சாந்திப்பிரியா

-8-

144) முன்காலங்களில் நான் முதல் ஏழு பாகங்களில் உள்ள விஷயங்களின் சாராம்சங்களை கூறிய பின்னரே கருட புராணத்தில் கூறப்பட்டு உள்ள கதையையும் சுருக்கமாக கூறுவார்கள். அவை அனைத்துமே இறந்தவருடைய ஆத்மாவானது பயணிக்கும் கதையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, சடங்குகளின் தாத்பர்யம் என்பவற்றை இளைஞ்சர்களுக்கு எடுத்துக் காட்டும் ஆன்மீக உபதேச போதனைகளாக இருக்கும் என்பதற்காகவே செய்யப்பட்டவை. அப்படி நடைபெற்று வந்திருந்த சொற்பொழிவு ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருக்கும். ஆனால் கால ஓட்டத்தில் குடும்பத்தினர் மற்றும் பண்டிதர்களுக்கே கூட நேரமின்மைக் காரணமாகவும், அந்த போதனைகளை கேட்பதற்கு விருப்பம் இல்லாமல் குடும்பத்தினர் அமர்ந்து இருப்பதாலும், பண்டிதர்கள் தமது உபன்யாசத்தை தற்கால நிகழ்வுகளை கலந்து அரை மணி நேரத்தில் முடித்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால் இன்றும் ஆசார குடும்பங்களிலும், நகரங்களை விட்டு வெளியில் வாழும் குடும்பத்தினரும், வெளிநாடுகளில் வாழும் குடும்பத்தினரும் ஆன்மா பயணிக்கும் கதையை ஆர்வத்துடன் கேட்பதை காண முடிகின்றது. ஆன்மாவின் பயணம் குறித்து கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதை சுருக்கமாக கீழே தரப்பட்டு உள்ளது:

144.1) பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது பல ஜீவன்கள் படைக்கப்பட்டது. அதில் ஒன்றாக மானிட பிறவியும் படைக்கப்பட்டது. பல்வேறு பிறவிகள்- பூச்சி, புழு, மரம், செடி, கொடி, மிருகங்கள் என படைக்கப்பட்ட அனைத்திலும் சிறந்தது மானிடப் பிறவியே ஆகும். எல்லா உயிரினங்களுக்கும் உணவு, உறக்கம், அச்சம், புணர்ச்சி என்ற அனைத்து இயக்கமும் இருந்தது. ஆனால் மானிடர்களுக்கு மட்டுமே ஞானம் என்கின்ற இன்னொரு இயக்கமும் தரப்பட்டது. இந்த பூமியிலே மானிடப் பிறவி எடுத்தவர்கள் மட்டுமே  சொர்கத்தையும் மோட்ஷத்தையும் அடைய இயலும். மற்ற பிறவிகள் அனைத்துமே முன் பிறவிகளில் அவரவர்கள் செய்திருந்த  பாவங்களினால் அந்த பிறவி  எடுத்திருந்தவர்கள் ஆவர்.  பூச்சி, புழு, மரம், செடி, கொடிகள், மிருகங்கள் என்ற அந்த பிறவிகளுக்கு சொர்க்கம் மோட்ஷம் என்பதெல்லாம் கிடையாது.  அந்தப் பிறவிகள் எடுத்திருந்த ஜீவனை இழந்ததும் அடுத்து என்ன பிறவி எடுக்க வேண்டுமோ அதுவாக பிறப்பார்கள். அவர்களுக்கு யமலோக தண்டனைகள் என்பதெல்லாம் கிடையாது.

144.2) அனைத்து பிறவிகளிலும் மானிடப் பிறவியே சிறந்தது என்றாலும் மானிடனாக பிறந்தவர்களில்  மண், பெண், பொன் ஆசை போன்றவற்றைக் கொண்டவர்கள், அதர்ம வழி நடந்து, சுயநலக்காரனாக இருந்து தீவினைகளைச் செய்தவர் போன்றவர்கள் நரகத்தை அடைகின்றனர். எனவேதான்  கல்வியும், வித்தையும் கற்றவனையும் கூட முடிந்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பார்கள். அந்த ஞானமே தீமைகளை  அழிக்க உதவுகின்றன. ஆனால் அந்த ஞானத்தைப் பெறுவதற்கு  நன்மைகளை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.

144.3) ஆகவேதான் பெரியவர்கள் கூறுவார்கள்  பிறந்த ஒவ்வொருவரும்  தமது வாழ்விலே நல்ல காரியங்களையும், புண்ணியக் காரியங்களையும் செய்தபடி இருக்க வேண்டும். ஒவ்வொரும் இந்த மானிட வாழ்வில் செய்த பாவ புண்ணியங்களே அவர்களது மரணத்துக்குப் பின்னும் அவர்களுடன் தொடர்ந்து  செல்லும் என்பதே அதன் காரணம். எனவேதான் தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தான தர்மங்கள் செய்வது, முக்திக்கு வழி வகுக்கும்.

144.4) தாம் பிறந்த பூமியிலே எத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தாலும்  பிறந்தவர்கள் என்றாவது இறப்பது நிச்சயம், இந்த பூமியிலே பிறந்த எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதல்ல என்பதை எவருமே  நினைத்துப் பார்ப்பது இல்லை. இந்த பூமியிலே பிறந்து இறந்தவர்களது உயிர்களை பிடித்துக் செல்லும் எமன் யாரையும் விட மாட்டார் என்ற உண்மையை  மனிதன் உணர்ந்து கொண்டால் அந்த பயத்திலாவது அறநெறிப்படி வாழ்ந்திடுவான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அந்த நன்னெறிக் கர்மாக்களே அவனை இறந்த பின்னரும் காப்பாற்றும்.  தனக்குரிய கர்மங்களை எவன் ஒருவன் முறைப்படி  செய்கிறானோ, அவனே எல்லா விதத்திலும்  மேன்மையடைவான்.   பிறப்பே கர்ம வினையினால் உண்டானது என்பதினால் மீண்டும் இந்த பூமியிலே பிறவாமலிருக்க நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்.

144.5) ஒருவர் இறந்த பின் அவர்களது உடலில் உள்ள ஆத்மா கட்டை விரல் அளவுக்கு சுருங்கி அதற்கு  கர்மா செய்து முடிக்கப்படும்வரை வான்வெளியில் மிதந்தவாறு இருக்கும். யமதர்ம ராஜன் ஒவ்வொருடைய ஆயுட் காலமும்  முடிந்ததும் அந்த ஜீவனைப் பிடித்து வரும்படி மூன்று  யமதூதர்களை அனுப்பி வைப்பார்.  அவர்களும் இறந்து போனவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை  யமதர்ம தேவர் முன் கொண்டு சென்று  நிறுத்தியதும், யமதர்மராஜரோ அவர்களது கணக்கு வழக்குகளை  ஆராயுமாறு சித்ரகுப்தரிடம் கூறி விட்டு, மீண்டும் அந்த ஆத்மாவை பூமியிலே கொண்டு சென்று  அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்யும் பன்னிரண்டு நாட்கள் கர்மாவில் கலந்து கொள்ள வைத்தப் பின் தம்மிடம் அழைத்து வருமாறு தூதர்களிடம் கூறுவார்.  பன்னிரண்டாவது நாளன்று சித்ரகுப்தரிடம் இருந்து பாவ புண்ணிய கணக்குகள் யமராஜரிடம் வந்து விடும். அவற்றை ஆராய்ந்து  பூமியிலே அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்த கர்மாவின் பலனுக்கு ஏற்ப கணக்குகளை  மாற்றி அமைத்துக் கொண்ட பின் அந்த ஜீவனை சொர்கத்துக்கோ  அல்லது நரகத்துக்கோ அனுப்பி வைக்க முடிவு செய்வார்.

144.6) யமகிங்கர்கள் அனைத்து ஆத்மாவையும் ஒரே மாதிரி அழைத்துச் செல்வதில்லை. வேத சாஸ்திர புராணங்களை கற்றறிந்திருந்தவர்களின் ஆத்மாவை தேவ விமானத்தில் ஏற்றிக் கொண்டு தேவலோகத்துக்கு  செல்வார்கள். தான தர்மங்களை செய்தவர்களின் ஆத்மாவை தேவ குதிரை மீது ஏற்றி  தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். சொர்கத்துக்கு செல்பவர்கள் வழி நெடுக  தேவலோகத்தில் அங்குள்ள மனதுக்கு இதமான காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள். தெய்வங்களைக் காண்பார்கள். அப்சரஸ்களின்  அற்புதமான நடனங்களையும்  கண்டு  களிப்பார்கள்.

சொர்கத்துக்கு  செல்லப்படும் ஜீவன்கள் 
தேவலோகத்தில் வழி நெடுக   மனதுக்கு இதமான 
காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள்
144.7) தம்மிடம் அழைத்து வரப்பட்ட ஜீவன்களை பூமியில் யம தூதுவர்கள் கொண்டு சென்று  அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்யும் பன்னிரண்டு நாட்கள் கர்மாவில் கலந்து கொள்ள  அதன் கட்டுக்களை அவிழ்த்து விட்டப் பின் அந்த ஆத்மாவின் கர்த்தாக்கள்  செய்யும் கர்மாவின் பலன்களை எழுதி வைத்துக் கொள்ள அங்கேயே தங்கி இருப்பார்கள் (இந்தக் கதை ஆத்மாக்கள்  வஸூக்களிடம் முதலில் ஒப்படைக்கப்படும் என்பதாக கூறப்பட்டிருக்கும் பிற புராணக் கதைகளில் இருந்து மாறுபட்டு உள்ளது).
144.8)  யமகிங்கரர்களால் அவிழ்த்து விடப்பட்ட ஜீவன் சுடுகாட்டில் தன் சிதைக்குப் பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் நின்று திரும்பவும் உடலுக்குள் புக முடியாதவாறு தீப்பற்றி எரியும் உடலைப் பார்த்து ஓலமிட்டு அழும். அப்படி அழும் ஜீவன்கள் பாவாத்மாக்களாகவே இருக்கும். ஆனால் புண்ணியம் செய்த ஜீவனோ ‘நல்ல வேளை,  இவ்வுடல் எரிந்து ஒழிந்ததே நல்லது’  என்று மகிழ்ச்சி அடையும்.
144.9) இறந்து போனவனின் ஜீவனோ அந்த உடலை விட்டு  வெளியேறியதுமே  மீண்டும் உடலுக்குள் நுழைய முடியாமல் போன நிலையில் அது வாழ்ந்த வீட்டின் வாயிலுக்குச் சென்று கதறிக் கொண்டு நிற்கும். கர்மா துவங்கி தகனமும் துவங்க தேகம் முழுவதும் எரிந்து சாம்பலானவுடன் ஜீவனுக்குப் பிண்டத்தாலான பிரேத சரீரம் உண்டாகும். அதையே பிரேத சரீரம் என்பார்கள்.
144.10)  கர்மா தொடங்கிய நாள் முதல் இறந்தவர்களின் கர்த்தாக்கள் சடங்குகளை முறையோடு, பக்தி பூர்வமாக செய்ய வேண்டும்.  அப்படி செய்தால்தான் அந்த ஜீவனுக்கு நல்ல முக்தி கிடைக்கும்.  இறந்தவனின் மகன் அல்லது கர்மாவை செய்பவன் கல் ஊன்றிய நாள் முதல் ஒவ்வொரு நாளும்  போடும் பிண்டத்தால் அடுத்த பன்னிரண்டு நாட்களில்  அந்த ஜீவன் படிப்படியாக தனது பிரேத சரீரத்தை பெற்றுக் கொள்ளும்.
144.11)  பன்னிரண்டு நாட்கள் கர்மா முடிந்ததும்  பதிமூன்றாம் நாள் யமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்படும் ஆத்மாவின் பயணப் பாதை எப்படி இருக்கும்?  ஆத்மா எப்படி பயணிக்கிறது?

144.12)  பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் செய்யப்பட்ட கர்மாக்களின் மூலம் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பிரேத  சரீரத்தை அடைந்த ஜீவனை, பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் செல்ல, அந்த ஜீவனோ பூமியை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அழுது கொண்டே  யமலோகத்துக்குச் செல்லும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், கொதிக்கும் மணல் போடப்பட்டு  இருக்கும் வழியில் அவை செல்ல வேண்டும்.

144.13)  அந்த வழியில் அழைத்துச் செல்லப்படும் ஜீவனின்  துன்பம் சொல்ல முடியாததாகும். அந்த ஜீவன் புலம்பிக் கொண்டே செல்லும். ‘வாழ்ந்து கொண்டு இருக்கையில் சர்வேஸ்வரன் இருக்கிறான் என்பதை உணரவில்லை,  நன்றியை செய்தால் சொர்க்கம், தீமைகளை செய்தால் நரகம் என்பதை உணரவில்லை. அது தெரியாமல் சாது சன்யாசிகளை ஏளனம் செய்து அவமானப்படுத்தி இருக்கிறேனே. நல்ல செயல்களை செய்யவில்லை.ஏகாதசி விரதம் இருக்கவில்லை. அவற்றின் பயனை இப்போது  அனுபவிக்கின்றேனே’ என்றெல்லாம் புலம்பியவாறு செல்லும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

மூலப் படம் நன்றி : http://en.wikipedia.org/wiki/Naraka
தீமைகளை செய்தவர்களுக்கு யமலோகத்தில் என்னென்ன 
தண்டனைக் கிடைக்கிறது என்பதை  எடுத்துக் காட்டும் 
மூலப் படத்துக்கு  விளக்கம் அதனதன் அடியில் தரப்பட்டு உள்ளது
144.14) பாவ காரியங்களை செய்தவர்களை கட்டி தரதரவென இழுத்துக் கொண்டு செல்வார்கள். மானிடர் உலகத்துக்கும் யமபுரிக்கும் இடையில் உள்ள தூரம் எண்பத்தாறாயிரம் காத தூரம் ஆகும். அதைக் கடந்து செல்ல ஒரு வருட காலம் ஆகும்.  அந்த  ஒரு வருட காலத்திலும் கர்தாவினால் செய்யப்படும் மாதாந்திர மாசியம், சோதம்பம், தர்ப்பணங்கள் மற்றும் ஆறுமாத கால சிரார்த்தம்  போன்று அனைத்து சடங்குகளையும் முறையோடு, சிரத்தையோடு செய்தால் பாவாத்மாகவே இருந்தாலும் கூட ஒரு வருட காலத்தில் செய்யப்படும் பயணம் அந்த ஜீவனுக்கு  ஓரளவு துயரம் இன்றி இருக்கும். ஆனால் கர்த்தாவினால் அவை அனைத்தும் முறைப்படி செய்யாமல் இருந்தால் அந்த ஜீவனின் பயணம் எப்படி இருக்கும் தெரியுமா ?

144.15) எந்த ஜீவனுக்கு கர்மாக்கள் முறையாக செய்யப்படவில்லையோ அந்த ஜீவன் யம தூதர்களால் பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் வழி எங்கும் உதைப்பட்டுக் கொண்டு செல்லும்.  ஜீவன் தன் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும். தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது தன்னுடன் வரவில்லையே, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பொன்னையும் பொருளையும் சேர்த்தோம். இப்போது நாம் செய்த தவறினால் நரகத்துக்கு செல்கிறோமே என அலறித் துடிக்கும்.

………….தொடரும்