் உடலுக்குள் உருவாக்கப்பட்டு சக்தியளிக்கப்பட்ட அனைத்து தெய்வங்களும் பூமிக்கு அனுப்பப்பட்டனவா? ஒவ்வொரு தெய்வத்தின் அம்சங்களும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவைகளா?
126) பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்பே, கண்ணுக்குத் தெரியாத பல லட்ச தெய்வங்களும் தேவ கணங்களும் பரபிரும்மனின் லோகத்திற்குள் (உடலுக்குள்) தெய்வீக சக்தி கதிர்களாக, குறிப்பிட்ட சில குணாதிசயங்கள் மற்றும் தோற்றங்களுடன் இருந்தன என்று சில ஆன்மீக குருக்கள் விளக்குகிறார்கள். பரபிரும்ம லோகம் என்பது தெய்வீக ஆற்றல் மையமாகும். அதில் லட்சக்கணக்கான தெய்வீக சக்தி கதிர்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. பூமியும் கடலும் கூட அதற்குள் செயலற்ற நிலையில் இருந்தன என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.
127) பல பண்டிதர்களின் கருத்துப்படி, தனது உடலுக்குள் இருந்த தெய்வீக சக்தி கதிர்களை வெவ்வேறு வடிவங்களிலும் தோற்றங்களிலும் மாற்றுவதற்கு முன்பு, பிரபஞ்சத்தின் முதன்மையான தேவ சில்பி விஸ்வகர்மா என்பவர் பரபிரும்மனால் படைக்கப்பட்டு, தனக்குள் இருந்த தெய்வங்களின் தோற்றத்தை வடிவமைத்தாராம். பரபிரும்மனின் உடலுக்குள் அமர்ந்து இருந்த சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் பார்வதி போன்ற பிரதான தெய்வங்களின் வடிவத்தையும், தோற்றத்தையும் அதே தேவ சில்பிதான் அமைத்தார் என்று நம்பப்படுகிறது.
128) தெய்வ சிற்பி விஸ்வகர்மாவின் பாத்திரத்தைப் பற்றி ரிக் வேதத்தில் கூட குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே போலவே மேலும் சில உபநிடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. தெய்வ சிற்பி விஸ்வகர்மா தனது நாபியிலிருந்து பல உருவங்களை எடுத்து அவற்றைக் கொண்டே தெய்வங்களின் தோற்றத்தை வடிவமைத்தாராம். பண்டைய வேத காலத்தில் தெய்வ சிற்பி விஸ்வகர்மாவை தெய்வ உருவங்களை படைக்கும் த்வஸ்தாருடன் (Tvastar) ஒப்பிட்டு பார்த்தார்கள்.
129) பிற்கால புராணங்களில், விஸ்வகர்மா சில சமயங்களில் கைவினை கலைஞர் த்வஸ்தருடன் ஒப்பிடப்பட்டு உள்ளதைக் காணலாம். சில வேத இலக்கியங்கள் பிரஜாபதியும், த்வஸ்தரும் வெவ்வெறு வழிகளிலான படைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள்; பிரஜாபதி உயிரினங்களின் அதிபதி என்று குறிப்பிடப்படுகிறார், அதே நேரத்தில் த்வஸ்தார் ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கருவிகள் மற்றும் பொருட்களை வடிவமைத்து உருவாக்கிய ஒரு திறமையான கைவினை கலைஞராக காட்டப்படுகிறார். புராணங்கள் மற்றும் வேத இலக்கியங்களிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது – பரந்த நிலத்திற்குத் தேவையான தெய்வங்கள் மற்றும் பிற பொருட்களின் தோற்றத்தை வடிவமைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு கைவினை கலைஞர்கள் தேவைப்பட்டு இருந்துள்ளார்கள்.
130) இவ்வாறு பரப்பிரும்மனின் உடலுக்குள்ளேயே உருவாக்கப்பட்ட தெய்வங்கள் அனைவருமே பரபிரம்மனுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருந்தார்கள். தெய்வங்களின் வடிவமும் தோற்றமும் பரபிரும்மனின் உடலுக்குள் உருவாகிய பின்னர், அடுத்து கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருந்த பிரபஞ்சம் அனைவரும் காணும் வகையில் வெளிப்பட்டது. ஆனால் தெய்வங்கள் எப்போது வெளிப்பட வேண்டும் என்பதை பிரம்மதேவர் மட்டுமே முடிவு செய்வார் எனும் நியதி அமைக்கப்பட்டது.

131) இந்த ரகசியம் முதலில் படைக்கப்பட்டு இருந்த மகரிஷிகளுக்கு பிரம்மாவால் கூறப்பட்டது. ஸ்ரீமன் நாராயணனும் (விஷ்ணு பகவான்) இந்த ரகசியத்தை நாரத முனிக்கு ரகஸ்ய ஸ்துதி எனும் போதனை மூலம் கூறியதாக கூறப்படுகின்றது. இமயமலையில் உள்ள ஒரு குகையில் தனியாக அமர்ந்திருந்த போது, பார்வதி தேவிக்கு இந்த ரகசியங்களை சிவபெருமானே கூறினார் என்றும் அவர்களின் உரையாடலை ஒரு தெய்வீகப் பறவை கேட்டதும் அல்லாமல் அவற்றை ரிஷி மற்றும் முனிவர்களுக்கும் கூறியதாம். அதுவே வாய் வழி கதைகள் மூலம் ரிஷி மற்றும் முனிவர்களினால் பிரபஞ்சத்தில் பரப்பப்பட்டனவாம்.
132) எதனால் பரபிரும்மனின் உடலுக்குள் தெய்வங்கள் உருவாயின? பரபிரம்ம லோகத்தில் அவரது தெய்வீக சக்திக் கதிர்களில் இருந்து ஏதோ ஒரு வடிவில் உருவாக்கப்பட்டிருந்த தெய்வங்களுக்கு தெய்வீக ஆற்றல்கள் தரப்பட வேண்டும், அப்படி தெய்வீக ஆற்றல்கள் தரப்படாவிடில் அவர்களால் தாம் என்னென்ன நாடகங்களை பூமியில் நடத்திட வேண்டும் என்பதை தெளிவாக அறிந்து கொண்டு அவற்றை பூமியில் நடத்திட முடியாது. அந்த நிலை பூமியில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதினால்தான் தெய்வங்கள் பரபிரும்மனின் உடலுக்குளேயே படைக்கப்பட்டு அவற்றுக்கு பயிற்சி மற்றும் ஒத்திகைகளும் அங்கேயே தரப்பட்டனவாம்.
133) பரபிரம்ம லோகத்தில் இருந்து பிரபஞ்சம் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் பாதியில் மானிடர்கள் வாழும் வகையிலான ஆற்றல் மிக்கதாக பூமி உருவாக்கப்பட்டு வந்திருந்தபோது, பரபிரும்மனின் உடலுக்குள் படைக்கப்பட்டு இருந்த சில தெய்வங்கள் ஒத்துகையின்போது தவறுகளை செய்து சாபங்களையும் பெற்றன. அப்படி சாபம் பெற்ற சில தெய்வங்களில் சில பிரதான தெய்வங்களும் அடக்கம் ஆகும்.
134) ஆற்றல் மிக்க பூமி உருவாக்கப்பட்ட பிறகு, அதில் பிறப்பெடுக்க ஆன்மாக்கள் அனுப்பப்பட்டபோது, பரபிரம்ம லோகத்தில் உருவாக்கப்பட்டிருந்த சில தெய்வங்களும் அதே பூமியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் சென்று கண்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்தன.
135) தெய்வங்களின் உருவங்கள் மகரிஷி வேத வியாசர் மூலமாகவே மானிடர்களுக்கு தெரிய வந்தன என்று சனாதனவாதிகள் நம்பினாலும், அந்தக் கூற்று முரண்படுவது போல உள்ளது என்னவென்றால், அந்தக் காலங்களில் அனைத்தும் வாய் மொழியாக மட்டுமே பரப்பப்பட்டு பின்னர் பனை ஓலைகளில் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் தெய்வங்களின் உருவங்கள் வாய்மொழி வார்த்தைகளில் எவ்வாறு துல்லியமாக கூறப்பட்டு இருக்க முடியும்? ஒருவேளை வேத வியாசர் வாய் மொழியாக அனைவருக்கும் கூறியதில் இருந்த தெய்வ அம்சங்களைப் தியான நிலையில் இருந்தவாறு புரிந்து கொண்டு, எதிர்கால சந்ததியினர் அவற்றை நகலெடுத்துக் கொள்ளும் விதத்தில் பிற்காலத்தில் பனை ஓலைகளில் எழுதி வைத்தவர்கள், அதில் படங்களையும் வரைந்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்புகின்றார்கள். அதனால்தான் பிரபஞ்சத்தில் தெய்வங்கள் தோன்றியபோது, புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மா (1848-1906) போன்ற சில தெய்வ கலைஞர்களால் பனை ஓலைகளில் அல்லது வாய்மொழி பரிமாற்றங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தெய்வ அம்சங்களைப் புரிந்து கொண்டு தெய்வங்களின் உருவங்கள் ஓவியமாக வரைய முடிந்து இருக்க வேண்டும் .
136) இப்போது மீண்டும் மூல கட்டுரைக்கு வருவோம். மானிடர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழத் தேவையான பூமியை நிர்மாணித்து விட்ட பிரம்மா, அடுத்து எந்தெந்த தெய்வங்கள் எந்த நிலப்பரப்பில் சென்று தோன்ற வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டி இருந்தது.
137) ஆத்மாக்களை பூமிக்கு அனுப்புவதற்கு முன் தெய்வங்களை பிரும்மா பல்வேறு வகைகளாகப் பிரித்து வைத்தார். மானிடர்கள் அவரவர்கள் பிறவி எடுக்க ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களுக்கு சென்று பிறவி எடுக்கும் முன்னரே, தெய்வங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் , அந்தந்த தெய்வங்கள் சென்று கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இருக்க வேண்டும் என்று நியதியை வைத்தார். எந்த நிலையில் மக்கள் தெய்வங்களை புரிந்து கொள்ளும் அறிவாற்றலையும் நம்பிக்கையையும் பெறுவார்களோ, அப்போது மட்டுமே அந்த தெய்வங்கள் தம்மை படிப்படியாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார்.
138) சுருக்கமாகக் கூறினால் மானிடர்களை நல் வழியில் கொண்டு சென்று, அவர்களை தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்காகவே பிரும்மா படைத்த அனைத்து தெய்வங்களும் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.
139) பிரதான தெய்வங்களில் இருந்து எதோ ஒரு வடிவில் வெளி வந்த முதல் நிலை தெய்வங்கள், வழிபாட்டுத் தலங்கள் அல்லது ஆலயங்களில் சென்று குடியேறின. சுருக்கமாக கூறினால் அவை அனைத்துமே பிரதான தெய்வமான சிவ-சக்தியின் நிழல் உருவங்களேயாகும். அபாரமான தெய்வீக சக்திகளைக் கொண்டிருந்த அந்த தெய்வங்கள், தம்மை வணங்கித் துதித்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அவர்கள் அனைவருமே எந்த நிலையிலும், எங்கு வேண்டுமானாலும் சென்று தமது பக்தர்களுக்கு அருள் புரியும் வகையிலான சக்திகளை பெற்று இருந்தார்கள். அவர்களால் வேறு எந்த தோற்றத்திலும் அவதரிக்க முடியும். எங்கெல்லாம் அசுர சக்திகள் தலை தூக்கி நின்றனவோ அங்கெல்லாம் சென்று அவர்களை அழிக்கும் ஆற்றலையும் பெற்று இருந்தார்கள். தமது நிலப்பரப்பில் மட்டும் அல்லாமல் வேறு நிலப்பரப்பிலும் சென்று அசுர சக்திகளை அழிக்கும் ஆற்றலையும் அதிகாரத்தையும் பெற்று இருந்தார்கள். அவர்கள் தம் கீழ் பணி புரிந்த துணை தெய்வங்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்கி வந்தார்கள்.
140) முதல் நிலை தெய்வங்கள் பிரம்மாவின் படைப்பின் அடிப்படை விதிமுறைகளை மீறாமல் தங்கள் தெய்வீக சக்திகளை பல்வேறு நிலப் பரப்புக்களில் சென்று வெளிப்படுத்தவும், பிரயோகிக்கவும் சக்தி கொண்டிருந்தன. முதல் நிலை தெய்வங்கள் பல்வேறு தோற்றங்களிலும் பெயர்களிலும் அவதரிக்கின்றன. இதற்கான சிறந்த உதாரணம் பல ஆலயங்களிலும், பல பெயர்களிலும் வணங்கப்படும் சிவன் லிங்க வடிவிலான சிவபெருமான் ஆவார். அவர் மருத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், வைத்தீஸ்வரர், சொக்கநாதர், கும்பேஸ்வரர் போன்ற பெயர்களில் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். அதை போலவேதான் பெண் தெய்வமான பார்வதி தேவி பல ஆலயங்களில் திரிபுரசுந்தரி, லலிதாம்பிகை, காமாட்சி, கற்பகாம்பிகை, இராஜராஜேஸ்வரி போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காட்சியளிக்கிறார். பகவான் மகாவிஷ்ணு கூட வெங்கடாசலபதி, சாரங்கபாணி, ஸ்ரீரங்கம் ரங்கநாதஸ்வாமி, பூரி ஜகந்நாதர் போன்ற பெயர்களில் வெவ்வேறு உருவங்களில் காணப்படுகின்றார். அவர்களில் சிலர் எடுத்த பல்வேறு அவதாரங்களில் சிலருக்கு குல தெய்வங்கள் ஆனார்கள்.
141) சத்ய யுகத்தில் பிறக்க உள்ள மக்கள் ஒழுக்கம், நேர்மை, நல்ல பண்புகள் கொண்ட, பேராசை, பொறாமை அற்ற மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதினால் அந்த யுகத்திற்கு அதிக தெய்வங்கள் தேவை இருக்காது. ஆனால் அதே சமயத்தில் அடுத்து அடுத்து வரும் யுகங்களில் அதிக தெய்வங்கள் தேவைப்படும் என்பதையும் பிரும்மதேவர் உணர்ந்திருந்ததினால் அதற்கேற்ப த்ரேதா யுகத்தில் துவங்கி கலியுகம் வரை அதிக எண்ணிக்கையிலான தெய்வங்கள் அவதரிக்க வேண்டிய நியதியை நிர்ணயித்தார்.
142) ஒவ்வொரு யுகங்களிலும் தோன்றும் மக்கள் குணங்களை மெல்ல மெல்ல இழந்தவர்களாக இருப்பார்கள். கடைசி யுகமான கலியுகத்தில் முற்றிலும் பண்புகள் அற்றவர்களாக மக்கள் இருப்பார்கள் என்பதையும் பிரும்மா உணர்ந்தார்.
143) ஆரம்பத்தில் படைக்கப்பட்ட ஆன்மாக்கள் யுக யுகமாக பல மில்லியன் ஆன்மாக்களாகப் பெருகிக் கொண்டே இருக்கும்; அதே நேரத்தில் ஒரு மன்வந்தரம் (306,720,000 மனித வருடங்கள்) முடியும் வரை நிலமும் அவர்களை வாழ வைக்கும் அளவில் விரிவடைந்து கொண்டே போகும் என்பதை பிரம்மா நன்கே அறிந்திருந்தார். அந்தந்த நிலங்களில் வாழ உள்ள மானிடர்கள் பண்புகளும், அந்தந்த நிலங்களின் தன்மையை ஒட்டியே அமைந்து இருக்கும். இப்படியாக யுக யுகமாக மக்களின் குணங்களும் மாறிக் கொண்டே இருக்கும் நிலையில், தீய குணங்களைக் கொண்ட மக்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை நல் வழிப்படுத்த அதிக அளவிலான தெய்வங்கள் தேவை என்பதை உணர்ந்த பிரும்மா, அதிக அளவிலான குல தெய்வங்களை யுக யுகமாக தோற்றுவிக்க வைத்தார். இதனால்தான் புராண இதிகாசங்களில் த்ரேதா யுகத்தில் இருந்ததாக கூறப்படும் தெய்வங்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான தெய்வங்களை நம்மால் தற்காலத்தில் காண முடிகின்றது.
144) சத்திய யுகத்தில், பூமியின் நிலப்பரப்பை மானிடர்கள் குடியேறும் அளவிலான தன்மைகளை கொண்டதாக தயார் செய்து வைத்த பின்னர், பிரம்மா படைத்த மானிடர்கள், மெல்ல மெல்ல அறிவாற்றல் கொண்டவர்களாக மாறத் தொடங்கினார்கள். கண்களுக்கு புலப்படாமல் இருந்த தெய்வங்களை வழிபடும் பழக்கம் மிகக் குறைவான அளவிலேயே துவங்கினாலும் அது நாளடைவில் விரிவடைந்து கொண்டே சென்று திரேத மற்றும் துவாபர யுகங்கள் தோன்றியபோது அதிக அளவில் பரவி இருந்தது. ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்திருந்த மக்கள் தங்கள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட எதோ ஒரு சக்தி உள்ளதாக நம்பத் தொடங்கி அந்த முகம் தெரியாத சக்திகளிடம் தங்களைக் காக்குமாறு பிரார்த்தனை செய்தனர். அது வழிபாட்டு முறையை ஆழமாக வேரூன்ற வைக்க, மெல்ல மெல்ல அந்த முறையிலான தெய்வ வழிபாடு என்பது குல தெய்வ வழிபாடு தோன்ற இன்னொரு காரணம் ஆயிற்று.
145) வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர்கள் சூரியன், சந்திரன், நெருப்பு, மரங்கள், மலைகள், இடி, மின்னல் மழை போன்றவற்றையும், இயற்கையினால் ஏற்பட்டிருந்த சில வடிவங்களைக் கொண்ட பாறைகளையும் இனம் புரியாத சக்திகள் என்பதாக நம்பி வழிபட்டு வந்திருந்தார்கள் என்பதாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அப்படி அவற்றை வணங்காவிடில் அவற்றால் தமக்கு ஆபத்துக்கள் ஏற்படும் என அஞ்சி அவற்றை வழிபட்டு வந்தார்கள். ரிக்வேத காலத்தில் தெய்வங்களின் உருவ வழிபாடுகள் இருக்கவில்லை என்றும், தெய்வங்களின் உருவ வழிபாடு சத்ய யுகத்தில்தான் தோன்றியது என்பதாகவும் கருத்து உள்ளது.
146) ஆன்மீக குருமார்களின் கூற்றின்படி, சத்திய யுகம் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு செயலும் தெய்வீகம் நிறைந்ததாகவும், தூய்மையான இலட்சியத்திற்கும் மனித நேயத்திற்கும் நெருக்கமாகவும் இருந்தன. பாகவத புராணத்தின்படி, அந்த யுகத்தில்தான் ஒழுக்கம் என்பது நான்கு கால்களில் நின்று கொண்டு இருந்தது. அந்த நான்கு கால்களும் எளிமை, தூய்மை, இரக்க குணம் மற்றும் உண்மை என்று அழைக்கப்பட்டன.
147) சத்திய யுகம் ஆறு முதல் ஏழு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது மானிடர்கள் மேன்மையான அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருந்துள்ளார்கள். அது அற்புதமான காலமாகவும், மக்களிடையே இணக்கமும், நல்ல புரிதலும் இருந்தது. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தார்கள்; மேன்மையான ஆன்மீக விழிப்புணர்வும் இருந்தது.
148) Deleted
149) பிரம்மாவால் படைக்கப்பட்ட ஏழு மகரிஷிகளால் போதனைகள் செய்யப்பட்ட முனிவர்கள் மற்றும் ரிஷிமார்களின் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரத்தின் காரணமாக, மனிதர்களை விட சக்தி வாய்ந்த ஒருவர் இருக்கிறார் என்ற பரவலான நம்பிக்கை மக்களின் மனதில் ஆழமாகப் பதியத் துவங்க, அதுவே பய உணர்ச்சியையும் தூண்டி, இனம் தெரியாத சக்திகளுக்கு திறந்த வெளிகளில் செய்யப்பட்ட வழிபாட்டிற்கு வழி வகுத்தது.
150) ஆரம்ப கால கட்டங்களில் பிரபஞ்சம் முழுவதும் இருந்த நிலப் பரப்புகள் மணல் திட்டுகளாகவும், மிகக் குறைந்த அளவிலேயே வாழ்ந்திருந்த மனிதர்களும், விலங்குகளும் வாழ்ந்திருந்த புதர்கள் நிறைந்த காடுகளாகவும் இருந்ததால், ரிக் வேத காலத்தில் கற்கள், பாறைகள் மற்றும் மரங்கள் திறந்த வெளிகளில் வழிபடப்பட்டு வந்திருந்தன. அந்த குறிப்பிட்ட கற்கள், பாறைகள் அல்லது மரங்களுக்கு அருகில் செல்ல மக்கள் அஞ்சினர், அவற்றில் அசாதாரணமான, இனம் தெரியாத ஆவிகள் வசிக்கின்றன என்று பயந்து கொண்டு, தூரத்திலிருந்து நின்றவாறே அவற்றை வணங்கி, தம்மை காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தனர்.
151) தெய்வங்கள் உள்ளார்கள் என்பதை பய உணர்வினால் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரும்மா ஏற்படுத்தி இருந்த நுட்பமான நாடகத்தினால் இவை அனைத்தும் நடந்தேறின. இந்த தருமணத்தில்தான் எங்கெங்கு சென்று தங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலப்பரப்புக்குள், கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் இருந்த அந்தந்த தெய்வங்களும் சென்று தங்கலாயினர்.
152) அங்கும் இங்கும் சிறிதளவே தெரியும் வகையில் வாழ்ந்து கொண்டு இருந்த ரிஷி, முனிவர்கள், மக்களின் பய உணர்வை ஒருவித வழிபாட்டு முறையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். மர்மமான தோற்றங்கள் தந்து கொண்டிருந்த சக்திகளே ஆகாயத்தின் மேல் உள்ள லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்துள்ள தெய்வங்கள் என்றும், அவர்கள் மக்களை பாதுகாத்து வழி நடத்தவே ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்துள்ளதாகவும் கூறலாயினர். மெல்ல மெல்ல முதல் நிலை தெய்வங்கள் இரண்டாம் நிலை தெய்வங்களை பலவிதமான விசித்திர தோற்றங்கள் கொண்டவர்களாகவும், இடி, மின்னல், பயங்கரமான ஒலிகள் போன்றவற்றில் இருந்து வெளி வந்தவர்களாகவும் மக்களிடையே தோற்றுவித்து சிறு குழுக்களாக பூமிக்கு அனுப்பினார்கள். இப்படியாக பல குழுக்களாக அனுப்பப்பட்டவர்களே பல பகுதிகளிலும் குல தெய்வங்கள் ஆயினர்.
153) நிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணுக்குத் தெரியாத நிலையில் தெய்வங்கள் வெளிப்பட்டவாறு இருந்தன. பண்டைக் காலங்களில் நிலவி வந்திருந்த பல்வேறு வழிபாட்டு முறைகளில் மீண்டும் நாம் செல்ல வேண்டியதில்லை; பரந்து விரிந்து இருந்த நிலத்தில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே தெய்வ வழிபாடு துவங்கி உள்ளது என்ற கருத்தை புரிந்து கொண்டால் போதும்.
154) இரண்டாவது நிலை தெய்வங்கள் என்பவர்கள் முதல் நிலை தெய்வங்களின் நிழல் தெய்வங்கள் ஆவர். மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை தெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்புகளை விட அதிக அளவிலான நிலப்பரப்பு இரண்டாம் நிலை தெய்வங்களிடம் இருந்தது. அவர்கள் முதல் நிலை தெய்வங்களின் பிரதிநிதியாக செயல்படுவார்கள். அவர்களுக்கும் அளவில்லாத தெய்வ சக்திகள் இருக்கும் என்பதின் காரணம் அவர்களும் பிரதான தெய்வங்களின் தெய்வ சக்திக் கதிர்களில் இருந்து வெளியான தெய்வங்களே என்றாலும், அவர்கள் முதல் நிலை தெய்வங்கள் மூலம் வெளி வருகின்றார்கள். அவர்களால் தங்கள் அதிகாரத்தையும் தெய்வ சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குடும்பங்களை வழி நடத்தவும் பாதுகாக்கவும் முடியும்.
155) முதல் மற்றும் இரண்டாவது நிலை தெய்வங்களுக்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? இரண்டாம் நிலை தெய்வங்கள் பெரும்பாலும் முதல் நிலை தெய்வங்களின் வெளிப்பாடு ஆகும். அத்தியாவசியமான நேரத்தில் இரண்டாம் நிலை தெய்வங்களில் சிலர் பரப்பிரும்மனின் உடலுக்குள் இருந்து பிரும்மா மூலம் நேரடியாகவும் வெளிப்பட்டு இருக்கலாம். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்களின் தெய்வ சக்திகள் அனைத்துமே ஒரே அளவில்தான் உள்ளன என்றாலும் இரண்டாம் நிலை தெய்வங்களின் அதிகார ஷேத்திரம் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருக்கும். இரண்டாம் நிலை தெய்வங்கள் பெரும்பாலும் ஆலயங்களில் குடி கொண்டு தம்மை வழிபடும் பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கி அவர்களை வழி நடத்தி வருகின்றனர். அவர்கள் பல வடிவங்களை, பல்வேறு சமயங்களில், தேவைக்கு ஏற்ப எடுக்க வேண்டி உள்ளது. அவர்கள் பெரும்பாலும் குல தெய்வங்கள் ஆவது இல்லை என்றாலும் சிலர் பல காலத்திற்குப் பிறகு சில குடும்பங்களின் குல தெய்வமாக மாறி உள்ளார்கள்.
156) மூன்றாம் நிலை தெய்வங்கள் இரண்டாம் நிலை தெய்வங்களுக்கு உதவி செய்யும் துணை தெய்வங்களாக உள்ளார்கள். அப்படிப்பட்ட மூன்றாம் நிலை தெய்வங்கள் பரபிரும்ம லோகத்தில் இருந்தபோது சாபங்களை பெற்றவர்கள்;பாவங்களை செய்தவர்கள்; சிலர் தெய்வங்களின் போர் வீரர்களாகவும் இருந்தவர்கள். பொதுவாக அப்படிப்பட்ட மூன்றாம் நிலை தெய்வங்கள் முதலில் மானிட அல்லது விலங்குகள் உருவில் அவதரிக்கின்றன. பின்னர் ஒரு கால கட்டத்தில் கிராம தேவதைகள் ஆன பின்னர் தாம் இருந்த ஊர் மக்களை காத்தபடி காவல் தெய்வமாகவும் இருப்பார்கள். ஆலயங்களில் மூல தெய்வங்களுக்கு பாதுகாப்பு தரும் ஆலய காவல் தெய்வங்களாக பணி புரிவார்கள். கிராம தேவதைகளில் சிலர் இரண்டாம் நிலை தெய்வங்களில் இருந்தும் வெளியானவர்கள் ஆவார்கள்.
157) குல தெய்வங்கள் என்ற கருத்து இந்தியாவின் தெற்குப் பகுதியில் மட்டுமே உள்ளது, அதே நேரத்தில் வடக்கு பகுதிகளில் காணப்படவில்லை. அங்கெல்லாம் குறிப்பிட்ட தெய்வங்களுடன் அடையாளம் காணப்படும் பல ஜாதி பிரிவுகள் மட்டுமே இருந்தன; அவற்றை அவர்கள் இஷ்ட தெய்வங்கள் அல்லது தங்கள் குலத்திற்கான (ஜாதி பிரிவின்) தெய்வங்கள் என்று வணங்குகின்றார்கள்.
158) வட இந்தியாவில் கிராம தெய்வங்கள் என்ற கருத்து பெரும்பாலும் காணப்படவில்லை. ஆனால் பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசாவின் சில பகுதிகளைத் தவிர, பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் கிராம தெய்வங்களை வணங்குகிறார்கள். பொதுவாக, சிவ கணங்கள், நாகங்கள், மோகினிகள், யோகினிகள், காளி மற்றும் பைரவர் ஆகியோர் கிராம நுழை வாயில்களில் அல்லது கிராம நுழை வாயிலில் உள்ள ஆலயங்களில், காவல் தெய்வங்களாக காணப்படுகின்றார்கள். அந்த சிலைகளில் சில சிலைகள் இடுப்பு வரை மட்டுமே அல்லது முகத்தைக் காட்டும் விதத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அந்த தெய்வங்கள் தங்கள் பகுதியை காவல் காப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள். அந்த தெய்வங்களைத் தவிர ஆஞ்சனேயரும் காவல் தெய்வம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆரஞ்சு நிறத்தில் வைக்கப்பட்டு உள்ள கற்களை ஆஞ்சனேயர் என்றும் அவர் தீய ஆவிகளையும், தீய சக்திகளையும் துரத்தி அடித்து கிராமத்தைப் பாதுகாப்பதாக நம்புகின்றார்கள்.
159) கிராமப்புறங்களில் நீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் கிராம மக்களால் வழிபடும் தெய்வங்களாக இருப்பவர்களே கிராம தெய்வங்கள் ஆவர். அவர்கள் கிராம தேவதைகளாக வேத காலத்திற்கு முந்திய கால கட்டத்தில் இருந்தே இருந்துள்ளார்கள் என்கின்றார்கள். புகழ்பெற்ற கிராமக் கடவுளான காத்தவராயன், சிவபெருமானிடம் ஒரு சிறிய சாபத்தைப் பெற்ற முருகப் பெருமானின் அவதாரம் என்றும், பாவத்தைப் போக்க காத்தவராயனாகப் பிறந்ததாகவும் கூறப்படுகிறது. மதுரை வீரன் என்று அழைக்கப்படும் மற்றொரு புகழ்பெற்ற காவல் தெய்வம், மதுரை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தையும், அவரை வழிபடும் மக்களையும் பாதுகாக்கிறார் என்பதாக ஐதீகம் உள்ளது. மற்ற கிராம தெய்வங்களில் ஒருவரான அய்யனார் என்பவர் ஸ்ரீ ஐயப்பனின் அவதாரம் என்று கூறப்படுகிறது. சுடலை மாடன், சங்கிலிக் கறுப்பர், சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள் போன்றவர்களும் கனகாம்பிகை அம்மன் என்பவர்களும் கூட கிராம தெய்வங்களே ஆவர். ஏழு கன்னிகைகள் மற்றும் கனகாம்பிகை அம்மன் என்பவர்கள் ஸ்ரீ லங்காவின் வன்னி பகுதிகளிலும் கிராம தேவதைகளாக உள்ளார்கள்.
160) மானிடர்களாக பிறக்கும் தேவ கணங்கள் எப்படி கிராம தெய்வங்கள் ஆயினர்? தேவ கணங்கள் பூமிக்கு வந்து தவம் இருக்கும்போது அவ்வப்போது மனித அல்லது விலங்குகளின் உடலில் நுழைந்து, அவர்கள் மூலம் வீரச் செயல்களை வெளிப்படுத்தி வந்தவாறு இருந்து கொண்டு, அவர்களது தவ கால முடிவில் கிராம தெய்வங்களாக மாறுகின்றார்கள். அவர்கள் கிராம தெய்வங்களானவுடன் சில பொறுப்புகளும், வரையறுக்கப்பட்ட தெய்வீக சக்திகளும் வழங்கப்படுகின்றன. அந்த வரம்புக்குட்பட்ட அதிகாரங்களைக் பயன்படுத்தி கிராம தெய்வங்கள் (தேவலோகத்தில் பாவங்களை சுமந்துகொண்டு, தங்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பூமியில் பிறந்தவர்கள்) பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்க முடியாது என்றாலும், அவர்களது பிரார்த்தனைகளை மூல தெய்வங்களிடம் எடுத்துச் சென்று அவர்களது வேண்டுகோட்களை நிறைவேற்றுவார்கள். ஆனால் அத்தனை குறைந்த அளவிலான தெய்வ சக்திகளை கொண்டிருந்தாலும் அந்த கிராம தேவதைகளினால் ஊரில் நுழையும் பேய் பிசாசு மற்றும் தீய ஆவிகளை விரட்ட முடியும்.
161) ஒரு காலக் கட்டத்தில் கிராம தேவதைகள் சில சாமானியர்களின் கனவில் தோன்றி, தம்மை அவர்கள் குடும்பக் கடவுளாக ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட முறையில் வழிபடும்படி கட்டளை இடுவார்கள். அவர்களது கட்டளையை ஏற்று அந்த கிராம தேவதைகளை வழிபடும் அந்தந்த குடும்பங்களின் துயரங்களை அங்குள்ள இரண்டாம் நிலை தெய்வங்களின் உதவியுடன் குறைக்கும் போது அந்த கிராம தேவதைகளையும் மக்கள் தனது குலதெய்வமாக ஏற்கத் துவங்குவார்கள். அவர்களை தொடர்ந்து மேலும் சில குடும்பங்களும் அந்த கிராம தேவதையை குலதெய்வமாக ஏற்கத் துவங்கும்போது அந்த கிராம தேவதையும் அந்த நிலப்பரப்பில் உள்ள குல தெய்வங்களில் ஒருவராகி விடும்.
162) கிராமங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களையும் அழிவுகளையும் கிராம தேவதைகளினால் திறம்பட தடுக்க முடியும் என்றாலும், அவற்றினால் பிரும்மாவினால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட பேய்கள் மற்றும் தீய ஆவிகளை அழிக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவற்றை அந்த கிராமத்தில் இருந்து விரட்டியடிக்க முடியும். இப்படியாக கிராம தேவதைகளின் செயல்திறன் அதிகரிக்கத் தொடங்கும் போது, ஒரு குல தெய்வத்திற்கான சக்தி எத்தனை தேவையோ அதன் அடிப்படையில் மேலும் மேலும் தெய்வ சக்திகள் அந்த கிராம தேவதைகளுக்கு பிரம்மாவினால் வழங்கப்பட்டு வருகின்றன.
163) நான்காம் நிலை தெய்வங்களில் சிலர் முன் பிறவிகளில் செய்த நற் செயல்களின் காரணமாக ஊர் எல்லை காவல் தேவதைகளாக மாறுகிறார்கள், ஆனால் அவர்கள் பொதுவாக குல தெய்வங்கள் ஆவதில்லை. அவர்கள் தமது நிலப்பரப்புக்களில் உள்ள குல தெய்வங்களின் கட்டளைகளுக்கு ஏற்ப அந்த தெய்வங்களுக்கு உதவி செய்தவண்ணம் உள்ளன என்பதினால் காலப்போக்கில் அந்தந்த கிராமங்களில் உள்ள சில குடும்பங்கள் அந்த நான்காம் நிலை தெய்வங்களில் சிலரை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.
164) மனிதர்களின் உடலில் நுழைந்து கொண்டு அவர்கள் மூலம் தாம் வாழும் கிராமத்தில் உள்ள மனித குலத்திற்கு பல வகைகளிலும் நன்மைகளை செய்திடும் தேவ கணங்கள் ஐந்தாம் நிலை தெய்வங்கள் ஆவார்கள். அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர் செய்திடும் நல்ல செயல்களினால், அந்த தேவ கணம் வாழும் மானிடர்கள் கிராம மக்களால் விரும்பப்படும் மரியாதைக்குரிய மனிதர்கள் ஆகி விடுவார்கள்.
165) ஐந்தாவது வரிசை தேவ கணங்கள் எந்த மனிதர்கள் அல்லது விலங்குகளின் உடலில் இருந்தனவோ, அந்த நல்ல மனிதர்கள் அல்லது நல்ல விலங்குகளின் மறைவுக்குப் பிறகு அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நினைவுத் தூண் அல்லது கல் வெட்டுக் கற்கள் அமைக்கப்பட்டு, அந்த இடம் போற்றுதலுக்கு உரிய இடங்களாக கிராமத்தினரால் மாற்றப்படும். அப்போது மரணம் அடைந்து விட்ட நல்ல மனிதர்கள் அல்லது நல்ல விலங்குகளின் உடலுக்குள் இருந்த தேவ கணங்கள் அந்த உடலை விட்டு வெளியேறி அதே கிராமங்களில் இருந்த போற்றுதலுக்கு உரிய இடங்களில் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருந்து கொண்டு கிராமத்தை பாதுகாத்தவாறு இருக்கும். ஏனெனில் அவர்கள் முதல் மற்றும் இரண்டாம் வரிசை தெய்வங்களிலிருந்து பெறப்பட்ட சில தெய்வ சக்திகளுடன் காவல் தேவதைகளாக மாற அனுப்பப் பட்டவர்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களில் சிலர் அந்தப் பகுதிகளில் உள்ள ஏழை கிராமவாசிகளின் குல தெய்வங்களாக மாறுகிறார்கள். வேறு எந்தப் பகுதிகளுக்கும் ஒருபோதும் அவர்கள் இடம் பெயர்ந்து செல்ல மாட்டார்கள்.
166) அடுத்து எழும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், குல தெய்வங்கள் எவ்வாறு குடும்பங்களால் அடையாளம் காணப்படுகின்றன? அனைத்து வகையான தெய்வங்களும் முதலில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் சென்று தங்கி விடும். இன்னென்ன தெய்வங்கள் இன்னென்ன இடங்களில் இருப்பதாகவும், அந்த இடங்களில் சென்று அவர்களை வழிபட்டாலோ அல்லது பிரார்த்தனை செய்தாலோ, அவர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று அவர்கள் கிராமவாசிகள் சிலரின் கனவில் தோன்றியோ அல்லது கிராம விழாக்களில் தன்னை மறந்த நிலையில் சாமியாடுபவர்கள் மூலமோ தெரிவித்த பின்னர், தாம் இருக்கும் இடங்களை வெளிப்படுத்துவார்கள்.
167) முன்னர் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு தெய்வமும் இன்னென்ன இடங்களில்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டு அவர்களுக்கான குறிப்பிட்ட பகுதி மற்றும் நிலம் பிரும்மாவினால் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, தெய்வங்களின் அனைத்து செயல்பாடுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்ப அவர்கள் அனுப்பப்படுவதினால், தெய்வங்கள் அவர்களுக்கு தரப்பட்டு உள்ள நிலங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் சென்று தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. எனவே, ஒவ்வொரு தெய்வமும் பிரும்மா எந்த குழுவினருக்கு அவர்கள் குல தெய்வமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து அனுப்பி இருந்தாரோ, அவர்களை தாண்டி வேறு எந்த குடும்பத்தினரையும் தனக்கு கீழ் கொண்டு வர இயலாது.
168) அது மட்டும் அல்ல, வேண்டுமென்றே செயற்கையான சில பிரச்சனைகளை தமக்கு கீழ் வரவுள்ள குடும்பத்தினருக்கு உருவாக்கி அவர்கள் மனதில் அந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால் தம்மை வேண்டுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாது என்ற எண்ணத்தையும் விதைப்பார்கள். அதனால் பிரச்சனைகளை சுமக்கும் குடும்பத்தினர் எந்த இடத்தில் தான் உள்ளேன் என்பதைக் கூறிய அதே இடத்திற்கு சென்று, கண்களுக்கு தெரியாத நிலையில் இருந்த அந்த தெய்வத்தை கண்டெடுத்து, அவர்களை பிரார்த்தித்து பூஜைகளை செய்யும்போது, செயற்கையாக அந்த தெய்வம் உருவாக்கி இருந்த அவர்களுடைய பிரச்சனைகளும் விலகத் துவங்கியதை காண்பார்கள்.
169) அதே போலவேதான் செயற்கையாக உருவாக்கிய பிரச்சனைகளை தீர்க்கும் தெய்வங்கள், அந்த கிராமத்தில் உருவாகும் உண்மையான பிரச்சனைகளை தீர்ப்பது மற்றும் இயற்கையின் சீற்றங்களை தடுப்பது போன்றவற்றை, அங்குள்ளவர்கள் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் பிரதான தெய்வங்கள் மூலம் நிவர்த்தி செய்து விடுவார்கள் என்ற ரகசியம் மக்களுக்கு தெரியாது.
170) Deleted
171) சுருக்கமாக கூறினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பூமியில் குல தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்களை உருவாக்க நினைத்த பிரம்ம, தான் போட்ட திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பத்தில் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட கண்ணுக்குத் தெரியாத தெய்வங்கள் மூலம் பல நாடகங்களை நிகழ்த்தி, அவர்களை அங்கங்கே குல தெய்வம் மற்றும் காவல் தெய்வங்களாக்கி வந்தார்.
172) குல தெய்வங்கள் எதற்காக உருவாக்கப்பட வேண்டும்? ஒரு நாட்டில் உள்ள அரசாங்கம் பல்வேறு அரசு அதிகாரிகளின் குழுக்களுடன் எவ்வாறு நாட்டை நிர்வாகிக்கின்றதோ, அதை போன்றதுதான் இதுவும் ஆகும். முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை தெய்வங்கள் பல்வேறு பெரும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும், பரந்து விரிந்து கிடக்கும், பல்வேறு நிலங்களிலும் வாழ்ந்து வரும் மக்களது நலனை பாதுகாப்பதற்கும், பெரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நாட்டில் நிலவும் நியாய, அநியாயங்களுக்கு ஏற்ப தண்டனைகளை தந்தபடி இருக்கவும், அங்கங்கே உள்ள ஆலயங்களில் அமர்ந்து உள்ளார்கள். அவ்வப்போது தோன்றும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் பல்வேறு அவதாரங்களை அந்தந்த நேரங்களில் எடுக்க வேண்டி உள்ளது. அவர்களின் பங்கு அவற்றில் முக்கியமானது. எனவே அவர்கள் ஒரு சிறிய குழு அல்லது சிறிய நிலங்களுக்குள் தங்களை அடக்கி வைத்துக் கொள்ள முடியாது. எனவே, அவர்களின் சார்பாக செயல்படும் வகையில்தான் பல்வேறு தன்மைகளிலான தெய்வங்கள் உருவாக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
173) பெரும்பாலான குல தெய்வங்கள் முதலில் தேவ கணங்களாக இருந்தவர்கள் ஆகும். அவர்கள் பின்னர் மூன்றாம் மற்றும் நான்காம் நிலை தெய்வங்கள் ஆனார்கள். இந்த பிரபஞ்சம் வெளிப்படுவதற்கு முன் அவர்கள் பரபிரும்மனின் உடலுக்குள் இருந்தபோது அங்கு அவர்களுக்கு தெய்வ பயிற்சி கொடுக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றுக் கொண்டு இருந்தது.
174) அந்த ஒத்திகை நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அவர்களில் சிலர் பல தவறுகளை செய்து சாபங்களை பெற்றுக் கொண்டன. எனவே அந்த சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் தெய்வீக நிலையைப் பெறுவதற்காக சில தெய்வீக தண்டனைகளை அனுபவிக்க வேண்டி இருந்தது. மானிடர்கள் வாழும் அளவிலான நிலமும் கடலும் தயார் ஆன பின்னர் அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களின் தண்டனை காலத்தில் தங்கள் செய்திருந்த தவறான செயல்களுக்கு மன்னிப்பு கோரும் வகையில் கடினமான தவங்கள்/தியானத்தில் இருக்க வேண்டி இருந்தது. தண்டனைக்கு காலம் முடிந்த பின்னர் அவர்கள் அந்தந்த நிலங்களில் தம்மை தேவ கணங்களாக வெளிப்படுத்திக் கொள்ள பிரும்மா அனுமதித்து இருந்தார்.
175) பரப்பிரம்ம லோகத்தில் இருந்த தேவ கணங்களுக்கு கிடைக்கும் சாபங்களின் தன்மைகளும் பூலோகத்தில் உள்ள மனிதர்கள் பெறும் சாபங்களின் தன்மைகளும் வெவ்வேறான நிலையிலானவை ஆகும். பரப்பிரம்ம லோகத்தில் இருந்த தேவ கணங்களுக்கு கிடைக்கும் சாபங்களின் தன்மைகள் பூமியில் கிடைக்கும் சாபங்களின் தன்மைகளை விட மிகப் பெரிய அளவிலானது. சாப விமோசன தண்டனைகள் கடுமையாக முறையில் கடைபிடிக்க வேண்டியவைகளாக இருந்தன.
176) சாபங்களை பெற்று இருந்த தேவ கணங்கள் பூமிக்கு சென்று பிறப்பு எடுத்து மனிதர்கள் மற்றும் தெய்வங்களுக்கு இடையே மிகக் கடினமாக செயல்பட்டால் மட்டுமே சாப விமோசனம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பூமியில் பல காலம் கஷ்டப்பட்ட பின்னரே அதே பூமியில் இருந்த முதல் நிலை தெய்வங்களின் உதவிகளுடன் அவற்றால் பாப விமோசனம் பெற முடிகின்றது. ஆனால் இந்த நாடகங்கள் மானிடர்களுக்கு புரியாது, தெரியாது, அவை ஆன்மீக மகான்களுக்கு மட்டுமே தெரியும் மற்றும் புரியும்.
177) புராணத்தில் காணப்படும் பல கதைகள் மூலம் பல தெய்வங்கள் பாவ விமோசனம் பெற்றுக் கொள்ள பூமிக்கு வந்து மனித உருவெடுத்து, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்கி, தவம் இருந்து சாப விமோசனம் பெற்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். அவர்கள் தவம் இருந்த காலத்தில் அவர்களுடைய முழுமையான தெய்வ சக்திகளை பிரயோகிக்க முடியாது, மிகக் குறைந்த அளவிலேயே அவர்களது தெய்வீக சக்திகளை பயன்படுத்த முடியும் என்பதும் பிரும்ம விதியாக இருந்தது.
178) அதற்கு காரணம் மானிட உருவங்களை எடுத்து வந்துள்ள தெய்வங்கள் மானிடர்களைப் போலவே கடும் துயரங்களையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் தண்டனை என்பதின் தாக்கம் உணரப்படும் என்பதாக பிரும்மா நினைத்து இருந்தார். தண்டனைக் காலத்தில் தம்முடைய தெய்வ சக்திகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து விட்டால் அந்தந்த தெய்வங்கள் தமது தெய்வ சக்திகளை துஷ்பிரயோகம் செய்து சாப காலத்தில் கஷ்டப்படாமல் இருந்து விடுவார்கள், அதன் பின் சாபத்திற்கான தண்டனை என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பதாக பிரும்மதேவர் நினைத்ததினால்தான் அப்படிப்பட்ட நியதிகளை வைத்து இருந்தார்.
179) எனது கட்டுரையின் முந்தைய பகுதியில், பூமிக்கு ஆன்மாக்களை அனுப்புவதற்கு முன், பிரம்மா, நிலத்தை பல்வேறு தன்மைகளை கொண்டதாக பிரித்து வைத்திருந்தார், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு இருந்தன என்பதை விளக்கி இருந்தேன். அந்த தன்மைகள் எதிர்மறை மற்றும் நேர்மறை போன்ற தன்மைகளை கொண்டவையாக இருந்தன என்பதினால் அதில் சென்று தங்கும் ஆத்மாக்களும் அந்தந்த நிலத்தின் தன்மைகளை உறிஞ்சிக் கொண்டு விடும் என்ற நிலைப்பாட்டோடு நிலங்கள் படைக்கப்பட்டு இருந்தன . எந்தெந்த ஆத்மாக்கள் எங்கெங்கு சென்று தங்க வேண்டும் என்ற முடிவை அந்த ஆத்மாக்களின் முடிவுக்கே விட்டு இருந்தார் என்றாலும், அந்தந்த ஆத்மாக்கள் எந்த அளவில் அவர்கள் தங்கும் நிலத்தின் தன்மைகளை தன்னுள் கிரகித்துக் கொள்ள முடியும் என்பதை வேண்டும் என்பதை விளக்காமல் விட்டு விட்டார்.
180) பராம்பரியமான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டு உள்ளவர்கள் தமது குல தெய்வங்களைத் தவிர குடும்பங்களில் ஆன்மீக மேன்மை நிலவவும், குடும்ப நலன் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காகவும் குல தெய்வங்களைத் தவிர வேறு பல தெய்வங்களையும் வழிபட்டு வந்தார்கள் என்றாலும் தமது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வ வழிபாட்டை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.
181) இந்தக் கட்டுரை பெரும்பாலும் இந்தியாவில் நிலவி வரும் குல தெய்வ வழிபாட்டு முறையை விளக்குகின்றது. குல தெய்வ வழிபாடு என்பது பெரும் அளவில் இந்தியாவில் குறிப்பாக தென் பகுதியில் நிலவுகிறது. ஆனால் அதே சமயம் உலகில் பல இடங்களிலும் இன்றும் சில நாட்டினர், நம் நாட்டில் உள்ள குல தெய்வத்தை போலவே வீட்டு தெய்வம் என்ற பெயரில் சில தெய்வங்களை வழிபடுவதைக் காணலாம். அவற்றைக் குறித்த செய்திகள் இறுதி பத்திகளில் கொடுக்கப்பட்டு உள்ளன.
182) பூமியில் பிறந்த அனைத்து மனிதர்களும் குல தெய்வ வழிபாட்டை கடை பிடிக்கின்றார்களா என்றால் இல்லை என்றே கூறலாம் எனும்போது குல தெய்வ வழிபாடு அற்ற குடும்பங்களைக் காப்பாற்றி வழி நடத்துவது யார்?
183) உலகில் உள்ள அனைத்து குடும்பத்துக்கும் குல தெய்வம் என்பது இருக்காது. பரம்பரை பரம்பரையாக எந்த குடும்பங்களில் குலதெய்வ வழிபாடு இருந்ததோ அந்த குடும்பங்கள் மட்டுமே குல தெய்வ வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நகரங்களிலோ அல்லது நிலங்களிலோ வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான தெய்வங்களை இஷ்ட தெய்வங்கள் என்ற பெயரில் வழிபட்டனர். எவர் ஒருவர் ஆத்மார்த்தமாக தெய்வங்களை வணங்கி வந்தார்களோ அவர்களுக்கெல்லாம் அந்தந்த தெய்வங்கள் அருள் புரிந்து வந்தார்கள்.
184) குல தெய்வங்களின் அதிகார ஷேத்திரங்கள் என்பவை எது? அவர்கள் அனைவரும் எங்கே குடியேறுவார்கள்? ஒரு குறிப்பிட்ட குல தெய்வம் தனக்கு அளிக்கப்பட்டுள்ள நிலத்தில் இருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு செல்லலாமா? ஒரு குல தெய்வத்திற்கே பல இடங்கள் தரப்பட்டு உள்ளனவா?
185) குல தெய்வம் என்பவை முதல் மற்றும் இரண்டாம் நிலை தெய்வங்களைப் போலவே எல்லா வகையிலும் மகத்தான தெய்வ சக்திகளை கொண்டுள்ளன. அதன் காரணம் அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் நிலை தெய்வங்கள் மூலம் வெளிப்பட்டவர்கள் ஆகும். குல தெய்வங்கள் மற்ற தெய்வங்களின் குறுக்கீடு இல்லாமல் தங்கள் கடமைகளைச் செய்யவும், சுதந்திரமாகச் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
186) தெய்வ நியதி என்னவென்றால், குல தெய்வமோ அல்லது வேறு எந்த தெய்வமாக இருந்தாலும், அவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள ஷேத்திர எல்லைகளுக்கு உள்ளேயேதான் அதிகாரம் செலுத்த வேண்டும். பிற பிரதேசங்களில் உள்ள தெய்வங்களின் அதிகார எல்லைக்குள் தலையிடக்கூடாது.
187) துவக்கத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான நிலப் பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், பூமி அரிப்பு, மக்கள் இடம் பெயர்வு, பாலைவனமாகுதல் போன்ற புவியியல் மாற்றங்களினால் அந்தந்த தெய்வங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த சில நிலங்கள் விரிவடையலாம். விரிவடைந்த நிலப் பகுதியின் முதல் பகுதி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், விரிவடைந்த நிலத்தின் இன்னொரு பகுதி பிரம்மாவினால் வேறு எந்த தெய்வங்களுக்கும் ஒதுக்கப்படவில்லை என்றால், அந்த நிலப்பரப்பின் முதல் பகுதி எந்த தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததோ அதே தெய்வத்தின் கட்டுப்பாட்டில் வந்து விடும்.
188) ஒரு சிறிய சந்தேகம் எழுகின்றது. ஒரு ஊரில் வசிக்கும் பல குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பிச் சென்று வேறு ஒரு நிலப் பரப்பில் குடியேறி விட்டார்கள். அவர்கள் வேறு நிலப் பரப்பிற்கு சென்று குடியேறும் முன்னர் ஒரு குறிப்பிட்ட குல தெய்வத்தை வணங்கி வந்துள்ளார்கள் எனும்போது அவர்கள் வேறு நிலப் பரப்பில் சென்று தங்கி விட்டால் அந்த குடும்பத்தினருக்கு அந்த நிலப் பரப்பில் எந்த தெய்வம் அருள் புரிந்து கொண்டு இருக்கும்?
189) தம்மை வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பத்தினர் ஒரு நிலப் பரப்பில் இருந்து இன்னொரு நிலப் பரப்பிற்கு குடியேறி சென்று விட்டாலும், அந்த புதிய நிலப் பரப்பிற்கு சென்று அவர்களுக்கு அருள் புரியும் தெய்வ சக்தி அவர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வத்திற்கு நிச்சயம் உண்டு. ஆனால் அதே சமயத்தில் புதிய நிலப் பரப்பிற்கு சென்று தம்மை வழிபட்டுக் கொண்டிருந்த குடும்பத்துக்கு அருள் புரியும் நேரங்களில், ஏற்கனவே அங்கு பிற குடும்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் குல தெய்வங்களின் செயல்பாடுகளில் அவை எந்த விதத்திலும் தலையிடக் கூடாது, இடைஞ்சல்கள் செய்யக் கூடாது என்பது பிரும்ம நியதியாகும்.
190) அதேபோல தமது அதிகார ஷேத்திரத்தில் உள்ள நிலப் பரப்பில் வேறு இடங்களில் இருந்து குடி பெயர்ந்து வந்துள்ள குடும்பத்தினரின் மேம்பாட்டிற்காக அவர்கள் வணங்கும் குல தெய்வம் அந்த குடும்பத்தினர் வசிக்கும் பகுதிக்கு வரும்போது, அந்த நிலப் பரப்பில் ஏற்கனவே பல குடும்பங்களுக்கு அதிபதியாக உள்ள குல தெய்வங்கள் அங்கு வரும் குல தெய்வத்தை தடுக்கக் கூடாது, அவர்களுக்கு எந்த இடைஞ்சல்களையும் தரக் கூடாது என்பதும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும். அந்தந்த குல தெய்வங்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள குடும்பங்களைக் காப்பாற்றியவாறு செயல்பட வேண்டும் என்பதும் பிரும்ம நியதி ஆகும்.
191) குல தெய்வங்களின் செயல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை சிறு உதாரணம் மூலம் பார்க்கலாம். நலமங்கலா என்ற கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம். பிரம்ம நியதியின்படி A,B,C,D என்ற நான்கு இடங்களில், ஒவ்வொரு இடத்திலும் (A,B,C,D) வாழ்ந்து கொண்டிருந்த 25 முதல் 30 குடும்பங்களுக்கும், ஒவ்வொரு குலதெய்வம் என நான்கு குலதெய்வங்கள் பிரும்ம தேவரால் நியமிக்கப்பட்டு இருந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்குள்ள ஒரு நிலப்பரப்பில் (E) இருந்த பிற குடும்பத்தினருக்கு குலதெய்வம் கிடையாது எனும்போது அவர்கள் அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப அதே இடத்தில் உள்ள அல்லது வெளி மாநிலத்தில் உள்ள வேறு எந்த தெய்வங்களை வேண்டுமானாலும் தமது இஷ்ட தெய்வமாக கொண்டிருக்க தடை இருக்காது. வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் வழிபட தடை இருக்காது.
192) குல தெய்வங்களின் நிலை குறித்த இன்னொரு உதாரணம் இது. A எனும் குடும்பத்தின் சில உறுப்பினர்கள் தமக்கு எதிராளிகள் எனக் கருதும் B குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சில பாதகங்கள் வர வேண்டும் என்பதற்காக தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தேவதை அல்லது சில பிரதான தெய்வங்களை வேண்டிக் கொண்டு யாகம் அல்லது பிற பூஜைகளை செய்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம்.
193) ‘B’ குடும்பத்தினர் உண்மையில் A குடும்பத்தினருக்கு எதிராக எந்த தீமையையும் செய்யவில்லை. அவர்கள் நேர்மையாகவும், முறையாகவும் அவர்களுடைய குல தெய்வத்தை வழிபாடு செய்து வருகிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். A குடும்பத்தினர் எத்தனை பெரிய தெய்வத்தையோ அல்லது தமது குல தெய்வத்தையோ வேண்டிக் கொண்டாலும் அந்த தெய்வங்கள் உடனடியாக தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது.
194) எந்த தெய்வமும், உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், பாதிக்கப்பட இருக்கும் ‘B’ குடும்பத்தினர் வழிபட்டு வரும் குல தெய்வங்களையும் கலந்தாலோசிக்காமல், A குடும்பத்தினர் வேண்டுகோள் நியாயமானதே என்றாலும் கூட, தன் இச்சையாக A குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, B குடும்பத்திற்கு எந்த கெடுதலையும் செய்ய முடியாது என்பது மிகவும் கண்டிப்பான பிரும்ம நியதி ஆகும்.
195) Repeat Deleted
196) ஒரு குல தெய்வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அந்த குல தெய்வங்களை கலந்தாசிக்காமல், தன்னிச்சையாக எந்த ஒரு தெய்வங்களும் முடிவுகள் எடுத்தால், அத்தகைய செயல்கள் பிரம்ம நெறியை மீறுவதாகவும், ஒரு குல தெய்வத்தின் உரிமையை பறிப்பதாகவும் இருக்கும் எனக் கருதப்படும். உதாரணமாக ‘A’ குழுவினர் வேண்டிய பிரார்த்தனைகளுக்கு அருள் புரிந்து, B குடும்பத்தின் குல தெய்வத்தை கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக செயல்பட்டு, B குடும்பத்திற்கு தீங்கு விளைவித்தால் அதற்கு பலன் கிடைக்காது. மேலும் அப்படி தன்னிச்சையாக செயல்பட்ட தெய்வங்களுக்கு தண்டனை தரும் வகையில் அவர்களின் தெய்வ சக்திகள் தற்காலிகமாக சில காலத்திற்கு பறிக்கப்பட்டு விடும் என்பது பிரும்ம நியதி ஆகும்.
197) ஒவ்வொரு குல தெய்வத்தையும் வழிபடும் பக்தர்களை அந்தந்த குல தெய்வங்களின் தெய்வீகக் கதிர்கள் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பதினால், மேல் கூறப்பட்டு உள்ள உதாரணத்தில் B பிரிவு குல தெய்வங்களின் முன் அனுமதியைப் பெறாமல், ‘A’ பிரிவு மக்களின் வேண்டுகோட்களை ஏற்றுக் கொண்டு, பிற தெய்வங்களினால் கொடுக்கப்படும் அருள் ஆசி கதிர்கள், B பிரிவு மக்களை நெருங்க முடியாது. B பிரிவு மக்களின் குல தெய்வங்கள் தந்துள்ள தெய்வீகக் கதிர்களினால் அவை தடுக்கப்பட்டு விடும். B பிரிவு குல தெய்வங்களின் முன் அனுமதியைப் பெறாமல் A பிரிவு மக்களுக்கு ஏதாவது ஒரு தெய்வம் அருள் கொடுத்தால் அவர்கள் பிரும்மாவின் சாபத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்களுடைய தெய்வ சக்திகள் தற்காலிகமாக பரப் பிரும்மனால் முடக்கப்பட்டு விடும்.

198) இப்படியாகத்தான் சில தெய்வங்கள் தம்மை அறியாமலேயே தவறுகளை செய்து விட்டு சாபங்களை பெறுகின்றார்கள். அதனால்தான் ஒரு குல தெய்வத்தின் பாதுகாப்பில் உள்ளவர்கள் அந்த குல தெய்வத்தை தவறாமல் வழிபாட்டு வரும்போது அவர்களுக்கு அந்த குல தெய்வங்களின் பாதுகாப்பு கவசம் கிடைக்கின்றது.
199) இந்த விதி முறையிலும் ஒரு சிறிய ‘உள் விதி’ உள்ளது. அதாவது தெய்வங்கள் மனிதர்களிடையே நீதி, நேர்மை மற்றும் அன்பை நிலை நாட்டுபவை என்பதால், உண்மையில் ‘B’ குழுவானது ‘A’ குழுவிற்கு எதிராக விரும்பத்தகாத தீமைகளை செய்தவர்களாக இருந்திருந்தால், அவர்கள் தண்டனை பெறத் தகுதியானவர்கள் எனக் கருதும் B பிரிவு குடும்பத்தினரின் குலதெய்வங்கள், அவர்களுக்கு தம்மால் தரப்பட்ட தெய்வீக கதிர்களினால் ஆன பாதுகாப்பு வளையத்தை தண்டனை முடியும்வரை தற்காலிகமாக எடுத்து விடும்.

200) A பிரிவின் பிரார்த்தனைகளை ஏற்று B பிரிவு குல தெய்வத்தின் அனுமதியுடன் தரப்படும் தண்டனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன? அப்படி தரப்படும் தண்டனைகள் எதிர்மறை ஆற்றல் சக்திக் கதிர்களாகி, ‘B’ குழுவை அடைந்து, அவர்கள் உடலை சூழ்ந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையில் வரவுள்ள வளம் மற்றும் மகிழ்ச்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயல்படும். அதன் விளைவாக B குழுவினர் வாழ்க்கையில் முடிவற்ற மன வேதனையையும், தடங்கல்களையும் சந்தித்தவாறு இருக்க அவர்களது வாழ்க்கை சீர்குலைக்கிறது.

       …….அடுத்த பகுதி 201 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது