–சாந்திப்பிரியா —


7

125) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது சுபம் அற்ற காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான அபரம் என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் அபர காரியம் என்பது இறந்து போன சடலத்துக்கு சடங்கு செய்வது என்பதினால் அசுபமான காரியம் என்பதாகக் கருதுகிறார்கள். அதையே சாஸ்திரமும் கூறுகிறது. இறந்தவர்களுக்கு பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மா என்பது தஹனம் முதல் பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் கர்மாக்கள் ஆகும். ஆனால் அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று செய்யப்படும் கிரேக்கியம் என்பது குடும்பத்தினரின் துயரத்தை நீக்கிக் கொள்ள செய்யப்படும் சுபஸ்வீகாரம் ஆகும். அதாவது அபர காரியம் என்பது சுப காரியத்துடன் முடிவடைகிறது. அதன் பின் மரணம் அடைந்தவரது ஜீவன் பிதுர்லோகத்தில் தெய்வமாகி விட்ட அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினரிடமும் போய் சேர்கிறது என்பது ஐதீகம்.

126) ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர்லோகத்தில் உள்ள அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் பன்னிரண்டு நாள் காரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள். அங்கு சமைக்க மாட்டார்கள் என்பார்கள். முதல் பத்து நாட்களும் உறவினர்கள் வீடுகளில் இருந்துதான் சாப்பாடு வரும். இதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணம் கிடையாது என்றாலும் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளதற்கு ஒரு அடிப்படை காரணம் இருந்துள்ளது.

127) பண்டைக் காலங்களில் முதல் நாளில் இருந்து அடுத்த பத்து நாட்களும் நதிக்கரையில் சென்று கல் ஊன்றிய இடங்களில் காரியங்களை செய்ய வேண்டி வரும். ஆகவே அந்த காரியம் முடிக்கப்பட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும். அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள். சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூடிவிட்டு சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது. ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அது மனிதாபிமான அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த சடங்கே தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

128) இதற்கு ஒரே ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணம் மட்டுமே உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னி தேவருக்கு நைவித்தியமாக கொடுத்தப் பின்னரே வீடுகளில் சாப்பிடுவார்கள். அதாவது அக்னிதேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும். இன்றும் சில வீட்டில் இதைக் கடைபிடிக்கிறார்கள். பண்டை காலத்தில் வீடுகளில் தற்காலத்தைப் போல மின் அடுப்புக்களும், எரிவாயு (காஸ்) அடுப்புக்களும் இல்லாத நிலையில் விறகுகளைப் போட்டு நெருப்பு பற்ற வைத்து சமையல் செய்து வந்தார்கள். ஆகவே இறந்தவரது வீடுகளில் அந்த ஜீவன் வீட்டைவிட்டு வெளியேறும்வரை, மயானத்தில் விறகுகளை வைத்து இறந்தவராது உடலை தகனம் செய்ததைப் போல, வீட்டில் விறகு எரிக்கக் கூடாது, அடுத்த பன்னிரண்டு நாட்கள் கர்மாக்களை முடிக்கும்வரை, வேறு எந்த தெய்வீக பூஜையையும் செய்யக் கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாஸ்திர ரீதியில் இந்த நியமத்தை வைத்துள்ளார்கள்.

129) முதல் நாள் முதல் பத்து நாள் வரையிலான சடங்குகள்

129.1) சஞ்சயனம்:-  தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை  எடுத்து வந்து அதை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதியில் சென்று கரைக்கும் சடங்கு ஆகும். மின்சார அடுப்பில் உடலை தகனம்  செய்தால் இதை முதல் நாளிலேயே செய்து விடுவார்கள். ஆனால் மயானத்தில் விறகு அடுக்கி விறகை எரித்து தகனம் செய்தால் சஞ்சயனத்தை இரண்டாம் நாள் அன்று  செய்வார்கள்.

129.2) கல் ஊன்றுதல் :- சஞ்சயனம் முடிந்ததும் குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன்  ஆசமனம் பண்ணிய பின்   தர்ப்பைப் புல்லை மோதிரம்  போன்று பவித்திரம் செய்து அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த  இடத்துக்கே சென்றுவிட்டு திரும்பும் ஜீவனை புரோகிதர்கள் மந்திர சக்திகள் மூலம் அங்கேயே அவர்களால் பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அந்தக் கல்லின் முன்னால் தினமும் சில  சடங்குகளை செய்வார்கள். அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் தர்ப்பணம் பண்ணவேண்டும்.  இது நித்ய விதி எனப்படுகிறது. தினமும் ஒரு  இளநீர் காயும் அவற்றோடு  வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் தர்ப்பணத்தால் ஜீவாத்மாவின் தாகம் அடங்கும். ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் போட  வேண்டும். முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும் என்றாலும் அரிசியில் சமைத்த சாதத்தையே போடுவது நல்லது.

  • முதல் நாளில் மூன்று எனத் தொடங்கி, அடுத்த நாள் 4, பின்னர் 5 என ஒவ்வொரு நாளும் வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை அதிகரித்துக் கொண்டே போய் 10-ஆம் நாளில் 12 முறை திலோதகம் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதை ஏகோத்தர வ்ருத்தி என்பார்கள்.
  • அதை போலவேதான் நவ சிராத்தம் எனும் சடங்கையும் 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்வார்கள் (1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்).
  • இந்த காரியங்கள் அனைத்தும் கர்த்தாக்களால் செய்யப்படுகின்றன என்பதினால் ஏதாவது காரணத்தினால் காரியங்களை அடுத்த நாளே துவக்க முடியாமல் போய்விட்டால் அவை அனைத்தையும் 3,5,7, அல்லது 9 தாவது நாளில் துவக்கி அதற்கு முன் விட்டுப் போன அத்தனை நாட்களின் கர்மாக்களையும் சேர்த்து ஒரே நாளில் செய்து முடிப்பார்கள்.

129.3) பிண்டம் போடுதல்:- ஸ்தாபனம் செய்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் தர்பை மூலம் எள்ளு கலந்த தண்ணீரை ஊற்றியும், அங்கேயே சமைத்த வெள்ளை சாதத்தையும் (அதை பிண்டம் என்பார்கள்) போட்டு அந்தக் கல்லையே உயிருடனான ஜீவாத்மாவாக கருதி அதை ஜீவித்து இருக்க வைப்பார்கள். அவைகளை வாஸோதகம், திலோதகம், பிண்டம் போடுதல் என்பார்கள். பிண்டம் போடுவதை இறந்தவரது மகள்கள் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அப்படி மகள் இல்லை என்றால் வீட்டில் உள்ள மருமகள் செய்ய வேண்டும். அதற்கான பிண்டத்தை தயாரிக்க அவள் அந்தக் கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடத்துக்கே சென்று, அங்கு அடுப்பு மூட்டி சாதம் வைக்க வேண்டும். சாதம் வெந்ததும், பிண்டத்தைப் பிடித்துப் போட வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் அவள் ஈரப் புடவையுடனேயே செய்ய வேண்டும் என்பது நியமம். அது ஏன்?

  • இதற்கும் ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணம் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும். கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை சாஸ்திரங்களில் ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.
  • பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க கால தாமதம் ஏற்படும். அந்த நேரத்தில் இன்னும் துணி காயவில்லையே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டு மனமும் காரியத்தில் நிறைவாக ஈடுபடாமல் உடைகள் மீது கவனத்தை வைத்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை நனைக்காமல் மாற்றிக் கொள்வது கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை உடுத்திக் கொண்டு தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது. உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது. கர்மாக்களை செய்யும்போது மனக்கட்டுப்பாடு தேவை. ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப்புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்திலேயே இவற்றை எல்லாம் எத்தனை ஆழமாக சிந்தித்து விதியாக வைத்துள்ளார்கள் என்பதைக் காணும்போது வியப்பாகவே உள்ளது.

129.4) பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது.

129.5) பத்து நாட்கள்  தினமும் காலையில் பெண் பிண்டம் செய்து தர,  கர்மாவை செய்பவர் வாஸோதகம், திலோதகம் விட்டு இறந்தவர் ஆத்மாவை திருப்தி  செய்ய வேண்டும். ஒருவர் எந்த வயதான நிலையில் இறந்தாலும், நூறு வயதே கூட ஆனாலும், அந்த பிரேத  சரீரம்,  இறந்தவர் இளம் வயதில்  எப்படி காணப்பட்டாரோ அந்த தோற்றத்தில் சூஷ்ம உருவில் மாறி விடும் என்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளது .

129.6) முதலில் குடும்பத்தின் இளையவர்தான் பிண்டம் போடத் துவங்க வேண்டும். அவரைத் தொடர்ந்து எத்தனை சகோதரர்கள் இருந்தார்களோ அத்தனை சகோதரர்களும் விட வேண்டும்.முதல் நாள் 3 தடவை. இரண்டாம் நாள் 4 தடவை; 3ம் நாள் 5 தடவை; 4ம் நாள் 6 தடவை,  5ம் நாள் 7 முறை,  6 ஆம்  நாள் 8 முறை, 7ஆம் நாள் 9 முறை,  8 ஆம்  நாள் 10 முறை,  9ஆம்  நாள் 11 முறை மற்றும்   10ஆம்  நாள் 12 முறை திலோதகம் மற்றும்  வாஸோதகம்  செய்வார்கள்.  

129.7) இப்படியாக தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா மானசீகமாக உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கும் ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் உள்ள அவர்களுக்கும் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது. இவை அனைத்தும் கண்களுக்கு தெரிவதில்லை, ஆனால் மானசீகமாக உணர வேண்டியவை ஆகும்.

129.8) சரீரத்தை விட்டு வெளியேறிய ஆத்மாவானது தகனத்துக்குப் பின்னர் அடுத்த ஒன்பது நாட்களும் ஆத்ம சரீரம் இல்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக ஒன்பது நாட்களும் எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து , பிண்டத்தையும் போட்டு சடங்கு செய்யும்போது அந்த சடங்குகளில் கூறப்படும் மந்திர ஒலிகளினால் அந்த ஆத்மா பிரேத உடலைப் பெறுகிறது என்பதாக முன்னர் கூறினேன். ஜீவனுக்கு சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும் என்ற சந்தேகம் எழலாம்.

129.9) இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஜீவ அணுக்கள் உண்டு. காற்றில் உள்ள அதன் ஜீவ அணுக்கள் நம்மை உரசிக் கொண்டு செல்லும்போது அந்த உணர்வை  காற்று  என்று உணர முடியும். ஏன் என்றால் அந்த ஜீவ அணுவின் தன்மை அது.  அதைப் போலத்தான் ஒலி , வாசனை, ஒளி, பார்வை என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஜீவ அணு உள்ளது. அதன் மூலமே நம்மால் அவற்றின் தன்மைகளை உணர முடிகிறது. இப்படியாக உள்ள நிலையில் பிரேத ஆத்மாவாக உள்ள ஜீவன் பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் எப்படி குடிக்க முடியும் என்ற கேள்வி எழத் தேவையே இல்லை. மனித உடலுக்குள் உடல் சார்ந்த (Physical) உணவு புகுந்து சென்று வயிற்றில் அமர்ந்ததும்தான் பசி அடங்கும், தண்ணீர் தாகத்தை அடக்கும்.  ஆனால் பிரேத உடலுக்கு பசியை அடக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் உடல் சார்ந்த பொருள் தேவை இல்லை. அவற்றால்  உடல் சார்ந்த பொருளை உண்ணவோ குடிக்கவோ முடியாது. ஆனால் அதே சமயத்தில் அந்த உடல் சார்ந்த பொருட்களான பிண்டம் மற்றும் எள்ளும் தண்ணீரும் வெளிப்படுத்தும், நமது கண்களுக்கு தெரியாத ஜீவ அணுக்களை அவை ஸ்வாசித்து அவற்றை தன்னுள் கிரகித்துக் கொள்ளும் நிலையில் பிரேத உடலின் உணர்வுகள் அமைந்து உள்ளன.  மனித உடலுக்கு உடல் சார்ந்த பொருள் தேவை என்பதை போல பிரேத உடலுக்கு உடல் சார்ந்த பொருட்களின் ஜீவ அணுக்களின் ஸ்பரிசம் மட்டுமே தேவை என்பதினால்தான் ஜீவன்களினால் தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும்.

129.10) இந்த சடங்குகளுக்கு எள்ளையும், தர்பைப் புல்லையும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்? வேறு தான்யங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி எழலாம்.

  • எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். எள்ளிலும் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டு வகை உண்டு. எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே என்றாலும் சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் அது பிதுர் தேவர்களை அதிக சந்தோஷப்படுத்தும் என்பார்கள். கருப்பு எள் வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறுவார்கள். அதனால்தான் எள்ளை தண்ணீருடன் கலந்து சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால் வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஆத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது என்று பண்டிதர்கள் கூறுவார்கள்.
  • அதைப் போன்ற தெய்வீக மகிமை பெற்றதே தர்பைப் புல்லும் ஆகும். தர்ப்பைப் புல் என்பது முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும் அந்த தர்பைப் புல்லின் அடிப் பகுதியில் பிரஹ்மாவும், நடுப்பகுதியில் திருமாலும் நுனியில் சிவபெருமானும் வசிப்பதாகவும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் புராண ஐதீகம் உண்டு. இதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும். இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள் என்பது இதனாலும் வைக்கப்பட்டு உள்ள விதி முறை ஆகும். தர்பையில் காந்த சக்தி என்பதினால் அது அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்கவும் அதை பயன்படுத்துகிறோம். தர்பையின் மேன்மையை குறித்து மாபெரும் முனிவர்களான மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வியாசர், பரத்வாஜர், யாக்ஞவல்க்யர், ஆபஸ்தம்பர் போன்றவர்கள் நிறையவே கூறி உள்ளார்கள். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள். அந்த முனிவர்கள் தர்பைப் புல்லை சமுஸ்கிருத மொழியில் குசம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.
  • முன் காலத்தில்  கணவன் இறந்திருந்தால் நாலாம் நாள் இறந்தவரது மனைவியை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து கீழே நெல் தெளித்து அதன் மேல் நடந்து வர சொல்வார்கள்.இந்த பழக்கம் தற்காலத்தில் நடைமுறையில் உள்ளதா என்பதோ, எதற்காக இதை செய்யுமாறு கூறி இருந்தார்கள் என்பதோ தெரியவில்லை. 

130) பத்தாம் நாள் (தசாஹம்) கர்மாக்கள் :- நித்திய விதி, பங்காளி தர்ப்பணம் (குழி தர்ப்பணம்), ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடல் போன்றவை ஆகும்.

130.1) கர்த்தாக்கள் தினமும் செய்யும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு ஜலத்தாலும் செய்யப்படும் நித்ய விதியை முதலில் செய்வார்கள்.அன்று  75  முறை   திலோதகம் 30  முறை   வாஸோதகம் செய்வார்கள்.  

130.2) குழி தர்ப்பணம்:- பத்தாம் நாள் சடங்கு அன்று இறந்தவரின் பங்காளிகள் வந்து பத்து தினங்களுக்கான குழி தர்ப்பணம்  செய்ய வேண்டும்.   குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி, அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் கலந்து விடுவார்கள். கர்மா நடைபெறும் இடத்தில் குழி செய்து அதில் எள்ளும் தண்ணீரும் ஊற்றியதும் அவற்றின் ஜீவ அணுக்கள் பூமிக்குள் ஊடுருவி அதே பூமிக்குள் ஓடும் நதி, கடல், குளம், நீர் நிலை என அனைத்து நீரிலும் கலந்து விடுமாம். அதனால் என்ன பயன் ?

  • பண்டைக் காலத்தில் இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை அவள் உடலுக்குள் (பூமிக்குள்) ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி தர்ப்பணம் செய்யலாம் என விதி அமைத்தார்கள்.
குழி  தர்பணம்

130.3) சஞ்சயனத்தில் இறந்தவரது சாம்பல் மற்றும் எலும்பு இரண்டுமே நதி மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டதும், அவற்றில் உள்ள பிரேத ஜீவ அணுக்கள் நீரின் மூலம் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து பயணித்தபடி இருக்கும். பங்காளிகளினால் விடப்பட்ட தர்பண நீரில் இருந்த ஜீவ அணுக்களும் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து விடும் என்பதால் பூமிக்குள் உள்ள நீரில் பயணித்துக் கொண்டு இறந்தவரது ஜீவனின் ஜீவ அணுக்கள் பங்காளிகளின் தர்பண நீரின் ஜீவ அணுக்களை ஸ்பரிசித்து தாக சாந்தி அடையும். அவை தாக சாந்தி அடையும்போது அந்த உணர்வுகள் வஸுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஜீவாத்மாவையும் சென்றடையும். இப்படியாக ஜீவாத்மா பங்காளிகளின் மூலம் தரப்பட்ட எள்ளின் நீரை ஆவாஹித்துக் கொண்டு தாக சாந்தி அடைகின்றன. அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது. அது மட்டும் அல்ல பூமிக்குள் உள்ள நீர் நிலைகளின் தண்ணீர் ஆவியாகி மேல் எழும்பும்போது அவைகளில் பயணிக்கும் தர்பண நீரின் உயிர் அணுக்கள், அடுத்த ஒரு வருட காலமும் இறந்தவராது ஜீவன் யமபுரியை நோக்கி பயணிக்கையில், அங்கெல்லாம் உள்ள வான் வெளியில் பரவி பயணித்துக் கொண்டு இறந்தவரது ஜீவனின் தாகத்தை தீர்க்கும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் மரணம் அடைந்தவரது ஜீவாத்மாவும் தான் தனி நபர் அல்ல, இறந்த பின்னரும் தனக்கு தன் குடும்பமும் தனது பங்காளிகளின் துணையும் உள்ளது என்ற மன தைரியத்தைப் பெறும். இது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இந்த சடங்கின் தாத்பர்யத்தில் உள்ள ஆழமான ஆன்மீக தத்துவம் ஆகும்.

130.4) உடனே இன்னொரு கேள்வியும் எழும். ஒரு வீட்டின் தர்ப்பண நீர் ஜீவ அணுக்கள் ஆகாயத்தில் படர்ந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மாவின் தாகத்தை தீர்க்கும் என்ற கேள்வி எழலாம். வான் வெளியில் ஆயிர ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் இருந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மா குறிப்பிட்ட தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை கிரகித்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழலாம். உண்மை என்ன என்றால் இதுதான் தெய்வீகம் என்பது. காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட ஆயிர ஆயிரம் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு ஜீவாத்மா அதன் குறிப்பிட்ட கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகளின் தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும், அவற்றால் மற்றவர்களுடைய தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம். இதுவே விசித்திரமான தெய்வ நியதியாகும் .

130.5) தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலதுகை ஆள்காட்டி விரலுக்கும், கட்டைவிரலுக்கும் இடையே உள்ள இடைப் பகுதியில் ஓடும் ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய ரேகைகள் என்பார்கள். பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும் தர்ப்பண நீரானது அவர்களது கைகளில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே ஓடிச் செல்லும்போது அந்த கைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம். அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்ற தெய்வ நியதி நியாயமாகவே உள்ளது.

 ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளில் 
உள்ள ரேகைகள் மீது இருந்து வெளியேறும் 
பித்ரு  நீரின் ஸ்பரிசம் வேறுபட்டு இருக்கும் 
என்பதை விளக்கும் படம்

130.6) கர்மாக்கள் முடிந்த பின்னரும் கடைபிடிக்க வேண்டிய தர்ப்பணம் குறித்த பொது விதி என்ன என்பதை கீழே காணலாம். தர்ப்பணம் என்பதை உதகதானம் என்றும் கூறுவார்கள்.

  • ஒருவர் இறந்த பின் ஒரு வருட காலத்திற்கு அதாவது முதல் வருட சிரார்த்தம் முடியும்வரை, தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
  • ஒரு வருடத்துக்குப் பின்னரும் எப்போது தர்ப்பணம் செய்தாலும் தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்துவிட்டு தர்ப்பணம் முடிந்த பின்னரே அவற்றை செய்ய வேண்டும்.
  • ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு (96) நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை நாட்கள் 12, மஹாளய பட்ச நாட்கள்  16, வ்யதீபாத நாட்கள் 12, வைத்ருதி நாட்கள்  12, அஷ்டகா நாட்கள்  4, அன்வஷ்டகா நாட்கள்  4, பூர்வேத்யு நாட்கள் 4 என்பவை அடங்கும். இந்த  நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
  • அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
  • கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம், அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. அவை அனைத்தையும் விட திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. ஏன் என்றால் இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கும், தமது தந்தையைப் போல அவர்கள் கருதிய ஜடாயு பறவைக்கும் தர்ப்பணம் செய்தார்களாம்.

131) ப்ரபூத பலி:-

ப்ரபூத பலி என்பது  சாதம், அடை, உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மாவாக உள்ள ஊன்றிய கல் முன்னால் கொட்டுவதாகும்.  இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம். 3 லிட்டர் அரிசியின் அன்னம், உப்பு போடாமல் செய்த 11 இட்லி 11 அடை, 11 அப்பம், 11 முறுக்கு, 11 வடை போன்றவற்றை கல் ஊன்றிய இடத்தின் அருகில் வைத்து படைப்பதையே பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி எங்கிறார்கள். இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம்.

131.1) ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு (வீடுகளில் சாதரணமாக அப்படி கோலம் போடுவது இல்லை), தெற்கு நுனியாக துணியை பரப்பி தர்ப்பைகளையும் பரப்பி எள்ளும் நீரும் விட்டு மௌனமாக அன்னம் அப்பம் கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் எல்லாம் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும் நீரும் விட்டு குலம் தழைக்க வேண்டிக்கொள்வர். பாத்திரங்களை எள்நீரால் சுற்றி, அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிகிறது.

131.2) இறந்தவருக்கு மனைவி இருந்து அவர் உயிருடன் இருந்தால் அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப் புடவை வாங்கி அதை அவள் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை தோளில் புடவை சாத்துவது அல்லது புடவை போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட பட்டுப் புடவைகளை அணியாகக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம் அந்த புடவை. சமூகத்தில் விதவை எந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு புரிய வைக்கும் ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. 

131.3) தாலி எடுத்தல்:- பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு நார் மடி புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின் மற்ற உறவினர்களும் போடுகின்றனர். எல்லா சுமங்கலிகளையும் வெளியே போகச் சொல்லி விட்டு பூவையும் தாலியையும் அகற்றி விடுவர் அல்லது நார் மாடி புடவையை அவள் மீது போட்ட பின்னர் இரவு நடு நிசிக்கு பின் தாலியை கழற்றி பால் கிண்ணத்தில் போடுவர்.

131.4) பண்டைக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு விதவையாகக் கருதப்பட்டதினால் அன்றைய தினம் அவர்கள் தாலியை எடுத்துவிட்டு தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளை புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையானப் பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள். அதற்கு அடிப்படைக் காரணம் விதவை ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள்வரை ஆன்மீகத்தில் இருந்து கொண்டு பக்தி மார்கத்தில் இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில் இந்த சடங்குமுறை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை மட்டும் அணிந்து கொள்வதில்லை, நகைகளையும் அணிகிறார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்தும் கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

132)கல்லை எடுக்க :- பின் அவர்களை வெளியே அனுப்பி விட்டு, கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச்சொல்லி பிரார்தித்து, கண்களை மூடிக்கொண்டு ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும். கற்களை எடுத்தப் பின் கண்களை திறக்க வேண்டும். அவற்றை துணியில் வைத்து கையலம்பி, சகதி மண், தானியங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு போய் ஒரு குழியில் எல்லாவற்றையும் போட்டு அதன் மீது நெல்லையும் சிறிது பசுவின் சாணத்தையும் கொட்டிவிட்டு மூடுவர். இதே போல நதி கரையில் காரியங்களை செய்வர். பெரியோரை வலம் வந்து பிரார்த்தனை செய்த பின் தாடி மீசைகளை மழித்தப் பின் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.

133) பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஆத்மாவானது கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்ஷும சரீரம் எடுத்த அந்த ஆத்மாவானது யமதூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம். அந்த பயணத்துக்கு வழி வகுக்கும் நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும் சடங்கு செய்து அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

134) பத்தாம் நாளன்று முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் உப்பில்லாத சாப்பாடு எனும் பெயரில் போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய் விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும் மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள்.

135) வீட்டிற்கு வந்ததும் சாந்தி ஹோமம் செய்து  முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள். அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை (உறவினருக்கு அப்பம் மற்றும் பொறி ஓதியிடுதல்) என்பதையும் செய்வார்கள். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.

136) 11 ஆம் நாள் கர்மாக்கள் :- இறந்த 11வது நாளில் செய்வது ஏகோதிஷ்டம் (அதாவது ஒருவருக்கு என்பது பொருள்) என்று பெயர் பெறும். அன்று செய்யப்படும் கர்மாக்களை யஜ்யோபவீத தாரணம், புண்யாவசனம் , நவசிராத்தம் (நவசிரார்த சடங்கு என்பது என்பது ஒன்பது நாளுக்கும் சேர்த்து இறந்தவருக்காக செய்யும் ஒன்பது தானம் ஆகும்), வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், அவ்ருத்தாத்ய மாஸிகம் போன்றவை ஆகும். பொதுவாக மாசிகம் என்பது இறந்தவர் ஜீவனுக்கு செய்யும் நேர்த்திக் கடன் என்பதாகும். அது மட்டும் அல்ல இந்த சடங்கின் மூலம் இறந்தவரின் ஆன்மாவுக்கு பிசாசத்துவ நிவிர்த்தி கிடைக்கும்.  பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்றிடும் ஜீவாத்மா பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து யமபுரிக்கு செல்லத் தயாராகி விடும். 

136.1) வ்ருஷ உத்ஸர்ஜனம்:- வ்ருஷபம் என்றால் காளை மாடு என்று அர்த்தம். பத்தாம் நாள் பிரேத உடல் அகலுவதற்காக வ்ருஷ உத்ஸர்ஜனம் செய்யப்படுகிறது. அந்த சடங்கு என்ன என்றால் ஒரு காளைக்கு கன்றின் மீது சூலம் போல குறியிட வேண்டும். இந்த கர்மாவை எதற்கு செய்கின்றார்கள் என்றால் அந்த ஜீவாத்மா பிரேத (பிசாசு) ஜென்மமாக மாறக்கூடாது என்பதற்கே. இந்த சடங்கில் ஒரு காளையின் கன்றை தானமாக கொடுப்பார்கள். வ்ருஷபம் என்றால் காளை மாடு என்று அர்த்தம்.

136.2) ஒத்தன் சாப்பாடு :- பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு ஒத்தன் சாப்பாடு என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதையே உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள். மீதி இருந்தால் அதை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டுமாம். அவருக்கு தட்ஷணையும் உண்டு. அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செல்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.

137) 12 ஆம் நாள் கர்மாக்கள் :- அன்றைய தினம் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும். நீர்க் குடத்தைத் (உதக கும்பம்) தானமாக வழங்குவதே சோத கும்ப சிரார்த்தம் என்று கூறப்படுகின்றது. சோத கும்ப சிரார்த்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களுடைய ஆத்மாவின் தாகம் மட்டும் அல்ல அதன் பசியும்   தீரும் என்பர்.

137.1) சவுண்டி பிராமணர் சாப்பாடு:- பதினோராம் நாள் வரை ப்ரேத ரூபத்தில் இருந்த ஆத்மாவானது பன்னிரண்டாம் நாளன்று பித்ருக்களின் ரூபத்தை அடைந்து அவர்களுக்கு முன்னால் மரணம் அடைத்துவிட்ட பித்ருக்களுடன் ஒன்று சேர்வதான ஐதீகம். அன்றைய தினத்தன்று சவுண்டி பிராமணர் சாப்பாடு என்ற சடங்கும் நடைபெறும். அந்த சவுண்டி பிராமணருக்கு வீட்டினர் சமைத்த உணவைப் போடுவார்கள். ஆனால் அவர் போகும் போதும் அவரை எவரும் பார்க்கக் கூடாதாம்.

137.2) ஸபிண்டீகரணம் :- இதில் முக்கியமான கர்மா ஸபிண்டீகரணம் என்பதாகும். ஸபிண்டீகரணம் என்பது தன்னுடைய குலத்திலுள்ள மூதாதையர்களுக்காக செய்யப்படுகின்ற பூஜையாகும். இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது ஸபிண்டீகரணம் எனும் சடங்கு ஆகும். மூதாதையர்களுக்காக பிண்டங்களை வைத்து, அதோடு கர்மா செய்யப்படும் இறந்தவருக்கான பிண்டத்தையும் வைத்து, இரண்டு பிண்டங்களையும் ஒன்றாக சேர்ப்பார்கள். இந்த ஸபிண்டீகரண சடங்கை செய்வதன் மூலம் இறந்தவர் தன்னுடைய பிரேத உருவத்தை விடுத்து தன்னுடைய மூதாதையர்களுடன் இணைந்து கொள்வார் என்பது ஐதீகம். இந்த சடங்கை மரணம் அடைந்தவரது 12வது தினத்திலோ, 15வது தினத்திலோ அல்லது ஆறாவது மாதத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவரை இறந்தவர் பிரேத ஜென்மத்துடன் இருப்பார். செய்து முடிக்கும் வரை இறந்தவருடைய பிள்ளைகள் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுதல் கூடாது. ஸபிண்டீகரணம் செய்து முடித்த பின்பே இறந்தவருடைய பிரேத ஜென்மமானது முழுவதுமாக நீங்கப்பெற்று பித்ருக்களின் உருவை அடையும். இந்த கர்மாவை செய்த பின் தாய், தந்தையரின் வம்சாவளியில் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

138) பிரேதத்துவம் பெற்ற ஆத்மாக்கள் உடனடியாக அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல. அந்த பிரேத ஆத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள தண்டனை மற்றும் பிரதிபலன்களை எதிர்பார்த்தவண்ணம் யமலோகத்தில் உள்ள யமராஜனிடம் சரணடைய பயணித்துக் கொண்டு இருப்பார்கள். அதன் பயணம் முடிவுற ஒரு வருட காலம் ஆகுமாம். ஆகவேதான் அந்த ஜீவன்கள் நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக பித்ரு ஆத்மாக்களுக்கு அந்த ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டிய பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது. ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக அந்த பாவம் எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்மதேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை

139) பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். இதை சோடசம் என்று கூறுவார்கள். சோடசம் என்றால் பதினாறு என்பது பொருள் ஆகும்.

140) இறந்தவரை நேரடியாக பித்ருவாக பாவித்து முதன்முதலாகச் செய்யப்படும் ஸ்ரார்தமான ஸோதகும்பம் எனப்படும் சடங்கையும் பன்னிரண்டாம் நாள் செய்து ஒரு பிராமணருக்கு போஜனம் செய்விப்பார்கள்.

141) 13 ஆம் நாள் கர்மாக்கள் – சுபஸ்வீகாரம் :- பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள். அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள்.

142) இறந்தவராது ஆத்மா யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் தாகம் இன்றி பசி இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும்படி செய்யவே சோத கும்பம் மற்றும் நான்கு ஊன மாஸ்யம், பன்னிரண்டு மாஸ்யம் எனும் சடங்குகளை செய்ய வேண்டும்.

143) சுபஸ்வீகாரத்தின் அன்று மாலை சாஸ்திரிகள் இறந்தவரின் ஆத்மா பயணிக்கும் கதையைக் கூறுவார். பண்டிதர்களினால் கூறப்படும் அந்த கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து உள்ளது.

 …………..தொடரும்