சாந்திப்பிரியா

10

147) பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்து வந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

148) தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷ சிராத்தம் செய்து விட்டு பிறகு தனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.

  • மாஸிகம் என்றால் பொதுவாக இறந்தவருக்கு பிண்டம் கொடுப்பது என்பது அர்த்தம். இதை மாசியம் என்றும் சொல்வார்கள்
  • 45 ஆம் நாள் செய்ய வேண்டிய சடங்கு ஊத்த மாசியம் எனப்படுவது. ஒருவர் இறந்து விட்ட இருபத்தேழு நாட்களின் பின், அதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் செய்யப்படும் சடங்கே ஊன மாசிகம் எனப்படும்.
  • 60 ஆம் நாள் செய்யப்படும் மாசியம் (ஒரு சிறிய சிரார்த்தம் அல்லது திவசம் போன்றது) எனப்படுவது அந்தணரை அழைத்து இறந்தவருக்கு பிண்டம் கொடுத்தல் ஆகும். இதன் தாத்பர்யம் இறந்த ஜீவனுக்கு மாதந்தோறும் செய்யும் நேர்த்திக் கடன் என்பதாகும். ஒரு வருடம்வரை மாதாமாதம் இறந்தவரின் திதியிலும் மற்றும் சில குறிப்பிட்ட காலங்களிலும் இதை செய்வார்கள். குடும்ப சூழ்நிலை மற்றும் உள்ள இடத்தினால் ஒரு சிலர் மாதம், மாதம் அவர் இறந்த திதிக்கு மாசியம் கொடுக்காமல் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை மாசியம் கொடுப்பதும் உண்டு என்றாலும் அது அத்தனை ஏற்புடையது அல்ல என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

149) தந்தையின் சிரார்த்தமாயின் அவர் வம்சத்தில், பிதா (தந்தையின் தந்தை), பிதாமகர் (தந்தையின் தந்தையின் தந்தை), பிரபிதாமகர் (தந்தையின் தந்தையின், தந்தையின் தந்தை) என மூன்று வம்சங்களை சேர்ந்தவர்களையும் வேண்டிக் கொண்டும் , தாயின் சிரார்த்தமாயின் அவர் வம்சத்தில்,மாதா(தாயின் தாய்), பிதாமகி (தாயின் தாயாரின் தாயார்), பிரபிதாமகி (தாயாரின் தாயாரின் தாயார்) என மூன்று வம்சங்களை சேர்ந்தவர்கலையும் வேண்டிக் கொண்டு பிண்டம் போட வேண்டும்.

150) தாய், தந்தை என இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

151) உடல் நிலை சரியில்லாதவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் சிரார்த்தம் செய்ய செய்யலாம் என்கின்றது சாஸ்திரம் .

152) சிரார்த்தம் செய்ய வசதியற்றோர் எள்ளு தர்ப்பணம் செய்து, காய், கனி, கிழங்கு, எள்ளு போன்ற எவற்றையேனும் சிறிது தட்ஷணையுடன் ஒரு புரோகிதருக்கு தந்து அவரை வலம் வந்து நமஸ்கரித்து அவருக்கு உணவு தரலாம்.உணவும் தர முடியவில்லை எனில் தட்ஷனையை சற்று அதிகம் தரலாம்.

153) விபத்தில் பெற்றோர் காலமானால் யார் முதலில் இறந்தார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒரே நாளீல் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். ஆனால் படைக்கப்படும் உணவு மற்றும் பாயசம் இருவருக்குமே தனித் தனி பாத்திரங்களில் செய்ய வேண்டும்.

154) பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பும் ஒன்றாக சேர்ந்தே வந்தால் முதலில் மாத பிறப்பு தர்பணம் செய்த பிறகு சிராத்தம் செய்ய வேண்டும்.

155) தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்றோருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளீல் நேர்ந்தால் முதலில் வருஷ சிராத்தம் செய்து விட்டு, தனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.

156) தாயார் அல்லது தகப்பனார் இருவரின் சிராத்தமும் மஹாளய பக்ஷத்தில் வந்தால், அவர்களுக்கு சிராத்தம் செய்த பிறகுதான் மீண்டும் மஹாளய பக்ஷ சிராத்தம் செய்ய வேண்டும்.

157) சகோதரர்கள் தனி தனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும். ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் கூட சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும. கூட்டுக குடும்பமாக இருந்தால் அல்லது சகோதரர்கள் ஒன்று சேர்ந்து செய்தால் மூத்த சகோதரருடைய பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவரோடு சேர்ந்தே மந்திரங்களை ஓதி சிரார்த்தம் செய்ய வேண்டும்.

158) தீட்டு என்பது என்ன என்பதை ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். ஆகவே தீட்டு என்பதை விஞ்ஞான ரீதியிலும் சரி, ஆன்மீக ரீதியிலும் சரி, விலக்கி வைத்துக் கொள்ள வேண்டிய காலம் என்பதாக வைத்துக் கொள்ளலாம். காலம் காலமாக தொடரப்பட்டு வரும் நம்பிக்கையின் அடிப்படையில் யாருக்கு விருப்பமோ அவர்கள் அவற்றைக் கடைபிடிக்கலாம். ஏன் எனில் இவை எதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதற்கு சாஸ்திர ரீதியிலான விளக்கம் கிடையாது. பெரும்பாலும் கருட புராணமே இந்த நியதிகளுக்கு ஆதாரமாக காட்டப்படுகிறது. ஆகவே இவற்றைக் கடை பிடிப்பது  அவரவர் விருப்பம் ஆகும்.

159) ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அவரோ அல்லது அவரது குடும்ப உறவினர்களோ 31 ஆம் நாள் சடங்கு முடியும் வரை இன்னொருவரின் மரண வீட்டிற்கு செல்லக் கூடாது. யாருக்கெல்லாம் தீட்டு உண்டு?  தீட்டுக் காலம் என்பவை எத்தனை?

தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ   தீட்டு,   ஒரு நாள் தீட்டு, 1 1/2 நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள்.  தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும்  மரணத் தீட்டு என இரு வகை உண்டு.  இங்கு நாம் மரண தீட்டை மட்டும் பார்க்கலாம்.

160) மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்:

160.1) தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு அதாவது விபத்தில் உயிர் இழந்தவர் என யாராக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுக்கு தீட்டு உண்டு. ஆனால் உடனடியாக கர்மாக்களை செய்யாமல் 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்ய வேண்டும் என்றும் ஒரு விதி உள்ளது. ஆனால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினருக்கும், பங்காளிகளுக்கும் தீட்டு, தர்ப்பணம் போன்றவை கிடையாதாம். ஏன் எனில் அவர்கள் பிசாசாக மாறிவிடுவதாக ஐதீகம்.

160.2) கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மா செய்த பின் தீட்டுப் போகும்.

160.3) ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, செய்தியைக் கேட்ட பின் குளித்தால் போதும்.

160.4) 88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது. மரண வீட்டில்  சாப்பிட்டால் (கை நனைத்தல் என்றும் கூறுவார்கள்), அவர்கள் முப்பத்தி ஒரு நாட்கள் (31) எந்த ஆலயத்திற்கும் செல்லக்கூடாது என்கின்றது சாஸ்திரம். 

160.5) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண் இறந்து விட்டால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லையாம்.  ஆனால்  இறந்த சேதி கேட்டதும் குளிக்க வேண்டுமாம். அதாவது அவர்களுக்கு அந்த செய்தி கொடுப்பது ஸ்நானத் தீட்டாம்.

160.6) ஒரு தீட்டுக்காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக்கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. ஆகவே தீட்டுள்ளவன் வீட்டுக்குச் சென்று விட்டு தம் வீடு வந்ததும் இன்னொரு  முறை ஸ்நானம் செய்ய வேண்டுமாம்.

160.7) தீட்டு இல்லாதவர்களுக்கும்  துக்கத் தீட்டு உண்டு. அதாவது தீட்டுக் காலம் முடியும் முன்னால் ஆனால் சஞ்சயனம் முடிந்தப் பின்னர் இறந்தவர்  வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரித்தாலும் அங்குள்ளவர்களைத் தொட்டு விட்டாலும் வீட்டுக்கு வந்து கால்களை அலம்பிக் கொண்டுதான்  உள்ளே செல்ல வேண்டும். அதன் பின் குளித்து விட வேண்டும். இல்லை என்றால் குளிக்கும்வரை தற்காலிக தீட்டு உண்டு.

160.8) எவர் வீட்டில் ஸ்ரார்தம் நடைபெறுகிறதோ அன்றைய தினத்தன்று துக்கம் விசாரிக்க செல்லலாகாது.

160.9) தீட்டு முடியும்வரை தீட்டு உள்ளவர்கள் வீட்டினர் எந்த ஒரு புண்ணிய காரியங்களுக்கோ, புண்ணிய சடங்குகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லக் கூடாது.

160.10) எத்தனைதான் அதிக வயதானவர் என்றாலும் தீட்டு உள்ள காலத்தில் தீட்டு இல்லாதவர்கள் அல்லது அதே வீட்டில் உள்ள  தீட்டு உள்ளவர் கூட அவரை  நமஸ்கரிக்கலாகாது.

160.11) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்களுடைய கோத்திரம் புகுந்த வீட்டுக் கோத்திரமாகி விடுவதினால்  அவர்களுக்கு பிறந்த வீட்டு தீட்டு  கிடையாது. அவளுடைய  தாய் மற்றும் தந்தை இறந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிற்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டாம். மற்ற உறவினர் இறந்தால் அதைக் கேட்டதும் ஸ்நானம் செய்தால் மட்டுமே போதுமானது.  அதை தீட்டு என்பதாக கருதாமல், குளிக்கும்வரை அந்த தீட்டை ஆசாரம் அற்ற நேரமாக  அதாவது விழுப்பு என்று கருதுவார்கள்.  ஒருவேளை அந்த செய்தி வரும் முன்னரே அவள் ஏற்கனவே குளித்து விட்டு இருந்தாலும் மரண செய்தியைக் கேட்டதும் மீண்டும் ஒருமுறை அவள் ஸ்நானம் செய்ய வேண்டும்.

160.12) ஒரு குடும்பத்தில் தாய் தந்தையின் மரணத்தை அவர்களது மகன்களோ, திருமணம் ஆகாத பெண்களோ எப்போது கேட்டாலும் அவர்களுக்கு பத்து நாள் தீட்டு உண்டு.

160.13)  ஒரு  வேளை தாய் மற்றும் தந்தையின் மரணச் செய்தி  தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர்களுக்கு பத்து நாட்களுக்குள் கிடைக்காமல் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் மற்றும் தந்தை இறந்து எத்தனைக் காலம் ஆனாலும் சரி, அது குறித்து  முதல் செய்தி எப்போது கேட்டாலும் சரி, அந்த செய்தி கிடைத்த  நாள் முதல்  அடுத்த பத்து நாட்கள் தீட்டு உண்டு.

160.14) Y’  குடும்பத்தில் உள்ள  உறவினர் இறப்பினால்  ‘Y’  குடும்பத்துக்கு பத்து நாள் தீட்டு  உள்ளதாக வைத்துக் கொள்வோம்.  ‘Y’  குடும்பத்துக்கு அந்த தீட்டு முடியாத நிலையில், அவர்களுடைய இன்னொரு குடும்ப உறவினருடைய இறப்பினால், அதாவது ‘X’ குடும்ப உறுப்பினரின் மரணத்தினால்  அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டால் இரண்டு தீட்டுக்குமான கால அளவு எத்தனை ?

  • அப்போது என்ன செய்வது?  அதற்கு குழப்பம் அடைய வேண்டாம். முதல் பத்து நாள் தீட்டு முடியும் முன்னரே   இன்னொரு பத்து நாள் தீட்டு குறித்த செய்தி   வந்து விட்டால் அந்த இரண்டாவது பத்து நாள் தீட்டும், முதல் பத்து நாள் தீட்டோடு முடிந்து விடும்.  ஆனால் அந்த செய்தி முதல் தீட்டு முடிய உள்ள பத்து நாட்களுக்குள் வர வேண்டும். அப்படி வந்தால் அடுத்து வந்த பத்து நாள் தீட்டும் முதல் தீட்டுக் காலமான பத்து நாள் தீட்டோடு விலகி விடும்.
  • ஒரு வேளை ‘X’ குடும்ப உறுப்பினரின் மரண செய்தி ‘Y’ குடும்பத்துக்கு பத்தாம் நாளன்று இரவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்போது இரண்டாவது தீட்டு காலத்தை ‘Y’ குடும்பத்தினர் இன்னும் எத்தனை நாள் அனுஷ்டிக்க வேண்டும்?  குழப்பம் அடைய வேண்டாம். அந்த நிலையில் அவர்கள் இன்னும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும். அந்த தீட்டு முதல் தீட்டுக் காலம் முடிந்து அடுத்த  மூன்று  நாட்களுக்குப் பின்னரே போகும்.
  • ஆனால்  ‘X’ குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் குறித்த அதே செய்தி  ‘Y’  குடும்பத்துக்கு பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது பதினோராம் நாள் விடியற்காலையில், முதல் தீட்டு முடிவடைந்து குளிக்கப் போகும் முன்னால் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘Y’  குடும்பத்துக்கு  தீட்டுக் காலம் எத்தனையாக இருக்கும்? குழப்பம் அடைய வேண்டாம். அதாவது ‘X’ குடும்பத்தில் இறந்து விட்டவரின்  செய்தியை பத்து நாட்களுக்கு மேல், அடுத்த மூன்று மாதங்களுக்குள் ‘Y’ குடும்பத்தினர் எப்போது கேட்டாலும் அவர்கள் பத்து நாள் தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து மூன்று நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
  • அதே போலத்தான் பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டை பற்றி  மூன்று  மாதங்களுக்கு  மேல் ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னால்  கேட்டால் அவர்கள் மூன்று நாட்கள் கூட தீட்டு காக்கத்  தேவை இல்லை.  அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து ஒன்றரை  நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
  •  ஆனால் அதே  செய்தியை அந்த குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு  மேல் ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னால்  கேட்டால், அந்த  செய்தியைக்  கேட்டதில் இருந்து  ஒரு நாள் தீட்டு காத்தால், அது  மட்டுமே போதுமானது.
  • ஆனால் அதே செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால்  அது தீட்டாக கருதப்பட மாட்டாது. அந்த செய்தி கேட்டதில் இருந்து குளிக்கும்வரை அதை ஆசாரம் அற்ற நேரமாக கருதி ஒரு ஸ்நானம் மட்டும் செய்தால் அதுவே போதுமானது.
(160.15) ஒருவருடைய மரணத்தினால் ஒரு குடும்பத்தினருக்கு மூன்று நாட்கள் தீட்டு ஏற்படும் என்ற நிலையில்  அந்த  மூன்று நாள்  தீட்டை பற்றிய செய்தியை இறந்தவரது கர்மா முடிவடைந்த பத்து நாட்களுக்குப் பிறகு  கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டுமா? பத்து நாள் கர்மா முடியும் முன்னரே அதன் இடையில் அந்த செய்தி கிடைத்தால் எத்தனை நாட்கள் தீட்டு உண்டு ? 
  • ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டிய பங்காளிகளுக்கு அந்த செய்தி மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களுக்குள்- அதாவது பங்காளிகள் எவருக்காவது கர்மா செய்து கொண்டிருக்கும் 13 நாளில் முதல் பத்தாவது நாட்கள் ஏதாவது ஒரு நாளில் கிடைத்தாலும், அந்த செய்தியைக் கேட்ட தினத்தில் இருந்து அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டு. அந்த செய்தி இறந்தவரின் பத்தாம் நாள் மாலை வந்தால் கூட அன்றில் இருந்து அடுத்த மூன்று நாட்கள் தீட்டு உண்டு.
  • ஆனால் அதே செய்தி பத்து நாட்களுக்குப்  பிறகு கிடைத்தால், அதாவது பதினோராம் நாள் விடியற் காலையில்  கிடைத்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு கிடையாது, ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.  இந்த விதி சடங்கு செய்யப்படும் 13 நாட்களுக்கு மட்டுமே உண்டு. அதே சமயத்தில் 13 ஆம் நாள் ஆன பின் 14 ஆம் நாளில் இருந்து எப்போது கிடைத்தாலும் மூன்று நாட்கள் தீட்டு உண்டு.

160.16) இதில் இன்னொரு சிக்கல். ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தை வரித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மூன்று நாள் தீட்டு காலத்தில் இருக்கும்போது இன்னொரு மூன்று நாள் தீட்டு செய்தி கிடைத்தால் தீட்டு காலம் எத்தனை ? மூன்று நாட்கள் தீட்டு செய்தி முதல் மூன்று நாளில் கிடைத்தாலும், மூன்றாம் நாள் இரவு வரை கிடைத்தாலும் முதல் மூன்று நாள் தீட்டோடு இரண்டாவது தீட்டும் விலகி விடும். அதாவது நான்காம் நாள் காலை குளித்ததும் இரு தீட்டுகளும் விலகி விடும். ஆனால் நான்காம் நாள் அந்த செய்தி கிடைத்தால் மீண்டும் மூன்று நாட்கள் தீட்டு காத்தப் பின்னர் இரண்டாவது தீட்டின் நான்காம் நாள் குளித்தால் மட்டுமே தீட்டு போகும். அதாவது முதல் மூன்று நாட்கள் தீட்டு + அடுத்த மூன்று நாட்கள் தீட்டு = ஏழாவது நாள் ஸ்நானம்.

160.17) ஒருவர் மூன்று நாள் தீட்டுக் காலத்தை வரித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  அந்த மூன்று நாட்களுக்குள் மீண்டும் பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டிய இன்னொரு மரணச் செய்தி வந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அப்போது அந்த தீட்டும் முதல் தீட்டு ஆரம்பித்த  மூன்றாவது நாள்  தீட்டோடு முடிந்து விடுமா? மூன்று நாள் திட்டை விட பத்து நாட்கள் தீட்டு அதிகம் என்பதினால், மூன்று நாட்கள் தீட்டை வரித்துக் கொண்டு இருக்கையில், பத்து நாள் தீட்டைப் பற்றிய செய்தி அந்த மூன்று நாட்களில்  அந்த குடும்பத்துக்கு  என்று கிடைத்தாலும், பத்தாவது நாள் இரண்டு தீட்டு காலமும் முடிவுறும். அதாவது மொத்தம் பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டி இருக்கும். உதாரணமாக 1 ஆம் தேதி மூன்று நாட்கள் தீட்டு பெற்றிருந்த  நிலையில், 3 ஆம் தேதியன்று இன்னொரு பத்து நாள் தீட்டு பற்றிய செய்தி  கிடைத்தாலும் அவர்கள் தீட்டு 10ஆம் தேதியன்று  முடிவுறும்.

169.18) ஆனால் அந்த பத்து நாட்கள் தீட்டு பற்றிய அதே மரணச் செய்தி, மூன்று நாட்கள் தீட்டு முடிந்த அடுத்த நாள் அதாவது நான்காம் நாளன்று  கிடைத்தால், நான்காம் நாளில் இருந்து பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டும் .

169.19) ஒரு குழந்தை பிறந்த பின் பத்து நாட்களுக்குள் பிறந்த அந்தக் குழந்தை இறந்து விட்டால், இன்னொரு பத்து நாள் இறப்பு தீட்டு சேர்ந்து கொள்ளும். ஆனால் பெற்றோர்களுக்கு குழந்தை பிறப்பினால் இருந்த பிறப்பு தீட்டும், குழந்தையின் இறப்பு தீட்டும் சேர்ந்து பத்தாவது நாள் இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும். அதாவது பிறப்பு தீட்டும், இறப்பு தீட்டும் சேர்ந்து சம காலத்தில் முடிந்து விடும். குழந்தை பிறந்து அடுத்த நாளோ அல்லது பத்தாவது நாளோ கூட அந்த குழந்தை இறந்தாலும் கூட பத்தாவது நாள் நாடு இரவுதான் இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும் என்ற இந்த விதி மாறாது. பதினோராவது நாள் காலை ஸ்நானம் செய்தபின் இரண்டு தீட்டும் விலகி விடும். 

  • இந்த இரண்டுமே மரணம் அடைந்தவருக்கு 13 நாள் கர்மாக்களை செய்து கொண்டிருக்கும் பத்து நாள் கால இடைவெளியில் வந்தாலும், பத்தாவது நாள் இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும் என்றாலும், அடுத்த 11 வது நாள் மீண்டும் வரும் தீட்டையும் சேர்த்து அனைத்து தீட்டும் சுபஸ்வீகாரம் செய்யும் 13 ஆம் நாளை காலையில் குளித்ததும்தான் போகும்.
  • இதில் ஒரு சின்ன மாற்றம் உண்டு. பத்தாவது நாளன்று கடைசி நேரத்தில் அதாவது மறுநாள் பிறக்கும்  சில மணி நேரத்துக்கு முன்னால் குழந்தை இறந்து  விட்டது என்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர்களுக்கு அதிகமாக மூன்று நாட்கள் தீட்டு உண்டு.  அதாவது அவர்களுடைய தீட்டு பதிமூன்றாம் நாள்வரை இருக்கும்.

  • அதைப் போல ஒருவர்  பத்து நாள் மரணத் தீட்டை அனுஷ்டித்துக்  கொண்டு இருக்கும்போது,  அவருக்கு குழந்தைப் பிறந்து அதனால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டது. அப்போது என்ன செய்வது? தீட்டு எப்போது விலகும்?  மரணத்தினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு உள்ள நேரத்தில் குழந்தைப் பிறப்பால் இன்னொரு பத்து நாள் தீட்டு வந்து விட்டாலும் அந்த தீட்டு மரணத் தீட்டுடன் போய் விடும்.   அதாவது ஒன்றாம் தேதி ஒரு மரணத்தினால் பத்து நாள் தீட்டு வந்து விட்டது. ஐந்தாம் நாள்  குழந்தைப் பிறந்ததினால் அவர்களுக்கு இன்னொரு பத்து நாள் தீட்டு வந்துவிட்டது. குழந்தை பிறப்பு தீட்டு பத்து நாள் எனும்போது மரணம் மற்றும் பிறப்பு தீட்டு இரண்டும் சேர்ந்து வந்தால் தீட்டு எப்போது முடியும்?
  • மரண தீட்டு காலமான 10 நாட்களுக்குள் என்று பிறப்பு தீட்டு செய்தி கிடைத்தாலும் அது மரண தீட்டு முடியும் பத்தாவது நாளன்று முடிவடைந்து விடும்.

169.20) ஒரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தினால் அந்தக் குடும்பத்தினர் வரிக்கும் தீட்டுக் காலத்தை அதே அளவில் தீட்டுக் காக்க வேண்டிய பங்காளிகள் என்பவர்கள் யார்?  பங்காளிகள் என்பவர்கள் ஒரு குடும்ப வாரிசை சேர்ந்த ஏழு  தலைமுறையினர் ஆவார்கள்.

169.21) அதாவது ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் (மகன்கள்), அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (பேரன்கள்), அந்த ஆண் பேரன்  குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள்(கொள்ளு பேரன்கள்), அந்த ஆண் கொள்ளுப் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக அவர்கள் சந்ததியில் பிறக்கும்  ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.

169.22) இப்படியாக ஏழு தலைமுறை பங்காளிகளுக்கு – அதாவது ஒரு  குடும்பத் தலைவருக்கு பிறக்கும் ஆண்  பிள்ளைகள், அவர்களது ஆண்  பிள்ளைகள், அந்த ஆண்  பிள்ளைகளின் பிள்ளைகள் என ஏழு வம்சத்துக்கு பிறக்கும் ஆண் வழி குடும்பத்தை சேர்ந்த  யார் இறந்தாலும்  அந்த ஏழு வம்சத்தினருக்கும் தீட்டு உண்டு. எட்டாவது வம்சத்தை சேர்ந்தவர்  அவருக்கு முன் உள்ள  ஏழு வம்சத்தை சேர்ந்த  குடும்பத்தினரின்  பங்களிகளாக  இருப்பார்கள். ஆனால் அவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள எட்டாவது குடும்பத்தினரின் பங்காளிகளாக ஆக மாட்டார்கள்.

169.23) மேலே காட்டப்பட்டு உள்ளது ஒரு உதாரணம்தான். எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் மகனின் பெயரை மட்டும் தந்து உள்ளேன். ஒரு பரம்பரை என்பது தந்தை தொடங்கி அவருக்கு உள்ள அவரது அத்தனை ஆண் மகன்கள், அத்தனை ஆண் மகன்களின் மகன்கள், அத்தனை  பேரன்களுடைய ஆண் மகன்கள், அத்தனை  பேரன்களுடைய பேரன்கள், பேரன் ஆண் மகன்கள் என அனைத்து ஏழு கிளைகளிலும்  உள்ள அனைத்து ஆண் மகன்களும் ஒரு வம்சத்தின் ஏழு பரம்பரை பங்காளிகள் ஆவர். இதை இப்படியும் அறிந்து கொள்ளலாம்.

  • நமக்கு முந்தைய ஆறு தலைமுறைகள். நம்மையும் சேர்த்தே ஏழு தலைமுறைகள் ஆகின்றன.
  • நாம் – முதல் தலைமுறை- நமது  அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும்
  • பரன் + பரை – ஏழாம் தலைமுறை அவர்களின் அனைத்து ஆண் வாரிசுகளும் அவர்கள் குடும்பமும் சேர்ந்தே (ஒரு வம்சத்தின் ஏழு பரம்பரையின்) பங்காளிகள் ஆவார்கள்.

169.24) தீட்டு உள்ளவர்கள் வீட்டில் தீட்டு இல்லாதவர்கள் உணவு உண்டால் அன்று  அவர்களுக்கும் தீட்டுக் காலம் இருக்கும். மறுநாள் காலையில் குளித்தப் பிறகுதான் அவர்களுக்கு அந்த தீட்டு போகும்.

169.25) வீட்டில் மரணம் நிகழ்ந்து விட்டால் நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சியைத் தள்ளிப்போடுவது வழக்கம். குழந்தைக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல், புதுமனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளை நிச்சயம் ஒருவருடம் வரை தள்ளி வைக்க வேண்டும். இறந்த வருக்கு முதல் திவசம் கொடுத்த பிறகே ஆலயத்துக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து விட்டு அதன் பின் சுப காரியங்களை தொடங்க வேண்டும் என்பது சம்ப்ரதாயம்.

169.26) ஆனால் அனைத்து சுப காரியங்களுக்கும் ஒரு வருட இடைவெளி என்று சொல்லும் சாஸ்திரங்கள் திருமண நிகழ்ச்சிக்கு மட்டும் தோஷமில்லை என்றே சொல்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டில் ஆறு மாதத்திற்கு பின்னர் நிர்ணயிக்கப்பட்டு இருந்த திருமணத் தேதிக்கு முன்பு எதிர்பாராமல் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் சுப நிகழ்ச்சிகயைத் தள்ளிப்போடாமல் நடத்தி வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சாஸ்திரம், அந்த திருமணங்கள் தம்பதியரை எந்த விதத்திலும் பாதிப்புக்குள்ளாக்காது என்றும் சொல்கிறது.

169.27) ஆனால் திருமணத் தேதி நெருங்கும் 15 நாட்களுக்குள் துக்க சம்பவம் நிகழ்ந்தால், கண்டிப்பாக திருமணத் தேதியை தள்ளி வைக்கவேண்டும் என்றும் கூறுகின்றது. பிறகு நல்ல நாள் பார்த்து ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

   …………தொடரும்