
திருப்பூவண ஆலய புராணம் மற்றும் வரலாறு – 2
திருப்பூவண ஆலய மகிமையைக் குறித்து சூதகர் மேலும் கூறலானார் ”திருப்பூவணத்தில் சிவலிங்கம் ஸ்வயம்புவாகத் தோன்றியதற்கு ஒரு கதை உள்ளது. அதைக் கூறுகிறேன் கேளுங்கள்” எனக் கூறி விட்டு அதைக் கூறலானார். ‘பார்வதியை மகளாக அடைந்த தக்க்ஷன் ஒருமுறை பிரும்மாவின் ஆலோசனைப்படி சிவபெருமானை துதித்துப் கடும் தவம் செய்து அறிய பல வரங்களைப் பெற்றான். அதன்படி அவனுக்கு பார்வதி தேவி மகளாகப் பிறக்க வேண்டும் என்றும், அவள் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்றும், அவன் உலகின் முக்கியத்துவம் பெற்றனாக இருப்பான் என்றும் அவன் நடத்தும் எந்த ஒரு பூஜையிலும், யாகத்திலும் அவனுடைய குடும்பத்தினரே முன்னிலை பெற்று இருப்பார்கள் என்றும், அவர்கள் அளிக்கும் அவிர் பாகத்தை அதிதியாக வந்து முதலில் சிவபெருமானே பெற்றுக் கொள்வார்.
அவர் வராமல் போனால் அதை பார்வதியே பெற்றுக் கொள்வாள் என்றும் வரம் பெற்றுக் கொண்டான்.
ஒருமுறை சிவபெருமானின் கோபத்தினால் பார்வதி சாபம் பெற அதை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் அவரை மணந்து கொள்ள அவள் இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அந்த சாபத்தினால் அவள் தக்க்ஷனின் ஆட்சிப் பகுதியில் ஒரு தாமரைத் தடாகத்திலே மலராக இருந்து கொண்டு இருக்க ஒருநாள் அதைப் பறித்த தக்க்ஷனின் கையில் குழந்தை வடிவமாக அவள் மாறி விட பெண் குழந்தை அற்ற அவனும் அந்தக் குழந்தையின் அழகில் மயங்கி அதிக சந்தோஷத்துடன் அவளை தன் பெண்ணாக தத்து எடுத்துக் கொண்டான். அதுமுதல் பார்வதி தக்க்ஷனின் மகளாகவே வளர்ந்தாள்.
அவள் வளர்ந்து பெரியவளாகி சிவபெருமானை கொண்டாள். அதன் பின் நடந்த பல நிகழ்ச்சிகளினால் சிவபெருமான் மீது கோபம் அடைந்த தக்க்ஷன் அவரை நிந்திக்கலானான். சிவபெருமானை தன்னை சார்ந்த யாருமே வணங்கக் கூடாது என உத்தரவு இட்டான். அதன் பின்னர் அவன் நடத்திய யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காமல் அவமானப்படுத்த, சிவபெருமானின் அறிவுரையையும் மீறி பார்வதி யாகத்துக்குச் சென்று அங்கு அவமானப்பட்டாள். அவமானத்தினால் துக்கம் அடைந்தவள் யாகத் தீயில் விழுந்து மரணமடைய அதனால் கோபமுற்ற சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பி தக்க்ஷனின் யாகத்தை அழித்து அவனையும் கொன்றார். அப்போது அனைவர் முன்னாலும் ஒரு முக்கிய சந்தேகம் எழுந்தது. பார்வதி தக்க்ஷனுக்குப் பிறந்து சிவபெருமானை மணந்தப் பின் அவனுக்கு யாராலுமே மரணம் கிடையாது என்று சிவபெருமான் கொடுத்த வரம் என்ன ஆயிற்று? சிவபெருமான் வரம் கொடுத்தது பொய்யா என தேவர்களும் அனைவரும் குழம்பியபோது அங்கிருந்த திருமால் சிவபெருமானை வணங்கி துதித்து தன்னுடைய சகோதரியின் தந்தைக்கு உயிர் பிச்சைக் கொடுக்குமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவனாரும் அறுத்து எறியப்பட்ட தக்க்ஷனின் தலையில் ஆட்டுத் தலையைப் பொருத்தி அவனுக்கு உயிர் கொடுத்தார்.
அதன் பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் அவர்களது சந்தேகத்தைப் போக்க திருமாலே ஒரு விளக்கம் அளித்தார். ‘தக்க்ஷனுக்கு மரணம் இல்லை என்ற வரத்தை சிவபெருமான் பொய்யாக கொடுக்கவில்லை. அவன் கேட்டுப் பெற்ற வரத்தின்படி பார்வதி பிறந்து சிவனை மணம் செய்து கொண்டப் பின் அவனுக்கு மரணம் ஏற்படாது என்பது உண்மை. ஆனால் பார்வதி அவனுக்கு மகளாகப் பிறக்கவில்லை. அவனுக்கு தாடகத்தில் இருந்து கிடைத்த பூவில் இருந்தே அவள் உருவானவள் என்பதினால் அவனுக்கு மகளாக மாறினாளே தவிர அவள் தக்க்ஷனுக்கு நேரடியாகப் பிறக்கவில்லை. ஆகவே அவனுக்கு சிவபெருமான் அளித்த வரம் பலிக்கவில்லை. வீர பத்திரரால் மரணம் கிடைத்தது என்றாலும் தக்க்ஷனின் வளர்ப்பு மகளாக பார்வதி இருந்ததினால் கருணைக் கொண்டு மீண்டும் அவனுக்கு உயிர் பிச்சைக் கொடுத்ததின் மூலம் சிவபெருமான் தான் கொடுத்த வரத்தையும் முழுமையாக அழிக்கவில்லை’ என்று கூற அதைக் கேட்ட அனைவரும் மனம் மகிழ்ந்து சென்றார்கள். அதுமுதல் தக்க்ஷனும் சிவபெருமானுக்கு தொண்டு புரியலானான்.
(சிறு விளக்கம் :
இந்த கதையுடன் சம்மந்தப்பட்ட வீரபத்திரஸ்வாமியின் ஆலயம் மாயவரத்தின் அருகில் பரசலூர் எனும் இடத்தில் உள்ளது. அங்குள்ள வீரபத்திர ஸ்வாமியின் திருமேனியை வழிபடலாம். சூலம், மழு, கத்தி, கேடயம், கபாலம், மணி ஆகிய ஆயுதங்களைத் தாங்கிய ஆறு கரங்களுடன் காட்சி தரும் இந்த மூர்த்தியின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பது போல சிலை உள்ளது. இங்குள்ள தல வரலாற்றின்படி வீரபத்திரர் அவதரித்தது ரிஷிகேசத்தில் என்றும் அவர் இங்கு வந்து இங்கு யாகம் செய்த தக்க்ஷனை அழித்ததாகவும் கூறுகிறார்கள். ஆகவே இந்த ஆலயம் உள்ள இடத்தில்தான் தக்க்ஷன் யாகம் செய்தான் என்றும் கூறுகிறார்கள். இதை எதற்காக குறிப்பிட்டு உள்ளேன் என்றால் தக்க்ஷன் யாகம் செய்த பூமி ரிஷிகேசத்தில் இருந்து மாயவரம் வரை பரவி இருந்துள்ளது என்றும் அப்படி என்றால் கடவுட்களின் உருவ அமைப்பு எந்த அளவு பிரும்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை மீண்டும் எடுத்துக் கூறவே ஆகும். – சாந்திப்பிரியா ) .
ஆனால் சிவபெருமானின் ஆணையை மீறி பார்வதி தக்க்ஷனின் யாகத்துக்கு சென்றதினால் அவளுக்கு பதியை அவமதித்த தோஷம் ஏற்பட்டது. அதற்கு பிராயசித்தம் செய்து கொண்டால்தான் அவளால் மீண்டும் சிவபெருமானுடன் இணைந்து வாழ முடியும் என்பதினால் சிவபெருமான் அவளை திருப்பூவணத் தலத்தில் சென்று தன்னை துதித்து சில காலம் தவத்தில் இருந்து தன்னை பூஜித்தால் அங்கு தான் ஒரு லிங்க உருவில் அவள் முன்னால் தோன்றி அவளை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதி கொடுத்தார். அதனால் பார்வதியும் திருப்பூவணத் தலத்தில் வந்து அங்கு ஒரு பாரிஜாத மரத்தை வளர்த்து அதன் அடியில் அமர்ந்து கொண்டு சிவனை வேண்டித் தவம் இருந்து பூஜிக்க சிவன் அங்கு ஒரு லிங்க உருவில் அவள் முன் தோன்றி அவளை மீண்டும் கரம் பிடித்தார். ஆகவேதான் இங்கு ஸ்வயம்புவாக எழுந்துள்ள சிவலிங்கம் மிகவும் மகிமை வாய்ந்தது என்றும் இதுவே திருப்பூவணத் தலத்தில் எழுந்துள்ள சிவலிங்கத்தின் கதை’ என்று சூதகர் கூறினார்.
சூதகர் தொடர்ந்து கூறலானார் ‘நீங்கள் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சாதாரணமாக தேவி ஆலயங்களை தவிர வேறு எந்த ஆலயத்துக்கு சென்றாலும் முதலில் விநாயகரை வணங்கியப் பின்னர் அங்குள்ள ஆலய தேவியை வணங்கிய பின்னரே மூலவர் யாராக இருந்தாலும் – சிவன், விஷ்ணு போன்றவர்கள்- அவர்களை வணங்குவார்கள். இது விதியல்ல என்றாலும் ஒரு நடை முறையாக இருந்துள்ளது என்பதின் காரணம் தாயே முதல் தெய்வம் என்பார்கள். திருப்பூவாணத்திலோ கணபதியை துதித்தப் பின்னர் முதலில் சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின்னர்தான் தேவியையும் மற்றவர்களையும் வணங்க வேண்டும். அப்படி செய்யாமல் தேவியை முதலில் வணங்குபவர்களுக்கு ஒரு அந்தணனைக் கொன்ற பாபங்கள் வந்து சேரும். இந்த தரிசன விதி வந்ததின் காரணம் ஒரு மன்னன் செய்த தவறினால் சிவபெருமான் கோபம் அடைந்து அப்படி ஒரு விதியை நிர்ணயித்தார் என்பதே. அந்தக் கதையைக் கேளுங்கள்’ எனக் கூறி விட்டு அந்தக் கதையை கூறத் துவங்கினார். ‘பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பகுதியில் ஆட்சியில் இருந்த திராணேசன் என்ற ஒரு மன்னன் (தற்போது மதுரைப் பகுதி) தன் வாழ்க்கையில் சலிப்புற்றன். வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையுமே அனுபவித்து விட்டதினால் மனதில் விரக்தி தோன்றியது. வாழ்ந்தது போதும் என அவன் மனம் எண்ணினான். ஆகவே தான் விரைவாக முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்று தன்னுடைய குருவிடம் கேட்டபோது அவர் அவனை முறையாக துறவறம் மேற்கொண்டு அஷ்ட திக்குகள் எனப்படும் எட்டு திசைகளிலும் உள்ள நூற்றி எட்டு சிவாலயங்களுக்குச் சென்று திங்கள் கிழமைகளில் சிவபெருமானை துதித்து சிவ பூஜை செய்து முடித்தப் பின் பிரசாதம் எனும் பெயரில் அங்கேயே நூற்றி எட்டு அந்தணர்களுக்கு அன்ன தானமும் செய்தபின் முடிவாக திருப்பூவணத்துக்கு வந்து ஒரு மண்டலம் சிவ பூஜை செய்து அன்னதானத்தை செய்து முடித்தால் அவன் விரும்பியது நடக்கும் என்று கூறினார்.
அதைக் கேட்ட அந்த மன்னனும் பெரும் மகிழ்ச்சி அடைந்து தனது குருநாதர் கூறியது போலவே துறவறம் பூணுவதற்கு தேவையான சடங்குகளை செய்து முடித்தப் பின் துறவறம் மேற்கொண்டு நூற்றி எட்டு சிவாலயங்களுக்கும் சென்று சிவபெருமானை வணங்கித் துதித்து தனது வேண்டுகோளை வைத்தப் பின் திருப்பூவணத்துக்கும் வந்தான். அப்போது அவன் ஒரு தவறை செய்தான். அஷ்ட திக்குக்களில் இருந்த சிவாலயங்களுக்கு செல்கையில் இடையில் ஒருமுறை திருப்பூவணத்துக்கும் சென்றான். ஆனால் அவன் அந்த ஆலய மகிமையை அறிந்திடவில்லை. மணி கன்னிகை தீர்த்தத்தில் குளித்தப் பின்னர் ஆலயத்துக்கு சென்றவன் கண்களில் முதலில் அன்னையின் சன்னிதானம் தென்பட அவனும் விநாயகரை வணங்கி விட்டு அந்த அன்னையின் சன்னிதானத்துக்குச் சென்று அவளை வணங்கினான். ஆனால் அடுத்த யாத்திரைக்கு நேரமாகி விட்டதினால் சிவனை வணங்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான். திருப்பூவணத்துக்கு முடிவாக வந்து பூஜைகளை செய்து யாத்திரையை முடிக்கப் போகின்றோமே என்ற எண்ணத்தில் சற்று அசட்டையாக இருந்து விட்டான். ஆனால் அந்த ஆலயமோ பார்வதி தவம் செய்ததினால் ஸ்வயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தினால் மகிமைப் பெற்ற இடமாகும் என்பதை அவன் அறியாமல் இருந்ததே அவன் செய்த தவறுக்குக் காரணம். திராணேசன் அங்கு சென்றபோது சிவபெருமானும் தனது சன்னதியில் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் பார்வதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். வந்தவன் தன்னை மதிக்காமல் சென்று விட்டதினால் கோபமுற்று அங்கிருந்து கிளம்ப எழுந்தபோது பார்வதி வந்து அவரை தடுத்தார். வந்தவனை தண்டிப்பதற்காக தன்னை விட்டு அங்கிருந்து செல்வது முறையாகுமா என்று கெஞ்ச சிவபெருமானும் இனியும் தான் அங்கு தங்கி இருக்க வேண்டும் என்றால் அந்த ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் சிவபெருமானான தன்னை கண்டிப்பாக வணங்கி விட்டே தேவியை வணங்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதை பார்வதியும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டாள். அதனால்தான் அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் முதலில் சிவன் சன்னதிக்கு சென்று அவரை வணங்கிய பின்னரே பார்வதியை வணங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
அங்கிருந்து கிளம்பியவன் அஷ்ட திக்குக்களிலும் இருந்த பிற ஆலயங்களுக்கும் சென்று சிவனை வணங்கிய பின்னர் முடிவாக மீண்டும் திருப்பூவணத்துக்கும் வந்தான். வழியில் அவன் பல சங்கடங்களை எதிர்கொண்டான். காரணம் அவனுக்குப் புரியவில்லை. முடிவாக தனது குருநாதர் கூறியது போல திருப்பூவணத்துக்கு வந்து மணிக் கன்னிகை தீர்த்தத்தில் நீராடி எழுந்தபோது தான் ஒரு வலுவற்ற பிரும்ம ராட்ஷஷனாகி இருந்ததைக் கண்டான். தான் இப்படி ஒரு கோலத்தை ஏன் அடைந்தோம் என்பது புரியாமல் கலங்கினான். நேரம் ஆகா ஆகா பசி எடுக்கலாயிற்று. அவன் பிரும்ம ராட்ஷசனாகி இருந்ததினால் யாரும் அவன் அருகிலும் செல்லவில்லை. உணவும் தரவில்லை. அவனாலும் யாரிடமும் சென்று உணவைப் பறிக்க முடியாமல் உடல் வலு குறுக்கே நின்றது.
நல்ல வேளையாக அங்கு வந்த நாரத முனிவரை வணங்கித் துதித்து தான் யார் என்பதையும் தான் அடைந்துள்ள நிலையையும் எடுத்துக் கூறி தான் ஏன் இந்த நிலையை அடைந்தேன் என்பது புரியவில்லை என்று கூறி அழுதான். தான் இப்படி பிரும்ம ராக்ஷசனாக மாறியது ஏன் என்றும் தான் மீண்டும் திராணேசனாக மாற வேண்டும் என்பதற்கு என்ன வழி முறை உள்ளது எனவும் உள்ளம் கனிந்துக் கேட்டான். நாரத முனிவர் தனது ஞான திஷ்டியினால் நடந்த அனைத்தையும் அறிந்துக் கொண்டதும் அவனுக்கு அவன் செய்த பிழையைக் கோடிட்டுக் காட்டி ‘நீ செய்த மிகப் பெரிய தவறே நீ பூவண்ணனாதர் நாதர் தனது சன்னதியில் வீற்று இருந்தபோது அவரை மதியாமல் அவருடைய பத்தினி சௌந்தரநாயகியாளை மட்டுமே வணங்கி விட்டு திரும்பி விட்டாய். ஆகவே நீ மணிக் கன்னிகையில் தினமும் குளித்து விட்டு அவரது சன்னதிக்குச் சென்று அவரை வணங்கி துதித்து வர வேண்டும். இப்படியாக பன்னிரண்டு மண்டலம் நீ அவரை தினமும் வணங்கி வந்தபின் மீண்டும் ஷேத்திராடனம் சென்று பல சிவாலயங்களிலும் அவரை துதித்தப் பின் கடைசியாக மீண்டும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்ஷத்திரத்தன்று இங்கு வந்து இவரை பூஜித்தால் உனக்கு இழந்த உருவம் மீண்டும் கிடைக்கும்’ என்றார். மேலும் அந்த யாத்திரைக்கான சங்கல்பத்தை அங்கேயே எடுத்துக் கொண்டால் இனி அவன் அந்த புனித யாத்திரையை செய்து முடித்து பழைய உருவை அடையும்வரை அவனுக்கு எந்த விதத்திலாவது உணவு கிடைக்கும் என்றும், அவனுக்கு அகோரப் பசியும் எடுக்காது என்று கூறினார். பிரும்மராட்ஷசனும் நாரதரை சாட்சியாக வைத்துக் கொண்டே அங்கேயே அந்த யாத்திரையை மேற் கொள்வதாக சங்கல்பம் செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பி புனித யாத்திரைக்குச் சென்றான்.
ராக்ஷச உருவில் இருந்த திராணேசனும் நாரதப் பெருமான் கூறிய அறிவுரையை ஏற்று அவர் கூறியபடியே அனைத்தையும் செய்து கார்த்திகை மாத கார்த்திகை தினத்தன்று திருப்பூவணத்துக்கு வந்து மனிக் கன்னிகையில் முழுகி எழ அங்கேயே சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து அவன் பாவத்தைப் போக்க, அவனும் தனது பழைய உருவை மீண்டும் பெற்றான். அது முதல் அந்த ஆலயத்துக்குச் செல்பவர்கள் முதலில் பூவணநாதரை வணங்கியப் பின்னரே தேவியை வணங்க வேண்டும் என்பது நிபந்தனை ஆயிற்று’ என்று கூறினார். இப்படியாக சூதகர் திருப்பூவணத்தின் வரலாற்றைக் கூறி முடித்தப் பின் அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த முனிவர்களும் ரிஷிகளும் சூதகரை வணங்கிவிட்டு அவருக்கு நன்றி கூறி விட்டு கலைந்து சென்றார்கள்.
தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் புத்த மதமும் பிற மதங்களும் பெருமளவு தலை தூக்கத் துவங்கி இருந்தன. தென் பகுதிகளில் ஆண்டு வந்த மன்னர்களில் பாண்டிய வம்சத்து மன்னர்கள் இந்து மதத்தை விட்டு விலகி புத்த மற்றும் சமண மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொள்ளத் துவங்கினார்கள் அதனால் பல பிரச்சனைகள் தோன்றலாயின. அந்த நிலையில் ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னன் பெருமளவு பிற சமய மாறுதலுக்கு காரணமாக அமைந்தபோது அங்கிருந்தவர்கள் திருநாவுக்கரசரை பாண்டிய நாட்டுக்கு வந்து அங்கு நிலவிய சூழ்நிலையை மாற்ற உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் பக்தரான திருநாவுக்கரசரும் மதுரையை நோக்கி வரலானார். அவர் திருப்பூவண எல்லையை அடைந்தபோது வைகை ஆற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. வைகை ஆற்றை நோக்கிச் சென்றவர் நிலை தடுமாறினார். அதற்குக் காரணம் அந்த ஆற்று மணலைக் கடக்க முயன்றபோது அவர் எங்கு நோக்கினாலும் அந்த மணல் பகுதி அனைத்துமே சிவலிங்கங்களை கொண்ட பூமியாகவே காட்சி அளித்தன. அவரால் அந்த மண்ணில் நடந்து செல்ல முடியவில்லை. ஆகவே அவர் தூரத்தில் இருந்தபடியே சிவபெருமான் மீது பதிகம் பாடத் துவங்க அவர் பக்தியை எண்ணி மகிழ்ந்த சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு காட்சி தர முடிவு செய்து அந்த மணல் திட்டில் ஒரு கோடியில் நின்றவாறு திருநாவுக்கரசருக்கு தானே காட்சி தரத் துவங்க அந்த அழகைக் காண விரும்பிய நந்தி தேவர் தனது தலையை திருப்பிப் பார்த்தாராம். அதனால்தான் திருப்பூவணத்தில் உள்ள நந்தியின் தலை சாய்ந்து காணப்படுகிறது என்பது ஒரு புராணக் கதை. இன்னொரு கதையின்படி திருநாவுக்கரசருக்கு காட்சி தர விரும்பிய சிவபெருமானே தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த நந்தி தேவரை தன்னை திருநாவுக்கரசர் தரிசிக்க வேண்டும் என்பதற்காக சற்று தலையை சாய்த்துக் கொண்டு அமருமாறு கூறியதினால் நந்தியின் தலை திரும்பி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
திருப்பூவண்ண ஆலயத்துக்கு மற்ற ஆலயங்களுக்கு இல்லாத இன்னும் ஐந்து வித பெருமையும் உண்டு. அவை:-
• இங்குள்ள சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்துள்ளார்.
• இங்குள்ள ஆலயத்தில் பல மன்னர்கள் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து உள்ளார்கள்.
• இங்குள்ள ஆலயத்தில் அந்த நாட்டு மக்களில் சிலரும் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்து உள்ளார்கள்;.
• இங்குள்ள ஆலயத்தில் பிரும்மா, விஷ்ணு போன்றவர்கள் வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்துள்ளார்கள் . பூக்களிலேயே சிறந்த தாழம்பூவும், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு வந்து சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் பெற்று உள்ளது.
மதுரையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் வைகை கரையில் அமைந்துள்ள உள்ள இந்த ஆலயம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. மானாமதுரை, பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் மற்றும் இராமேசுவரம் போன்ற நகர்களுக்கு செல்லும் பேருந்துகள் திருப்புவனம் வழியாக செல்வதினால் இந்த ஆலயத்துக்கு எளிதாக செல்ல முடிகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலும் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
திருப்பூவண மகாத்மியம் முடிவுற்றது