சௌந்தர்யலஹரி

சௌந்தர்யலஹரி எப்படி எழுதினேன்

சௌந்தர்யலஹரி ஸ்லோகங்கள் பற்றி விளக்க  குறிப்பு எழுத வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது ; 2010, 2011, 2014  மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சௌந்தர்யலஹரியின் விளக்கத்தை எழுதத் துவங்க அது வேறு கட்டுரையாக மாறி விடும்.  காரணம் என்னால் அதில் கவனத்தை செலுத்த முடியாமல் இருந்தது. ஆகவே  சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களின்  அர்த்தத்தை எழுதுவதை  பாதியிலேயே விட்டு விடுவேன்.

பின்னர் அதைக் குறித்து கிட்டத்தட்ட நான் மறந்து விட்டேன் என்றாலும் முடிவில்  பிப்ரவரி 2025 ஆம் ஆண்டு அதை எழுத  நான் உறுதியாக முடிவு செய்து 10-12-2011 ஆண்டு எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு   சௌந்தர்யலஹரியின்   ஸ்லோகங்களின்  அர்த்தத்தை, விளக்க உரையுடன்  இந்த ஆண்டு (2025) எழுதினேன்; எனது கனவு நிறைவேறியது.  ஒரு புத்தகத்தின் விளக்க உரையை எழுதி முடிக்க 14 ஆண்டுகள் ஆயிற்று என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு வரலாறு.

2007 அல்லது 2008 ஆம் ஆண்டு என்று நினைக்கின்றேன், நான் பல்வேறு ஆலயங்கள் குறித்து  நிறைய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தபோது,  மறைந்து விட்ட எனது சகோதரர் எனக்கு சௌந்தர்யலஹரி பற்றிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்; அதை அவருக்கு என் மறைந்த தந்தை கொடுத்து இருந்தார். மறைந்து விட்ட எனது தந்தை திரு ராமசாமி ஐயர், 1959 ஆம் ஆண்டு  கையொப்பமிட்டு இருந்த  அதன் முதல் பக்கம், பெரும்பாலும் பூச்சிகளால் அழிக்கப்பட்டு விட்டது  அல்லது  சிறிய காகிதத் துண்டுகளாக உடைந்து சிதறி விட்டது. காரணம்  அது அலமாரியில் வைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படாமல்  இருந்துள்ளது.   அதன் முதல் பதிப்பு 1944 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது; எனது மறைந்த சகோதரர் எனக்குக் கொடுத்த புத்தகம் 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது. விளக்க உரையை எழுதிய ஆசிரியர் அப்போதைய பிரபல பண்டிதராக இருந்த  ஸ்ரீ ‘சாஸ்திர ரத்னகார பிரம்ம ஸ்ரீ தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்’ ஆவார். சௌந்தர்யலஹரியின் வசனங்களுக்கு விளக்க உரை பழைய தமிழ் மொழியில்  இருந்தது என்பதினால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும், அதையே வேத நூல் போல கருதி  ஒவ்வொரு ஸ்லோகங்களின் அடிப்படை அர்த்தங்களையும் புரிந்து கொண்டேன்.  அந்தப் புத்தகத்துடன் சேர்த்து, இணையத்திலிருந்து ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் இருந்த  பத்து அல்லது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விளக்க நூல்களைப் படித்து, வசனங்களின் உள் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். அவற்றில் முக்கியமானது 1962  ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள மணத்தட்டை எனும் சிறிய கிராமத்தை  சேர்ந்த  திரு  M.K.வெங்கடராம ஐயர் அவர்கள் தமிழில் விளக்க உரை எழுதி வெளியாகி  இருந்த  ஸ்ரீ ஜகதகுரு க்ரந்தமாலா-7  எனும் புத்தகமும் அடங்கும். அதிலும் விளக்க உரை பழைய தமிழ் மொழியில்  இருந்தது என்பதினால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.

அவற்றின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எனது சொந்த பாணியில் எழுதியுள்ளேன், ஒவ்வொரு வசனத்தின் பொதுவான அர்த்தமும், அவற்றின் உள் தத்துவ அர்த்தமும் ஒன்றன் பின் ஒன்றாக, கொடுத்து உள்ளேன். காலம் சென்ற என் சகோதரர் எனக்கு கொடுத்து இருந்த சௌந்தர்யலஹரி புத்தகத்தின் பக்கங்கள்  ஒவ்வொரு முறை திறக்கும் போதும் தூள் தூளாக உடைந்து போகின்றது என்பதினால்  படிக்க முடியாததாகி விட்டது. புத்தகம் அழிந்து போய் காகிதத் தூள்களாக  மாறி விடக் கூடாது என்பதினால்  என் தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதை ஒரு சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவரில் வைத்து விட்டேன்.

சமர்ப்பணம்

2005 ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றதிலிருந்து, நிதானமாக நேரத்தை செலவிட, இணைய (INTERNET) இணைப்புடன் கூடிய பல அம்சங்களுடன் கூடிய கணினியை கொடுத்ததும் இல்லாமல்,  அவ்வப்போது அவற்றின் தரத்தை மாறுதல்களுக்கு ஏற்ப மேம்படுத்தி கொடுத்து, எழுத்துக் கலையைத் தொடர என்னை ஊக்குவித்த என் மகன் விநாயகராமனுக்கு இந்தப் புத்தகத்தை   அர்ப்பணிக்கிறேன். மேலும், பல ஆண்டுகளாக என் வேலையில் தலையிடாமல் பொறுமையாக என்னைப் பொறுத்துக் கொண்டுள்ள  என் மனைவிக்கும்  நன்றி தெரிவிக்க வேண்டும்.  இல்லை என்றால் என்னால் நிம்மதியாக பல  கட்டுரைகளை எழுதி இருக்க முடியாது.

செளந்தர்யலஹரி தோன்றிய கதை

செளந்தர்யலஹரி வெறும் வார்த்தை ஜாலங்களைக் கொண்ட ஸ்லோகமோ அல்லது கவிதை பாடலோ அல்ல.  இது  பராசக்தியைப் போற்றி ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட மந்திர சக்தி வாய்ந்த ஸ்லோகங்கள் ஆகும். தேவியின் பெருமையையும் மேன்மையையும் எவராலும்  கூற முடியாது  என்பதினால்தான் அவளுடைய மகிமையை எடுத்துரைக்கும் வகையில்  ஆதி சங்கரர்  இந்த ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். 

இதைப் படிப்பவர்களுக்கு செல்வப் பிராப்தி, அறிவாற்றல், பல்வேறு கலைகளில் கீர்த்தி மற்றும் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பதாக நம்புகின்றார்கள்.   சக்தியின் மகிமையைப் பற்றி மட்டும் அல்லாது அவளுடைய அழகைப் பற்றியும் வர்ணிக்கும் மிகச் சிறந்த மந்திர சாஸ்திர ஸ்லோகமாக இது இயற்றப்பட்டு உள்ளது.

செளந்தர்யலஹரி எப்படி இயற்றப்பட்டது  என்பதைக் குறித்த பல கதைகள் உள்ளன.  முதலில் இந்த ஸ்லோகங்கள்  மேரு மலையில்  தங்கி இருந்த புஷ்பதந்தர் என்ற பெரும் துறவியினால்  இயற்றப்பட்டது என்றும்  அதை ‘ஆதி சங்கரரின்’ குருவான, ‘கௌத்தபாத பாகவத்பாதாவின்’ குருவான, ‘கௌத்தபாதச்சார்யா ‘ என்பவரால் மனப்பாடம் செய்யப்பட்டு, அவர் மூலம் குரு வழி போதனையாக, அவரது சீடரான ‘கௌத்தபாத  பாகவத்பாதாவின்’  மூலம் ஆதி சங்கரருக்கு  கிடைத்தது என்பதாக முதல் கதை ஒன்று உள்ளது.

 இன்னொரு செய்தியின்படி,  கையிலையில் சிவாலயத்தின் மதிற் சுவரில் இந்த ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் அப்போது மேரு மலையில் இருந்த கெளடபாதர் அதை மனப்பாடம் செய்து, குரு வழி  போதனை மூலம் ஆதி சங்கரருக்கு கிடைக்க வைத்தார் என்பதாகவும்  செளந்தர்யலஹரியினை தமிழாக்கிய  கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.

மூன்றாம் கதை என்ன எனில், ஆதி சங்கரரே இதனை கைலாசத்திலிருந்து கொண்டு வந்தார் என்பதே. ஆதி சங்கரர் பல ஊர்களுக்கும்  சென்றவாறு இருக்கையில் கைலாயத்தையும் அடைகிறார். அங்கு அவருக்கு ஈசன் மற்றும் உமையவளின் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் ஆதி சங்கரருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களை தந்தார்.  சிவபெருமான் ஆதி சங்கரருக்கு லிங்கங்களை தந்ததைக் கண்ட  உமையவளும்  தனது பங்கிற்கு ஆதி சங்கரருக்கு தனது கையில் இருந்த ஒரு கட்டு ஓலை சுவடிகளைத் தந்தாள். அந்த சுவடிகளில் தேவியைக் குறித்து எழுதப்பட்டு இருந்த மந்திர சாஸ்திரமான நூறு (100) ஸ்லோகங்கள் இருந்தன. அவற்றைப் பெற்றுக் கொண்ட ஆதி சங்கரர் கையிலாசத்தை விட்டு வெளி வந்தார். ஆதி சங்கரர் ஓலை சுவடுகள் மற்றும் லிங்கங்களுடன் கைலாசத்தை விட்டு வெளி வந்தபோது அங்கு வாயிலில் அமர்ந்து இருந்த நந்தி தேவர் அவற்றைக் பார்த்தார். கயிலையின் மிகப் பெரிய புதையலான மந்திர சாஸ்திரம் கயிலையை விட்டுப் போகிறதே என்று சினம் கொண்ட நந்தி தேவர் கோபத்துடன் சங்கரர் கையில் இருந்த சுவடுகள் கட்டை பிடித்து இழுத்தார்.   நந்தி தேவர் ஆதி சங்கரர்  கையில் இருந்த ஓலை கட்டை இழுத்தபோது அனைத்து சுவடிகளையும் கைப்பற்ற முடியவில்லை. ஆதி சங்கரர் கையில் ஒரு பகுதி சுவடி தங்கி விட்டது, மீதி கயிலையின் வாயிலில் விழுந்து விட்டது.  நந்தி தேவரிடம் பறிகொடுத்த சுவடிகளை கவனிக்காமல் பூமிக்குத் திரும்பிய ஆதி சங்கரரிடம் சுவடிகளில் இருந்தவை  நாற்பத்தி ஒரு (41) ஸ்லோகங்கள் மட்டுமே. ஆகவே செளந்தர்ய லஹரி முழுமை பெறவேண்டும் என்றால் விடுபட்ட மீதி ஐம்பத்தி ஒன்பது (59) ஸ்லோகங்களும் மீண்டும் புதியதாக இயற்றப்பட்டு அதனுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தேவி,  ஆதி சங்கரர் முன் பிரத்யஷமாகி நடந்தக் கதையைக் கூறி விட்டு மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் அவரையே புதிதாக இயற்றுமாறு ஆணையிட்டார். அவ்வளவுதான் உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல ஆதி சங்கரர் வாயில் இருந்து அன்னையை  போற்றிப் பாடும்    ஸ்லோகங்கள் வெளிவரத் துவங்க அவைகளே  59 புதிய ஸ்லோகமாக உருவெடுத்தது. அதுவே  செளந்தர்ய லஹரி என கருதப்பட்டது.

நான்காம் கதை என்ன என்றால் ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார் என்பதற்கு கூறப்படும் கிராமியக் கதை இது.  ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரத்துக்கு சென்று இருந்தபோது அவர் ‘விசார்னாக்’ எனும் இடத்தில் தமது சிஷ்யர்களுடன் தங்கி இருந்தார். அவருக்கு தங்க ஏற்பாடுகள் செய்திருந்தவர், சமையல் செய்து கொள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருந்தாலும் அடுப்பை எரிக்க எந்த சாதனமும் (தீப்பெட்டி, எரியும் விளக்கு போன்றவை) வைத்திருக்கவில்லை. அதனால் அவர்களால் இரவு அடுப்பை மூட்டி சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க ஒரு பெண்மணியை அனுப்பி இருந்தார். சமையல் செய்ய வந்த பெண்மணி அடுப்பை எரிக்க எந்த சாதனம் அங்கு இல்லை என்பதினால் அடுப்பை மூட்டித் தருமாறு விருந்தாளிகளை வேண்டிக் கொள்ள, ஆதி சங்கரர் முதல் யாராலும் தீப்பெட்டி இல்லாமல் அடுப்பை எரிய வைக்க முடியவில்லை. அதைக் கண்ட பெண்மணி இரு குச்சிகளை எடுத்து உரசினாள். அதில் இருந்து வெளியான தீப்பொறி மூலம் சமையல் அடுப்பை பற்ற வைத்து  சமையல் செய்தார். அதைக்  கண்ட ஸ்ரீ ஆதி சங்கரர் திகைத்தார். அது மட்டும் அல்ல. அந்தப் பெண்மணி நன்கு கற்றறிந்தவர், தன்னுடன் ஆன்மீக தர்க்கம் செய்ய விரும்பினாள் என்பதினால் அவளுடன் சுமார் பதினேழு நாட்கள் சக்தியின் மகிமை மற்றும் பிற ஆன்மீக விஷயங்கள் குறித்து தர்க்கம் செய்தார். அந்தப் பெண்மணி சக்தியின் மேன்மை குறித்து எழுப்பிய  பல விளக்கங்களுக்கு ஸ்ரீ ஆதி சங்கரரால் பதில் கூற முடியவில்லை.  இறுதியில் அவளே சக்தி என்பதை உணர்ந்து கொண்டவர், சக்தியின் மகிமையை புரிந்து கொண்டு,  சக்தி தேவி இன்றி சிவனுக்கு தனி சக்தி இல்லை என்பதையும்  உணர்ந்தார். அதை அவருக்கு புரிய வைக்கவே பார்வதி தேவி ஒரு பெண் உருவில் அங்கு வந்து அப்படி ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதாக பண்டிதர்கள் நம்பினார்கள். அதன் பிறகே  ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினாராம்.

இந்தக் கதை, பீஹார் மாநிலத்தில் உள்ள மகிஷ்மதி நகரில் மந்தன மிஸ்ரா மற்றும் அவரது மனைவி குமாரி மிஸ்ராவுடன்  ஆதி சங்கரர் நடத்திய விவாதத்தைப் போன்றது. அந்தப் போட்டியில் அவர்கள் இருவரையும் ஆதி சங்கரர் தோற்கடித்தார் என்றாலும், காஷ்மீர் பெண்மணியுடன் நடந்த விவாதத்தில் அவரால்  வெற்றி பெற முடியவில்லை.

ஸ்ரீ சக்கர வழிபாடு : அதன்  மகிமைகள்

யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடியதுமானது  யந்திரம்  ஸ்ரீ சக்கரம் ஆகும். ஸ்ரீ சக்கரம் மற்ற யந்திரங்களை போன்றது அல்ல, அது  எந்த கெடுதல் விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. ஸ்ரீ சக்கரம் வீட்டில் வைத்தால் நல்லது. யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடியதுமான  யந்திரம்  ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும். சில குறிப்பிட்ட காரண காரியங்களுக்காக அதையே  ஸ்ரீ வித்யா பூஜை என்ற பெயரில் விஸ்தாரமாக செய்வதும் உண்டு. ஸ்ரீ சக்கரம் என்பது ஆதி பராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.

அப்படிப்பட்ட  சக்தி வாய்ந்த பராசக்தியை உபாசித்தோ அல்லது முறையான பூஜை செய்தோ  பராசக்தியின் அருளை பெறுகின்றவர்கள் வெகு காலம் ஜீவித்து இருப்பார்கள். கல்பத்துக்கு முடிவு ஏற்பட்டாலும், அவர்களுடைய ஆத்மாவுக்கு (ஜீவனுக்கு) முடிவில்லை. கல்ப ஜீவிகள் என்றே அவர்களை கூற வேண்டும். உருவமுள்ள எந்த பொருளுக்கும் அழிவு உண்டு.  ஆனால் உபாசகர்கள் சரீரம் என்ற உருவத்துடன் இருந்தவாறு பராசக்தியை  ஸ்ரீ சக்கர உபாசனை செய்து அவளது அருளை பரிபூரணமாக பெற்று விட்டால், அவர்களுடைய சரீரம் அழியலாம், ஆனால் அவர்கள் ஆத்மாவுக்கு அழிவில்லை என்பதே  ஸ்ரீ சக்கர உபாசனையின்  மகிமை ஆகும் என்பது  ஐதீகம்.  ஸ்ரீ சக்கர தேவியின் பெருமையையும், மேன்மையையும் கூறும் லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அனு தினமும்  படித்து, பராசக்தியை பூஜிக்கும் சாமானியர்களுக்கு சர்வ சௌபாக்கியம் கிட்டும் என்பது உண்மை ஆகும். அவர்களது வீடுகளில் உள்ள துர் தேவதைகள் ஓடி ஒளிந்து கொள்ளும், வியாதிகள் விலகும், சத்ருக்கள் அழிவார்கள், மன அமைதி கிடைக்கும். ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யாவுக்கு நிகரான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகை எனும் பராசக்திக்கு மேலான தெய்வமோ இல்லை என்பது அனைத்து மகான்களாலும், பண்டிதர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து ஆகும்.

பலருக்கும் ஒரு சந்தேகம் உண்டு. ஸ்ரீ சக்கரமும், ஸ்ரீ மஹா மேரு எனப்படும் யந்திரமும் ஒன்றே தானா இல்லை வெவ்வேறானவையா என்பதே அந்த சந்தேகம். உண்மை என்ன என்றால் இரண்டுமே ஒன்றுதான். ஸ்ரீ மஹா மேருவின் சமதளப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம் என்பதாகும். ஸ்ரீ சக்கர யந்திரத்தை கோடுகளாக வரைந்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு மலை போன்ற அடுக்கடுக்கான நிலையிலான முப்பரிமாண உருவ வடிவம் கொடுத்தால் அது ஸ்ரீ மஹா மேரு எனவும்  கூறப்படும். பார்வைக்கு சாதாரணக் கோடுகளும் முக்கோணங்களுமாகத் தெரியும் ஸ்ரீ சக்கரம் ஆதி பராசக்தியின் இருப்பிடம் மட்டுமல்ல, சர்வ சக்தியும் இதில் அடக்கம் என்பதே இதன் மகிமை.

பண்டாஸுர வதத்திற்குப் பிறகு ஸ்ரீபுரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லா தேவதைகளும் சூழ்ந்திருக்க தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் லலிதாம்பிகை எனும் பராசக்தி வீற்று இருக்கையில் ஒரு சிறிய விஷயத்திற்காக உக்கிரம் அடைந்த தேவியின் முகத்தில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளி வந்து அவள் முன் நின்றபோது அந்த தேவதைகளை நோக்கி தான் யார், தன் சக்தி எப்படிப்பட்டது என்பதை அனைவருக்கும் கூறுமாறு தேவி கூற, அதன்படி வசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ஆயிரம் நாமங்களைக் கொண்ட ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். பராசக்தி உக்கிரத்தைத் தணிக்க பரமேஸ்வரர்  அந்த உக்கிரக் கலையையே ஸ்ரீ சக்கரமாக ஸ்தாபித்து, ஆகர்ஷித்து பராசக்திக்கு எதிரில் வைத்து அவளை சாந்தப்படுத்த, பராசக்தி   லலிதாம்பிகையாக உருமாறி உலகிற்கு காட்சி தந்தாள். சிவபெருமானால் சாந்தம் அடைந்த தேவி அந்த ஸ்லோகத்தை முறைப்படி கூறி தன்னை துதிப்பவர்களுக்கு, அந்த ஸ்லோகமே தன்னிடம் வந்தடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறி ‘என் கட்டளைக்கு ஏற்பவே இந்த தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். என்னுடைய அருளை வேண்டி இதை படிப்பதுடன் பிற பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் எனது அருளை பெறுவதற்கு இந்த சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் போதுமானது’ என்பதாக கூறினாளாம். அதனால்தான் அம்பிகையின் பேரருளை பெற வேண்டும் என என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூற வேண்டும் என்பதாக கூறப்படுகின்றது.

தேவி லலிதாம்பிகையை போற்றி வாக்கு தேவதைகள் துதித்தவைகளே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று. ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்தால் மட்டும் போதுமா? அதற்குள் உள்ள தேவி யார், அவளது மேன்மை என்ன என்பதை பூவுலகிற்கு யார் மூலம் தெரியப்படுத்துவது என்ற நிலை எழுந்தபோது அதற்கு ஹயக்ரீவரும், அகஸ்திய முனிவரும் தேவைப்பட்டார்கள். லலிதா சஹஸ்ரநாமத்தை அகஸ்திய முனிவருக்கு மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர் ஒரு சம்பாஷணை வடிவில் ரகசியமாக உபதேசித்தார் என்பதாக திருமயிச்சூர் ஆலய வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. ஹயக்கிரீவர் அகஸ்திய முனிவரிடம் லலிதா மகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறினார். ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து உள்ள அம்பிகையின் இருப்பிடமான ஸ்ரீபுரத்தின்  மேன்மையை விவரித்தார், அம்பிகையை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையை கூறினார், அந்த ஸ்ரீ சக்கரத்தில் உள்ள தெய்வ, தேவதைகளைப் பற்றி கூறினார். அந்த சம்பாஷணையில் அகஸ்திய முனிவர் ஹயக்கிரீவரிடம் மீண்டும் மீண்டும் லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களை குறித்த மேன்மையை கேட்டு அறிந்து கொண்டார். ஞானத்தின் அடையாளமான ஹயக்ரீவர் நேரடியாக அகஸ்திய முனிவருக்கே லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார் என்பதில் இருந்தே அது எத்தனை மகிமையான ஸ்லோகம்  என்பது விளங்கும். லலிதா சஹஸ்ரநாமம் என்பது என்ன என்றால் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கொண்ட ஸ்லோகங்கள். ‘சஹஸ்ர’ என்றால் ஆயிரம் மற்றும் நாமம்’ என்றால் பெயர்கள் என்பதினால் லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வதை லலிதா சகஸ்ரநாம பூஜை என்கின்றார்கள்.

சகஸ்ர நாமாக்களில் உயர்ந்தது வாக் தேவிகளால் இயற்றப்பட்ட லலிதா ஸகஸ்ரநாமமாகும். இதில் உள்ள வார்த்தைகள் சத்தியமானவை, மந்திர சக்தியுடையவை. இது எல்லா நோய்களையும் விலக்கும், செல்வத்தையும் நீண்ட ஆயுளும் தரும். ஸ்ரீ வித்யா உபாசனையால் சாதகனுக்கு ஞானம், எதையும் வெல்லும் ஆற்றல், வாக்கு வல்லமை போன்றவை கிட்டி, முக்தியும் கிடைக்கும். பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில் லலிதாபாக்கியத்தின் 36வது அத்தியாயத்தில் தேவியின் மேன்மையைக் கூறும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் உள்ளது.   லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொரு முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது.  அதில் தேவியின் ஸ்வரூபம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபடத்தக்க யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக் கூடிய மேன்மைகள் ஆகியவைகளை பரமேஸ்வரியின் வாயில் இருந்து வெளிவந்த வாக் தேவதைகளே கூறுவதால் லலிதா சஹஸ்ரநாமம் வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

பொதுவாக  சம தளத்தில்  உள்ள யந்திரமான ஸ்ரீ சக்கரத்தை வீடுகளில் வைத்து  சுலோகம் சொல்லி பூஜிக்கலாம், ஸ்ரீ சக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து, விதி முறைப்படி வழிபடுவது அவசியம்.  ஆனால் மகாமேரு உருவத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்தை குருவின் உபதேசம் இல்லாமல் வீடுகளில் பூஜை செய்யக் கூடாது. அதனால்தான் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ஸ்ரீ சக்கரம் பெரும்பாலும் மேரு சக்கர உருவில்  இருக்கும்.    ஸ்ரீ சக்ரம், மேரு மற்றும் யந்திரங்களை முறைப்படி உபதேசம் பெற்றுக் கொண்டு  அதை வீட்டில் வைத்து தியானமோ, ஜெபமோ செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும். சில  எந்திரங்களை நாம் வீட்டில் வைத்துவிட்டு ஏனோதானோ என்று இருந்தால் அவை விபரீதமான பலன்களை தரும்.

ஸ்ரீ சக்கரத்தை சுற்றி அறுபத்தி நான்கு (64 ) கோடி தேவதைகள் வீற்று இருக்க, அந்த ஸ்ரீ சக்கரத்தில் உள்ளேயோ நூற்று பதிமூன்று தேவதைகள் வாசம் செய்கிறார்கள், ஆராதிக்கப்படுகின்றார்கள். அன்னை லலிதாம்பிகை எனும் ஜகன்மாதா தனது நாயகனான சிவபெருமானுடன் ஒன்றிணைந்து அருள் பாலிக்கும் இடம்  நடுவில் உள்ள பிந்து எனப்படும் ஸ்ரீபுரம் ஆகும். அந்த பரமேஸ்வரியே ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் ஸ்ரீ சக்கர தேவியாக உள்ளாள் என்பதினால்தான் ஸ்ரீ சக்கர பூஜையை செய்யும்போது பரமேஸ்வரியின் அனுகிரகத்தை பெற நடுவில் உள்ள பிந்துவில்தான் பூக்களையும், குங்குமத்தையும் போட்டு பூஜிக்க வேண்டும் என்பார்கள்.

அம்ருத கடலின் நடுவில் கல்ப விருக்ஷங்களினால் சூழப்பட்ட மணித்வீபம் என்ற தீவில் சிந்தாமணி ரத்தினத்தால் அமைக்கப்பட்டு உள்ள தேவியின் வாசஸ்தலம்  ஸ்ரீ சக்கரத்தின் பிந்து ஸ்தானம் போன்ற இடம் ஆகும். சிந்தாமணி எனும் ரத்தினம் சாதாரணமானது அல்ல. அது தன் அருகில் வந்தவர்களுக்கு அளவற்ற பொருளை கொடுப்பதும் அல்லாமல் ஒவ்வொரு தினமும் அளவற்ற ரத்தினத்தை உற்பத்தி செய்து ஸ்வர்க லோகத்தை நிரம்பி விடும் தன்மையைக் கொண்டது என்பதினால், அந்த சிந்தாமணி மீது அமர்ந்துள்ள தேவியை துதிக்கும் பக்தர்களுக்கு அளவற்ற பாக்கியத்தை கொடுப்பாள் என்பது உண்மை. 

ஸ்ரீ சக்கரத்தை தொடர்ந்து வழிபட்டு வருகையில், இறுதியில் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைவதை சாத்தியமாக்குகிறது.  அதாவது தனி நபருடைய ஆத்மாவானது இறைவனுடன் ஒன்றிணைந்து விடும் நிலைக்கு அழைத்துச் சென்று பிறப்பின்மை எனும் நிலையை தந்து விடும். இந்த இணைப்பு முழுமையடைவதற்குத் தேவையான ஆன்மீக சக்தியை  சாதகர்கள் பெறுவதற்கும்,  சாதகர்  தூய்மையடைந்து பரமாத்மனுடன் (தெய்வீக நிலை) ஐக்கியமாக முழுத் தகுதியைப் பெறுவதற்கும், சாதகர்களுக்கு வழிகாட்டி அருள் புரிவதில், யோகினிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  ஒரு குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீ சக்கர பூஜையைக் செய்பவர்கள் இந்த உலகில் மகா பாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீ வித்யா. அத்தகைய மகத்துவம் பெற ஸ்ரீ சக்கரத்தில் என்னென்ன சக்திகள் அடங்கி உள்ளன?

ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டை மதில்களை கொண்டது. அந்த  ஒன்பது ஆவரணங்களும்  ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்துள்ளன. ஆவரணம் என்பதை தடுப்பு அல்லது சுவர் என்று கூறலாம். அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றி கோட்டை மதில்களை அமைத்து உள்ளதை போல தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ சக்ரபுரம் என்னும் அரண்மனையை  சுற்றி ஒன்பது கோட்டைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோட்டையையும் யுத்த வீரர்கள் காப்பது போல அன்னையின் வாசஸ்தலத்தை சுற்றி பல தோற்றங்களைக் கொண்ட 64 கோடிக்கும் மேற்பட்ட தேவதைகள், பெண் யோகினிகள் மற்றும் பல தெய்வங்கள் அமர்ந்து உள்ளார்கள்.  முதல் சுற்றில் காணப்படும் சித்தி பெற்ற ஆவரண தேவதைகளில் எட்டு (8) ஆவரண தேவதைகளான அனிமா, மஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாம்யம், வசித்வம், ஈஸித்வம் எனும் எட்டு தேவதைகள் முக்கியமானவர்கள். அவளது சக்தியில் இருந்தே வெளியானவர்கள். ஸ்ரீ சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ர தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவார தேவதைகள், மற்றும் சித்தி  தேவதைகள் உள்ளனர். ஸ்ரீ சக்கரத்தில் உள்ள யோகினிகள் என்பவர்கள் யார்? அவர்கள் அனைவருமே பராசக்தியின் பல்வேறு அவதாரங்களால் படைக்கப்பட்டவர்கள்.  அதில் உள்ள மாத்ரு தேவதைகள்  பராசக்தியின் இன்னொரு அவதாரமான துர்கா தேவியினால் அவளுடைய பல்வேறு அவதாரங்களில் யுத்தங்களில் அவளுக்கு உதவுவதற்காக படைக்கப்பட்டவர்கள். அவர்களில் பலரும் லலிதாம்பிகை தேவியின் பண்டாஸுர யுத்தத்தில் பங்கேற்று உள்ளார்கள். அவர்கள் சாந்தமான மற்றும் உக்ரஹ குணங்களைக் கொண்ட பெண் தேவதைகள் எனப்படும் மஹா வித்யாவின் தேவதைகளாக இருக்கின்றார்கள். அவர்களின் முகத்தில் நீட்டிக் கொண்டுள்ள பற்களோ, பல கண்கள் போன்றவையும் இல்லை. இறக்கைகள் அல்லது அசாதாரண உடல் அமைப்புக்கள் இல்லை. மாறாக அவை சாந்தமாகவே காட்சி அளிக்கின்றன. யோகினிகள் என்பவர்கள் பெண் கடவுட்களில் இருந்து வெளிப்பட்டவர்கள். அவர்களும் சாந்தமான மற்றும் உக்ரஹ குணங்களைக் கொண்டிராத பெண் தேவதைகள். மகா வித்யாவின் யோக மற்றும் தந்திரக் கலை பயிலும் தேவி உபாசகர்கள் யோக சக்தியை அடைய இந்த தேவதைகளையே ஆராதிக்கின்றார்கள். ஸ்ரீ சக்கரத்தின் மேன்மையை இதற்கும் மேல் எப்படி கூற இயலும்?

ஸ்ரீ சக்கர அமைப்பு

 ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பு என்ன?  ஸ்ரீ சக்கரம் பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டும்  வடிவியல் படமாகும். இது ஆண் மற்றும் பெண் தெய்வங்களின்- சிவன் மற்றும் சக்தியின்-  ஒன்றிணைப்பை குறிக்கின்றது.  இதில்  ஆவரணங்கள் எனப்படும் பல அரண்கள் (கோட்டைகள்) உள்ளன.   ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது. மைய பகுதியில் உள்ள பிந்துவை சுற்றி நாற்பத்தி மூன்று (43 ) முக்கோணங்கள் மற்றும் இருபத்தி நான்கு (24 ) தாமரை இதழ் போன்ற அரண்கள் உள்ளன. அவற்றை சுற்றி மூன்று மதில்களை போன்ற வட்ட வடிவமும், நான்கு வாயில்களைக் கொண்ட சதுரங்க கட்டங்களும் காணப்படும்.

அந்த பிந்துவின் மைய பகுதியில் இருந்து அதன் மீது நேரான பாதையில் மேல் நோக்கிய நிலையில் காணப்படும் நான்கு முக்கோணங்கள் சிவ கோணங்கள். அதாவது ஆண் சக்தியைக் குறிக்கும் கோணங்கள். அதை போலவேதான் கீழ் நோக்கிய நிலையில் காணப்படும் ஐந்து முக்கோணங்களை சக்தி கோணங்கள் என்பதாக கூறுகின்றார்கள். பிந்துவை சுற்றி உள்ள அந்த ஒன்பது முக்கோணங்கள் சிவ சக்தியைக் குறிப்பதாக கூறுகின்றார்கள்.

ஸ்ரீ சக்கரம் எனப்படும் மஹா மேருவை மேரு பிரஸ்தாரம், கைலாச பிரஸ்தாரம் மற்றும் பூ பிரஸ்தாரம் என்ற மூன்று பிரிவுகளில் கூறுகின்றார்கள். ஒவ்வொரு ஆவரணத்திலுள்ள, ஆவரணத்தை ஆட்சி செய்வதற்காக, சக்ரேஸ்வரி என்று அழைக்கப்படும் ஒரு அதி தேவதை இருக்கின்றாள். அவளுடன்  இணைந்தே அங்குள்ள பல்வேறு தேவதைகளும் யோகினிகளும் அன்னை லலிதாம்பிகையை அடையும் வழியில் பாதுகாவலர்களாக உள்ளார்கள். மந்திர உச்சாடனைகள் செய்து அவர்களை திருப்திபடுத்திய பின்னரே, சாதகர்களால் ஒவ்வொரு ஆவாரணத்தையும் கடந்து சென்று மைய பகுதியான ஸ்ரீ புறத்தின் வாயிலை அடைய முடியும். ஸ்ரீ சக்கரத்தின்  முப்பரிமாண அமைப்பு மேரு பிரஸ்தரம் என்று அழைக்கப்படுகிறது. பூமியில் ஒரு தட்டையான மேற்பரப்பில் வரையப்படும் ஸ்ரீ சக்கரம் பூ-பிரஸ்தரம் என்று அழைக்கப்படுகிறது. கைலாச பிரஸ்தரம் என்பது மேரு யந்திரத்தின் மிக உயர்ந்த நிலை அல்லது தளத்தைக் குறிக்கிறது.

ஸ்ரீ சக்கரத்தின் நுழை வாயிலான சதுர வடிவிலான  கோட்டை முதலாவது ஆவரணம் எனப்படும். அதை  ‘த்ரைலோக்ய மோகன சக்கரம்’ அல்லது ஸ்ரீபுரம் என்ற பெயரைக் கொண்டது. த்ரைலோக்ய மோகனம் என்றால் மூவுலகங்களையும் மயக்குவது என்று பொருள்.  இதில் உள்ள ஒவ்வொரு கோடும் ரேகை எனப்படும். முதல் ரேகையில்  மஹா  சித்தி தேவதைகளான அனிமா, மஹிமா, லஹிமா, இசித்வா, வசித்தவ, பிரகாம்யா, புத்தி  சித்தி,  இச்சா சித்தி, சர்வகாமா சித்தி   மற்றும் பிராப்தி சித்திகள் இருக்க இரண்டாம் ரேகையில் பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்திரி, சாமுண்டி, மற்றும் மகாலட்சுமி போன்ற  எட்டு அஷ்ட மாதாக்களும் இருக்க,  மூன்றாம் ரேகையில்  சர்வ சம்ஸ்கோபினி, சர்வ வித்ராவினி, சர்வ த்ரவினி, சர்வ கர்ஷினி, சர்வோன் மாதினி, சர்வ மஹாங்குசா, சர்வ கேசரி, சர்வ பீஜ, சர்வ யோனி மற்றும் சர்வத் ரிகண்டா  என்ற பத்து முத்ரா தேவதைகளும் காவலில் இருக்க, இங்கு மொத்தம் இருபத்தி எட்டு (28) தேவதைகள் உள்ளார்கள்.   முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும், எந்த சக்தியாலும் இடையூறு ஏற்படாது, நினைவாற்றல் பெருகும்.

அதே ஆவரணத்தின் அடுத்து உள்ள வட்ட வடிவிலான ஆவாரணத்தில் இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதிதேவன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு திக்கின் அதிபதிகள் உள்ளார்கள். அந்த வட்ட வடிவிலான ஆவரணத்தை ‘த்ரிவாலயம் அல்லது மேகலை’ என்பதாக கூறுகின்றார்கள்.

பதினாறு (16) தாமரை போன்ற இதழ்களைக் கொண்டது  இரண்டாவது ஆவரணம் சக்கரம் ஆகும். இதன் பெயர் ‘ஸர்வஷா பரிபூரக அல்லது பூராக  சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவரணத்தில் உள்ள தாமரை இதழ்கள் ஒவ்வொன்றும் பதினாறு ஆகர்ஷண சக்தி யோகினிகள் காவலில் உள்ளனர். அவர்களில் முக்கியமான சில சக்தி யோகினிகள் காம கர்ஷினி, புத்ய கர்ஷினி, அஹங்கார கர்ஷிணி, சப்த கர்ஷினி, ஸ்பர்ஷ கர்ஷினி, ரூப கர்ஷிணி, ரஸ கர்ஷினி, காந்த கர்ஷிணி, சித்த கர்ஷினி, தைர்ய கர்ஷினி, சம்யுக்த கர்ஷினி,  நாம கர்ஷினி, பீஜ கர்ஷினி, ஆத்ம தர்ஷினி, அம்ருத தர்ஷினி  மற்றும் ஸ்ரீரா கர்ஷினி என்பவர்கள் ஆகும். இந்த சக்கரத்தை வழிபடுவதன் மூலம் அனைத்து விருப்பங்களும், நிறைவேறும். இங்குள்ள பதினாறு யோகினிகளும் அடுத்த ஆவரணத்தை அடையத்  துடிக்கும் சாதகர்களின் மன அழுக்கை நீக்குகின்றனர் என்பது ஐதீகம்.  ஸர்வஷா பரிபூரக சக்ரம் என்றால் அனைத்து நம்பிக்கைகளும் எண்ணங்களும் நிறைவேறுதல் என்று பொருள்.

மூன்றாவது ஆவரணத்தில் எட்டு தாமரை இதழ்கள் உள்ளன. இந்த ஆவரணம் ‘சர்வ சம்ஷோபன சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு இதழ்களிலும் எட்டு உக்ர  தேவதைகள் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் வசுக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அனங்க குசுமா, அனங்க மேகலா, அனங்க மதன, அனங்க மதனதுரா, அனங்க ரேகா, அனங்கவேகினி, அனங்க குசா மற்றும் அனங்கா மாலினி என்ற பெயர்களைக் கொண்ட எட்டு மகா உக்ர தேவதைகள் ஆவார்கள். இந்த சக்கரத்தை வழிபடுவதின்  மூலம் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.

‘சர்வ ஸௌபாக்ய தாயகம்’ எனப்படும் நான்காவது ஆவரணம் பதினான்கு (14) சிறிய முக்கோணங்களால் சூழப்பட்டுள்ளது. அவை அனைத்தும்  யோகினிகள் மற்றும் சக்தி தேவிகளின் காவலில் உள்ளன. அவர்கள் நாடி தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பதினான்கு நாடி தேவதைகள் சர்வ சங்கோபினி, சர்வ வித்ராவினி, சர்வ கர்ஷினி, சர்வ கிளத்தினி, சர்வ சம்மோஹினி, சர்வ ஸ்தம்பினி, சர்வ ஜ்ரும்பினி, சர்வ சங்கரி, சர்வ ரஞ்சனி, சர்வோன் மதினி, சர்வ த்வந்த்வக்ஷயங்கரி. சர்வ மந்திரமய், சர்வ சம்பத்  பூர்ணி மற்றும் சர்வ வஷாங்கரி என்பவர்கள் ஆவார்கள்.

ஐந்தாவது ஆவரணத்தின் பெயர் ‘சர்வார்த்த சாதக ஆவரணம்’ என்பதாகும். இது மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எதிர் கொள்ளும் பத்து முக்கோணங்களைக் கொண்டுள்ளது. இதில் பத்து யோகினிகள்  பத்து முக்கோண வாயிலை  காவல் காத்தபடி உள்ளார்கள். அவர்களது பெயர்கள் சித்தி ப்ரதா, சர்வ ஸம்பத்ப்ரதா, சர்வ பிரியங்காரி, சர்வ மங்களகாரிணி, சர்வ காம ப்ரதா, சர்வ துக்க விமோசனி, சர்வ ம்ருத்யுப்ரசாமணி, சர்வ விக்னனிவாரிணி, சர்வங்க சுந்தரி, சர்வ சௌபாக்யதாயினி என்பன.  மையத்தில் இருந்து கீழ் நோக்கிய நிலையிலான ஐந்து முக்கோணங்கள் சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி போன்ற தேவிகளையும், மேல் நோக்கிய நான்கு முக்கோணங்களும் சிவபெருமானின் நான்கு முகங்களான தத்புருஷா, சத்யோஜாதா, அகோர, வாம தேவம் மற்றும் மறைந்துள்ள ஈசான சக்தியையும்  குறிக்கின்றன.   சிவபெருமானின் இந்த நான்கு  முகங்களைத் தியானிப்பதாலோ அல்லது வழிபடுவதாலோ, வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் அடையலாம், மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்பது பிரம்மாவின் வாக்குறுதியாகும்.

ஆறாவது ஆவரணமும் பத்து முக்கோணங்களைக் கொண்டது. இந்த ஆவரணம் ‘சர்வ ரக்ஷகரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவரணத்தில் பத்து ஆவரண தேவதைகள் வசிக்கிறார்கள். இங்குள்ள சக்தி தெய்வங்கள் சர்வக்னி, சர்வ சக்தி, சர்வைஸ்த்வர்ய ப்ரதா, சர்வ ஞானமயீ, சர்வவ்யதி வினாஷினி, சர்வ தாரா ஸ்வரூப, சர்வ பாபஹாரா, சர்வ நந்தமயி, சர்வரக்ஷ ஸ்வரூபிணி மற்றும்  சர்வேப்சிதார்த்த பலாதா போன்றவர்கள் ஆவார்கள்.     

ஏழாவது ஆவரணம் எட்டு முக்கோணங்களைக் கொண்ட ‘சர்வ ரோஹஹரம்’ எனப்படும். வாசினி, கௌமாரி, மோகினி, விமலா, அருணா, ஜைனி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய தேவதைகள் காவலில் உள்ளார்கள்.

எட்டாவது ஆவரணம் ‘சர்வ சித்தி பிரத சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.  இதில் ஏழு அஸ்திர தேவதைகள் அல்லது யோகினிகள் காவலாக நிற்கிறார்கள். அவர்கள் போர் தேவதைகள். அவர்கள் ஜாம்பனாக்யா, மோகனாக்யா, வஷ்யக்யா, ஸ்தம்பனாக்ய அனுக்ஷா, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு மனிதனை அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் மாயை இந்தச் சக்கரத்தை வழிபடுவதன் மூலம் எரிந்து சாம்பலாகிறது.

ஒன்பதாவது ஆவரண சக்கரத்தை  பிந்து என்று அழைப்பார்கள். அதற்குப் பெயர் பிந்து ஸ்தானம் என்பதாகும். இந்த ஆவரணத்தை ‘சர்வானந்தமய சக்ரா’ என்றும் அழைப்பர். பராசக்தி மற்றும் பரமேஸ்வரர் இருவரும் சிவ-காமேஸ்வரி, சிவ-காமேஸ்வரர் என்ற பெயரில் இந்த பிந்துவில் வசிக்கிறார்கள். அவர்களை  பதினைந்து திதி தேவதைகள் பாதுகாத்தபடி உள்ளார்கள். திதி தேவதைகள் என்பவர்கள் காமேஸ்வரி நித்யா, பகமாலினி நித்யா, நித்யக்லின்னா நித்யா, பேருண்டா நித்யா, வந்நிவாசினி நித்யா, மஹாவஜ்ரேஸ்வரி, சிவதூதி நித்யா, த்வரிதா நித்யா, குலசுந்தரி நித்யா, நித்யா நித்யா, நீலபதாகா நித்யா, விஜயா நித்யா, ஸர்வமங்களா நித்யா, ஜ்வாலாமாலினி நித்யா மற்றும் சித்ராதேவி நித்யா என்பவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு பௌர்ணமியும்  துவங்கி, அமாவாசை -, அமாவாசை முடிந்து  மீண்டும் பௌர்ணமி துவங்கும் ஒவ்வொரு நாளும் (ஒவ்வொரு திதிகளிலும்)  முப்பது நாட்களும் ஒவ்வொரு திதி தேவதைகள்  காவலில் உள்ளார்கள். அவற்றின் விவரம்:

  1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
  2. துவதியை –பகமாலினி நித்யா
  3. திரிதியை – நித்யக்லின்னா நித்யா
  4. சதுர்த்தி – பேருண்டா நித்யா
  5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா
  6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
  7. ஸப்தமி – சிவதூதி நித்யா
  8. அஷ்டமி – த்வரிதா நித்யா
  9. நவமி – குலசுந்தரி நித்யா
  10. தசமி – நித்ய நித்யா
  11. ஏகாதசி – நீலபதாகா நித்யா
  12. துவாதசி – விஜயா நித்யா
  13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா
  14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா
  15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா

ரோக நிவாரணி ஸ்லோகங்கள் சௌந்தர்யலஹரியில் காணப்படுகின்றன. செளந்தர்யலஹரி முழுவதுமே மந்திர  மந்திர சாஸ்திர அடிப்படையிலானது என்கின்றார்கள். இதில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகத்தையும் மந்திரமாக நினைத்து ஜபித்தால் பலன்கள் கிடைக்கும். இந்த ஸ்லோகங்களுக்கான தனி-தனி சக்கரங்கள், தியான அல்லது ஆராதனை முறைகளை குரு முலமாக உபதேசம் பெற்றே செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த ஸ்லோகங்களை தெய்வ சன்னதிகளிலோ அல்லது வீடுகளில் பூஜை அறைகளிலோ ஆராதனை முறையில் இல்லாமல் படிப்பதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. நம்பிக்கையோடு படித்தால்  தெய்வ அருள் கண்டிப்பாக கிடைக்கும்.  

………….தொடர்கின்றது : 2