ஜீவாத்மாவின் பயணம்  (5)    
மரணம் அடைந்து விட்டவர் வீடுகளில் முதலில் செய்யப்படும்   சில  சடங்குகள்.

113. இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான காரியங்கள் என்னென்ன  என்பதை இந்தக் கட்டுரையில் கூறி உள்ளேன் என்றாலும் ஒருவர் வீட்டில் கர்மாக்களை நடத்தி வைக்கும் பண்டிதர்கள் அந்த குடும்பத்தினரின் சம்பிரதாயத்துக்கு ஏற்ப என்னென்ன கர்மாக்களை செய்ய வேண்டும் என்பதை விவரமாகக் கூறுவார்கள். ஒவ்வொரு கோத்திரங்களுக்கும், ஒவ்வொரு பரம்பரையினர் மற்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் (ஜாதியினர்) தனித்தனி சடங்கு முறைகள் மற்றும் மந்திரங்கள்  உண்டு என்பதினால் அவற்றை இங்கு  தனித்தனியே விவரிக்காமல் பொதுவாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை மட்டும் விவரித்து உள்ளேன்.

114. ஆகாயத்தில் தோன்றியதாக கூறப்படும் தர்பைப் புல்லின் அடிப் பகுதியில் பிரும்மாவும், நடுப் பகுதியில் திருமாலும், நுனிப் பகுதியில்  சிவபெருமானும் வசிப்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதினால் தர்பை புல் புனிதமானதாக கருதப்படுகிறது. அது வெற்றிடத்தில் சுற்றித் திரியும் தீய சக்திகளை நீக்கும் தன்மை கொண்டது, இறந்தவர்களின் சடலத்தில் இருந்து வெளிப்படும் கிருமிகளையும் அழித்து விடும்  என்று நம்பப்படுவதினால் இறந்தவரது சடலத்தை தர்பை புல் மீது  படுத்த நிலையில் வைத்து விடுவார்கள்.

115. தெற்கு திசையில் யமதர்மராஜர் அமர்ந்து இருப்பதினால், இறந்து போனவருடைய சடலத்தின்  தலையை தெற்கு நோக்கி படுக்க  வைப்பது ஐதீகம் ஆகும். பிணத்தின்  தலையை தெற்கு  பகுதியை நோக்கி  வைப்பதின் முக்கியமான காரணம், மரணம் அடைந்தவரின் ஆத்மா யமலோகத்திற்கு போகும் முன்னால்,  தனக்கு அருள் புரியுமாறு   ஜீவாத்மாவானது யமதர்மராஜனை வேண்டிக் கொண்டு அவரை  சாஷ்டாங்கமாக   நமஸ்கரிக்க வேண்டும் என்பதான  ஐதீகம் உள்ளது.  அப்போதுதான் அவரை அழைத்துச் செல்லும் எம கிங்கர்கள் அந்த ஜீவாத்மாவை அதிக துன்பங்களுக்கு உட்படுத்தாமல் அழைத்துச் செல்வார்களாம்.

116. தெற்கு பகுதியை நோக்கி தலையை வைத்து  உடலைக்  கிடத்துவதற்கு விஞ்ஞான ரீதியான காரணமும் உள்ளது.  தெற்கு  பகுதியில் காந்த சக்தி அதிகமாக உள்ளதினால் உடலில் இருந்து வெளியேறும் ஆத்மா எளிதில் உடலில் இருந்து  பிரிந்து  வெளியேறிச் செல்ல தெற்கு திசை உதவுகின்றது.

117. அடுத்து வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் அங்குள்ள ஸ்வாமி விளக்கை அணைத்து விட்டு அறையை மூடி வைத்து விடுவார்கள். அதை பன்னிரண்டு நாட்கள் காரியங்கள் முடியும்வரை திறக்க மாட்டார்கள்.

118. பல வீடுகளில் பூஜை அறை என்பது தனியாக இருக்காது. ஏதாவது ஒரு அறையில் அல்லது மூலையில் சுவற்றில் ஆணி அடித்து தெய்வங்களை மாட்டி வைத்து இருப்பார்கள். பொதுவாக தினமும் அந்த தெய்வங்களுக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைப்பார்கள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால்  அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த விளக்கை ஏற்றக் கூடாது என்பது சாஸ்திரம்.

119. மகிழ்ச்சியான நாட்களில்  வீட்டில் அனைவரும்  நலமாக உள்ள  நேரத்தில் குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்காக தெய்வங்களுக்கு முன்னால் ஏற்றப்படும் எண்ணை அல்லது நெய் தீப விளக்கின் மூலம்  தெய்வங்களை நமது வீட்டிற்கு அழைத்து  அருள் புரிய வேண்டும் என்று மானசீகமாக வேண்டுகோள் விடுகிறோம். வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வைத்து தம்மை ஆராதிக்கும் பக்தர்களுக்கு அருள் செய்ய அந்த விளக்கு ஒளி மூலம் தெய்வங்களே பல சமயங்களில் நம்மை அறியாமல் வீட்டுக்குள் வந்து போகுமாம். ஆனால் மரணம் அடைந்த ஜீவன் உலவும் இடத்தில், அதனுடன் சேர்ந்து வேறு பல தீய ஆத்மாக்களும் உலவும் என்பதினால்  அந்த நேரத்தில் எந்த தெய்வங்களும் வீட்டிற்குள் நுழையாதாம்.

120. அப்படிப்பட்ட வீட்டில் விளக்கேற்றி வைத்து மந்திரங்களை உச்சரித்து  தெய்வத்தை வேண்டும் போது, அங்கு சுற்றித் திரியும்   தீய ஆத்மாக்கள்  வேண்டும் என்றே  மந்திர உச்சாடனைகள் செய்பவரின்  எண்ணத்தில் புகுந்து மந்திர உச்சாடனைகளை தவறாக உச்சரிக்க வைக்குமாம்.  அப்படி தவறாக உச்சரிக்கப்படும் மந்திரங்களினால் உச்சாடனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில்  பல துன்பங்கள்  வந்து சேரும்.

121. அதனால்தான் இறந்தவர்கள் வீட்டில் தீட்டு காலம் எனப்படும் முதல் பன்னிரண்டு நாட்களிலும் தெய்வங்களுக்கு முன் எண்ணை அல்லது நெய் தீப  விளக்கேற்றி  தெய்வங்களை வழிபடுவது  ஆன்மீக ரீதியில் தடுக்கப்பட்டு உள்ளது.  மன  இருள் இல்லாமல் பூரண பக்தியோடு  செய்ய வேண்டிய தெய்வ காரியம் எதையுமே  துயரத்துடன் செய்யக் கூடாது என்பதினால் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளது.

122. அடுத்து இறந்து போனவர் அறையில் தெற்குப் பகுதியில் ஒரு சின்ன எண்ணெய் விளக்கை  விளக்கை அந்த பனிரண்டு நாட்களும் அணையாதபடி  இருக்குமாறு ஏற்றி வைத்திருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது.  அதை எம தீபம் என்று கூறுவார்கள்.

123. அடுத்த பன்னிரண்டு நாட்களும் யம தர்மனின் ஆதிக்கத்தில்  உள்ள அந்த வீட்டில் யம தர்ம தேவருக்கு மட்டுமே முக்கியத்துவம்  கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் நியதி அதுவாகும். தனது பாவங்களை மன்னித்து, தன்னை அழைத்துச் செல்ல வரும் யம கணங்கள் தன்னை துன்புறுத்தாமல்  நல்ல முறையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக அந்த வீட்டில் சுற்றிக் கொண்டு இருக்கும் ஜீவாத்மா யம தேவனை ஆராதித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த திசையில் எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

124. யம தர்ம தேவர் தென் திசையில் உள்ளதினால், தென் திசையில் விளக்கை ஏற்றி வைத்து, அவரை தெய்வமாக வணங்கி அவருக்கு மரியாதை தருகிறார்கள். இரவு முழுவதும் விளக்கு ஏற்றி வைப்பது எம பயம் தீர்ப்பதாக ஐதீகம்.

125. யமபெருமானை வேண்டிக் கொண்டு தீபாவளி பண்டிகையிலும், ஆலயங்களிலும் ஏற்றப்படும் எம தீபத்திற்கு சமமான எம தீபமே பன்னிரண்டு நாட்களும் இறந்தவர்கள் வீட்டிலும் வைக்கப்படும் தீபம்  என்பதாக சில சாஸ்திர  நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

126. உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவானது  அந்த வீட்டில்  சுற்றிக் கொண்டே இருக்கும். உயிருடன் இருந்த  நாட்களில் தான் வாழ்ந்திருந்த அறையில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் சுதந்திரமாக சுற்றிக் கொண்டு இருக்கும் ஆத்மாவானது இருட்டில் தட்டுத்  தடுமாறிக் கொண்டு இருக்கக் கூடாது என்பதினால் மரணம் அடைந்தவர் அறையில் விளக்கை ஏற்றி வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக கூறப்படும் இன்னொரு காரணம்  ஆகும்.

127. முடிந்த அளவிற்கு இறந்து போனவர்  உடலில் போடப்பட்டு உள்ள துணிகளை அகற்றி விட்டு வெள்ளைப் போர்வையினால் உடலைப் போர்த்தி வைக்க வேண்டும். பிரேதத்தை மூட வாங்கிய துணியிலேயே கொஞ்சம் கிழித்து வைத்து கொண்டு அதையே பத்து நாளும் வஸ்த்ரோதகம் விட உபயோகிக்க வேண்டும். வஸ்த்ரோதகம் என்பதற்கான சரியான விளக்கம் தெரியவில்லை. ஆனால் சடங்கில் பண்டிதர்கள் வஸ்த்ரோதகம் விட மரணம் அடைந்தவர் உடலில் போடப்படும் துணியில் சிறிதளவு கிழித்து வைத்துக் கொள்ளவும் என்று கூறுவார்கள்.

128. அந்தணர்கள் அல்லாத சில குடும்பங்களில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு  மேல்  வெள்ளை துணியைக் கட்டி வைப்பார்கள். உடலை விட்டுப் வெளியேறும்  ஜீவாத்மா அந்த உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லும்வரை அந்த வெள்ளைத் துணியில்  தொங்கிக் கொண்டு நிற்கும் என்ற ஐதீகமே அதன் காரணம்.

129. இறந்தவர் உடலின் மீது வெள்ளை துணியைப் போட்டு மூடுவதின் காரணம், கறுப்பு நிறம் யமதர்மருக்கு உகந்த நிறம் என்பதினால், மரணம் அடைந்தவர் உடலை விட்டு வெளியேறும்  ஜீவாத்மா மனதில் யம பயத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதினால்  இறந்தவர் உடலுக்கு வெண்மை துணி போர்த்தப்படுகின்றது  என்பது  ஆன்றோர் கூற்றாக உள்ளது.

130. இறந்து விட்டவர் சிறு பெண்ணாக இருந்தால், வெள்ளைத் தவிர மற்ற நிறத்தில் மேலாடை அல்லது உடலை மறைக்கும் வகையிலான வஸ்திரத்தை அணிவிக்க வேண்டும்.

131. இறந்து விட்டவர் சுமங்கலியாக இருந்தால் குங்கும பொட்டு வைத்து அலங்கரித்து புது பச்சைப் புடவையை அணிவிப்பார்கள். அதே போல பச்சை கண்ணாடி வளையல்களையும் தலையில் பூவையும் வைத்து விடுவார்கள். வீட்டில் உள்ள மற்ற சுமங்கலிகள், இறந்தவருக்கு மஞ்சள் குங்குமம் அணிவிப்பார்கள். விதவைகள் என்றால் மட்டுமே வீபூதியை இடுவார்கள்.

132. பொதுவாக அனைவரது வீடுகளிலும் இறந்தவர் நெற்றியில் வீபுதி பூசி வைப்பார்கள். இரு கை கட்டை விரல்களையும், இரு கால் கட்டை விரல்களையும் சேர்த்து  சின்ன துணியினால் கட்டி வைத்து வைப்பார்கள். மூக்கின் இரண்டு நாசி துவாரங்களிலும் பஞ்சை வைத்து மூடி விடுவார்கள். கண்களையும் மூடி விடுவார்கள். அதிக நேரத்திற்கு பின் அவற்றை செய்வது கடினம், ஏன் எனில் உடல் விறைத்துக் கொண்டு விடும்.

133. குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினர் இறந்த பிணத்திற்கு எட்டு இடங்களில் கட்டு போடுவார்கள். அதாவது  இரண்டு கை பெரு விரல்களையும் இணைத்துக் கட்டுவதை  கைக் கட்டு என்பார்கள். காலிலுள்ள பெரு விரல்களை  இணைத்துக்  கட்டுவதை கால்கட்டு என்றும்,  சீவலுடன் வெற்றிலையை  கசக்கி வாயில் வைத்து வாயை துணியால் மூடிக் கட்டி வாய்க்கட்டு என்று கூறுவார்கள், தளர்ந்து வரும் தசைப் பிண்டங்களை வாயுடன் ஒருங்கிணைத்துக் கட்டுவதை நாடிக் கட்டு என்றும், தொப்புள் வழியாகக் காற்று புகுந்து வயிறு புடைத்து விடாமல் கட்டுவது தொப்புள் கட்டு என்றும், தலை முடியை மறைத்து முகம் மட்டும் தெரியும்படியாகக் கட்டுவதை  தலைக் கட்டு என்றும், முழங்கால் இரண்டையும் இணைத்து உடல் நேர் கோட்டில் அமையும்படி கட்டுவது முழங்கால் கட்டு என்றும் ஆண்களின் பிறப்புறுப்பை மறைத்துக் கட்டுவதை கோவணக்  கட்டு  என்றும் கூறி அவற்றை செய்வதுண்டு. இவற்றை மரணம் அடைந்து விட்ட பெண்களுக்கும் செய்கின்றார்கள்.

134. எதற்காக கை மற்றும் காலில் உள்ள கட்டை விரல்களை ஒன்று சேர்த்துக் கட்டி வைக்கிறார்கள் என்பதை சாஸ்திரங்கள் விவரிக்காவிடிலும் அதை தர்ம சாஸ்திர விதியாக கூறி உள்ளார்கள்.

135. ஒருவர் இறந்தப் பின் அவர்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பன்னிரண்டு  நாட்கள் அவை தங்கி இருந்த வீட்டிலேயே சுற்றிக் கொண்டு இருக்கும். அதே போல வான் வெளியில் சுற்றித் திரியும்  பிறரது ஜீவாத்மாக்களும் எங்கெல்லாம் ஒருவர் இறந்து விடுகின்றாரோ அங்கெல்லாம் சென்று அங்கு இறந்தவரின் ஜீவாத்மாவோடு சேர்ந்து கொண்டு சுற்றித் திரிய முனையும். அதனால் என்ன எனக் கேட்கலாம். அடுத்து படியுங்கள்.

136. ஒருவர் இறந்தப் பின் இயற்கையாகவே அவரது கால்கள் இரண்டும் அகலமாக திறந்து கொண்டு ஒன்றை விட்டு ஒன்று விலகி நிற்கத் துவங்கும். அப்படி கால்கள் விலகி நிற்கும்போது பின்புறத்தில் உள்ள ஆசனவாயின்  துவாரம் விரிவடைந்து விடும். அதையே மூலாதாரம் என்பார்கள். அதன் வழியே இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவும், அதோடு ஒட்டிக் கொண்டு வந்து விடும் ஜீவாத்மாக்களும்  சடலத்தின்  உடலுக்குள் நுழைந்து கொண்டு விடும். அப்படி அவை நுழைந்து விட்டால் அந்த உடலுக்கு செய்யப்படும் சடங்குகளின்  பலன்  அந்த சடலத்தில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவிற்கு முழுமையாக கிடைக்காமல்   அதோடு உடலின் உள்ளே புகுந்து கொள்ளும் மற்ற ஜீவாத்மாக்களுக்கு போய் சேர்ந்து விடும்.

137. அது மட்டும் அல்ல, அந்த உடலை தகனம் செய்யும்போது அந்த ஜீவாத்மாக்கள் மீண்டும் ஆசனவாயு பகுதியில் இருந்து வெளியில் வந்து மயானத்தில் சுற்றித் திரியத்  துவங்கும்.  மயானத்தில் அதற்காகவே காத்திருக்கும் மந்திரவாதிகள் சடலத்தில்  இருந்து  வெளி வரும் ஜீவாத்மாக்களை தன் வயப்படுத்தி  விடுவார்கள். அவற்றை மந்திர  தந்திர வித்தைகளுக்கு பயன்படுத்தி  துஷ்பிரயோகம் செய்வார்கள். அது தகனம் செய்யப்பட்ட உடலின் குடும்பங்களை பாதிக்கும். ஆகவேதான் இறந்து கிடைக்கும் உடலின் மூலாதார துவாரம் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக கட்டை விரல்களை இறுக்க கட்டி வைத்து விடுவார்கள்.

138. ஜீவாத்மாக்களினால் இறந்து விட்டவர்களின் உடலில் உள்ள மற்ற துவாரங்கள் வழியே, அதாவது காதின் மூலம்  உள்ளே நுழைய முடியாதாம். நாசித் துவாரம் அல்லது மூலாதாரம் வழியே மட்டுமே நுழைய இயலுமாம். அதனால்தான் நாசியின் துவாரங்களை பஞ்சு வைத்து மூடியும், கால் கட்டை விரல்களை  ஒன்றாக சேர்த்துக்  கட்டி  வைத்து விடுவார்கள்.

139. உறவினர் அனைவரும் வந்து கூடிய பின், தகனக் கிரியை அல்லது கர்மாவை செய்யத் துவங்கும்   பண்டிதர் பொதுவாக தலைப் பகுதியில் செங்கல்லை அடுக்கி வைத்து சின்ன குண்டம் அமைத்து, அதன் பக்கத்தில் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகளைத் துவக்குவார். கிரியைகள் செய்வதற்கு முன் கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூணூல் மூலம் கும்பங்களுடன் இணைத்து வைத்து ஹோம குண்ட அக்கினியுடன் சங்கமிக்கச் செய்வார்கள். கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி ஹோமம் வளர்க்கப்படுகின்றது.

140. தலைப் பகுதியில் சடங்குகளை செய்ய துவங்குவதின் காரணமும் யமதர்மராஜருக்கு மரியாதை தருவதற்காகத்தான். அதாவது இறந்தவர் உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை அக்னி ஹோமத்தின் மூலம் வீட்டிற்குள்ளேயே தகனம் செய்து யமதர்ம தேவரிடம் அனுப்பி வைப்பதான ஐதீகம் அது.

141. அந்த சடங்கு முடிந்ததும் அக்கினி ஹோமம் வளர்க்கப்பட்டு பூத உடலை தண்ணீர் விட்டு அலம்புவார்கள். அந்த சடங்குகளை வீட்டில் உள்ளவர்கள் செய்கிறார்கள். அதை தெய்வீக நிலையை அடைய உள்ள  உடலுக்கு செய்யும் முதல் அபிஷேக பூஜை  என்பார்கள். அன்றே கல் ஊன்றுதல் எனும் சடங்கும் நடைபெறும்.  அதை பாஷண ஸ்தாபனம் என்றும் கூறுவார்கள். இந்த சடங்கும்  குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கலாம். அதற்கான கர்மாக்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை கர்மாவை செய்ய வந்துள்ள புரோகிதர்கள் கூறுவார்கள்.

142. அதற்கு இடையில் அங்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் வீட்டில் வைக்கப்பட்டு உள்ள சடலத்திற்கு மலர் மாலைகளை அணிவிப்பார்கள். பூக்களையும் உடல் மீது தூவுவார்கள். எதற்காக இறந்தவர் உடலின் மீது மலர்களை போட வேண்டும் அல்லது, மலர் மாலைகளை வைக்க வேண்டும் என்பதற்கு சாஸ்திர நியதி இல்லை. தர்ம சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவர் தெய்வமாகி விட்டார் எனக் கருதுவதினால்தான் அதை செய்கிறார்கள்.

143. இறந்து போனவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்குப் பிறந்த பெண்கள் மற்றும் மருமகள்கள் (பிள்ளைகளின் மனைவிகள்) போன்றவர்கள் தாம் உடுத்திய புடவையுடன் தலைக்கு ஸ்நானம் செய்து விட்டு, தலையை  முடியாமல்,  ஈரப் புடவையுடன் குடத்தில் தண்ணீர் ஏந்திக் கொண்டு வந்து ஆளுக்கொரு குடமாக அல்லது ஒரு குட ஜலத்தையே எல்லோரும் பிடித்துக் கொண்டோ சடலத்தின் கால் பாதத்தில் இருந்து தலை வரை உடம்பு முழுவதும் நன்றாக நனையும்படி தண்ணீர் விடுவார்கள்.

144. அதன் பின்னர் கர்மாவை செய்பவர் சடலத்தில் தலையில் சீக்காய் பொடி, எண்ணெய் முதலியவற்றை வைப்பார்கள். பின்னர் அரிசி  மாவை ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷேகம் செய்வார்கள். இந்த பழக்கமும் சமுதாயத்திற்கு சமுதாயம் மாறுபடும்.  சில வீடுகளில் மஞ்சள் கரைத்தும் அபிஷேகம் செய்வது உண்டு. அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கர்மாவை செய்பவர் மேற்கு முகமாக நின்றபடி சடலத்தின் கால் பகுதியில் இருந்து துவங்கி தலைவரை அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். பொதுவாக அந்தணர்கள் வீடுகளில் இவற்றை செய்யாமல் கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

145. உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றி உடலை நனைத்தப் பின், முடிவாக முகத்தில் தண்ணீரை ஊற்றியதும் தலை அருகே குடத்தைக் கவிழ்த்து வைத்து விட்டு  அதில் இருந்து கீழே  வடிந்த ஜலத்தை  எடுத்து அதே குடத்தின் மீது தெளித்தப் பின் அந்தக் குடத்தை எடுத்து சடலத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்து விடுவார்கள்.  அப்படி செய்வது கங்கை நீரால் அந்த குடத்தை அலம்பியதற்கு சமம் என்பார்கள்.  இறந்தவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள் எனக் கருதப்படுவதினால் அந்த சடங்கை அபிஷேக பூஜை என சாஸ்திரங்களும் கூறுகின்றன.  இந்த சடங்கை சில பண்டிதர்கள் ஒரு விதத்தில் அஸ்வமேத யாகத்துக்கு இணையானது என்று கூறி உள்ளார்கள்.

146. அதன் பின் இறந்தவரது கர்த்தாக்கள் அனைவரும் சடலத்தை பிரதர்ஷணம் செய்த பின் அந்த இடத்தில் இருந்து வெளியில் சென்று விடுவார்கள். செல்லும் முன் அதற்கு நமஸ்கரிப்பது மெத்த சிறந்தது ஆகும். அங்குள்ள மற்றவர்கள் அந்த இடத்தை ஈரமின்றி நன்றாகத் துடைத்து விடுவார்கள்.

147. அதன் பின் மரணம் அடைந்தவர் பெண் என்றால் பெண்களும், ஆண் என்றால் ஆண்களும் ஈரமாக உள்ள சடலத்தின் உடலை நன்றாகத் துடைத்து விட்டு அந்த சடலத்துக்கு மாற்று உடை அணிவிப்பார்கள்.

148. அதன் பிறகு உடலைக் குளிப்பாட்டி புது வஸ்திரத்தை (வேஷ்டி-அங்கவஸ்திரம் அல்லது புடவை) போர்த்துவார்கள். அந்த வஸ்திரத்தின் முன்பாக தூபம் காண்பித்து அல்லது கோமூத்ரம் அல்லது கங்கை தீர்த்தம் தெளித்து சுத்திகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

149. சடலத்தை அலம்பி விட்ட தண்ணீரை துடப்பத்தினால் தள்ளி அலம்பக் கூடாது. அந்த தண்ணீரை துணியால் துடைத்து எடுத்து ஒரு பாக்கெட்டில் பிழிய வேண்டும். அதன் காரணம் அந்த தண்ணீர் புனிதமான, அபிஷேகம் செய்யப்பட்ட நீருக்கு சமமான நீராகும் .

150. இறந்தவர்கள் உடலில் நகைகள் ஏதாவது அணிவிக்கப்பட்டு இருந்தால் அதை  அந்த நேரத்தில் கழற்றி எடுத்து விடுவார்கள். அதன் பின்னர் அனைவரும் தெற்கு பக்கமாகப் பார்த்து சவத்தை நமஸ்கரித்தப் பின்னர் பிணத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடு  செய்வார்கள். இவை அனைத்தையும் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி நடத்தி வைப்பார்.

151. சடலத்தின் மீது போர்த்தப்பட்ட துணியின் பாதப் பகுதியின் துணியில் இருந்து கால் பாகம் வெட்டி எடுத்து வைத்துக் கொண்டு சடங்குகளை செய்யும் கர்த்தா அதை அங்கவஸ்திரமாக  12 நாட்களுக்கு அணிய வேண்டும். அந்த  அங்கவஸ்திரத்தை தொலைக்கக் கூடாது. 12-ம் நாள் அன்று அதே துணியை பிண்டம் போடும்போது பிண்டத்தோடு வைத்து அதையும் சேர்த்து தண்ணீரில் போட்டு விட வேண்டும் (விஸர்ஜனம்).

152. பொதுவாக கர்மாக்கள் நடைபெறும்  வீட்டு  முற்றத்தில் பந்தல் போட்டு மாவிலை மற்றும் தோரணம் கட்டி தரையை சாணத்தினால் மெழுகி வைப்பார்கள் (உறவினர் வந்து அமர மற்றும் சடலத்தைக் கட்டும் பாடையை அங்கு வைப்பதற்காக). இந்த பழக்கம் கிராமங்களில் மட்டுமே தற்காலத்தில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.  இட வசதி இல்லாததின் காரணமாக நகரங்களில் இந்த பழக்கம்  காணவில்லை. இப்படி செய்வதும் இறந்தவருக்கு மரியாதை காட்டும் சடங்கு  ஆகும்.

153. மரணம் அடைந்து விட்டவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களை  போட்டு அலங்கரிக்கக் கூடாது.   நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும் வருகிறார்கள் என்று ஐதீகம் உள்ளது.  ஆகவே அவர்களை வரவேற்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே  மங்களச் சின்னமாக கோலத்தைப் போடுவார்கள். ஆனால்  இறந்தவர் வீட்டில் தற்காலிகமாக மங்கள காரியங்கள் நடைபெறாமல் இருக்கும் என்பதாலும், இறந்தவர்களின்  ஆத்மா அங்கிருந்து செல்லும்வரை தெய்வங்களோ அல்லது தேவர்களோ அங்கு  நுழைய மாட்டார்கள் என்பதாலும் சடலத்தை எடுத்த பின்னர் கூட அடுத்த பன்னிரண்டு நாட்களும்  இறந்தவர்கள் வீடுகளில் கோலங்களை போடக் கூடாது.

154. சடலத்தை தண்ணீர் விட்டு நன்றாக அலம்பி துடைத்த பின்னர் அதற்கு வஸ்திரங்களை அணிவித்த பின்னர், வீட்டிற்கு வெளியே எடுத்து வருவார்கள். அங்கு  தயாராக வைக்கப்பட்டு உள்ள பாடையில் சடலத்தின் தலை பகுதி கிழக்காகவும், கால் மேற்கிலும் இருக்குமாறு வைத்ததும், உரிமைக்காரப் பெண்களும், வீட்டுப் பெண்களும் அதன் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள்.

155. வாய்க்கரிசி போடுவது எதற்கு எனில் அதுவரை இறந்து போனவருக்கு தாம் உணவு தரவில்லை எனில், அந்த கடைசி நேரத்திலாவது அவருக்கு உணவு கொடுத்தோமே என்ற மன நிறைவு  இருக்கட்டும்  என்பதற்காக போடப்படும் சம்பிரதாயமே தவிர அதன் தத்துவம் வேறு எதுவும் இல்லை.

156. ஆனால் ஆன்மீகத்தில் அரிசியை தெய்வீகத் தன்மைக் கொண்டதாகக் கூறுவார்கள். ஹோமம் ஆனாலும் சரி, பூஜைகள் ஆனாலும் சரி அவற்றில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மீதுதான்  பூஜை கலசங்களைக் கூட வைத்திருப்பார்கள். மஞ்சள் அரிசியைத்தான் பூஜைகளிலும் உபயோகிப்பார்கள்.  ஹோம குண்டத்தில்  அரிசியைப் போடுவது முக்கியமான சடங்கு ஆகும்.

157. எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் சரி, இந்துக்கள் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக போடுவது அரிசி தானியமே தவிர பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை.  இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியும்  அவர் உடலை தகனம் செய்யும்போது எரிந்து போகும்.  இறந்தவர் உடலை தகனம் செய்யும் சடங்கு ஒரு விதத்தில் அந்த புனித ஆத்மாவுக்கு செய்யப்படும் ஹோமம் போன்றது. எப்படி ஹோம குண்டத்தில்  அரிசியைப் போடுவது முக்கியமாக உள்ளதோ  அது போலவேதான்  இறந்தவரது   வாயையும் ஹோம குண்டமாகக் கருதி அதில் அரிசியைப் போட்டு உடலை  தகனம் செய்கிறார்கள் என்பதே ஐதீகம்.

158. சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவரது  வாயில் போடப்படும் அரிசியானது அவர் உடலை விட்டு வெளியேறிய ஆத்மாவினால் ஆவாகிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் ஏழு தலை முறைக்கான ஆத்மாக்களுக்கும் பங்கிட்டு தரப்படும், அதன் மூலம் அந்த பித்ருக்களின் மனம் சாந்தி அடையும் என்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும்  நம்பிக்கைகளின் அடிப்படையிலும்  அந்த சடங்கு செய்யப்படுகிறது.  அதை செய்வதின் மூலம் வாய்க்கரிசி போட்டவர்களது குடும்பத்துக்கு மேலுலகில் உள்ள ஆத்மாக்களின் ஆசிகள் வந்து சேரும், அது அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்பார்கள்.

159. அதன் பின்னரே இறந்தவர்களின் உடலை ஒரு போர்வையினால் நன்கு மூடி வைத்தப் பின், அதை பாடையுடன்  சேர்த்து  கட்டிய பின்னர் நான்கு பேர்கள்  அந்தப் பாடையை தூக்கி தமது தோள்  மீது வைத்துக் கொள்ள, நெருப்புச் சட்டியுடன் இறந்தவரது மகன்கள் முன்னே செல்ல,  பிணத்தின் பின்புறத்தில் இறந்து போனவரின் பேரப் பிள்ளைகள் தீப்பந்தம் ஏந்தியபடி  பிணத்துடன் செல்வார்கள்.

160. நெருப்புச் சட்டி என்பது இறந்தவரின் உடலை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும்போது, கர்த்தா கையில் ஏந்தியிருக்கும் ஒரு சிறிய மண் சட்டியாகும். இதில், ஒரு விளக்கைப் போட்டு எரிய விட்டு எடுத்துச் செல்வார்கள்.

161. சாதாரணமாக இறந்தவருக்கு முன்னால் கூட்டமாக செல்லக் கூடாது என்றும், பிணத்துடன் செல்பவர்கள் அதன் பின்னால் செல்ல வேண்டும் என்பார்கள். பிணத்தின் முன்னால்  தீ சட்டியுடன் கர்த்தாக்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்பார்கள்.

162. எதனால் தீ சட்டியை சடலத்திற்கு முன்னால் கர்த்தாக்கள் எடுத்துச் செல்கின்றார்கள் என்றால், இறந்து போனவருடைய ஜீவாத்மா, அது வாழ்ந்த வீட்டில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதை அதற்கு விளங்க  வேண்டும் என்பதற்காக ஒரு ஒளி விளக்கைப்  போல அதை சம்பிரதாயமாக எடுத்துச் செல்கின்றார்கள். அப்போதுதான் மயானத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வருவதற்கு ஜீவாத்மாவிற்கு  வழி  தெரியுமாம்.   மயானத்தில் இருந்து ஜீவாத்மா மீண்டும் திரும்பி வந்தால்தான் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அது வாழ்ந்த வீட்டில் தங்கி இருந்தபடி இறந்தவருக்கு செய்யப்படும் சடங்குகளில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து யமபுரிக்கு பன்னிரண்டாம் நாள் அது தனது பயணத்தை துவக்க முடியும்.

163. இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்லும் பழக்கம் இறந்தவரது குடும்பத்து சிறுவர்களும் சுடுகாட்டுக்கு செல்லும் உடலுக்கு  தீ மூட்டி எரிக்க தானும் உரிமை உள்ள கர்த்தா என்பதை காட்டவும், மேலுலகம் செல்லும் ஆத்மாவுக்கு மரியாதைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஐதீகமே தவிர அதற்கு வேறு எந்த விஞ்ஞான பூர்வமான அல்லது சாஸ்திர காரணமோ கிடையாது. சில குடும்பங்களில் பிள்ளைகளோ மற்ற கர்தாக்களோ இல்லை என்றால் இறந்தவரது பேரன்கள் கர்மாவை செய்ய உரிமை உள்ளவர்கள் ஆகின்றார்கள்.

164. மேலும் அந்த சிறுவர்களும் பின் வரும் நாட்களில் தாம் பெரியவர்கள் ஆகும்போது இறந்து போக உள்ள தமது தாய் தந்தைக்கு சடங்குகளை எப்படி  செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் போதனையாக இருக்கவே  சாஸ்திர சம்பிரதாயமாகவும் அவற்றைக்  காட்டி உள்ளார்கள்.  முன் காலங்களில் பேரப் பிள்ளைகளும் சுடுகாடுவரை சென்று சிதைக்கு கொள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது பலரது வீடுகளிலும் சிறு பிள்ளைகளை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை. சுடுகாட்டில் பிணங்களைக் கண்டு அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதே அதன் காரணம்.

165. முன் காலங்களில்  சுடுகாடு எத்தனை தூரம் இருந்தாலும் பிணத்தை மாறி மாறி நான்கு பேர் தூக்கிக்  கொண்டு நடந்தே சுடுகாடுவரை செல்வார்கள். அந்த காலத்தில் சவங்களை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது என்பதின் காரணம் சுடுகாடுகள் அதிக தூரத்தில் இருந்ததில்லை என்பது மட்டும் அல்ல வாகன வசதிகளும்  கிடையாது, மனிதர்களும் திடகார்த்தமாக இருந்தார்கள் என்பதே.

166. சுடுகாடுகள் நீண்ட தூரத்தில் இருந்ததினாலும், இயற்கையின் நியதியினால் சவத்தின் எடை அதிகரிக்கத் துவங்கும் என்பதினாலும், நேரமாக நேரமாக, உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சவத்தை அத்தனை தூரமும் சுமந்து கொண்டே செல்ல கஷ்டமாக  இருந்ததினாலும் பாதி  தூரம் சவத்தை தோளிலே வைத்துக் கொண்டு சம்பிரதாயமாக நடந்து சென்றதும், பாடைகளுடன் கட்டப்பட்ட சவங்களை ஒரு கட்டை வண்டியில் வைத்து  இழுத்துச் செல்வார்கள்.

167. அந்த பழக்கம்  தற்போது வாகன வண்டிகளில் எடுத்துச் செல்வதில் வந்துள்ளது. இரண்டு முறைகளுமே தவறல்ல. சாஸ்திரத்துக்கு எதிரானதும் அல்ல. காரணம் சவத்தை தோளில் மட்டுமே சுமந்து  கொண்டு செல்ல வேண்டும் என்று எந்த சாஸ்திரங்களிலும் கூறப்படவில்லை.

168. தோளில் தூக்கிக் கொண்டு செல்வது  இறந்தவரது குடும்பத்தினருக்கு தாமும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நின்று இருப்போம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாயமே ஆகும். வழியில் மூன்று முறை பிரேதத்தை கீழே வைத்து பலி கொடுக்க வேண்டும். பலி என்பது வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த பாதி சமைத்த அரிசியாகும். வழியில் மூன்று முறை அதை செய்யாவிடில் மயானத்திலாவது மூன்று முறை கீழே வைத்து பலி கொடுக்கா விட்டால் வழியிலுள்ள ஜீவன்கள் இந்த ஜீவாத்மாவை துன்புறுத்தும் .

ஜீவாத்மாவின் பயணம்   (6)  
மயான சடங்குகள், உடல் தகனம்

169. மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை  இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள்.  அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப் பட, அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறு வரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல்,  நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும்.

170. அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்த பின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களி மண்ணினால் செய்யப்பட்ட தண்ணீர் நிறம்பிய  மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப் பக்கமாக சுற்றி வந்து, குடத்தை தலைப் பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் சவத்தின் மீது அரிசி, சின்ன தங்கக் காசு அல்லது நாணயங்களை வைத்தப் பின் சவத்தின் வாயில் அரிசியைப் போடுவார்.   இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும்.

171. அதன் பின் முன் போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு  சந்தனக் கட்டையை பின் பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப் புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால் செல்பவர் சிறு கல்லினால் மண் குடத்தில் ஒரு சின்ன ஓட்டை இட அந்த ஓட்டை வழியே விழும் தண்ணீர் சவத்தின் மீது விழும். அதை இறந்தவரது உடலுக்கு செய்யும் கடைசி அபிஷேகம் என்பார்கள். அந்த இரு   சடங்குகளின்  தத்துவம்  என்ன?

172. முதலாவது  தத்துவம் என்ன என்றால், இந்த சடங்கு, இறந்தவர் செய்த பாவங்களை நீக்கி, அவரது ஆன்மா அமைதியாக செல்ல வழி வகுக்கும்.

173. இரண்டாவது தத்துவம் என்ன என்றால் அந்த ஜீவன் தீயில் எரிந்து போனாலும், அதன் ஆத்மா தாகத்தோடும் பசியோடும் இருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த குடத்தில் சமையல் செய்து ஜீவனின் பசியைப் போக்கி (பிண்டம்), குடிப்பதற்கு தண்ணீரும் தருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாய செயல் அது.

174. மூன்றாவது தத்துவம் என்ன என்றால் அந்த மயானத்தில்  இறந்தவரது உடலை தொடர்ந்து வந்திருந்த ஜீவாத்மா  அந்த பிண்ட தண்ணீரை மானசீகமாக பருகத் துவங்கி தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளத் துவங்குமாம். அதாவது கர்த்தா படைக்கும் பிண்ட தர்ப்பணத்தை மரணம் அடைந்தவரது ஜீவன் ஏற்றுக் கொள்ளத் துவங்கும் முதல் நிலை அது. தனது தாகத்தை தீர்க்க செய்யப்படும் அந்த செயலை மயானத்தில் செய்யும்போது அதைக் காணும் ஜீவாத்மாவின் மனதில் மகிழ்ச்சி ஏற்படுமாம். அது மனமார தனது சந்ததியினரை ஆசிர்வதிக்குமாம்.

175. நமது உடல் மண் குடம் போன்றது, மண் குடம் கீழே விழுந்தால் எப்படி உடைந்து விடுமோ அது போலவேதான் நமது வாழ்க்கையும் நிரந்தரம் அல்ல என்பதினால் வாழும்போது மற்றவர்களுக்கும் பயனுள்ளவர்களாக வாழ வேண்டும்.

176. ஓட்டையிடப்பட்ட மண் குடத்தில் இருந்து எப்படி நீர் வெளியேறி விடுமோ அதைப் போலவே பயனற்ற வாழ்க்கையில் உள்ளவர்களது உடலில் உள்ள ஜீவனும்  வெளியேறி விடும்.  ஆகவே நாம் உயிர் வாழும்வரை பிறருக்கு பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும்  எனும் தத்துவத்தை  சடலத்தை எரிக்க வந்துள்ளவர்களுக்கு  எடுத்துக் காட்டும் நான்காவது தத்துவமே அந்த செயல் ஆகும்

177. குடம் என்பது மனித உடலைக் குறிப்பது. மண் குடத்தில் நிரப்பப்பட்டுள்ள உள்ள தண்ணீர் உடலின் உள் உள்ள ஆத்மாவாகும்.  மூன்று முறை குடத்தை துளையிட்டு தண்ணீரை வெளியேற்ற வைப்பது  உடலை விட்டு வெளியேறும் ஆத்மா மூன்று சங்கல்பங்களை  எடுத்துக் கொண்டு  வெளியேறும் நிலையை குறிக்கும் சடங்காகும்.  அந்த மூன்று சங்கல்பங்கள் என்னென்ன ?

178. மண்ணுலகில் பிறப்பெடுக்கும் ஆத்மா மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொருளாசையுடன் அது குடி   இருக்கும் உடலுடன்  அலைந்து திரிகிறது.  ஒரு உடலை விட்டு வெளியேறிய ஜீவாத்மாவின்  அனைத்து ஆசைகளும் அது வாழ்ந்திருந்த  உடலோடு மயானத்தில் எரிந்து போக உள்ள நிலையில்   ‘இனி மண் உலகில் உள்ளவர்களுக்கும்,  ஆத்மாவான எனக்கும் எந்த பந்தமும் கிடையாது; நான் சுதந்திரமானவன், எங்கு வேண்டுமானாலும் சென்று பிறப்பேன்; உடைந்து போன மண் குடத்தை  எப்படி மீண்டும் ஓட்ட வைக்க இயலாதோ அதே போலவேதான்  இப்போது நான் வெளியேறிய உடலில் மீண்டும் சென்று வாழ மாட்டேன்’ என்ற மூன்று சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு  மயானத்தை விட்டு வெளியேறி விடுமாம்.

179. துவாரமிடப்பட்ட மண் சட்டியில் இருந்து வெளியேறிய நீர், சடலத்தின்  மீது விழுந்து   பூமியிலே சிந்தும் என்பது அந்த உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மா பூமாதேவி மீது ஆணை இட்டு அந்த சங்கல்பத்தை  எடுத்துக் கொள்வதை காட்டும்   ஐதீகம் ஆகும். ஆகவே மண் குடத்தை ஓட்டை இட்டு தண்ணீரை உடல் மீது விழ வைக்கும் சடங்கு பக்தி மார்கத்தை வலுப்படுத்தும் ஆன்மீக போதனை  தத்துவங்களே ஒழிய அதற்கு  வேறு  எந்த விதமான விஞ்ஞான பூர்வமான  காரணமும்  கிடையாது.

180. இனி கர்மாவை தொடருவோம். கர்மாவை செய்பவர் துவாரம் இடப்பட்ட மண் குடத்தை ஏந்திக் கொண்டு சீதை மீது வைக்கப்பட்டு உள்ள சடலத்தை மூன்று முறை சுற்றி வந்த பின்னர்   சிதையை பார்க்காமல் சிதையின் எதிர் திசையைப் பார்த்து  நின்றபடி ‘ஓம்’ எனக் கூறிக் கொண்டே சந்தனக் கட்டையை (அதில் சிதையை எரிக்க நெருப்பு இருக்கும்) சிதையின் தலைப் பகுதியில் வைத்தப் பின் குடம் உடையும் வகையில் முன் புறமாக குடத்தை கீழே போட்டு உடைத்து விடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும். சில குடும்பங்களில் கர்த்தா சிதையை பார்த்தபடி நின்றவாறு சந்தனக் கட்டை கொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் உண்டு.

181. உடலை சிதையில் வைத்த பின் வாய், வலது கண்,  இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது மற்றும் இடது காது ஆகிய ஏழு இடங்களில் சிறிது நெய்யை விட வேண்டும்,  பண்டை காலத்தில் அந்த இடங்களில் சின்ன தங்கம் வைக்க வேண்டும் என்பதாக எழுதி இருக்கிறார்கள். ஆனால் காலம் மாற மாற தங்கத்திற்கு பதில் நெய் விடத் துவங்கினார்கள்.

182. இப்படியாக அந்த ஏழு துவாரங்களில் நெய் விடுவதின் காரணம் அந்த ஏழு துவாரங்களும் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மா வெளியேறிச் செல்லும் புனித வழிகள் மற்றும்  உடலில் உள்ள ஏழு சிறிய ஹோம குண்டங்கள் என்பதாகும்.

183. பிறகு பிரேதத்தின் மீதோ அதன் வாயிலோ எள்ளுடன் கலந்த அரிசியை (வாய்க்கரிசி) அங்குள்ள பந்துக்கள் போட வேண்டும். அதன் பின்னர் கர்த்தா சிதைக்கு தர்பை மூலம் கொள்ளி வைத்து விட்டு பிரேதத்தின் பாதங்கள் உள்ள பகுதிக்குச் சென்று தன் விரலில் அணிந்திருந்த தர்பைப் புல்லினால் ஆன பவித்திரம், பூணூல் போன்றவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் உடல் முழுவதும்  எரியும் வரை அங்கேயே நின்று கொண்டு இருப்பார்கள்.

184. தர்ப்பைகளால் செய்த ஐந்து தர்பை கொத்துக்களை ஆவாஹனம் செய்து பூஜித்து தஹன சமயத்தில் பிரேதத்தின் தலை, கண், வயிறு, நாபி, கால் ஆகிய ஐந்து இடங்களில் வைத்து ஹோமம் செய்து அதையும் பிரேதத்துடன் எரிக்க வேண்டும்.

185. சிதைக்கு தீ வைக்க பயன்படுத்த வேண்டிய பல வகைகளிலான  அக்னி தர்பையை எப்படி தயார் செய்வது என்பதை மயானத்திலேயே அந்தந்த குடும்ப புரோகிதர்   கூறுவார்.

186.உத்தபனாக்னி என்பது மூன்று தர்பை கொத்தை கொளுத்தி அதிலிருந்து ஏற்படுத்தப்படும் அக்னி ஆகும்.   அதாவது முதலில் ஒரு கொத்து தர்பையை அக்னியில்  காட்டி,  அந்த தர்பையில் உண்டாகும்  அக்னியில் இருந்து இரண்டாவது  தர்பை கட்டில் அக்னியை மூட்டி,  அதில் இருந்து வெளியாகும் அக்னியில் இருந்து மூன்றாவது தர்பைக் கட்டில் தீ மூட்டி, அந்த அக்னி தர்பையை சீதை மீது வைத்து தீ மூட்டுவார்கள்.  மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் ‘உத்தபனாக்னி’  அக்னி மூலமே தஹன ஸம்ஸ்காரம் செய்வார்கள்.

187. பிரும்மச்சாரிகளை தகனம் செய்யும்போது மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடாக்கி, அதில் கொஞ்சம் வரட்டி தூளை போட்டு தீ பிடிக்க வைத்து அதை தகனத்துக்கு பயன்படுத்துவார்கள். அதை ‘கபாலாக்னி’ என்பார்கள்.

188.துஷாக்னி’ என்பது ஒரு  மண் பாத்திரத்தை தீயில்  நன்றாக சூடாக்கி, அதில் சிறிதளவு உமியை போட்டு அக்னியை  உண்டு பண்ணி, அந்த அக்னியை சிதையில் வைக்கப்பட்டு உள்ள உபனயனம் ஆகாத ஆணுக்கும், திருமணம் ஆகாத  பெண்ணின் தகனத்துக்கும் பயன்படுத்துவார்கள்.

189. தம்பதிகளில் ஒருவர் இறந்தால் ஒளபாசனாக்னி எனும் அக்னியை உபயோகிக்க வேண்டும். பிரம்மசாரி ஸமித்துக்களை [சுள்ளிகளை] வைத்து ஹோமம் செய்கின்றார்கள். அந்தக் கர்மா அவர்களது திருமணத்தோடு  முடிந்து விடுகிறது.

190. திருமணத்திற்கு பின்னர் செய்யப்படும் யாக காரியங்கள் ஸமிதாதானத்துக்குப் பதில் ‘ஒளபாஸனம்’  என்பதில் இருந்து துவங்கும். ஒளபாஸனம் என்பது உபாஸனையைக் குறிக்கும். ஆகவே  பல தேவதைகளைப் பூஜை, மந்திரம், தியானம் முதலியவற்றால் உபாசித்து ஏற்படுத்தப்படும் அக்னியே  ஒளபாசனாக்னி எனப்படுகின்றது.

191. முன் காலங்களில் விறகுகளை அடுக்கி அதன் மீது பிணத்தை வைத்து எரித்தது போல் இல்லாமல் இந்த காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் மின்னடுப்பில் பிணங்களை எரித்து விடுவதினால் சிதை பீடத்தில் வைத்த சவத்திற்கான சடங்குகளை செய்து முடித்தப் பின் பாடையுடன் கூடிய உடலை எடுத்து வந்து மின்சார யந்திரத்தின் மேடை மீது வைத்தப் பின் சம்பிரதாயமாக கொள்ளிக் கட்டையை அதில் வைப்பார்கள்.  அதன் பின் அங்குள்ள தொழிலாளி பாடையுடன் உள்ள உடலை யந்திரத்தின் உள்ளே தள்ளி கதவை மூடி விடுவார். உடல் சற்று நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும்.   சாம்பலாகி விட்ட அந்த ஜீவனின் உடல் (பிரேத உணர்வுகள் என்பார்கள்) சிவபெருமானின் பாதங்களில் கலந்து விடுமாம்.

192. இந்த முறையில் செய்யப்படும் கர்மா சாஸ்திர விதிப்படி சரியா அல்லது தவறா என்ற விவாதம் தேவை அற்றது. காரணம் மின் அடுப்பிலும் உள்ளே எரியும் நெருப்பே உடலை பஸ்பமாக்கி  விடுகிறது என்பதினால் சாஸ்திர விதிப்படி இது தவறல்ல.

193. உடலை எதற்காக எரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மயானத்தில் வசிப்பவர் சிவபெருமான். அவர் தனது உடலில் பூசிக் கொள்வது சாம்பல். ஆரம்பமும் அவரே (பரபிரும்மன்), முடிவும் அவரே என்பதை பிரதிபலிக்கும் விதத்தில் சிவசக்தியாக படைப்பையும், ருத்திரராக அழிக்கும் செயலையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளவர் அவர்.

194. ஆகவே மயானத்தில் எரிக்கப்படும் உடல் சிவபெருமான் பூசிக் கொள்ளும் சாம்பலாக உருமாறுவதின் மூலம் ஜீவன் சிவபெருமானையே சென்று அடைந்து விடும் தத்துவத்தை  வெளிப்படுத்துகின்றது.

195. சாம்பல் என்பதில் உள்ள வார்த்தையில் உள்ள சாம்ப என்பது சாம்பசிவன் எனும் பரமசிவனையும், பல் என்பது சமஸ்கிருதத்தில் பழம் என்பதையும் குறிக்கும். ஒரு விதை காயாகி பழமாகி இறைவனுக்கு படைக்கும் நெய்வித்தியம் (படையல்) ஆகி விடுவதை போல, மனிதர்களும் பிறப்பு எடுத்து பல்வேறு நிலைகளை அடைந்து,    தம் உடலையே சிவபெருமான் எனும் இறைவனுக்கு நெய்வித்தியம் செய்வதை போல சமர்ப்பித்து விடும் இறுதி நிலையே உடலை எரிக்கும் நிலை ஆகும்.

196. சாஸ்திரங்களில் மரணம் அடைந்தவரின் உடலை தஹனம் செய்வதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது ‘இறுதி  வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்வாக கூறி உள்ளார்கள்.

197. யாகங்களை வேள்வி என்பார்கள். அது போலவேதான் ஒரு புனித ஜீவாத்மா குடி இருந்த பதினாறு தெய்வீக ஆற்றல்களை கொண்ட  உடல் எனும் ஜடப் பொருளும் தெய்வீகமானது என்பதினால்,  அந்த உடலை எரிப்பதும் ஒரு புனிதமான வேள்வி போன்றதுதான், என்பதாகவே சாஸ்திரங்கள் கூறி உள்ளன.

198. அந்த பிரேத சம்ஸ்காரம் செய்தால்தான் அந்த உடலின் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்  இருக்கின்ற தெய்வாம்சங்கள்  அதனதன் மூலஸ்தானத்துக்கு திரும்பப் போகும்.

199. எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனிடமே அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்கின்றது சாஸ்திரம் என்பதினால்தான் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் என்ன சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதோ ஒரு வகையில் இறந்தவர்களது சடலத்தை மரியாதையுடன் சமய சடங்காகவே ஸம்ஸ்காரம் செய்து வருகின்றார்கள்.

200. தனது வாழ்நாளில் பல தீமைகளை ஒருவன் செய்திருந்தாலும், அவன் தன்னுடைய வாழ்நாளில்,  தன்னுடைய சரீரத்தால் சில  நன்மைகளையாவது  செய்திருப்பான் என்பதினால் மரணம் அடைந்து விட்ட அவனது  சரீரத்துக்கு அவன் செய்திருந்த சில நன்மைகளுக்காவது மரியாதை  செய்யத்தான் வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

ஜீவாத்மாவின் பயணம்   (7)   
மரணம் அடைந்து விட்டவரை புதைப்பார்களா அல்லது எரித்து விடுவார்களா?

201. ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது.

202. முன் காலங்களில் கர்ப்பவதி பெண் மரணம் அடைந்து விட்டால், வயிற்றில் இருக்கும் கருவை, தாயை எரிக்கும் முன்னர், தனியாக எடுத்து புதைத்து விடுவார்கள். அதை போலவேதான் குழந்தை  பிறந்தவுடன் இறந்து விட்டால் அல்லது இறந்தே பிறந்து விட்டாலும் அதை வீட்டு தோட்டத்தில் அல்லது நதிக் கரைகளில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவார்கள். அதன் காரணம் குழந்தையின் மண்டையோடு சக்தி வாய்ந்தது என்பதே ஆகும். பிறக்காமல் இறந்த எந்த ஒரு உயிராக இருந்தாலும், அந்த உடலை தீ மூட்டி எரிக்கக்  கூடாது, புதைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதாம்.

203. சிறு குழந்தைகளின் மண்டையோடு சில குறிப்பிட்ட தேவதைகளின் தெய்வீக சக்தியை உள்ளடக்கிக் கொண்டு இருக்கும். இது தெய்வ நியதி; நமது கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட காரணங்களைக் கொண்டுள்ள உண்மையாகும். இறந்து போய் விட்ட குழந்தைகளை மயானத்தில் சென்று எரித்து விட்ட பின்னர் யாரும் அந்த சடலம் முழுவதும் எரிந்து சாம்பலாகும்வரை சுடுகாடுகளில் பல மணிநேரம் காத்திருக்க மாட்டார்கள். சடலத்திற்கு தீ மூட்டி அது நன்கு எரிய ஆரம்பித்ததும் அடுத்த சடங்கை துவக்கக் கிளம்பிச் சென்று விடுவார்கள்.

204. அங்கு அதற்காகவே காத்திருக்கும் மந்திரவாதிகள், அந்த குடும்பத்தினர் அனைவரும் சென்று விட்டதும், எரியும் நெருப்பில் இருந்து குழந்தைகளின் மண்டை ஓட்டை வெளியே எடுத்து கொண்டு சென்று விடுவார்கள்.

205. குறிப்பிட்ட தெய்வீக சக்தியை உள்ளடக்கிக் கொண்டு இருக்கும் சிறு குழந்தைகளின் மண்டையோடு மந்திரவாதிகளின் கைகளில் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு அவர்களால் சில தவறான சக்திகளை பெற முடியும்.

206. அதனால்தான் முன் காலங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் குழந்தைகளை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்ய மாட்டார்கள். குழந்தைகளை யாருக்கும் தெரியாமல்தான் வீட்டின் பின்புறத்தில் புதைத்தோ அல்லது தகனமோ செய்து விடுவார்கள்.

207. புதைத்து விடப்படும் பிணத்தின் மண்டை ஓட்டின் தெய்வ சக்தி அழிந்து விடும் என்பதினால்தான் புதைத்த பிணங்களை தோண்டி எடுத்து மண்டை ஓட்டை எடுப்பது இல்லை. இதுவும் வாய் மொழி வார்த்தை வழியே காலம் காலமாக நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படும் செய்திதான்.

208. கருட புராணம் 2.2.8 பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்கள் பிசாசுகளாக மாறி விடுவார்கள் என்பதாக கூறப்பட்டு உள்ளது.

209. ஒரு மனிதன் துர் மரணத்தை அடைந்தாலும்,  தற்கொலை, கொலை செய்யப்பட்டவர் மற்றும் விபத்துக்களில் பலியானவர்கள் என எவராக இருந்தாலும் பொதுவாக அவர்களை தகனம் செய்ய வேண்டும் என்பதே சரியான சாஸ்திர முறை என பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

210. சில சமய கோட்பாடுகளின்படி  மரணம் அடைந்தவர்களது பிரேதங்களை புதைத்து  விடுவார்கள்.  ஆனால் இந்து மத நம்பிக்கையின்படி குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் பதினெட்டு வயதை தாண்டியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது.

211. ஆனால் தற்காலத்தில் குழந்தைகளின் உடலையும் மயானங்களில் எடுத்துச் சென்று எரித்து விடுகின்றார்கள். சுடுகாடுகளில் எவரும் அனுமதி இன்றி நுழைய முடியாது என்பதினாலும், மின்சார எரியூட்டிகள் உள்ளத்தினாலும் முன் காலங்களை போல மந்திரவாதிகளின் பயம் இல்லை.

212. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த முறையில் மரணம் அடைந்தாலும்- தற்கொலையோ, இயற்கை மரணமோ அல்லது கொலை செய்யப்பட்டு  இறந்து போனாலும்,  மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய நியமத்தை அவரவர் குல வழக்கத்தின்படி கடைபிடிக்க அந்தந்த வீட்டு பண்டிதர்கள் கூறுவார்கள்.

ஜீவாத்மாவின் பயணம்   (8)   
மரணம் அடைந்து விட்டவர் வீட்டில் முதல் பன்னிரண்டு  நாட்களும் ஏன் அடுப்பை மூட்டி சமைத்துக் கொள்ளக் கூடாது?

213. ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர் லோகத்தில் உள்ள அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான்  பன்னிரண்டு நாள் காரிய சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள். அங்கு சமைக்க மாட்டார்கள் என்பார்கள். முதல் பத்து நாட்களும் உறவினர்கள் வீடுகளில் இருந்துதான் சாப்பாடு வரும். இதற்கு விஞ்ஞான ரீதியிலான காரணம் கிடையாது என்றாலும் இந்த நியதி வைக்கப்பட்டு உள்ளதற்கு ஒரு அடிப்படை காரணம் இருந்துள்ளது.

214. ஒவ்வொரு நாளும் சடங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும். அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள். சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூடிவிட்டு சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது. ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அது மனிதாபிமான அடிப்படையில் கடை பிடிக்கப்பட்டு வந்திருந்த சடங்கே தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.

215. இறந்தவரின் ஆத்மா அமைதியாக  வீட்டைவிட்டு வெளியேறும் வரை, வீட்டில் அடுப்பு எரிக்காமல் இருப்பது துக்க நிலையை வெளிப்படுத்த சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுதான்.

216. கொழுந்து விட்டு எரியும் நெருப்பைத்தான் பயன்படுத்தக் கூடாது என்பதே ஒரு நியதி என்பதினால்தான் பல குடும்பங்களிலும் இன்று காஸ் அடுப்புகளை மூட்டாமல், மின்சாரத்தால் இயங்கும்  ஹீட்டர், மைக்ரோ ஓவென்  போன்ற அடுப்புகளை காஃபீ அல்லது டி குடிக்க பயன்படுத்துகிறார்கள்.  மின்சார ஹீட்டர்களை பயன்படுத்தி குளிக்க தண்ணீரை சூடு செய்வதை போலத்தான் அதுவும்  உள்ளது என்று  அது நியாயப் படுத்தப்படுகின்றது.

217. ஆனால் இதற்கு   ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணம்   உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னி தேவருக்கு நைவித்தியமாக கொடுத்தப் பின்னரே வீடுகளில் சாப்பிடுவார்கள். அதாவது அக்னி தேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும்.218. இன்றும் சில வீட்டில் இதைக் கடை பிடிக்கிறார்கள். பண்டை காலத்தில் வீடுகளில் தற்காலத்தைப் போல மின் அடுப்புக்களும், எரிவாயு (காஸ்) அடுப்புக்களும் இல்லாத நிலையில் விறகுகளைப் போட்டு நெருப்பு பற்ற வைத்து சமையல் செய்து வந்தார்கள். ஆகவே இறந்தவரது வீடுகளில் அந்த ஜீவன் வீட்டை விட்டு வெளியேறும் வரை, மயானத்தில் விறகுகளை வைத்து இறந்தவராது உடலை தகனம் செய்ததைப் போல, வீட்டில் விறகு எரிக்கக் கூடாது, அடுத்த பன்னிரண்டு நாட்கள் கர்மாக்களை முடிக்கும்வரை, வேறு எந்த தெய்வீக பூஜையையும் செய்யக் கூடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாஸ்திர ரீதியில் இந்த நியமத்தை வைத்துள்ளார்கள்.

ஜீவாத்மாவின் பயணம் (9)    
நதிக்கரையில் அஸ்தி கரைப்பு, சடங்குகள்

218. பூதவுடல் எரிந்து போன அரை மணி நேரத்திலேயே அங்குள்ள தொழிலாளி யந்திரத்தில் இருந்து சாம்பலையும் எலும்பையும் எடுத்து கர்த்தா செய்பவரிடம் தருவார்கள். அங்கு சில சடங்குகளை செய்த பின் அந்த  சாம்பலையும் எலும்பையும்  பால் நிறப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின்  அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.   இப்படியாக எலும்பை கடலிலோ நதியிலோ கரைக்கும் சடங்கை சஞ்சயனம் என்று கூறுவார்கள்.

219. இறந்தபின் பிரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு பிரேதத்திற்கு அந்திம கிரியை எனும் பிரேத ஸம்ஸ்காரங்கள் சரியான முறையில் செய்யப்படவில்லையோ அந்த ஜீவாத்மா மயானத்தில் தன்னுடைய எரிக்கப்பட்ட உடலில்  உள்ள எலும்பை சுற்றி, சுற்றியே வந்தபடி இருக்கும்.

220. எதற்காக சஞ்சயனம் செய்கின்றார்கள். முதல் காரணம், எம லோகத்துக்கு செல்லும் வழியில் ஜீவாத்மா பசியாலும் தாகத்தாலும் அவதிப்படக் கூடாது என்பதினால் சடங்குகளை முறைப்படி செய்து விட்டு அதன் எலும்புகளை நதிகளில் கரைத்து விடுவார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் அந்த நதிகளின் நீரானது ஜீவாத்மா தாகம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக அதன்  சூட்சும உடலில் ஈரப் பதத்தை வைத்து விடும்.

221. நதிகளுக்கு அத்தனை சக்தி உள்ளதா என்றால் உண்டு என்பதே உண்மை. காரணம் நதிகள் தெய்வங்களினால் ஏற்படுத்தப்பட்டவை, இந்த உலகில் ஓடும் அனைத்து நதிகளின் தெய்வங்களும் கங்கை தேவியின் தெய்வீக கணங்களே என்பதினால் அந்த தெய்வங்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ள நதிகளும் கங்கை நதியின் கணங்கள்தான்.  இந்த தத்துவம் அனைவருக்கும் புரியாது.

222. இரண்டாவது காரணம் உடலை விட்டு வெளியேறிய ஜீவன் எங்கு சென்றாலும், யாராக பிறந்தாலும், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான தண்ணீரைப் போல அனைவருக்கும் பயனுள்ளவாறு இருக்க வேண்டும் என புனிதமான கங்கா தேவி எனும் பார்வதி தேவியிடம் வேண்டிக் கொண்டு புனித நதியில் கறைக்கப்படுகின்றது. வசதி உள்ளவர்கள் அஸ்தியை காசிக்கு கொண்டு சென்று கங்கை நதியில் கலப்பது வழக்கம்.  கங்கைக்கு செல்ல முடியாதவர்கள் எந்த ஒரு  நதியிலாவது அஸ்தியை கரைப்பார்கள்.

223. இந்த உலகில் ஓடும் அனைத்து நதிகளின் தெய்வங்களும் கங்கா தேவியின் தெய்வீக கணங்களே, என்பதினால், நதிகளில் ஓடும் நீரை கங்கா தேவியாக பாவித்து எந்த  நதியில் அஸ்தியை கரைத்தாலும் அந்த பிரார்த்தனை கங்கா தேவியிடம் சென்றடைந்து விடும் என்பதினால், தற்காலத்தில் நீர் நிலைகள் எங்கிருந்தாலும் அவற்றில் அஸ்தியைக் கரைப்பது ஒரு சடங்காகி விட்டது.

224. எதற்காக பாலில் எலும்புக்களைப் போட்டு எடுத்துச் செல்கின்றார்கள்? பிறந்த குழந்தையின் முதலில் உணவு அதை பெற்று எடுத்த தாயின் தாய்பால் ஆகும். இறந்தவர்களது ஆத்மாவும் அதனதன் விதிப்படி எங்கோ சென்று குழந்தையாக பிறப்பு எடுக்கும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே, மனிதர் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல மற்றும் முதல் தாய் சக்தி தேவியே என்பதினால் அவளது குழந்தையாகவே பிறப்பு எடுத்து மரணம் அடைந்து விட்ட ஆத்மாவும், அடுத்த பிறவி எடுக்கும்வரை பசி தாகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதை செய்கின்றார்கள்.

225. மயானத்தில் எலும்புகளை எடுத்து மண் குடத்தில் உள்ள பானையில் போட்டதுமே அந்த மயானத்தில் கர்த்தாக்களுடன் வந்திருந்த அந்த எலும்பின் சொந்தக்காரரான ஜீவாத்மா, அந்த பாலை மானசீகமாக ஆவாகித்துக் கொள்ளுமாம்.

226. எலும்புகளை எடுத்ததும் கர்த்தாக்கள்  முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள். சுடுகாட்டில் தலை முடி மற்றும் முக ஷவரம் செய்து கொள்வது இறந்தவர்களுக்காக செய்யும் அடுத்த 13 நாட்களுக்கான காரியங்களை இனி முக மலர்ச்சியோடு செய்வேன் என்பதைக் எடுத்துக் காட்டும் ஒரு பாவனை ஆகும்.

227. இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தீய ஆவிகள் ரோம துவாரங்கள் வழியே சென்று உடலில் அமர்ந்து கொண்டு விடும். சுடுகாட்டில் சடங்குகள் செய்யப் போகும்போது இறந்து போனவர்களின் ஆத்மாக்கள், வஸுக்களிடம் இருந்து தப்பி ஓடி அவர்களது ரத்த சம்மந்தம் உள்ளவர்களது, அதாவது அவர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்துள்ளவர்களது முடியில் சென்று அமர்ந்து கொண்டு வீடு திரும்ப முயலுமாம். அதனுடன் சுடுகாட்டில் உள்ள பிற ஆத்மாக்களும் சேர்ந்து அமர்ந்து கொண்டு விடும்.

228. இதனால்தான் அந்த காலங்களில் மயானங்களில் சென்று திரும்பும் அனைத்து உறவினர்களும் அங்கேயே மொட்டை அடித்துக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இன்னமும் சில கிராமங்களில் அந்த ஊரில் உள்ள அனைவருமே ஒருவரது இறப்பில் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது என்பதன் காரணம் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் கிராமத்தினர் அனைவருமே சடங்குகளில் பங்கு கொள்வார்கள் என்பதே.

229. இறந்தவரது உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் வேளையில் மயானம்வரை உடலில் இருந்து வெளியேறிய ஜீவனும் அதன் மீதே பயணித்துக் கொண்டு இருக்கும். அதன் காரணம் உடலுக்குள் உள்ள ஆத்மா அதுவரை தான் தங்கி இருந்த உடல் அழிக்கப்படுவதை நேரடியாகக் கண்ட பின்னரே திருப்தி அடைந்து வஸுக்களுடன் வான்வெளிக்குச் சென்று விடும்.

230. மயானத்தில் மின் அடுப்பில் உடலை எரிக்காமல் விறகுக் கட்டை மீது வைத்து மயான பூமியிலேயே சாதாரண முறையில் தகனம் செய்பவர்கள் பிணத்தை தகனம் செய்த மறுநாள் மயானத்திற்கு சென்று பிணம் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல் மீது பாலை ஊற்றி அதில் கிடக்கும் எலும்புகளை பொறுக்கி எடுத்து, அவற்றை பால் நிரப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அங்கு அவற்றைக் கரைத்தப் பின் அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்தப் பின் வீடு திரும்புவார்கள்.

231. இவை அனைத்தும் முதல் நாள் சடங்கு என்றாலும், பிணத்தை எடுத்த அடுத்த நாள் வரை தொடர்கிறது. அதன் காரணம் மின் அடுப்பில் உடனடியாக உடல் எரிந்து விடுவதைப் போல விறகுக் கட்டையில் அத்தனை விரைவாக உடல் எரிந்து விடாது. ஆகவே மறுநாள் தான் எலும்பை எடுக்க மயானத்துக்கு செல்ல வேண்டும். சில வீடுகளில் அந்த சடங்கு முடிந்தப் பின்னரே, மூன்றாம் நாள் கல் ஊன்றி கர்மாவின் பிற காரியங்களை செய்யத் துவங்குவார்கள். 

ஜீவாத்மாவின் பயணம் (10)    
பன்னிரண்டு நாள்  சடங்குகள்

232. இனி அடுத்த பன்னிரண்டு நாட்களும்  செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதையும் அவற்றின் தத்துவங்களையும் ஆராயலாம் .

233. மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது சுபம் அற்ற காரியம் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான சொல்லான அபரம் என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் இறந்து போன சடலத்துக்கு சடங்கு செய்வது என்பதினால் அபர காரியம் என்பதாக கூறப்படுகின்றது. அதையே சாஸ்திரமும் கூறுகிறது.

234. இறந்தவர்களுக்கு பன்னிரண்டு நாட்கள் செய்யப்படும் கர்மா என்பது தஹனம் முதல் பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் கர்மாக்கள் ஆகும். ஆனால் அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று செய்யப்படும் கிரேக்கியம் என்பது குடும்பத்தினரின் துயரத்தை நீக்கிக் கொள்ள செய்யப்படும் சுபஸ்வீகாரம் ஆகும். அதாவது அபர காரியம் என்பது சுப காரியத்துடன் முடிவடைகிறது. அதன் பின் மரணம் அடைந்தவரது ஜீவன் பிதுர் லோகத்தில் தெய்வமாகி விட்ட அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினரிடமும் போய் சேர்கிறது என்பது ஐதீகம்.

235. இறந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திற்கு விரைவில் செல்ல வேண்டும் என்றால் அதற்கு உதவிட நாம்  முறையாக சடங்குகளை செய்ய வேண்டும்.   அப்போதுதான் அவர்களுக்கு  பித்ரு லோகத்தில் இடம் கிடைக்கும். தவறினால் அவர்களால் தமது முன்னோர்களோடு போய் சேர முடியாமல் அலைந்து கொண்டிருப்பர். நற்கதி கிடைக்காத அவர்கள் மனம் கலங்கினால் நமக்கு நல்லதல்ல.

236. முதல் நாளே மயானத்தில் இருந்து கிளம்பி சஞ்சயனத்தை முடித்து விட்டு வீடு திரும்பும் முன்னால், சுத்தம் செய்து வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்குள்  புரோகிதர் சென்று  பிரேதம் கிடந்த அறையிலும், வீட்டிலும் முதல் நாளைய புண்யாஜனம்   செய்து வைத்து இருப்பார்.  அதன் பிறகு அடுத்த பதினோரு நாட்களும் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய வீட்டில் கல் ஊன்றுவார்கள். இதைத்தான் பாஷாண ஸ்தாபனம் செய்வது என்பார்கள்.

237. கல் ஊன்றுதல் என்பது என்ன? ஒருவர் இறந்த உடனேயே அவரது ஜீவாத்மா உலகை விட்டு வெளியேறிச் சென்று விடுவது இல்லை. அதற்கு வேறு ஒரு உடல் உருவாக்கப்படும் பத்து நாட்கள் வரை அந்த ஜீவாத்மாவானது பூவுலகிலேயே இருக்கும் என்கிறது கருட புராணம்.

238. சஞ்சயனம் முடிந்ததும், அங்கிருந்து கிளம்பும் கர்த்தா குளித்து விட்டு ஈர வேஷ்டியுடன்  ஆசமனம் பண்ணிய பின்   தர்ப்பைப் புல்லை மோதிரம்  போன்று பவித்திரம் செய்து ,அதை அணிந்து கொண்டு, பத்து நாட்களும் இறந்தவர் வாழ்ந்திருந்த  இடத்துக்கே சென்று விட்டு திரும்பும் ஜீவனை புரோகிதர்கள் ஓதும் மந்திர சக்திகள் மூலம்  பூமியில் புதைக்கப்படும் ஒரு கல்லில் செலுத்தி அந்தக் கல்லின் முன்னால் தினமும் சில  சடங்குகளை செய்வார்கள்.

239. வசுக்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும் ஜீவாத்மாவை, யமராஜரின் அனுமதியோடு மீண்டும் வசுக்கள் பூமியில் அது வாழ்ந்த இடத்திற்கே திரும்ப அழைத்து வருவார்கள்.  பாஷண ஸ்தாபனத்தின்போது வசுக்களால் அங்கு அழைத்து வரப்படும் ஜீவாத்மா  புரோகிதர்கள் ஓதும் மந்திர சக்தியினால் அந்த கல்லுக்குள் குடி புகுந்து கொள்ளும்.

240. கர்மாவைத் துவக்கிய முதல் நாள் முதல் அடுத்த பத்து நாட்களும் அதன் குடும்பத்தினரால் போடப்படும் எள்ளையும் தண்ணீரையும், பிண்டத்தையும் அங்கிருந்தவாறே அது பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல முழுமையான சூட்சும உடலை அடையத் துவங்கும். அதை பிண்ட உடல் என்றும் கூறுவார்கள். நமது கண்களுக்கு தெரியாத சூட்சும உடல் என்பது மனித உடல் அல்ல.  பிண்ட உடல் எப்படி முழுமையான உடலாகின்றது என்பது பின்னர் விளக்கப்பட்டு உள்ளது.

241. அதனால்தான் பத்து நாட்களும் பூமியிலே புதைத்த கற்களில் (பாஷாண ஸ்தாபனம்) தங்கி இருக்கும் ஜீவனை, உயிருடனான ஜீவாத்மாவாக பாவித்து, அதற்கு தினமும் எள்ளு ஜலமும், சாதமும் (பிண்டம்) கொடுத்து ஜீவித்து இருக்க வைப்பார்கள்.

242. தகனம் செய்த அடுத்த நாளில் இருந்து கல் ஊன்றி வைத்து உள்ள இடத்திற்கு  சென்று இரண்டாம் நாள் சடங்குகளை துவக்குவார்கள். அதைத் தொடர்ந்து பதினோரு நாட்கள் காரியங்களும்  அங்கேயே  நடைபெற்று முடியும்.  முதல் நாள் தகனத்தையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு நாட்கள் சடங்கு  முடிந்த பின்னர், பதிமூன்றாம் நாள் சுபகாரியம் வீட்டில் நடைபெறும்.

243. முதல் நாளன்று கல்லை ஊன்றி பாஷாண ஸ்தாபனம் செய்யாவிடில் மூன்றாம் நாளன்று கல்லினால் சம்பிரதாயமாக இரண்டு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வார்கள். இப்படியாக கல் ஊன்றி செய்யப்படும் சடங்கை முதல் நாளில் ஆரம்பிக்காவிடில் ஒற்றைப் படையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாம் நாளன்று துவக்கி அனைத்து முந்தைய நாட்களுக்குமான சடங்கையும் சேர்த்து அன்றே செய்து முடிப்பார்கள்.

244. எந்த ஒரு நிகழ்ச்சியிலும், காரியங்களிலும் முதலில் வணங்க வேண்டியது வினாயகர் பெருமானே. அவருக்கு பிறகே மற்ற தெய்வ ஆராதனைகள் துவங்கும். அதை போலவேதான் எண்களில் முதலில் துவங்குவது ஒன்று எனும் ஒற்றைப் படை எண் ஆகும், அதை தொடர்வதே பிற எண்கள். இதனால் ஒன்று என்பது வினாயகப் பெருமானுக்கு இணையான எண் எனக் கருதி, வைதீக காரியங்களில் ஒற்றைப் படை அல்லது அதன் அடிப்படையில் வரும் ஒற்றைப் படை எண் தினங்களில் காரியங்களை துவங்குவார்கள். முன் காலங்களில்  கர்மாக்களில் இதை கடைபிடித்தார்கள் என்பதாக கருத்து உள்ளது.

245. முன் காலத்தில் வெளி தோட்டத்திலோ அல்லது வீட்டின் பின்புறம்  இருந்த  தனி அறையிலோ கல் ஊன்றி காரியங்களை செய்வார்கள். ஆனால் தற்காலத்தில் விஸ்தாரமான வீடுகள் இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால், படிக்கட்டுகளுக்கு கீழே உள்ள இடத்தில், அல்லது பின்புறம் தென்னை மரம் இருந்தால் அதன் அடியிலும் வைத்து சடங்குகளை செய்தார்கள்.

246. ஆனால் மாடி குடியிருப்புக்களில் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதினால்  ஒன்பதாம் நாளன்று சடங்கு செய்ய வாடகைக்கு இடம் தரும் ஏதாவது ஒரு  மண்டபத்தில் பாஷாண ஸ்தாபனம் செய்து ஒன்பது நாட்களுக்குமான காரியங்களை ஒரே நாளில் செய்து விட்டு, 10, 11 மற்றும் 12 ஆம் நாள் காரியங்களையும் அங்கேயே சென்று செய்து விட்டு வருகின்றார்கள். தாய் மற்றும் தந்தைக்கு சடங்குகளை துவக்க ஒற்றை படை நாள் பார்க்க தேவையில்லை.

247. கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடமே அந்த சடங்குகள் செய்து முடிக்கப்படும் வரை மந்திர சக்திகளினால் ஆன, தெய்வீகம் நிறைந்திருக்கும் வகையிலான புனித கைலாயம் மற்றும் இந்திர லோகமாக அந்த ஆத்மாக்களுக்கு இருக்கும் என்பது ஐதீகம். இறந்து போனவருடைய ஆத்மா அங்கு கல்லின் உள்ளே அமர்ந்திருக்கும்.  கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஆத்மாவை அதில் செலுத்தி வைத்ததும் அந்த இடமே அதன் அரண்மனை போல மாறி விடும்.

248. ஊன்றப்பட்டு இருக்கும் கல் ஜீவாத்மாவின் சிம்மாசனம்  போன்றது ஆகும். அந்த கல்  அதற்கு சிறை சாலை போன்றது அல்ல. அதனால் ஜீவாத்மாவினால் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிய முடியும் என்றாலும், அது எங்கு சென்றாலும் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் அதை சூழ்ந்து கொண்டவண்ணமே இருப்பார்கள். அவர்களை தாண்டி அந்த ஜீவாத்மாவினால் தனியாக எங்கும் செல்ல முடியாது.

249. அந்த ஆத்மாவும் தமக்கு அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்குமாம். இப்படியாகவேதான் வஸுக்கள் அந்த ஆத்மாவை அடுத்த பன்னிரண்டு நாட்களும் அதன் குடும்பத்தினர் வாழும் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்து விட்டு மீண்டும் கல் ஊன்றி வைத்து உள்ள இடத்திற்கு திரும்பி வர வர துணை புரியும்.

250. அந்த கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஆத்மாவானது அந்த கல்லில் இருந்து வெளியேறிச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் அந்த கல்லுக்குள் வேறு எந்த ஆத்மாவினாலும் புகுந்து கொள்ள முடியாது. ஆவாஹிக்கப்பட்ட அந்தக் கல் அதன் வீடு ஆகும்.

251. இறந்தவர்களுடைய பெண் அல்லது மருமகள் கல் ஊன்றிய இடத்தில் வந்து, அங்குள்ள ஸ்நான அறையில்  ஸ்நானம் செய்து விட்டு, சொட்ட சொட்ட ஈரத்துடன் வந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள அடுப்பை  மூட்டி, பிண்டம் (அரிசி போட்டு பொங்கிய சாதம்)  தயாரித்து, புரோகிதர் கூறியபடி சடங்குகளை செய்து விட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும். எதற்காக ஈரப் புடவையுடன் பிண்டம் போட வேண்டும்?

252. பத்து நாட்கள் தினமும் காலையில் பெண் பிண்டம் செய்து தர,  கர்மாவை செய்பவர் வாஸோதகம், திலோதகம் விட்டு இறந்தவர் ஆத்மாவை திருப்தி  செய்யும்போது, ஒருவர் எந்த வயதான நிலையில் இறந்து இருந்தாலும், நூறு வயதில் மரணம் அடைந்து இருந்தாலும் கூட,  அந்த சூட்ஷம  சரீரம், மரணம் அடைந்தவர்  இளம் வயதில்  எப்படி காணப்பட்டாரோ அந்த தோற்றத்தில் மாறி விடுகின்றார்கள் என்பதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதாம்.

253. முதலில் குடும்பத்தின் இளையவர்தான் பிண்டம் போடத் துவங்க வேண்டும். அவரைத் தொடர்ந்து எத்தனை சகோதரர்கள் இருந்தார்களோ அத்தனை சகோதரர்களும் விட வேண்டும்.

254. பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க கால தாமதம் ஏற்படும்.

255. அந்த நேரத்தில் இன்னும் துணி காயவில்லையே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டு மனமும் காரியத்தில் நிறைவாக ஈடுபடாமல் உடைகள் மீது கவனத்தை வைத்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை நனைக்காமல் மாற்றிக் கொள்வது கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து எடுத்து வந்த துணிகளை உடுத்திக் கொண்டு தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது. உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது. கர்மாக்களை செய்யும்போது மனக்கட்டுப்பாடு தேவை. ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப் புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது.

256. இதற்கு ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணமும் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும். கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும். ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை சாஸ்திரங்களில் ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.

257. பன்னிரண்டு நாட்களும் கல் ஊன்றிய இடத்தில் செய்யப்படும் சடங்குகளை  அந்த ஜீவாத்மாவானது மனப்பூர்வமாக  ஏற்றுக் கொள்கின்றதாம். கல் ஊன்றிய பிறகு அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும்  வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும் தர்ப்பணம் செய்வார்கள். எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு சமர்பிக்கப்படுகிறது.

258. அதன் பின்னர்தான் சாதத்திலான பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும். தினமும் ஒரு  இளநீர் காயும் அவற்றோடு  வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் தர்ப்பணத்தால் ஜீவாத்மாவின் தாகம் அடங்கும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன இந்த சடங்கில் முக்கியமானவை ஆகும். பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது.

259. ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் போட  வேண்டும். முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும் என்றாலும் அரிசியில் சமைத்த சாதத்தையே போடுவது நல்லது. பிண்டம் போட்டு முடித்தப் பின்னர் மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

260. ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகள் அங்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். குண்டத்தின் மீது இறந்தவரின் பழைய வேட்டியையோ அல்லது புடவையையோ  போட்டு மூடி வைக்க வேண்டும்.

261. முதல் நாளில் மூன்று தடவை, அடுத்த நாள் நான்கு தடவை, அதற்கு அடுத்த நாள் ஐந்து தடவை எனப் படிப்படியாக வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை அதிகரித்துக் கொண்டே போய் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். பத்தாம் நாளன்று பன்னிரண்டு முறை செய்யப்படும் சடங்கை ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் என்பார்கள். ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் செய்வதன் மூலம், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, முக்தி அடையும் என்று நம்பப்படுகிறது. இதுவும் சிலர் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும். அதையும் புரோகிதர் கூறுவார்கள்.

262. அதை போலவேதான் நவ சிராத்தம் எனும் சடங்கையும் 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்வார்கள் (1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்). நவ சிராத்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களின் ஜீவாத்மா  சாந்தி  அடைந்து , பித்ரு லோகத்தில்  மன நிறைவோடு இளைப்பாறுவார்கள் என்பது தாத்பர்யம். அதை செய்த பின் சடங்கு செய்த புரோகிதருக்கு அரிசி தானம் செய்வார்கள்.

263. இப்படியாக பதினோரு நாட்களும் தினமும் தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா மானசீகமாக உண்டதும், கல்லில் ஆவாஹிக்கப்பட்டு இருக்கும்  ஜீவாத்மா, அது வாழ்ந்திருந்த அதே தோற்றத்திலான  சூட்சும உடலை படிப்படியாக அடைகிறது.

264. இதைக் குறித்து  கருட புராணம் அழகாகக் கூறுகிறது. கர்த்தாவினால் (சடங்கு செய்பவர்) இறந்தவருக்கு  முதல் நாள் படைக்கப்படும்  பிண்டத்தினால் ஜீவாத்மாவிற்கு   தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தில் கழுத்தும், தோளும் உண்டாகும்;

265. மூன்றாம் நாள் போடப்படும் பிண்டத்தால் கைகளும் மார்பும் உண்டாகும்; நான்காம் நாள் போடப்படும் பிண்டத்தால் வயிறு உண்டாகும்;  ஐந்தாம் நாள் போடப்படும் பிண்டத்தால் உந்தி(தொப்புள்) உண்டாகின்றது.

266. ஆறாம் நாள் போடப்படும் பிண்டத்தினால் பின்புறம் உள்ள பிரஷ்டம் தோன்ற; ஏழாம் நாள் போடப்படும் பிண்டத்தினால்  குய்யம் எனப்படும் ஆண் மற்றும் பெண் குறிகளும், எட்டாவது நாள் போடப்படும் பிண்டத்தினால் தொடைகளும் உண்டாகின்றன.

267. ஒன்பதாம் நாள் போடப்படும் பிண்டத்தினால் கால்கள் ஏற்பட, பத்தாவது நாள் போடப்படும் பிண்டத்தினால் பூரண சரீரம் உருவாகின்றது.

268. பதினோரு நாட்களும் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஆத்மா மானசீகமாக உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், தேவலோகத்தில் உள்ள நம் மூதாதையர்களுக்கும் ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது.

269. தனக்கு தரப்பட்ட பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்றிடும் ஜீவாத்மா பதினோராவது நாள், தான்  வாழ்ந்திருந்த  வீட்டிற்கு வந்து, உயிரோடு தான் இருந்தபோது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும், நிகழ்வுகளையும் நினைத்துப் பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் அப்படி  வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி துடிக்குமாம்.

270. எதற்காக பதினோறாவது நாள் அங்கு ஜீவனை அழைத்து வந்து அழுது துடிக்க வைக்க வேண்டும் என்பதற்கும் ஒரு காரணம் உள்ளது.

271. எத்தனை துக்கப்பட்டாலும் மீண்டும் தன்னால் அந்த உடலுக்குள் புகுந்து கொண்டு அந்த வீட்டில் சென்று வாழ முடியாது என்கின்ற உண்மையை அந்த சூட்சும சரீரத்தில் உள்ள ஜீவாத்மா உணர வேண்டும். அழுதழுது, இனி மீண்டும் எரிந்து போன உடலுக்குள் மீண்டும் செல்ல முடியாது என்ற உண்மையை புரிந்து கொண்டு அதன் மனம் வெறுமை அடையும்போது, அந்த ஜீவாத்மாவின்  துக்கமும் மறைந்து விடும்.

272. உடலின் மீதான பற்றற்ற நிலைக்கு சென்று மனம் சாந்தி அடைந்து, கர்மாக்களின் விளைவுகளை எதிர் கொள்ளும் மன நிலைக்கு சென்று விடும் ஜீவாத்மா பன்னிரண்டாம் நாள் கர்மாக்கள் முடிந்ததும்  வஸுக்களிடம் இருந்து விலகி யமகணங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். அதன் பின்னரே அந்த ஜீவாத்மா யமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்படும்.

273. அந்த ஜீவாத்மா சூட்சும உடலை முழுமையாக அடையும்வரை ஏன் காத்திருப்பார்கள் என்றால், சொர்க்க நரகங்களில் அவை தமக்கு தரப்படும் தண்டனைகளையும், சுகபோகங்களையும் மனித உடல் அனுபவிக்கும் அதே உணர்வுகளுடன் இருந்தவாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள நியதி ஆகுமாம்.

ஜீவாத்மாவின் பயணம் (11)    
பன்னிரண்டு நாள் சடங்குகளில்  சில முக்கிய செய்திகள்

274. சரீரத்தை விட்டு வெளியேறிய ஜீவாத்மா தகனத்துக்குப் பின்னர் அடுத்த பதினோரு நாட்களும் சூட்சும உடலோடு பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த பதினோரு நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து பிண்டம் போடுகின்றார்கள்.   ஜீவாத்மாவிற்கு  மானிட சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும், பிண்டத்தை உண்ண முடியும்  என்ற சந்தேகம் எழலாம்.

275. இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஜீவ அணுக்கள் உண்டு. காற்றில் உள்ள பல கோடி ஜீவ அணுக்கள் நம்மை உரசிக் கொண்டு செல்லும்போது அந்த உணர்வு மூலமே  காற்று என்பதை உணர முடிகின்றது; அதைப் போலத்தான் ஒலி , வாசனை, ஒளி, பார்வை என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையிலான பல கோடி ஜீவ அணுக்கள் உள்ளன. அவற்றின்  மூலமே நம்மால் அவற்றின் தன்மைகளை உணர முடிகிறது.

276. மனித உடலுக்குள் உடல் சார்ந்த (Physical) உணவு புகுந்து சென்று வயிற்றில் அமர்ந்ததும்தான் பசி அடங்கும், தண்ணீர் தாகத்தை அடக்கும்.  ஆனால் சூட்சும உடலுக்கு பசியை அடக்கவும், தாகத்தைத் தீர்க்கவும் உடல் சார்ந்த பொருள் தேவை இல்லை, அவற்றால்  உடல் சார்ந்த பொருளை உண்ணவோ குடிக்கவோ முடியாது. ஆனால் அந்த உடல் சார்ந்த பொருட்களான பிண்டம் மற்றும் எள்ளும் தண்ணீரும் வெளிப்படுத்தும், நமது கண்களுக்கு தெரியாத ஜீவ அணுக்களை அவை ஸ்வாசித்து அவற்றை தன்னுள் கிரகித்துக்  கொள்ளும்போது அவற்றின் பசி மற்றும் தாகமும் அடங்குகின்றன.

277. இந்த சடங்குகளுக்கு எள்ளையும், தர்பைப் புல்லையும் எதற்காக பயன்படுத்துகிறார்கள்? வேறு தான்யங்களை ஏன் பயன்படுத்துவது இல்லை என்ற கேள்வி எழலாம்.

278. எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். எள்ளிலும் கருப்பு எள், வெள்ளை எள் இரண்டு வகை உண்டு. எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே என்று கூறப்பட்டாலும்,  கருப்பு எள் வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறப்படுவதினால் சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் அது பிதுர் தேவர்களை அதிக சந்தோஷப்படுத்தும் என்பார்கள்.  அதனால்தான் எள்ளை தண்ணீருடன் கலந்து சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால் வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஆத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது.

279. மும்மூர்த்திகளும் வசிப்பதாக கூறப்படும் தர்ப்பைப் புல் முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும்   அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும்   அதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும். இதனால்தான் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஆத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள் என்று முன்பே கூறி இருந்தேன்.

280. தர்பையில் நமக்கு தெரியாத அளவிலான காந்த சக்தி அதிகம் உள்ளது என்பதினால் அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு,  பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்க  அதை பயன்படுத்துகிறோம். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள்.

ஜீவாத்மாவின் பயணம் (12)    
பன்னிரண்டு நாள் சடங்குகளில்   பத்தாவது நாளன்று நடைபெறும் சடங்குகள்

281. பத்தாம் நாள் காரியம் என்பது, ஒருவர் இறந்த பத்தாவது நாளில் செய்யப்படும் சடங்குகளைக் குறிக்கும். இதில், இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரைச் சார்ந்தவர்கள் துக்கத்தில் இருந்து மீண்டு வரவும் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில், நித்திய விதி, பங்காளி தர்ப்பணம் (குழி தர்ப்பணம்), ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம், பொரி ஓதியிடல் போன்றவை பத்தாவது நாளன்று நடைபெறும் சடங்கில் முக்கியமானவை ஆகும்.

282. மரணம் அடைந்தவரின் ஆத்மா முதல்  மூன்று நாள் தண்ணீரிலும், அதற்கு  அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும், அதற்கு  அடுத்த மூன்று நாட்கள் விண் வெளியிலும் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களுடன்  வசிக்கிறது. அது வசிக்கும் தண்ணீரும், அக்னியும் நமது கண்களுக்கு தெரிவதில்லை. அவை நமது கண்களுக்கு புலப்படாத வகையில், ஆத்மாவிற்கு மட்டும் தெரியும் வகையில் விண்வெளியில் உள்ளன.

283. இந்த ஒன்பது நாட்களிலும் அது வான் வெளியிலேயேதான் சுற்றிக் கொண்டே இருக்குமாம்.   வான் வெளியில் இருந்து கீழிறங்கி வந்து, பத்தாவது நாளன்று நடைபெற உள்ள சடங்கை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற எண்ணத்துடன்  தான் வசித்து வந்திருந்த வீட்டிற்குள் மீண்டும் நுழைகிறது. அதனால்தான் பத்தாம் நாள் காரியம் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது என சாஸ்திரம் கூறுகிறது.

284. முதலில் கர்த்தாக்கள் துணி பிழிந்த தண்ணீரால்  செய்யப்படும்  வாஸோதகமத்தை 30 முறையும், எள்ளு தண்ணீரால் செய்யப்படும்   திலோதகம் எனப்படும் நித்ய விதியை 75 முறையும்  செய்வார்கள்.

285. குழி தர்ப்பணம்:- பத்தாம் நாள் சடங்கு அன்று இறந்தவரின் பங்காளிகள் வந்து பத்து தினங்களுக்கான குழி தர்ப்பணம்  செய்ய வேண்டும்.

286. குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி, அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்வார்கள். கர்மா நடைபெறும் இடத்தில் குழி செய்து அதில் எள்ளும் தண்ணீரும் ஊற்றியதும் அவற்றின் ஜீவ அணுக்கள் பூமிக்குள் ஊடுருவி அதே பூமிக்குள் ஓடும் நதி, கடல், குளம், நீர் நிலை என அனைத்து நீரிலும் கலந்து விடுமாம். அதனால் என்ன பயன் ?

287. பண்டைக் காலத்தில் இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை பூமிக்குள் ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி தர்ப்பணம் செய்யலாம் என விதி இருந்தது.

288. சஞ்சயனத்தில் இறந்தவரது சாம்பல் மற்றும் எலும்பு இரண்டுமே நதி மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டதும், கண்களுக்கு புலப்படாமல் இருக்கும், இறந்தவர் உடலின் ஜீவ அணுக்கள்  பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து பயணித்தபடி இருக்கும்.  அதே நேரத்தில் பங்காளிகளினால் குழி தர்பணத்தில் விடப்படும்  நீரின் ஜீவ அணுக்களும் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து விடும்.

289. பூமிக்குள் உள்ள நீரில் ஏற்கனவே பயணித்துக் கொண்டு உள்ள இறந்தவரது  ஜீவ அணுக்களை, பங்காளிகள் விட்ட நீரின் ஜீவ அணுக்கள் ஸ்பரிசித்து அவற்றுக்கு தாக சாந்தி தரும்போது அந்த உணர்வுகள் வசுக்கள்  கட்டுப்பாட்டில் உள்ள ஜீவாத்மாவின் தாகத்தை தணிக்கின்றது. அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம்  செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது.

290. அது மட்டும் அல்ல பூமிக்குள் உள்ள நீர் ஆவியாகி மேல் எழும்பும் போது அவைகளில் பயணிக்கும் தர்பண நீரின் உயிர் அணுக்கள் வான் வெளிக்கு சென்று, இறந்தவரது ஜீவன் யமபுரியை நோக்கி பயணிக்கையில், அந்த  ஜீவனின் தாகத்தை தீர்த்தவண்ணம் அதோடு ஒரு வருட காலமும் பயணிக்கும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் மரணம் அடைந்தவரது ஜீவாத்மா  தான் தனி நபர் அல்ல, இறந்த பின்னரும் தனக்கு தன் குடும்பமும் தனது பங்காளிகளின் துணையும் உள்ளது என்ற மன தைரியத்தைப் பெறும். இது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இந்த சடங்கின் தாத்பர்யத்தில் உள்ள ஆழமான ஆன்மீக தத்துவம் ஆகும்.

291. வான் வெளியில்  கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் இருந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மா குறிப்பிட்ட தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை கிரகித்துக் கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழலாம். உண்மை என்ன என்றால் இதுதான் தெய்வீகம் என்பது. காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட  கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு ஜீவாத்மா அதன் குறிப்பிட்ட கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகளின் தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும், அவற்றால் மற்றவர்களுடைய தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம். இது நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட, நமக்கு புரியாத, விசித்திரமான தெய்வீக ஆற்றல் ஆகும்.

292. தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலது கை ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே உள்ள இடைப் பகுதியில் ஓடும் ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய ரேகைகள் என்பார்கள்.

293. பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும் தர்ப்பண நீரானது அவர்களது கைகளில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே ஓடிச் செல்லும்போது அந்த பூம்ய ரேகைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம். அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்ற தெய்வ நியதி நியாயமாகவே உள்ளது.

294. ப்ரபூத பலி:- ப்ரபூத பலி என்பது  சாதம், அடை உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மா தற்காலிகமாக குடி இருந்த  கல் (பாஷாண உத்பாதனம் செய்யப்பட்ட  கல்) முன்னால் கொட்டுவதாகும்.

295. 3 லிட்டர் அரிசியில் செய்த அன்னம், உப்பு போடாமல் செய்த 11 இட்லி 11 அடை, 11 அப்பம், 11 முறுக்கு, 11 வடை போன்றவற்றை கல் ஊன்றிய இடத்தின் அருகில் வைத்து படைப்பதையே பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி என்கிறார்கள். இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம்.

296. ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு (வீடுகளில் சாதரணமாக அப்படி கோலம் போடுவது இல்லை), துணியின் நுனிப் பகுதி தெற்கு நோக்கி இருக்குமாறு வைத்து, அதன் மீது தர்ப்பைகளை பரப்பி வைத்து, எள்ளும் நீரும் விட்டு, அதன் மீது அன்னம், அப்பம், கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் போன்ற அனைத்தையும் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும், நீரும் விட்டு, தமது குலத்தை தழைக்க வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். பாத்திரங்களை எள் நீரால்  அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் பார்த்தபடி நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிவடையும்.

297. முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு பத்தாம் நாளன்று அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் உப்பில்லாத சாப்பாடு எனும் பெயரில் அந்த கல் முன்பாக போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய் விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும் மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள். இந்த சடங்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கு, குடும்பம் மாறுபட்டு இருக்கலாம்.

298. கல்லை எடுக்க :- அதன் பின்னர் கர்மா செய்பவரை தவிர அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச் சொல்லி பிரார்த்தனை செய்த பின்னர், கண்களை மூடிக் கொண்டு, ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும். கற்களை எடுத்தப் பின் கண்களை திறக்க வேண்டும்.

299. பாஷாண உத்தாபனம்: இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கல்லை அகற்றும் இந்த சடங்கையே பாஷாண உத்தாபனம் என்பார்கள். அவற்றை துணியில் வைத்து கையலம்பிக் கொண்டு, கல் மீது ஒட்டிக் கொண்டு இருந்த மண், தானியங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு போய் எல்லாவற்றையும் ஒரு குழியில் போட்டு அதன் மீது நெல்லையும் சிறிது பசுவின் சாணத்தையும் கொட்டி விட்டு மூடி விடுவார்கள். இதே போல நதி கரையில் காரியங்களை செய்வார்கள். பெரியோரை வலம் வந்து பிரார்த்தனை செய்த பின் தாடி மீசைகளை மழித்த  பின் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.

300. யதாஸ்தானம்: பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து (முன்னிருந்த இடம் அல்லது சம்பந்தப்பட்ட இடம் என்று பொருள்) செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஆத்மாவானது, கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்சும சரீரம் எடுத்த அந்த  ஆத்மாவானது யம தூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம்.  அதன் பயணத்துக்கு வழி வகுக்கும் நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும் சடங்கு செய்து அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

301. இறந்தவர் மனைவி உயிருடன் இருந்தால், அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப் புடவை  வாங்கி அதை அவள் தோளின் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை தோளில் புடவை சாத்துவது அல்லது புடவை போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட பட்டுப் புடவைகளை அணியக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம். சமூகத்தில் விதவை எந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு புரிய வைக்கும் ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.

302. தாலி எடுத்தல்:- பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு நார் மடி புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின்   எல்லா சுமங்கலிகளையும் வெளியே போகச் சொல்லி விட்டு பூவையும் தாலியையும் அகற்றி விடுவர் அல்லது நார் மாடி புடவையை அவள் மீது போட்ட பின்னர் இரவு நடு நிசிக்கு பின் தாலியை  கழுத்தில் இருந்து எடுத்துத் தருமாறு கூறி அதை வாங்கிக் கொண்டு பால் கிண்ணத்தில் போடுவர்.

303. பண்டைக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு விதவையாகக் கருதப்பட்டதினால் அன்றைய தினம் அவர்கள் தாலியை எடுத்து விட்டு தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளை புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையான பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.

304. அதற்கு அடிப்படைக் காரணம் விதவை ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள் வரை பக்தி மார்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில் இந்த சடங்கு முறை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை அணிந்து கொள்வதில்லை, நகைகளை அணிந்து கொள்கின்றார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.

305. சாந்தி ஹோமம்: வீட்டிற்கு வந்ததும் சாந்தி ஹோமம் செய்து  முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள். சாந்தி ஹோமம் அமைதிக்காக செய்யப்படும் ஹோமம் ஆகும். அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை  (உறவினருக்கு அப்பம் மற்றும் பொறி ஓதியிடுதல்) என்பதையும் செய்வார்கள். இது இறந்தவருக்கு செய்யப்படும் தானமாகும். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.

306. ஆனந்த ஹோமம்: சாந்தி ஹோமம் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சில குடும்பங்களில் ஆனந்த ஹோமம் என்பதையும் செய்வார்கள். இது வீட்டினரின் மகிழ்ச்சிக்காக செய்யப்படும் ஹோமம் ஆகும். இவை அனைத்தும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரைச் சார்ந்தவர்கள் துக்கத்தில் இருந்து மீண்டு வரவும் செய்யப்படும் சடங்குகள் ஆகும்.

307. வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள் கர்மாவில் செய்யப்படும் மந்திரங்களுக்கு உரிய தேவதைகள். ஆத்மாவை பிடித்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை விரட்டி தம்மை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் ஆத்மாவுக்கு பாதுகாப்பு தரும் தேவதைகளே வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள். அவர்களுடைய பாதுகாப்பில் அடுத்த பத்து நாட்களிலும் இருக்கும் ஜீவாத்மா, அந்த பத்து நாட்களிலும் செய்யப்படும் சடங்குகளினால்  பசி, தாகம்  இன்றி இருக்கும். பத்து மணி நேரம், பத்து நாட்கள் என்ற அனைத்துமே பத்து என்ற எண்ணிக்கையில்தான் அடங்கி உள்ளது.

308. பத்து நாட்கள் சடங்குகள் எனும் கணக்கிற்கு இன்னொரு காரணமும் உள்ளது. மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாவானது  வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களிடம் பாதுகாப்பாக உள்ள நேரத்தில் அந்த ஆத்மாவின் தர்ம, அதர்ம கணக்குகளை ஆராய்ந்து பார்த்து அதற்கான தண்டனைகளையும் முடிவு செய்து கொண்ட பின்னரே அந்த ஜீவாத்மாவை  தமது யமகணங்கள் மூலம் அழைத்துக் கொண்டு செல்ல யமதர்ம தேவருக்கு பத்து நாட்கள் ஆகுமாம்.

309. அந்த பத்து நாட்களிலும் இறந்தவர் சந்ததியினர் செய்யும் ஆத்மார்த்தமான கர்மாக்களின் விளைவாக என்னென்ன பாவங்கள் விலக்கப்பட வேண்டும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த ஆத்மாவின் முடிவான நிலை இதுதான் என பத்தாவது நாளன்று வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களிடம் கூறிய பின்னர் யமதர்ம தேவர் அந்த ஆத்மாவை அழைத்துச் செல்கிறார்.

310. வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய் விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க யமதர்மன் அனுமதித்து உள்ளாராம்.

ஜீவாத்மாவின் பயணம் (13)    
பன்னிரண்டு நாள் சடங்குகளில்  பதினோராவது நாளன்று நடைபெறும் சடங்குகள்

311. பதினோராவது நாள் காரியம் என்பது ஒருவரது இறப்புக்குப் பிறகு செய்யப்படும் இறுதிக் சடங்குகளில் ஒன்றாகும். இது பொதுவாக ஏகோத்திஷ்டம் (அதாவது ஒருவருக்கு என்பது பொருள்)  என்று அழைக்கப்படுகிறது.

312. இதில், இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன. பதினோராவது நாள் காரியத்தில் செய்யப்படும் முக்கிய சடங்குகள்:

  • யஜ்ஞோபவீத தாரணம்: நீராடிய பின்னர், கர்த்தாக்கள் அனைவரும் பத்து நாட்களும் அணிந்திருந்த பழைய பூணலை கயற்றி விட்டு புதிய பூணலை முறைப்படி மந்திரங்கள் ஓதி அணிந்து கொள்ள வேண்டும்.
  • புண்யாஹவாசனம்: புண்யாஹவாசனம் என்பது தீட்டு வீட்டை மந்திரங்கள் ஓதி புனிதப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் செய்யப்படும் ஒரு சடங்காகும்.
  • நவசிராத்தம்: நவசிரார்த சடங்கு என்பது என்பது ஒன்பது நாளுக்கும் சேர்த்து இறந்தவருக்காக செய்யும் ஒன்பது தானம் ஆகும்.
  • வ்ருஷ உத்ஸர்ஜனம்: வ்ருஷபம் என்றால் காளை மாடு என்று அர்த்தம். உத்ஸர்ஜனம் என்றால் விடுவித்தல் அல்லது விலக்குதல் என்று பொருள்.  வ்ருஷ உத்ஸர்ஜனம் என்பது இறந்தவரின் பிரேத உடல் இந்த உலகிலிருந்து   அகலுவதற்காக செய்யப்படும் சடங்கு ஆகும். அந்த சடங்கு என்ன என்றால் ஒரு மாட்டின் கன்றின் மீது சூலம் போல குறியிட வேண்டும்.   அதன் பிறகு அந்த காளை மாட்டை தானம் செய்து விட வேண்டும். இந்த கர்மாவை எதற்கு செய்கின்றார்கள் என்றால் இறந்து விட்டவரின் ஜீவாத்மாவானது பிசாசாக மாறி விடக் கூடாது; மேலுலகம் சென்று பித்ருக்களோடு நல்ல முறையில் சேர வேண்டும் என்பதற்காக செய்யப்படும் சடங்கு ஆகும்.
  • ஏகாதச பிராமண போஜனம்: பதினோரு பிராமணர்களுக்கு உணவு அளித்தல்.
  • ஆத்ய மாசிகம்: பொதுவாக மாசிகம் என்பது இறந்தவர் ஜீவனுக்கு செய்யும் நேர்த்திக் கடன் என்பதாகும். இந்த சடங்கின் மூலம் இறந்தவரின் ஆன்மாவுக்கு பிசாசத்துவ நிவிர்த்தி கிடைக்கும்.  இந்த சடங்கு இறந்தவரின் ஆன்மா அமைதி பெறவும், அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் செய்யப்படுகின்றன. மேலும், இது குடும்பத்தோர் மற்றும் உறவினர்கள் துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கும் ஒரு வழியாகும்.
  • ஒத்தன் சாப்பாடு :- பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு ஒத்தன் சாப்பாடு என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதை உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள். மீதி இருந்தால் அதை அவர் எடுத்துக் கொண்டு சென்று விட வேண்டும். அவருக்கு அதற்கான தட்ஷணைகளையும் தருவார்கள்.
  • அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செய்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.

ஜீவாத்மாவின் பயணம் (14)    
பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் சடங்குகள்

313. 12வது நாளில் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹவாசனம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும். நீர்க் குடத்தைத் (உதக கும்பம்) தானமாக வழங்குவதே சோத கும்ப சிரார்த்தம் என்று கூறப்படுகின்றது. சோத கும்ப சிரார்த்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களுடைய ஆத்மாவின் தாகம் மட்டும் அல்ல அதன் பசியும்   தீரும் என்பர்.

314. ஸபிண்டீகரணம் :- இதில் முக்கியமான கர்மா ஸபிண்டீகரணம் என்பதாகும். ஸபிண்டீகரணம் என்பது தன்னுடைய குலத்திலுள்ள மூதாதையர்களுக்காக செய்யப்படுகின்ற பூஜையாகும். இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது ஸபிண்டீகரணம் எனும் சடங்கு ஆகும்.

315. மூதாதையர்களுக்காக பிண்டங்களை வைத்து, அதோடு கர்மா செய்யப்படும் இறந்தவருக்கான பிண்டத்தையும் வைத்து, இரண்டு பிண்டங்களையும் ஒன்றாக சேர்ப்பார்கள். இந்த ஸபிண்டீகரணம் சடங்கை செய்வதன் மூலம் இறந்தவர் தன்னுடைய பிரேத உருவத்தை விடுத்து தன்னுடைய மூதாதையர்களுடன் இணைந்து கொள்வார் என்பது ஐதீகம்.

316. இந்த சடங்கை மரணம் அடைந்தவரது 12வது தினத்திலோ, 15வது தினத்திலோ அல்லது ஆறாவது மாதத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவரை இறந்தவர் பிரேத ஜென்மத்துடன் இருப்பார். ஆகவே அதை செய்து முடிக்காதவரை இறந்தவருடைய பிள்ளைகள் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுதல் கூடாது. ஸபிண்டீகரணம் செய்து முடித்த பின்பே இறந்தவருடைய பிரேத ஜென்மமானது முழுவதுமாக நீங்கப்பெற்று பித்ருக்களின் உருவை அடையும். இந்த கர்மாவை செய்த பின் தாய், தந்தையரின் வம்சாவளியில் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

317. பிரேதத்துவம் பெற்ற ஆத்மாக்கள் உடனடியாக அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல. அந்த பிரேத ஆத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள தண்டனை மற்றும் பிரத பலன்களை எதிர் பார்த்தவண்ணம் யமலோகத்தில் உள்ள யமராஜனிடம் சரணடைய பயணித்துக் கொண்டு இருப்பார்கள்.

318. அதன் பயணம் முடிவுற ஒரு வருட காலம் ஆகுமாம். ஆகவேதான் அந்த ஜீவன்கள் நற்கதியை அடைய வேண்டும் என்பதற்காக பித்ரு ஆத்மாக்களுக்கு அந்த ஒரு வருட காலத்துக்குள் செய்ய வேண்டிய பதினாறு ஸ்ரார்தங்களை ஒரே நாளில் செய்ய வேண்டி உள்ளது. இதை சோத கும்ப சிரார்த்தம் என்று கூறுவார்கள். சோடசம் என்றால் பதினாறு என்பது பொருள் ஆகும். இதற்கு முக்கியமான காரணமும் உள்ளது.

319. இறந்தவராது ஆத்மா யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் தாகம் இன்றி பசி இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும்படி செய்யவே சோத கும்பம் செய்ய வேண்டி உள்ளது.

320. ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக அந்த பாவம் எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்ம தேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கொடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை.

321. பதினாறு ஸ்ரார்தங்களையும் ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். இதை சோத கும்ப சிரார்த்தம் என்று கூறுவார்கள்.

322. இறந்தவரை நேரடியாக பித்ருவாக பாவித்து முதன் முதலாகச் செய்யப்படும் ஸ்ரார்தமான ஸோத கும்பம் எனப்படும் சடங்கை பன்னிரண்டாம் நாள் செய்து, பதினாறு அந்தணர்களுக்கு தரும் தானங்களைத் தவிர, ஒரு அந்தணருக்கு போஜனமும் போட்டு தட்ஷணை தருவார்கள்.

ஜீவாத்மாவின் பயணம் (15)    
பதிமூன்றாம் நாள் சடங்குகள்

323. சுபஸ்வீகாரம் :- பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள். அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள்.

324. நவகிரஹ ஹோமம், சாந்தி ஹோமம் போன்றவற்றை செய்து வீடு முழுவதும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் மீதும் ஹோமத்தில்   ஹோமத்தில் வைத்து பூஜை செய்த புண்ணியாவசன தண்ணீரை தெளிப்பார்.

325. சுபஸ்வீகாரத்தின் அன்று மாலை சாஸ்திரிகள் இறந்தவரின் ஆத்மா பயணிக்கும் கதையைக் கூறுவார். பண்டிதர்களினால் கூறப்படும் அந்த கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து உள்ளது.

326. அன்று மாலை குடும்பத்தினர் அனைவரும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு வருவார்கள். அதோடு வீட்டினருக்கு இருந்த அனைத்து தீட்டும் முடிந்து விட்டது என்பதாகும்.

ஜீவாத்மாவின் பயணம் (16)    
பொது நியதிகளும்,பன்னிரண்டு  நாட்கள்  சடங்குகள் முடியும்வரை மரணம் அடைந்தவர்   வீட்டில் வசிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய தீட்டு காலமும் அதன் காரணங்களும்

327. குடும்பத்தில் ஒருவருடைய மரணத்தினால் வீட்டினருக்கு ஏற்பட்டு உள்ள அசௌகர்யம் அதாவது இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள துயர நிலைக் காலம் என்பதை சுருக்கி அசௌகம்  என்பார்கள். அதைதான்  சாஸ்திர சம்பிராயததில் தீட்டு காலம் என்று கூறி உள்ளார்கள்.

328. ஒருவர் இறந்து விட்டால் அந்த வீட்டினருக்கு அசௌகம் அல்லது தீட்டு என்பது வந்து விடும்.  வீட்டின் சொந்தக்காரர்களுக்கு இறந்தவருடனான சொந்தத்தின் அடிப்படையில் தீட்டுக் காலம் வறையுறுக்கபட்டு உள்ளன. அது குறித்து கட்டுரையின் இறுதி பாகத்தில் தந்துள்ளேன்.

329. இறந்தவர்களது குடும்பத்தினர்களின் துக்க அளவின் மன நிலைக்கு ஏற்ப  தீட்டுக் காலம் நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதாவது ஒருவர் வீட்டில் இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள மனத் துயர காலத்தில் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.  மகிழ்ச்சியுடன் இருந்தபடி காரியங்களை செய்ய மனம் வராது. வீட்டில் உள்ளவர்கள் அவ்வப்போது அழுதவண்ணம், துக்கத்தோடு இருப்பார்கள்.

330. ஒருவர் பெரும் துயரில் இருக்கும்போது அவர்களது நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும், மன நிலை பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு மன ஒய்வு தேவை. அப்போது அதிக வேலை செய்தால் நரம்பு தளர்வு இன்னும்  அதிகம் ஆகும். நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும்போது அவர்கள் துயரம் இன்னும் பெருகும். ஏன் என்றால் மனக் கட்டுப்பாடு  அவர்களிடம் குறைந்திருக்கும். ஆகவே அவற்றை தடுக்கவே, அமைதி தரவே   அந்த குடும்பத்தினரை கர்மா முடியும்வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டவர்களாகக் கருதுவார்கள்.

331. கர்மா செய்யும் காலமான பன்னிரண்டு  (பதிமூன்றாம் நாள் சுப காரிய நாள்)  நாட்களில் அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். ஆகவே அதையே தீட்டு காலம் என்று கூறி அந்த தீட்டு காலத்தில் இறந்தவர் வீட்டுக்கு அதிகம் யாரும் சென்று குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற  நெறிமுறைகளை வகுத்திருந்தார்கள்.  உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுபவருக்கு ஒய்வு தர தீட்டு எனக் கூறப்பட்ட இதில் விஞ்ஞான அடிப்படையும் உள்ளது.

332. இறந்தவருக்கு பன்னிரண்டு  நாட்கள் சில சடங்குகளை செய்ய வேண்டும். அவற்றை செய்யாவிடில் இறந்தவரது ஆத்மாக்களை சாந்தி அடையச் செய்ய முடியாது. யமதர்மராஜர் கருணையையும் அவர்களுக்கு பெற்றுத் தர முடியாது. ‘ஐயோ நம்மை விட்டுப் போய் விட்டாரே’ என மனத் துயரில் இருந்தவாறு சடங்குகளை செய்யும்போது குடும்பத்தினர் மனம் சஞ்சலத்தில் இருக்கும்.

333. அதனால்தான் மன அதிர்வுகளிலிருந்து மீண்டு, மனநிலையை பக்குவப்படுத்திக் கொண்டு அவரவர் இயல்பு நிலைக்குத் திரும்ப  தீட்டு எனும் பெயரில் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.

334. தீட்டுக் காலம் அனுஷ்டிக்கப்பட்டதற்கு மன மற்றும் உடல் தளர்ச்சியைத் தவிர  விஞ்ஞான அடிப்படையிலான இன்னொரு வலுவான காரணமும்  உள்ளது.  இறந்து போனவர்கள் வீட்டில்  இறந்தவரது உடலில் இருந்து சில கிருமிகள் வெளியேறி இருக்கும். அவை அதிக காலம் உயிருடன் இருக்காது. பத்து அல்லது அதிகபட்சம் பன்னிரண்டு நாட்களே உயிர் வாழத் முடிந்தவை அந்த கிருமிகள். இதுவே தெய்வ லீலையில் ஒரு அதிசயம் ஆகும்.    ஆகவே அவை இறந்தவர்கள் வீட்டில்   சில நாட்களே உயிருடன் இருக்கும் என்றாலும் அவற்றை மற்றவர்களுக்கும்  பரவ விடக் கூடாது என்பதினால் மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு எவரும் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு ‘தீட்டு வீடு’ எனும் பெயரில் இருந்தது.

335. கர்மா செய்பவர்கள் தினமும் சுடுகாட்டுக்கு சென்று கல் ஊன்றிய இடத்தில் பன்னிரண்டு நாள் காரியம் செய்து விட்டு வருவார்கள். அப்போது அவர்கள் உடலில் சில விஷக் கிருமிகளுடன் கூடிய அசுத்தங்களும் ஒட்டிக் கொண்டு  வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட விஷக் கிருமிகளை  தாமே அறியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதினால் அவை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பரவி இருக்கும். சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்படும் அந்த கிருமிகளின் வாழ்வு காலமும் இரண்டு  அல்லது அதிகபட்சம் மூன்று  நாட்களே என்பதும் தெய்வ லீலையில்  ஒரு அதிசயம் ஆகும். அவைகளும் வீட்டில் வந்து குளித்தவுடன் தண்ணீருடன் போய் விடும்.

336. ஆகவே அந்த பன்னிரண்டு  நாட்களிலும் சுடுகாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் வீட்டினரை தொட்டு, தழுவுவதின் மூலம் நம் மீதும் அந்தக் கிருமிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.  அவற்றை மனதில் கொண்டுதான், சுத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், மறைமுகமாக கர்மாவை செய்யும் வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சாஸ்திர விதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவைகளே  தீட்டு என கூறப்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூற காரணமாக அமைந்தது.

337. ஆனால் அந்த கிருமிகள் அனைத்தும்  சுத்த சாந்தி (கிரேக்கியம்) செய்யப்படும் பதிமூன்றாவது நாளன்று செய்யப்படும் ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்படும்  ஹோம குண்டப்  புகையை தாங்க முடியாமல் மரணம் அடைந்து விடும். அதற்குக் காரணம் ஹோமங்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு  மருத்துவக் குணமும், கிருமி நாசினி தன்மையும் உண்டு என்பதினால்தான் பன்னிரண்டாம் நாள் முடிந்த பின் சுபஸ்சவீகாரம் எனும் பெயரில் ஹோமம் வளர்த்து சடங்கு செய்யப்பட்டது.

338. விஞ்ஞான ரீதியிலான இதை மனதில் கொண்டுதான், கிருமி நாசினி போன்ற குறிப்பிட்ட தன்மைகளை கொண்ட பொருட்களை ஹோமங்களில் பயன்படுத்த வேண்டும், இன்னென்ன பொருட்களை ஹோமத்தில் போட்டால்தான் அந்த கலவையின் சக்தியினால் ஹோமப் புகையில் இருந்து கிருமி நாசினி தோன்றும் என்பதற்காக அவை சாஸ்திர விதி என்று கூறப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.   அன்று நடைபெறும் ஹோம சடங்கிற்கு அனைவரும் செல்லலாம் என நியதி ஏற்பட்டது.

339. இப்படியான விஞ்ஞான ரீதியிலான காரணங்களைத் தவிர மேலும் ஒரு ஆன்மீகக் காரணமும் உள்ளது.  அந்த பன்னிரண்டு  நாட்களிலும் இறந்தவர்களது ஆத்மா தான் வாழ்ந்திருந்த அந்த வீட்டில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் உறவினரும் மற்றவர்களும்  வீட்டுக்கு வந்து உற்சாகமாக இருந்தால் அதைக் கண்டு அந்த ஆத்மா வேதனைப்பட்டு மனம் வெதும்பி நிற்கும்.

340. அவர்களுடைய சந்தோஷ அதிர்வலைகள் அந்த இடத்தில் இருந்து துயர அதிர்வலைகளை துரத்தி அடிக்க, துயரமுற்று உள்ள ஆத்மாக்களும் சடங்குகளை ஏற்க முடியாமல் அங்கிருந்து ஓடிப் போக நேரிடும். அதனால் அது படும் வேதனை, துயரம் போன்றவை  அந்த குடும்பத்தின் அமைதி இன்மைக்கு வழி வகுத்து விடும். ஒரு விதத்தில் பார்த்தால் அதுவே துயரத்தோடு இருக்கும் ஆத்மாவின் சாபத்தைப் பெற வழி வகுத்து  விடும்.

341. அது மட்டும் அல்லாது,  இறந்தவரது ஆத்மா அந்த வீட்டுக்கு வந்து கொண்டும் சென்று கொண்டும்  இருக்கையில் அதன் பின்னால் வேறு சில ஆத்மாக்களும் அதனுடன் வந்து கொண்டு  இருக்கும். அந்த நேரத்தில் அங்கு  அடிக்கடி வருபவர்களை சில தீய ஆத்மாக்கள் தாக்க வாய்ப்புண்டு.

342. பசியினாலும், தாகத்தினாலும் வாடும் இறந்தவரது ஆத்மாவே கூட வீட்டினரின் நடத்தையைக் கண்டு கோபமடையலாம். அதன் விளைவாக  அவர்களுக்கு சாபமும் கொடுக்கலாம்.  ஆகவேதான் இவற்றை எல்லாம்  தவிர்க்க  அந்த பன்னிரண்டு நாட்களையும் தீட்டு காலம் எனக் கூறி அந்த வீட்டுக்கு யாரும் செல்லக்கூடாது என்ற நியதியை  வைத்து இருந்தார்கள்.

343. கர்மா செய்பவனுக்கு பதினோராம் நாள் கர்மா செய்த பின் தீட்டுப் போகும்.

ஜீவாத்மாவின் பயணம்   (17)     
விளக்கங்களும், மரணம் அடைந்தவருக்கு செய்யப்படும் மாத மாசிகம், வருடாந்தர சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம்.

344. வான் வெளியில் இருந்து கீழ் இறங்கி வரும் ஜீவாத்மாவானது 11  மற்றும்  12  இரு தினங்களிலும் வாரிசு  கொடுக்கும் பிண்டத்தை உண்கிறது. அதன் பின்னர்தான் யம கிங்கரங்கள் கயிற்றால் அந்த ஜீவனை கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள்.

345. அப்போது அந்த ஆத்மா  தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம்  என பகலிலும் இரவிலும் யம கிங்கர்களுடன் யமபுரியை நோக்கி நடந்து செல்லத் துவங்கும். அவ்வாறு நடந்து செல்லும்  ஜீவனுக்கு பசியும் தாகமும் அந்தந்த ஜீவன் அவற்றுடன் சுமந்து  செல்லும் கர்மாக்களின் அளவைப் பொறுத்தே அமைந்து இருக்கும்.

346. ஜீவாத்மா மரணம் அடையும் முன்னர் அது குடி இருந்திருந்த உடலின் செயல்களினால் அடைந்து  இருந்த கர்ம  வினைகளுக்கு ஏற்ப அது அழைத்துச் செல்லப்படும் பாதைகள் எளிதில் கடந்து செல்லும் தன்மையிலும், நடந்து செல்லவே முடியாத நிலையிலும் இருக்குமாம்.

347. உருவமற்ற ஆத்மா எப்படி நடந்து செல்லும் என்பதாக ஒரு கேள்வி எழும்பலாம்.  பூமியில் உள்ள பாதைகளை போலவேதான் வான்வெளியில் ஆத்மாக்களை  அழைத்துச் செல்ல அவர்களால் நடக்க முடிந்த தேவ தன்மையிலான பாதைகள் இறைவனால் அமைக்கப்பட்டு  உள்ளன. அவை நம் கண்களுக்கு தெரியாது.  அவற்றில் மானிடர்களால் நடந்து செல்ல முடியாது, உருவமற்ற ஆத்மாக்களும் தேவ கணங்களாலும் மட்டுமே அவற்றில் பயணிக்க முடியும்.

348. இப்படியான நிலையில் ஒருவரது  உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா தான் செய்தது பாபச் செயல் என்பதை  அறியாமல் செய்திருந்த பாவங்களின் தாக்கத்தை குறைக்கவும், யமலோகம் செல்லும் வரையிலாவது கடுமையாக கடக்க வேண்டிய பாதையின் உக்கிரத்தை குறைத்து, அமைதியான மன நிலையில்  அந்த ஜீவன்கள்  பயணிக்க, அவர்களது வாரிசுகள் செய்யும் நியமங்களும் கர்மாக்களும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவுகின்றன.

349. அடுத்த ஒரு வருட காலத்தில் அந்த ஜீவாத்மாவின் வாரிசுகள்  சிரத்தையோடு செய்யும் கர்மாக்கள், கிரியைகளில் ஓதப்படும் ஆற்றல் மிக்க மந்திரங்களின் அதிர்வலைகள், மற்றும் தான தர்மங்களின் விளைவினால் மனம் இளகும் யமதர்மராஜன் அந்த ஜீவாத்மாவை பசி தாகம் இல்லாமல் பார்த்துக் கொண்டு,  நல்ல பாதையில் அழைத்து வருமாறு எம கிங்கர்களுக்கு  உத்தரவு போடுவாராம்.

350. பசியோடு நடந்து செல்லும் ஜீவனுக்கு மாதத்தில் ஒரு நாள், அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று, ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். அதனால்தான்  ஒருவரது மரணத்திற்கு பின்னர் ஒவ்வொரு மாதமும் அவர் மரணம் அடைந்த  திதியன்று அவருடைய உடலில் இருந்து வெளியேறிய ஜீவனின் பசியையும் தாகத்தையும் அடக்க மாதாந்திர திதி நடத்தப்பட்டு பிண்டம் போடப்படுகிறது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். அப்படி போடப்படும் பிண்டமும், செய்யப்படும் சடங்கும் நடந்து செல்லும் அந்த ஜீவாத்மாவின் பசியையும் தாகத்தையும் அடக்குமாம்.

351. இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. இதனால்தான் பயணிக்கும் ஆத்மா யமபுரிக்கு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும்  ஓர் ஆண்டு காலமும் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம், சுபகாரியம் போன்றவை நடைபெறக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

352. தர்ப்பணம்: ஒருவர் இறந்த பின் ஒரு வருட காலத்திற்கு அதாவது முதல் வருட சிரார்த்தம் முடியும்வரை, தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

353. ஒரு வருடத்துக்குப் பின்னரும் எப்போது தர்ப்பணம் செய்தாலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.

354. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே அம்மாவாசை தினங்களில் இறந்தவர்களின் பசியையும், தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

355. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

356. அதனால் அன்றைக்கு தர்ப்பணம் செய்து எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன. தர்ப்பணம் செய்வதற்கு வசதியில்லாத இடத்தில் உள்ளவர்கள் பசுக்களுக்கு புல்லையிட்டு அவற்றைத் திருப்தி செய்தால் போதும் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

357. வருடத்தில் மூன்று அமாவாசைகள் முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இதில் புரட்டாசி அமாவாசை ரொம்பவே மகத்தானது என்கிறார்கள். மகாளய பட்சம் என்று சொல்லப்படும் புரட்டாசியின் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கான நாட்கள். எனவே இந்த நாட்களில், முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து போவார்கள், ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை நாளில், இறந்த நம் மூதாதையருக்கு மட்டுமின்றி, நம் மனதுக்குப் பிடித்தவர்கள் யார் இறந்திருந்தாலும் அவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம் என்கின்றது சாஸ்திர விதி.

358. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம், அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

359. அவை அனைத்தையும் விட திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. ஏன் என்றால் இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கும், தமது தந்தையைப் போல அவர்கள் கருதிய ஜடாயு பறவைக்கும் தர்ப்பணம் செய்தார்களாம்.

360. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

361. மாசிகம்: மாசிகம் என்றால் பொதுவாக இறந்தவருக்கு பிண்டம் கொடுப்பது என்பது அர்த்தம். மாசிகம் என்பது ஒருவரது மறைவிற்குப் பின் மாதந்தோறும், ஒரு ஆண்டு முடியும்வரை, இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையவும், அடுத்த பிறவிக்கு அவர் நல்ல முறையில் செல்லவும் பிரார்த்தனை செய்யப்படும் சடங்கு ஆகும். இறந்தவர் திதியைக் கணக்கில் கொண்டு  ஒவ்வொரு மாதமும்  மாசிகம் எனும் சடங்கு செய்யப்படும்.

362. சில வருடங்களில் ஒரே மாதத்தில் இரண்டு திதிகளும் வருவதினால் வருடத்திற்கு 15 மாசியங்கள் செய்ய வேண்டி வரும் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். வேறு சில பண்டிதர்கள் வருடத்திற்கு 16 மாசியங்கள் வருவதாக கூறுகின்றார்கள். அவரவர் குடும்ப பண்டிதர் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய மாசிகம் குறித்துக் கூறுவார்கள். அவர்களை கலந்து ஆலோசனை செய்து மாசிகம் செய்வதே சிறப்பு ஆகும்.

363. குடும்ப சூழ் நிலை மற்றும் உள்ள இடத்தினால் ஒரு சிலர் மாதம், மாதம் அவர் இறந்த திதிக்கு மாசியம் கொடுக்காமல் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை மாசியம் கொடுப்பதும் உண்டு என்றாலும் அது அத்தனை ஏற்புடையது அல்ல என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள்.

364. சிரார்த்தம்/ திவசம்: சிரார்த்தம்/ திவசம் என்பது இறந்த மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், அவர்களின் நினைவைப் போற்றுவதற்கும் இறந்துபோன முன்னோர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், அவர்களின் பாவங்கள் நீங்கவும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும் செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். சிரார்த்தம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும் என்று நம்பப்படுகிறது. இதை “திதி” என்றும் கூறுவர்.

365. சிரார்த்தம் என்பதன் அர்த்தம் சிரத்தையோடு (அக்கறையோடு) செய்யப்படுவது என்பதாகும். அக்கறையின்றி செய்யப்படுவது சிரார்த்தம் ஆகாது. அக்கறையோடு சிரார்த்த ஹோமம் முதலியவை செய்து, மறைந்த தாய், தந்தை, தந்தையின் தந்தை, அவரது தந்தை, மற்றும் அவரது மூதையோர்களை பிரார்த்தனை செய்து கொண்டு பண்டிதருக்கு உணவு மற்றும் தானம் முதலியவற்றைக் கொடுப்பதே சிரார்த்தம் ஆகும். ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.

366. ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அவற்றை 16 ஏகோதிஷ்டா ஸ்ராதாக்கள் என்பார்கள். ஒரு ஜீவாத்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய செய்யப்படும்  இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி சாந்தி அடையச் செய்து விடுகிறது. அந்த ஸ்ரார்த்தங்களை ஊன மாசிகம், ஊன ஆப்திக மாசிகம், த்ரைபட்ஷிக மாசிகம் மற்றும் மாதாந்திர மாசிகங்கள் என்றும் கூறுவார்கள்.

367. வருடாந்திர சிரார்த்தம் என்பது திதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. ஒருவரின் சிரார்த்த திதி, அவர் இறந்த மாதத்தையும், அம்மாதத்தில் அவர் இறந்த திதியையும், அம்மாதத்தில் அந்த திதி வளர்பிறையில் வந்ததா, தேய்பிறையில் வந்ததா என்பதையும் கணக்கில் கொண்டே நிர்ணயிக்கப்படும். ஆகவே பண்டிதரிடம் ஆலோசனை பெற்றே சிரார்த்த தேதியை அறிந்து கொள்ள வேண்டும்.

  • திதி என்றால் என்ன? சின்ன விளக்கம். பௌர்ணமியை நோக்கி சந்திரன் வளரும்  அடுத்த பதினைந்து நாட்களும்,       அம்மாவாசையை நோக்கி சந்திரன் தேயும் அடுத்த பதினைந்து நாட்களும் திதிகள்  எனப்படுகின்றது.
  • பௌர்ணமிக்குப் பிறகு சந்திரன் தேயத் தொடங்கும் தேய்பிறைக் காலத்தை  ‘அபர பட்சம்’ அல்லது ‘கிருஷ்ண பட்சம்’ என்று சொல்லப்படும்.   சொல்வது வழக்கம். அது போலவே அமாவாசைக்குப் பிறகு சந்திரன்  வளரத் தொடங்கும் வளர் பிறைக் காலம்  ‘பூர்வ பட்சம்’ அல்லது ‘சுக்ல பட்சம்’ என்று சொல்லப்படும்.
  • அம்மாவாசை அல்லது  பௌர்ணமிக்குப் பிறகு வரும் முதல் நாளை  ‘பிரதமை’ என்றும், இரண்டாவது நாளை  ‘துதியை’ என்றும், மூன்றாவது நாளை  ‘திருதியை’ என்றும், நான்காவது  நாளை  ‘சதுர்த்தி’ என்றும், ஐந்தாவது  நாளை  ‘பஞ்சமி’ என்றும், ஆறாவது  நாளை  ‘சஷ்டி’ என்றும், ஏழாவது  நாளை  ‘சப்தமி’ என்றும், எட்டாவது  நாளை ‘அஷ்டமி’ என்றும், ஒன்பதாவது  நாளை  ‘நவமி’ என்றும், பத்தாவது  நாளை  ‘தசமி’ என்றும், பதினோராவது  நாளை  ‘ஏகாதசி’ என்றும், பன்னிரண்டாவது  நாளை  ‘துவாதசி’ என்றும், பதிமூன்றாவது நாளை ‘திரயோதசி’ என்றும், பதினான்காவது  நாளை  ‘சதுர்த்தசி’ என்றும் அழைக்கிறார்கள்.
  • அந்த திதி நாட்கள் தேய்பிறை காலமானால் பதினைந்தாவது நாள் அமாவாசையாகவும், வளர் பிறை காலமானால் பதினைந்தாவது நாள் பௌர்ணமியாகவும் அமையும்.

368. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் சிரார்த்த தினத்தன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் தமது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவைச் சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

369. சிரார்த்தம் செய்யும்போது பித்ருக்கள் நம்மோடு மூன்று நாட்கள் வந்து தங்கிச் செல்வதாக ஐதீகம் உள்ளது. சிரார்த்தம் செய்வதற்கு முதல் நாள் அவர்கள் வந்து விடுவதாகவும் அதனால்தான் முதல் வருடத்தில் மாதா மாதம் செய்யப்படும் மாஸ்யம் அல்லது ஒரு வருடத்திற்கு பின் செய்யப்படும் சிரார்த்தத்தின் முதல் நாள் அன்று ஊன மாஸ்யம் எனும் சடங்கை அந்த காலங்களில் செய்தார்களாம். சிரார்த்தத்திற்கு மறு நாளும் பித்ருக்கள் நம்மோடு தங்கி இருந்து தமது ஆசீர்வாதங்களை அளித்தப் பின்னரே திரும்பிச் செல்வார்களாம்.

370. சிரார்த தினத்தன்று, வீட்டில் ஆசாரத்துடன் சமையல் செய்து வைத்து, இரண்டு பண்டிதர்களை வைத்து  ஹோமம், பிண்ட தானத்தையும் செய்து,   அவரையும் வீட்டில் போஜனம் செய்ய வைத்து, தட்ஷனையும் கொடுத்து அனுப்புவதை பார்வண சிரார்த்தம் என்பார்கள்.

371. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், வீட்டில் சமையல் செய்து வைத்து இரண்டு பண்டிதர்களை அழைத்து, போஜனம் செய்ய வைத்து தட்ஷணை கொடுத்து அனுப்புவதை சங்கல்ப சிராத்தம் என்பார்கள்.

372. இரண்டு பண்டிதர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு  வீட்டில்  சாப்பாடு செய்து கொள்ள என்னென்ன பொருட்கள் தேவையோ – அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ள பணமும்  அவருக்கான தட்ஷணையும், அளித்து  செய்யப்படும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.

373. சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் பண்டிதரை கலந்தாலோசனை செய்து இரண்டு பண்டிதர்களை  வீட்டிற்கு அழைத்து  அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழைக் காயையும், ஒரு நாள் சமையலுக்கான அரிசியையும், தக்ஷணைகளையும் கொடுத்து அனுப்புவது ஹிரண்ய சிரார்த்தம் எனப்படும்.

374. சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை விட்டு, பித்ருக்களை மனதில் வேண்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.

375. சிரார்த்தங்களில் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும், நட்சத்திரத்தையும் இறந்து போன திதிகளையும்  சிரார்த்த சடங்குகளை  செய்யும் போது கூறுவார்கள். மந்திர உச்சாடனைகளுடன்  அவற்றை  உச்சாடனை செய்யும்போது, அவர்களின் திதியுடன் கூடிய ஜீவ சக்திகள், படைக்கப்படும்  சிரார்த்த உணவோடு கலந்து விடும்.  இது நம் கண்களுக்கு தெரிவது இல்லை.

376. இதனால்தான் காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகள் ஸ்பரிஸம் பெற்ற சிரார்த்த உணவுகளில் இருந்து வெளியேறும் ஜீவ அணுக்களை, அவரவர்களது குடும்பங்களை சேர்ந்த  பித்ருக்களால் மட்டுமே ஆவாஹித்துக் கொள்ள  முடியும், ஒரு குடும்பத்தின் பித்ருக்களினால் மற்ற குடும்பத்து  கர்மா செய்பவர்களின் உச்சாடனைகளில் இருந்து வெளிப்படும்  ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம். இதுவே விசித்திரமான தெய்வ நியதியாகும் .

377. எதேர்சையாக சில வருடத்திற்கு முன்னர் இறந்து விட்ட தந்தையின் வருடாந்திர சிரார்த்தமும், அதற்கு அடுத்த சில வருடம் பொறுத்து  இறந்து விடும்  தாயாரின் மாசாந்திர மாசிகமும்  சேர்ந்து வந்து விட்டால் என்ன செய்வது?

378. தந்தையின் வருடாந்திர சிரார்த்தமும், தாயாரின் மாதாந்திர மாசிகமும் ஒரே நாளில் வந்து விட்டால், முதலில் தந்தையின் வருடாந்திர  சிராத்தம் செய்து விட்டு பிறகு மீண்டும் தனியே சமையல் செய்து தாயாரின் மாத  மாசிகம் செய்ய வேண்டும்.

379. எதேர்சையாக பெற்றோர்களின் வருடாந்திர சிரார்த்தமும்,  மாதப் பிறப்பு பண்டிகையும்  சேர்ந்து ஒரே நாளில் வந்து விட்டால் என்ன செய்வது?

380. பெற்றோர்களின் வருடாந்திர சிரார்த்தமும் மாதப் பிறப்பு பண்டிகையும்  சேர்ந்து வந்தால் முதலில் மாதப் பிறப்பு பண்டிகையை   செய்து விட்டு அதற்கு அடுத்தே  பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தை   செய்ய வேண்டும்.

381. தாய், தந்தை என இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

382. உடல் நிலை சரியில்லாதவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் சிரார்த்தம் செய்ய செய்யலாம் என்கின்றது சாஸ்திரம் .

383. தாயார் அல்லது தகப்பனார் இருவரின் சிராத்தமும் மஹாளய பக்ஷத்தில் வந்தால், அவர்களுக்கு சிராத்தம் செய்த பிறகுதான் மீண்டும் மஹாளய பக்ஷ சிராத்தம் செய்ய வேண்டும்.

384. சகோதரர்கள் தனித் தனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும். ஒரே தெருவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் கூட சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும. கூட்டுக் குடும்பமாக இருந்தால் அல்லது சகோதரர்கள் ஒன்று சேர்ந்து செய்தால் மூத்த சகோதரருடைய பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவரோடு சேர்ந்தே மந்திரங்களை ஓதி சிரார்த்தம் செய்ய வேண்டும்.

385. விபத்தில் பெற்றோர் காலமானால் யார் முதலில் இறந்தார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒரே நாளில் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். ஆனால் படைக்கப்படும் உணவு மற்றும் பாயசம் என்பவற்றை இருவருக்குமே தனித் தனி பாத்திரங்களில் செய்ய வேண்டும்.

386……….தொடர்கின்றது