
நம் நாட்டில் பல்வேறு புராணங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றையும் நைமிசாரண்ய வனத்தில் சூதக முனிவர் கூறியதாக கூறுவார்கள். ஆனால் உண்மையில் அனைத்து புராணக் கதைகளையும் முருகப் பெருமானே சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கு விரிவாகக் கூறியதாகவும், அதை நந்தி தேவர் வியாச முனிவருக்கும் பிற ரிஷி முனிவர்களுக்கும் கூறினார் என்றும் நம்பிக்கை உள்ளது.
அப்படி நந்தி தேவர் மூலம் சனகாதி முனிவரும், சனகாதி முனிவர் மூலம் வியாச முனிவரும் அறிந்து கொண்ட புராணங்களில் சூதகர் எனும் முனிவருக்கு பதினெட்டுப் புராணங்களை வியாச முனிவர் போதித்தாராம் . அவற்றை நைமிசாரண்யா வனத்தில் இருந்த ரிஷி முனிவர்கள் கூட்டிய சத்சங்கத்தில் சூதக முனிவர் மற்ற முனிவர்களுக்கு விளக்கிக் கூறினாராம். இப்படியாகத்தான் சூதக முனிவர் மூலம் மற்ற முனிவர்கள் பல புராணங்களை, பல ஆலய மான்மியங்களை, மகத்துவங்களை தெரிந்து கொண்டார்கள். அப்படி கூறப்பட்ட புராணங்களில் ஒன்றே பிரும்மகைவர்த்த புராணம் என்பதாகும். வட மொழியில் எழுதப்பட்டு உள்ள இதில்தான் திருப்பூவணப் புராணமும் சுமார் பதினான்கு அத்தியாயங்களில் இருந்தது எனவும், வடமொழியில் இருந்த அந்த திருப்பூவணப் புராணம் கந்தசாமிப் புலவர் என்பவரே தமிழில் மொழிபெயர்த்து பாடினார் என்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலயத்தை திருப்பூவன ஆலயம் என்றும் கூறுகிறார்கள். திருப்பூவன ஆலயம் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம். இந்த ஆலயப் பெருமையை குறித்து அப்பர், சம்மந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர் போன்ற தமிழ் புலவர்கள் பாடி உள்ளார்கள். ஆலயத்தின் மூலவர் பூவணநாதர் மற்றும் அம்பாளின் பெயர் சௌந்தர்யநாயகி என்பதாகும். இனி இந்த ஆலயத்தின் மகாத்மியத்தை படிக்கலாம்.