COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக  தத்துவம்

அத்தியாயம் 45
ஹுண்டாசுரன் வதம்; நஹுஷன்- அசோக சுந்தரி திருமணம்

|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||

குரு வேத தர்மா தொடர்ந்து கூறினார் ‘பிறப்பு எடுத்தவன் தான் என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வியப்பிற்குரியதல்லவா? விண்ணுலக சக்திகளுக்கு மனித குலத்தின் இயல்பு எந்த அளவு அறியப்படாததாக இருக்கிறது ||1||

அவர்கள் இந்த உடலையே உண்மையான ஆத்மாவாகக் கருதுகிறார்கள்; முதுமை இன்றி நிலையாகவே இருக்க விரும்புகிறார்கள்; ஆனால் உடலோ வெளிப்படையான மாற்றங்களுக்கு உட்பட்டது; ஒவ்வொரு கணமும் அது அழிவை நோக்கி விரைந்து செல்கிறது||2||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘நிகம: பிரலய-உத்பத்தி: கதயந்தி பிரதிக்ஷணம், பஞ்ச-பூத-தேகஸ்ய ஜடஸ்ய அக்னேரிவ அர்ச்சிஷாம்’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘நெருப்பின் சுடரானது ஒவ்வொரு கணமும் எவ்வாறு தோன்றி மறைந்து கொண்டிருக்கிறதோ*, அது போலவே ஜடமான இந்த ஐம்பூத உடலும் ஒவ்வொரு நொடியும் பிறப்பையும் (உத்பத்தி), இறப்பையும் (பிரளயம்) சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன.
{*நாம் ஒரு எரியும் விளக்கையோ அல்லது நெருப்பையோ பார்க்கும்போது, அது ஒரே சுடராக நிலைத்திருப்பது போல் நமக்குத் தோன்றும். ஆனால், அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக, அந்த நெருப்புச் சுடர் ஒவ்வொரு கணமும் பழைய துகள்களை அழித்து, புதிய துகள்களைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது;
இந்த ஸ்லோகம் ஸ்ரீமத் பாகவதத்தின் 11-வது ஸ்கந்தம் (மகாபுராணத்தின் 11-வது பகுதி), 22-வது அத்தியாயத்தில், 44-வது ஸ்லோகமாக அமைந்துள்ளது.}||3||

இவ்வாறு, மந்த புத்தியுடைய அந்த அசுரன் மரணத்தோடு போரிட முயன்றான்; ஆனால் அதன் விளைவாக அவன் அழிந்து போனான்; நிலையற்ற தன்மை கொண்ட உயிரினங்களில், மரணத்தைத் தன்னிடம் நெருங்க விடாமல் விலக்கி வைக்க யாரால் இயலும்?||4||

எவர் ஒருவர் இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்ள நினைக்கிறார்களோ, அவர்களே பாக்கியசாலிகள்; அவர்களாலேயே மரணத்தையே அச்சுறுத்த முடிகிறது; மற்றவர்களோ, மரணம் சம்பவிக்கும்போது ஏற்படும் அழிவின்மை குறித்து அச்சம் கொள்கிறார்கள்||5||

தங்களை முதுமையற்றவர்களாகக் கருதுபவர்கள், இறைவனின் திவ்யத் திருவடிகளோடு உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்த ஞானம் பெற்ற ஆத்மா க்களே ஆவர்; அத்தகையவர்களே பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியைக் கடந்து நிற்கிறார்கள்; அவர்கள் தங்கள் விருப்பத்தின்படியோ அல்லது இறைவனின் திருவுள்ளப்படியோ இவ்வுலகில் நிலைத்திருக்கிறார்கள்||6||

தேவர்களாகவே இருந்தாலும், தங்களுக்குள் ஒளிரும் ஆத்மா வை அறிந்து கொள்ள அவர்கள் முயற்சி எடுக்கவில்லை என்றால், அவர்களும் தாங்களே அரக்கர்களைப் போலவே கொடுமை இழைப்பவர்களாகவே கருதப்படுவர்; அப்படியிருக்க, வேறு யார் அவர்களுக்கு அழியாப் பெரு வாழ்வை அருள முடியும்?’ ||7||

இந்த பூத உடலைத்தான், முதுமையற்றதாகவும் அழிவற்றதாகவும் மாற்றிக் கொள்ள ஹுண்டாசுரன் விரும்பினான்; ஆயினும் விதியின்படி, அவன் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது ||8||

ஆகவே ஹுண்டாசுரன் தன் படையைத் திரட்டி, தன் தேரில் ஏறினான்; போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, தன்னை முழுமையாகத் தயார் படுத்திக் கொண்டு போர்க் களத்திற்கு வந்தான் ||9||

அங்கு அவன் விதிப்படி வந்திருந்த எதிரியை எதிர் கொண்டான்; அவன் மிகுந்த வேகத்துடன் முன்னேறி வந்தான்; அப்போதுதான், விண்ணுலக மன்னனான இந்திரனால் தனக்கு அனுப்பப்பட்ட அந்த வீரமிக்க தேரில் அமர்ந்திருந்த இளவரசன் நகுஷன், அவனைப் பார்த்தான்||10||

போர் களத்தில் இளவரசன் மற்றொரு சூரியனைப் போலவே காட்சியளித்தான்; கையில் வில்லும் அம்பும் ஏந்தி, ஒளிரும் காதணிகளையும் கிரீடங்களையும் அணிந்திருந்தான்; அவன் நெருங்கி வருவதைக் கண்ட மாத்திரத்திலேயே, ஹுண்டாசுரன் வியப்பால் திகைத்துப் போனான்||11||

ஆகவே அவன் பல்வேறு போர் உத்திகளைச் சிந்தித்தான்; யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட் படைகள் அடங்கிய சில பிரிவுகளை, அந்தந்த தளபதிகளின் தலைமையில், எதிரிப் படையை எதிர் கொள்ளுமாறு அனுப்பினான்||12||

சிறந்த போர் வீரனாகப் புகழ் பெற்ற ஹுண்டாசுரன், விண்ணுலகப் படைகளின் மீது தாக்குதல் தொடுத்தான்; இரு தரப்பினரும் எழுப்பிய போர் குரல்களும் ஆரவாரங்களும், ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின் அடித்தளத்தையே உலுக்கி விடுவது போல ஒலித்தன ||13||

அரக்கர்கள் புலிகளின் கர்ஜனையைப் போலவே முழக்கமிட்டு, திசைகள் அனைத்தையும் நிறப்பும் வகையில் பெரும் இரைச்சலை உண்டாக்கினர்; அன்று தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே ஒரு பயங்கரமான போர் மூண்டது||14||

ஒவ்வொரு போர் வீரனும் தன் எதிரியின் கவசத்தை உடைக்க முயன்றான்; திரிசூலம், ஏவுகணைகள், கோடாரிகள், வாள்கள், கதைகள் மற்றும் பிற ஆயுதங்கள் எனப் பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்; தங்களிடம் இருந்த அனைத்து தரப்பட்ட பொருளைக் கொண்டும் ஒருவரையொருவர் தாக்குவதில் எவரும் சற்றும் பின் வாங்கவில்லை ||15||

விரைவிலேயே அரக்கர்கள் போரில் கை ஓங்கிய நிலையை அடைந்தனர்; தேவர்கள் அவர்களின் கடும் தாக்குதலின் முழு வீச்சையும் தாங்கிக் கொள்ள நேர்ந்தது; அரக்கர்களுக்கே உரித்தான பாணியில், பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு அவர்கள் இடை விடாமல் தொடுத்த தாக்குதல், தேவர்களுக்கு ஒரு கணம் கூட ஓய்வு அளிக்கவில்லை ||16||

ஒருவர் மற்றவரின் உருவைச் சிதைக்க முயன்றனர்; ஒவ்வொருவரும் தங்கள் எதிரியின் ஆயுதத்தையும், அதன் தாக்குதலையும் முறியடிக்கப் பார்த்தனர்; இவ்வாறே அந்தப் பயங்கரமான போர் தொடர்ந்து நடைபெற்றது; போரில் நேரடியாகப் பங்கேற்காத பிற தேவர்கள் வானிலிருந்து அந்த போர் களத்தைக் கண்டு களித்தனர் ||17||

அசுரர்களும் சமமான வலிமை பெற்றிருந்தனர்; அவர்கள் பல தேவர்களைத் தோற்கடித்தனர்; தங்கள் வலிமை குறைந்து வருவதை உணர்ந்த தேவர்கள், எதிரிகளை நேருக்கு நேர் நின்று தாக்காமல், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தினர்||18||

அசுரர்களின் தாக்குதல் தொடர்ந்து வலுத்ததால், தேவர்கள் பின் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; தேவர்கள் இத்தகைய பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் கண்ட இளவரசன் நகுஷன், போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடத் தீர்மானித்தான்||19||

அவன் உரக்க முழங்கினான் ‘ஓ ஹுண்டாசுரா, உன் படை வீரர்களில் சிலரை என் மீது ஏவி விட ஏன் தயங்குகிறாய்?; நான் அவர்களை எவ்வாறெல்லாம் நொறுக்கிச் சிதறடிக்கிறேன் என்பதைப் பார்; அவர்கள் எம தர்ம ராஜனின் இருப்பிடத்தை நோக்கிச் செல்வதையும் நீயே நேரில் காண்பாய்||20||

அசுரர்களாகிய நீங்கள் அனைவரும் பாவச் செயல்களையே புரிந்துள்ளீர்கள்; எவ்விதக் காரணமுமின்றி தேவர்களுக்கும், மெய் ஞானம் உணர்ந்த அந்தணர்களுக்கும் நீங்கள் துயரத்தை விளைவித்துள்ளீர்கள்; ஆகையால், என் கடும் சினத்தை உங்கள் மீது பொழிவேன்; நீங்கள் கொண்டிருக்கும் ஆணவ உறக்கத்திலிருந்து உங்களை விழித்தெழச் செய்ய இதுவே தக்க தருணம் ||21||

தேவர்கள் வகித்து வந்த பதவிகளை நீங்கள் வலுக் கட்டாயமாகப் பறித்துக் கொண்டீர்கள்; அதன் பின்னர், உங்களைப் பற்றியே நீங்களே பெருமை பேசிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறீர்கள்; இப்போது உங்கள் அந்தப் போலிப் பெருமையை நான் நொறுக்கித் தள்ளுகிறேன்; தேவர்களுக்குத் உரிமையானவைகளை மீட்டெடுத்து மீண்டும் அவர்களிடமே நான் தருவேன்||22||

தீயவர்களை அழித்தொழிப்பதே, மக்கள் அனைவருக்கும் தலைவனான ஜனார்த்தனப் பெருமானை மகிழ்விப்பதற்கான வழியாகும்’ இவ்வாறு முழங்கிய நகுஷன், தன் வில்லையும் அம்பையும் ஏந்தி, எதிரிகளில் ஒவ்வொருவனாக குறி வைத்துத் தாக்கினான் ||23||

அசுரர்கள் பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர்; ஆனால் நகுஷன், அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் திறம்பட முறியடித்துக் கொண்டே வந்தான்; அசுரர்கள் பல்வேறு ஆயுதங்களுடன் தொடர்ந்து தாக்கினர்; நகுஷன் அவர்கள் அனைவரையும் முறியடித்தான்; நடு வழியில், பலர் அவனை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டு, அவன் மீதும் அவனது தேரின் மீதும் பாய்ந்தனர்||24||

இளவரசன் இந்திர மன்னனின் வில்லை எடுத்து, அதன் நாணால் ஒரு பலமான ஒலியை எழுப்பினான்; அந்த ஒலியே அவனைத் தாக்க வந்த அசுரர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது; அவர்கள் தாங்களாகவே மயக்கமடைந்து விழுந்தார்கள்||25||

ஒளி மயமான மற்றும் வலிமையான இளவரசன் தொடர்ந்து போரிட்டான்; தன்னைத் தாக்கிய அனைவரையும் அழிக்கத் தொடங்கினான்; அசுரர்கள் அவர்களது பற்களை ஒன்றாகச் சேர்த்து நறநறவென கடித்தார்கள்; மேலும் நடந்து கொண்டிருந்த போரில் இன்னும் அதிகமான படைகளை வரவழைத்தனர் ||26||

அனைவரும் தங்கள் தாக்குதலை இளவரசன் நகுஷன் மீது நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர்; ஆனால் அவனும் மனவுறுதி நிறைந்தவனாகவும், தைரியமானவனாகவும், முனிவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட வீரனாகவும் இருந்ததினால் அவனால் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து தாக்குதல்களையம் முறியடிக்க முடிந்தது ||27||

நேரம் செல்வதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத அரக்கர்கள், இப்போது திடீரென்று தங்கள் எதிரியும் இளவரசனுமான நஹுஷாவைக் கண்டு அஞ்சினர்; அவர்கள் ஒரே நேரத்தில் பல அம்புகளை எய்து, தங்கள் ஆயுதங்களால் இளவரசனை கவசம் போல மூடினர் ||28||

அது இருளை உருவாக்கியது; ஒருவரையொருவர் அடையாளம் காண முடியவில்லை; மனம் தளராத இளவரசன், தன்னை தாக்கிய அரக்கர்களால் உருவாக்கப்பட்ட அந்த மூடிய மறைப்பை உடைத்தான் ||29||

அவன் தன் எதிரிகளின் பல ஆயுதங்களையும், அந்த வில்லாளர்களின் பல வில்லுகளையும் உடைத்தான்; அவன் யானைகளின் தலையின் முக்கிய இடங்களை தாக்கினான்; அதன் விளைவாக அவற்றின் வீரர்கள் போர்க் களத்தில் விழுந்தனர்||30||

அவன் பல அசுரர்களை கயிறால் கட்டினான்; அவர்களுடைய குதிரைகளின் தலைகளை கிழித்தான்; கொடிகளுடன் கூடிய அவர்களின் பல தேர்களை உடைத்தான்; மேலும் பல அரக்க வீரர்கள் தரையில் சாய்ந்து விழுந்தனர் ||31||

முழு பலத்தோடும் திறமையோடும் அவன் அவர்களின் பாதுகாப்பு கவசங்களை உடைத்தான்; ஆயுதங்களைப் பிடித்திருந்த கைகளை அவன் துண்டித்தான்; விரைவாக தன் எதிரிகளின் கழுத்துகளை வெட்டினான்; தன் வாளால் அவர்களின் வயிற்றைக் கீறினான் ||32||

அந்த திடீர் நிகழ்வுகளின் திருப்பத்தால் அரக்கர்கள் மறைந்து கொள்ளத் தொடங்கினர்; ஆனால் நஹூஷா அவர்களைத் துரத்தி, அவர்கள் ஒளிந்திருந்த இடங்களைக் கண்டு பிடித்து, அவர்களைப் போர்க் களத்தில் விழச் செய்தான் ||33||

திடீரென அவன் பல அரக்கர்களின் தலைகளை ஒன்றாகக் கட்டி, தரையில் இழுத்துச் செல்வான்; அவனது வீர தீரச் செயல்களோ , அனைவருக்கும் துன்பம் விளைவித்துக் கொண்டிருந்த முட்களை அவன் அகற்றுவது போலவே காட்சியளித்தது||34||

போர்க்களத்தின் வெறி மிக்க ஆவேசத்தில் அவன் அவர்களை நோக்கிக் கர்ஜித்தான் ‘இது உங்கள் பாவ மயமான வாழ்வின் விளைவால் நேர்ந்துள்ளது; இப்போது உங்கள் இறுதித் தருணங்களை எதிர் கொள்ளுங்கள், அல்லது அறநெறி சார்ந்த வாழ்வின் மீது பற்றுக் கொள்ள முயலுங்கள்||35||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘யே ம்ருதா: ஸமரே தர்மே யுத்தஸ்தே ஸூர்ய-மண்டலம் |பித்வா யாந்தி விரஜஸோ யோகயுக்தா யதிநோ யதா’
இதன் விளக்கம் என்ன என்றால் ‘ யாரொருவர் தர்மத்தைக் காப்பதற்கான போரில் ஈடுபட்டு, போர் களத்திலேயே மரணத்தைத் தழுவுகிறாரோ, அவர்கள் அனைத்துப் பாவங்களும் நீங்கித் தூய்மையடைந்தவர்களாய், முக்தி அடைந்த துறவிகளைப் போல, சூரிய மண்டலத்தைப் பிளந்து கொண்டு உன்னத மோட்ச உலகிற்குச் செல்கிறார்கள்’||36||

எனது வார்த்தைகள் சத்தியமானவை; போர் களத்திலிருந்து ஓடி ஒளியாதீர்கள்; உங்கள் எதிரிகளைத் துணிவுடன் எதிர் கொள்ளுங்கள்; போரில் உங்கள் உடலைத் துறப்பீர்களாயின், நான் இப்போது விவரித்த அந்தத் தெய்வீக இருப்பிடத்தை நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள் ||37||

தங்கத்தைத் திருடுவதாகட்டும், ஞானம் பெற்ற ஒரு உயிரைக் கொல்வதாகட்டும், போதைப் பொருட்களை உட் கொண்டு இழிவாக நடந்து கொள்வதாகட்டும், அல்லது குருவின் மனைவியுடன் உறவு கொள்வதாகட்டும் அத்தகைய அனைத்துப் பாவங்களும், போர் களத்தில் நீங்கள் துணிவு மிக்க இதயத்துடன் மரணத்தை எதிர்கொள்ளும் போது மன்னிக்கப்பட்டு நீங்கி விடும் ||38||

அத்தகைய கருணை மிக்க அறிவுரையை அவன் உரக்கக் கூறினான்; தன் எதிரிகளும் அற நெறியுடன் போரிட வேண்டும் என்று அவன் வலியுறுத்தினான்; அதே வேளையில், அந்தத் தீர்க்கமான போர் களத்தில் அவன் தொடர்ந்து ஒவ்வொரு அரக்கனாகக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான் ||39||

தன் எதிரிகளின் படைகளைச் சிதறடித்துச் சீர்குலைப்பதில் அவன் வெற்றி பெற்றான்; அவனது தேர் போர் களத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றது; அன்று நிகழ்ந்த படுகொலைகள் எத்துணை தீவிரமானவை என்றால், போர் களம் எங்கும் ரத்தக் குளங்கள் தென்பட்டன||40||

போரிட்டுத் தோல்வியுற்றுச் சிதைந்து போன அந்த அரக்க வீரர்கள் அனைவரும் உரத்த ஓலக் குரல் எழுப்பி அழுதனர்; தன் படையினர் அத்தகைய பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் கண்ட ஹுண்டாசுரன், தானே போர் களத்திற்கு வந்து இளவரசன் நகுஷனை நேருக்கு நேர் மோதலுக்கு அழைத்தான் ||41||

ஹுண்டாசுரன் கர்ஜித்து முழக்கமிட்டான் ‘ஓ அற்ப மனிதனின் மகனே, இன்று நீ உன் உயிரை வீணாக இழக்கப் போகிறாய்; உனக்காக உன் பெற்றோர்கள் கண்ணீர் சிந்தப் போகிறார்கள் ||42||

உன் பார்வை எட்டுகிற இடத்திற்கெல்லாம் நானே ஆட்சியாளன்; என் கம்பீரமான நிலையை நீ இன்னும் அறியவில்லை; நீ தொடர்ந்து உயிர் வாழ விரும்பினால், என்னிடம் அடைக்கலம் ஆகும் நேரம் இதுவே ஆகும் ||43||

நீ இன்னும் ஒரு சிறு பிள்ளை; உன் அறிவு மழுங்கியுள்ளது; அதனால் ஒரே ஒருமுறை உனக்கு அறிவுரை கூறுகிறேன்: வீணாக உயிரை மாய்த்துக் கொள்ளாதே; அதற்குப் பதிலாக, என் பாதங்களைப் பற்றிக் கொள் ||44||

நீ என் உதவியை நாடினால், உன் உயிரை நான் விட்டு விடுவேன்; இல்லையெனில், நீ திரட்டி வந்துள்ள அந்தத் தெய்வ படைகளுடன் சேர்த்து, உங்கள் அனைவரையும் இன்றே நான் கொன்று வீழ்த்துவேன் ||45||

இவ்வாறு அந்த அரக்கன் மிரட்டி, இளவரசனின் மனதில் அச்சத்தை விதைக்க முயன்றான்;ஆனால் நகுஷன் அதற்குப் பதிலாக ‘சந்திர குலத்து மன்னர்களின் பெருமையை நீ அறியாதவனாகவே தெரிகிறாய்’ என்று பதிலளித்தான்||46||

பயனற்ற வீண் பேச்சுகளைப் பேசுவதால் உனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்பது சந்தேகமே; நீ தற்பெருமை பேசுவது போலவே உண்மையாகவே வலிமை வாய்ந்தவன் என்றால், வா, என்னுடன் போர் களத்தில் வந்து நேருக்கு நேர் மோது||47||

தங்களைப் பற்றியே இடைவிடாமல் தற்பெருமை பேசிக் கொண்டிருப்பவர்களின் அற நெறி மெல்ல மெல்லக் குறைந்து போகும்; உன் செயல்கள் பாவமானவை என்பதை நீ உணராமல் இருக்கிறாய்; சற்றுத் உன்னையே நீ ஆராய்ந்து பார்; உன்னைப் பற்றிப் பிறர் அறிந்திருக்கும் உன் குறைகள் எவையென்பதைக் கண்டு கொள் ||48||

பச்சிளம் குழந்தையாய் இருந்த என்னை, உன் காலை உணவிற்காகக் கொன்று தின்னும் நோக்கில் கடத்திச் சென்றவன் நீயே; இதன் மூலமே, என் பாசமிகு பெற்றோரிடமிருந்து என்னைப் பிரித்து, இத்தனை ஆண்டுகளாக இரு தரப்பிலும் தீராத ஏக்கத்தை நீயே ஏற்படுத்தினாய் ||49||

எத்தகைய கொடூரச் செயலைச் செய்ய உன்னைத் தூண்டி, என்னை இவ்விடத்திற்கு இழுத்து வந்ததோ அந்தப் பேராசை, இன்று இந்தப் போர் களத்தில் எவ்விதத்திலாவது நிறைவேறியதாக உனக்குத் தெரிகிறதா? இறைவனின் பாதுகாப்பில் இருப்பவர்களை யாரால் தான் கொல்ல முடியும்?’ ||50||

அத்திரி முனிவரின் திருமகனாக இறைவன் ஸ்ரீமத் தத்தாத்ரேயர், இரவும் பகலும் என்னைக் கண்ணும் கருத்துமாய் காத்து வருகிறார்; ஏ மந்த புத்தி கொண்ட அரக்கனே, என்னை உன்னால் கொல்ல முடியும் என்று எதை வைத்து நீ நினைத்தாய்? உன் தற்போதைய நிலையை நீயே உற்று நோக்கு; நீ ஏற்கனவே செத்ததற்குச் சமமான நிலையில்தான் இருக்கிறாய்||51||

சமஸ்கிருதச் செய்யுள்: ‘மலின: குத்ரசோஹிஸ்ரா: தாதுகா: பரவஞ்சகா:, ஸ்வகர்ம்மைவ தே சர்வே ம்ரியந்தே சஹஸா ஸ்வயம்’
இதன் அர்த்தம் என்ன என்றால் ‘பாவம் செய்பவர்கள், பிறருக்கு துன்பம் விளைவிக்கும் கொடியவர்கள், பிறருக்கு துரோகம் செய்பவர்கள், கொலை பாதகர்கள், பிறரை ஏமாற்றும் வஞ்சகர்கள், தங்களுடைய சொந்த (தீய) செயல்களினாலேயே மரணமடைகிறார்கள்; திடீரென தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்’.||52||

வஞ்சகம் நிறைந்தவன் நீ; இடை விடாமல் உயிர்களைக் கொன்று குவித்தவன் நீ; உன்னை வதம் செய்யும் பாக்கியம் எனக்கே விதிக்கப்பட்டுள்ளது; ஆகையால், வீண் பேச்சுக்களை விடுத்து, போர் களத்தில் உன் திறமையைக் காட்டு; மரண பயத்தை உன்னை ஆட்கொள்ள விடாதே||53||

நீயே மரணத்தை விலை கொடுத்து வரவழைத்துக் கொண்டாய்; அதனால்தான் உன் இஷ்டத்திற்குத் தோன்றியதையெல்லாம் உளறிக் கொட்டுகிறாய்; இது வெறும் வாயிலிருந்து வரும் வாந்தி போன்றதே அன்றி வேறில்லை; வீண் பேச்சை நிறுத்தி விட்டு, போரைத் தொடங்கலாமே? ||54||

என்னைப் பற்றி உனக்கு முன்பே தெரிந்திருந்திருந்தால், நிச்சயமாக நீ என்னுடன் போருக்கு வந்திருக்க மாட்டாய்’ என்று இளவரசன் நகுஷன் தக்க பதிலடி கொடுத்தான்; பின்னர், தன் வில்லின் நாணை தன் காதுவரை இழுத்து நாணேற்றினான் ||55||

அந்த அரக்கனைக் குறி வைத்து, இறைவன் தனக்களித்த தெய்வீக அம்பை அவன் எய்தான்; அந்த அம்பு அரக்கனின் கவசத்தை ஊடுருவிச் சென்று, அவனது தலைக் கவசத்தையும் நொறுக்கியது ||56||

இது அந்த அரக்கனுக்குப் பெருங் கோபத்தை மூட்டியது; அவன் சரமாரியாக அம்புகளைப் பொழிந்தான்; ஆனால் ஆச்சரியப்படும் வகையிலும், மின்னல் வேகத்திலும், ஆயு மன்னனின் திரு மகனான நகுஷன் அந்த அம்புகள் அனைத்தையும் அதே வேகத்துடனும் திறமையுடனும் துண்டித்து வீழ்த்தினான்||57||

தன் ஆயுதங்கள் பயனற்றுப் போவதைக் கண்ட ஹுண்டாசுரன் அடுத்து என்ன செய்தான்?’ என்று தீபக் வினவினான்; அதற்கு குரு வேத தர்மா இவ்வாறு விவரித்தார் ‘அவன் அரக்கர்களுக்குரிய மாய வித்தைகளை விரித்து, நகுஷனின் மனதிலும் அவனைச் சுற்றியுள்ள சூழலிலும் மயக்கத்தை ஏற்படுத்த முயன்றான் ||58||

அதன் மூலம், உண்மையில் தான் இல்லாத இடத்தில் இருப்பது போலவும், இங்குதான் இருப்பான் என்று நகுஷன் எதிர்பார்த்த இடத்திலிருந்து மறைந்து போவது போலவும் அவன் தோன்றினான்; ஹுண்டாசுரன் உருவாக்கிய நாடகம் இதுவே; ஆனால், இந்த உத்திகளுக்குப் பின்னால் மறைந்திருந்த உண்மையை நகுஷன் விரைவில் தெளிவாகப் புரிந்து கொண்டான்||59||

அவன் தன் தேரோட்டியான மாதலியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே இவ்வாறு கட்டளையிட்டான் ‘எந்த இடத்தில் அந்த அரக்கன் தோன்றுவதாக நீ நினைக்கிறாயோ, அதற்கு நேர் எதிர் திசையில் நம் தேரைச் செலுத்து; அந்த இடத்தில்தான் நான் அவனைத் தேடிப் பிடித்துக் கொல்வேன்||60||

அவன் தேரோட்டி அந்த கட்டளையைக் கேட்டு, அதை ஏற்றுக் கொண்டு , அவ்வாறே செய்தான்; ஹுண்டாசுரன் மாயமாகத் தோன்றிய திசைக்கு நேர் எதிர் திசையில் அவன் தேரை விரைந்து செலுத்தினான்; அப்போது நகுஷனால் அவனை வெற்றிகரமாகக் கொல்ல முடிந்தது ||61||

இளவரசன் நகுஷன் முதலில், தன்னைச் சுற்றிலும் பரவியிருந்த அந்த அரக்க மாய வித்தைகளை முறியடித்து அழித்தான்; இவ்வாறு அவர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது; போர் களத்தில் மற்றொரு சூரியனே தன்னை எதிர்த்து நிற்பது போல ஹுண்டாசுரன் உணர்ந்தான் ||62||

அவன் தன் மனதிற்குள் இவ்வாறு சிந்தித்தான் ‘இந்த வீரன் தான் கொடுத்த வாக்கிற்கு உண்மையாகவே கட்டுப்படுபவன்; இவனை என்னால் சமாளிக்க முடியுமா என்பது சந்தேகமே’; இவ்வாறு தீர்மானித்தவன், ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை நகுஷன் மீது சரமாரியாகப் பொழிந்தான்||63||

இளவரசன் நகுஷன் தன் இயல்பான மதி நுட்பத்தையும் போர் திறனையும் பயன்படுத்தி, அந்தத் தாக்குதல்கள் தன்னை வந்தடைவதற்கு முன்னரே, நடு வழியில் அவற்றை முறியடிக்கும் வேகத்துடன் செயல் பட்டான்; பின்னர் அந்த அரக்கன் ஒரு ஏவுகணையையும், வில்லிலிருந்து அம்புகளையும், மற்ற ஆயுதத்தில் இருந்து கூர்மையான பொருட்களையும் ஏவினான்; அவற்றுள் ஒவ்வொன்றும் ஒரு சாதாரண மனித எதிரியைக் கொல்லும் வல்லமை பெற்றிருந்தன||64||

ஆனால் அந்த இளவரசன், பதிலுக்குத் தன் ஆயுதங்களை ஏவி, அவை அனைத்திலிருந்தும் தப்பித்துக் கொண்டான்; பின்னர் அவன் ஒரு அம்பை ஏவினான்; அந்த அம்பு அரக்கனின் உடலில் துளைத்துச் சென்று, அவனைச் சின்னா பின்னமாக்கியது||65||

மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு உயர்ந்த மரத்தைப் போலத் தோற்றமளிக்கும், அரக்கர்களுக்குரிய வலிமையான உடலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், நகுஷன் ஏவிய அந்த அம்பு தன் இலக்கைத் துளைத்ததும், ஹுண்டாசுரன் சுய நினைவை இழந்து, தன் தேரின் மீதே சாய்ந்து விழுந்தான் ||66||

அவன் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு காற்றை சுவாசித்தான், பின்னர் மீண்டும் தன்னை சுதாரித்துக் கொண்டு விழித்தெழுந்தான்; பிறகு அவனும் தன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பன்மடங்கு அம்புகளை பொழிந்து, இளவரசனை எல்லாப் பக்கங்களிலிருந்தும் அம்புகளால் சூழ வைத்தான்||67||

பின்னர் அவன் கர்ஜித்தான்: நான் போரில் என் எதிரியை வென்று விட்டேன், நான் வெற்றி வாகை சூடி ஆட்சி செய்வேன்; அதன் பின்னரே நான் ஓய்வெடுப்பேன் ||68||

இன்று செல்வம், பெருமை மற்றும் வெற்றியை வென்றது நானே’ என்று போர் களத்தில் ஹுண்டாசுரன் கூச்சலிட்டான்; அது தவறான அறிவிப்பு மற்றும் வெறும் தற்பெருமை வார்த்தைகள்; இறுமாப்பான நடத்தை பழக்கங்களை மாற்றுவது கடினம்||69||

இருப்பினும் அவனது கூச்சல் இளவரசனின் படையைக் குழப்பியது; ஹுண்டாசுரனின் ஆயுதங்களால் அவன் சூழப்பட்டிருந்ததால் அவர்களால் அவனைக் காண முடியவில்லை; இது அவர்களை அவமானத்திற்கு உள்ளாக்கியது, மேலும் அதைக் கண்ட முனிவர்களுக்கு எல்லையில்லா கவலையை அளித்தது ||70||

அவர்கள் சிந்தித்தனர்; போரில் நஹுஷன் எவ்வளவு வீரம் மிக்கவனாக இருந்தான்; இத்தகைய எல்லையற்ற வீரத்தை நாம் அரிதாகவே கண்டிருக்கிறோம்; இவ்வளவு இளம் வயதினரிடம், பெருமை பேசிக் கொள்ள அந்த அசுரனிடம் உண்மையிலேயே இன்னொரு கம்பீரமான செயல் இருக்க முடியுமா? ||71||

தேவர்களான நாங்கள் அனைவரும், அவனது வீரத்தை நம்பி அவனுக்கு உதவ மட்டுமே ஒன்று கூடினோம்; ஆனால் இப்போது இந்தப் போர் களத்தில் நாங்கள் எங்கு தேடினாலும் அவன் இல்லையே ||72||

முனிவர்களும் தேவர்களும் மனச் சோர்வடைவதைக் கண்டு, ஆயு மன்னனின் மகன், ஒரு சக்தி வாய்ந்த அம்பை எய்து, அசுரனால் உருவாக்கப்பட்ட தன் மீதான திரையை அகற்றினான் ||73||

குழப்பமடைந்த தேவர்கள், இப்போது தங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டதைக் கண்டனர்; அதே வேகத்தில், நஹுஷன் ஹுண்டாசுரனின் வில்லை உடைத்தான் ||74||

பின்னர் அவன் ஹுண்டாசுரனின் தேரை இழுத்துச் சென்ற குதிரைகளைக் கொன்றான்; அந்த தேரையும் உடைத்து நொறுக்கினான்; ஹுண்டாசுரன் விரைவாக வேறொரு தேரின் மீது ஏறினான்; ஆனால் அந்த தேரும் மிக விரைவிலேயே உடைக்கப்பட்டுச் செயலிழந்து போனது ||75||

வானிலிருந்து அத்தகைய தீரச் செயலைக் கண்ட சித்தர்கள் ‘உனக்கு நன்மையும் வெற்றியும் உண்டாகுக’ என்று வாழ்த்தொலி எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் ||76||

அப்போது அந்த அரக்கன் ஒரு சக்தி வாய்ந்த அஸ்திரத்தை எடுத்து, நகுஷன் மீது ஏவினான; அதற்குப் பதிலாக நகுஷன் ஒரு அம்பை ஏவி, அந்த அஸ்திரத்தை எள் அளவுள்ள சிறு துண்டுகளாக உடைத்துச் சிதறடித்தான் ||77||

அதன்பின், போர் களத்தின் நடுவே நின்ற இளவரசன், மனதிற்குள் வசிஷ்ட முனிவரை வணங்கினான்; மிகுந்த பக்தியுடன் தன் இரு கைகளையும் கூப்பி, தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் திவ்ய வடிவத்தைத் தியானித்தான் ||78||

பின்னர் அவன் இவ்வாறு வேண்டினான் ‘ஓ இறைவா, உன்னைத் தவிர எனக்கு வேறு புகலிடம் ஏதுமில்லை என்பதை நான் அறிவேன்; நான் முழுமையாக உனக்கே உரியவன் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; இப்போது நான் உன்னையே நினைத்துப் போற்றுகிறேன்; இன்றே இந்த அரக்கனை நான் கொன்று விட வேண்டும்; நீ எனக்குத் துணையாக இருப்பாயாக||79||

இவ்வாறு வணங்கிய பிறகு, அவன் பிறை நிலா வடிவிலான கூர் முனைகளைக் கொண்ட இரண்டு அம்புகளை எடுத்தான்; அவற்றை தன் வில்லில் பூட்டி, அரக்கனை இலக்காகக் கொண்டு குறி பார்த்து ஏவினான்||80||

அந்த இரண்டு அம்புகளும் அரக்கனின் இரு கைகளிலும் துல்லியமாகப் பாய்ந்தன; அவை பாய்ந்து அவனது உடலுக்குள் பாய்ந்து செல்ல அவன் கடுமையான காயம் அடைந்தான் ; அவன் அடைந்த காயத்தின் தீவிரத்தை வெளிக்காட்டும் நிலையில், அவன் கைகள் தரையில் வீழ்ந்தன||81||

நடந்ததை உணர்ந்த அந்த அரக்கன், பயங்கரமான இரைச்சலுடன் ஒரு பேரொலியை எழுப்பினான்; பின்னர், அந்த போர் களத்திலேயே இளவரசனைப் பச்சையாக விழுங்கி விட வேண்டும் என்ற வெறியுடன், அவனை நோக்கிப் பாய்ந்து வந்தான் ||82||

இளவரசன் மீண்டும் இறைவனை வேண்டி, முன்னரே ஏவிய அம்புகளைப் போலவே கூர்மை வாய்ந்த இரண்டு புதிய அம்புகளை எடுத்தான்; ஒரு கணம் கூட வீணாக்காமல், அரக்கனின் பாதங்களை இலக்காகக் கொண்டு குறி பார்த்து வீசினான் ||83||

ஹுண்டாசுரன், இப்போது தன்னால் இனி நகரவோ அல்லது கைகளை அசைக்கவோ இயலாது என்பதை உணர்ந்தான்; எனவே அவன் தன் உதட்டைக் கடித்து, வாயைப் பெரிதாக அகலத் திறந்து, ஒரு மலைப் பாம்பைப் போல தன்னை மாற்றிக் கொண்டு இளவரசனை விழுங்கி விட முயன்றான்||84||

தெய்வம் தத்தரின் திருவடிகளைத் தியானித்த பிறகு, அந்த இளவரசன் இந்திர தேவன் அனுப்பிய தெய்வீக அஸ்திரத்தை எடுத்துக் கொண்டான்; அதை அந்த அரக்கன் மீது ஏவினான்; அந்த அரக்கன் கொல்லப்பட்டு தரையில் வீழ்ந்தான்||85||

அந்த காட்சியைக் கண்ட முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் பெரு வியப்பு ஏற்பட்டது; அவர்கள் இளவரசன் மீது மலர்களைப் பொழிந்து ‘வெற்றி! வெற்றி’ என வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர் ||86||

தேவர்கள் பெரிதும் மகிழ்ந்து ‘ஓ இளவரசனே, நீ எங்கள் காரியத்தை நிறைவேற்றித் தந்துள்ளாய்; உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்’ என்று கூறினர்; அதற்கு அந்த இளவரசன் ‘தர்மத்தின் மீது நான் கொண்டுள்ள உறுதிப்பாடு என்றும் அசைக்க முடியாததாகத் திகழ வேண்டும்; அது நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும்’ என்று பதிலளித்தான் ||87||

அந்த வேண்டுகோளைக் கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியுடன் ‘ததாஸ்து, அதாவது அது அப்படியே நடக்கட்டும்’ என்று பதிலளித்தனர்; பின்னர் அவர்கள் இளவரசனிடம் விடை பெற்றுக் கொண்டு, தங்கள் இழந்த பதவிகளை மீண்டும் பெற்று, தேவலோக இருப்பிடங்களுக்குத் திரும்பினர்||88||

அந்த சமயத்தில், கையில் மலர் மாலையை ஏந்தியவாறு அசோக சுந்தரியும், அவளது தோழி ரம்பையும் போர் களத்திற்கு வந்தனர்; அவர்கள் வெற்றி வீரனான நகுஷனை வணங்கி, மிகுந்த மன நிறைவுடன் பின்வருமாறு கூறினர் ||89||

அசோக சுந்தரி கூறினாள் ‘நான் வெகு காலத்திற்கு முன்பே என்னை உனக்கே அர்ப்பணித்து விட்டேன்; தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்வாயாக; நான் உனக்கே உரியவளாக வாழ விரும்புகிறேன்’; அந்த வார்த்தைகளை கேட்டதும், அந்த வார்த்தைகளுக்கு பின்னால் மறைந்திருந்த ஏக்கத்தையும் வேதனையையும் உணர்ந்து கொண்ட ஆயு மன்னனின் மைந்தனான நகுஷன் பின்வருமாறு பதிலளித்தான் ||90||

நான் இப்போது, இங்கேயே உன்னை ஏற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டால், அது தர்மத்திற்குப் புறம்பான செயலாகி விடும்; நாம் இருவரும் எனது குருவிடம் செல்வோம்; அவரது ஆசியுடனும் அறிவுரைகளுடனும் நாம் திருமணம் செய்து கொள்வோம்||91||

அவனது பதிலில் ஓரளவு ஆறுதல் கண்ட அவள் ‘தேவர்களின் அருளால் அப்படியே ஆகட்டும்’ என்று கூறி அதற்குச் சம்மதித்தாள்; பின்னர் அவள் ரம்பையுடன் இணைந்து நகுஷனின் தேரில் ஏறினாள்; அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணத்தைத் தொடங்கினர் ||92||

இளவரசன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்; அந்த அரக்கனிடமிருந்து கைப்பற்றிய ராஜ்ஜியத்தில் இருந்த மதிப்பு மிக்க பொருட்கள் அனைத்தையும் அவன் எடுத்துக் கொண்டு, தன் தந்தைக்கு நிகரான குருவான வசிஷ்ட முனிவரிடம் சென்றான்; அங்கே அவன் மிகுந்த பணிவுடனும் பக்தியுடனும் பின்வருமாறு கூறினான்||93||

நான் எப்போதும் தங்களையே எனது உறு துணையாகவும் தூணாகவும் கருதி வருகிறேன்; போர் களத்தின் நடுவிலும் தாங்கள் மறைந்து இருந்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது; அதனால்தான் என்னால் அந்த அரக்கனைக் கொல்ல முடிந்தது; மேலும், தெய்வம் ஸ்ரீமத் தத்தரின் அருளாசியாலேயே நாம் அனைவரும் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்தது ||94||

தாங்கள் அறிந்தபடியே, நான் மந்த புத்தியும் பொறுமையின்மையும் கொண்டவன்; ஆயினும், தங்கள் அருளாலேயே விதியால் நிர்ணயிக்கப்பட்ட இந் நிகழ்வு வெற்றிகரமாக நிறைவேறியது’; இவ்வாறு பணிவுடன் கூறி, அவன் அந்த முனிவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்; இது வசிஷ்ட முனிவருக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது||95||

அதன் பின், அசோக சுந்தரியும் முனிவர் வசிஷ்டரிடம் சென்று பணிந்து வணங்கி ‘வரும் கால மன்னரான நகுஷனுக்கு என்னை மண முடித்துத் தருமாறு வேண்டுகிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்தார் ||96||

அதற்கு முனிவர் பதிலளித்தார் ‘அவள் கடத்தப்பட்ட அந்த நாளில் எத்தனை களங்கமற்றவளாகவும் தவ வலிமை மிக்கவளாகவும் இருந்தாளோ, இன்றும் அப்படியே இருக்கிறாள்; அவள் எனக்கு ஒரு மகளைப் போன்றவள்; பெண்களுள் ஒரு நவரத்தினம் போன்றவளான இவளை, நீ உன் மனைவியாக ஏற்றுக்கொள்||97||

இன்றே இவளை மணந்து கொள்; தற்செயலாக, இந்தத் திருமணச் சடங்கிற்குரிய ஜோதிட ரீதியான சுப முகூர்த்த நேரம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது’; அதற்கு அந்த இளவரசன், ‘தாங்கள் விரும்பியபடியே ஆகட்டும்’ என்று பதிலளித்தான்; அதன்பின் திருமணச் சடங்குகள் நடைபெற்றன||98||

திருமணம் முடிந்த பின்னர் முனிவர் அறிவுரை கூறினார் ‘இப்போது நீ உன் சொந்த நாட்டிற்குத் திரும்புவதே உனக்கு நல்லது; உன்னை நினைத்து ஏங்கும் உன் பெற்றோருடன் மீண்டும் இணைந்து, மகிழ்ச்சியுடனும் நீதியுடனும் உன் நாட்டை ஆட்சி செய் ||99||

அந்த வார்த்தைகளைக் கேட்ட நகுஷன், அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டான்; சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவனாய், அன்னை அருந்ததி மற்றும் முனிவர் வசிஷ்டர் ஆகியோரின் பாதங்களில் கண்ணீர் மல்க வணங்கினான்||100||

அவன் இவ்வாறு கூறினான்: ‘நான் அரசப் பெருமைகளுக்கு இடையே பிறந்திருந்தாலும், பிறந்தவுடனேயே என் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டேன்; ஆயினும், அந்தத் துயர மிக்க நாள் முதல் இன்று வரை நீங்கள் இருவருமே என்னைப் பராமரித்து வந்தீர்கள்; இத்தகைய அன்பான வளர்ப்பை யாரால் மறக்க இயலும்?||101||

இன்றுவரை நீங்கள் என் மீது காட்டிய அந்த அன்பானது, என் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது; அதனாலேயே, இப்போது உங்கள் இருவரையும் விட்டுப் பிரிந்து செல்வது எனக்குச் சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது||102||

வருங்கால மன்னரான அவர், உள்ளுக்குள் அன்பினால் உருகி இவ்வாறு கூறினார்; எப்போதும் தெய்வ நினைவுடனேயே இருக்கும் ஞானி வசிஷ்டர், அவருக்கு ‘தெய்வீகத் தத்துவத்தைப்’ (Divine Essence) பற்றி உபதேசித்தார்; அது இளவரசரின் மனதை அமைதிப்படுத்தியது; பின்னர் அவர் விடை பெற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டார்; தன் தந்தையின் நல்லாட்சியை நினைவில் சுமந்தவாறே அவர் அங்கிருந்து திரும்பினார்||103||

அவர் சென்று தன் பெற்றோரைச் சந்தித்தார்; நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விரிவாகக் கூறிய பிறகு, பணிவுடன் இவ்வாறு விண்ணப்பித்தார் ‘நான் உங்கள் அருளை வேண்டுகிறேன்; இப்போது என்னை ஆசீர்வதியுங்கள்; விதியின் காரணமாக, இத்தனை காலமும் உங்களுக்குச் செய்ய வேண்டிய என் கடமையில் நான் தவறிழைத்து விட்டேன் ||104||

மன்னர் ஆயு (Aayu) அவர் கூறியதைக் கேட்டார்; பின்னர் ‘அந்தத் துரதிர்ஷ்டவசமான நாளில் நீ எங்களைப் பிரிந்து சென்றது, விதியின்படி நிகழ வேண்டிய ஒன்றாகவே இருந்தது; தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் மற்றும் ஞானி நாரதர் ஆகியோரின் அருளினால் நாங்கள் மனம் தேறி இருந்தோம்; அதற்குப் பின்னர் நாங்கள் துயரம் அடையவோ இல்லை வேதனைப்படவோ இல்லை’ என்று கூறினார் ||105||

பந்தத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தும் பற்று என்பதை நான் முழுமையாக துறந்து விட்டேன் என்று நகுஷாவிற்கு (Nahusha) அறிவுரை கூறியும், அதே சமயம் அவருக்கு ஆறுதல் அளித்தும், அவருடைய பெற்றோர்கள் தங்கள் அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்தனர்; பின்னர், தங்கள் எஞ்சிய காலத்தை தெய்வ சிந்தனையிலேயே கழிக்க அவர்கள் காட்டை நோக்கிச் சென்றனர்||106||

அங்கே அவர்கள் கடுந் தவம் புரிந்தனர்; அவர்கள் இருவருமே ஆன்மீக ஞானத்தையும், தாங்கள் தேடிய அந்த ‘ஆத்ம உணர்தலையும்’ (Realization) அடைந்தனர்; அவர்கள் தங்கள் முழு உணர்வு நிலையுடனும் தெய்வமான ஸ்ரீமத் தத்தருடன் ஒன்றிணைந்தனர்; உண்மையான பக்தி எனும் விளக்கின் மகத்துவம் அத்தகையதே||107||

நகுஷா உலகெங்கும் புகழ் பெற்றவராகவும், அனைவராலும் போற்றப்படுபவராகவும் திகழ்ந்தார்; அவர் நீதியுடன் ஆட்சி செய்தார்; பிறந்தது முதலே தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் பாதுகாப்பில் இருந்த அதே உடலுடன் தேவர்களின் மன்னனான ‘இந்திரப் பதவியை’ அடைந்தார்; தெய்வ பற்று மிக்க பக்தர்களால் அடைய முடியாதது என்று ஏதேனும் உண்டா?||108||

II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பத்து ஐந்தாவது (45) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பத்து ஐந்தாவது (45) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4755 = 4863

*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்

……இதோடு பாகம் -11, அத்தியாயம் 45 முடிவடைந்தது
அத்தியாயம் 46 தொடர்கின்றது