திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள்

சாந்திப்பிரியா

சென்னையில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருநின்றவூர் எனும் ஊரில் உள்ள விஷ்ணுவின் ஆலயம். இது வைஷ்ணவர்களின் 108 திவ்ய தேச ஆலயங்களில் ஒன்று. சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு  செல்லும் வழியில் திருமிழிசை எனும் இடம் வரும். அது வந்ததும் அங்கிருந்து வடக்குப் பக்கம் திரும்பிச் சென்றால் சுமார் 4 அல்லது ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநின்றவூரரை அடையலாம்.  திருநின்றவூருக்கு சென்னையில் இருந்து உள்ளூர் ரயிலிலும் செல்லலாம். இந்த ஊரில் உள்ள இன்னொரு முக்கியமான ஆலயம் சிவன் ஆலயம். இவை இரண்டுமே பிரபலமான ஆலயங்கள்.
திவ்ய தேச ஆலயங்களில் ஒன்றான திருநின்றவூரின் விஷ்ணு ஆலயத்தை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் எனக் கூறுகிறார்கள். ஆலயம் பல்லவ மன்னார்களால் கட்டப்பட்டது என்பதினால் இது 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயமாகும்.

இதன் வரலாறு என்ன என்றால், மகாலஷ்மியானவள் சமுத்திரராஜனின் மகளாக இருந்தாள். அப்போது அவள் ஆகாய மார்கமாக அங்கும் இங்கும் சென்று இயற்கையின் அற்புதங்களைக் கண்டு கழித்துக் கொண்டு இருந்தால். அப்போது ஒருமுறை  இந்த ஆலயம் உள்ள இடத்தின் அருகில் வந்தபோது அங்கு நிலவிய ரம்யமான சூழ்நிலையைக் கண்டு பிரமித்துப் போய் கீழே இறங்கி வந்து பூமியின் மீது சிறிது நேரம் நின்று விட்டு அங்கேயே தங்கி இருக்க ஆசைக்  கொண்டாளாம். ஆகவேதான் அவள் நின்று இருந்த ஊர் என்ற பெருமையினால் திரு என்றால் லஷ்மி எனப் பொருள் தருவதை சேர்த்து திருநின்றவூர் என இந்த இடத்தின் பெயரை வைத்தார்கள். லஷ்மி தேவியானவள் இங்கு இருக்கும்போதுதான் மகாவிஷ்ணு அவளை திருமணம் செய்து கொண்டதினால் அவரும் இங்கேயே வந்து தனது மாமனார் வீட்டில் வாசம் செய்ததான ஐதீகம் உள்ளது. சமுத்திரராஜனின் கடலானது சென்னையை சுற்றி இருந்ததினால் அனைத்து இடமும் அவர் ராஜ்ஜியமாகவே இருந்தது.

பல்லவ மன்னான் ஒருவரின் கனவில் தோன்றிய விஷ்ணு பகவான் லஷ்மிதேவியின் இங்கு வந்தக் கதையைக் கூறி லஷ்மியுடன் வசிக்க ஆசைபட்ட  இந்த இடத்தில் அவள் பெயரால் ஒரு ஊரை அமைத்து அதில் தம் இருவருக்கும் ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட இந்த ஆலயம் எழுந்ததாம்.
இந்த ஆலயத்தில் வந்து வணங்கிய பக்தர்களுக்கு நிறைய நன்மைகளை விஷ்ணு  கொடுத்ததினால் இங்கு அவர் பெயரும்  பக்தர்கள் விரும்பும் கடவுள் எனக் குறிக்கும் வகையில் பக்தர்களின் வத்சலா அதாவது பக்தவத்சலா என ஆயிற்று என்கிறார்கள். அது போலவேதான் இந்த ஊரில் பிறந்த அனைவருமே மகாலஷ்மியை தம்மைக் காத்து அருளும்  தாயாகவே  கருதியதினால் அவளை அன்புடன் ‘என்னைப் பெற்றத் தாயே’ என அழைக்க  அந்த அம்பிகையின் பெயரும் ஆலயத்தில் ‘என்னைப் பெற்றத் தாயார்’ என அமைந்தது என்றும் கூறுகிறார்கள் .

இந்த ஆலயத்தின் விசேஷத்தை இன்னொரு கதையையின் மூலமும்  கூறுகிறார்கள். ஒருமுறை திருமங்கை ஆழ்வார் இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்தபோது, விஷ்ணுவும், லஷ்மியும் ஏகாந்தத்தில் இருந்ததைக் கண்டார். ஆகவே உள்ளே சென்றால் அவர்களுக்கு இடையூறு ஆகிவிடுமே என நினைத்தவர் உள்ளே சென்று அவர்களை தரிசிக்காமல் இன்றைய திருவிளக்கேணி என்ற இடத்திற்குச் சென்று விட்டாராம். அவர் சென்றது திருவிளக்கேணி அல்ல அது மகாபலிபுரம் என்றும் சிலர் கூறுகிறார்கள். அவர் இங்கு வந்து தன் மீது பாசுரம் பாடுவார் என எதிர்பார்த்துக் காத்திருந்த லஷ்மியானவள் ஆலயத்துக்கு வந்த திருமங்கை ஆழ்வார் திரும்பச் செல்வதைக் கண்டு மனம் வருந்தினாள். உடனே தன கணவர் விஷ்ணுவிடம் அதைக் கூறி வருத்தப்பட  பகவானும் தாமதிக்காமல் திருமங்கை ஆழ்ச்வாரைத் தேடிச் சென்று அவரை அழைக்க ஓடோடி வந்த ஆழ்வாரும் அவர்களின் அழகை வர்ணிக்கும் இரண்டு பாடல்களையும் பாடி அவர்களை மகிழவித்தாராம். இந்த இடத்தில் சமுத்திரராஜன் தினமும் வந்து விஷ்ணுவை தரிசித்தார் என்றும், வருண பகவானுக்கும் இந்த இடத்தில் விஷ்ணு காட்சி தந்தார் என்றும் வாய் மொழிக் கதைகள் உண்டு.

ஆலயம் ஐந்து கோபுரங்களைக் கொண்டு உள்ளது. சுமார் பத்து அடி உயர மூலவரான பக்தவத்சலனார்  கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவருடன் அவர் மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியும் நின்று கொண்டு இருக்கின்றார்கள். அந்த ஆலய சன்னதியிலேயே அதைப் போன்ற உத்சவ மூர்த்தியையும் பஞ்சலோக உலோகத்தில் செய்து வைத்து உள்ளார்கள். மூலவரைத் தவிர என்னைப் பெற்றத் தாயார் என்ற பெயரில் அன்னை லஷ்மி தேவிக்கும் தனி சன்னதி அமைந்து உள்ளது. அதுபோல சக்ரத்தாழ்வார், ராமானுஜர், ஆண்டாள் போன்றவர்களுக்கும் ஆலயத்தில் உள்ள முதல் பிராகாரத்தில் சிறிய சன்னதிகள் உள்ளன. கருடாழ்வாரும் தனி சன்னதியில் காணப்படுகிறார். இந்த ஊருக்கு  சென்று ஆலயத்துக்கும் செல்பவர்கள் லஷ்மி தேவியின் பூரண கடாத்ஷத்தைப் பெறுவார்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிறைவேறும் என்றும் நம்பிக்கை உள்ளது.

ஆலய விலாசம்  
Executive Officer
Bhaktavatsala Perumal Temple
Thiruninravur
Thiruvallur Dist.
Tamilnadu
India – 602024