-2-
28) இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பிற நூல்களைப் படிக்கும்போது, குல தெய்வ வழிபாட்டின் வழக்கம் வேத காலத்தில் இருந்தே இருந்திருப்பது தெளிவாகிறது. உதாரணமாக, ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ரிக் வேதம் மற்றும் பவிஷ்ய புராணங்கள் போன்ற பண்டைய நூல்களில் பிராமணர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வேத காலத்தில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களில் ஒரு பிரிவினர் சரஸ்வதி நதிக்கரையில் வசித்த சரஸ்வத் பிராமணர்கள் ஆவார்கள். அந்த சரஸ்வத் பிராமணர்கள் பிரம்மாவால் முதலில் உருவாக்கப்பட்ட ஏழு ரிஷிகளின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. பாரம்பரியமாக ஒவ்வொரு குலமும் அல்லது ஒரு குடும்பத்தின் சந்ததியினரும் ஒரு தனித்துவமான கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது; ஒவ்வொரு கோத்திரமும் ஏழு சப்த ரிஷிகளில் ஒருவரைக் குறிக்கிறது. ஆனால் ஏழு அல்ல, பத்து மகரிஷிகளின் பெயரில் பத்து கோத்திரங்களைக் கொண்ட சரஸ்வத் பிராமணர்கள் எட்டு குறிப்பிட்ட குல தேவதைகளை வணங்கிய நீண்ட வரலாற்றையும் கொண்டு இருந்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. இது வேத காலத்திலும் குல தெய்வ வழிபாடு என்ற கருத்து நிலவியது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இது குல தெய்வ வழிபாடு என்பது குடும்பங்களால் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது என்பதை தெளிவுபடுத்தும். சரஸ்வத் பிராமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் கதைகள் இந்தக் கருத்தை நிரூபிக்கின்றன.
29) குல தெய்வ வழிபாடு அல்லது காவல் தெய்வ வழிபாடு என்ற நடைமுறை வேத காலத்திலிருந்தே தோன்றியது. ஆனால் அப்போது ஜாதிகளோ அல்லது மதப் பிரிவினைகளோ இருந்தது இல்லை. அனைவரும் ஒரே தெய்வங்களை வழிபட்டனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற மிகப் பெரிய இதிகாசங்களிலும் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் போன்ற ஜாதிகளோ மற்றும் மதம் குறித்த குறிப்புகளோ இல்லை; ஆனால் சமூகத்தை சில குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்யும் திறன்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக குறிப்பிட்டு இருந்தார்கள்.
30) உண்மையில் தெய்வம் அல்லது தெய்வீகம் என்றால் என்ன? ஏதோவொரு தோற்றத்தில், மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத நிலையில் உள்ள, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட எதோ ஒன்றுதான் இந்த உலகை இயக்குகின்றது என மக்கள் நம்புவதினால் அந்த எதோ ஒன்றை தெய்வம் என வழிபடுகிறார்கள். கடவுளை ‘தேவதா’ என இந்து மதத்தினர் கூறியதையே லத்தீன் மொழியில் கடவுள் எனக் குறிப்பிடப்படும் டியூஸ் (Deus)’ எனும் வார்த்தையை Deity (தெய்வம்) என்ற பெயரில் ஐரோப்பியர்கள் அழைத்தார்கள். சமஸ்கிருதத்தில் ‘தேவா’ என்பது தெய்வம் என்றும் ‘குல’ என்பது ஒரு பரம்பரையை குறிக்கும் சொல்லாக இருந்தது.
31) இந்து மதத்தில் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கைகொண்டு இருந்தார்கள். அதாவது, தெய்வீக சக்தி உள்ளதை மறுக்காமல் ஒரே ஒரு உயர்ந்த கடவுள் மட்டுமே இருக்கிறார் என்று நம்புதல்(monotheism), ஆண் மற்றும் பெண் இருபாலரும் உள்ள தெய்வங்களின் மீதான நம்பிக்கை (polytheism), அனைத்து இடத்திலும் தெய்வம் வியாபித்து உள்ளது, அவரை எவர் வேண்டுமானாலும் அணுகலாம் என்ற நம்பிக்கை (panentheism ), மற்றும் ஒரே தெய்வம், அவரும் ஆண் தெய்வமே எனும் நம்பிக்கை (monism) போன்ற வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டு இருந்துள்ளார்கள். ஆன்மீக ஞானம் பெறவும், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காகவும் , குடும்பங்களைப் பாதுகாக்கவும் குலதெய்வ வழிபாடு உதவும் என்பதாக நம்பப்பட்டது. குல தெய்வ வழிபாடு என்பது Polytheism and Panentheism அதாவது ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் உள்ளனர், அவர்களை அனைவராலும் எளிதில் அணுக முடியும் என்ற வழிபாட்டு முறைகளின் கீழ் வருகின்றது. ஒரு குறிப்பிட்ட குலதெய்வம் என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் உள்ள குறிப்பிட்ட தெய்வமாகும்.
32) பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குடும்பங்களை சார்ந்த தலைமுறையினரும் அந்தந்த குடும்ப முன்னோர்கள் தொடர்ந்து வணங்கி வந்திருந்த ஆண் அல்லது பெண் தெய்வத்தை வணங்கி வருகின்றார்கள் என்பதின் காரணம் அந்த குடும்பத்தினருக்கும், அவர்கள் வணங்கி வந்திருந்த அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கும் இடையே எப்போதும் எதோ ஒரு வகையிலான பிணைப்பு இருந்துள்ளது என்பதே. ஒவ்வொரு குடும்பங்களை சார்ந்தவர்களும் அவர்களது வீடுகளில் நடைபெறும் பூஜை அல்லது வேறு எந்த சடங்குகளிலும் விநாயகப் பெருமானை துதித்தப் பின்னர் உடனடியாக அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி ஆராதித்தப் பிறகே மூல பூஜைகளை அல்லது சடங்குகளை செய்யத் துவங்குவார்கள். அந்தந்த குடும்பங்களின் குலதெய்வங்கள் அந்தந்த குடும்பங்களின் முதல் அதிபதியாவார்கள் என்பதினால் அவர்களது அருள் கிடைத்தால் மட்டுமே பிற தெய்வங்களின் அருளையும் பெற முடியும் என்ற ஆழமான நம்பிக்கைதான் அதன் காரணம் ஆகும். ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் ‘குடும்பத்தை பசைபோல ஒட்டி வைத்து உள்ளவர்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களே குடும்ப உறுப்பினர்களிடையே வலுவான பிணைப்பை பராமரிக்க ஒரு பாலமாக விளங்கி வந்துள்ளார்கள்.
33) மற்றும் குலதெய்வங்களை ஆராதிக்காமல் ஒரு குடும்பத்தில் செய்யப்படும் சடங்கு அல்லது பூஜைகள் நிறைவு பெறாது என்ற ஆழமான நம்பிக்கை இருந்தது.
34) பெரும்பாலான குல தெய்வ ஆலயங்கள் பொதுவாக அந்தந்த குடும்பத்தின் மூதாதையர் வசித்து வந்திருந்த கிராமங்கள்/நகரங்களில் காணப்படுகின்றன, ஏனெனில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில்தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் தத்தம் சந்ததியினருடன் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற காரணத்தினால்தான் பெரும்பாலான குடும்ப தெய்வ ஆலயங்கள் கிராமங்களிலேயே காணப்படுகின்றன. அந்த இடங்கள் பிராமண சமூகத்தினரால் அக்ரஹாரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்திருந்தன.
35) பிராமணர்களின் அக்ராஹாரங்களைப் போலவேதான் இந்தியாவில் பல மானிலங்களில் சில குறிப்பிட்ட சாதிகள் அல்லது சமூகங்கள் வரலாற்று ரீதியாக ஒன்றாக குடியேறி இருந்த இடங்கள் அல்லது குடியிருப்புகள் இருந்தன. அவை அந்தந்த ஜாதிகள் அல்லது சமூகத்தினரின் அக்ரஹாரங்கள் போன்ற அமைப்புக்களைக் கொண்டு இருந்தன. அவரவர்களது சமூகம் எனும் ஒற்றை நோக்கத்தில், அந்தந்த சமூகத்தின் கலாச்சார நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டவாறு செயல்பட்டு வந்திருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிராம அளவில் குல தெய்வங்கள் அமைந்து இருந்தன. ஆனால் குல தெய்வமாக அவர்களால் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் அவர்களது பரம்பரை மற்றும் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த மரபுகளைப் பொறுத்து மாறுபட்டே இருந்தன.
36) முன் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தந்த குடும்பத்தின் தந்தையே அதன் தலைவராக இருந்தார். அவருடைய கட்டளைக்கு எதிராக எவரும் செயல்பட மாட்டார்கள். அவரது கட்டளைகளை ஏற்பதை அவமானமாக கருத மாட்டார்கள். அந்த நடைமுறை பழக்கத்தில் இருந்ததினால்தான் அந்த குடும்பத்தின் மூத்த தாத்தா முதல் இளைய பேரன் வரை அனைவருமே ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள். அவர்களது வீடு சிறியதாக இருந்தால் உறவினர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வந்தார்கள். அந்த காலத்தில் குடும்பத்தினரின் ஒற்றுமையே முக்கியமானதாகக் கருதப்பட்டது. குடும்ப ஒற்றுமையை மதிக்காத அல்லது ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தில் ஒதுக்கி வைத்தார்கள். ஒரு சடங்கு அல்லது பூஜை எனும்போது அனைவரும் ஒன்றாகவே ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்கள்
37) கூட்டு குடும்பமாக வாழ்ந்திருந்த பெரிய தாத்தா முதல் பேரன் வரையிலான குடும்பத்தினர் குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று குறிப்பிட்ட தெய்வத்தையே வணங்கி வந்திருக்க அதுவே அவர்களது குடும்பத்தின் குல தெய்வம் ஆயிற்று. இப்படியாகத்தான் முதல் தலைமுறையை சேர்ந்த குடும்ப வம்சாவளியினரின் குலதெய்வ வழிபாடு பழக்கமும் அடுத்தடுத்த பரம்பரையினரால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்திருந்தது.ஒரு விழா நடைபெறும் பொழுதோ அல்லது பூஜைகளிலோ அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களோடு வந்து கலந்து கொண்டு கூட்டுக் குடும்ப முறையை நல்ல முறையில் வளர்த்து வந்தார்கள்.
38) மானிடர்கள் அறிவு விரிவடையத் துவங்கிய காலத்தில், பெரும்பாலான குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களுடன் மற்றும் உறவினர்களுடன் கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள். அதன் காரணம் அவர்களில் சிலர் கிராமங்களில் இருந்த நிலங்களில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். இன்னும் சிலர் புரோகிதர்கள் அல்லது பண்டிதர்களாக தொழில் செய்து வந்தார்கள் என்றாலும் ஒருங்கிணைந்த குடும்பத்தினராக, ஒன்றாகவே அதே கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள்.
39) ஒவ்வொரு கிராமங்களிலும் பலதரப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் வசித்து வந்திருந்தார்கள் என்றாலும் அந்த காலத்தில் ஜாதி மற்றும் மத வேறுபாடு என்பவை கிராமத்தினரின் ஒற்றுமையை பிரித்து வைக்கவில்லை. ஜாதி மத வேறுபாடின்றி கிராமத்தினர் அனைவருமே கிராமங்களில் நடைபெற்ற ஆலய பண்டிகைகள், ஆலய விழாக்கள் போன்றவற்றில் ஒன்றிணைந்து கலந்து கொண்டு ஒரே தெய்வத்தை வணங்கி வந்திருந்தார்கள்.
40) தொலைதூர கிராமங்களில் குடியிருப்புகள் தோன்றிய ஆரம்ப காலத்தில், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இறந்த செல்லப் பிராணிகளை புதைத்த இடங்களில், அல்லது வெவ்வேறு விலங்குகள் அல்லது பறவைகள் விசித்திரமான சத்தங்களை எழுப்பிய இடங்களில் அமைக்கப்பட்ட சில கற்களுக்கு மரியாதை காட்டத் தொடங்கினர். அவை அலைந்து திரியும் தெரியாத ஆன்மாக்கள் என்று கருதப்பட்டது. பல ஆண்டுகளாக அவற்றின் மீது அமைக்கப்பட்ட கற்கள் வழிபாட்டுக்குறிய தெய்வங்களாக மாறின.
41)வருடங்கள் செல்லச் செல்ல, மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்த கைவினைஞர்களால் செதுக்கப்பட்ட வெவ்வேறு உருவங்களைக் கொண்ட கற்கள் இருந்த இடங்களை புனித இடங்களாகக் கருதத் தொடங்கி அங்கு சிறிய அளவிலான வழிபாட்டு தலம் அமைக்கத் தொடங்கினர். அதே போல சில வடிவங்களில் செதுக்கப்பட்ட கற்கள் தெய்வங்கள் என அழைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அவை இருந்த இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் என்று கூறப்படத் துவங்கின. மேலும் அங்கு நிறுவப்பட்ட கற்கள் அல்லது சிலைகளில் செதுக்கப்பட்டு இருந்த உருவங்கள் அங்கு வழிபடாத துவங்கியவர்களின் குல தெய்வம் அல்லது அவர்களின் இஷ்ட தெய்வமாக மாறின.
42)இப்படித்தான் கிராமங்களில் இருந்த பல்வேறு இடங்களும் வழிபாட்டுத் தலங்களாக மாறின. அங்கு செதுக்கப்பட்டு இருந்த கற்கள் அல்லது களிமண் அல்லது மண்ணால் செய்யப்பட்ட சிலைகள் கிராமங்களை பாதுகாக்கும் கிராம தெய்வங்கள் என்று பெயரிடப்பட்டு, கூரை இல்லாத திறந்த வெளியிலோ அல்லது தென்னை அல்லது பனை மரங்களின் நெய்த இலைகளால் மூடப்பட்ட கூரையின் கீழோ வைக்கப்பட்டன.
43) மேற்கூறிய பின்னணியில்தான், ஏராளமான சிலைகள் கிராமங்களில் தோன்றலாயின. அவற்றின் வழிபாடே குல தெய்வ வழிபாடு எனும் வழிமுறையை கிராமங்களில் தோற்றுவித்தன. ஐயனார், முனேஸ்வரன், கருப்பசாமி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் சில தெய்வங்களின் ஏதாவது ஒரு சிலை இல்லாத ஒரு கிராமத்தைக் கூடக் காண முடியாது. அதே போல மாரியம்மன், ரேணுகா தேவி, எல்லாம்மா, பச்சை அம்மன், போத்துராஜு, சாஸ்தா, கங்கம்மா, போலம்மா, சுங்கலாமா, சாஸ்தா, காத்தவராயன், சப்தகன்னிகா, மகேஸ்வரம்மா, பிடாரியம்மன், மகா காளி போன்ற பல்வேறு வடிவங்களில் ஆன சிலைகளும் பெருமளவு கிராமங்களில் காணப்படுகின்றன. இப்படிப்பட்ட பட்டியலில் ஏராளமான வேறு பெயர்கள் உள்ளன.
44) தெற்கு மற்றும் வட இந்தியாவிற்கு இடையே உள்ள தெய்வங்களின் பெயர்கள் மாறுபட்டு உள்ளன.தென் இந்தியாவில் உள்ள மாரியம்மன் வட இந்தியாவில் சீதலம்மா என்று அழைக்கப்படுகிறார். எனக்குத் தெரிந்தவரை, வட இந்தியாவில் குல தெய்வம் என்ற கருத்து இல்லை, அவர்கள் இஷ்ட தெய்வம் அல்லது கிராம தெய்வம் என்ற பெயரில் பிரார்த்தனை செய்கிறார்கள். வட இந்தியர்கள் வழிபடும் குறிப்பிட்ட தெய்வங்கள் பெரும்பாலும் அவர்களின் சாதி, சமூகம் அல்லது அவர்களின் வாழும் பகுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அந்த தெய்வங்கள் குல தெய்வங்களைப் போல முறையாக அங்கீகரிக்கப்படாமல் உள்ளன என்றாலும் அவை குடும்பம் மற்றும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் வழிபடும் தெய்வங்களாக விளங்குகின்றன. வட இந்தியாவில் கிராம தெய்வங்களில் பலவும் பார்வதி தேவியின் அவதாரங்கள் அல்லது சிவன், பாம்பு தெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களான துர்கா, காளி, அனுமன், கிருஷ்ணர் போன்றவர்களாக உள்ளனர்.
45) மேற் கூறிய பின்புலத்தில் குலதெய்வ வழிபாடு என்பது கிராமங்களில் இருந்து துவங்கியது. கிராமங்களில் வசித்து வந்தவர்கள் தங்களது குலதெய்வ சிலைகளை கிராம மரபின்படி தத்தம் கிராமங்களில் ஸ்தாபித்து வழிபட்டார்கள். 95% ற்கும் அதிக அளவிலான பரம்பரையின் குலதெய்வம் அவர்களது மூதாதையர் வாழ்ந்திருந்த கிராமத்தில் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.
46) அந்த 95% குல தெய்வங்களில் கூட 90% க்கும் அதிக அளவிலான தெய்வங்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை தெய்வங்களான கிராம தேவதைகளாகவே இருந்து உள்ளன.
47) இது குறித்து பின்னர் விளக்கப்பட்டுள்ளது.
48) காலப்போக்கில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் தமக்கு முடிந்த நேரத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்று, தங்கள் குல தெய்வத்தை வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார்கள்.
49) ஒருவரின் குல தெய்வத்தின் ஆசிகள் கிடைக்காவிடில் குடும்பத்தில் நல்லது எதுவும் நடக்காது என்று மூதையோர் கூறுவார்கள். அவர்கள் வேறு எந்த இஷ்ட தேவதை அல்லது அவர்களின் குருமார்களிடம் {மடாதிபதி) சென்று பிரார்த்தனை செய்தாலும் எந்த பலனும் கிடைக்காது நம்பிக்கையாக உள்ளது.
50) தென்னிந்தியாவில் சில காரணங்களால் தமது குல தெய்வம் யார் என்பது தெரியாத நிலையில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமியையோ அல்லது திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதியையோ தங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்குவது வழக்கம் ஆகும்.
51)அதன் காரணம் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ வெங்கடாசலபதி பரப்பிரும்மனின் ஆண் சக்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களின் சக்திகளையும் பரபிரும்மனின் பெண் சக்தியான சக்தி தேவியின் அம்சங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளவர் என்பதினால் பக்தர்கள் எந்த வடிவத்தில் குலதெய்வத்தை வழிபட நினைக்கிறார்களோ அதே தெய்வமாகி அவர்களது கோரிக்கைகளை ஏற்கிறார் என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள்.
52) அதேபோலத்தான் சக்திகளைக் கொண்டவர் சிவலிங்க வடிவில் இருக்கும், சிவபெருமானின் அவதார ரூபமான ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமியும் ஆகும்.சிவலிங்க வடிவம் என்பது சிவசக்திகளை (பரப்ரும்மன்) உள்ளடக்கிய தெய்வம் ஆகும் . அவர்களே இந்த பிரபஞ்சத்தை படைத்தவர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிவசக்தியின் கீழே விஷ்ணு மற்றும் பிரும்மா அதன் கால்களாக விளங்குகின்றன.
53) எந்த ஒருவரும் அவர்களது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த குலதெய்வ வழிபாட்டை திடீரென துறந்து விட்டு அவர்களின் விருப்பப்படி வேறு ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆராதிக்க முடியாது. ஒரு பரம்பரையின் குறிப்பிட்ட குலதெய்வ வழிபாடு என்பது இயற்கையாகவே ஒரு பரம்பரையின் வாரிசுகளில் ஆண் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும், குழந்தைகளே இல்லாத நிலைகளிலும் தானாகவே நின்று விடும்.54) ஒரு குடும்பத்தில் குலதேவதை வழிபாட்டு முறை அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் மூலமாக மட்டுமே தொடர்கிறது. ஒரு வீட்டின் பெண் திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டிற்குச் சென்று விடுவதால் அவளுடைய கோத்திரம் அவர்களின் கணவர்களின் கோத்திரமாக மாறி விடுகின்றது. அவளுடைய குல தெய்வமும் அவளுடைய கணவனின் குடும்பத்தினரால் வணங்கப்படும் மற்றொரு தெய்வமாக மாறி விடுகின்றது என்பதினால் பிறந்த வீட்டு குலதெய்வ வழிபாட்டிற்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது.
55) கீழே உள்ள படத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உள்ள குலதெய்வம் குறித்த சிறு உதாரணம் கட்டப்பட்டு உள்ளது. உதாரணமாக, ஆறு குடும்பங்களுக்கு – அனைத்து வெவ்வேறு குடும்பங்கள் – குலதெய்வமாக மாரியம்மனை உள்ளதாக வைத்துக்கொள்வோம்.
• குடும்பம் எண் -1: முதல் தலைமுறை ஆண் உறுப்பினர்கள் ஆண் மகன்களை குழந்தைகளாகப் பெற்றெடுத்தால், மாரியம்மன் தொடர்ந்து குலதேவதையாக வணங்கப்பட்டுக் கொண்டு இருப்பார். முதல் தலைமுறை உறுப்பினருக்கு குழந்தைகள் இல்லை என்றால், அல்லது அவர் இறந்து விட்டால், அல்லது அவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே கிடைத்தால், முதல் தலைமுறை உறுப்பினரின் மறைவுடன் மாரியம்மன் குலதேவதை வழிபாடு மறைந்து விடும். இருப்பினும், அதே குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களுக்கு, அவர்கள் திருமணமாகாமல் இருக்கும் வரை, மாரியம்மனே குலதேவதையாகவே இருப்பார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொண்ட தருணத்தில் இருந்து , அவர்களின் குல தெய்வம் அவர்களின் கணவரின் குலதெய்வமாக மாறி விடும்.
• குடும்பம் எண் -2: மேலே உள்ள அதே தர்க்கம். ஆறாவது உறுப்பினருக்குப் பிறகும் மாரியம்மன் குலதேவதையாகவே இருப்பார், மேலும் அந்த தலைமுறையில் முதல், நான்காவது மற்றும் ஐந்தாவது வாரிசுகளில் யார் ஆண் குழந்தைகளைப் பெற்றால் கூட அவர்களுக்கும் மாரியம்மன் குலதேவதையாக தொடருவார்.
• குடும்பம் எண் -3: மூன்றாவது வாரிசுவரை பெண்ணாகவும், நான்காவது வாரிசு ஆணாகவும் இருந்தால் நான்காவது தலைமுறைக்கு மாரியம்மன் குல தெய்வமாகவே இருக்கிறார். மேலும் அந்த நான்காவது வாரிசு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அவர்களுக்கும் மாரியம்மனே குலதெய்வமாக தொடர்வார். இல்லையெனில் நான்காவது வாரிசு உறுப்பினரின் மறைவுடன் மாரியம்மன் குலதெய்வ வழிபாடு நின்று விடும்.
• குடும்பம் எண் -4: ஐந்தாவது மற்றும் ஆறாவது தலைமுறை உறுப்பினர்களுக்கு மாரியம்மன் குல தெய்வமாகவே இருக்கிறார், மேலும் அந்த தலைமுறையில் ஆண் குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்கும் மாரியம்மன் குலதெய்வமாக இருப்பார் . இல்லையெனில், எண் 4 இன் குடும்ப மரத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது தலைமுறை உறுப்பினர்களின் மறைவுடன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நின்றுவிடும்.
• குடும்பம் எண் -5: ஆறாவது தலைமுறை உறுப்பினருக்குப் பிறகும் மாரியம்மன் குல தெய்வமாகவே இருக்கிறார், மேலும் அந்த தலைமுறையில் ஆண் குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்கும் மாரியம்மன் குல தெய்வமாக தொடர்வார்.
• குடும்பம் எண் -6: இந்த குடும்ப மரத்தில் உள்ள பெண் வாரிசுகள் திருமணம் செய்து கொண்டவுடன், முதல் வாரிசில் இருந்தே (குடும்ப மரத்தில் ஒவ்வொன்றாக) மாரியம்மன் வழிபாடு அந்த குடும்ப மரத்தில் நின்று விடும்.
56) ஏற்கனவே குறிப்பிட்டது போல, குல தேவதை வழிபாடு என்பது சமீபத்திய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டவை அல்ல; அது ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் ஆண்டுகள் பழமையானது. இனி தெய்வங்கள் எப்படி ஒரு வடிவம் அல்லது தோற்றத்தைப் பெற்றன என்பதைப் பார்ப்போம். இதைப் புரிந்து கொள்ள, இந்த பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று, அது தோன்றி பலநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பிரும்மா மூலம் தெய்வங்கள் மற்றும் மானிடப் பிறவிகள் எப்படி தோன்றினார், அதில் குலதெய்வ வழிபாடு எனும் கருத்து எப்படி உருவாயிற்று என்பவற்றை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக, படைப்பின் நியதி குறித்த செய்திகள் வேத புராணங்கள் மற்றும் இதிஹாசங்களில் காணப்படும் செய்திகள், வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்துள்ள கதைகள் அல்லது பிரசங்கங்கள் மூலமே தெரிய வந்துள்ளது. அவை அனைத்துமே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் குறித்து கூறப்பட்டு வந்துள்ள கதைகள் ஆகும். அவைகளும் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மேன்மையான ஆன்மீக குருமார்கள், போதகர்கள், ஞானிகள் மற்றும் முனிவர்களின் மூலமே வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் கூறப்பட்டவை ஆகும் .
57) மிகப் பழமையான வேத நூல்களான ரிக் வேத நூல் மற்றும் வேத காலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கால புராண நூல்கள் பலவும் பனை மர இலைகளில் எழுதப்பட்டு இருந்ததாகவும் அவற்றில் பலவும் காணாமல் போய் விட்டதாகவும் , அவை இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன அல்லது இயற்கையால் அழிந்து இருக்கலாம் எனவும் நம்பப்படுவதினால் துரதிர்ஷ்டவசமாக படைப்பின் நியதியும் தத்துவங்களும் காலம் காலமாக வாய்வழி கதைகள், பிரசங்கங்கள், ஆன்மீக குருமார்கள் மற்றும் ஞானிகளின் சொற்பொழிவுகள், உரைகள் மூலமாக மட்டுமே தொடர்ந்து நமக்கு கிடைத்து வந்துள்ளது. படைப்பின் ரகசியங்களும் அனைத்து தெய்வீக செய்திகளும் குலதெய்வ வழிபாடும் வாய்மொழி செய்திகளாகவே உள்ளன என்றாலும் தொலைந்து போய்விட்டதாக கூறப்படும் அந்த நூல்களில் காணப்பட்ட குலதெய்வ செய்திகள் பல சமயங்களில் தெய்வீக முனிவர்களுக்கு தெய்வங்களினாலேயே உபதேசிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுவதினால் அவர்கள் கூறி வந்திருந்த வாய்மொழி கதைகள் மற்றும் போதனைகள் மூலம் மக்களிடம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது .
…….அடுத்த பகுதி 58 ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது