கரையூர் ஈஸ்வர வாசல்
மங்கள சனீஸ்வரர் ஆலயம்
சாந்திப்பிரியா-

திருவாரூரில் இருந்து சுமார் ஆறு அல்லது எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதே கங்களாஞ்சேரி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளதே கரையூர் எனும் இன்னொரு சிறிய கிராமம் ஆகும்.

அந்த சிறிய கிராமத்தில் உள்ளது சனீஸ்வர பகவானுக்கு பெருமை தரும் மங்கள சனீஸ்வரர் என்ற ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் பக்கத்தில் வெண்ணாறு எனும் நதி ஓடுகின்றது. காவேரியின் கிளை நதியான இது அனைத்து மேன்மைகளிலும் கங்கை நதிக்கு இணையானதாம். வெண்ணாறு நதியின் மேன்மைப் பற்றி நிலவும் நாட்டுப்புறக் கதை இது. இங்கு வருகை தரும் பக்தர்கள் தமது கை கால்களை அலம்பிக் கொண்டு, இறந்து விட்ட தத்தம் முன்னோர்களின் ஆத்மாக்கள் தாகம் இல்லாமலும் பசியால் வாடாமலும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு எள்ளையும் தண்ணீரையும் இந்த வெண்ணாறு நதியில் விட்டால், வெண்ணாற்றின் தேவதை அவற்றை பித்ரு லோகத்திற்கு செல்லும் வகையிலான ஆற்றல் மிக்க அலைகளாக மாற்றி அனுப்ப, அங்குள்ள பித்ருக்கள் பசி மற்றும் தாகம் இல்லாமல் இருப்பார்கள்.

இந்த ஆலயம் சனீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், சிவபெருமான் பார்வதி தேவியுடனும், விஷ்ணு பகவான் லட்சுமி தேவியுடனும் இரண்டு தனித் தனி சன்னதிகளில் முதன்மை தெய்வங்களாக வழிபடப்படுவதால், சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் ஒருவரே என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆலயம் சங்கரநாராயணர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

வெண்ணாறு இந்த கிராமத்தின் வழியாகப் பாய்ந்து, கிராமத்தை இரண்டு பகுதியாக பிரித்து வைத்து உள்ளது. இரண்டு பகுதியிலும் உள்ள கிராமம் கரையூர் என்றே அழைக்கப்படுகின்றது. கிராமத்தின் மறுபுறம் உள்ள ஆலயத்தை அடைய, ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு மூங்கில் பாலத்தைக் கடக்க வேண்டும். ‘கரி’ என்றால் தமிழில் சனி, ‘ஊர்’ என்றால் கிராமம் அல்லது சிற்றூர், எனவே, இந்த கிராமம் சனீஸ்வரரின் கிராமம் என்ற பொருளில் கரையூர் என்று அழைக்கப்படுகிறது.

நவ கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் சனி பகவான் அமர்ந்துள்ள நிலை, அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும் அல்லது தாங்க முடியாத துயரத்திற்குத் தள்ளி விடும். சனியின் ஏழரை ஆண்டு கால ஆட்சியின் முதல் கட்டத்தில், ஒருவர் நிதி இழப்பு உட்பட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க சவால்களையும் துன்பங்களையும் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்ட கால கட்டத்தைத் தவிர்க்க முடியாது என்றாலும், கரையூர் ஆலய அர்ச்சகர் ஒரு புராணக் கதையைக் குறிப்பிட்டு, இந்த ஆலயத்தில் உள்ள மங்கள சனீஸ்வரரை தரிசித்து பிரார்த்தனை செய்தால், அவர் தனது ஏழரை ஆண்டு கால ஆட்சியின் எதிர்மறை விளைவுகளைக் குறைத்து ஒருவரின் வாழ்க்கை வசந்தமாக இருக்க அருள் புரிகின்றார் என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

தெய்வ சட்டம் உறுதியானது மற்றும் தெளிவானது. கடந்த கால கர்ம வினைகளுக்கான தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது. இல்லையெனில், மனிதர்கள் தாங்கள் விரும்பியபடி நடந்து கொண்டு, அச்சமின்றி பாவங்களை செய்தவண்ணம் இருப்பார்கள். பாவங்களை செய்தவர்களுக்கு அதற்கேற்ப தண்டனைகளை வழங்குவதற்கு சனி பகவானே பொறுப்பானவராக உள்ளார். பாவங்களுக்கு ஏற்ப அவர் வழங்கும் தண்டனைகள் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபட்டு இருக்கும். அவர் இந்தத் தண்டனைகளை, தலா ஏழரை ஆண்டுகள் கொண்ட இரண்டு கால கட்டங்களாக, மொத்தம் 15 ஆண்டுகள் அவர்களது வாழ்க்கையில் ஆதிக்கம் செய்தவண்ணம் இருந்தவாறு வழங்குகிறார். இது ஒருவர் தாம் செய்த பாவங்களுக்கு ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளவும் தங்கள் பாவச் செயல்களுக்குப் பரிகாரம் செய்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

தங்கள் வாழ்நாளில் ஏழரை சனி ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யும்போது, இறைவனின் கருணையைப் பெறுகிறார்கள் தமக்கு அளிக்கப்படும் தண்டனையை தெளிவான மன நிலையில் எதிர் கொள்ளும் மனோதிடத்தை தருகிறார் என்பது ஆலய நம்பிக்கை ஆகும். இதுவே இந்த ஆலயத்தின் மகிமை என்பதாகும்.

ஆலய வரலாறு குறித்து கூறப்படும் கதை இது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சனீஸ்வர பகவான் தனது தெய்வீக வாகனமான காகத்தின் மீது அமர்ந்து கொண்டு, திருக்கொள்ளிக்காட்டிலிருந்து திருநள்ளாறுக்கு புறப்பட்டார். மகாபாரத காலத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த பேரரசர்களில் ஒருவரான நளன் சக்கரவர்த்தி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக 12 ஆண்டுகள் கடுமையான துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. நளன் தனது முற்பிறவியில் நிரபராதியான ஒரு முனிவரைத் தண்டித்ததால், அந்த முனிவர் அவனைச் சபித்தார். அதன் காரணமாகவே நளன் கடுமையான துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. எனவே, நளனுக்குத் தண்டனை வழங்குவதற்காக, சனீஸ்வர பகவான் திருக்கொள்ளிக்காட்டிலிருந்து திருநள்ளாறுக்குச் சென்றார்.

சனீஸ்வர பகவான் கரையூரின் புறநகர் பகுதியை அடைந்தபோது மாலை நேரம் ஆகிவிட்டது. காகங்களால் இரவில் பார்க்க முடியாது என்பதால், சனீஸ்வர பகவான் அன்று இரவு தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு ஆலயத்தில் சிவபெருமான் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். சனீஸ்வர பகவான் விரைவாக அங்கு சென்று அவரை வணங்கி விட்டு , தான் அங்கு வந்ததற்கான காரணங்களை விளக்கினார். சிவபெருமான் கருணையுடன், தான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அதே இடத்தில் இரவில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி அளித்தார்.

ஆலய பகுதியில் தங்கி இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் வெண்ணாறு நதியில் குளித்தப் பின் காலை அனுஷ்டானங்களை செய்து முடித்து விட்டு சிவபெருமானையும் பெருமாளையும் வணங்கித் துதித்தப் பின் சிவபெருமானிடம் தாம் கிளம்பிச் செல்வதாகக் கூறிவிட்டு கிளம்பியபோது அவரை ஒரு கணம் நிற்குமாறு சிவபெருமான் கூறிய பின் எதற்காக அத்தனை அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறாய் என சனீஸ்வர பகவானிடம் வினவியபோது சிவபெருமானின் முந்தைய கட்டளைபடியே சாபத்தினால் உந்தப்பட்டு இருந்த நள மகாராஜனுக்கு தண்டனைப் பெறும் நேரம் வந்து விட்டதினால் தான் உடனடியாக திருநள்ளாறுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதும், சிவபெருமான் கூறினார் ‘உனக்கு நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற கிளம்பி உள்ளாய் என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்னால் உனக்கு நான் இன்னொரு கட்டளையையும் இடுகிறேன். உனக்கு நான் இங்கே இரவு தங்க அடைக்கலம் கொடுத்ததினால், இங்கு மங்கள சனீஸ்வர பகவானாக இங்கு அமர்ந்து கொண்டு இங்கு வந்து என்னை வணங்கிய பின் உன்னையும் வணங்கிச் செல்லும் பக்தர்கள் சனி தோஷத்தினால் எத்தனை கஷ்டங்களை சுமந்து வந்தாலும், அவர்களது ஜாதகத்தில் உன்னால் தரப்பட்ட தோஷங்கள் எத்தனை இருந்தாலும் அவற்றை குறைத்து அவர்கள் வாழ்க்கை மங்களமாக இருக்கும் வகையில் அருள் புரிந்து அனுப்ப வேண்டும்’ என்றார்.

சனீஸ்வர பகவானும் மற்ற அனைத்து தெய்வங்களை போலவே சிவபெருமானுக்கு அடங்கி நிற்பவர், சிவபெருமானுடைய கட்டளையை மீற முடியாது. ஆகவே அவர் இந்த ஆலயத்திலும் மங்கள சனீஸ்வரராக அமர்ந்து கொண்டு இங்கு வந்து சிவபெருமானை வணங்கிய பின் தன்னையும் வணங்கிச் செல்லும் பக்தர்களுடைய கஷ்டங்களை, அது தன்னால் ஏற்படும் 7½ நாட்டு சனி தோஷம் என்றாலும் கூட அவற்றின் தாக்கத்தைக் குறைத்து அவர்கள் வாழ்வில் மங்களமாக இருக்கும் வகைக்கு அருள் புரிந்து அனுப்புகிறார். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். ஒரே தெய்வம் பல இடங்களிலும் ஒரே நேரத்தில் பல உருவங்களில் அமர்ந்து கொள்ள முடியும் என்பது தெய்வீக உண்மை ஆகும். அவர்களது சக்தி அப்படிப்பட்டது என்பதினால் இங்கு எப்படி மங்கள சனீஸ்வரராக இருந்து கொண்டு பிற ஆலயங்களிலும் இருக்க முடியும் என வியப்பு அடைய வேண்டியதில்லை.

இத்தனை மகிமையும் மென்மையான இங்குள்ள ஆலயம் பலர் வந்து செல்லாத தொலைதூர கிராமத்தில் அமைந்துள்ளதால் எந்நேரமும் அது திறந்து இருப்பது இல்லை. காலை மற்றும் மாலையில் சற்று நேரமே பூஜைக்காக திறந்திருக்கும் என்பதினால் அங்கு செல்லும் பக்தர்கள் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு தாம் வருகை தரும் நேரத்தை குறிப்பிட்டால் அவர்கள் ஆலயத்தை திறந்து வைத்து இருந்து பூஜை மற்றும் அர்ச்சனைகளை செய்து தருவார்கள். ஆலய விலாசம் :

திரு தியாகராஜ குருக்கள்
ஈஸ்வர வாசல்
காரையூர் தபால் வழி
கங்களாஞ்சேரி வழித் தடம்
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி எண்: +91 97906 76748 அல்லது 9447 11048

ஆலய படங்கள்