-சாந்திப்பிரியா-

 முன்னுரை

1817-1865 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்திருந்த, ஸ்ரீ தத்த பரம்பரையில்,   பகவான் ஸ்ரீ தத்தாத்திரேயரின் நான்காம் அவதாரம் எனப்படும் ஸ்ரீ மாணிக் பிரபு எனும் மகான்  அவரது சீடர்களால் ‘ராஜ யோகி’ என்று கருதப்பட்டார். ஸ்ரீ மாணிக் பிரபு  உலக உறவுகளை முற்றிலுமாக துறந்தவர், எதன் மீதும் பற்று இல்லாதவர், இறுதி நிலை எனும் உண்மை பயணத்தில் இரட்டை அணுகுமுறை  இல்லாமல் வாழ்ந்தவர்.

தாம் அமர்ந்திருந்த ராஜ யோக பீடத்தின் மரியாதையைக் குலைக்காதவண்ணம் வாழ்க்கையின் இன்ப, துன்பங்களில் மூழ்கியவரைப் போல வெளித் தோற்றத்தில் காட்சி தந்துகொண்டு வாழ்ந்திருந்தாலும்,சேறு நிறைந்த ஏரியில் தாமரை மலர்ந்தாலும், அந்த சேற்றால் தன்னை மாசுபடுத்திக் கொள்ளாத தாமரை மலரைப் போல, எந்த சுகபோகங்களும் தன்னை தீண்டாமல் இருக்கும் வகையில் வாழ்ந்து கொண்டு இருந்தார். அவரது போதனைகள் அனைத்துமே பக்தி மார்க்கத்துடன் தொடர்ப்பு கொண்டவையாகவே இருந்துள்ளன.

தெய்வீகப் பிறவியாக அந்த மகான் வாழ்ந்திருந்த காலத்தில் வாழ்ந்திருந்த சமகால மகான்களான  ஸ்ரீ அக்கல்கோட்  மகாராஜ் , ஸ்ரீ ஷீர்டி  சாய் பாபா  மற்றும் ஸ்ரீ கோண்டாவால்கர்  மகாராஜ் போன்றவர்கள் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் தொடர்பான விஷயங்களில் ஸ்ரீ பிரபுவுடன் உரையாடுவதற்காக மாணிக் நகருக்கு வந்து சென்றுள்ளதாக அவரது வாழ்க்கை வரலாற்றில்  கூறுகின்றார்கள்.

இந்த நிலை ஒன்றே அவர் பகவான் ஸ்ரீ தத்தாத்திரேயர் அவதாரம் என்பதற்கு ஒரு சான்றாகும். ஸ்ரீ மாணிக் பிரபுவின் தத்துவம் சகலமாதா சித்தாந்தம், அதாவது சாதி, சமயம், மதம் அல்லது பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லாத, அனைத்து பிரிவு மக்கள்  மற்றும் மதங்களை உள்ளடக்கி ஒருங்கிணைக்கின்ற சித்தாந்தம் ஆகும். அந்த சித்தாந்தம் ஸ்ரீ ஆதி சங்கரரால் பரப்பப்பட்ட அத்வைத வேதாந்தத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு காலத்தில் ஸ்ரீ மாணிக் பிரபுவின் பெயரும் புகழும் வேகமாகப் பரவ, அனைத்து மதப் பிரிவினர், சமூகத்தினர் என பெருவாரியான மக்கள் மானிக் நகருக்கு வருவதுண்டு. தினமும் தர்பார் என்றழைக்கப்படும் ஒரு கூட்டத்தை ஸ்ரீ மானிக் பிரபு நடத்த, அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அவரிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். அவர் அனைத்து சமூகத்தினராலும் சமமாக மதிக்கப்பட்டார். அதனால்தான் ஸ்ரீ மாணிக் பிரபுவின்  முஸ்லீம் பக்தர்கள் அவரை ஸ்ரீ மெஹபூப் சுபானியின் (பாக்தாத்தின் சூஃபி துறவி) அவதாரமாக போற்றினர், லிங்காயத் பக்தர்கள் அவரை பசவண்ணாவின் வடிவமாக பார்த்தனர், சீக்கிய பக்தர்கள்  சீக்கிய மத குருவான ஸ்ரீ  குரு நானக்கின் வடிவத்தில்  அவரை  பார்த்தார்கள்.  அவரது வாழ்க்கை  சரித்திரம் மிக அற்புதமானது. அவரைக் குறித்து எழுத என் மனதில் ஒரு பொறியை ஸ்ரீ  தத்தாத்திரேயரே தந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன் .

அத்தியாயம்-1

தேவா உன் திரு உடல் எங்கும்
தேவர் னைவரும் திரிந்திடக் கண்டேன்
விலங்குக் கூட்டம் விளையாடுதலையும்
பிறப்புக் கடவுள் பிரும்மா முதல்
முனிவர்வரை அனைவரையும் கண்டேன்
சொல்லில் அடங்கா
அங்கம் அனைத்தும்
அழிவில்லாது ஜொலிக்கும்
வடிவையும் கண்டேன்
இன்னிலே தேவா
முதலும் இல்லை, நடுவும் இல்லை
முடிவோ நிச்சயம் இல்லை.
-பகவத் கீதை-

ஸ்ரீ  தத்தாத்திரேய அவதாரம்

ஸ்ரீ  தத்தாத்திரேயர் ஒருமுறை பூமியில் அவதாரம் எடுக்க நினைத்தார். அதனால் ஒரு சிறிய நாடகம் நடத்தி அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா தம்பதிகளுக்கு சிவா, விஷ்ணு மற்றும் பிரும்மா என்பவர்களை உள்ளடக்கிய அவதார மகனாகப் பிறந்தார். உலக நன்மையைக் கருதி அவதூதராக பூமியிலே காட்சி தந்தார். பால்ய லீலைகளை செய்து காட்டியபடி இருந்த அவருடைய யோக சாதனைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் செய்த முனிவர்கள் கூட எண்ணிப் பார்க்க முடிந்திராத லீலைகள் அவை. நன்மையை நாடி வந்தவர்கள், பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருந்த மாமுனிவர்கள் போன்றவர்கள் அவர் சாமான்யர் அல்ல என்பதை புரிந்து கொண்டு, அவர் பரப் பிரும்மனின் அவதாரம் என்பதையும் மிகத் தெளிவாகவே அறிந்து கொண்டு இருந்தார்கள்.  ஸ்ரீ  தத்தாத்திரேயர் வேண்டும் என்றே கையில் கள் மொந்தையை வைத்துக் கொண்டும் இறைச்சிகளை கடித்துக் கொண்டும், நிர்வாணமாக நின்று கொண்டும், உடம்பெல்லாம் சாம்பலை பூசிக் கொண்டு கண்களில் காமவெறி பிடித்தலைந்தவாறு சில பெண்களுடன் விரசமாக சல்லாபித்தபடி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எதிரில் மாயக் காட்சியை தருவது உண்டு. ஆனாலும் ஞானிகள் பலரும் அவற்றை நம்பாமல் அவர் நாடகம் ஆடுகிறார், அவர் காட்டும் காட்சிகள் அனைத்துமே மாயக் காட்சிகள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை தீர்மானமாக நெருங்கி நின்று அவருடைய முழு ஆசியையும் பெற்றுக் கொண்டு அவருடைய சீடர்கள் ஆயினர். வந்தவர்கள் அனைவரும் அதை ரசித்தது இல்லை. என்ன கேடு கெட்ட மனிதர் இவர் என்று அவரை புரிந்து கொள்ளாமல் வெறுத்து ஓடியவர்களும் உண்டு. இல்லை அவர் ஆடுவது  நாடகமே, அவர் நம்மை சோதிக்கின்றார் என்று கைகூப்பி வணங்கி நின்று அவரை கெட்டியாக மனதில் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓடாமல் நின்று அவருடைய சிஷ்யர்கள் ஆனவர்களும் உண்டு. பரப் பிரும்மமான ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை அப்படியெல்லாம் சோதனை செய்வதில் அலாதியான ஆனந்தம் உண்டு.

‘ஓ….தத்தாத்திரேயா, அவதார புருஷா, உலகைப் படைத்துக் காத்து தீய சக்திகளை அழிக்க வந்த மும்மூர்த்திகளின் அவதாரமானவரே, பரப்பிரும்மமே, உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. வேறு எந்த தடையும் இல்லை. வெவ்வேறு ரூபங்களை எடுக்கிறாய். இந்த உலகத்தை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு எடுத்துச் செல்ல அத்ரி முனிவர் – அனுசூயா தம்பதியினரின் அவதார புருஷனாகப் பிறந்தவரே, உன் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதும். பாபங்கள் விலகும், தீமைகள் அழியும். நீயே மூவுலகத்துக்கும் அதிபதி…தூயவனும் நீயே…உன்னை நாங்கள் அனுதினமும் மனம் வற்றும்வரை துதித்துக் கொண்டே இருக்க எங்களுக்கு சக்தி கொடு’ என அவரை வேண்டித் துதித்தார்கள்.

ஸ்ரீ  தத்தாத்திரேயர் எதிலும் பற்றில்லாமல் திரிவார். அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத் தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும் உள்ளிருக்கும் புனித ஆத்மாவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்பார். அவர் எந்த நேரத்தில் எங்கு இருப்பார், எங்கு போவார் என எவருக்கும் புரியாத, தெரியாத புதிர் அவர். ஒருமுறைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல துணி உடுத்தி அரைகுறை ஆடைகள் அணிந்துகொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிவார். நான்கு நாய்கள் பின் தொடர, பசு மாடு பின்னால் நின்று கொண்டு இருக்க அப்படியும் காட்சி தருவார். இன்னொரு சமயத்திலோ ஏரிகளிலும், குளங்களிலும் முழ்கி நின்றும், சுடுகாடுகளில் உருண்டு புரண்டு கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை அனுபவித்தபடி இருப்பார். ஏரிகளில் முழ்கி பலமணி நேரம் அப்படியே கிடப்பது அவரது வாழ்கையில் சர்வ சாதாரணம். இப்படியாக அவரது வாழ்கை பல நூற்றாண்டு காலம் தொடர்ந்தது.

அவர் உலகிலேயே மிகப் பெரிய அவதாரம் என்றாலும் மனித உருவில் அவதாரம் எடுத்து இருந்ததினால் ஒரு துறவி போலவே அவதூதராகவே வாழ்ந்து கொண்டு இருந்தார். மும்மூர்த்திகளை ஒன்றடக்கி இருந்த அவதூதர் அவர். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு பிடித்த இடம் அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல் முழுவதும் சாம்பலை பூசிக் கொண்டும், புலித்தோலை உடைப் போல உடுத்திக் கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தை கொண்டவர் அவர்.

தத்தாத்திரேயர் தன்னுடன் வைத்துக் கொண்டு உள்ள சில பொருட்களின் சிறப்பை எப்படி எனக் கூறுவது? கேட்ட அனைத்தையும் தந்தபடி உலகையும் தர்மத்தையும் காப்பதை குறிக்கும் விதத்தில் காமதேனுப் பசு. ஆன்மீகத்தின் மூல நூல்களான நான்கு வேதங்களும் என் காலடில்தான் என்பதைக் குறிக்கும் விதத்தில் நான்கு நாய்கள். தான் என்ற அகந்தையை அழிப்பதைக் குறிக்கும் திரிசூலம். அறியாமையை அழித்து ஒருவனுடைய மனசாட்சியை தட்டி எழுப்புவதைக் குறிக்க கையில் குடுகுடுப்பை. முக்காலத்தையும் கடந்து நிற்பவர். அனைத்து காலத்தையும் இயக்குபவர் மற்றும் ஆரம்பமும் முடிவும் இல்லாதவர் என்பதைக் காட்டும் சுதர்சன சக்கரம்.  ஆத்மாவை, மனசாட்சியை தட்டி எழுப்ப சங்கு.  வைராக்யத்தையும் , பிறந்த எதற்கும் அழிவு நிச்சயம் என்பதைக் காட்டும் வீபுதி. நமக்கு உள்ளத்தில் எதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் பிட்ஷைப் பாத்திரம். எப்போதுமே பகவானின் நாமத்தையே ஜெபித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதைக் குறிக்க ஜெபமாலை.

இப்படிப்பட்ட ரூபங்களைக் கொண்டவர் யுகயுகமாக பல்வேறு ரூபங்களை எடுத்துக் கொண்டு அனைவரையும் ரட்சித்து வருகிறார். பூமியிலே என்றெல்லாம் அதர்மம் தோன்றுகிறதோ, தர்மம் உருக் குலைந்து போகத் துவங்குகிறதோ அப்போதெல்லாம் தெய்வீக அவதாரங்கள் தோன்றி உலகை காப்பாற்றுகின்றன. இதைதான் கண்ணபிரான் அர்ஜுனனுக்கு உபதேசமாக இப்படியாகக் கூறினார்:-‘யதாயதாஹி தர்மஸ்ய கிலானிர்பவதி பர்தா, அப்யுத்தானம் தர்மஸ்ய ததாத்மான் சுருஜான்மயஹம் பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி யுகே யுகே’. அதனால்தான் பூமியிலே துயரங்களை துடைத்து மனித மேம்பாடு நிலவ தத்தாத்ரேயர் ஸ்ரீ மாணிக் பிரபு மகராஜ் என்ற உருவிலே அவதரித்தார்.

அத்தியாயம்-2

பிரபோ
அபிமானத்தை துறந்து
சின்னஞ் சிறு குழந்தைப் போல
சுகமாக இருப்பேனாக
ஓர் கன்னிகை கையில் மிஞ்சி இருந்த
ஒற்றை வளையல் போல
வீண் பேச்சில் அகப்படாமல் சஞ்சரிப்பேனாக
அம்புக் குறி வைத்தவன்
அரசன் வரும் ஊர்வல சப்தத்தைக் கூட
உணராமல் இருப்பது போல
உம்மிடம் மட்டுமே மனதை வைத்து விட்டு
வேறு ஒன்றையும் அறியாமல் இருப்பேனாக
-ஸ்ரீமத் நாராயணீயம்-

ஸ்ரீ  மாணிக் பிரபுவின் அவதாரம்

முன்னாள் ஹைதிராபாத் சமஸ்தானத்தில் இருந்த ஒரு சிற்றூர் கல்யாண் என்ற இடம். அது ஒரு கிராமம். ஸ்ரீ மனோகர் நாயக் மற்றும் பாயா தேவி என்ற தம்பதியினருக்கு பிறந்தவரே ஸ்ரீ மாணிக் பிரபு. அந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்து இருந்தனர். 1817 ஆம் ஆண்டு. அந்த ஊரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடபட்டுக் கொண்டு இருந்தது. அந்த தேதியில்தான் ஸ்ரீ மாணிக் பிரபு, ஸ்ரீ மனோகர் நாயக் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்ரீ தத்தாத்திரேயரின் குரு சரித்திர புத்தகத்தை ஆசாரபூர்வமாக பதினாறு வருடங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து கொண்டு இருந்த தம்பதியினருக்கு அவர்களின் புதல்வராக ஸ்ரீ  தத்தாத்திரேயரே ஸ்ரீ மாணிக் பிரபு என்ற மகனாக பிறந்ததற்கும் ஒரு காரணம் இருந்தது.ஸ்ரீ மானிக் பிரபுவின் பெற்றோர்கள் தம்மிடம் மிக்க பக்தி கொண்டு ஆசார சீலர்களாக விளங்கியவர்கள் என்பதினால் ஒரு நாள் ஸ்ரீ  தத்தாத்திரேயர் அவர்கள் கனவில் தோன்றி ‘உங்களின் பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். உங்களுக்கு என்ன வேண்டும்’  எனக் கேட்டார். அந்த தம்பதியினரும் சற்றும் தாமதிக்காமல் ‘உங்களைப் போன்ற நற்குணம் படைத்த புதல்வன் வேண்டும்’ என்று கேட்டார்கள். ‘கவலைப்படாதீர்கள். நானே விரைவில் உங்களுக்கு மகனாகப் பிறப்பேன்’ எனக் கூறிவிட்டு ஸ்ரீ  தத்தாத்திரேயர் மறைந்து போனார். இருவருடைய கனவிலும் தனித் தனியாக தோன்றி அந்த இருவருக்கும் வரம் அளித்த சில காலத்துக்குள்ளேயே  ஸ்ரீ தத்தாத்திரேயரின்  அவதாரமாக ஸ்ரீ மாணிக் பிரபு  பூமியில் பிறப்பு எடுத்தார்.

சிறு வயது முதலேயே ஸ்ரீ மாணிக் வித்தியாசமான குழந்தையாகவே வளர்ந்து வந்தார். அந்தக் குழந்தையை வீட்டினர் மட்டும் அல்லாது மற்றவர்களும் பெரிதும் விரும்பினார்கள். அதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆனால் ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால் அந்தக் குழந்தையின் முன்னால் வந்து எவராவது தனது கஷ்டங்களைக் கூறி வருந்தினாலோ அல்லது தமது பிரச்சனைகளைக் குறித்து விவாதித்தாலோ, அந்த பிரச்சனைகள் தாமாகவே விலகத் துவங்கின. ஆரம்பத்தில் அதைக் குறித்து கவனிக்காதவர்கள் பின்னர் அந்த ஆச்சர்யமான உண்மையைக் கண்டு வியந்தார்கள். அந்தக் குழந்தை முன் நின்று கொண்டு  தமது பிரச்சனைகளைக் கூறி பேசினால் அவை தாமாகவே விலகி விடுகின்றது என்ற நம்பிக்கை  துவங்கியதின் காரணம் அந்தக் குழந்தையின் அதிருஷ்டமே என நம்பினார்கள். ஆகவே அந்தக் குழந்தையின் முன்னால் நின்று கொண்டு தமது கஷ்டங்களை விவாதிப்பதை ஒரு பழக்கமாகவே வைத்துக் கொண்டார்கள். வெகு காலத்துக்குப் பிறகே ஸ்ரீ மாணிக் பிரபு ஒரு தெய்வப் பிறவி என்பது வெளித் தெரிந்த பின்னரே அதன் காரணம் புரிந்தது.

குழந்தைப் பருவத்தில் இருந்த ஸ்ரீ மாணிக் மெல்ல மெல்ல வளரத் துவங்கினார். வளர்ந்து வந்தக் குழந்தை படிப்பில் நாட்டம் இன்றி இருந்தது. நாள் முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வீட்டின் அருகில் இருந்த தோப்புக்குள் சென்று விளையாட்டில் நேரத்தைக் கழித்தார். செடிகள், கொடிகள் பறவைகள் என இயற்கையின் அற்புதங்களை ரசித்தபடி பொழுதைக் கழித்தார். அவர் படிக்காமல் ஊதாரியாக வளர்ந்து திரிந்ததினால் மற்றவர்கள் அவரை உதவாக்கரை என்றார்கள். ஸ்ரீ மாணிக் அது குறித்துக் கவலைக் கொள்ளவில்லை .தான் ஒரு அவதாரப் புருஷர் என்பதை அவர் மறைமுகமாகக் கூறியும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இப்படியாக காலத்தை கழித்து வந்தவர் ஒரு நாள் தன்னுடன் விளையாட வரும் நண்பன் கோவிந்தன் அன்று வரவில்லை என்பதை கவனித்தவர் ‘கோவிந்தனுக்கு என்ன ஆயிற்று’ என நினைத்தபடியே அவனை விளையாட அழைத்து வரலாம் என்று எண்ணிக் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்றார். கோவிந்தன் அன்று மாலை இறந்து இருந்தான். அவன் வீட்டில் அவனுடைய பெற்றோர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தார்கள். தனது நண்பன் கோவிந்தன் இறந்து விட்டான் என்பதினால் வருத்தமுற்ற ஸ்ரீ மாணிக்கிற்கு அந்த நிகழ்ச்சி மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. அனைவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே ஓடினார். ‘கோவிந்தா’….’கோவிந்தா’ என இருமுறைக் கூவி அழைக்க, இறந்து கிடந்த கோவிந்தனும் ஏதோ உறக்கத்தில் இருந்து எழுந்து வருவது போல எழுந்திருக்க அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. மருத்துவர் வந்து அந்த பையன் இறந்து விட்டதாக ஊர்ஜிதப்படுத்தி விட்டு சென்றப் பின் இறந்து போனவன் உயிர் பிழைத்தது எப்படி? அன்றுதான் சிலரது மனதில் ஸ்ரீ மாணிக் ஏதோ அமானுஷ்ய சக்தியை பெற்று உள்ளார் என்ற சந்தேகம் எழுந்தது. கோவிந்தன் எழுந்தான். தனது நண்பருடன் விளையாடச் சென்று விட்டான்.

மற்றும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஹைதிராபாத் நிஜாமின் படையில் இருந்தார் அப்பாராவ் அரபு என்பவர். அவருடைய மனைவியின் பெயர் பீமாபாய் என்பது. அவள் குழந்தை ஸ்ரீ மாணிக்கின் அற்புத சக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண அவர் இருந்த லட்வந்தி என்ற கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தாள். அவள் வந்து கொண்டு இருந்த வழியில் சில சிறுவர்கள் ஒரு பையனை அடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆகவே அவள் தன்னுடன் வந்து கொண்டு இருந்த வீரர்களை அனுப்பி அடி வாங்கிக் கொண்டு இருந்த சிறுவனை மீட்டு தன்னிடம் அழைத்து வரச் சொன்னாள். அவனை பத்திரமாக வீட்டிற்குப் போகுமாறு கூறினாள். ஆனால் அந்தப் பையனோ தான் மற்ற நண்பர்களுக்கு எட்டு சோழிக் கொட்டைகளை தர வேண்டும் என்றும் அதை தராவிடில் மறுநாளும் அடிப்பார்கள் என்றான். சோழிக் கொட்டை என்பது கடலில் இருந்து கிடைக்கும் கிளிஞ்சல் போன்ற விளையாட்டுப் பொருள். அதனால் அவள் தனது படைவீரனை கடைக்கு அனுப்பி கடையில் இருந்து எட்டு சோழிக் கொட்டைகளை வாங்கி வரச் சொல்லி அதை அந்த சிறுவனிடம் தந்து விட்டுக் கூறினாள் ‘இந்தா, இதை உன் நண்பர்களிடம் தந்து விடு’. அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பையனோ ‘சரி அப்படி என்றால் உனக்கு எட்டு சோழிக் கொட்டைகளை தந்துவிட்டேன்…போ’ என சம்மந்தம் இன்றி உளறிவிட்டு ஓடி விட்டான். பீமாபாய்க்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் பயணத்தை தொடர்ந்தாள்.

ஸ்ரீ மாணிக்கை தேடி அவன் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அப்போது ஸ்ரீ மாணிக் வீட்டில் இல்லை. அவனது பெற்றோர்களோ அவன் எப்போது வருவான், எப்போது போவான் என்பது தமக்குத் தெரியாது என்றும், சில நேரத்தில் மூன்று நாட்கள் கூட வர மாட்டான் என்பதினால் அவனுக்காக காத்திருப்பது வீண் வேலை எனக் கவலையுடன் அவளிடம் கூறினார்கள். ஆனால் அவற்றைக் கேட்கும் நிலையில் பீமாபாய் இல்லை. தனக்கு அவனைப் பார்க்க வேண்டும், அவனைப் பார்க்காமல் வீட்டை விட்டுப் போக மாட்டேன் எனக் கூறி விட்டு அவர்களுடைய வீட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டாள். மூன்று நாட்கள் கழிந்தன. ஸ்ரீ மாணிக் வீடு திரும்பவில்லை. ஆகவே பட்டினி விரதம் இருக்கத் துவங்கினாள். அந்த செய்தி ஸ்ரீ மாணிக்கின் காதை எட்டியது. ஆகவே இனியும் அவளை தவிக்க விடுவது தவறு என உணர்ந்தவர் அன்று மாலையே வீடு திரும்பினார். அவனைக் கண்ட பீமாபாய் திடுக்கிட்டாள். தான் எட்டு சோழிக் கொட்டைகளை தந்து காப்பாற்றிய அதே சிறுவன் என்பதை கண்டு வியப்பு அடைந்தாள். ஆனால் அவள் பேசத் துவங்கும் முன்னரே ஸ்ரீ மாணிக் கூறினார் ‘நான்தான் நீ கேட்ட வரத்தை தந்து விட்டேனே…..இனி என்ன…போ…திரும்பிப் போ……அமைதியாக வீட்டிற்குப் போ’. அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தவள் தன் ஊருக்கு கிளம்பிச் சென்றாள். அவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளேயே பீமாபாய் அடுத்தடுத்து எட்டு குழந்தைகளை பெற்றெடுத்துக் கொண்டாள். சிறுவன் ஸ்ரீ மாணிக்கின் சக்தியைக் கண்டு வியந்து நின்றனர் அனைவரும்.

இவை ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தாலும் ஸ்ரீ மாணிக்கின் நிலைக் குறித்து கவலை கொண்டனர் அவன் பெற்றோர்கள். இப்படியே ஊரை சுற்றிக் கொண்டு இருந்தால் நாளைக்கு அவன் கதி என்ன ஆகும் எனக் கவலைபட்டார்கள். அவனிடம் உள்ள சக்தி அவனுக்கு என்ன கொடுத்து விடும்? தமது காலத்துக்குப் பிறகு அவனை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை பெற்றோர்கள் மனதை வாட்டியது.  ஸ்ரீ மாணிக் மனதிலோ வேறு எண்ண அலை ஓடியது. ‘தத்த தேவா எனக்கு எதுவும் தேவை இல்லை. என் உருவில் நீ உள்ளபோது அதை உலக நன்மைக்காக உபயோகிக்காமல் ஏன் சம்சார பந்தத்தில் வீணாக செலவு செய்ய வேண்டும்? எவர் வேண்டுமானாலும் எதுவும் கூறட்டும். குழந்தைப் போலவே மனதை தூய்மையாக வைத்து இருந்து திரிந்து அலைந்து கொண்டு இருக்கும் எனக்கு அது பற்றிக் கவலை இல்லை. எது எப்படி இருந்தாலும் என் மனம் சஞ்சலம் அடையாமல் உன் மனதுடனே ஒன்றிக் கிடக்கட்டும். நான் பிறந்த நோக்கம் நிறைவேறும்வரை ஒரே குறிகோளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனதை எனக்குக் கொடு’.

அத்தியாயம்-3

நான் யார் என்று கூறி
மண்ணிலே நடந்திடும் லீலைகளைக் கூறி
தான் கொண்ட பிறப்பில் உள்ள
தனித்தன்மையை எடுத்துச் சொல்லி
தன்னிடம் வந்த மனிதர்களுக்கெல்லாம்
உள்ளமே நான்தான் என
வான் நிறக் கண்ணன் சொல்ல
வலியத் தோள் விஜயன் கேட்டான்

-பகவத் கீதை-

 ஸ்ரீ மாணிக் பிரபுவின் பால காண்டம்

ஸ்ரீ மாணிக்கின் நிலை குறித்து மற்ற உறவினர்களிடமும் கலந்து ஆலோசனை செய்தப் பின் அவனுடைய பெற்றோர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். பையனுக்கு பூணல் கல்யாணம் செய்து விட்டால் திருந்தி விடுவான். ஸ்ரீ மாணிக்கின் வயது ஏழு ஆகியது. அப்போது அவனுக்கு உபநயனம் செய்து வைத்தார்கள். உபநயன சடங்குகளில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை ஓதுவார்கள். அதற்கேற்ப உபனயன நிகழ்ச்சியில் பையனின் காதுகளில் காயத்ரி மந்திரத்தை பண்டிதர்கள் ஓதத் துவங்கினார்கள். ஸ்ரீ மாணிக்கோ அவர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் முன்னரே கடகடவென அனைத்து மந்திரங்களையும் பொங்கி வழியும் நீர் ஊற்று போல கூறத் துவங்கினார். அனைவரும் வாய் அடைத்து நின்றார்கள். எங்கிருந்து அவர் அத்தனை மந்திரங்களையும் கற்று அறிந்து உள்ளார்? காண்பது கனவா அல்லது நனவா? ஒன்றும் புரியாமல் விழித்தவர்களுக்கு அந்த சிறுவனிடம் எதோ அபூர்வ சக்தி உள்ளது என்பது மட்டும் தெரிந்தது. ஆனாலும் அவர்கள் அவரிடம் உள்ளது தெய்வ சக்தியே என்பதை புரிந்து கொள்ளவில்லை.

உபனயனம் முடிந்ததும் ஸ்ரீ மாணிக்கை  மீண்டும் பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனால் மீண்டும் சுதந்திரப் பறவையாக திரிந்து அலைவதையே அவர் விரும்பினார். மெல்லிய பூங்காற்றும், பறந்து விரிந்த ஆகாயமும், சலசலக்கும் நீரோடைகளும், பறவைகளின் இனிய கீதங்களும், மரக் கிளைகள் எழுப்பிய இனிய ஓசைகளுமே அவர் மனதை ஆக்கிரமித்தன. படிப்பை விட அவையே தனது மனதை கவர்ந்ததை உணர்ந்தார். கல்விகளுக்கும் பாடங்களுக்கும் அப்பாற்பட்ட அவதார புருஷர் என்பதினால் நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடந்து படிப்பதை விட ஏகாந்தமாக இருப்பதே பிடித்து இருந்தது.  பாடசாலை ஒரு சிறைச்சாலை என்றே நினைத்தார். இப்படி எல்லாம் எண்ணியதினால்தான் பள்ளிக்குச் செல்வதை குறைத்துக் கொண்டு இயற்கை தந்த பாடங்களை கற்று அறிந்தார்.

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் யதுகுல மன்னனுக்கு ஸ்ரீ  தத்தாத்திரேயர் தனக்கு இயற்கை தந்திருந்த இருபத்தி நான்கு குருமார்கள் என பூமி, காற்று, வானம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, பெருங்கடல், அந்துப்பூச்சி (விளக்கு நெருப்பை சுற்றும் பூச்சிகள்), தேனீ, யானை, தேன் சேகரிப்பவன், மான், மீன், விபச்சாரி, அண்டங்காக்கை (Raven), குழந்தை, கன்னி, ஆயுதம் தயாரிப்பவர், சிலந்தி மற்றும் ஒரு வண்டு போன்றவர்களே கூறிய பின்னர்   அவை தமக்கு கொடுத்த பாடத்தையும் விளக்கிக் கூறினாராம். அப்படிக் கூறியதில் மூலம் மறைமுகமாக உலகில் தான் படைத்த அனைத்துமே அர்த்தம் இல்லாமல் படைக்கப்பட்டவை அல்ல, அவை அனைத்தையுமே மாபெரும் தத்துவங்களைக் கொண்ட ஜீவன்களாக படைக்கப்பட்டு அவற்றின் மூலமே அந்த தத்துவங்களை உலக மக்களுக்கு போதனை செய்வதாகக் கூறினாராம்.

இப்படியாக இயற்கை கற்றுக் கொடுத்த பாடங்களை அறிந்து கொண்டு இருந்ததினால்தான் ஸ்ரீ மாணிக் படிப்பில் நாட்டம் இன்றி இருந்தார். அது வியப்பும் இல்லையே. ஆனால் அதை சுற்றி உள்ளவர்கள் ஏற்க வேண்டுமே. தங்களுடைய மகன் இப்படி மீண்டும் மீண்டும் சுற்றி அலைந்து கொண்டு இருந்தால் விடி மோட்சமே கிடையாதே என எண்ணிய அவரது பெற்றோர்கள் அவரை அவரது தாய் மாமன் வீட்டிற்கு அனுப்பினார்கள். வேறு ஊருக்குச் சென்றால் நண்பர்களின் சேர்க்கை மாறும். மகன் மனம் மாறி படிக்கத் துவங்குவான் என எண்ணினார்கள். ஆனால் அவர்களின் நினைப்பிற்கு மாறாகவே ஸ்ரீ மாணிக் இருந்தார். வெட்ட வெளியில் ஆகாயத்தை பார்த்துப் படுத்தபடி ஏகாந்தமாக இருப்பார். எதோ சிந்தனை….நாள் முழுவதும் சிந்தனை. அவர் கடவுளின் அவதாரம் என்பது யாருக்கு புரியப் போகின்றது? தாய் மாமன் எண்ணினார், ஒரு வேளை ஒரு வேலையில் அவரை சேர்த்து விட்டால் கவனம் திரும்பலாம். ஆகவே அவர் எவரேவரிடமோ இருந்து சிபாரிசு பெற்று வரி வசூலிக்கும் பிரிவில் ஸ்ரீ மானிக்கிற்கு வேலை வாங்கித் தந்தார். ஆனால் வேலையிலும் ஸ்ரீ மாணிக்கிற்கு நாட்டம் இல்லை. முதல் நாள் அன்றே தான் வசூலித்த வரிப் பணத்தை தன்னிடம் வந்து கஷ்டத்தைக் கூறிய நண்பர்களுக்கு பிரித்துத் தந்துவிட்டார். வரி வசூலித்த பணத்தை எடுத்து பிறருக்கு தானம் செய்ய  யார் அனுமதிப்பார்கள். ஆகவே அவரை வேலையில் இருந்து விலக்கி விட்டார்கள்.

பல நாட்கள் வீட்டில் ஒரு கட்டிலில் சன்யாசி போல ஸ்ரீ மாணிக் படுத்துக் கிடப்பார். வேலையும் இல்லை….சாப்பாடு….தூக்கம் அவ்வளவே. அவர் தாய் மாமன் அதைப் பார்த்துக் கொண்டு எத்தனை நாள்தான் பொறுமையாக இருப்பார். ஒரு நாள் கட்டிலில் படுத்துக் கிடந்த ஸ்ரீ மாணிக்கை பார்த்து கோபமாகக் கத்தினார்  ‘நீ என்ன ஜாமீன் பரம்பரையில் பிறந்தவன் என்ற நினைப்பில் இருக்கிறாயா? உடம்பை அசைக்காமல் இருக்கும் உனக்கு உணவும் உடைகளும் தவறாமல் கிடைபதினால்தானே இப்படி ஊதாரித்தனமாக ஊரை சுற்றிக் கொண்டு இருக்கின்றாய். உனக்கு வெட்கமாக இல்லையா?’

அப்படிப்பட்ட சந்தர்பத்தைதான் ஸ்ரீ மாணிக் எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல எழுந்தார், ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. கட்டிய உடையுடன் கிளம்பிச் சென்றவர் போகும் முன் கூறினார் :-

படிப்பவரும், காப்பவரும் கருணைக் கடவுளுமான
அந்தக் கடவுளைத் தவிர
எனக்கு யாருடைய துணை வேண்டும்?
இந்த மாயையான உலகில்
அனைத்தும் நான்தான் என நினைக்கின்றான் விந்தை மனிதன்.
ஒன்று தெரியவில்லை அவனுக்கு
யாருக்கு யார் வேலைக்காரன்?
உண்மையில் கடவுள் என்பவன் யார்?
சோதனைக் காலத்தில் இப்படி குழப்பத்துடன் நினைப்பது
வீண் வேலை அல்லவா.
ஒரு தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அது இப்படி வளர்கின்றது என்று யார் சாட்சி கூற முடியும்
என்னைப்
பற்றி அறியாதவர்களிடம்
நானும் அப்படித்தான் கேட்கிறேன்.

சொந்த பந்தம் துறப்பதற்கு வேளை வரவேண்டாமா. அதனால்தான் அத்தனை நாட்களும் பொறுமையைக் கடைபிடித்துக் காத்து இருந்தார். விதிப்படி தாய் மாமன் வீட்டில் இருந்துதான் பந்தத்தை துறக்க வேண்டும் என்று இருந்தது. துறந்து விட்டார். சுதந்திரப் பறவையாக மாறினார். பார்க்கும் அனைத்திலும் தெய்வீகத்தைக் கண்டார். உலகம் முழுவதிலும் இறைவீகம் பரவி இருந்ததைக் கண்டார். காண்பது, கேட்பது, தொடுவதும் என அனைத்துமே தெய்வம் என்ற உண்மை தெரிந்தது. தான் அவதரித்தது மக்களின் துயர் துடைக்கவே என்ற உண்மையும் புரிந்தது.  தானே தெய்வீக அவதாரம் என்ற உண்மை நிலையும் மனித உருவில் இருந்த அவருக்கு தெளிவாக புரிந்தது.

எவருக்கு துன்பம் ஏற்பட்டாலும் ஸ்ரீ மாணிக்கினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது என்பது மட்டும் அல்ல பிராணிகளுக்கு துன்பம் நேர்ந்தாலும் அதை அவரால் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. ஒரு சம்பவம். ஒரு கருத்தரித்த மாட்டின் மீது அமர்ந்தபடி அதன் எஜமானன் அதை ஓட்டிக் கொண்டு வந்தான். கருத்தரித்த மாட்டினால் எப்படி விரைவாக ஓட முடியும். ஆகவே அதை விரைவாக ஓட்ட அதன் மீது அமர்ந்து இருந்தவன் அதை அடித்துக் கொண்டே வந்தான். நிறை மாத கர்பிணி மாட்டை அடித்துக் கொண்டே வந்ததைக் கண்ட ஸ்ரீ மாணிக் கோபமுற்றார். அவனை வழிமறித்து நிறை மாத கர்பிணி மாட்டை அடிப்பது பாவம் எனக் கூறியும் அந்த மூடன் அதைக் கேட்கவில்லை. ‘நீ யார் இந்த மாட்டிற்கு வந்து பரிந்துரை செய்ய’ எனக் கூறிவிட்டு வேண்டும் என்றே இன்னும் அதிகமாக அந்த மாட்டை அடிக்கத் துவங்கினான். அவனுக்கு சரியான பாடம் புகட்ட ஸ்ரீ மாணிக் முடிவு செய்தார். அந்த மாட்டைப் பார்த்து ஒரு முறை முறைத்தார். அவ்வளவுதான். அந்த மாடு முரண்டு பிடித்துக் கொண்டு ஓடத் துவங்கியது. அதன் மீது அமர்ந்து இருந்தவனால் இறங்க முடியவில்லை. யாரோ பசை போட்டு அதன் மீது தன்னை அதன் மீது ஓட்டி வைத்து உள்ளதைப் போலவும், தன் கைகளை பின்னால் கட்டி வைத்து உள்ளதைப் போலவும் உணர்ந்தான். அங்கேயே சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்த மாட்டினால் அங்கும் இங்கும் இடித்து இடித்து அவன் உடம்பெல்லாம் நல்ல அடி. ‘ஐயா…காப்பாற்றுங்கள்…ஐயா..காப்பாற்றுங்கள்’ எனக் கத்தினான். ‘இனி அப்படிப்பட்ட தவறை செய்ய மாட்டேன்…மன்னித்து விடுங்கள்’ எனக் கதறினான். ஸ்ரீ மாணிக் மனம் இறங்கி மாட்டை சமாதானப்படுத்தினார். அதன் மீது சவாரி செய்து கொண்டு வந்தவன் ஓடி வந்து அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான். இனி ஜீவ ஹிம்சையே செய்ய மாட்டேன் என உறுதிமொழி கொடுத்து சத்தியம் செய்தான்.

அத்தியாயம்-4

அழிவற்றவர் அவர்.
பார்த்ததும் இல்லை இப்படி ஒரு மகானை,
கேள்விப்பட்டதும் இல்லை அவர் யார் என,
ஆனால், அவரோ அனைத்தையும்
கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
நினைத்துப்ப் பார்த்ததும் இல்லை அவரைப் பற்றி.
அவரோ எண்ண ஓட்டத்தில் மிதக்கிறார்
நமக்கோ ஒன்றும் தெரியவில்லை
அவரோ அனைத்தையும் அறிந்தவராக இருக்கின்றார்.
இவரைத் தவிர வேறு எவர் மகானாக இருக்க முடியும் ?
இயற்கைக் கூட இவரிடம் குறுக்கும் நெடுக்குமாக
பின்னிப் பின்னி இணைந்து இருக்குமோ?
-பிரகத் ஆரண்ய உபநிஷத்

நான் யார் தெரியுமா ?

சிறுவர் என்ற வயதைக் கடந்து வயதுக்கு வந்தவர் ஆனார்  ஸ்ரீ மாணிக் . பசி, உறக்கம் என எதுவும் இல்லை. சாப்பாடு கிடைத்தால் சாப்பிடுவது, இல்லை என்றால் பட்டினி கிடப்பது. உடலைப் பற்றிக் கவலைப்படவில்லை. மனதிலே வெறுப்போ, விருப்போ, சொந்த பந்தங்கள் என்றோ எதையுமே வைத்துக் கொண்டு இருக்கவில்லை. அனைத்தையும் கடந்து விட்ட அவர் ஒரு அவதூத பிரும்மச்சார்யராகவே வாழ்ந்து வந்தார். அவருக்கு இயற்கையே வழிகாட்டி. இயற்கையே துணைவன். என்னதான் மகன் வீட்டைவிட்டு வெளியேறி விட்டாலும் சொந்த பந்தம் விலகி விடுமா என்ன? அந்த இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்ட ஸ்ரீ மாணிக்கைப் பற்றி அவர் வீட்டினர் கவலை கொண்டார்கள். ஸ்ரீ மாணிக்கிற்கு  பத்து வயதானபோது அவருடைய தந்தை இறந்து விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீ மாணிக் அங்கும் இங்கும் தனிமையில் சுற்றித் திரிந்தபடி அலையலானார். அந்த ஊருக்கு பக்கத்தில் இருந்த ‘அம்பி குண்டா’, ‘மன்தால்’ போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று திரும்பினார்.  கடவுளின் அவதாரமாகவே அவர் பிறந்து இருந்ததினால் அபார ஆற்றல் பெற்று இருந்தார். இயற்கையாகவே அமைதியான சுபாவமும் அமைந்து இருந்தது. ‘அம்பி குண்டா’வில் தங்கி இருந்த ஸ்ரீ மாணிக் அங்கிருந்த சிவன் கோவிலில் நெடுநேரம் தங்குவது உண்டு. அப்போது அவரைப் எவரும் கண்டு கொண்டது இல்லை. அவரை எதோ வழிப்போக்கன் போலிருக்கின்றதே என்றே பார்த்தார்கள். ஒரு நாள் ஒரு சிவபக்தர் அந்த ஆலயத்துக்கு வந்திருந்தார். அவர் ஸ்ரீ மாணிக்கைப் பார்த்தார். தன் நிலை மறந்து அமர்ந்து இருந்த ஸ்ரீ மாணிக்கின் முகத்தை சுற்றி ஒரு ஒளி வளையம் சூரியனைப் போல மின்னுவதைக் கண்டு வியந்தார். ஆவலுடன் ஸ்ரீ மாணிக்கின்  அருகில் சென்றபோதும் அதே ஒளி வெள்ளம். ஆகவே அவர் ஸ்ரீ மாணிக்கிடம் பேச்சு கொடுக்கத் துவங்கினார். ஆனால் ஸ்ரீ மாணிக்கோ அவருடன் பேசுவதை தவிர்த்தார். வேறு இடத்துக்கு சென்று அமர்ந்தார். ஸ்ரீ மாணிக் அப்படி செய்வதைக் கண்ட அந்த சிவபக்தரின் ஆவல் அதிகம் ஆகியது. ஸ்ரீ மாணிக்கை பின் தொடர்ந்து சென்று அவர் அமர்ந்த இடத்துக்கெல்லாம் தொடர்ந்து சென்றார்.

அதனால் தொந்தரவு அடைந்த ஸ்ரீ மாணிக் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு புதருக்குள் சென்று மறைந்து கொண்டார். சிவ பக்தரும் விடவில்லை.புதரின் அருகில் சென்று அதை விலக்கிப் பார்த்தால் அங்கு ஸ்ரீ மாணிக் இல்லை. ஒரு பெரிய புலியே படுத்துக் கிடந்தது. அந்த புதருக்குள் பெரிய புலி படுத்துக் கிடப்பதைக் கண்டவர் ஸ்ரீ மாணிக்கை  அந்தப் புலி தின்று விட்டது என நினைத்துக் கொண்டு பதறிப் போய் ஊருக்குள் சென்று அந்தப் புலியை அடித்துக் கொல்ல  ஆட்களை திரட்டி வந்தார். வந்த ஜனங்களும் அந்தப் புதரை விலக்கிப் பார்க்க அதனுள் ஸ்ரீ மாணிக் படுத்துக் கிடப்பதைக் கண்டார்கள். அது மட்டும் அல்ல, அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஸ்ரீ மாணிக் மனிதராகவும், புலியாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார். அவர்களுக்கு தான் யார் என்பதைக் காட்டுவது போல அமைந்து இருந்தது அந்த நிகழ்ச்சி. நான் யார் தெரியுமா? என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற ஏளன சிரிப்புடன் அதனுள் அமர்ந்து இருந்தார் ஸ்ரீ மாணிக் .

அந்த செய்தி காட்டுத் தீ போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. ஸ்ரீ மாணிக்கின்  உற்றார் உறவினருக்கும் செய்தி கிடைக்க அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். தயவு செய்து ஊருக்கு கிளம்பி வந்து விடுங்கள் என்ற வேண்டுகோளுடன் வந்திருந்தவர்களிடம் ஸ்ரீ மாணிக் கூறினார் ’வருத்தப் படாதீர்கள். உங்களுடைய வேண்டுகோளுக்கு செவி சாய்த்துதான் உங்கள் குடும்பத்தில் அவதரித்தேன். எத்தனைக் காலம் உங்களுடன் இருக்க வேண்டும் என்ற விதி இருந்ததோ அத்தனைக் காலம் உங்களுடன் இருந்தேன். நான் பிறந்தது மனிதகுல மேம்பாட்டிற்காகத்தான்.  நான் பிரும்மன் ஆகி விட்டதினால் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை ரட்ஷிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. என் இழப்பை பெரிய இழப்பாகக் கருதாதீர்கள். நான் எங்கு இருந்தாலும் உங்களுடன் இருந்து கொண்டு உங்களைக் காத்தருளுவேன். நீங்கள் அமைதியாக ஊருக்குச் செல்லுங்கள். என் துணை உங்களுக்கு என்றைக்கு தேவைப்படுகின்றதோ அன்று என்னை நினைத்துப் பிரார்த்தனை செய்தால் உங்களின் துயர் தீர்க்க நான் வருவேன்’  என்ற சத்திய வாக்கை தந்தார்.

அத்தியாயம்-5

பார்த்தா, இப்போது என்னைப் பார்
வகைவகையான என் வடிவங்களைப் பார்
ஆதித்யர்களை, அஷ்ட வசுக்களை,
அஸ்வினித் தேவர் ருத்ரம் தமை,
ஏழு மருந்துகள் என்னுள் அடங்கி
எங்கும் தெரிவதை நன்கே பார்.
காண வரும்பும் அனைத்தையும்
காண நினைத்தால் என்னையேப் பார்.
இந்தக் கண்களால் என் உருவைக் காண்பது  கடினம்.
அதனால்தான் பார்த்தா,
தெய்வப் பார்வையை சேர்த்தே
உனக்குத் தருகிறேன்
-பகவத் கீதை

விஸ்வரூப தரிசனம்  

எத்தனை வேண்டிக் கொண்டும் வீடு திரும்ப மறுத்து விட்ட ஸ்ரீ மாணிக்கின் பிரிவு வருத்தம் தந்தாலும் வேறு வழி தெரியாமல் ஊர் திரும்பினார்கள் அவர் உறவினர். அது முதல் ஸ்ரீ மாணிக் என்ற பெயர் மறைந்து ஸ்ரீ மானிக் பிரபு என அவர் அழைக்கப்படலானார். அப்போது ஸ்ரீ மாணிக் பிரபு இருந்த இடம் ‘மன்தால்’  என்ற பகுதி ஆகும். அந்த இடத்தை சுற்றியே நிறைய மரம் செடிகள் மற்றும் காடுகள் உண்டு. அங்கு சென்று சுய தரிசனத்தில் ஈடுபடுவார் ஸ்ரீ மாணிக் பிரபு. மலை மீது இருந்து இறங்கி வந்து மக்களுக்கு தொண்டு செய்வார். பல நேரங்களில் அவர் போக்கே விசித்திரமாகவும் ஜீரணிக்க முடியாமலும் இருக்கும். என்னத்தான் இருந்தாலும் அவர் ஸ்ரீ தத்தாத்திரேயரின் அவதாரம் அல்லவா. அப்படித்தான் இருப்பார். அவருடைய பல நடவடிக்கைகள் பலருக்கு பிடிக்காமல் இருந்தாலும் அந்த வெறுப்பு தற்காலிகமாகவே இருந்து வந்தது.  திடீர் என மரம் ஒன்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு அங்கு விளையாடுவார். கட்டைகள் கிடைத்தால் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு குதிரை சவாரி செய்வது போல நடிப்பார். சப்தம் போட்டுக் கொண்டவண்ணமும் இருப்பார். சிறுவர்களையும் சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர்களுடன் விளையாடுவார். அவருடைய சேஷ்டைகள் பல நேரங்களில் ஒரு பைத்தியக்காரனின் விளையாட்டு போலவே இருக்கும். அதை மற்றவர்கள் தூர நின்று வேடிக்கை பார்ப்பது உண்டு. ஆனால் ஞானிகளும் படித்தவர்களும் ஸ்ரீ மாணிக் பிரபு பைத்தியக்காரர் அல்ல, அவர் ஒரு பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்றே எண்ணினார்கள். அதற்குக் காரணம் அவர் முகத்தில் தெரிந்த தேஜஸ்தான். ஞானிகளுக்கு மட்டுமே அப்படிப்பட்ட முகம் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அவர்கள் நினைத்துப் பார்ப்பது உண்டு- உயிருள்ளபோதே இப்படிப்பட்ட பற்றற்ற வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்க எத்தனைப் பேரால் முடியும்?  ‘ஜாபால உபநிஷத்’ என்ற நூலில் அப்படி பெருமையாகக் குறிப்பிடப்பட்டவர்கள் துர்வாசர், ஜடபறதா மற்றும் ஸ்வதேசு போன்றவர்களே. ஜபால உபநிஷத் என்பது  கிபி 300 க்கு முன்  இயற்றப்பட்ட ஒரு பழமைக்கால  நூலாகும். இந்த நூல்  ஆன்மீக அறிவின் தேடலுக்காக உலக வாழ்க்கையைத் துறப்பது பற்றி விவாதிக்கிறது. அதற்காக தற்கொலை செய்து கொள்வதைக் கூட நியாயப்படுத்துகிறது. அதனால்தான் படித்தப் பண்டிதர்களும் கல்வி அறிவு பெற்றவர்களும் ஸ்ரீ மாணிக் பிரபு பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என எண்ணினார்கள். அதனால் அவர்களில் பலர் ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் சென்று அவருடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்கள்.

ஸ்ரீ மாணிக் ஆடுவார், பாடுவார், கூத்தாடுவார். தெய்வத்தை நினைத்து மனம் உருகிப் பாடுவதே நல்ல செயல் என நம்பினார். அதையே தனது முக்கிய வேலையாக செய்து வந்தார். பஜனைப் பாடல்களைப் பாடுவது ஒவ்வொருவரின் மனதையும் தூய்மைப்படுத்தும். மனதுக்கும் இதயத்துக்கும் இதம் அளிக்கும் என தம்மிடம் வருபவர்களிடம் அவர் கூறுவார். பஜனைப் பாடல்களைப் பாடியவண்ணம் தன்னுடன் வந்து நிற்கும் மக்களுக்கு தன்னிடம் என்ன உள்ளதோ அதை தந்து விடுவார். அது மட்டும் அல்ல. மற்றவர்கள் தன்னை வந்து தரிசிக்கும்போது தரப்படும் பரிசுப் பொருட்களையும் பிறருக்கு தானமாக தந்து விடுவார். அப்படி தரும்போது தனது எதிரில் உள்ளவர் ஏழையா இல்லை பணக்காரரா எனப் பார்க்க மாட்டார். ஸ்ரீ மாணிக் பிரபுவின் சம்பிரதாயத்தில் பஜனை பாடல்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதின் காரணம் ‘பாட்டிற்கு மயங்காதவர் எவரோ’ என்ற தத்துவார்த்த உண்மைதான். அதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அன்னாரின் முன்னோரான ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி மகராஜ் குரு சரித்திரத்தில் இப்படி பாடியதே:-

 என்னை அடைய நான் இன்னொரு வழி சொல்கிறேன்.
இனிமையான இசையைக் கொடுப்பவர்களுடன்
நான் இருந்து கொண்டே இருப்பேன்.
எனக்கு இசை உயிரானது.
எவர் என்மீது தினமும் துதி பாடுகிறார்களோ,
அவர்கள் என்னுடைய அழியா அன்பை பெற்றவர்கள்.
அவர்களின் இல்லத்தில் எல்லாம்
நிச்சயமாக என்னைக் காணலாம்.

ஸ்ரீ மாணிக் பிரபு தென்றல் காற்றுப் போல ஊர் ஊராக சுற்றி வந்தார். அவர் ஒரு அவதூதராகவே இருந்து வந்தார். இப்படியாக சுற்றிக் கொண்டு இருந்தவர் ‘சலகாபூர்’ என்ற இடத்தை வந்தடைந்தார். அது ‘கல்யாண்’ என்ற ஊரின் எல்லையில் இருந்தது. ‘சலகாபூர்’ ஒதுக்குப் புறத்தில் பழம் பெருமை வாய்ந்த ஹனுமான் ஆலயம் இருந்தது.

மனித நடமாட்டம் இரவில்  குறைவாகவே இருந்ததினால் அந்தப் பக்கம் இரவில் எவரும் செல்ல மாட்டார்கள். அது மட்டும் அல்ல. அந்த ஹனுமார் மிக சக்தி வாய்ந்தவர் என்பதினால் அவர் முகம் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் என்பது மற்றொரு நம்பிக்கை. ஸ்ரீ மாணிக் பிரபுவிற்கு அந்த விஷயம் தெரியாது. அது பற்றி தெரிந்தாலும் அவர் கவலை  படப்போவது இல்லை. அவர் என்ன சாதாரண மனிதரா பயப்படுவதற்கு?  ஒரு நாள் இரவு வேலை. வெளியில் போய் விட்டு திரும்பி வந்தார் ஸ்ரீ மாணிக் பிரபு. சலகாபூரின் அருகில் இருந்த அந்த ஆலயம் அவர் கண்களில் தெரிந்தது. ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு எவருமே இல்லை. ஹனுமாரின் சிலைக் கூட கண்களில் தெரியவில்லை. நல்ல இருட்டு. அந்த சிலையின் தோள்புறத்தில் இருந்த இடுக்கில் தனது காலணிகளை கயற்றி வைத்தார். துணிமணிகளையும் அதன் மீது போட்டு விட்டு அதன் கீழே படுத்து உறங்கி விட்டார் .

பொழுது புலர்ந்தது. ஆலய பண்டிதர் வந்தார். சிலை மீது காலணிகளும் துணிகளும் இருப்பதைக் கண்டார். தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்த ஸ்ரீ மாணிக் பிரபுவையும் பார்த்தார். கோபம் கொந்தளித்தது. ஸ்ரீ மானிக் பிரபுவை உதைத்து எழுப்பினார். அடி அடி என ஆத்திரம் தீரும் வகையில் அடித்தார். அடித்ததும் திரும்பியவர் தரையில் ரத்தம் வழிந்து இருந்ததைக் கண்டு சிலையை பார்த்தார். அப்படியே அதிர்ந்து விட்டார். தரையில் வழிந்தோடிய ரத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா? ஹனுமான் சிலையில் இருந்தே ரத்தம் வழிந்தோடியது. ‘நான் அடித்தது இந்த மனிதரை, அவர் உடம்பிலோ காயம் எதுவும் இல்லை. மனிதர் பதறி  ஓடவும் இல்லை. மாறாக ரத்தம் வழிவதோ ஹனுமான் சிலையில் இருந்து…நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?..அபசாரம் செய்து விட்டேனா’ எனப் பதறினார். அது மட்டும் அல்ல,  அடித்த தன்  கைகளிலும், உதைத்த கால்களிலும் தாங்க முடியாத வலி  எடுக்கத் துவங்கியது. தான் அடித்தது ஒரு மகானையா? ஒன்றும் புரியாமல் ஒரு கணம் தவித்தார். மனம் பதற உள்ளத்தில் பயம் தோன்ற தடாலென ஸ்ரீ மாணிக் பிரபுவின் கால்களில் விழுந்தார். அவர் கால்களை பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு  கேட்டு எழுந்தவர் மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீ மாணிக் பிரபுவின் உடல் பெரியதாகிக் கொண்டே சென்று அவர் ஸ்ரீ  தத்தாத்திரேயாராக காட்சி தந்தார். சில வினாடிகளில் அவர் தன்  பழைய உருவை அடைந்தார்.

அந்த செய்தி காட்டுத் தீயைப் போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவுக்கு செல்வது போல அந்த ஆலயத்தை நோக்கி வந்தார்கள். ஸ்ரீ மாணிக் பிரபுவின் ஆசிகளைக் கோரி நின்றார்கள். ஸ்ரீ மாணிக் பிரபுவின் தாயாரும் அவர் உறவினர்களும்  கூட அங்கு வந்து மானிப் பிரபுவை வணங்கினார்கள்.

அத்தியாயம் – 6

எங்கும் நிறைந்தவரே நீர் யார்
எப்படிப்பட்டவர், எதற்கு ஒப்பானவர்
எதையுமே நான் அறிந்து இருக்கவில்லை
நீங்கள் எப்படிப்பட்டவராக இருப்பினும்
நான் மனதில் வேறு ஒன்றையும் வைத்திராமல்
உம்மை தியானிப்பதையே விரும்புகிறேன்
-நாராயணீயத்தில் த்யான யோகம்-

குருவே உன்னிடம் சரண் அடைந்தேன்

தக்ஷிண காசி என்று அழைக்கப்படும் இடத்தில் பழம் பெருமை வாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அதன் பெயர் மார்த்தாண்ட பைரவர். பல இடங்களில் இருந்தும், தூர தேசங்களில் இருந்தும் மக்கள் அங்கு வந்து வழிபடுவார்கள். அங்கு வரும் பக்தர்கள் சிவ பெருமானை வணங்கியப் பின் ஸ்ரீ மாணிக் பிரபுவையும் வந்து வணங்கிச் செல்வார்கள். அதற்கான காரணம் ஸ்ரீ மாணிக் பிரபு ஸ்ரீ தத்தாத்திரேயரின் அவதாரமே என்ற செய்தி பரவலாக பரவி இருந்ததே. ஸ்ரீ  தத்தாத்திரேயர் சிவன்-விஷ்ணு-பிரும்மா என்பவர்களின் அவதாரமே என்பதினால் அவரை வந்து வணங்கினார்கள். இப்படி இருக்கும்போது அவருடைய ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து சென்றவர்களில் வெங்கம்மா என்ற பெண்மணியும் உண்டு. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அவர். வணிகத் தொழில் செய்து வந்தார். தினமும் கோவிலுக்கு வந்து ஸ்ரீ மாணிக் பிரபுவை தியானித்தவாறு ஒரு மூலையில் அமர்ந்து கொள்வார். அவர் யார் என்பதையோ, தினமும் ஆலயத்திற்கு எதற்காக வருகிறார் என்றோ எவரும் கவனித்தது இல்லை. தரிசனம் முடிந்ததும் அனைவரும் எழுந்து செல்லும்போது அந்தப் பெண்மணியும் எழுந்து சென்று விடுவார். யாரிடமும் பேசுவது இல்லை.

ஸ்ரீ மாணிக் பிரபுவின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. அனைவரும் சென்றப் பின் அந்தப் பெண்மணியை அவர் அழைத்தார். அவளிடம் கேட்டார் ‘அம்மணி, உங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. நிறைய பிரார்த்தனையும் செய்து விட்டாய். இனி உன் வீட்டிற்குச் சென்று விடுவதுதானே’. அதைக் கேட்டதும் அந்தப் பெண்மணியின் கண்களில் நீர் வழிந்தது. அவள் கூறினாள் ‘பிரபோ, எனக்கு வீடு, வாசல், உற்றார் உறவினர் என எவருமே கிடையாது. நான் உங்களுடைய பாத கமலத்தில் சரண் அடைந்து வாழ்நாள் முழுவதும் என் பொழுதைக் கழிப்பதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். குருவே நான் உங்களுடன் என்னைத் தந்து விட்டேன். ஆகவே என்னை போகும்படிக் கூறாதீர்கள்’.

தன்னலம் அற்று தனக்காக வாழாது முழுமையாக எவர் ஒருவர் தன்னை ஒரு குருவிற்கு அற்பணிக்கின்றாரோ அவர்களையே உண்மையான சிஷ்யர்கள் என கருத வேண்டும். குரு ஒருவருக்கு சிஷ்யர் கிடைப்பது, சிஷ்யனுக்கு குரு கிடைப்பது என்பதை எதிர்பார்த்து ஒற்றை அடிப் பாதையில் வருபவர்களே அதிகம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறினார் ‘ஆயிரக்கணக்கான மக்களில் ஒரு சிலரே மனதை நிலைப்படுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைய மன உறுதியுடன் தியானத்தைக் கற்கிறார்கள். அந்தப் பலரில் ஒரு பகுதியினர் மட்டுமே சத்தியமான உண்மையைத் தேடி என்னுடன் வருகிறார்கள். நானோ அந்த ஒரு சிறு பகுதியினரில் ஒருவனையோ அல்லது இருவரையோ நன்கு கவனித்தப் பின் எவன் முற்றிலும் திறமைசாலியோ அவர்களை மட்டுமே என்னுடயவனாக ஏற்கின்றேன்’.

வெங்கம்மாவும் அப்படித்தான் ஸ்ரீ மாணிக் பிரபுவினால் பரிஷிக்கப்பட்டு ஏற்கப்பட்டாள். இயற்கையிலேயே உடம்பில் ஊறி இருந்த பக்திப் பிரவாகத்தினால் மனதை ஒரு நிலைப்படுத்தி, பக்குவப்படுத்தி, குரு சேவைக்கு தன்னை அர்பணித்து உள்ளாள். குரு சேவை செய்பவர்களையே குரு தன்னுடைய சிஷ்யர்களாக ஏற்பார்கள். அதனால்தான் மனப்பக்குவம் முழுமையாகப் பெற்று தன்னிடம் சரண் அடைந்த வெங்கம்மாவை தன்னுடைய சிஷ்யராக ஏற்று தனக்கு எப்படி பணிவிடை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவளை தன்னுடைய தாயாரிடமே அனுப்பி வைத்தார் பிரபு. அவள் அந்தக் கடமைகளை நன்கு புரிந்து கொண்டு தேர்ச்சி பெற்றப் பின்னரே அவள் சாதாரண மனுஷி அல்ல, தெய்வ சொரூபம் என்பதை உலகிற்குக் காட்டினார். அவளிடம் கூறினார் ‘என்னுள் உன்னை நிலைபடுத்தி என்னையே தியானித்தவாறு இரு. எனக்கே பணி செய். என்னுள்ளே உன்னுடைய முழு மனதையும் ஐக்கியப்படுத்தி தியானித்துக் கொண்டு இருந்தால் உனக்கு ஏது துன்பம் ?’. அன்று முதல் அவள் அவருக்கு பரம சிஷ்யை ஆகி விட்டாள். சில நாட்கள் அவருக்கு தானே முழு பணிவிடையையும் செய்தாள்.

ஒரு கால கட்டத்தில் ஸ்ரீ மாணிக் பிரபு அவளை அழைத்தார். அவளிடம் கூறினார் ‘உன் இளமையை வீணடித்துக் கொண்டு இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம். எனக்கு இங்கு வேலை செய்ய நிறைய ஆட்கள் உள்ளனர். நீ செய்த சேவை போதும். அது எனக்கு ஆத்மா திருத்தி அளிக்கின்றது. ஆகவே ஊருக்கு திரும்பிச் சென்று உற்றார் உறவினருடன் சேர்ந்து வாழத் துவங்கு’. அதற்கு வெங்கம்மா கூறினாள் ‘பிரபு, நான் திடமான முடிவுடன் நன்கு யோசனை செய்த பின்னர்தான் இந்த சேவையை விரும்பி ஏற்றேன். என் தாய் தந்தை, உறவினர் என அனைவரையும் மறந்து விட்டு வந்துதான் இங்கு உங்களிடம் சரண் அடைந்தேன். ஆகவே இங்கு தொடர்ந்து உங்களுக்கு  பணிவிடை செய்ய அருள் புரிய வேண்டும்’. ஸ்ரீ மாணிக் பிரபு அவள் கூறிய பதிலைக் கேட்டு வியப்பு அடையவில்லை. அவள் அமைந்து தன் மீதான பக்தியில் எத்தனை ஆழமாக உள்ளது என்பதை உலகுக்கு தெரிவிக்கவே அப்படி ஒரு நாடகத்தை ஆடினார். ஸ்ரீ பாகவதத்தில் குந்தி செய்யும் ஸ்துதியைக் குறித்து இப்படிக் கூறுவார்கள். அவள் செய்யும் ஸ்துதி ‘ஹே அந்தம காரண நியத்தாவே, யதுபதியே, எல்லாவற்றுக்கும் அந்தராத்மாவாக இருப்பவரே, சரீரமாக அனைத்தையும் தாங்கி நிற்பவரே, எப்படி கங்கை நதியானது அனைத்து தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் தனது பிரவாகத்தை கடலில் சென்று சமர்பிக்கின்றதோ, அது போலவே எனது பிரீதியான உன்னை அடையாது வேறிடம் செல்ல முடியாது. உன்னிடமே என்றும் நிலை கொண்டு இருக்க எனக்கு மனதைக் கொடு’. இப்படிப்பட்ட மனநிலைதான் வெங்கம்மாவுக்கும் இருந்தது. பிரபுவிற்கு பணிவிடை செய்ய அவள் தீர்மானமாக முடிவு செய்ததும் தன்னிடம் இருந்த ஆடை, ஆபரணங்கள். சொகுசுப் பொருட்கள் என அனைத்தையும் தன்னுடைய வீட்டாரிடம் தந்து விட்டு வந்து குருவிற்கு பணிவிடை செய்து வரலானாள்.

1865 ஆம் ஆண்டு ஒரு நாள் அவளுக்குப் புரிந்தது தனக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்பது. இரவு முழுவதும் பகவானை நினைத்து ஆடினாள், பாடினாள், பஜனை செய்தாள். மனம் அலுக்கும் வரை பாடினாள். மறுநாள் காலை இறைவன் பாதத்தை அடைந்தாள். அவளுக்கு அங்கேயே ஒரு சமாதி கட்டி எழுப்பியப் பின் ஒவ்வொரு வருடமும் அவள் பெயரால் நவராத்திரி பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்தார் ஸ்ரீ மாணிக் பிரபு.

அத்தியாயம்-7

உள்ளம் கறுத்து
வெளியில் உள்ள உடலும்
வெளுத்து உள்ள அந்த மக்களை
பக்தி மார்கத்தில் இணைக்கவும்
இணைந்த அவர்கள் அனைவரும்
இந்த உலகிலேயே சொர்க்கத்தை
பெற்று மகிழவும்
வழிகாட்ட  என்னை
இந்த உலகில் இறைவன் படைத்தான்
-திரு அருட்பா-

 பயணம் தொடர,பாதையும் நீண்டது

ஸ்ரீ மாணிக் பிரபுவின் புகழ் அனைத்து இடங்களிலும் தொடர்ந்தது. எங்கிருந்தெல்லாமோ வந்த மக்கள் அவரிடம் இருந்து ஆசி பெற்றுச் சென்றார்கள். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் பல பிரச்சனைகள். தங்களுக்கு ஏற்பட்டு இருந்த சங்கடங்கள் விலக வேண்டும் என அவரிடம் வந்தார்கள். மற்றும் சிலரோ அவருடைய தரிசனம் மட்டுமே கிடைத்தால் போதும் எனவும் அவரிடம் வந்தார்கள். பாமர மக்களுக்கு என்ன தெரியும், எந்த ஞானியும் மகானும் தம்மிடம் உள்ள சக்தியை பயன்படுத்தி உடனேயே வந்தவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை என்பது. ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி அனாவசிய பிரச்சனைகளுக்கு உடனே விடிமோட்ஷம் வேண்டும் என எண்ணியபடி அவரிடம் பெருமளவில் மக்கள் வரத் துவங்கினார்கள். அதனால் மனம் கலக்கமுற்ற பிரபு அப்படிப்பட்ட பிரச்சனைகளில் தான் மூழ்கிக் கிடந்தால் தான் எடுத்த அவதாரத்தின் பலன் வீணாகிவிடும் என்பதினால் ‘மிலார்’ என்ற அந்த ஊரைவிட்டுக் கிளம்பி ‘பாரவி’ ‘வைஜனாதா’, ‘துல்ஜாபூர்’ மற்றும் ‘பண்டரிபூர்’ போன்ற நகரங்களுக்கு செல்லலானார்.

பண்டரிபுரத்தில் உள்ள வித்தலா ஆலயம் புகழ் பெற்றது. பொதுவாக அங்கு செல்பவர்கள் அந்த ஆலயத்துக்கு செல்லாமல் திரும்ப மாட்டார்கள். ஆகவே அந்த ஆலயத்துக்கு சென்று வித்தலாவை தரிசனம் செய்ய முடிவு செய்தார் ஸ்ரீ மானிக் பிரபு. அவர் கடவுளாகவே இருந்தாலும் பூமியில் பிறந்து விட்டால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க சிலவற்றை செயலில் செய்து காட்ட வேண்டும் அல்லவா. மேலும் தான் யார் என்பதை மற்றவர்களுக்கு காட்டியே ஆக வேண்டும். அப்படிப்பட்ட நியதிகளுக்கு உட்பட்ட ஸ்ரீ மாணிக் பிரபு எப்படி விதி விலக்காக இருக்க முடியும்?

வழி நெடுக நடந்து வந்ததினால் சோர்வுற்று இருந்தார். ஆடைகள் அழுக்காகிக் கிடந்தன. ஆலயத்தில் நுழைந்தவர் வித்தலாவின் பாதத்தில் தலையை வைத்து வணங்கச் சென்றார். அந்த ஆலயத்தைப் பொறுத்தவரை ஏழை பணக்காரர் என்ற வித்தியாசத்தை எவரும் காட்டியது இல்லை. ஜாதி பேதமும் பார்த்தது இல்லை. ஆனால் விதி அன்று விளையாடியது. வித்தலாவின் பாதத்தில் தன் தலையை வைக்க ஸ்ரீ மாணிக் பிரபு குனிந்தார். அதைக் கண்ட ஆலய பூசாரி அவரை தடுத்து நிறுத்திக் கூறினார் ‘ பரதேசியான உன்னை இந்த ஆலயத்தின் சிலையை தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டேன்’. அது மட்டும் அல்லாமல் வேண்டாத வீண் பிரச்சனைகளைக் கிளப்பினார். ஸ்ரீ மாணிக் பிரபு குனிந்த தனது தலையை எடுத்தார். நேராக நின்றபடி பண்டிதரைப் பார்த்தார். அவ்வளவுதான் வித்தலாவின் கழுத்தில் இருந்த அனைத்து மாலைகளும் பறந்து வந்து  ஸ்ரீ மாணிக் பிரபுவின் கழுத்தில் விழுந்தன. சுற்றி இருந்த அனைவரும் பிரமித்து நின்றார்கள். பண்டிதரோ அதிர்ந்து நின்றார். தன் கண்களையே  அவரால் நம்ப முடியவில்லை. அப்படியே தடாலென ஸ்ரீ மாணிக் பிரபுவின் கால்களில் விழுந்து மனிப்புக் கேட்டார். ஆனால் ஸ்ரீ மாணிக் பிரபுவோ நடந்தது எதையுமே பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டு ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு இருந்ததைக் கண்டார்கள். அவர் பாடிக் கொண்டு இருந்தார்:-

பாண்டு ரங்கா
இந்த பூமியிலே இருந்து கொண்டு
உன் மகிமையைக் கண்டேன்
சிவபெருமான் உன் கிரீடத்தில் ஜொலிக்க
சந்தனப் பட்டைகள் நெற்றியில் மினுமினுக்க
உன் காதுகளில் தொங்கியபடி தகிக்கும் காதணிகள்
சூரியனை கூட வெட்கி தலை குனிய வைக்கும்
அழகிய கண்களும், மூக்கும்,
புன்முறுவலும் கொண்ட உன் முகத்துக்கு அழகூட்ட
துளசி மாலை மார்பினிலே தவழ
கை இரண்டும் இடுப்பில் பின்னி நிற்க
இரத்தின மாலை கழுத்திலே ஜொலிக்க
பிருகு முனிவர் உன் மார்பிலே தெரிய
வித்தலா
உன் இந்த தரிசனத்தைக் காணவே
இத்தனை நாளும் காத்திருந்தேன்
என் கண்களை பனி மறைக்கின்றது
நெஞ்சமே விம்முகின்றதே
அற்புதம்அற்புதம்
என் வாழ்க்கையில் நான்
எதை அடைய நினைத்தேனோ
இன்று அதைப் பெற்றேன்
வித்தலா
என்னை நீ உன் அன்பு வெள்ளத்தில்
முழுமையாக முழுக அடித்து விட்டாயே.

இப்படியாக ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டவரை கண்ட மக்கள் மீண்டும் அந்த ஆனந்தக் காட்சி எப்போது தமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்து நின்றார்கள். பண்டரிபூரில் இருந்துக் கிளம்பிய ஸ்ரீ மாணிக் பிரபு அங்கிருந்து பூனாவிற்குச் சென்று ‘ஜங்கலி மகராஜை’ சந்தித்தார். அங்கிருந்துக் கிளம்பி ‘கிரினாருக்கு’ சென்று அங்கு ஸ்ரீ தத்தாத்திரேயரின் தரிசனத்தைப் பெற்றுக் கொண்டப் பின் ‘கங்கோத்தரி’, ‘ஹரித்துவார்’, ‘கேதார்நாத்’, ‘பத்ரிநாத்’, ‘வாரணாசி’, காசி , மாஹீர், ‘திருப்பதி’ மற்றும் ‘கனகாபீர்’ போன்ற அனைத்து இடங்களுக்கும் விஜயம் செய்தப் பின் சொந்த ஊரான கல்யாணை அடைந்தார். அவரைக் கண்ட பக்தர்கள் பெரும் ஆதரவு தந்து வரவேற்றார்கள். சில நாட்களில் மீண்டும் பயணத்தை துவக்கி ‘கேட்கி சங்கம்’ என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு பெருமை வாய்ந்த ஒரு சிவன் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தாழம்பூவை எடுத்துச் சென்று வணங்காவிடில் பலன் இல்லை என்று கூறுவார்கள். அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. ஸ்ரீ மாணிக் பிரபு அந்த ஆலயத்திற்கு சென்றபோது அங்கு தாழம்பூ கிடைக்கவில்லை. என்ன செய்வது என அனைவரும் குழம்பினார்கள். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாத ஸ்ரீ மாணிக் பிரபு ஆலயத்துக்குள் சென்றார். அவர் வந்ததைக் கேள்விப்பட்டதும் அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. அப்போது கூட்டத்தின் மத்தியில் இருந்து ஒரு விவசாயி வந்தார். அவர் கை நிறைய தாழம்பூ. அவற்றை ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் தந்து விட்டு கூடத்தில் போய் நின்று கொண்டார். அற்புதமாக பூஜை நடந்து முடிந்தது. பூஜை முடிந்தப் பின் அந்த தாழம்பூவைக் கொண்டு வந்த விவசாயி யார் என்பதைப் பார்க்க அனைவரும் அவரை தேடினார்கள். ஆனால் அவர் காணவில்லை. எங்கே சென்று விட்டார்?

அப்படிப்பட்ட மாயை ஏன் நடந்தது? எந்த ஒரு மகானும் தாம் வந்த காரியத்தை முடிக்காமல் சென்றது இல்லை. தமது மாய சக்திகளினால் அவர்களால் அதை நடத்திக் காட்ட முடியும். ஆனால் ஸ்ரீ மாணிக் பிரபுவிற்கு அப்படிப்பட்ட அதிசயத்தை நடத்திக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தத்தராக அவதரித்து இருந்த அவரை உலகிற்கு மேலும் அடையாளம் காட்டவே ஸ்ரீ தத்தர் அங்கு தாமே வந்து அதை நடத்திக் காட்டி உள்ளார் என்பதே உண்மை என்பது பிறகே அனைவருக்கும் தெரிந்தது. ஸ்ரீ மாணிக் பிரபுவின் புகழ் மேலும் பரவியது.

பூஜை முடிந்ததும் அங்கு இருந்த ஆல மரத்தின் அடியில் அமைந்து கொண்டு இருந்தபடி அனைவருக்கும் தரிசனம் தந்தார். அங்கு மேலும் ஒரு அதிசயத்தை நடத்திக் காட்டினார். கூட்டத்தில் இருந்த ஒருவரை அழைத்தார். ஒரு இடத்தைக் காட்டி அங்கே பூமியை தோண்டச் சொன்னார் . தோண்டிய அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது. அதை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயத்தை அமைக்கச் சொன்னார். ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆலயத்துக்கு தானே கும்பாபிஷேகமும் செய்தார். அதன் பின் அங்கிருந்துக் கிளம்பி பீதார் நகருக்கு செல்ல முடிவு செய்தார். அப்போது ‘கேடகி’ சங்கமத்தில் ‘நயல்கல்’ என்ற இடத்தில் இருந்த இருந்த தேஷ்முக் என்பவர் ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் தனது ஊருக்கும் வந்து மக்களுக்கு ஆசிர்வாதங்களை அளித்து விட்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அவர் அன்புத் தொல்லையை தாங்க முடியாமல் ஸ்ரீ மாணிக் பிரபு அவருடன் செல்ல சம்மதிக்க ராஜ மரியாதையுடன் அவரை ஒரு பல்லக்கில் அமர வைத்து தமது ஊருக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். பீதார் நகரில் இருந்து இரண்டு கல் தொலைவிலேயே இருந்த ‘ஜார்னி நரசிம்மா’ என்ற இடத்தை அடைந்தபோதுதான் அவர்களுக்கு தாம் வழி தவறி வந்துவிட்டது புரிந்தது. இது எப்படி நடந்தது? நாம் ‘நயன்கல்’லை நோக்கித்தானே போனோம் ….அதே வழியில்தானே இத்தனை நாட்களும் போனோம் என குழம்பியவர்கள் மீண்டும் அவரை தூக்கிக் கொண்டு வந்த வழியே செல்ல வழியில் ஒரு இடத்தில் பெரிய பாம்பு அவர்களது வழியை அடைத்துக் கொண்டு படமெடுத்து நின்றது. என்னைத் தாண்டிச் செல்லாதீர்கள் என்ற அச்சுறுத்தலோடு நின்றிருந்தது அந்தப் பெரிய பாம்பு. அதைக் கண்ட ஸ்ரீ மாணிக் பிரபு பல்லக்கை விட்டு இறங்கி வந்து அந்த பாம்பிடம் சென்றார். அதனுடன் அவர் எதோ பேசுவது போல தெரிந்தது. அதன் பின் மீண்டும் திரும்பி வந்து பல்லக்கில் ஏறிக் கொண்டவர் ‘அந்த பாம்பு நம்மை ஒன்றும் செய்யாது. கவலைப்படாதீர்கள். அது ஒரு சித்த புருஷர். என்னிடம் சில விஷயங்களை கூற விரும்பியதினால்தான் நம்மை தடுத்தது. ஆகவே பல்லக்கை தூக்கிக்  கொண்டு அதன் பின்னாலேயே தொடர்ந்து செல்லுங்கள். அது நமக்கு வழிகாட்டிக் கொண்டு செல்லும்’ எனக் கூறினார். அந்தப் பாம்பும் அவர்கள் செல்ல வேண்டிய இடம் வரை வழி காட்டிக் கொண்டு சென்றப் பின் மறைந்து விட்டது. அதன் பின் ‘ஜார்னி நரசிம்மாவில்’ தங்கினார் ஸ்ரீ மானிக் பிரபு. அங்கு அவர் தங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அது ஒரு விசேஷமான இடம். அங்குதான் ஒரு பழம் பெருமை வாய்ந்த விஷ்ணுவின் ஆலயம் உள்ளது. அங்கு நந்தி பகவான் விஷ்ணுவை பார்த்தபடி அமர்ந்து உள்ளார். சிவன் ஆலயங்களில் மட்டுமே காணப்படும் நந்தி அங்கு விஷ்ணுவை பார்த்தபடி உள்ளது விசேஷம் அல்லவா.

அத்தியாயம் – 8

 

பரமாத்மா
நான் பற்றிய தலைவா, என்னைப்  பார்.
படைப்புக் கடவுளை படைத்தவன் நீயே
யார் உன்னைப் பணியார்?
முடிவே இல்லாத மூலத்தின் மூலமே
சத்திய தேவன் ஜகன்னாதன் நீ.
உண்மை, இன்மை இரண்டிலும் உயர்ந்தவன் நீ,
அழிவில்லாதவன் நீ,
ஆத்மா தத்துவம், பூரண புருஷன்
பூமியின் மூலமும் அறிந்தவன் நீ
பரமபதம் நீ, உலகம் எங்கும்
பரவி நிற்பவனும் நீயே.

-பகவத் கீதையில் அர்ஜுனன்-

என்னைப் பார்என் சக்தியைப் பார்

ஸ்ரீ மாணிக்பிரபுவை மக்கள் அனைவரும் அவர் ஜார்னி நரசிம்மா என்ற அந்த இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும் என விரும்பினாலும் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மற்ற இடங்களில் உள்ளவர்களும் அவர் தமது பகுதிகளில் வந்து வசிக்க வேண்டும் என விரும்பினார்கள். இப்படி வேண்டுகோட்கள் வந்த இடங்கள் பல இடங்களிலும் பரவி இருந்தன. அவர்கள் அனைவருடைய வேண்டுகோட்களையும் ஸ்ரீ மாணிக் பிரபுவினால் தட்டவும் முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை. ஆனால் ஸ்ரீ மாணிக் பிரபு எவரையும் ஏமாற்ற விரும்பவில்லை. நான் நிச்சயம் வருவேன். எதிர்பார்த்து காத்திருங்கள் என்றே அனைவரிடமும் கூறுவார். பிரபுவின் சிஷ்யர்களோ இடைவிடாது அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தபடி தங்களது குருவின் உடல் நிலை குறித்தும் கவலை கொண்டு இருந்தார்கள்.அவரை சில காலம் ஒய்வு எடுக்கும்படிக் கூறியும் அவர் ஒய்வு எடுக்கவில்லை . காலம் ஓடியது . ஒரு நாள் ஜார்னி நரசிம்மாவில் ஸ்ரீ மானிக் பிரபு உறங்கிக் கொண்டு இருந்தார். மதிய வேலை. பீதார் நகரில் அன்றைக்கு எதோ ஒரு பண்டிகை. பல பக்தர்களுக்கு அந்த பண்டிகை தினத்தன்று தான் வருவதாக ஸ்ரீ மாணிக் பிரபு வாக்கு தந்து இருந்தார். அதனால் பீதார் நகரில் இருந்த அவர் பக்தர்கள் என்னும் பிரபு வாக்கு தந்தபடி வரவில்லையே என காத்து இருந்தார்கள்.

திடீர் என அவர்கள் அனைவரின் வீடுகளிலும் ஆரவாரம், மகிழ்ச்சி. ஸ்ரீ மானிக் பிரபு யாருடைய வீடுகளுக்கு எல்லாம் வருவதாக வாக்கு தந்து இருந்தாரோ அனைவரது வீடுகளுக்கும் சென்றார். எப்படி என்கின்றீர்களா? ஒரே நேரத்தில் அனைவரது வீடுகளுக்கும் சென்றார், அனைவருக்கும் ஆசி வழங்கியப் பின் சென்று விட்டார். ஒருவர் வீட்டிற்குச் சென்றது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் பிரபு அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டு திரும்பிப் போனதுமே அது பற்றிய செய்தி ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு தெரிந்தது. பிரபு என் வீட்டிற்கு இத்தனை மணிக்கு வந்தார், இத்தனை மணிக்கு வந்தார் என அனைவரும் சொல்லிக் கொள்ள அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம் அவர் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில்தான் இருந்துள்ளார். ஒருவரை ஒருவர் நம்பாமல் மற்றவர்கள் வீடுகளுக்கு சென்று அங்கு சிதறிக் கிடந்த அரிசி, பூசைப் பொருட்கள், அனைத்து வீட்டினருக்கும் குருஜி தந்திருந்த ஒரே மாதிரியான பிரசாதம் என அனைத்தையும் கண்டப் பின்னரே  பிரபுவின் லீலையை நம்பினார்கள்.

பீதாரில் இந்த நிலை இருக்க ஜார்னி நரசிம்மாவிலும் அந்த செய்தி பரவியது. அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றார்கள். ஏன் எனில் ஜார்னி நரசிம்மா பீதாரில் இருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ளது. அங்கு சென்று விட்டு திரும்ப குறைந்தது இரண்டு மணிநேரம் ஆகும். ஆனால் ஸ்ரீ மாணிக் பிரபுவோ இங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார். எப்படி ஒருவருக்கும் தெரியாமல் வாகன வசதி கூட இல்லாத அந்த இடத்தில் இருந்து பிரபுஜி அந்த நகருக்கு சென்று விட்டு திரும்ப வந்து இருக்க முடியும்? பாமர மக்கள் இப்படி எல்லாம் குழம்பிக் கொண்டு இருந்தாலும் மகான்களை பற்றி அறிந்து உள்ளவர்களுக்கு அது புரியும். மாபெரும் மகான்களினால் அப்படிப்பட்ட காரியங்களை செய்ய முடியும். ஆனால் அவர்கள் அதை தினம் தினம் செய்து காட்ட மாட்டார்கள். எப்போதாவது குறிப்பிட்ட காரணங்களுக்காக அதை செய்வது உண்டு. பீதரில் தரிசனம் கொடுத்த  ஸ்ரீ  மாணிக் பிரபு உறக்கம் கலைந்து  எழுந்தார். உடம்பெல்லாம் பெரிய பயணம் செய்து விட்டு வந்ததைப் போல களைப்பு காணப்பட்டது. அவரைக் காவல் காத்துக் கொண்டு இருந்த வெங்கம்மா களைப்புடன் இருந்த அவரை என்ன ஆயிற்று என்று கேட்டாள். புன்முறுவல் மட்டுமே தந்தார் ஸ்ரீ மாணிக் பிரபு. அந்த புன்முறுவலின் அர்த்தம் பீதார் நகரின் செய்தி கிடைத்ததைப் பின்னரே அவளுக்குப் புரிந்தது. வேறு என்ன செய்ய முடியும்? வாக்கு தந்தப் பின் மகான் மக்களை ஏமாற்றுவரா? இது வெங்கம்மாவின் மறைவுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி.

இயற்கையின் மற்றொரு நியதி என்ன என்றால் ஒருவர் எத்தனைதான் மக்களுக்கு நன்மைகள் செய்தாலும் அவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தங்கத்தை உறைத்துப் பார்த்தால்தானே அது தங்கமா என்பது புரியும். ஜார்னியின்  உள்ளூரில் இருந்த சில முஸ்லிம் மத வெறியர்கள் அவர்களின் மதத்தை சேர்ந்த சில முஸ்லிம்கள் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் செல்வதைக் கண்டு பொறாமை கொண்டார்கள். ஸ்ரீ மாணிக்பிரபுவை பொறுத்த வரையில் அவர் எந்தவிதமான ஜாதி பேததையோ வைத்து இருக்கவில்லை. ஆகவே அந்த பொறாமைக் கொண்டு முஸ்லிம்கள் அவருக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் வேண்டும் என்றே சில இனிப்பு  பதார்த்தங்களுடன் இறைச்சியை கலந்து வைத்து, அந்த தட்டை மூடி பிரசாதம் போல அனைவருக்கும் விநியோகிக்க அதைக் கொண்டு வந்தார்கள். தட்டை துணியைப் போட்டு மூடி இருந்ததினால் இறைச்சியை உள்ளே வைத்து இருந்தது வெளியில் மாணிக்தெரியவில்லை. ஸ்ரீ மானிக் பிரபுவோ  எவர் பிரசாதத்தைக் கொண்டு வந்தாலும் அதை உடனேயே மற்றவர்களுக்கு விநியோகம் செய்து விடுவார். அன்றும் அது போல மூடி கொண்டு வரப்பட்ட தட்டில் இருந்து பிரசாதத்தை எடுத்து மக்களுக்கு கொடுக்கத் துவங்கினார். அதைக் கொண்டு வந்து இருந்த முஸ்லிம்  வெறியர்கள் அவர் தந்த பிரசாதத்தைப் பார்த்து உறைந்து நின்றார்கள்.  தட்டு முழுவதும் பழங்களும் இனிப்புக்களுமாகவே இருந்தன. அதைக் கண்டு பயந்து போனவர்கள் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் சென்று மன்னிப்புக்  கோரினார்கள். அவர்களை ஸ்ரீ மானிக் பிரபு மன்னித்து அனுப்பினார். அது முஸ்லிம் மக்கள் நிறைந்து இருந்தப் பகுதி. அந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மக்களிடையே ஸ்ரீ மாணிக் பிரபுவின் புகழ் பெருத்தும் பரவியது.  முஸ்லிம் மக்களால் வணங்கப்பட்டு வந்தவர் மகபூப் சுப்பானி என்பவர். இறந்து போய் இருந்த  இருந்த அந்த மகானின் அவதாரமாகவே ஸ்ரீ மாணிக் பிரபுவும் தம்மை அருள்விக்க  அங்கு வந்திருந்ததாகவே அந்த மக்கள் நம்பினார்கள்.

அந்த நிகழ்ச்சியும் ஸ்ரீ மாணிக் பிரபுவிற்கு திருப்பு முனையாகவே அமைந்தது. இனியும் ஊர் ஊராக சுற்றிக் கொண்டு இருப்பதில் என்ன பயன் ஏற்படும்? அதைவிட தமது பக்தி மார்க்கத்தைப் பரப்ப ஒரு ஸ்தாபனம் இருந்தால் நல்லது அல்லவா என நினைத்தார். அது மடமாகவோ இல்லை ஒரு சமஸ்தானமாக இருந்தால்கூட பரவாக இல்லை என அவர் நினைத்தார். பெருகி வரும் அக்கிரமங்களை எதிர்த்து அவர்களை ஒடுக்க தனது முழு அவதாரத்தையும் காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதை உணர்ந்தார். உடனடியாக பல்லக்கில் ஏறிக் கொண்டு ‘கல்யாண்’ நகரை விட்டு கிளம்பி பீதாரை வந்து அடைந்தார்.  ‘ஹும்னபாது’ எனும் இடத்தில் இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. அங்கிருந்து ‘கத்வந்தரி’ என்ற ஊருக்கு செல்ல குறுகலான  பாதையே இருந்தது. நடக்கவே கஷ்டப்பட வேண்டும். இரு புறமும் செடிகள், கொடிகள் என பாதையை மறைத்து நின்றது. அதனால் தன்னை தூக்கி வந்தவர்களின் சுமையைக் குறைக்க தானும் இறங்கி அவர்களுடன் நடந்து செல்லலானார். தூரத்தில் ஒரு சிவன் ஆலயம் தெரிந்தது. அதை வில்வமரங்கள் சூழ்ந்து இருந்தன. அங்கு சென்று ஒய்வு எடுத்தார் ஸ்ரீ மாணிக் பிரபு. அப்போது அங்கு ஒரு வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் ஒய்வு எடுத்துக் கொண்டு இருந்தபோது அங்கு இருந்த இரண்டு வில்வ மரங்கள் பற்றி எரிந்தன. அனைவரும் திடுக்கிட்டு எழுந்து கொள்ள அனைவரையும் சாந்தப்படுத்தினார் ஸ்ரீ மாணிக் பிரபு. அவர்களிடம் அந்த இரண்டு மரங்களும் இரண்டு பிரும்ம ராக்ஷசர்கள் என்றும் தாம் அங்கு வந்ததினால் அவை அழிந்து விட்டதினால் அந்த மரங்கள் தீப்பிடித்து அழிந்ததாகவும் கூறினார். அதன் பின் காலை அங்கு இருந்த நதியில் அவர் குளித்தப் பின் அருகில் இருந்த அத்தி* மரத்து அடியில் தங்கி  இளைப்பாறினார். எப்போதுமே அத்தி* மரம் (*கருநெல்லி மரம் என்றும் கூறுகின்றார்கள்) ஸ்ரீ தத்தருக்கு பிடித்தமான ஒன்று என்றும் அதன் அடியில்தான் ஸ்ரீ தத்தர் இளைப்பாறிக் கொண்டே இருப்பார் என்றும் கூறுவார்கள். அதை கல்பக விருஷம் என்பார்கள். அதற்கும் ஒரு கதை உண்டு.

முன்னொரு காலத்தில் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹ்ரண்யகசிபுவை  அழித்தபோது அவன் உடலில் இருந்த விஷம் கலந்த ரத்தம் திருமாலின் கை விரல்களில் ஒட்டிக் கொள்ள அவர் விரல்கள் அதன் வெட்பத்தினால் தகித்தன. உடனேயே மகாலஷ்மி அந்த வெப்பத்தின் சூட்டை தணிக்க கருநெல்லி மரத்தில் இருந்து பறித்த பழங்களின் சாற்றை அவர் விரல்களில் தடவ அந்த சூடு மறைந்ததாம். அதன் பொலிவும் மீண்டும் திரும்பியதாம். அது குறித்து ஒரு பாடல் உண்டு. அது:

அந்த அசுரனின் இடைப் பகுதியில் இருந்து
 
கடுமையான விஷம் கலந்த சதைப் பகுதியின் ரத்த ஓட்டம்
பயங்கரமாக எரிந்து கொண்டு  இருக்கும்
காட்டுத் தீயைப் போல
அந்த அரக்கனின் நெஞ்சை இரண்டாகப் பிளந்த
சர்வேஸ்வரரின் விரல்களை
ரத்தத்தினால் நனைந்து போக வைக்க
அவர் விரல்களும் வெந்து போயின

 அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த கரு நெல்லி மரத்து நிழல் அவர் மனதுக்கு அமைதி தந்தது. அவர் எண்ணம் எண்ணமும் தீவிரம்  அடைந்தது. எரிந்து போன வில்வ மரங்களின் நிகழ்ச்சியும் கருநெல்லி மர நிழலும் மனதில் உறுதியை தந்தது. இங்குதாம் தம்முடைய சமஸ்தானத்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தார். அதுவே பின்னர் ஸ்ரீ மாணிக் நகர் என்ற இடமாக மாறியது. தன்னை மக்கள் அங்கு வந்து தரிசனம் செய்யவும் தனது சக்தியை வெளிப்படுத்தவும் அதுவே சரியான இடம் என ஸ்ரீ மாணிக் பிரபு முடிவு செய்துவிட்டதைக் காட்டியது.

அத்தியாயம்-9

இறைவன் ஒருவனே
அவனே
இவன் என
எல்லா நிலையையும் எனக்கே ஆக்கி
என்னுடன் இருந்து, என்னுடன் கலந்து
என்னுள் நிறைந்த, எல்லோரையுமே
ஜனனம், சம்சாரம், மரணம் எனும்
கடலைக் கடந்து, கரை சேர்த்திடுவேன்.
நின் மனம் என்பால் நிலைபெற வைப்பாய்,
என்னையே நினைத்திட வைப்பாய்

-பகவத் கீதையில் கண்ணன்-

ஆன்மீக மையம் உருவானது

ஹும்னபாத்தில் பக்தி மார்க்க சமஸ்தானத்தை நிறுவ பிரபு முடிவு செய்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. அந்த இடம் பொருளாதார, மத, அரசியல் பேதங்களினால் மிகவும் சீரழிந்து இருந்தது. அங்கு பெருமளவில் முஸ்லிம் மக்களே அக்கம் பக்கத்து நகரங்களை ஆண்டு வந்தார்கள். அவர்களில் பலர் முஸ்லிம் மத வெறியர்கள். அதனால் இந்துக்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள். அங்கு இருந்தவர்களோ கட்டாய மத மாற்றத்துக்கு உள்ளானார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவையாக இருந்தது. அது மட்டும் அல்ல. அங்குதான் இரண்டு வில்வ மரங்களும் எரிந்து விட்டன. அப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில் அங்கு சமஸ்தானத்தை நிறுவுவது சரியா என ஸ்ரீ மாணிக்பிரபுவை சுற்றி இருந்தவர்கள் சந்தேகத்தை எழுப்பினாலும் ஸ்ரீ மானிக் பிரபு தீர்மானமான முடிவுடன் இருந்தார். அங்கு இரண்டு நதிகள் இணைகின்றன. அது பிரும்மராக்ஷசர்கள் எரிந்து போன இடம். ஆகவே மத வெறியர்களின் மனதை அழிக்க வைக்கும் இடம் இதுவே என அவர் நம்பினார். அந்த இடத்தில்தான் ஸ்ரீ மானிக் பிரபு ஆன்மீக மையம் அமைக்க  உள்ளார் என்பதை தெரிந்து பலரும் அங்கு வரலாயினர். முதலில் அங்கு ஒரு ஓலைக் குடுசை அமைக்கப்பட்டு மையம் ஆரம்பிக்கப்பட மெல்ல மெல்ல அந்த மையம் பெரியதாகத் துவங்கியது. பிரபுவின் மகிமையினால் மையம் பெரியதாகிக் கொண்டே இருந்தது. அங்கு அமர்ந்தபடி பிரபு பிரசங்கம் செய்வார், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். அதனால் அந்த இடத்தை சுற்றி இருந்த அனைத்துப் பகுதிகளிலும் ஆன்மீக சூழ்நிலை நிறைந்தது. ஏழை பணக்காரன் என்ற பேதம் இன்றி அனைவரும் அங்கு வந்து பஜனைப் பாடல்களைப் பாடினார்கள். பக்தி பிரவாகத்தினால் அந்தப் பகுதி முழுகியது. பக்தர் கூட்டம் அலை மோதியது.

காலம் வேகமாக சுழன்றது . ஸ்ரீ மாணிக் பிரபுவின் தாயாரும் பிற உறவினர்களும் அங்கு வந்து சேவை செய்யத் துவங்கினார்கள். ஆகவே அனைவரும் தங்குவதற்கு ஏற்ப பெரிய இடம் கட்டவேண்டியது ஆயிற்று. பெரிய பண்டிதர்களை அழைத்து, நல்ல நாள் பார்த்து அடிக்கல் நட்டு கட்டிடங்கள் கட்டப்படத் துவங்கின. சில மாதங்களிலேயே அந்தப் பகுதி முழுவதும் சிறிய ஆலயங்களும் கட்டிடங்களும் எழுந்தன. கல்யாண் நகரில் நவாப்பிடம் வேலை பார்த்து வந்த ஸ்ரீ மானிக் பிரபுவின் சகோதரரும் வேலையை  ராஜினமா செய்துவிட்டு அங்கு வந்து விட்டார். அது போல மற்றொரு சகோதரரும் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து விட்டார். ஆன்மீக மையம் அமைக்கப்பட்ட பின் சன்யாசிகளும் சாதுக்களுமே அங்கு தங்க அனுமதிக்கபட்டு இருந்தார்கள். ஆனால் ஸ்ரீ மாணிக் பிரபுவின் குடும்பத்தினர் அங்கு வந்து விட்ட பின் அதன் விதிகளை தளர்த்த வேண்டியதாயிற்று.

பிரபுஜி பிரசங்கம் செய்து வந்த இடமும் பெரியதாக்கபட்டு பல கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்பட்டன. பிரபுஜி வந்ததும் அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் பிரபு வந்தனம் பாட வேண்டும். அந்தப் பாடலை இயற்றியவர் அவருடைய சகோதரர் ஸ்ரீ நரசிம்மன் என்பவரே. வந்து அமரும் இடங்கள் பண்டிதர்கள், மகான்கள், பாட்டு பாடுவோர் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டன.  ஸ்ரீ மாணிக் பிரபு ராஜ யோகி என்பதினால் அவர் பகட்டான உடைகளை உடுத்திக் கொண்டே பிரசங்கத்துக்கு வந்தாலும் மற்ற நேரங்களில் அவர் எளிய உடைகளை அணிவதையே விரும்பினார். பிரசங்கத்தின் இடையே வினா விடைகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அனைவரும் கேள்விகளை தொடுப்பார்கள். அவற்றுக்கு பிரபுஜி அருமையான விளக்கத்தை தருவார். அவருக்கு எங்கிருந்து கிடைத்தது அத்தனை ஞானம் என அனைவரும் வியப்பார்கள்.

அங்கு வந்து அவரை வணங்கியதுமே தமது மன பாரம் குறைவதை பலரும் கண்டார்கள். சூரிய ஒளியைப் போன்றவர் அவர். முக்காலத்தையும் உணர்ந்தவர். ஒரு மகான் என்றால் இரக்க குணம் இருக்கும். முன்கூட்டியே அனைத்தையும் அறிந்திடுவார்கள். சகிப்புத் தன்மை, பொறுமை, பரோபகாரம் என அனைத்தும் இருக்கும். எவரையும் அவர்கள் வெறுக்க மாட்டார்கள். இவையே ஒரு மகானின் அணிகலன்கள் என்பதாக பாகவதப் புராணம் கூறுகின்றது. ஆகவே அவை அனைத்தையும் ஒன்று சேர பெற்று இருந்த ஸ்ரீ மாணிக் பிரபுவை மகான் என அழைத்தார்கள் என்றால் அதில் வியப்பதற்கு என்ன உள்ளது?

ஸ்ரீ மாணிக் நகர் மையத்துக்கு எங்கிருந்து பணம் வந்தது, எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. முன் பின் அறியாதவர்கள் வந்து பொன்னையும் பொருளையும் கொட்டிவிட்டுச் சென்றார்கள். அதனால் அந்த சன்னிதானத்தில் எதற்குமே குறை இல்லாமல் இருந்தது.

 அத்தியாயம் – 10

தேவர்களின் குரு பிரஹச்பதியும் நானே
சேனாதிபதிகளில் கந்தன் நானே
தாவிவரும் நீர்நிலையின் கடலும் நானே
தவ முனிவர் பரம்பரையில் பிருகு முனிவரும் நானே
நாவில் வரும் சொற்களின் ஓலமும் நானே
நல் வேள்வி வகையில் ஜெபமும் நானே
-பகவத் கீதையில் கண்ணன் –

திருவிளையாடல்கள்  

ஸ்ரீ மாணிக் பிரபுவின் மகிமைகளை அறியாமல் அவரை சீண்டிப் பார்த்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்களும், மோதி அடிபட்டதும் பலர் உண்டு. அவர் பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். அற்புதங்களைக் காட்டி உள்ளார். மருத்துவர்கள் இறந்து விட்டதாக சான்று இதழ் தந்தவர்களையும் உயிர் பெற்று எழுந்து வைக்க வைத்து உள்ளார்.  அவர் நண்பரான கோவிந்தன்  என்பவர் உயிர் பிழைத்தக் கதை அதற்கு சான்று.

அது போல பீமாபாய் என்ற பெண்மணிக்கு மழலை செல்வம் கிடைக்க அருளிய கதை, மாட்டு இறைச்சியை தின்பண்டங்களோடு  கலந்து வந்து தந்த முஸ்லிம் வெறியர்களின் கொட்டத்தை அடக்கியது போன்ற பலவும் உண்டு. அவற்றின் விளைவாக  ஸ்ரீ மாணிக் பிரபுவின் புகழ் மேலும் பரவிக் கொண்டே இருந்தது.

ஒரு முறை ஆன்மீக மையம் அமைக்கத் துவங்கிய காலகட்டத்தில் பெரிய யாகம் நடைபெற்றது.  அந்த யாகத்திற்கு பல பண்டிதர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரும் யாகத்திற்கான பொருட்களை தாமே கொண்டு வர வேண்டும் என்ற ஏற்பாடும் செய்யப்படட்டு இருந்தது.  ஸ்ரீ மாணிக் நகர் வரும் வழியில் கொள்ளையர் கூட்டம் உண்டு.  பண்டிதர்கள் யாகத்திற்கு வேண்டிய சாமான்களை தம் தலை மீது வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்கள். அப்போது வழியில் வந்த ஒரு திருடர் கூட்டம் அவர்களிடம் வந்து அனைத்து பொருட்களையும் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டது.  அந்த பொருட்களை தாங்கள் யாகத்திற்காக எடுத்துச் செல்வதாகக் கூறி கெஞ்சியும்  அந்த திருடர்கள் மசியவில்லை. கண்களில் நீர் மல்க அந்த பண்டிதர்கள் மானிக் பிரபுவிடம் சென்று நடந்ததைக் கூறி அழுதார்கள். ஸ்ரீ மாணிக் பிரபு அவர்களிடம் கவலைப்பட வேண்டாம் எனவும் யாகத்திற்கான பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் மறுநாள் வந்துவிடும் என அவர்களை தேற்றி அனுப்பினார். இதற்கு இடையில் காட்டில் அந்தப் பொருட்களை கொள்ளையடித்த திருடர்கள் தாம் கொள்ளையடித்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் எத்தனை தூரம் ஓடியும் அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த கொள்ளையடித்த இடத்திற்கே வந்து கொண்டு இருப்பதைக் கண்டார்கள். எத்தனை ஓடியும், எந்தப் பக்கம் போனாலும் போக வழி தெரியவில்லை. களைத்துப் போனவர்கள் ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் மனதார மன்னிப்பு கேட்டு கதறினார்கள்.  தாம் கொள்ளையடித்தப் பொருட்களை  திரும்ப யாக சாலயிலேயே கொண்டு தந்து விடுவதாக சத்தியம் செய்தார்கள்.  அவ்வளவுதான் அடுத்த கணம் சிறு குகை வழிபோல ஒரு வழி அவர்கள் கண்ணில் பட்டது. அதன் வழியே சென்றவர்கள் ஆன்மீக மையத்தின் வாயிலை அடைந்து அங்கு இருந்த பண்டிதர்களிடம் தாம் கொள்ளையடித்தப் பொருட்களை திருப்பித் தந்தார்கள். யாகமும் நன்கு நடந்து முடிந்தது.

இன்னொரு நிகழ்ச்சி நடந்தது. மெஹபூப் பாஷா என்ற நிஜாம் ஒருவருக்கு  முதுகில்  சிறு கட்டி வந்தது.  அது மெல்ல மெல்ல பெரியதாகிக் கொண்டே சென்று அவரை மிக்க வேதனைக்கு உள்ளாக்கியது.  வலி தாங்க முடியவில்லை. அப்போது அவர் நண்பர் ஒருவர் மாணிக் நகரில் சாது ஒருவர் வந்து உள்ளதாகவும் அவரை சந்திக்குமாறும் கூற அவரும் அங்கு சென்றார்.  அந்த சாது வேறு யாரும் அல்ல. ஸ்ரீ மானிக் பிரபுதான். அந்த நிஜாம் ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் தனக்கு வந்துள்ள வியாதி குறித்துப் பேசினார். அதுமட்டும் அல்லாமல் மனம் விட்டும் தம்மைப் பற்றிப் பேசினார். தன்னால் வழியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுவதாக அவர் கூற  ஸ்ரீ மாணிக் பிரபுவும், அந்த வியாதியை குணப்படுத்த அவருடைய உடலில் தான் சிறிது நேரம் தங்கி இருப்பேன் எனவும், அதே நேரத்தில் நிஜாமின் ஆத்மா தன் உடலில் தங்கி இருக்கும் எனவும், அதன் பின் மீண்டும் அவரவர் உடலில் அவரவர் சென்று  விடுவார்கள் எனவும் கூற அதை நிஜாம் ஏற்றுக் கொண்டார்.  ஸ்ரீ மாணிக் பிரபு கூறியது போலவே  அவர்களது  ஆத்மா மற்றவர்களின்  உடலில் புகுந்துக் கொண்டு சிறிது நேரம் இருந்து விட்டு மீண்டும் அவரவர் உடலில் திரும்பியதும்  நிஜாம் தனது முதுகில் இருந்த கட்டி மறைந்து இருந்ததைக் கண்டார். குணம் அடைந்த நிஜாமும் ஊருக்குத் திரும்பியதும் பிராமணர்கள் அணிந்து கொள்ளும் மாலையைப் போல தங்க மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டார். பிரபுவின் சீடர்களுக்கு நிறைய தானம் தந்தார்.  அது மட்டும் அல்ல அந்த நிஜாமின் உடலில் சிறுது நேரம் ஸ்ரீ மாணிக் பிரபுவின் ஆத்மா தங்கி இருந்ததினால் அவர் விசேஷ சக்தியைப் பெற்றவராக இருந்தார். அதனால் பாம்புக் கடித்தவர்களின் உடலில் இருந்து அந்த விஷத்தை எடுக்கும் விசேஷ சக்தியைப் பெற்று பலரை குணப்படுத்தி உள்ளாராம்.

இன்னொரு நிகழ்ச்சி நடந்தது.  அந்த ஊரில் ஒரு மகா கஞ்சன் இருந்தார். அவரிடம்  இருந்து சல்லிக் காசுகூடப் பெற முடியாது.  அவன் ஸ்ரீ மானிக் பிரபுவிடம் சென்று  தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி உள்ளது என்றும், அது நடந்துவிட்டால்  ஒரு பிடி சக்கரையை தானமாக தருவதாக வேண்டிக் கொண்டான். ஸ்ரீ மாணிக் பிரபுவின்  அருளினால் எது நடக்க இயலாதோ அது அவனுக்கு நடந்துவிட்டது.  ஆகவே பெரும் லாபம் பெற்ற அவன் அந்த மகிழ்ச்சியில்  ஒரு கைப்பிடி சக்கரை கொடுப்பது சரியாக இருக்காது என்று எண்ணியவனாக  பல மூட்டை சக்கரையை தன்னுடைய வேலை ஆட்கள் மூலம் ஸ்ரீ மானிக் பிரபுவிற்கு சன்மானமாக அனுப்பினார். அது அவர் செய்த பெரும் தவறு.  தானே கொண்டு சென்று கொடுத்து இருந்தால் கெளரவமாக இருந்திருக்கும்.  ஸ்ரீ மாணிக் பிரபு தனக்கு அந்த கஞ்சன் அனுப்பி இருந்த சக்கரை மூட்டைகளைப்  பார்த்தார் . அதில் இருந்து ஒரே ஒரு கைப்பிடி சக்கரையை மட்டுமே எடுத்துக் கொண்டு மீதியை அந்த கஞ்சப் பிரபுவிற்கே அனுப்பி விட்டார்.  தன் தவறை உணர்ந்த அந்த வியாபாரியும் அவமானப்பட்டு ஓடி வந்து ஸ்ரீ மாணிக் பிரபுவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

பல முறை தன் முன் வந்து நிற்கும் சில ஏழைகளின் வறுமை நிலையைக் கண்டு பொறுக்காத ஸ்ரீ மாணிக் பிரபு தன் படுக்கை அடியில் கையை விடுவார். நிறையப் பணம் வரும். அதை வந்தவர்களுக்கு தந்துவிடுவார்.  இதைப் பல முறைக் கண்ட ஒருவன் ஒரு நாள் பிரபுஜி இல்லாத நேரத்தில்  சென்று அவர் படுக்கைக்கு அடியில் எத்தனை பணம் உள்ளது என சோதனை செய்ய அதன் அடியில் ஒன்றுமே இல்லாததைக் கண்டு வியந்தான். மீண்டும் படுக்கையை அப்படியே பழையபடி வைத்து விட்டான் . சற்று நேரத்தில் தன்னைக் காணவந்த ஒரு ஏழைக்கு மீண்டும் படுக்கை அடியில் கையைவிட்டு ஸ்ரீ மாணிக் பிரபு பணத்தை எடுத்துத் தந்தார்.  அதை கண்ட சோதனை போட்டவன் வெட்கம் அடைந்து, ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் சென்று அவர் இல்லாத நேரத்தில் அவர் படுக்கையை தான் சோதனை போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை என்ற விவரத்தைக் கூறி அவரிடம் தான் செய்த  செயலுக்கு மன்னிப்புக் கேட்டான்.

இப்படியாக பல சம்பவங்களை நேரடியாக கண்டு அனுபவித்தவர்கள் பலர் உண்டு.  பிரபுவின் எதிரில் சென்று அமர்ந்தால் தனது  துயரங்கள் விலகியதைக் கண்டேன் என அவருடைய ஒரு பக்தர் கூறினார்.  பிரபுவைக் குறித்து மற்றும் ஒருவர் இப்படியாக எழுதினர் ‘எங்கிருந்து இடைவெளி விடாமல் அள்ளிக் கொட்டுகின்றது அவர் தரும் பொருளும் பணமும் என்பது தெரியவில்லை ? அவர் படுக்கை அடியில் கைவிட்டாலோ கைநிறையப் பணம் வருகின்றது. அடுத்த நிமிடம் அதை எதிரில் உள்ளவருக்கும் கொடுத்து விடுகிறார்.  அவர் அமர்ந்த இடத்தை தோண்டித் துருவிப் பார்த்தாலும்  ஒன்றுமே கிடைப்பது  இல்லை. ஆனால் அவர் எப்போது அங்கு வந்து அமர்ந்தாலும் அனைவருக்கும் பசி  தீரும்வரை மீண்டும் மீண்டும்  அள்ளியள்ளித் தருகின்றாரே அதுவே வியப்பானது.

 அத்தியாயம் – 11

ஒன்றாகக் கூடுங்கள், ஒன்றாகிப் பேசுங்கள்.
உங்கள் அனைவர் மனமும்
ஒன்றினை நோக்கியே இருக்கட்டும்.
மூவுலக தேவர்களும்
ஒன்றாகி அடையும் இன்பத்தை
உங்கள் பக்தி மார்கங்களும்
உங்கள் சந்திப்பும் காட்டட்டும்.
உங்கள் மனதை ஒன்றாக்குங்கள்.
உங்கள் ஆசிகளும் ஒன்றாகியே இருக்கட்டும்
அதன் பயனாக
அனைவருமே ஆசி பெற்று
நல்வாழ்வு பெறட்டும்
-ஒரு வழிப்போக்கன் கவிதை

ஸ்ரீ மாணிக் பிரபு, மன்னர்கள் மற்றும் மகான்கள்

சகலமாதா சம்பிரதாயம் என்பதை பிரபுஜி முழுமையாக ஏற்றுக் கொண்டார். அதில் ஒருவருக்குக் கூட அவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. அவரை ஒரு அவதார புருஷராகவே ஏற்றுக் கொண்டார்கள். பிரபுஜியின்  வாழ்கையில் பல சம்பவங்கள் நடந்தேறி உள்ளன. அவரை பல மகான்கள் சந்தித்து உள்ளார்கள். அவர்களைப் பற்றி முழுமையாக கூற முடியாது என்பதினால் ஜாடை மாடையாக மட்டுமே கூற இயலும். ஒரு முறை சிருங்கேரி மற்றும் ஹம்பி ஸ்ரீமடாதிபதிகளுக்கு இடையே ஒரு கருத்து வேற்றுமை தோன்றியது. நிஜாம் மன்னர் ஆட்சி செய்து வந்த பகுதிகளில் எந்த மடத்தினர் சென்று ஸ்ரீ ஆதி சங்கரரின் புகழைப் பரப்புவது என்ற சர்ச்சை அனாவசியமாக பெரியதாயிற்று. ஹம்பி ஸ்ரீ சங்கராச்சாரியார் தான் சுதந்திரமானவர் என்றும் ஆகவே சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு கட்டுப்பட்டவர் அல்ல என்று  கூறிக் கொள்ள  சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ நரசிம்ம பாரதி VIII என்பவரோ  ஹம்ரி ஸ்ரீசங்கராச்சாரியாரின் கூற்று தவறு, அவர் எதை செய்தாலும் தம்முடைய மடத்தின் அனுமதியைப் பெற்றே செய்ய வேண்டும் எனக் கட்டளை இட்டார். அந்த தகராறு பல விதமான சர்ச்சைகளைக் கிளப்பியதினால் இரண்டு மடாதிபதிகளும் தமது வேற்றுமையைக் களைய ஸ்ரீ மானிக் பிரபுவை அணுகினார்கள். ஸ்ரீ மாணிக் பிரபுவும் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்டப் பின் சிருங்கேரி மடத்தின் ஸ்ரீ நரசிம்ம பாரதி VIII அழைத்து அவருக்கு சம்பிராதய வரவேற்பை தந்தப் பின் நீண்ட நேரம் அந்தப் பிரச்சனைக் குறித்துப் பேசினார். அதன் பின் ஸ்ரீ மாணிக் பிரபு ஹம்ரி ஸ்ரீ சங்கராச்சாரியாரிடமும் தனிமையில் பேசிய  பின் இருவரும் ஏற்கும் விதமாக ஒரு சமாதான உடன்படிக்கையில் ஸ்ரீ மாணிக் பிரபு முன்னிலையில் இருவரும் கையெழுத்து இட்டுக் கொண்டார்கள். அந்த பிரச்சனை சுமுகமாக முடிந்தது. இன்றுவரை அந்த இரண்டு மதத்தினரும் அந்த உடன்பாட்டின்படி தத்தம் கடமைகளை செய்கிறார்கள். ஆனால் அதன் சாரத்தை மூன்று மடாதிபதிகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஸ்ரீ மாணிக் பிரபு சமஸ்தானமோ மற்ற மடாதிபதிகளோ இன்றுவரை வெளியிடவில்லை.

மராட்டிய மக்களினால் பெரிதும் மதிக்கப்படும் தத்த அவதாரமான ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள்   ஸ்ரீ மாணிக் நகரில் தங்க முடிவு செய்த போது அதை ஸ்ரீ மானிக் பிரபு அனுமதிக்கவில்லை. ஸ்ரீ  அக்கல்கோட் ஸ்வாமிகள் ஸ்ரீ   தத்தரின் அவதாரமாக அவதரித்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எனில் அக்கல்கோட்டிற்கு சென்று தங்கி அங்கு பணி புரிய வேண்டும் என அறிவுறுத்தினார் ஸ்ரீ மாணிக் பிரபு என்ற செய்தி உள்ளதினால்தானோ என்னவோ அக்கல்கோட்டிற்கு சென்று ஸ்ரீ  அக்கல்கோட் ஸ்வாமிகளை வணங்கியவர்களை ‘ஸ்ரீ மாணிக் நகருக்குச் சென்று என்னுடைய மூத்த சகோதரரையும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்லுங்கள்’ என அக்கல்கோட் ஸ்வாமிகள் கூறுவது உண்டு என்று கூறுகிறார்கள்.

அது போலவே ஸ்ரீரடி சாயி பாபா பற்றிய ஒரு செய்தியும் உள்ளது. ஸ்ரீ  சாயிபாபா சீரடிக்கு செல்லும் முன்னர் ஸ்ரீ மாணிக் நகருக்கு வந்தாராம். ஒரு பகீரைப் போன்று ஒரு குடுவையை எடுத்துக் கொண்டு ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் சென்று ‘பிரபுஜி, இதில் ஏதாவது போடுங்கள்’ என்றாராம். அப்போது ஸ்ரீ மானிக் பிரபுவின் அருகில் அமர்ந்து இருந்த ஸ்ரீ மாணிக் பிரபுவின் சகோதரர் ஸ்ரீ தத்தா சாகேப் என்பவரைப் பார்த்து ஸ்ரீ மாணிக் பிரபு கூறினாராம் ‘அவர் கூறுவதை செய்’. ஸ்ரீ தத்தா சாகேப் அந்த குடுவையில் எத்தனைப் பணம் போட்டாலும் அது நிறையவே இல்லையாம். பயந்து போனார்  ஸ்ரீதத்தா சாஹேப். அவர் ஸ்ரீ மாணிக் பிரபுவைப் பார்க்க ஸ்ரீ மாணிக் பிரபு புன்முறுவல் செய்து விட்டு எழுந்துப் போய் இரண்டு பேரிச்சம் பழங்களையும், சிறிது பூக்களையும் கொண்டு வந்து அதில் போட குடுவை நிரம்பி வழிந்ததாம். அதை செய்தப் பின் ‘சாயி எடுத்துக் கொள்’ என்று ஸ்ரீ மானிக் பிரபு கூற, ‘இது எனக்குப் போதும்’ என ஸ்ரீ  சாயி பாபா கூறிவிட்டு அந்தக் குடுவையை தலைகீழாக கவிழ்க்க அதில் இருந்து ஸ்ரீ தத்தா சாகேப் போட்ட பணத்தை விட அதிக பணம் கீழே கொட்டியதாம். அதன் பின் ஸ்ரீ  சாயிபாபா ஸ்ரீ மாணிக் பிரபுவிடம் தனிமையில் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தப் பின் கிளம்பிச் சென்று விட்டாராம்.

அதை போலவே  கோண்டேவாலாவை  சேர்ந்த ஸ்ரீ சைதன்ய மகராஜ் என்பவர் பல இடங்களிலும் தமக்கு  ஒரு குருவை தேடி அலைந்தப் பின் கடைசியாக ஸ்ரீ மானிக் பிரபுவிடம்  வந்து சேர்ந்தாராம் . ஹைதிராபாத்தை ஆண்டு வந்த ஐந்தாம் நிஜாம் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லையே எனக் கவலையுடன் இருந்தார். அவர் ஸ்ரீ மானிக் பிரபுவின் சக்தியைக் கேள்விப்பட்டு அவரிடம் தன்  தூதுவரை அனுப்பினார். அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தூக்கிக் கொண்டு தூது வந்தவரிடம் ஸ்ரீ மாணிக் பிரபு கூறினார் ‘இதைவிட எனக்கு ஸ்ரீ  தத்தாத்திரேயர் அதிக பொருட்களை தந்து உள்ளார். ஆகவே இவற்றை  திரும்பி எடுத்துக் கொண்டு போய் நிஜாமிடமே தந்து விட்டு, இந்த பிரசாதத்தையும் அவருக்குக் கொடு. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு மெஹபூப் எனப் பெயரிடச் சொல்’ என்று கூறி அனுப்பினார். அதற்கு அடுத்த வருடமே நிஜாமிற்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.

அத்தியாயம் – 12

கொடுத்தவன் எவனோ, எடுத்தவனும் அவனேதான் .
அண்டக் கோள்கள் அழியும் வரை
நிலைத்திராது எந்த ஒரு உயிரும்.
பூமிக்குள் புதைந்திருந்தாலும்
அழிவில்லை எனக்கு.
உடலை தொட்டுச் செல்லும் காற்றாக
பூமி மீது விழும் மழைத்துளி போல
மின்னும் சூரிய ஒளியாய்
என்றென்றும் நான் இருப்பேன் இவ்வுலகில்
எனவேதான் கூறுகிறேன்
கல்லறையில் நின்று அழாதே.
நான் அங்கு உறங்கி கொண்டிருக்கவில்லை
-நாடோடிப் பாடல்-

ஸ்ரீ மாணிக் பிரபுமஹா சமாதி

ஸ்ரீ மாணிக் நகரில் ஆன்மீக மையம் உருவான உடனேயே அவருக்கு உறுதுணையாக நின்று அனைத்தையும் செய்தவர்கள் நான்கு பேர்கள். நான்கு தூண்கள் போல செயல் பட்ட அவர்கள் தாயார் பாயா தேவி, வெங்கம்மா, மற்றும் ஸ்ரீ மாணிக் பிரபுவின் சகோதரர்களான ஸ்ரீ நரசிம்மன் மற்றும் ஸ்ரீ ஹனுமந்து போன்றவர்களே. ஸ்ரீ மாணிக் நகர் மெல்ல மெல்ல வளரத் துவங்கியது. அந்த கால கட்டத்தில்தான் அந்த நான்குபேரும் ஒருவர் பின் ஒருவராக  காலமாயினர். பிரபு தனிமையில் விடப்பட்டார். ஆனால் அவர் மனதில் அப்படி எதுவும் இல்லை. அது மற்றவர்களுக்குத் தெரியாது. தான் உயிர் உள்ளபோதே அவர்கள் அனைவருக்கும் ஜீவ மோட்ஷம் தர விரும்பினார். அதனால்தான் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். அடுத்து எழுந்தக் கேள்வி-  ஸ்ரீ மாணிக் பிரபுவிற்கு வாரிசு யார்?

ஆனால் அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாணிக் பிரபு ஏற்கனவே செய்து வைத்து இருந்தார். தன்னிடம் இருந்த நான்கு பேர்களை  பக்தி மார்கத்தில் தீவீரமாக ஆக்கி நல்ல பயிற்சி தந்திருந்தார். அவர்களிடம் மட்டும் தமது சமாதிக்கான காலத்தைக் கூறி இருந்தார். அவர்கள் பிரபுவின் சமாதி காலத்தைக் கேட்டு துக்கம் அடைந்தார்கள். ஆனாலும் அதை வெளியில் சொல்ல முடியாமல் துக்கங்களை மனதில் மறைத்துக் கொண்டு வெளிப் பார்வைக்கு மகிழ்ச்சியைக் காட்டி வந்து கொண்டு இருந்தார்கள். ‘சன்யாசிகளுக்கு பற்றில்லாத மனம் வேண்டும்’ என ஸ்ரீ மானிக் பிரபு அவர்களுக்கு அடிக்கடி கூறி  வந்தார் என்றாலும் ஒரு நாள்  அவர்   ‘இன்று நான், நாளை நீங்கள். நேற்று என்பது மறைந்து விட்ட  நமது முன்னோர்கள். நான் மறைந்து போனாலும் என்னுடைய ஆவி உங்களுக்கு வழி காட்டிக் கொண்டே இருக்கும். ஒரு உண்மையை என்றும் மறக்காதீர்கள். பிறப்பும் இறப்பும் எந்த ஒரு சரீரத்துக்கும் மாற்ற முடியாமல் அமைந்தது இருக்கும் விதி’ என ஆறுதல் கூறுவார் .

நாட்கள் மெல்ல நகர்ந்தன. பிரபுவின் முதுகில் ஒரு கட்டி தோன்றியது. அவர் தன் சிஷ்யர்களை அழைத்தார். ‘எனக்கு அழைப்பு வந்துவிட்டது. நான் தோன்றிய கடமை முடிந்து விட்டது’ எனக் கூறி விட்டு தான் சமாதி அடையப் போகும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். அந்த இடத்தைக் காட்டி யாரும் அறியாதபடி அங்கு ஒரு குழியை தோண்டி வைக்குமாறு கூறினார். அதே நேரத்தில் ஸ்ரீ மாணிக் நகரில் தத்த ஜெயந்தி வெகு விமர்சையாக நடந்து கொண்டு இருந்தது. சாரி சாரியாக மக்கள் ஸ்ரீ மாணிக் நகரை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். அன்று ஒரு முஸ்லிம் பண்டிகையும் சேர்ந்து கொள்ள ஊரில் ஒரே ஆட்டமும் பாட்டமுமாக இருந்தது.

பிரபுவிற்கு வந்திருந்த கட்டி பெரியதாகிக் கொண்டே இருந்தது. என்று ஸ்ரீ மாணிக் பிரபு சமாதி அடைய நினைத்து இருந்தாரோ அன்று மாலை விசேஷ தரிசனத்துக்கும் ஏற்பாடு ஆகி இருந்தது. மறுநாள் புண்ணிய திதியான ஏகாதசி. 1865 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி.  தரிசனம் துவங்கியது. அதன் முடிவில் ஸ்ரீ மாணிக் பிரபு தனது சகோதரரின் இரண்டு மகன்களையும் அழைத்து வரச் சொல்லி அவர்களில் மூத்தவரே தனது வாரிசு எனப் பிரகடனம் செய்து அவருக்கு தனது கையினாலேயே மாலையும் போட்டார். தரிசனம் முடிந்து அமைதி நிலவியது.  அனைவரும் சென்றப் பின் ஸ்ரீ மாணிக் பிரபு அமைதியாக நடந்து சென்று தான் சமாதி அடைய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குழிக்குள் அமர்ந்தார். குழி மூடப்பட்டது. மாபெரும் மகானின் உலக வாழ்வு முடிவுற்றது.

– சரித்திரம் முடிவுற்றது-