–சாந்திப்பிரியா —

 

4

44) இந்த நிலையில் இறந்தவருக்கு பன்னிரண்டு  நாட்கள் சில சடங்குகளை செய்ய வேண்டும். அவற்றை செய்யாவிடில் இறந்தவரது ஆத்மாக்களை சாந்தி அடையச் செய்ய முடியாது. யமதர்மராஜரின் கருணையையும் பெற முடியாது. ‘ஐயோ நம்மை விட்டுப் போய் விட்டாரே’ என மனத் துயரில் இருந்தவாறு சடங்குகளை செய்யும்போது குடும்பத்தினர் மனம் சஞ்சலத்தில் இருக்கும். இப்படிப்பட்ட மன அதிர்வுகளிலிருந்து மீண்டு, மனநிலையை பக்குவப்படுத்திக் கொண்டு அவரவர் இயல்பு நிலைக்குத் திரும்ப  தீட்டு எனும் பெயரில் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.

45) தீட்டுக் காலம் அனுஷ்டிக்கப்பட்டதற்கு மன மற்றும் உடல் தளர்ச்சியைத் தவிர  விஞ்ஞான அடிப்படையிலான இன்னொரு வலுவான காரணமும்  உள்ளது.  இறந்து போனவர்கள் வீட்டில்  இறந்தவரது உடலில் இருந்து சில கிருமிகள் வெளியேறி இருக்கும். அவை அதிக காலம் உயிருடன் இருக்காது. சில நாட்களே உயிர் வாழும் தன்மைக் கொண்டது அந்த கிருமிகள்.  ஆகவே அவை இறந்தவர்கள் வீட்டில்   சில நாட்களே உயிருடன் இருக்கும் என்றாலும் அவற்றை மற்றவர்களுக்கும்  பரவ விடக் கூடாது என்பதினால் மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு அதிகம் எவரும் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு ‘தீட்டு வீடு’ எனும் பெயரில் இருந்தது.  அது மட்டும் அல்ல கர்மாவை செய்பவர்கள் தினமும் சுடுகாட்டுக்கு சென்று (அந்த காலத்தில்) கல் ஊன்றிய இடத்தில் பன்னிரண்டு நாள் காரியம் செய்துவிட்டு வருவார்கள். அப்போது அவர்கள் உடலில் சில விஷக் கிருமிகளுடன் கூடிய அசுத்தங்களும் ஒட்டிக் கொண்டு  வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட விஷக் கிருமிகளை  தாமே அறியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதினால் அவை வீட்டில் இன்னமும் பரவ வாய்ப்புண்டு. பன்னிரண்டு நாட்கள்வரை அவை அந்த  வீட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த பன்னிரண்டு  நாட்களிலும் சுடுகாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் வீட்டினரை தொட்டுத் தழுவுவதின் மூலம் நம் மீதும் அந்தக் கிருமிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  அவற்றை மனதில் கொண்டுதான், சுத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், மறைமுகமாக கர்மாவை செய்யும் வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சாஸ்திர விதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவைகளே  தீட்டு என கூறப்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூற காரணமாக அமைந்தது.

46) ஆனால் அந்த கிருமிகள் அனைத்தும்  சுத்த சாந்தி (கிரேக்கியம்) செய்யப்படும் பதிமூன்றாவது நாளன்று செய்யப்படும் ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்படும்  ஹோம குண்டப்  புகையை தாங்க முடியாமல் வெளியேறி விடும், அல்லது மரணம் அடைந்து விடும். அதற்குக் காரணம் ஹோமங்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு   மருத்துவ குணமும், கிருமி நாசினி தன்மையும் உண்டு என்பதினால்தான் பன்னிரண்டாம் நாள் முடிந்த பின் சுபஸ்சவீகாரம் எனும் பெயரில் ஹோமம் வளர்த்து சடங்கு செய்யப்பட்டது. விஞ்ஞான ரீதியிலான இதை மனதில் கொண்டுதான், கிருமி நாசினி போன்ற குறிப்பிட்ட தன்மைகளை கொண்ட பொருட்களை ஹோமங்களில் பயன்படுத்த வேண்டும், இன்னென்ன பொருட்களை ஹோமத்தில் போட்டால்தான் அந்த கலவையின் சக்தியினால் ஹோமப் புகையில் இருந்து கிருமி நாசினி தோன்றும் என்பதற்காக அவை சாஸ்திர விதி என்று கூறப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.   அன்று நடைபெறும் ஹோம சடங்கிற்கு அனைவரும் செல்லலாம் என நியதி ஏற்பட்டது.

47) இப்படியான விஞ்ஞான ரீதியிலான காரணங்களைத் தவிர மேலும் ஒரு ஆன்மீகக் காரணமும் உள்ளது.  அந்த பன்னிரண்டு  நாட்களிலும் இறந்தவர்களது ஆத்மா தான் வாழ்ந்திருந்த அந்த வீட்டில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் உறவினரும் மற்றவர்களும்  வீட்டுக்கு வந்து உற்சாகமாக இருந்தால் அதைக் கண்டு அந்த ஆத்மா வேதனைப்பட்டு மனம் வெதும்பி நிற்கும். அவர்களுடைய சந்தோஷ அதிர்வலைகள் அந்த இடத்தில் இருந்து துயர அதிர்வலைகளை துரத்தி அடிக்க, துயரமுற்று உள்ள ஆத்மாக்களும் சடங்குகளை ஏற்க முடியாமல் அங்கிருந்து ஓடிப் போக நேரிடும். அதனால் அது படும் வேதனை, துயரம் போன்றவை  அந்த குடும்பத்தின் அமைதி இன்மைக்கு வழி வகுத்து விடும். ஒரு விதத்தில் பார்த்தால் அதுவே துயரத்தோடு இருக்கும் ஆத்மாவின் சாபத்தைப் பெற வழி வகுத்து  விடும்.

48) அது மட்டும் அல்லாது,  இறந்தவரது ஆத்மா அந்த வீட்டுக்கு வந்து கொண்டும் சென்று கொண்டும்  இருக்கையில் அதன் பின்னால் அதை பிடித்துக் கொண்டே  வேறு சில ஆத்மாக்களும் அதனுடன் வந்து கொண்டு  இருக்கும். அந்த நேரத்தில் அங்கு  அடிக்கடி வருபவர்களை சில தீய ஆத்மாக்கள் தாக்க வாய்ப்புண்டு. பசியினாலும், தாகத்தினாலும் வாடும் இறந்தவரது ஆத்மாவே கூட அவர்களுடைய  நடத்தையைக் கண்டு கோபமடையலாம். அதன் விளைவாக  அவர்களுக்கு சாபமும் கொடுக்கலாம்.  ஆகவேதான் இவற்றை எல்லாம்  தவிர்க்க  அந்த பன்னிரண்டு நாட்களையும் தீட்டு காலம் எனக் கூறி அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது, அப்படி  சென்றாலும் வீடு திரும்பிய பின் குளித்த பின்னரே வீட்டிற்குள்  செல்ல வேண்டும் என்ற நியதியை  வைத்து இருந்தார்கள்.

49) அப்படி என்றால் அனைவருக்கும் பன்னிரண்டு நாட்கள்தான் அசௌகரிய அல்லது தீட்டுக் காலமா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு உள்ள ஆசௌகர்ய காலத்தை அந்த காலத்தில் அவரவருக்கு இருந்ததாக நம்பப்பட்ட மன மற்றும் ஆன்மீக நிலைக்கேற்ப இத்தனை, இத்தனைக் காலம் என வறையுறுத்தி வைத்து உள்ளார்கள். அவர்கள் சமூக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு அதற்கான கால அளவையும் வறையுறுத்தி  அதை தீட்டுக் காலம் எனப் பெயரிட்டு உள்ளார்கள் (அந்த தீட்டுக் கால  அளவு எத்தனை என்பதை கடைசி பாகத்தில் கொடுத்துள்ளேன்). 

50) உண்மையாகப் பார்த்தால் பண்டைக் காலத்தில் நிலவிய குடும்ப மன நிலை, மனக்கட்டுப்பாடு, மன உறுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதே தீட்டுக்காலம், அதாவது மனத் துயர் நீங்குவதற்கு கொடுக்கப்பட்ட கால அளவு என்பதாகும்.  அவை  விஞ்ஞான அடிப்படையில் அமைந்தவை அல்ல. சில சடங்குகளை மிகைப்படுத்தி வேதங்கள் கூறியவை, வழி வழியாக வாய் மொழிச் செய்தியாக கூறப்பட்டு வந்தவற்றை என அவற்றின் சாரத்தை சற்றே உருமாற்றி அந்த காலத்தில் சமுதாயத்தில் தம்மை உயர்வாக காட்டிக் கொள்ள அந்தணர்கள் ஏற்படுத்திய  சட்ட திட்டங்களே ஆகும்.  அதில் தீட்டுக் காலமும் ஒன்று ஆகும்.

51) தீட்டு சம்மந்தமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள சில நியதிகளுக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் உண்டு என்றாலும் அவற்றில்  கூறப்பட்டு  உள்ள தீட்டுக் கால அளவிற்கு  எந்த விதமான விஞ்ஞான அடிப்படை ஆதாரமுமே கிடையாது என்பதே உண்மை. இதற்கு உதாரணத்தைக் காட்ட வேண்டும் எனில் ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால் அதனால் ஏற்படும் தீட்டு பிராமணர்களுக்கு பத்து நாட்கள், க்ஷத்திரியர்களுக்கு பதினைந்து நாட்கள், வைசியர்களுக்கு இருபது நாட்கள் மற்றும் சூத்திரருக்கு முப்பது நாட்கள் எனக் கூறப்பட்டு இருப்பதில் இருந்தே இவை வர்ணாஸ்ரம அடிப்படையில் உருவானது என்பது விளங்கும்.

52) அது மட்டும் அல்ல. ஒரே குடும்பத்திலும் கூட இன்னாருக்கு இத்தனை நாட்கள் தீட்டு என்றும் பல பிரிவுகளை வைத்து உள்ளார்கள். மரணம் அடைந்தவருடைய பங்காளியில் ஒருவருக்கு பத்து நாட்கள் தீட்டு, அதே குடும்பத்தில் இன்னும் சிலருக்கு மூன்று நாட்கள், இன்னும் சிலருக்கு ஒரு நாள் என தீட்டுக் காலத்தை அமைத்து உள்ளார்கள். உண்மையிலேயே தீட்டு காலத்துக்கு விஞ்ஞான ரீதியிலான அடிப்படை காரணம் முழுமையாக இருந்திருந்தால் அதெப்படி ஒவ்வொருவருக்கும் தீட்டு காலம் வேறுபட்டு  இருக்கும் ? (அந்த தீட்டுக் கால  அளவு எத்தனை என்பதை கடைசியில் கொடுத்துள்ளேன்).

53) இதில் இன்னொன்றையும் சரியான நியதியாக  ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை செய்து கொண்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள், யுத்தத்தில் மரணம் அடைந்தவர்கள் மற்றும் இயற்கையாக இறந்தவர்கள்  என்பவர்களுக்காக அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஆசௌச மற்றும் தீட்டு கால அளவு வெவ்வேறாக உள்ளது எனும்போது காலத்துக்குப் பொருந்தாத, விஞ்ஞான ரீதியில் அமைந்தில்லாத  இது போன்ற சில நியதிகள் (அனைத்து நியதிகளும் அல்ல) சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவானது இல்லை, இடை செருகல்கல்தான் என்பது விளங்கும். அதைக் கடைபிடிப்பதும், கடை பிடிக்காததும் அவரவர் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து இருக்கும். அதை நாம் எதிர்ப்பது தவறு. அது தனி நபர் விருப்பம் ஆகும்.

  • ஒருவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில் இறந்தால் அந்த தோஷங்களுக்கு நிவர்த்தி கிடைக்க ஒவ்வொன்றுக்கும் அதற்கென தரப்பட்டு உள்ள  குறிப்பிட்ட ஹோமங்களை செய்தாக வேண்டும். அதற்கான பரிகார ஹோமம் என்பது என்ன என்பதை வீட்டு ப்ரோஹிதர் கூறுவார்  ஒருவர் உத்திராயணத்தில், சுக்ல பக்ஷத்தில், பகலில் இறந்தால் பரிகார  ஹோமம் கிடையாது.
  • பூரட்டாதி, உத்திரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் பூமி தானம் செய்யவேண்டும்.
  • புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நக்ஷத்திரங்களில் இறந்தால் ஹிரண்யதானம் செய்யவேண்டும்.
  • செவ்வாய், வியாழன், வெள்ளிகளில் இறந்தால் அந்தந்த க்ரஹத்திற்கு ப்ரீதிகரமானதை தானம் செய்யவேண்டும். இவற்றை அந்தந்த வீட்டு புரோகிதர்களை கலந்து ஆலோசனை செய்து செய்ய வேண்டும்.
  • ஒருவர் இறந்த 6 மணி நேரத்திற்கு பிறகு உடலை தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் என்பதை செய்ய வேண்டும். ஆனால் இறந்த 4 மணி நேரத்திற்குள் உடலை தஹனம் செய்தால் பர்யுஷித ஹோமம் செய்யத் தேவையில்லை. பர்யுஷிதம் என்றால் பழையதானது என்பது பொருள். இதன் தாத்பர்யம் என்ன என்றால் இறந்தவர்களை ஆறு மணி நேரத்துக்குள் தகனம் செய்யவில்லை என்றால் அந்த உடல் பழையதாகி விட்ட  உடல் என்ற ஆன்மீக நிலையை அடைந்து விடுமாம்.  அதாவது இறந்தவர்களை ஆறு மணி நேரத்திற்குள் தகனம் செய்து விட வேண்டும் என்பது பண்டைக்கால சாஸ்திர விதி முறையாக இருந்தது.  ஆனாலும் சாஸ்திர விதிப்படி இறந்து பத்து மணி நேரத்திற்கு மேல் உடலை வைத்து கொள்ள கூடாது. அப்படி வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டால் அதற்கான ப்ராயஸ்சித்த சடங்கை செய்ய வேண்டும்.

இனி அடுத்த பன்னிரண்டு நாட்களும்  செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதையும் அவற்றின் தத்துவங்களையும் ஆராயலாம் .

54) மரணம் அடைந்தவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களையும் போட்டு அலங்கரிக்கக் கூடாது.   நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும் வருகிறார்கள் என்று ஐதீகம் உள்ளது.  ஆகவே அவர்களை வரவேற்கும் விதமாக இருக்க மங்களச் சின்னமாக கோலத்தைப் போடுவார்கள். ஆனால் ஏற்கனவே கூறியது போல இறந்தவர் வீட்டில் தற்காலிகமாக மங்கள காரியங்கள் நடைபெறாமல் இருக்கும் என்பதாலும், இறந்தவர்களின்  ஆத்மா அங்கிருந்து செல்லும்வரை தெய்வங்களோ அல்லது தேவர்களோ அங்கு  நுழைய மாட்டார்கள் என்பதாலும் இறந்தவர்கள் வீடுகளில் கோலங்களை போடுவது இல்லை.

55) ஒருவர் இறந்து விட்டால் அந்த பிரேதத்தின் தலையை தெற்கு நோக்கி தர்பைப் புல்லில் படுக்க வைத்து தென் பகுதி மூலையில் சின்ன விளக்கேற்றி வைக்க வேண்டும்.  இதற்கான காரணத்தை பாகம் மூன்றிலேயே விளக்கி உள்ளேன். முடிந்த அளவிற்கு அதன்  உடலில் போடப்பட்டு உள்ள துணிகளை அகற்றி விட்டு வெள்ளைப் போர்வையினால் உடலைப் போர்த்தி வைக்க வேண்டும். பிரேதத்தை மூட வாங்கிய துணியிலேயே கொஞ்சம் கிழித்து வைத்து கொண்டு அதையே பத்து நாளும் வஸ்த்ரோதகம் விட உபயோகிக்க வேண்டும். அந்தணர்கள் அல்லாத சில குடும்பங்களில்  இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு  மேல்  வெள்ளை துணியைக் கட்டுவார்கள். வெள்ளைத் துணியில் அந்த உடலை விட்டுப் பிரிந்த சூட்சும சரீரமான ஜீவாத்மா அந்த உடல் எடுத்துச் செல்லும்வரை  தொங்கிக் கொண்டு நிற்கும் என்ற ஐதீகமே அதன் காரணம். 

56) இறந்தவர் உடலின் மீது வெள்ளை துணிகளை போர்த்துவதின் காரணமும்  அந்த உடலை விட்டுப் பிரிந்த சூட்சும சரீரமான ஜீவாத்மாவிற்கு இருட்டைக் கண்டால் பயம். கருமையான நிறம் யமபெருமானுக்கு உகந்தது என்பதினால் இருட்டைக் கண்டு ஜீவாத்மா பயப்பட்டு நிற்கும். ஆகவே வெளிச்சம் தரும்  தூய்மையான வெண்மை நிறமே  ஜீவாத்மாவிற்கு ஜீவாத்மாவிற்கு பயத்தைக் கொடுக்காத நிறமாக இருப்பதினால் அந்த வெண்மை துணியில் ஜீவாத்மா தன்னை இணைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் என்பதும் ஆன்றோர் கூற்றாக உள்ளது.

57) இறந்தவர் நெற்றியில் வீபுதி பூசி வைப்பார்கள். இரு கை கட்டை விரல்களையும், இரு கால் கட்டை விரல்களையும் சேர்த்து  சின்ன துணியினால் கட்டி வைத்து விட வேண்டும். மூக்கிலும் பஞ்சை வைத்து மூடி விடுவார்கள்.

  • இறந்தது சிறு பெண்ணாக இருந்தால், வெள்ளையைத் தவிர மற்ற நிறத்தில் வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும்.
  • இறந்தது சுமங்கலியாக இருந்தால் குங்கும பொட்டு வைத்து அலங்கரித்து இருப்பார்கள். புது பச்சைப் புடவையை அணிவிக்க வேண்டும். பச்சை கண்ணாடி வளையல்களையும் தலையில் பூவையும் அணிவிக்க வேண்டும். மற்ற சுமங்கலிகள், இறந்தவருக்கு மஞ்சள் குங்குமம் அணிவிக்க வேண்டும்.
  •    அதுவே விதவை என்றால் வீபூதி இட்டு வைப்பார்கள்.

58) ஒருவர் இறந்தவுடன், முடிந்தவரை உடனடியாக அவருடைய கைகள், கால்கள் மற்றும் கழுத்தை நேராக வைக்க வேண்டும். கண்களை மூட வேண்டும். சிறிது நேரத்திற்குப் பிறகு இதைச் செய்வது கடினம். சாதாரணமாக இறந்த பிணத்திற்கு எட்டு இடங்களில் கட்டு போடுவார்கள். ஆனால் இந்த பழக்கத்தை அனைத்து சமூகத்தினரும் கடைபிடிப்பது இல்லை. பெரும்பாலமான, அந்தணர்கள் அல்லாத சமூகத்தினர் இதைக் கடை பிடிக்கிறார்கள். இரண்டு கை பெருவிரல்களையும் இணைத்துக் கட்டுவதை  கைக்கட்டு என்பார்கள். காலிலுள்ள பெருவிரல்களையும் இணைத்துக்  கால்கட்டு என்றும், வாயில் வெற்றிலை சீவல் கசக்கி வைத்து துணியால் வாயை மூடி கட்டுவது வாய்க்கட்டு என்றும், தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களை வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவதை நாடிக்கட்டு என்றும், தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்து விடாமல் கட்டுவது தொப்புள் கட்டு என்றும், தலை முடியை மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவதை  தலைக்கட்டு என்றும், முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர்க்கோட்டில் அமையும்படி கட்டுவது முழங்கால் கட்டு என்றும் ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டப்படும் கட்டு  கோவணக்  கட்டு  என்றும் கூறப்படுகின்றது. இதை இறந்து போன பெண்களுக்கும் செய்கின்றார்கள். அனைத்து சமூகத்தினரும் பொதுவாக கடைபிடிக்கும் வழக்கம் என்ன என்றால்  இறந்த சடலத்தின் இரு நாசி துவாரங்களை  பஞ்சினால் மூடி, இரு கால் கட்டை விரல்களை கயிற்றால் சேர்த்துக் கட்டி வைத்து இருப்பார்கள்.

59) எதற்காக கை மற்றும் காலில் உள்ள கட்டை விரல்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள் என்பதை   சாஸ்திரங்கள் விவரிக்காவிடிலும் அதை தர்ம சாஸ்திர விதியாக கூறி உள்ளார்கள். ஒருவர் இறந்தப் பின் அவர்கள் உடலில் உள்ள பிராண சக்தி உடலை விட்டு உடனடியாக அகன்று விடுவது இல்லை. அந்த உடலில் இருந்து வெளியேறும் ஆத்மாவானது சில காலம் வரை அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கும். அதைத் தொடர்ந்து விண்வெளியில் உள்ள பல ஆத்மாக்களும் அங்கு வந்து சுற்றத் துவங்கும். அந்த தன்மையினால் இறந்தப் பின் இயற்கையாகவே கால்கள் இரண்டும் அகலமாக திறந்து கொண்டு ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்கத் துவங்கும். அப்படி கால்கள் விலகும்போது பின்புறத்தில் உள்ள ஆசனத் துவாரம் விரிவடைந்து விடும். அதையே மூலாதாரம் என்பார்கள். அதன் வழியே இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவும், அங்கு சுற்றித் திரியும் மற்ற ஆத்மாக்களும் அந்த உடலுக்குள் மீண்டும் மீண்டும் நுழைய முயலும். அப்படி அவை நுழைந்து விட்டால் அந்த உடலுக்கு செய்யப்படும் கர்மாவின் பலனை அந்த ஆத்மாக்களும்  பெற்றுக் கொள்ளத் துவங்கி விடும். அப்படி உடலின் உள்ளே புகுந்து கொண்ட ஆவிகள்  தகனத்தின் போது வெளியில் வந்து விடும். மயானத்தில் மந்திரவாதிகள் அப்படி உடலுக்குள் நுழைந்து வெளி வரும் ஆவிகளை தன்வயப்படுத்தி துர்பிரயோகம் செய்ய வழி வகுத்து விடும். அது அந்தந்த குடும்பங்களை பாதிக்கும். ஆகவேதான் அந்த மூலாதார துவாரம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கட்டை விரல்களை இறுக்க கட்டி வைத்து விடுவார்கள்.

60) ஆத்மாக்களினால் இறந்து விட்டவர்களின் உடலில் உள்ள மற்ற துவாரங்கள் வழியே உள்ளே நுழைய முடியாதாம். நாசித் துவாரம் அல்லது மூலாதாரம் வழியே மட்டுமே நுழைய இயலுமாம். அதனால்தான் நாசியின் துவாரங்களை பஞ்சு வைத்து மூடியும், கால் கட்டை விரல்களை  ஒன்றாக சேர்த்துக்  கட்டியும்  வைத்து விடுவார்கள். இனி கர்மாக்கள் என்னென்ன, அவை எப்படி செய்யப்படுகின்றன என்பதை படித்தப் பின் அவற்றுக்கான  சந்தேகங்களையும் விளக்கங்களையும்    பார்க்கலாம்.

தலைமாட்டில் சடங்குகளை துவக்குவார்கள்    

61) உறவினர் அனைவரும் வந்து கூடிய பின், வீட்டின் தென் திசையை நோக்கி   பூதவுடலின்   தலை இருக்குமாறு வைத்தவுடன் தகனக் கிரியை அல்லது கர்மாவை செய்யத் துவங்கும் அங்குள்ள பண்டிதர் பொதுவாக தலைப் பகுதியில் செங்கல்லை அடுக்கி வைத்து சின்ன குண்டம் அமைத்து, அதன் பக்கத்தில் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகளைத் துவக்குவார். கிரியைகள் செய்வதற்கு முன் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூணூல் மூலம் கும்பங்களுடன் இணைத்து வைத்து ஹோம குண்ட அக்கினியுடன் சங்கமிக்கச் செய்வார்கள். கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி ஹோமம் வளர்க்கப்படுகின்றது.

62) தலைப் பகுதியில் சடங்குகளை செய்ய ஆரம்பிப்பதின் காரணமும் யமதர்மராஜருக்கு மரியாதை தருவதற்காகத்தான். அதாவது இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை அக்னி ஹோமத்தின் மூலம் பூர்வாங்கமாக தகனம் செய்து யமதர்ம தேவரிடம் அனுப்பி வைப்பதான ஐதீகம் அது. அந்த சடங்கு முடிந்ததும் அக்கினி ஹோமம் வளர்க்கப்பட்டு பூத உடலை தண்ணீர் விட்டு அலம்புவார்கள். அந்த சடகுகளை  வீட்டில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அதை தெய்வீக நிலையை அடைய உள்ள  உடலுக்கு செய்யும் முதல் அபிஷேக பூஜை  என்பார்கள். அன்றே கல் ஊன்றுதல் எனும் சடங்கும் நடைபெறும்.  அதை பாஷண ஸ்தாபனம் என்றும் கூறுவார்கள். அதன் தாத்பர்யம் குறித்து பின்னர் கூறுகிறேன். இந்த சடங்கும்  குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கலாம். அதற்கான கர்மாக்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை கர்மாவை செய்ய வந்துள்ள புரோகிதர்கள் கூறுவார்கள்.

63) அதற்கு இடையில் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் பிரேதத்துக்கு மலர் மாலைகளை அணிவிப்பார்கள். பூக்களையும் உடல் மீது தூவுவார்கள். எதற்காக இறந்தவர் உடலின் மீது மலர்களை போட வேண்டும் அல்லது, மலர் மாலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு சாஸ்திர நியதி இல்லை. தர்ம சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவர் தெய்வமாகி விட்டார் எனக் கருதுவதினால்தான் அதை செய்கிறார்கள்.  இது பிற்காலத்தில் இறந்தவருக்கு செலுத்தப்படும்  மரியாதைக்குரிய பழக்கமாக ஏற்படுத்தப்பட்டு  உள்ளது ஆகும்.

64) இறந்து போனவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பிறந்த பெண்கள் மற்றும் மருமகள்கள் (பிள்ளைகளின் மனைவிகள்) போன்றவர்கள் தாம் உடுத்திய புடவையுடன் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு, தலையை  முடியாமல்,  ஈரப் புடவையுடன் குடத்தில் தண்ணீர் ஏந்திக் கொண்டு வந்து ஆளுக்கொரு குடமாகவோ அல்லது ஒரு குட ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ கால் பாதத்தில் இருந்து இருந்து தலை வரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி நிதானமாக, படுக்க வைக்கப்பட்டு உள்ள பிரேதத்தின் மீது தண்ணீர் விடுவார்கள்.

65) அதன் பின்னர் கடமை செய்பவர் சீக்காய் பொடி, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர் அரிசி  மாவை ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷேகம் செய்வார்கள். இந்த பழக்கமும் சமுதாயத்திற்கு சமுதாயம் மாறுபடும். இது போல் மஞ்சள்  கரைத்து அபிஷேகம் செய்வார்கள். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். பொதுவாக அந்தணர்கள் வீடுகளில் இவற்றை செய்யாமல் கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள் என்பதாக தெரிகின்றது.

சவத்தின் மீது தண்ணீரை ஊற்றி 
குளிப்பாட்டுவார்கள்

66) உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு  அதில் இருந்து கீழே  வடிந்த ஜலத்தை  எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து பிரேதத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.  அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள்.  அதனால்தான் அந்த சடங்கை இறந்தவரது  பிரேதத்துக்கு  செய்யும் அபிஷேக பூஜை என்றும் கூறுவார்கள்.  இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமானம் எனக் கருதப்படுவதினால் அதற்கு செய்யும் மரியாதை சடங்கு ஆகும் இது என சாஸ்திரங்களும் கூறுகின்றன.  இந்த சடங்கை சில பண்டிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.

67) உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு  அதில் இருந்து கீழே  வடிந்த ஜலத்தை  எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து பிரேதத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.  அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள்.  அதனால்தான் அந்த சடங்கை இறந்தவரது  பிரேதத்துக்கு  செய்யும் அபிஷேக பூஜை என்றும் கூறுவார்கள்.  இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமானம் எனக் கருதப்படுவதினால் அதற்கு செய்யும் மரியாதை சடங்கு ஆகும் இது என சாஸ்திரங்களும் கூறுகின்றன.  இந்த சடங்கை சில பண்டிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.

68) அதன் பின் இறந்தவரது கர்த்தாக்கள் அனைவரும் பிரேதத்தை பிரதர்ஷணம் செய்த பின் அந்த இடத்தில் இருந்து வெளியில் சென்று விடுவார்கள். செல்லும் முன் அதற்கு நமஸ்கரிப்பது மெத்த சிறந்தது ஆகும். அங்குள்ள மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்து விடுவார்கள். அதன் பின் மரணம் அடைந்தவர் பெண் என்றால் பெண்களும், ஆண் என்றால் ஆண்களும் ஈரமாக உள்ள பிரேதத்தின் உடலை நன்றாகத் துடைத்து விட்டு அந்த சடலத்துக்கு மாற்று உடை அணிவிப்பார்கள். உடலைக் குளிப்பாட்டிய பின் அவ்வுடலுக்கு புது வஸ்திரத்தை (வேஷ்டி-அங்கவஸ்திரம் அல்லது புடவை) போர்த்த வேண்டும். இந்த வஸ்திரத்தின் மேல் தூபம் காண்பித்து அல்லது கோமூத்ரம் அல்லது கங்கை தீர்த்தம் தெளித்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடலை அபிஷேகம் செய்த தண்ணீரை துடைக்க துடைப்பத்தை பயன்படுத்தக் கூடாது. காரணம் அது பவித்ரமான நீராகும்.  இறந்தவர்கள் உடலில் நகைகள் ஏதாவது அணிவிக்கப்பட்டு இருந்தால் அதையும் அந்த நேரத்தில் கழற்றி எடுத்து விடுவார்கள். அனைவரும் தெற்கு பக்கமாகப் பார்த்து சவத்தை நமஸ்கரித்தப் பின்னர் பிணத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு  செய்வார்கள். இவை அனைத்தையும் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பார்.பாதங்களில் இருக்கும் துணியை (முழு துணியில் கால் பாகம்) வெட்டி அதை கர்த்தா அங்கவஸ்திரமாக  12 நாட்களுக்கு அணிய வேண்டும். அந்த  அங்கவஸ்திரத்தை தொலைக்கக் கூடாது. 12-ம் நாள் அன்று அதே துணியை பிண்டம் போடும்போது பிண்டத்தோடு வைத்து அதையும் சேர்த்து தண்ணீரில் போட்டு விட வேண்டும் (விஸர்ஜனம்).

69) பொதுவாக கர்மாக்கள் நடைபெறும்  வீட்டு  முற்றத்தில் பந்தல் போட்டு மாவிலை மற்றும் தோரணம் கட்டி தரையை சாணத்தினால் மெழுகி வைப்பார்கள் (உறவினர் வந்து அமர மற்றும் சடலத்தைக் கட்டும் பாடையை அங்கு வைப்பதற்காக). இந்த பழக்கம் கிராமங்களில் மட்டுமே தற்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இட வசதி காரணமாக நகரங்களில் இந்த பழக்கம் அதிகம் காணவில்லை. இப்படி செய்வதும் இறந்தவருக்கு மரியாதை காட்டும் சடங்கு  ஆகும். இறந்தவரை வீட்டிற்கு வெளியே, தலை கிழக்கிலும் கால் மேற்கிலும் இருக்குமாறு தயாராக வைக்கப்பட்டு உள்ள பாடையில் பிணத்தைக் வைத்ததும், உரிமைக்காரப் பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். வாய்க்கரிசி போடுவது எதற்கு எனில் அதுவரை இறந்து போனவருக்கு தாம் உணவு தரவில்லை எனில், அந்த கடைசி நேரத்திலாவது அவருக்கு உணவு கொடுத்தோமே என்ற மன நிறைவு  இருக்கட்டும்  என்பதற்காக போடப்படும் சம்பிரதாயமே தவிர அதன் தத்துவம் வேறு எதுவும் இல்லை. ஆனால் ஆன்மீகத்தில் அரிசியை தெய்வீகத் தன்மைக் கொண்டதாகக் கூறுவார்கள். ஹோமம் ஆனாலும் சரி, பூஜைகள் ஆனாலும் சரி அவற்றில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மீதுதான்  பூஜை கலசங்களைக் கூட வைத்திருப்பார்கள். மஞ்சள் அரிசியைத்தான் பூஜைகளிலும் உபயோகிப்பார்கள்.  எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் சரி, இந்துக்கள் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக போடுவது அரிசி தானியமே தவிர பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை.  இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியும்  அவர் உடலை தகனம் செய்யும்போது எரிந்து போகும்.  இறந்தவர் உடலை தகனம் செய்யும் சடங்கு ஒரு விதத்தில் அந்த புனித ஆத்மாவுக்கு செய்யப்படும் ஹோமம் போன்றது. எப்படி ஹோம குண்டத்தில்  அரிசியைப் போடுவது முக்கியமாக உள்ளதோ  அது போலவேதான்  இறந்தவரது   வாயையும் ஹோம குண்டமாகக் கருதி அதில் அரிசியைப் போட்டு உடலை  தகனம் செய்கிறார்கள் என்பதே ஐதீகம்.

70) சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவரது  வாயில் போடப்படும் அரிசியானது அவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவினால் ஆவாகிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் ஏழு தலை முறைக்கான ஆத்மாக்களுக்கும் பங்கிட்டு தரப்படும், அதன் மூலம் அந்த பித்ருக்களின் மனம் சாந்தி அடையும் என்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும்  நம்பிக்கைகளின் அடிப்படையிலும்  அந்த சடங்கு செய்யப்படுகிறது.  அதை செய்வதின் மூலம் வாய்க்கரிசியை உணவாக போட்டவர்களது குடும்பத்துக்கு மேலுலகில் உள்ள ஆத்மாக்களின் ஆசிகள் வந்து சேரும், அது அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்பார்கள்.

71) அதன் பின்னரே இறந்தவர்களின் உடலை ஒரு போர்வையினால் நன்கு மூடி வைத்தப் பின், அதை பாடையுடன்  சேர்த்து  கட்டியதும் நான்கு பேர்கள்  அந்தப் பாடையை தூக்கி தமது தோள்  மீது வைத்துக் கொள்ள, நெருப்புச் சட்டியுடன் இறந்தவரது மகன்கள் முன்னே செல்ல,  பிணத்தின் பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப் பிள்ளைகள் தீப்பந்தம் ஏந்தியபடி  பிணத்துடன் செல்வார்கள். சாதாரணமாக இறந்தவருக்கு முன்னால் கூட்டமாக செல்லக் கூடாது என்றும், பிணத்துடன் செல்பவர்கள் அதன் பின்னால் செல்ல வேண்டும் என்பார்கள். பிணத்தின் முன்னால்  தீ சட்டியுடன் கர்த்தாக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இதற்கான காரணம் நமக்கு விளங்கவில்லை. இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்லும் பழக்கம் இறந்தவரது குடும்பத்து சிறுவர்களும் சுடுகாட்டுக்கு செல்லும் உடலுக்கு  தீ மூட்டி எரிக்க தானும் உரிமை உள்ள கர்த்தா என்பதை காட்டவும், மேலுலகம் செல்லும் ஆத்மாவுக்கு மரியாதைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஐதீகமே தவிர அதற்கு வேறு எந்த விஞ்ஞான பூர்வமான அல்லது சாஸ்திர காரணமோ கிடையாது. சில குடும்பங்களில் பிள்ளைகளோ மற்ற கர்தாக்களோ இல்லை என்றால் இறந்தவரது பேரன்கள் கர்மாவை செய்ய உரிமை உள்ளவர்கள் ஆகின்றார்கள்.

72) மேலும் அந்த சிறுவர்களும் பின் வரும் நாட்களில் தாம் பெரியவர்கள் ஆகும்போது இறந்து போக உள்ள தமது தாய் தந்தைக்கு சடங்குகளை எப்படி  செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் போதனையாக இருக்கவே  சாஸ்திர சம்பிரதாயமாகவும் அவற்றைக்  காட்டி உள்ளார்கள்.  முன் காலங்களில் பேரப் பிள்ளைகளும் சுடுகாடுவரை சென்று சிதைக்கு கொள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது பலரது வீடுகளிலும் சிறு பிள்ளைகளை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை. சுடுகாட்டில் பிணங்களைக் கண்டு அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதே அதன் காரணம்.

73) முன் காலங்களில்  சுடுகாடு எத்தனை தூரம் இருந்தாலும் பிணத்தை மாறி மாறி நான்குபேர் தூக்கிக்  கொண்டு நடந்தே சுடுகாடுவரை செல்வார்கள். அந்த காலத்தில் சவங்களை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது என்பதின் காரணம் சுடுகாடுகள் அதிக தூரத்தில் இருந்ததில்லை என்பது மட்டும் அல்ல வாகன வசதிகளும்  கிடையாது, மனிதர்களும் திடகார்த்தமாக இருந்தார்கள் என்பதே. சுடுகாடுகள் நீண்ட தூரத்தில் இருந்ததினாலும், இயற்கையின் நியதியினால் சவத்தின் எடை அதிகரிக்கத் துவங்கும் என்பதினாலும், நேரமாக நேரமாக, உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சவத்தை அத்தனை தூரமும் சுமந்து கொண்டே செல்ல கடுமையாக இருந்ததாலும் பாதி  தூரம் சவத்தை தோளிலே வைத்துக் கொண்டு சம்பிரதாயமாக நடந்து சென்றதும், பாடைகளுடன் கட்டப்பட்ட சவங்களை ஒரு கட்டை வண்டியில் வைத்து  இழுத்துச் செல்வார்கள்.  அந்த பழக்கம்  தற்போது வாகன வண்டிகளில் எடுத்துச் செல்வதில் வந்துள்ளது. இரண்டு முறைகளுமே தவறல்ல. சாஸ்திரத்துக்கு எதிரானதும் அல்ல. காரணம் சவத்தை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்ல வேண்டும் என்று எந்த சாஸ்திரங்களிலும் கூறப்படவில்லை. தோளில் தூக்கிக் கொண்டு செல்வது  இறந்தவரது குடும்பத்தினருக்கு தாமும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நின்று இருப்போம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாயமே ஆகும். வழியில் மூன்று முறை பிரேதத்தை கீழே வைத்து பலி கொடுக்க வேண்டும். பலி என்பது வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த பாதி சமைத்த அரிசியாகும். வழியில் மூன்று முறை அதை செய்யாவிடில் மயானத்திலாவது மூன்று முறை கீழே வைத்து பலி கொடுக்கா விட்டால் வழியிலுள்ள ஜீவன்கள் இந்த ஜீவனை துன்புறுத்தும் .

பேரப்பிள்ளைகளும் சுடுகாட்டுக்கு எடுத்துச்
செல்லும் சவத்தின் பின்னால் தீப்பந்தங்களை
ஏந்திச் கொண்டு சற்று தூரம் செல்வார்கள்

74) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை  இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள்.  அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப்பட, அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறுவரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல்,  நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும்.

75) அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்தபின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களிமண்ணினால் செய்யப்பட்ட ஒரு காலி மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் சவத்தின் மீது அரிசி, சின்ன தங்கக்காசு அல்லது நாணயங்களை வைத்தப் பின் சவத்தின் வாயில் அரிசியைப் போடுவார் (கர்மாவை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை கடைசி பகுதியில் வரும் பத்தியில் கூறி உள்ளேன்). இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும்.

…………..தொடரும்