குடும்ப அமைதிக்கு வெண்கடுகு
சாந்திப்பிரியா

சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ”பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள்  திருமணம் ஆகிய பின்  கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய  பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே  மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது.  இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி  வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப்படிப்பட்ட வேற்றுமை தோன்றத் துவங்குகிறது.  இதற்கு மூலக் காரணமே நம் வீடுகளில் குடி புகுந்து கொள்ளும் தீய சக்திகள்தான். தீய சக்திகளினால்  எளிதில் ஆக்ரமிக்க முடிந்தவர்கள்  வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும்   மன வலிமையற்ற பெண்களின் மீதுதான்.

வீடுகளில் சுற்றித் திரியும் அவை வீட்டில் உள்ள நல்ல ஆவிகளை அடித்து விரட்டி விட்டு  அங்குள்ள எண்ண அலைகளை, அதிர்வுகளை  தாமே ஆக்ரமித்துக் கொள்ளும்போது எதிர்மறையான எண்ணங்களையே விதைத்துக் கொண்டு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். பல்வேறு காரணங்களினால் அங்காங்கே சுற்றித் தெரியும் தீய ஆவிகள் யார் மூலமாவது வீடுகளில் புகுந்து கொண்டு முதலில் குடும்ப ஒற்றுமையைக் குலைக்கும். வீட்டிற்குள் நுழைய முடியாத அளவில் உள்ளபோது வெளியில் இருந்தவண்ணம் அவற்றால் எதுவுமே செய்ய இயலாது. ஆனால் ஒருமுறை யார் மூலமாவது வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அவற்றை கண்டுபிடித்து வெளியேற்றுவது கடினம் என்பதின் காரணம் அவை வீட்டில் உள்ளவர்களின் மன நிலையை தன்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறது என்பதினால்தான். தான் தீய சக்தியாக இருப்பதினால் தான் குடி வந்துள்ள  வீட்டில் வேறு யாரும் மன அமைதியுடன் இருக்கக் கூடாது என அவை நினைப்பதே அதற்குக்  காரணம். வீட்டில் புகுந்து கொள்ளும் தீய சக்திகளை விலக்குவது கடினம் அல்ல. ஆனால் வீட்டில் அமைதி இன்மைக்குக் காரணமே தீய சக்திகள்தான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. ஒற்றுமையாக இருந்து வந்த குடும்பங்கள் கூட சிறு சிறு பிரச்சனைகளினால் மன ஒற்றுமை இன்றி சிதறும் என்பதின் காரணம் அந்த தீய ஆவிகளின் செயல்பாடினால்தான் .

வெண்கடுகு எனும் வெண் கணங்களின் 
மத்தியில் பைரவர்  

ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன? அதைக் குறித்து சாயி உபாசகர் ஒருவர் கூறிய நிவாரணம் இது. ”மனதளவில் பிரிந்து உள்ள குடும்பங்கள் ஒன்று சேரவும் , குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவவும், வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறவும் ஒரு எளிய பரிகாரம் உள்ளது. வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து ஸ்வாமி அறையில் வைத்து விட வேண்டும். அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல  அதிகமாவதைக்  காணலாம். வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்?

அதன் காரணத்தைக் கேட்டபோது ஒரு பண்டிதர் கீழ் கண்ட காரணங்களைக் கூறினார். ”வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.   வெண் கடுகை குறித்த ஒரு கதையைப் படியுங்கள். அதன் சக்தி புரியும்.  மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி  ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார். எதற்காக பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க ராஜ குரு கூறினார் ‘ மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் குளிர்ச்சியை தருபவை. அவை இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர் ஆவார். ஆகவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும்.

சாதாரணமாக ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில் சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான ஓம் க்லீம் க்ருஷ்ணாய என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்யும் போது சர்வ சத்ருக்களும் அவர்களுடன் சேர்ந்த தீய ஆவிகளும் அழிவார்கள். அது போலவே போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது. அதற்குக் காரணம் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும் . ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது’ என்று விளக்கம் அளித்தார்.  தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன்  மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது.