ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்   -9 
கோயம்பத்தூர் 
கோனியம்மன் ஆலயம்
 
சாந்திப்பிரியா 

மத்திய கோயம்பத்தூர் டவுன் ஹாலின் பக்கத்தில் உள்ள பெரியக் கடை வீதியில் உள்ளதே கோனியம்மன் ஆலயம். ஆலயம் அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். அதை கட்டியவர்கள் இருளர்கள் அல்லது கோசர்கள் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கின்றனர் . அந்த காலத்தில் ஆலயம் உள்ள அந்த ஊர் கோவன்புத்தூர் என்ற பெயரில் இருந்தது. அதுவே பின்னர் கோயம்பத்தூர் என மருவியதாம். முன்னர் தென்னகத்தில் கோயம்பத்தூர் சில மன்னர்களின் தலை நகராக இருந்ததினால் அங்கு ஒரு கோட்டையும் இருந்தது. அந்த கோட்டைக்குள் இரண்டு ஆலயங்கள் இருந்தன. கோட்டைக்கு வெளியே சிறிய கோனியம்மன் ஆலயம் இருந்ததாம். ஒரு நேரத்தில் கோவன்புத்தூர் மற்றும் அந்தக் கோட்டை எதிர் தேச மன்னர்களின் படையெடுப்புக்கு ஆளாகி முற்றிலுமாக அழிந்தது. ஆனால் சிறிய அளவிலேயே இருந்த கோனியம்மன் ஆலயம் மட்டும் அழிக்கப்படவில்லை. காரணம் அந்த அம்மனின் சக்தியே. அதன் பின் இளங்கோசர் என்ற சமூகத்தினர் ஆட்ச்சியில் வந்தனர். அவர்கள் எதிரிகளின் படையெடுப்பில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள தடுப்பாக மீண்டும் அந்த இடத்தில் ஒரு கோட்டையை கட்டிக் கொண்டு அந்த கோட்டையின் வெளியில் கோனியம்மன் ஆலயம் அமைத்தனராம். அந்த மன்னர்கள் ஆட்சி முடிந்ததும் ஆலயம் நலிவுற்றது.

ஆனால் ஆலயத்தின் சக்தியைப் பற்றிக் கேட்டறிந்த அன்றைய மைசூர் தேசத்து மன்னர்கள் சிலர் அந்த ஆலயத்து தேவியை மகிஷாசுரமர்தினியாக பாவித்து ஆலயத்திற்கு பல உதவிகளை செய்தும் ஆலயத்தை பெரிய அளவில் புதுப்பித்தும் தந்தனராம். ஆலயத்தின் தேவி சுமார் இரண்டரை அடி உயரமாக உள்ளார். நான்கு கைகள். வலது கைகளில் சூலம், உடுக்கை, வாள் மற்றும் சங்கை வைத்து இருக்க இடது கையில் சக்கரம், மணி, கபாலம் மற்றும் கேடயமும் வைத்து உள்ளாள். வலது  காதில்    குண்டலம்  இருக்க  இடது  காதில்  வெறும்  காதணி  மட்டுமே  உள்ளது . மகிஷாசுரமர்த்தினியைப் போல உள்ள அந்த ஆலயத்து தேவியானவள் சக்தியின் அம்சம் எனவும் பல மகிமைகளை செய்தவள் எனவும், வேண்டியது நடக்கின்றன எனவும் கூறுகிறார்கள். கோன் என்றால் மன்னன் என்று அர்த்தமாம். ஆகவே கடவுட்களில் தலைவி  போல உள்ள தேவிக்கு கோனி  அம்மன் அதாவது கோனியம்மன் என்ற பெயர் வந்ததாம். அவளது சிலையை கோசர்கள் எனப்படும் சமூகத்தினரே வடிவமைத்து இருந்தனராம். ஆலய விழாக்களில் முக்கியமானது தெப்ப உற்சவம், தேர் உலா, மற்றும் திரு விளக்கு எற்றுதல் போன்றவைஆகும் .