
சாந்திப்பிரியா
பாகம்-2
முன்னொரு காலத்திலே மத்தியன்தின முனிவர் என்பவர் ஒரு காட்டில் ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அந்த காலங்களில் இருந்த முனிவர்கள் தாமே தம் மக்களுக்கு போதகர்களாக இருந்து சாஸ்திர சம்பிரதாயங்களை, வேதங்களை, ஆன்மீக பாடங்களை போதிப்பார்கள். அப்படிப்பட்ட முனிவர் பரம்பரையில் தோன்றும் பாலகர்களும் முனிவர்கலாகவே மாறுவார்கள். இளம் வயதிலேயே அபார ஞானமும் பெறுவார்கள். இந்த சூழ்நிலைக் காலத்தில்தான் ஓரளவு வயதுக்கு வந்த தன இளம் பாலகனுக்கு மத்தியன்தின முனிவரே பாடங்களை போதித்து வந்தார். அப்போது ஒரு நாள் அந்த பாலகன் தனது தந்தையிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.
‘தந்தையே, கடவுளை எங்கே தரிசிப்பது ?’
கேள்வியைக் கேட்டது சிறு பாலகனே என்றாலும் அதை பாலகனின் தவக் குறைவாகவே கருதிய முனிவர் அதற்கு பதில் கூறினார் ‘ என் மகனே , ஆகாயத்துக்குள் நின்று கொண்டே ஆகாயத்தை எங்கே காணலாம் என்று கேட்கலாமா?. பிரபஞ்சம் முழுவதுமே நிறைந்தவர் கடவுள். ஆகாயமே கடவுளுக்குள் அடங்கிய சிறு தூசியாகும். நாமெல்லாம் அந்த வியாபகத்துக்குள்ளே (வியாபகம் என்றால் படர்ந்து விரிந்த இடம் என்று பொருள் கொள்ளவும்) உள்ள சிறு அணுக்களைப் போன்றவர்கள். கடவுள் எங்கே என்று கேள்வி கேட்ட நீயும் அந்தக் கடவுளுக்குள்ளேயே நின்று கொண்டுதான் கடவுள் எங்கே என்று கேட்டாய். பூமி முழுவதுமே கடவுள் உள்ள இடத்தின் மிகச் சிறிய சன்னதி ஆகும். அதில் பிறப்பெடுக்கும் உயிர்கள் தம்மை அறியாமலேயே தமது ஸ்தூல உடலை தாம் என்றும், தனி உயிர் என்று கருதிக் கொண்டும் உயிர் வாழ்கின்றன. அப்படி தாம் என்று வாழும் உயிர்கள் கடவுளை அறிந்து கொள்வது எப்படி? அந்தக் குறையை நீக்கி என்றாவது ஒரு நாளன்று கடவுளை எங்கும் காண்பதற்கு தேவையான மன நிலைப் பெறுவதற்கு அனுஷ்டிக்க வேண்டிய ஒரு நெறி உள்ளது. அதை இன்றே உனக்கு போதிக்கிறேன். கேள்’ என்று கூறி விட்டு தனது மகனுக்கு மத்தியன்தின முனிவர் அந்த நியதியை போதிக்கலானார்.
………தொடரும்