நாகங்களும் அவற்றை
பூஜிப்பதின் பலன்களும்
சாந்திப்பிரியா
நாகங்கள் மாரிச்சி என்ற முனிவரின் மகனான காஷ்யப முனிவரின் பன்னிரண்டு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள் என்று புராணக் கதை ஒன்று கூறுகின்றது. தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு என்றாலும் நாகங்களில் ராகுவும் கேதுவும்தான் வழிபடப்படுகின்றன. காரணம் அவை நவகிரகங்களில் ஒன்று என்பதே . ஒவ்வொருவரது ஜாதகத்திலும் நாக தோஷம் உள்ளதா எனப் பார்ப்பார்கள். அதற்கேற்ப பரிகாரமும் செய்வார்கள். புராணங்களில்  பசுவிற்கு  அடுத்தபடியாக  நாகங்களே  முக்கிய  பெருமையைப்  பெறுகின்றன . நாகங்களில் முக்கியமானவை பத்மா, ஐந்து தலைக் கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக் கொண்ட சேஷநாக் அல்லது ஆதி சேஷன்  , சந்திரனின் பிறையை தலையில் வைத்துள்ள குளிகை எனும் குளிகா, ஏழு தலை கொண்ட பச்சை நிற வாசுகி,  தக்ஷ்யன், கார்கோடன், நீல நிற பாதி மனித உடல் கொண்ட அஸ்திகா, ஷங்கல்பலா, ஜாலமுகி , யமுனை நதியில் வாழுவதாக நம்பப்படும் கலியா, கடக் மற்றும் வாசுகியின் சகோதரி மனசா போன்றவையாம். ராகு மற்றும் கேதுவுக்கு இடையே ஏழு நாகங்கள் இருந்தால் கால சர்ப்ப தோஷம் ஏற்படும். பரிகாரம் தேவைப்படும் என்பது நம்பிக்கை.
புராணக் கதைகளின்படி வாசுகியும், ஆனந்தாவும் தம்முடைய அம்சங்கள் என அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கூறியதாகவும், சேஷ நாகமும் ஆனந்தாவும் விஷ்ணுவின் சங்குகள் எனவும் சூரியனாரின் வாகனத்தை இழுக்கும் குதிரைகளின் கடிவாளங்கள் விசேஷ சக்தி பெற்று இருந்த நாகங்கள், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிழமைக்கு அதிபதிகள் எனவும் அறிய முடிகின்றது. நாக வழிபாடு ரிக்வேத காலத்தில் இருந்தே இருந்து உள்ளது. யஜுர் வேதத்தில் கூட நாகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதனால்தான் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் பலவற்றிலும் நாகங்களை தேவதைகளாக பாதி நாக உடம்புகளுடன் உள்ள சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. கி.மூ 3000 ஆண்டுங்கள் முன்பே அதாவது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இந்தியாவின் வட பகுதிகள் பலவற்றில் நாக வழிபாடுகள் இருந்து உள்ளன. காஷ்மீரத்தில் நாக வழிபாட்டை முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
அது போலவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா  மற்றும் தமிழ் நாட்டுப் பகுதிகளில் கிராமங்களில் பெருமளவு நாக வழிபாடுகள் இருந்துள்ளன என்பதற்கு சான்றாக பல இடங்களிலும் நாக தேவதைகளின் ஆலயங்கள் மிகச் சிறு அளவில் அங்காங்கே சாலைகளில் உள்ளன. ஆலயங்களில் கூட நாக தேவதைகளின் உருவங்கள் பல விதங்களில் உள்ளன. புற்றுக் கோவில் எனப்படும் பாம்புப் புற்றை வழிபடும் ஆலயங்கள் பல உள்ளன. ராகு கேதுவுடன் பல வகையான நாகங்கள் ஆலயங்களில் காணப்படுகின்றன. பல இடங்களில் மரங்களின் அடியில் நாகங்கள் உருவம்   உள்ள பாறைகளும், அவற்றின் உருவங்கள் செதுக்கப்பட்ட கற்களும் உள்ளன. தமிழ்நாட்டில் கன்யாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அங்கு உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன்   உள்ளன. ஏன் வெளிச் சுவற்றில் மற்றும் நுழை வாயில் கோபுரத்தில்  கூட  நாக சிலையே உள்ளது அதிசயம்.
மேலும் கர்நாடகாவில் நாக தேவதைகள் கூட்டமாக உள்ள ஆலயங்கள் மிகவும் அதிகம். அங்கு நாக தேவதைகள் வாணங்கி பூஜிக்கப் படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்புப் புற்றுடன்  கூடிய நாகங்கள் அம்மனாக  பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி, போன்றவை முக்கியமானவை. அது மட்டும் அல்ல எந்த ஒரு மாரியம்மனும் புற்றை வைத்தே  முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் சில கீழே காணப்படுகின்றன.  பாம்புப் புற்றில் நாகம் உள்ளதாகக் கருதி அதில் பாலை ஊற்றியும், முட்டையை உடைத்துப் போட்டும் மாலைகள் போட்டும் பூஜைகள் செய்வார்கள்.  என்னும் சில ஆலயங்களில் ராகு மற்றும் கேதுவின் சிலைகளுக்கு பக்கத்தில் பல விதமான பாம்புகளின் தோற்றம் கொண்ட கல்வேட்டுச்  சிலைகளை காணலாம்.
நாகங்களில் நாகமணியை தன்னுடைய தலையில் வைத்து உள்ள வாசுகியே நாகங்களின் தலைவியாம். வாசுகி பற்றிய குறிப்புகள் இந்து மதப் புராணங்களில் மட்டும் அல்ல, ஜைன, புத்த, திபெத்திய , ஜப்பானிய மற்றும் சீன புராணக் கதைகளிலும் காணப்படுகின்றன. வங்காளத்தில் வாசுகியின் சகோதரியாக கருதப் படும் மானசா என்ற நாகத்தை வழிபடுவது உண்டு.
நாரத முனிவரால் சபிக்கப்பட்ட கார்கோடன் என்ற நாகம் தனது சாபத்தை நளன் மூலம் விளக்கிக் கொண்டதாக கதை உள்ளது. நேபாளத்தில் தண்டக் என்ற பகுதியில் உள்ள பெரிய எரியில் கார்கோடன் விலை மதிப்பு அற்ற  தங்க ,வைர, வைடூரிய ஆணிகலங்களுடன் தங்கி உள்ளதாக நம்பிக்கை உள்ளது. மன்னன் பரிகஷிட்டின் மகனான ஜனமேயா தனது தந்தையுடன் தக்ஷியன் என்ற நாகத்துக்கு ஏற்பட்ட பகையினால் பாம்புகளின் இனத்தையே அழிக்க யாகம் செய்தபோது அதை பல முனிவர்கள் வந்து தடுத்து நிறுத்தியதால்தான் பாம்புகள் இனம் அழியாமல் போயிற்று என புராணக் கதை உண்டு.
பாம்புகளில் தெய்வீக தன்மை வாய்ந்த நாகங்கள் உண்டு என்பதற்கு அடையாளமாக சிவன் தலையில் உள்ள நாகம், விஷ்ணு பாற்கடலில் படுத்து இருந்தபோது அவருக்கு படுக்கையான நாகம், கிருஷ்ணருக்குக் குடையாக இருந்த நாகம், பீமனுக்கு அருள் புரிந்த நாகங்கள் , அம்மன் ஆலயங்களில் அம்மன் மீது குடை பிடித்தபடி நிற்கும் நாகங்கள் மற்றும் ராகு, கேது போன்றவை காணப்படுகின்றன. மேலும் முதலில் கூறப்பட்டு உள்ள  நாகங்களும் பல இடங்களில் வழிபடப்படுகின்றன. அதனால்தான் நாகங்களுக்கும் அருள் பாலிக்கும் தன்மையை கடவுள் தந்து உள்ளார்.
விவசாயிகள் தாம் விவசாயம் செய்யும்போதும் அறுவடை காலத்தின் போது பாம்புகளினால் தீண்டபடக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் நாக பஞ்சமி விழா எடுத்து நாகங்களை பூஜிக்கின்றனர். சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவ லிங்கத்தின் மீது அது வழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பல விதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவையாகவே உள்ளன.
 புத்திர பாக்கியம் கிடைக்க ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டுமாம்.
பலப் பிராப்தி  பெற தக்ஷ்யன், குணப் பிராப்தி  பெற பத்மா, சூடினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற  நாக ஷங்கபலா எனும் ஷன்ககர்னாவையும்  வணங்கிப் பூஜிக்க வேண்டுமாம்.
பூர்வ ஜென்ம பாபம் அகல  கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும்  மோட்ஷப் பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டுமாம்.