ரகுவம்சம்-3
-சாந்திப்பிரியா-

ராமரின் வனவாசம்ஜடாயுமரணம்; ராவண வதம்

அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது. 

அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது.  கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வரத்தை நினைவூட்டி  ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும்,  பரதனை ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கவும் வழி செய்து கொண்டாள்.  அதன்படி ராம லஷ்மணர்கள் வனவாசத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

அதனால் மனமுடைந்து போன தசரதனும், ராமன் அவரது மனைவி சீதை மற்றும் என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்த சகோதரன் லஷ்மணரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றதும் பாசத்தினால் கட்டுண்டு  தனது உயிரை விட்டார். தன்னுடைய தாயாரின் சூழ்ச்சியை அறிந்த பரதனும் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்க மறுத்து வனத்துக்கு சென்று தமது தந்தை தசரதனுக்கு கட்டாயத்தினால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் ராமனிடம் எடுத்துக் கூறி, ராமனை  நாடு திரும்பி  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் மரணம் அடைந்து விட்ட தனது தந்தைக்கு தான் கொடுத்த வாக்கை மீற  முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமபிரான். ஆனால் ராமர் தன்னுடன் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்காவிடில் அங்கிருந்து செல்ல முடியாது என அடம் பிடித்து நின்ற இளைய சகோதரன் பரதனிடம் ராமர் அதன் விளைவுகளை எடுத்துக் கூறினார். பரதன் அயோத்தியாவுக்கு  திரும்பிச் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யாவிடில்  நாடு நலிவுறும், மக்கள் அவதியுறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு அறிவுரைக் கொடுத்தார்.  அதன் பின் பரதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தான் அணிந்திருந்த பாதுகையை பரதனிடம் தந்து தன்னுடைய அந்த பாதுகையை எடுத்துக் கொண்டு போய் தனக்கு பதிலாக அதை தனது துணையாக  வைத்துக் கொண்டு ராஜ்யத்தை தான் திரும்பி வரும்வரை நிர்வாகம் செய்யுமாறு கூறினார். பரதனோ அந்த பாதுகைகளை கொண்டு போய் அதுவே தனது சகோதரன் ராமன் என்பதாக அறிவித்து,   சிம்மாசனத்தில் தான் அமராமல் தனக்கு பதிலாக ராமருடைய பாதுகையை வைத்து  ஆட்சி செலுத்தி வரலானார்.

நிற்க, அங்கோ  வனத்திலே இருந்த ராமனோ தனது மனைவி சீதை மற்றும் சகோதரன் லஷ்மணருடன் அங்கிருந்த காய் கனிகள் மற்றும் மூலிகைகளை உண்டபடி காலத்தைக் கழித்து வந்தார்கள். அங்கிருந்த  நாட்களிலே அத்ரி முனிவர் ஆஸ்ரமத்திலும்  தங்கி பணிவிடை செய்தார்கள். அவர்கள் பஞ்சவடி எனுமிடத்திலே இருந்தபோது  ராமரின் அழகில் மயங்கிய ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் காதலித்து அவரை நாயகனாக அடைய முயன்றாள். ஆனால் அவளது வார்த்தைகளைத் உதறித் தள்ளிய புனித குணம் கொண்ட ராமரோ அவளை துரத்தி அடிக்க, அவருக்கு தொல்லைத் தர முயன்ற சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அறுத்து லஷ்மணர் அவளைத் துரத்தி அடித்தார். அவளும் ஓடோடிச் சென்று சகோதரன் ராவணனிடம் முறையிட, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராவணனும் பெரும் சேனையை அனுப்ப அந்த சேனையையும் நிர்மூலமாக்கி அனுப்பினார்கள்  ராம லஷ்மண சகோதரர்கள். சூர்ப்பனகை விவரித்திருந்த சீதையின் அழகை மனதிலே கொண்ட ராவணனும் சீதையை தான் அடைய எண்ணம் கொண்டான். அதுவே முன் ஒரு காலத்திலே நாராயணன் தேவர்களுக்கு தான் ராமனாக அவதரித்து தேவர்களுக்கு தொல்லைத் தந்து வந்த ராவணனை அழிப்பேன் என்ற வாக்கு கொடுத்ததற்கு போடப்பட்ட முதல் அஸ்திவாரம் ஆயிற்று. பூர்வ ஜென்மத்தில் சீதையும் ‘ராவணனை தான் அழிப்பேன்’ எனப் போட்டு இருந்த சபதத்துக்கு அஸ்திவாரமாயிற்று.

 

 

 

 

 

 

 

 

 

ராம லஷ்மணர்களின் பலத்தை தவறாக எடைபோட்டு இருந்த ராவணனும் தனது மாமன் மாரீசனின் மாய மான் வேஷ உதவியோடு ராம லஷ்மணர்களின் கவனத்தை திசை திருப்பி தனியே இருந்த  சீதையை கவர்ந்து வந்தான். வழியிலே தன்னை தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையிடம் தன் பராக்கிரமங்களையும், பலத்தையும், தான் கொண்டிருந்த சக்திகளையும் செல்வத்தையும் பலவாறு எடுத்துரைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ வற்புறுத்தியும் அவள் மறுத்ததினால் அவளை அசோக வனத்திலே தனிமை சிறையில் வைத்தான்.  ஏமாற்றப்பட்டு வீடு திரும்பிய ராம லஷ்மணர்கள் சீதையை தேடி அலைந்தபோது, வழியிலே இறக்கும் தருவாயில் கிடந்த ஜடாயு மூலம் ராவணன் சீதையை கவர்ந்து சென்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அந்த செய்தியை கூறிய உடனேயே மரணம் அடைந்து விட்ட ஜடாயுவுக்கும் அங்கேயே இறுதிக் கிரியைகள் செய்து முடித்தப் பின் வானரங்கள் உதவியோடு சீதை உள்ள இடத்தைத் தேடலானார்கள்.

கிஷ்கிந்த  மலையில் இருந்த வாலி-சுக்ரீக சகோதரர்களின்  சண்டையில் ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவர் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தந்ததின் மூலம் குரங்குப் படையின் துணையும் கிடைத்தது. ஹனுமனும் ராமருக்கு கிடைத்தார். அந்த ஹனுமானைக் கொண்டுதான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இலங்கைக்கு போய் ராவணனுடன் யுத்தம் புரிந்து கும்பகர்ணன், இந்திரஜித் போன்ற மகா அசுரர்களையும் கொன்று, முடிவில் ராவணனின் தம்பி விபீஷணனின் துணையோடு ராவணனையும் கொன்று சீதையை மீட்டு வந்தார்.

லவ குசர் பிறப்பு; ராமருக்கு வந்த சோதனை

ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார்.  வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்புப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது.

ஒருநாள் ராமபிரான் தனது ஒற்றன் ஒருவனை அழைத்து நாட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஒற்றன் கூறினான்  ‘மன்னா, இந்த நாட்டில் அனைவர் மனதிலும் பரவலாக ஒரு எண்ணம் சுற்றிக் கொண்டு உள்ளது. உமது மனைவியை மாற்றான் ராவணன் கவர்ந்து கொண்டு போய் அத்தனைக் காலமும் தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்து சில காலத்திலேயே அவள் கர்பவதியாகவும் ஆகி விட்டாள். மாற்றானிடத்தில் அத்தனைக் காலம் தங்கிய பத்தினியை எப்படி ராமர் சந்தேகப்படாமல் ஏற்றுக் கொண்டார் என  மக்கள் உம்மை தூற்றுகிறார்கள்’ என்று கூற அதைக் கேட்ட ராமரும் திடுக்கிட்டார்.

உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து அது குறித்து ஆலோசனை செய்த பின் சீதையை தன்  வாழ்க்கையில் இருந்து நீக்கி விட தீர்மானம் செய்து விட்டு கர்பவதியான அவளை  வனத்தில் இருந்த வால்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டு வரச் சொல்லி விட்டார். ஆனாலும் ராமருக்கு சீதையின் பிரிவு மன வருத்தத்தை தந்தது. அதை அடக்கிக் கொண்டு நாடாண்டு வந்தார்.

சில காலம் சென்றதும் ராவணனுடைய தங்கை கும்பேசினி என்பவளின் புதல்வன் இலவணன் என்பவன் தமக்கு பெரும் துயரங்களையும் துன்பத்தையும்  அளிக்கிறான் என ராமரிடம் முனிவர்கள் சென்று முறையிட்டபோது ராமரும் தனது சகோதரன் சத்ருக்னனை அனுப்பி அந்த அசுரனை அழிக்கச் சொன்னார்.  சத்ருக்னனும்  இலவணனை அழிக்கச் சென்றபோது வனத்தில் இருந்த வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று இருந்தபோது அங்கிருந்த சீதைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். அதன் பின் அவர் இலவணனை அழித்து விட்டு  நாடு திரும்பும் வழியில் நதிக்கரையில் இருந்த தம்முடைய ராஜ்யத்தை தமது புதல்வர்களான ஸ்வாகு மற்றும் வெகுசறுகு  என்பவர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து தம்மை விலகிக் கொண்டார்.  அதன் பின் அயோத்தியாவுக்கு திரும்பியவர் இலவணன் வதத்தைக் குறித்துக் கூற அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை பிரசவித்ததையோ, அல்லது லவ குசா பிறந்த செய்தியையோ அவர் யாரிடமும் கூறவில்லை. அதன் காரணம்  தக்க நேரத்தில் தன்னால் லவ குசா யார் என்பதை  வெளிப்படுத்தப்படும்வரை சத்ருக்கனன் அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பதான வால்மீகியின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.

வால்மீகி முனிவரும் சீதையின் இரு புதல்வர்களுக்கும் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தப் பின் ராமாயணத்தையும்* பாடலாக கற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் அயோத்தியில் சில குறிப்பிடத்தக்க  சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் ராமரின் அரண்மனைக்கு முன்னால்  ஒரு அந்தணர் தனது இறந்து கிடந்த குழந்தையை எடுத்து  வந்து நின்று கொண்டு பூமியை நோக்கி  ‘ஓ …பூமா தேவியே  தசரத மகாராஜா ஆண்டு வந்திருந்த பூமியில் அவர் ஆட்சி இருந்த காலத்தில் எந்த ஒரு அகால மரணமும் நிகழ்ந்தது இல்லை. ஆனால் இன்றோ அதே மகாராஜனின் புதல்வர்  ஆட்சியில் நடந்துள்ள இந்த அகால மரணத்தை தாங்கிக் கொண்டு எப்படி  உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது?’ என்று கூறி ஒப்பாரியிட்டு அழுது கொண்டு இருந்தார்.

அந்த செய்தியைக் கேட்ட ராமனும் ஓடோடி  வெளியில் வந்து இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையையும், ஒப்பாரி வைத்தபடி இருந்த அந்தணரையும் பார்த்துக் கூறினார் ‘அந்தணரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் குழந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டு இருந்தால் அதன் உயிரை நான் மீட்டுக் கொண்டு வருவேன். அதற்கு நான் பொறுப்பு’ என் சூளுரைத்து விட்டு ஆக்ரோஷத்துடன் பல ஆயுதங்களையும்  எடுத்துக் கொண்டு புஷ்ப விமானத்தில் ஏறி  யமலோகத்தை நோக்கிச்  செல்லத் துவங்கியபோது ஒரு அசரீரி  குரல் கொடுத்தது ‘மன்னனே, உங்கள் ஜனங்களில் சிலர்  தர்ம நெறிக்கு மாறாக குற்றம் செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டு பிடித்து அவற்றைக் களைந்தாலே உன் நாட்டுக்கு  விமோசனம் கிடைக்கும். வேறெங்கும் போவதை தவிர்த்து உன் நாட்டிலேயே நடைபெறும் இந்த தர்ம நெறிக்கு எதிரான குற்றத்தை தடுத்து நிறுத்து’ என்று கூறிவிட்டு  மௌனமாயிற்று.

அதைக் கேட்ட ராமரும் பல திக்குக்களிலும் சென்று தகாத குற்றத்தை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் தர்ம நெறி முறைக்கு மாறாக ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி  அந்தணர் அல்லாத ஒருவன் தவத்தில் இருந்ததைக் கண்டார்.  உடனே அவன் அருகில் சென்று அவன் தலையை தனது வாளினால் சீவி எறிய  அகால மரணம் அடைந்த குழந்தையும் பிழைத்து எழுந்த செய்தியும் கிடைத்தது. அரண்மனைக்கு சென்றவரை வாயிலிலே நின்று வரவேற்ற அந்தக் குழந்தையின் தந்தையும் அவரை பல்வேறு வகைகளிலும்  துதி செய்து வாழ்த்திய பின் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.

*சிறுகுறிப்பு:-

(வால்மீகி முனிவருக்கு ராமாயணம் எழுதத் தூண்டிய சம்பவமாக கீழ் காணும் கதையை கூறுகிறார்கள். ஒரு நாள் எப்போது போல  குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்குச்  வந்த வால்மீகி முனிவர் அங்கே ஆண் மற்றும் பெண் புறாக்கள் இரண்டும் கலவியில் இருந்தபோது வேடன் ஒருவன் எய்த அம்பினால் ஆண் புறா இறந்து விழுந்ததைக் கண்டு பெண் புறா பரிதவித்து அழுததைக் கண்டு கருணையும் கோபமும் ஒருங்கே எழும்ப அந்த வேடனைக் சபிக்கும் விதத்தில் அவரை அறியாது  அவர் வாயில் இருந்து   ஒரு ஸ்லோகம்  எழுகிறது. இப்படி ஒரு ஸ்லோகம் தன்னையறியாது தன் வாயில் இருந்து எப்படி வெளிவந்தது வந்துள்ளது யோசிக்கையில் அவர் முன் பிரும்மா தோன்றுகிறார்.  அவர் முன் தோன்றிய பிரும்மா, ராம கதையை எழுதுமாறு வால்மீகி முனிவருக்கு கட்டளை இடுகிறார். அப்படி அவரால் எழுதப்படும் ராமனின் கதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மனித இனத்தவரால்  கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வால்மீகி முனிவரும் தியானத்தில் ஆழ்கையில் ராமரின்  பிறப்பிலிருந்து  பட்டாபிஷேகம் மற்றும் சீதாவை துறக்கும் வரையிலான ராம கதையின் அனைத்து நிகழ்வுகளும் அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான  வெளிப்பட அதை மனதிலே ஆழமாக உருவேற்றிக் கொண்டார். இப்படியாக மனதில் தன்னால் இயற்றப்பட்ட இராமாயண மகா காவியத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார்.  முதலில் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ராமரின் பிறப்பில் இருந்து ராமர் அயோத்தியா திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சீதையை வனத்துக்கு அனுப்பியவரைதான் இயற்றப்பட்டு உள்ளது என்று நம்புகிறார்கள். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளாக வால்மீகி ராமாயணத்தில் காணப்படுபவை வேறு யாராலோ எழுதப்பட்டு  பிற காலத்தில் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டவை என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் லவ குசர்கள் அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையிலும் பாடிய ராமாயணம் ராமர் பிறப்பில் இருந்து  பட்டாபிஷேகம் வரையில் மட்டுமே இருந்ததென்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய் வழி செய்தியாகவே  காலம் காலமாக வந்து உள்ளது. )

ராமர், லஷ்மணர்; சீதையின் மறைவு; ரகுவம்சத்தினர் ஆட்சி

இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.

அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக  கூறப்படும் செய்தியாகும்.  அப்படி   அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி  குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன்  போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள்.  இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது  மகன்களான  லவனும், குசனும்  பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக  செய்தி அனுப்பினார்.

ராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு  அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை  பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே  ராமருக்கும் சீதைக்கும் பிறந்த  இரட்டை மகன்களான லவ குசர்  என்பது  வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது.  அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார்.  முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய  மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய  மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாக சாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதையே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.

யாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய  வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் ‘மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை  அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு ‘ என்று கட்டளை இட்டார்.

அதைக் கேட்ட சீதையும்  அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர்  முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள்  ‘தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள்.  நான் களங்கமற்றவள், தூய்மையான  கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு’ என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி  இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .

ஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் ‘என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்’ என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில்  இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார்.  ‘சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமா தேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து,  மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்’ என்று அறிவுறுத்த தன்  நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும்  தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

(சிறு விளக்கம் : –

இன்னொரு முக்கியமான செய்தியையும் இங்கு கூற வேண்டிய அவசியம் உள்ளது. சீதை வனத்தில் இருந்தபோது அவளுக்கு அங்கு ஆபத்து நேரிடலாம் என்பதினால் வேதவதி எனும் மாய  உருவை பூமா தேவி  சீதையாக படைத்து அவளை சீதையின் உருவில் வால்மீகி ஆஸ்ரமத்தில் இருக்குமாறு அனுப்பி விடுகின்றாள். ஆகவே ராவணன் கவர்ந்து சென்றது சீதையின் மாய உருவமான வேதவதிதான். ஆனால் மாய சீதா தேவி படைக்கப்பட்டு அனுப்பப்பட்டபோது அந்த மாய உருவினுள் சீதா தேவியின் சில உணர்வுகளை பிரதிபலிக்கும் உணர்வுகளையும் கொடுத்தே அனுப்ப வேண்டி இருந்தது. இல்லை என்றால் அந்த மாய உருவம் சீதா தேவி அல்ல என்பதை ராவணன் கண்டுபிடித்து விடுவான் என்பதினால் அப்படி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ராவண வதம் முடிந்து ராமபிரானிடம் சீதா தேவி வந்து சேரும் சில ஷணங்களுக்கு முன்பாகவே அசோக வனத்தில் இருந்த மாய உருவை உண்மையான சீதை தன்னுள் அடக்கிக் கொண்டு அங்கு அமர்ந்து கொண்டு விடுவதினால் ராமருடன் மீண்டும் ஒன்றிணைந்த சீதை உண்மையான சீதா தேவியாவாள். அப்போது அது குறித்து ராமபிரான் உட்பட எவருக்குமே தெரியாது. இலங்கையில் இருந்து ராமருடன் அயோத்தியாவுக்கு வந்தது வேதவதி எனும் மாய உருவம் அல்ல. ஆனால் தனக்காக தன்னுள் இருந்து படைக்கப்பட்ட மாய உருவம் குறித்த உண்மையை பின் ஒரு சமயத்தில் மட்டுமே வெளி உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதினால்தான் அக்னி பிரவேச சம்பவத்தின்போது அக்னியில் இருந்து தனது மாய உருவுடன் சீதா தேவி வெளிவந்து , அந்த உண்மையை உலகிற்கு தெரியப்படுத்துகின்றாள். அதன் பின்னரே வேதவதி எனும் மாய உருவம் அங்கே மறைந்து விடுகின்றது எனக் கூறுவது சீதையின் உடலுக்குள் மீண்டும் அந்த மாய உருவம் ஐக்கியமாகி விடுகின்றது என்பதை உணர்த்தும் தத்துவம் ஆகும்.

அதை போலவேதான் அக்னிப் பிரவேசம் நடைபெறும் காட்சியும் ஆகும். ராவண வதம் முடிந்த உடனேயே சீதா தேவி அக்னி பிரவேசம் செய்யவில்லை. லவ-குசா எனும் மகன்கள் பிறந்த பிறகே சீதா அவதாரம் முடிய வேண்டிய கட்டம் வந்தபோதுதான் அக்னி பிரவேசம் மற்றும் சீதா தேவி பூமிக்குள் மறைந்து விடும் நிகழ்வுகள் நடை பெறுகின்றது. அந்தக் கதைகள் அனைத்தையும் விளக்கி எழுத ரகு வம்சத்தில் இடம் இல்லை, அவை அனைவருக்கும் தெரிந்த கதைகள், அனைவரும் அதை புரிந்து கொண்டு இருப்பார்கள் என்பதினால் அவற்றை மீண்டும் விளக்கமாக எழுதாமல் தவிர்த்து உள்ளேன்சாந்திப்பிரியா)

அதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை  பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும்  பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார்.  அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

இப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் இராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது.  அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக  பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே  சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டு விட்ட  லஷ்மணர் மனம் தளர்ந்து போனார்.  தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்று அவர்கள் உரையாடலை கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக  தாம் மனப்பூர்வமாக  அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து  கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச்  சென்று யோக வழியை பயன்படுத்தி தன்  ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.

அதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை  தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்கனன் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள்.  ரகுவம்ச ஆட்சி  முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும்  தொடரலாயிற்று.

——————
*சிறு குறிப்பு :– 

வால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக் கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.

ஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் ‘காஞ்சீபுரம் உபய வேதாந்த மகா வித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்’ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்  முதல்  ஸர்கமான ஸம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில்  நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான்  அவர் தாம்ஸா  நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேசித்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும்,  அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான்  லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம்  இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக்  எழுதப்பட்டு உள்ளது.

அந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள்.  அவர்கள் பாடிய பாடல் ராமாயணத்தில் ராமரின் சாகசங்களை  எடுத்துரைத்துள்ளது.  ஆனால் ராமரை  அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில்  காணப்படுகின்றன.

வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை  மட்டுமே  விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி  கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து  குறிப்பு இருந்திருக்குமா என்பது  விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.  அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும்  என ஆய்வாளர்கள் கருதினாலும்  அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சில  விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசன் எழுதிய ரகு வம்சத்தில் இராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை  தெரியாமல் இருந்திருக்குமா? ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான  பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாகவே இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசன் எழுதி உள்ள  ரகு வம்சத்தில், வால்மீகி இயற்றிய ராமாயணத்தை, லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில்  பாடியதாக  எழுதி உள்ளதில் இருந்து காளிதாசன் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தை  முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.

குசன் நாக கன்னிகையை மணந்த கதை  

இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த எட்டு  சகோதரர்களில் அனைத்திலும் மேன்மையாக இருந்த குசனின் தலைமையின் கீழ்  ஏழுபேரும் ஆட்சி செய்து  கொண்டு வந்த வேளையில் ஒருநாள் குசன் தனது மந்திரிமார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ‘அரசனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்’ என்று கூறியபடி அந்த அறைக்குள்  ஒரு பெண் திடீர் என நுழைந்தாள்.  அவளைக் கண்டு திடுக்கிட்ட குசனும் அவளிடம் கேட்டார் ‘பெண்மணி, நீங்கள் யார்?, உங்கள் கணவர் யார்?  அனைத்து காவலையும் மீறி என் அறைக்குள் எங்ஙனம் நுழைந்தீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? ‘ என அதிசயப்பட்டு கேட்டார்.

அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ ‘அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்டிணத்தின் தெய்வ மகள்  என என்னை அறிந்து கொள்.

ரகுவின் வம்சத்திலே நீ தோன்றி பிற ராஜ்யங்களை திறமையாக ஆண்டு கொண்டிருக்கையில் உன்னுடைய முன்னோர்களின் நகரமான அயோத்தியாவின் நிலை என்னவென  என்றாவது எண்ணிப் பார்த்தாயா? அந்த நகரமே பாழ்பட்டு, சீரழிந்து கிடக்கிறது. சாலைகள் பழுதடைந்து கிடக்க வீடுகள் பலவும் இடிந்து கிடக்கின்றன.  பஞ்சு போன்ற புற்கள் நிறைந்த பாதையில் உள்ள புல்லும் வாடி அந்த பூமியே வறண்ட நிலமாக காணப்படுகிறது. பெண்களின் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைகள் கிழிந்து சிலந்தி வலைப் போல ஆகி உள்ளன.  அத்தனை ஏழ்மை நிலை. நகரெங்கும்  ஏழைகள் நிறைந்துள்ள நிலை. இரவிலே பெண்கள் அஞ்சாது சென்று கொண்டு இருந்த சாலைகளில் நரிகளும், பேய்களும் சுற்றித் திரிகின்றன. ஆகவே அவர்களால் பயமின்றி வெளியில் வர முடியவில்லை. பூஜைகள் செய்யப்பட்டு வந்திருந்த சராயு நதிக்கரை ஓநாய்களும், நரிகளும், நாய்களும் கொன்று தின்று போட்டுள்ள மிச்சம் உள்ள மான்களின், முயல்களின்  மாமிசப் பிண்டங்களினால்  நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அரசே, நீர் சற்றும் தாமதியாது அயோத்திக்கு வந்து அந்த பட்டிணத்தை  சீர்படுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கொள்ளவே   இங்கு வந்தேன்’ என்று கூறிவிட்டு அப்படியே மறைந்தும் போனாள் .

அதைக் கேட்டு மனம் வருந்திய குசாவும் மனக் கலக்கம் அடைந்தார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் சற்றே பிரமித்து நின்றாலும் உடனடியாக  பெரும் படையுடன் கிளம்பி விந்திய மலை, கங்கை நதி என அனைத்து இடங்களையும் கடந்து  அயோத்தியை அடைந்து  ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஊரிலேயே தங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு சீர்கேட்டையும் களைந்து சென்றவாறு நகருக்கே புதுப் பொலிவை  தந்தான். இடிந்து கிடந்த சாலைகளும் கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. வறண்டு கிடந்த ஏரிகளும், நதிகளும் தூர் வாரப்பட்டன. நீர் நிறைந்திருந்த நதிகளில் எல்லாம் மறைந்து இருந்த முதலைகளை, கொடிய பாம்புகளை விரட்டி அடிக்க வைத்தான். இப்படியாக அயோத்தி புதுப் பொலிவைப் பெற ஜனங்கள் மீண்டும் மன மகிழ்வோடு வாழத் துவங்கினார்கள். ரகுவம்சம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

எப்போது வேண்டுமானாலும் மக்கள் தம்மை வந்து சந்தித்து குறைகளைக் கூறலாம் என்று அறிவித்ததும் அல்லாமல், தம்மை வந்து சந்தித்தவர்களை தவறாமல் சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து தேவையானவற்றை செய்தார்.  குறைகளைக் கேட்டு நீதி வழுவாமல் முடிவுகளை எடுத்தார். பலமான ஒற்றர் படைகளை வைத்திருந்து நாட்டு நடப்புக்களை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். எந்த பிரச்சனைகளிலும் மூத்த மந்திரிமார்களின் ஆலோசனைகளைக் கேட்டடறிந்த பின், அனைத்தையும் நன்கு விவாதித்த பின்னரே    நடவடிக்கைகளையும்  எடுத்தார்.  அஸ்வமேத யாகம் செய்தார்.

இப்படியாக காலம் கடந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் குசன் தனது மனைவிகளுடன் நதியில் ஜலக்ரீடை செய்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில் அவரது அரண்மனையின் ஒரு ராஜகுமாரியின் நகை நதிக்குள் விழுந்து விட்டது.  அதை தேடி எடுத்து வருமாறு மன்னன் ஆணையிட நதிக்குள் மூழ்கி ஆபரணத்தை தேடிய நீர்மூழ்கி பணி  செய்பவர்கள் அந்த நகை நதியில் பாதாளத்தில் வாழும் நாகராஜனின்  தங்கையின் கழுத்தில் உள்ளது என்று கூற அதை திருப்பித் தருமாறு மன்னன் அவர்களை கேட்கச் சொல்லி அனுப்பினார். ஆனால்  அந்த ஆபரணத்தை தனது சகோதரி ஆசையாக கழுத்தில் போட்டுக் கொண்டு உள்ளதினால் அதை திருப்பிக் கொடுக்க இயலாது என அதைக் கொடுக்க மறுத்த நாக மன்னன் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி  விட்டார்.

அதைக் கேட்டு கோபமுற்ற குசன்  அந்த நதிக்குள் மறைந்திருந்த விஷ ஜந்துக்களையும், மறைந்திருந்த முதலைகளையும் விரட்டி அடிக்கவும், நாக மன்னனின் சேனையை ஒடுக்கவும் தனது பாணத்தை நதிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் விஷ்ணுவின் வாகனமான பெரும் கருடனை அழைத்து  நாகங்களை அழித்து விட்டு ஆபரணங்களை மீட்டு வருமாறு கூறினார். கருடனும் அந்த காரியத்தை செய்ய அங்கு வந்து  நதியின் மீது வட்டமடிக்கத் துவங்க, அதைக் கண்டு பயந்து போன நாகராஜனும் வெளியில் வந்து  குசனை சந்தித்து அவருடைய ஆட்சியை பெரிய அளவில் பெருமையாகப் பேசி  அந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டது தன்னுடைய தங்கையான குமுதவதி என்று கூறி அவளை மணம் செய்து கொள்ளுமாறு குசனிடம் வேண்டுதல் வைக்க, குசனும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நாகராஜனின்  சகோதரியான குமுதவதியை மணந்து கொண்டார்.  அதன் பின் பல காலம் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தபோது குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது.  அதற்கு  அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.

ரகுவம்ச அழிவின் துவக்கம்

இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.

அதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன்  பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து  நளன்; நளனைத்  தொடர்ந்து  நப்பஹா; நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா; புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர்  போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்.  ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு  வந்தான்.

அக்னிஹுவைத்  தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா  ஆட்சிப் பொறுப்பை ஏற்க,  சிலகுசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும்  உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு  வந்த  வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர  சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா  என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட  பின்னர் தன்  மகனான ஹிரண்யநாபா என்பவரை  ஆட்சியில் அமர்த்தினர்.  மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்யநாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.

ஹிரண்யநாபாவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்யநாபாவின் மகனான  கௌசல்யன் என்பவர் ஆவார்.  விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர் என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார்.  பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்த புஷ்யன் எனும் பெயரைக் கொண்ட தனது  புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார்.  பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்தி என்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.

துருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக் கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

இந்த நிலையில்தான் ரகு வம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்படத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று.  இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக் காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மை கொண்டு விளங்கினார்.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக் கல் எத்தனை  சிறியதாக இருந்தாலும் அதை மகா நீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கு உரிய பரம்பரை குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவரைப் பல  பெண்கள்  மோகிக்கலாயினர்.

ரகுவம்ச ஆட்சி முறிந்தது

பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி வருணனை ஆட்சியில் அமர்த்தி விட்டு நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார். அக்னி வருணன் ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவருக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம் பக்கத்து மன்னர்கள் அடங்கிக் கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக் கிடந்தது. அரசாள்மை விதிமுறைகள் என்பதெல்லாம் வறைமுறையோடு வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்  இருந்தன என்பதினால் அந்தந்த அதிகாரிகள் முறையோடு அரசர் சார்பிலே ஆதிக்கம் செய்து வந்தார்கள். மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னி வருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். காமம் தலைக்கேற பெண்கள் விஷயத்தில் துர் நடத்தைக் கொண்டவனாக மாறிக் கொண்டே வந்தான். காமுகனாக மாறிக் கொண்டே இருந்த அவனுக்கு எந்த அமைச்சரும் முன் வந்து அறிவுரைக் கூற முடியாமல் பயந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் எத்தனை எடுத்துக் கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறி சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக் கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக் கூட முடியாமல் போயிற்று.

 அதனால் அக்னி வருணனுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை என்பதினால் வியாதி பிடித்து கிடந்த அக்னி வருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப் போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காக தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரை தொந்தரவு செய்ய இயலாது என்று பொய் கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில் கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக் கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்

அரசன் மரணமும் அடைந்த பின் அதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்து அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்த பின் கைதேர்ந்த பண்டிதரை அழைத்து  அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப் போல போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்து வைத்து அவர் உடலை எரித்தார்கள். அனைத்து காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவி  அரசாள்வதற்கு தேவையான அனைத்து சத் குணங்களையும் பெற்று இருந்தாள் என்பதை அறிந்து கொண்ட மந்திரிகள் அவளையே  நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகு வம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

காளிதாசன் ரகுவம்ச காவியம்   முடிந்ததுரகுவம்சம்: ஒரு பார்வை  

அக்னி வருணனுக்கு முன்பாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து கொண்டிருந்த ரகுவம்ச பரம்பரையினர் துறவறம் மேற் கொண்டோ, தத்தம் ஆயுளை தாமே முடித்துக் கொண்டோ தமது வாரிசுகளுக்கு ராஜ்ய பதவியை தந்து விட்டு தேவலோகம் போய்  சேர்ந்து விட்டார்கள். அக்னி வருணனின் மனைவி ஆண்ட போதும் அவளது ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. அவள் தனது முன்னோர்களின் ஆட்சியைப் போலவே திறமையாக ஆண்டு வந்தாள் என்றாலும் வம்சாவளியாக ஆண்டு வந்த ரகு பரம்பரை ஆட்சியின் பின்னலில் ஒரு இழை அறுந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.  ஏன் என்றால் பிள்ளைகளை இல்லாத அவளுக்கு பிறகு நாட்டை யார் ஆண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே அக்னி வருணனின் மறைவே ரகுவம்ச ஆட்சியின் முடிவு என்றே கருத வேண்டி உள்ளது.

சில குறிப்பேட்டுக்களில் அக்னி வருணனுக்குப் பிறகு சூரிய வம்சத்தின் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்த 35 அரசர்கள் ஆண்டு வந்துள்ளதாகவும் அதில் கடைசியாக ஆண்ட மன்னன் கிழக்கு சூரத் நகரை ஆண்டு வந்த  சுமித்ரா எனும் மன்னன் என்றும் காணப்படுகிறது.  அந்த மன்னனே அயோத்தியாவை ஆண்ட கடைசி சூரிய வம்சத்து மன்னன்  என்றும் காணப்படுகிறது என்றாலும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. மேலும்  அக்னி வருணனின் மறைவுக்குப்  பிறகு பதவி ஏற்ற ஷிக்ராகு எனும் மன்னனின் மகனான மாரு  என்ற மன்னன் யோகக் கலைகளில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அவரே கலியுகத்தில் பிறந்து மீண்டும் ரகு வம்சத்தை ஸ்தாபிக்க உள்ளார் என்ற செய்தி  சிலரிடம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் அக்னி வருணனின் மனைவியின் வழித் தோன்றல்களா அல்லது எந்த விதத்தில் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அக்னி வருணனுடைய முந்தைய மன்னர்களின் மகன் வழியினராக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதே போலவே மன்னன் மாருவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்களில் எட்டாவது மன்னனாக இருந்த பிரஹத்பால் எனும் மன்னன் மகா பாரதப் போரில் பங்கேற்றவர் என்றும், அவர் மகா பாரதப் போரில் கௌரவர்கள் சேனையில் பங்கேற்று அபிமன்யுவினால் மரணம் அடைந்தவர் என்றும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அவை எதுவுமே காளிதாசனின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகியின் ராமாயணத்திலோ காணப்படவில்லை.

இதேபோல், மாருவின் ஆட்சிக்குப் பிறகு ஆட்சி செய்த எட்டு பேரின் வரிசையில் பிரகத்பால் என்ற மன்னர் இருந்தார் என்று சில கதைகள் கூறுகின்றன, அவர் கௌரவர்களுடன் இணைந்து பாண்டவர்களுக்கு எதிரான போரில் அவர்களுக்காகப் போராடி மகாபாரதப் போரில் அபிமன்யுவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மீண்டும், இந்த அத்தியாயங்கள் எதுவும் காளிதாசரின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகி ராமாயணத்திலோ எங்கும் இடம் பெறவில்லை. இருப்பினும் காளிதாசனின் ரகுவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு ராமரின் பரம்பரை முன்னும் பின்னும் இவ்வாறு இருந்துள்ளது தெரிகின்றது.

1) திலீபன்
2) ரகு
3) அயன்
4) தசரதன்
5) ராம
6) லவா
7) குசா
8) அதிதி
9) நிஷாதா
10) நள
11) நாபா
12) புண்டரிகா
13) க்ஷேமதா
14) தேவனிகா
15) அஹினாஹு
16) பரியாத்ரா
17) சிலா
18) குசா (லவா மற்றும் குசா சகோதரர்களிலான குசா அல்ல)
19) உன்னப்பா
20) வஜ்ரநாபா
21) விசுவதாசா
22) ஹிரண்யனாபா
23) சங்கனைன்
24) வியோஷிதாசா
25) அத்யாத்மா
26) கௌசலா
27) பிரமிஷ்டா
28) துருவசாந்தி
29) சுதர்சன்
30) அக்னிவருணன்
31) அக்னிவருணனின் மனைவி

காளிதாசன் எழுதிய ரகுவம்சம் அக்னி வருணன் ஆட்சியைக் குறித்து எழுதியதும் மேலே தொடராமல் முடிந்து விட்டது. அக்னி வருணனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரது மனைவிக்குப் பின்னர் ராஜ்யத்தை ஆண்ட ரகு வம்சத்தினர் யார், யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கூறியபடி காளிதாசன் எழுதிய காவியத்தில் பல பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைக் குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது.

உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் போஜராஜன் காளிதாசரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரித்து வந்திருந்த நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள், இணைப் பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள்.

ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விடும். அந்த நேரங்களில் காளிதாசன் போஜ ராஜனை விட்டு விலகி எங்கேயேனும் சென்று தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருவதுண்டு. ஒரு முறை வழக்கம் போல போஜ ராஜனுக்கும் காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிந்தனர்.

காளிதாசனும் ஒரு தாசியின் வீட்டில் சென்று தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னை புலவர் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வந்தார். காளிதாசனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அத்தனை ஏன், ஒற்றர்கள் உட்பட மன்னனின் படை வீரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு கூட காளிதாசன் யார் என்ற அடையாளமே தெரியாதாம். ஆகவே அவர் நாட்டில் எங்காவது சென்று வாழ்ந்து வந்தால் அவரை மீண்டும் கண்டு பிடிப்பது கடினமான காரியமாக இருந்தது.

நல்ல நண்பனின் பிரிவுத் துயர் தாங்க முடியாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய புதிருக்கு விடைக் கூறும் மக்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவித்தார். போஜன் மற்றும் காளிதாசனின் மனநிலை ஒரே நிலையில் இருந்ததினால் அவர்கள் போடும் எந்த புதிருக்கும் மற்றவர்களால் எளிதில் அர்த்தம் கூற முடியாது. போஜனின் புதிர்களுக்கு காளிதாசனும், காளிதாசன் புதிர்களுக்கு போஜனும் மட்டுமே தக்க விடையைக் கொடுக்க முடியும். ஆகவே தனது புதிருக்கு நிச்சயமாக காளிதாசன் மட்டுமே பதில் கூற இயலும் என்பதை அறிந்திட்ட மன்னன் காளிதாசனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க அந்த புதிருக்கான விடை தருபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சன்மானங்கள் தருவதாக அறிவித்து இருந்தார்.

காளிதாசன் தங்கி இருந்த வீட்டில் இருந்த தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசரிடம் வந்து, ‘நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றாள். சற்றே ஏமார்ந்து போன காளிதாசனும் உடனடியாக, அந்த புதிருக்கான பதிலை ஒரு சமிஸ்கிருத ஸ்லோக வடிவில் தாசிக்கு கூறிவிட்டார்.

அந்த பதிலைக் கேட்ட தாசிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை காளிதாசனே அரசனிடம் சென்று அந்த பதிலைக் கூறிவிட்டு பரிசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டால் தன் கதி என்ன ஆகும் என எண்ணியவள் வஞ்சகமாக, காளிதாசன் உறங்கிக் கொண்டு இருந்தபோது அவர் கழுத்தை வெட்டி அவரைக் கொலை செய்து விடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.

அதற்குப் பிறகு அந்த தாசியும் அரண்மனைக்குச் சென்று அவர் விடுத்த புதிருக்கான பதிலைக் கூறி பரிசைக் கேட்க, அந்த பதிலைக் கேட்ட மன்னனும் அதை காளிதாசன் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு, பரிசை தாசிக்கு கொடுத்தாலும், அவளை விட்டு விடாமல் தாசியை மிரட்டி நடந்த உண்மையை அறிந்து கொண்டார். காளிதாசனை அவள் கொலை செய்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு ஓடோடி அவள் வீட்டுக்கு சென்றார். போஜனுக்கு ஒரு சக்தி இருந்தது. கற்றறிந்திருந்த அந்த சக்தியினால் இறந்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு முகூர்த்த நேரம் அவரால் உயிர் பிழைத்து வைக்க முடியும். ஆகவே அந்த சக்தியை போஜன் பிரயோகித்து காளிதாசனை உயிர் பிழைத்து எழ வைக்கிறார்.

காளிதாசனும் உயிர் பிழைத்து எழுந்திட இருவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். காளிதாசர் போஜரிடம் கூறினார் ‘ மன்னா, நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய ரகு வம்சம் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே முடிக்காமல் நான் மிச்சம் வைத்துள்ள குறிப்புகளைக் உனக்குத் தருகின்றேன். அதைக் கொண்டு நீங்கள் மீதம் உள்ள ரகு வம்சத்தை பாடி முடிக்க வேண்டும்’ என்று கூறிய பின் அதன் குறிப்புக்களையும் அவரிடம் தந்தப் பின் மரணம் அடைந்து விடுகிறார். அதைக் கொண்டு போஜராஜன், ரகு வம்சத்தின் முழு பகுதியையும் மீண்டும் எழுதி முடிக்க துவங்கினாலும் முழுமையாக அவரால் அதை எழுதி முடிக்கவில்லை என்றும் அதுவே போஜ சம்பு எனும் இராமாயண காவியமாகி விட்டது என்றும் கூறுகிறார்கள். போஜ சம்புவிலும் அக்னி வர்ணன் என்பவனின் கதையோடு ராமாயணம் முடிவதினால் காளிதாசன் எழுதிய மீதி பாகம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

காளிதாசன் எழுதிய ரகு வம்ச காவியத்தில் ராமருடைய மூதையோர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் சிறிய வாழ்க்கைச் குறிப்புக்களே காணப்படுகின்றன. ராமருடைய தந்தையின் முந்தைய வம்ச சாபம் போன்றவை கூறப்பட்டு இருந்தாலும் அவர் எழுதி உள்ள ராமருடைய கதையில் அவர்கள் அவதாரம் குறித்த அதிக விவரங்களைக் கொடுக்காமல் பொதுவாக கூறிவிட்டு விட்டுள்ளார்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் வால்மீகி முனிவரின் இராமாயண பாடலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதினால் காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தை அறிந்து கொண்டோ அல்லது படித்தோ இருக்கலாம் என்று நம்ப இடமுள்ளது. வால்மீகி எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயணம் 24000 க்கும் அதிகமான பாடலைக் கொண்டது என்றும், அவற்றில் ராமர் பிறப்பில் இருந்து இறப்பு வரை விவரமாக விவரிக்கப்பட்டு இருந்துள்ளது என்றும், அவர் எழுதிய ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றையும் பெருமைகளைப் பற்றி மட்டுமே என்பதினால் ராமருடைய முன் வழி சந்ததியினரையோ அல்லது ராமருக்குப் பிறகு ஆண்டவர்களையோ குறித்த செய்திகளை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் வால்மீகி ராமாயணத்தின் முதல் சில பாகங்களும் இறுதி பாகமான ராமர் இறப்பும், அவர் வம்சத் தொடர்ச்சி குறித்த பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை வால்மீகியின் முதல் சில பாகத்தில் அவர் ராமர் சந்ததியினர் குறித்து கூறி இருக்கலாம் என்றும், அதுவே காளிதாசரின் ரகுவம்ச காவியத்தின் கருவாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. நான் முன்னரே எழுதியது போல காளிதாசனால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. ஆனால் வால்மீகி ராமாயணத்தை போலவே காளிதாசரின் கதைக்குப் பின்னர் காவியம் மீண்டும் தொடராமல் அந்தரங்கத்தில் ரகு வம்ச காவியம் நின்று விட்டு  உள்ளதைக் காணும்போது காளிதாசரின் கண்டெடுக்கப்படாத பாடல்களில் பிந்தைய வம்சத்து செய்திகள் இருந்திருக்கலாம் என்பதாக நம்ப இடமுள்ளது.  எது எப்படியோ, காளிதாசரின் ரகு வம்சக் காவியத்தை முடிக்கப்படாத காவியமாகவே கருத வேண்டி உள்ளது.

-முடிவடைந்தது-