பிரும்மா இந்த பிரபஞ்சத்தைப் படைத்த சில காலத்துக்குப் பின் அவரிடம் சென்ற அனைத்து முனிவர்களும் ரிஷிகளும் தாம் அனைவரும் நிம்மதியாகவும், தடங்கல்கள் இன்றியும் யாகங்களை செய்யவும், தவம் செய்யவும் ஒரு தக்க இடத்தைக் காட்டுமாறு அவரிடம் வேண்டிக் கொண்டார்கள். அவரும் சிறிது நேரம் யோசனை செய்தப் பின் தன் கையில் அப்போது வைத்து இருந்த ஒரு சங்கு சக்கரத்தை எடுத்து பூமியில் ஓட விட்டார். அடுத்து அந்த ரிஷி முனிவர்களிடம் பிரும்மா கூறினார் ‘ ரிஷி முனிவர்களே, நீங்கள் இந்த சக்கரத்தை தொடர்ந்து செல்லுங்கள். அது எந்த இடத்தில் சென்று நின்று விடுமோ அந்த இடமே நீங்கள் விரும்பும் இடம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார். அவர் கொடுத்த அறிவுரைப்படி அந்த ரிஷி முனிவர்கள் சங்கு சக்கரத்தை தொடர்ந்து சென்றார்கள். அதுவும் பல இடங்களுக்கும் ஓடிச் சென்ற பின் முடிவாக நைமிசாரண்யா வனத்தில் சென்று நின்று விட, அந்த இடமே அனைத்து ரிஷி முனிவர்களும் கூடி சத்சங்கம் செய்யவும், வேள்விகள் செய்யவும் ஏற்ற இடமாக அமைந்தது.

நம் நாட்டில் பல்வேறு புராணங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றையும் நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் கூறியதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து புராணக் கதைகளையும் முருகப் பெருமானே சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கு விரிவாகக் கூறியதாகவும், அதை நந்தி தேவர் வியாச முனிவருக்கும் பிற ரிஷி முனிவர்களுக்கும் கூறினார் என்றும் நம்பிக்கை உள்ளது.
அப்படி நந்தி தேவர் மூலம் சனகாதி முனிவரும், சனகாதி முனிவர் மூலம் வியாச முனிவரும் அறிந்து கொண்ட புராணங்களில்  சூதகர் எனும் முனிவருக்கு பதினெட்டுப் புராணங்களை  வியாச முனிவர்  போதித்தாராம் . அவற்றை நைமிசாரண்யா வனத்தில் இருந்த ரிஷி முனிவர்கள் கூட்டிய சத்சங்கத்தில்  சூதக முனிவர்  மற்ற முனிவர்களுக்கு விளக்கிக் கூறினாராம். இப்படியாகத்தான் சூதக முனிவர் மூலம் மற்ற முனிவர்கள் பல புராணங்களை, பல ஆலய மான்மியங்களை, மகத்துவங்களை  தெரிந்து கொண்டார்கள். அப்படி கூறப்பட்ட புராணங்களில் ஒன்றே பிரும்மகைவர்த்த புராணம் என்பதாகும். வட மொழியில் எழுதப்பட்டு உள்ள இதில்தான்  திருப்பூவணப் புராணமும் சுமார் பதினான்கு அத்தியாயங்களில் இருந்தது எனவும், வடமொழியில் இருந்த அந்த   திருப்பூவணப் புராணம் கந்தசாமிப் புலவர் என்பவரே தமிழில் மொழிபெயர்த்து பாடினார் என்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலயத்தை திருப்பூவன ஆலயம் என்றும் கூறுகிறார்கள்.  திருப்பூவன ஆலயம் தமிழ்நாட்டின்  சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த  ஆலயம் சுமார் ஆயிரத்து  ஐநூறு  வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். இந்த ஆலயப் பெருமையை  குறித்து அப்பர், சம்மந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர் போன்ற தமிழ் புலவர்கள் பாடி உள்ளார்கள். ஆலயத்தின் மூலவர் பூவணநாதர் மற்றும் அம்பாளின் பெயர் சௌந்தர்யநாயகி  என்பதாகும். இனி  இந்த ஆலயத்தின்  மகாத்மியத்தை  படிக்கலாம்.

…………தொடரும்