(வழிபாட்டுத் தலங்கள்  தோன்றிய  வரலாறு)
 -சாந்திப்பிரியா- 
  1. கிராம தேவதைகள் என்பது என்ன? கிராம தேவதைகள் மற்றும் வேத முறையில் வழிபடப்படும் தெய்வங்கள் இரண்டும் வெவ்வேறானவையா? ஆலயங்கள் மற்றும் கிராம தேவதைகள் தோன்றிய வரலாறு என்ன?
  2. சந்தேகங்கள் அனைத்துமே விளக்கப்பட வேண்டியவை. நானும் பல நாட்களாக இந்த விஷயங்களைக் குறித்து பல இடங்களிலும் விசாரித்து வந்தேன். அது போலவே கிராம தேவதைகள் மற்றும் வேத முறையில் வழிபடப்படும் தெய்வ ஆலயங்கள் எழுந்த வரலாற்றுப் பின்னணியையும் பலரிடமும் விசாரித்து வந்தேன். நான் கும்பகோணம், மாயவரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் உள்ளே இருந்த ஊர்களில் ஆலய பயணத்தை மேற் கொண்டபோது ஆலய பூஜாரிகளிடமும், அங்கிருந்த கிராமத்தினரிடமும் வழிகளில் நான் பார்த்த  கிராம தெய்வங்களைக் குறித்த பல விஷயங்களைக் கேட்டு அறிந்து கொண்டேன்.
  3. கிராம தேவதைகள் என்பவை ஒவ்வொரு கிராமத்தினராலும்   தம்மையும் தமது கிராமத்தையும்  பாதுகாத்து  வரும் காவல் தெய்வங்கள், தம்முடைய குடும்பத்திற்கு அருள் பாலிக்கும் தெய்வங்கள், அவர்களை படைத்து அனுப்பியது மேலுலகில் உள்ள  எதோ ஒரு தெய்வம் என்பதாக பண்டைக் காலங்களில் வாழ்ந்திருந்த மக்கள் நம்பினார்கள். அந்த பழக்கமே அந்த கிராம தெய்வங்களை  பிற காலத்தில் குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளும் நிலையில்  அழைத்துச் சென்று விட்டது .
  4. கிராம தேவதைகள் என்பவர்கள் தெய்வங்கள் இல்லையா? அவர்களுக்கும் வேத முறையில் வழிபடப்படும் தெய்வங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? வேத முறையில் வழிபடப்படும் தெய்வங்களான சிவன், பார்வதி, முருகன், மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு ஆலயங்கள் எப்படி எழுந்தன? முருகனை மட்டும் ஏன் வேத முறையில் வழிபடப்படும் கடவுளாக பார்ப்பதில்லை? கிராம தேவதைகளின் ஆலயம் மற்றும் வேத முறையில் வழிபடப்படும் ஆலயங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? இன்றுள்ள பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் முன்னர் கிராம தேவதை ஆலயங்களாக இருந்தவைகளா? கிராம தேவதை மற்றும் வேத முறையில் வழிபடப்படும்  தெய்வங்கள் என்ற பாகுபாடு ஏன் ஏற்பட்டன போன்றவற்றை முடிந்தவரை விளக்குவதே இதன் நோக்கம்.
  5. ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் எந்த கால கட்டத்தில், எந்த நாட்டில் கட்டப்பட்டிருந்தன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால்  வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி, வேத காலத்திலோ அல்லது  வேத காலம் துவங்கிய உடனடியாக ஆலயங்களோ அல்லது வழிபாட்டு தலங்களோ இருந்ததற்கான அடையாளம் காணப்படவில்லை; அதன் காரணம் அப்போதிருந்த  மக்கள் சிலை வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஒருவர் இறந்தவுடன், அவரது ஆத்மா மேலுள்ள லோகத்திற்கு பயணிக்கிறது என்று அவர்கள் நம்பினர். வேத கால துவக்கம் என்பதினால் அவர்கள் கர்மா போன்றவற்றை நம்பினார்கள். அதே சமயத்தில்     எதோ விதத்திலான இயற்கை வழிபாடு அங்கும் இங்கும் இருந்துள்ளது என்பது தெரிகின்றது.
  6. அந்தக் கால கட்டத்தில் வழிபடப்பட்ட முக்கியமான தேவதைகள்  மழையின் கடவுள் இந்திரன் , நெருப்புக்  கடவுள் அக்னி மற்றும் பிரபஞ்சத்தில்  மாற்றங்களை ஏற்படுத்தும் வருணன் போன்ற உருவம் இல்லாத தேவதைகள் என்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
  7. AD 1500 ஆண்டு முதல் AD 1600 வரையிலான கால கட்டத்தில் முதன் முதலில் ஆப்கானிஸ்தானில் சில ஆலயங்கள் இருந்ததை கண்டு பிடித்தார்களாம். ஆப்கானிஸ்தான் மஹாபாரத காலத்துடன் தொடர்ப்பு கொண்டுள்ளது என்ற கருத்து நிலவுவதால் அங்கு இந்து ஆலயங்கள் இருந்துள்ளது வியப்பைத் தரவில்லை.  முதன் முதலில் பரவலாக  இந்து மத ஆலயங்கள் இருந்துள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அங்குள்ள நாணயங்கள் சிலவற்றில் சிவன் படம் பொறிக்கப்பட்டு இருந்ததைக் காணலாம். அதை போலவே கம்போடியா, தாய்லாந்து, ஈரான், பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற ஆசியாவின் பல பகுதிகளிலும் சில ஆலயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும், ஆச்சரியப்படும் விதமாக, அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் அவற்றைப் போன்ற ஆலயங்கள் காணப்படவில்லை அல்லது சிலை வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை.
  8. எனவே ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் தோன்றி இருக்காத கால கட்டத்தில் கிராம தேவதைகள் இருந்திருக்க முடியாது.
  9. வேத காலம் துவங்கிய உடனடியாக ஆலயங்களோ அல்லது வழிபாட்டு தலங்களோ இருந்ததற்கான அடையாளம் காணப்படவில்லை என்பதாக முன்னர் கூறி இருந்தேன்; ஆனால், வேத காலத்தின் பிற் பகுதியில், நீர், நெருப்பு, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற இயற்கைகள் வழிபடப்பட்டு வந்தாலும், நகரங்களில் இருந்து தொலை தூரத்தில் இருந்த  கிராம ஆலயங்களில்  எதோ ஒரு விதத்திலான சிலை வழிபாடு நடைபெற்று வந்ததாக கூறுகின்றார்கள்.  அப்படி வழிபடப்பட்ட தெய்வங்களை கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் எனக் கூறினார்கள்.
  10. அத்தகைய வழிபாட்டுத் தலங்களில் வழிபடப்பட்ட தெய்வங்கள் -உருண்டை வடிவிலான களி மண்ணில் கண்களை போன்ற அமைப்பு, காது மற்றும் மூக்குகளைப் போன்ற தோற்றம், நீண்டு இருந்த களி மண்ணில் கைகளும் கால்களும் போன்ற அமைப்பைக் கொண்டிருந்த எதோ ஒரு உருவத்தைக் கொண்டு இருந்துள்ளன. சில சிலைகள் இடுப்புப் பகுதி வரை மட்டுமே எதோ ஒரு  உருவத்தைக் கொண்டு இருந்துள்ளது.  பெரும்பாலான தெய்வங்கள் மேல் கூரையின்றி மூன்று பக்கமும் சேற்றால் கட்டப்பட்ட சுவர்களுடன்  இருந்த இடத்தில் காணப்பட்டன அல்லது ஆங்காங்கே இருந்த சிறிய குகை போன்ற இடங்களில் அல்லது மரங்களின் அடியில் தரை மீது மண் சேற்றினால் ஒட்டி வைக்கப்பட்டு இருந்தன. இன்றைக்கும் பல கிராமங்களில், மரங்களின் அடியில் தெய்வ சிலைகள் தரை மீது மண் சேற்றினால் ஒட்டி வைக்கப்பட்டு உள்ளதையும் வழிபாடுகள் நடத்தப்படுவதையும் காணலாம். அவற்றில் பிற் காலங்களில் வண்ணங்கள்    பூசப்பட்ட அதே பழைய கிராம தேவதைகளும், பிற் காலங்களில் நிறுவப்பட்டு உள்ள, வேதங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள சில தெய்வங்களும் உள்ளன.
  11. ஆனால் அவற்றில் வேத முறையிலான வழிபாடுகள் நடத்தப்படாமல், எந்த விதமான மந்திர உச்சாடனைகளும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்தே வணங்கி  வரும் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன. காரணம் அந்த கால கட்டத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி, சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதி பூஜைகளை செய்திடும் புரோகிதர்கள்  அல்லது ஆலய அர்ச்சகர்கள் என்ற எவருமே கிராமங்களில் இல்லை என்பதினால்தான் இன்றைக்கும் பல கிராம தேவதை ஆலயங்களிலும் எந்த விதமான மந்திர உச்சாடனைகள் இல்லாத வழிபாடே தொடர்கின்றது.
  12.  தெய்வ வழிபாடு தொடங்கிய பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட தெய்வங்கள் கிராம மக்களின் நல் வாழ்வோடு தொடர்புடைய தெய்வங்களாக இருந்தார்கள். அவர்களில் முக்கியமாக பெண் தெய்வங்கள் மட்டுமே பெருமளவு இருந்தார்கள். அவர்களும் வேத முறையில் வழிபடப்பட்ட தெய்வங்கள் இல்லை. அப்படி வணங்கப்பட்ட கிராம தேவதைகளும் கொடுமையான தோற்றம் கொண்டவர்களும், கருணை தோன்றம் கொண்டவர்களும் என  இரு தன்மைக் கொண்ட தெய்வங்களாகவே இருந்தார்கள்.
  13. பண்டைய காலத்தில் பிராமணர்கள் மற்றும் பிராமணரல்லாதவர்கள் போன்ற எந்தவிதமான பாகுபாடுகளும் கிராம மக்களிடையே இருந்ததில்லை என்பதினால்தான் கிராமத்தில் இருந்த அனைவரும்  ஒரே வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று ஒரே தெய்வத்தை வழிபட்டனர். அவை கிராம தேவதைகளாகவும், காவல் தெய்வங்களாகவும், கற்கள் அல்லது ஆவிகள் வடிவில் கண்களுக்கு தெரியாத தெய்வமாகவோ இருந்துள்ளார்கள்.
  14. சிந்து வெளி நாகரீகம் தோன்றியபோது வடநாட்டில் சரஸ்வதி நதிக் கரைகளில் இருந்த சரஸ்வத் எனும் பிராமண சமூகத்தினிடையே தெய்வ வழிபாடு இருந்துள்ளது தெரிகின்றது. ஆனால் தென் பகுதிகளில் அவை இல்லை. பிற் காலத்தில்தான் சரஸ்வதி நதி வற்றிய போது சரஸ்வத் சமூகத்தினர் அங்கிருந்து இடம் பெயர்ந்து தென் பகுதியை நோக்கி கோவா வழியே வந்துள்ளார்கள்.  அந்த பிரிவினர் மஹாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல இடங்களிலும் குடியேறி  இன்றைக்கும் அவர்கள் செய்து வந்திருந்த அதே வழிபாட்டை தொடர்ந்து கொண்டிருந்த வண்ணம் உள்ளார்கள்.
  15. வேத காலத்தின் பிற் பகுதியில் தென் பகுதிகளில் கிராமங்களில் இருந்த பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் காவல் தெய்வ அல்லது கிராம தேவதை  ஆலயங்களாக இருந்துள்ளன.  வேத கால தெய்வ வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதி தெய்வங்களை ஆராதித்திருந்தார்களே தவிர உருவ வழிபாடோ அல்லது விக்ரஹ வழிபாடோ இருந்துள்ளதாகவோ  செய்திகள் இல்லை. அவை பிற் காலத்தில்தான் அதாவது வேத காலத்தின் பிற் பகுதியில்தான் தோன்றி உள்ளன என்பதாகவே தெரிகின்றது.
  16. இதற்கு ஆதாரமாக யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள ஸ்லோகங்களைக் காணலாம்.
  • ‘பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள உருவமற்ற பரப்பிரும்மனுக்கு எந்தப் பொருள் வடிவிலும் உருவம் இருக்க முடியாது (யஜுர் வேதம் 32: 3)’
  • ‘பரப்பிரும்மனுக்கு பௌதிக வடிவம் இல்லை. அவரை யாராலும் நேரடியாகக் காண முடியாது. உருவமற்ற அவர் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து திசைகளிலுள்ள இடங்களிலும்  வியாபித்துள்ளார் (யஜுர் வேதம்: அத்தியாயம் 32)’
  1. வேத காலத்தின் பிற் பகுதியில் அங்கும் இங்குமாக மஹாபாரத காலத்துடன் சம்மந்தப்பட்ட கிராம தேவதை ஆலயங்கள்  இருந்ததைக் கண்டறிந்துள்ளார்கள். அவற்றில் சில தாந்த்ரீக தெய்வங்களுடன் சம்மந்தப்பட்டவைகளாக உள்ளன;  பிற்காலத்தில் அவற்றில்  சில ஆலயங்கள் வேத முறையிலான உச்சாடனைகள் மற்றும்  மந்திர உச்சாடனைகள் செய்து பூஜித்து வழிபடும் ஆலயங்களாகவும் மாறி உள்ளன.
  2. வேத காலம் முதல் அனைத்து இடங்களும் கிராமிய பகுதிகளாகவே இருந்துள்ளன. அதன் காரணம் நகரம் மற்றும் கிராமம் என்ற பேதங்கள் இருந்தது இல்லை. வேத காலத்தின் பிற் பகுதியில் அங்காங்கே ஆலய வழிபாடுகள் தோன்றத் துவங்கின. ஆனால் அந்த இடங்கள் ஆலயங்களாக அல்ல, கிராம தேவதைகளின் வழிபாட்டு தலங்களாகவே இருந்துள்ளன.  அவற்றில் எந்த வகையிலான  வழிபாட்டு முறைகள் இருந்தன என்பது தெரியவில்லை .
  3. கிராம தேவதை வழிபாடுகளும் மூன்று கட்ட நிலைகளைக் கொண்டு இருந்துள்ளது. அதாவது வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தில்,  கிராமங்கள் மற்றும் நகரபுரங்கள் என்பது இல்லாமல் இருந்திருந்த காலம் ஆகும்; ஆகவே முதல் கட்ட வழிபாடு தோன்றிய காலத்தில் அனைத்து நிலப்பரப்புகளிலும் வாழ்ந்திருந்த மக்கள்     சூரியன், சந்திரன், நெருப்பு, மரங்கள், மலைகள், மற்றும் இயற்கையினால் தோன்றிய மின்னல் போன்ற சக்திகளை பயத்தினால் ஆவிகள் மற்றும்  இனம் தெரியாத சக்திகள் என நம்பி வணங்கி வந்துள்ளனர் என்பதாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். எதோ சக்தியினால் இயங்கிய அல்லது உருவான அந்த இயற்கைகளை தாம் வணங்காவிடில் அவை தமக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று அச்சம் கொண்டார்கள்.
  4. முதலாம் கட்ட காலத்தில் வழிபடப்பட்ட வழிபடப்பட்ட இயற்கை அனைத்துமே எந்த விதமான மூல தெய்வங்களின் பூத கணங்களிலும் அடக்கம் இல்லை. அவை ஆவி உலக வழிபாட்டுடன் சம்மந்தப்பட்டது. கிராம மக்களை பொறுத்தவரை   தமக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எண்ணி அத்தகைய இயற்கைகளை வணங்கி வந்தார்கள்.
  5. இரண்டாவது வழிபாட்டுக் கட்டத்தில் பெயர் தெரியாத அமானுஷ்ய ஆவிகளை கண்டு அதுவரை பயந்து வந்திருந்த மக்கள்  பல விதங்களில் தோற்றம் தந்த கற்கள்,  பாறைகள், ஆயுதங்கள், பாம்புப் புற்றுக்கள், குதிரை, நாய், யானை போன்ற விலங்குகளை வணங்கத் துவங்கினார்கள்.  குக்கிராமங்களில் வசித்து  வந்திருந்த கிராம மக்களுக்கு தேவதைகள் என்பதோ கடவுட்கள் என்பவர்களோ எதுவுமே  தெரியாமல் இருந்த  காலம் அது. தம்மை மீறி சக்தி பெற்றவர்  இறந்து விட்டால் அவர்கள் அப்படியே மேல்  உலகிற்குச் செல்வார்கள் என்று நம்பிக்கை கொண்டு இருந்தார்கள். மேல் உலகம் என்பது என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. மேலே தெரிந்த ஆகாயமே மேல் உலகம் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
  6. அப்போது நாடு முழுவதுமே நிறைய குக்கிராமங்கள் இருந்தன. குக்கிராமங்கள் என்பவை அங்காங்கே திட்டு திட்டாக தீவைப் போல நிலப்பரப்பில் இருந்த இடங்கள் ஆகும். அவற்றில் குடி இருந்திருந்த   கிராம மக்களில் ஒரு பகுதியினர் கிராமங்களை சுற்றி இருந்த காடுகளில் இருந்து எடுத்து வந்த மரக் கட்டைகளை விற்றும், மிருகங்களை வேட்டையாடி அவற்றை பெரும்பாலும் பண்டமாற்று முறையில் (Barter system) விற்றுக் கிடைத்த பணத்திலும் வாழ்கையை ஓட்டியவர்கள். இன்னும் ஒரு பிரிவினர் அருகில் இருந்த நிலங்களில் சென்று கூலி வேலை செய்து பிழைத்தவர்கள். ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் இடையே பல மைல் இடைவெளி இருந்துள்ளது.  அதற்குக் காரணம் குக்கிராமங்களை சுற்றி இருந்த காடுகளும் வயல்வெளிகளும்தான்.
  7. சிறிதளவு நாகரீகம் தோன்றத் துவங்கிய இரண்டாம் வழிபாட்டுக் கட்டத்தில் வாழ்ந்திருந்த மக்களில் பெரும்பான்மையோர் விவசாயம் மற்றும் பல்வேறு கைத் தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள்; கூலி வேலை செய்தவர்கள், சின்ன சின்ன வியாபாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் போன்ற  கிராம சமூகத்தினர் வெளி உலக வாழ்வை  பார்த்திராதவர்கள். வாழ்க்கையில் நீதி, நேர்மையைக் கடைப்பிடித்து வந்தவர்கள். நியாய தர்மங்களை மதித்து வந்தவர்கள்.
  8. அப்படிப்பட்ட மக்கள் கண்களுக்குப் புலப்படாத ஆவிகளை நம்பத் துவங்கி அவர்களுக்கு வழிபாடுகள் செய்யத் துவங்கினார்கள். அதுவே கிராமப்புறங்களில் ஒரு வகையிலான உருவ வழிபாட்டு முறை தோன்றக்  காரணமாக இருந்தன. அந்தந்த கிராமங்களில் இறந்தவர்கள், அல்லது மக்களின் நலனிற்காக தியாகங்களை செய்தவர்கள்   மரணத்திற்குப் பிறகு அவர்களது ஆவிகள் தம்மையும் தமது ஊரையும் காப்பவர்களாக, ஊர் மக்களின் நோய்களை தீர்ப்பவர்களாக  இருப்பார்கள் என்று நம்பினார்கள்.
  9. கிராம மக்கள் மீது வெளிக் கிராமங்கள் அல்லது வெளி இடங்களில் இருந்து வந்து தாக்குதல் நடத்தினாலோ அல்லது உள்ளூரிலேயே எவர் மூலமாவது ஏதாவது ஒரு வகையில் இன்னல் ஏற்பட்டாலோ, அந்த கிராமத்தில் இருந்த திடகார்த்தமான ஆட்கள் ஒன்று கூடி அவர்களை எதிர்த்து நின்று போராடி கிராம மக்களைப் பாதுகாத்து வந்தார்கள். அப்படிப்பட்ட வீரர்களை கிராமத்தினர் தம்மைக் காக்கும் தெய்வங்களாகவே கருதினார்கள்.
  10. அவர்கள் மரணம் அடைந்ததும் அவர்களை தகனம் செய்த இடத்திலோ, அவர்கள் வீர மரணம் அடைந்த இடத்திலோ அல்லது அவர்களை புதைத்த இடத்திலோ கற்கள் அல்லது பெரிய பாறைகளை நட்டு வைத்து அவற்றை அவர்களது நினைவுச் சின்னங்களாக அமைத்து வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூசி அதையே இறந்து போன அந்த வீரர்களின் ஆவிகள் எனக் கருதி  வழிபட்டார்கள். அவர்களது ஆத்மாக்கள் தம்மை பாதுகாக்கும் எனக் கருதி அந்த கற்களையும் பாறையையும் வணங்கி வரலானார்கள்.    அவற்றை நடுக்கல் என்பார்கள். அந்த வீரர்கள் இறந்த பின்னர் அவர்கள் தேவதையாக அதாவது இனம் தெரியாத, அடையாளம் காண இயலாத ஆத்மாக்களாக அங்கு உலாவிக் கொண்டு இருப்பதாக நம்பியதினால்தான் இறந்து போனவர்களின் ஆவிகளை தம்மை விட அதிக சக்தி உள்ள அமானுஷ்யப் புருஷர்களாகவே கருதினார்கள். அதனால்தான் அவர்களை சிறப்பு மிக்க மனிதர்களாகக் கருதி அவர்களை ஒரு கல்லின் உருவத்தில் வணங்கி வந்தார்கள். அப்படி உயிர் தியாகம் செய்த  வீரர்களின் நினைவாக அவர்களுக்கு  நடுக்கல் நட்டு அவற்றுக்கு வழிபாடு செய்வது  தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற  மானிலங்களில் உள்ள கிராமங்களில்   காணப்படுகின்றது .
  11. மேலும் அந்த கிராமங்களில் கற்புக்கரசியாக வாழ்ந்து விட்டு இறந்து போன பெண்கள், பிரசவத்தின்போது இறந்து போன பெண்கள் ஆகியோரின் நினைவு சின்னங்களையும் கல்லில் அமைத்து, அவர்கள் இறந்து போன இடங்களில் அந்த கற்களை நட்டு வைத்து, அதை கிராம தேவதையாக  வழிபடும் வழக்கம் இருந்தது. அவர்கள் தெய்வமாகி விட்டவர்கள் என்பதினால் அந்த ஊரைப் பாதுகாக்கும் கிராம தேவதையாக  அவர்களது  ஆவி அங்கு உலவிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
  12. சில நேரங்களில் அந்த மாவீரர்கள் வைத்திருந்த வாட்கள், திரிசூலங்கள், சூலாயுதம், வேல், அரிவாள், மற்றும் பிற ஆயுதங்களை அந்த கற்களின் பக்கங்களில் புதைத்து வைத்து அவற்றுக்குள் மறைந்து போன மாவீரர்களின் சக்தி இருக்கும் என்பதாகக் கருதி அவற்றையும் வழிபடத் துவங்கினார்கள்.
  13. அப்படிப்பட்டவர்கள் பிற்காலத்தில் கிராம தேவதைகளாக காவல் தெய்வங்களாக மக்களால் ஏற்கப்பட்டார்கள். ஆனால் அந்த நிலைகளிலும் தெய்வங்களின் உருவ வழிபாடு தோன்றவில்லை. காரணம் தெய்வ வடிவங்களின் தோற்றங்கள் எவருக்கும் தெரியவில்லை; தெய்வ வடிவங்களின்  தோற்றம்  மூன்றாம் கட்ட வழிபாட்டு தருமணத்திலேதான் தோன்றியது.
  14. ஆவிகள் மற்றும் பேய்கள் குறித்த கருத்துக்கள் பண்டைய மெசபடோமியாவிலிருந்து (சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் ) வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். பேய்கள் பற்றிய நம்பிக்கை அந்தக் காலத்திலிருந்தே தோன்றி உள்ளன.   மெசபடோமியா என்பது என்ன?  மெசபடோமியா என்பது மேற்கு ஆசியாவின் ஒரு வரலாற்றுப் பகுதியாகும் , இது டைக்ரிஸ்-யூப்ரடீஸ் நதி அமைப்பிற்குள்  வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது . அன்றைய மெசபடோமியா இன்றைய ஈராக் என்று தெரிகின்றது.
  15. பழைய கற்காலம் (அதாவது 2,000,000 ஆண்டுகளுக்கு முன்னர்) என்பது மனிதர்கள் முதன் முதலில் கல் கருவிகளை பயன்படுத்த தொடங்கியதற்கான முந்தைய காலமாகும்.  பழைய கற்காலத்தின் போது, நமது முன்னோர்கள் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினர்.   ஆயுதங்களை உருவாக்கவும், எலும்பு மற்றும் மரத்திலிருந்து பொருட்களை செதுக்கவும் அவர்கள் கல் கருவிகளைப் பயன்படுத்தினர். குகைகளில் வாழ்ந்து, வெப்பத்தைத் தக்க வைக்க நெருப்பைப் பயன்படுத்தினர். ஆகவே ஆவி வழிபாட்டு  நம்பிக்கைகள் பழைய கற் காலத்திலேயே  இருந்திருக்கலாம் என்ற ஐயம் உள்ளன. ஆனால் அவற்றுக்கான சரியான  சான்றுகள் கிடைக்கவில்லை.
  16. காலம் காலமாக இந்தியாவின் பல கிராமங்களிலும் உள்ள கிராம மக்கள் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களை வழிபாடு செய்தவண்ணம் இருக்கிறார்கள். கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களுக்கு தம் மீது உள்ள கோபம் காரணமாக தமது சக்திகளை கொண்டு அவை அதி பயங்கரமான நோய் நொடிகளை பரப்பி, அகால மரணங்களை நிகழ்த்தி, குடும்பங்களின் ஒற்றுமையை சிதைத்து கிராமத்தில் நிம்மதியை அழிக்க முயலும் என மக்கள் நம்பியதினால் அவற்றின் சீற்றங்களை தணிப்பதற்கு அவைகளை ஆராதித்து வழிபடுகிறார்கள்.
  17. இப்படிப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை மற்றும் கைத் தொழில்களில் ஈடுபட்டு கிராமங்களில் வசித்து வந்திருந்த சமூகத்தினர் ஆவர். ஆனால் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபடுவது இந்திய கிராமங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் வனப் பிரதேசங்களையும், மலைப் பகுதி வாழ் மக்களையும் அதிகம் கொண்டுள்ள ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் சில இடங்களில் உள்ளன என்பதே உண்மை நிலை ஆகும். காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான இப்படிப்பட்ட வழிபாட்டு முறை பெரும் அளவிலான நாகரீகம் அடைந்துள்ள நிலையிலும் இன்னமும் அதே வேகத்துடன் தொடர்ந்து கொண்டு உள்ளன என்பதும் வியப்புக்குறிய செய்தியாகும்.
  18. மூன்றாம் வழிபாட்டுக் கட்டத்தில்தான் தெய்வங்களுக்கு குறிப்பிட்ட வடிவங்கள் தரப்படத் துவங்கின. அதற்கேற்ப அவற்றின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு நகர ஆலயங்களில் வழிபாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் அந்த கலாச்சாரம் கிராம பகுதிகளுக்கும்  பரவ அவை  கிராம தெய்வங்கள் எனும் பெயரில் கிராமப்புறங்களிலும்  தோன்றலாயின. கிராமப்புறங்களில் வழிபடப்பட்ட  தெய்வங்கள் கிராம தேவதைகள் என்றும் நகர் புறங்களில் வணங்கப்பட்ட தெய்வங்கள்  வேத முறையில் வழிபடப்பட்ட ஆகம தெய்வங்கள் எனவும் கூறப்பட்டன.
  19. இந்த நிலை துவங்கியவுடன் பல கிராமங்களிலும் கிராமவாசிகள் பாம்புப் புற்றுக்களை பெண் தேவதைகளாகக் கருதி அவற்றை வழிபட்டார்கள். இதன் காரணம்  பல பெண் தேவதைகளின் (அம்மன்)  தலை பகுதிகளிலும் பாம்புகள் படமெடுத்து ஆடியபடி நின்று இருந்த வடிவங்கள் அம்மன் தெய்வங்களுக்கு தரப்பட்டதே ஆகும். இப்படியாக எழுந்தவைதான்  கிராம அம்மன் தெய்வங்களும், அம்மன் காவல் தெய்வங்களும் ஆகும். அப்படிப்பட்ட கிராம தேவதைகள்/ காவல் தெய்வங்களின் பெரும்பாலான   ஆலயங்கள் மரத்தின் அடியிலோ, குளத்தின் அருகிலோ, ஊரின் எல்லையிலோ அல்லது திறந்த வெளியிலோதான் அமைந்து இருந்தன. நான் குறிப்பிடும் இந்த காலக் கட்டம் தெய்வங்கள் யார்  அவர்களின் உருவ அமைப்புக்கள் என்ன எனத் தெரியத் துவங்கிய காலகட்டம் ஆகும்.   பிற்காலத்தில் பாம்புப் புற்றுகள் மீது எழுந்த வழிபாட்டு தலங்களை  மாரியம்மன் ஆலயம் என்று  அழைத்தார்கள்.
  20. வேத காலத்தில் நாக வழிபாடு இருந்ததாக யஜுர் வேதம் மற்றும் அதர்வ வேதம் மற்றும் வேறு பல பிற்கால நூல்களில் கூறப்பட்டு உள்ளன. ரிக்வேதத்தில் இது சற்று குறைந்த அளவிலேயே கூறப்பட்டு உள்ளது.
  21. ஆதியில் இருந்தே அதாவது புராண காலங்கள் முதலே கிராமப்புறங்களில் சர்ப்ப வழிபாடு எனும் பெயரில் பாம்புகளை தெய்வமாகக் கருதி வணங்குவது இருந்துள்ளது. ஆதி காலத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் அதாவது கொரியா, எகிப்து, இத்தாலி, மெசபடோமியா, கிரேக்க, சீனா, ஜப்பான் மற்றும் ஆப்ரிக்க நாடுகள் போன்ற இடங்களில் எல்லாம் கூட பாம்புகளை தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதினால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சர்ப வழிபாடு வியப்பை தருவது  அல்ல. இந்து, புத்த  மற்றும் ஜைன மதத்தினரும் பாம்பு வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். சில இடங்களிலும் பாம்புகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆலயங்கள் உள்ளன.
  22. எத்தனை மழை அல்லது இயற்கையின் சீற்றங்களோ ஏற்பட்டாலும் அதிசயமாக பாம்பு புற்றுக்கள் மழை நீரில் கரைவதும் இல்லை, அழிவதும் இல்லை என்பதைக் கண்ட மக்கள், அதனால்தான் பாம்புப் புற்றில் வாழ்ந்து கொண்டு உள்ளதாக  நம்பப்பட்ட அம்மன் இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தும் கடவுள் என்பதாக நம்பினார்கள்.  சிலை வழிபாடு அல்லது தெய்வங்களை ஒரு உருவ வடிவில் காட்டப்பட்டு வணங்கப்பட்டு வந்திருந்த  நடைமுறை, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றது. அவை எப்போது தோன்றின என்பதை விளக்குவது கடினம்.  ஏன் என்றால் தெய்வங்களுக்கான ஒரு வடிவம் என்பது பல்வேறு நாகரிகங்களில் தானாகவே வெளிப்பட்டதாக கூறப்படுகின்றது.
  23. வேத காலம் என்பது ஆன்மீகப் பெரியோர்களால் 6000 வருடத்திற்கு முந்தைய காலம் எனக் கூறப்பட்டாலும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி வேத காலம் என்பது சுமார் 3500  வருடங்களுக்கு முந்தைய காலம் ஆகும் என்பதினால் உருவ வழிபாடு என்பது சுமார் 3500  வருடங்களுக்கு முன்னர்தான் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்றே நம்ப வேண்டி உள்ளது.   4000  முதல் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட  காலத்தில்  எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படும் ராமாயணம் மற்றும் மஹாபாரத இதிகாசங்களிலும் கூட உருவ வழிபாடு இருந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
  24. முக்கியமாக கிருஷ்ணர் காட்டிய விஸ்வரூப தரிசனம் அதற்கு ஒரு சான்றாகும். மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் இருந்தபோது, மூன்று பேருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். ஒன்று அஸ்தினாபுரத்தில் உள்ள துரியோதனன் சபைக்கு  சென்றபோது, கண் பார்வைற்ற திருதிராஷ்டிரனுக்கு ஒரு கணம் கண் பார்வையைக் கொடுத்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை காட்டினார்; அதில் பல தெய்வ உருவங்கள் இருந்துள்ளன. பின்னர் குருசேத்திர  போர்களத்தில், அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்தபோது, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார்; அதிலும்  பல தெய்வ உருவங்கள் இருந்துள்ளன.  அதன் பிறகு, அம்புகள் தைக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கர்ணனுக்கு, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டினார்; அதிலும்  பல தெய்வ உருவங்கள் இருந்துள்ளன. அந்த விஸ்வரூபத்தில் பல தெய்வங்களின் வடிவங்கள் அவரது உடலில் தெரிந்தன  என்பதில் இருந்தே   மஹாபாரத காலத்திலேயே தெய்வங்களின் வடிவமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. இதனால்தான் தெய்வங்களுக்கு ஒரு உருவம் என்பது சுமார் 5000  ஆண்டுகள் முன்பாகவே வந்திருக்க வேண்டும் என்பதாக நம்ப வேண்டி உள்ளது.
  25. மேலும் வேத காலத்திலும், ராமாயணம் மற்றும் மஹாபாரதம் எழுதப்பட்ட காலங்களிலும் கிராமங்கள் நிறையவே இருந்துள்ளது என்பதும், அங்கெல்லாம் கிராம தேவதைகளை பிரார்த்தித்து யாகங்கள் நடைபெற்று உள்ளன என்பதும் தெரிகின்றது. ஆகவே கிராமங்களில்தான் தெய்வ வழிப்பாடு என்பது துவங்கி இருக்க வேண்டும் என்பதும் தெரிகின்றது. இதற்கும் சின்ன உதாரணம் மத்திய பிரதேசத்தில் காணப்படும் பல ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சித்தவட் ஆலயம். அதில் ஒரு மரத்தடியில் சிவலிங்க  தோற்றம் போன்ற கல்லை சிவபெருமானாக பாவித்து வணங்குகின்றார்கள். உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி எனும் ஆலயத்தில் கற்களில் ஒரு உருவத்தை செதுக்கி அதை மஹாமாயா, மற்றும் ஹரிசித்தி மாதா என வணங்குகின்றார்கள். இந்த ஆலயங்கள் அனைத்திலும் இருந்த தெய்வங்கள் முன்னர் கிராம தெய்வங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளவர்கள்தான்.
  26. மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனி தாலுக்காவில் உள்ள நல்கேடா எனும் கிராமத்தில்  உள்ள லகுந்தர் நதிக்கரையில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலத்தில் இருந்த   கிராம தேவதை பகலாமுகி தேவி மஹாபாரத காலத்தை சேர்ந்தது என்கின்றார்கள்.   மகாபாரத யுத்தத்தில்  வெற்றி பெற கிருஷ்ணரின் அறிவுரையின்படி யுதிஷ்டிரர் இங்கு வந்து பகலாமுகி தேவியை   வணங்கி விட்டு ஆலயம் அமைத்தாராம். அதன் பின்னரே அந்த கிராம தேவதை வழிபாட்டுத் தலம் ஒரு ஆலயமாயிற்று.  இது ஒரு தாந்த்ரீக தேவி வழிபாட்டுத் தலம் ஆகும்.
  27. இந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலும்  எதோ  ஒரு வகையிலான வடிவம் தெய்வங்களுக்கு தரப்பட்டு இருந்துள்ளது தெரிகின்றது.  வேதங்களே கூட சிலை வழிபாட்டை விவரிக்கின்றன,   கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து, சிலை வழிபாடு பிரதான  இந்து மத அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  இன்னொரு கூற்றின்படி வேத காலத்தில் முதல் கட்டத்தில் வாழ்ந்திருந்தவர்கள், உருவங்களையோ அல்லது சிலைகளையோ வணங்கவில்லை. மாறாக  அவர்கள் பிரார்த்தனைகள், மந்திரங்கள், பாடல்கள்  மற்றும்  சடங்குகள் மூலம் தெய்வங்களை வணங்கினர்.  ஆரியர்கள்  இந்தியாவிற்கு வந்தது சுமார் 3500  வருடங்களுக்கு முன்னர்தான். ஆரியர்கள் வருகைக்கு பின்னரே உருவ வழிபாடுகள் தோன்றி உள்ளன என்பதாக தெரிகின்றது; அவர்கள்தான் ஒரு விதத்திலான வழிபாட்டுத் தலங்களை அமைத்தவர்கள் ஆவார்கள்.
  28. ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதிகள் வட பகுதியில் இருந்த மக்களுடன் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டு இருந்துள்ளன. தென் பகுதியில் இருந்த மக்கள் தம்மை திராவிடர் என்று கூறிக் கொண்டு இருந்தபோது வட பகுதியில் இருந்தவர்கள் ஆரியர்கள் எனக் கூறப்பட்டார்கள். ஆரியர்கள் எனப்பட்டவர்கள் மெல்ல மெல்ல புலன் பெயர்ந்து தென் பகுதிகளுக்கு வந்தபோது அவர்கள் கடைப்பிடித்து வந்திருந்த வேத முறைப் பழக்கங்களும் அவர்களுடன் சேர்ந்தே வந்தது. பொதுவாக ஆரியர்களை பிராமணர்கள் அல்லது பண்டிதர்கள் எனக் கூறினார்கள். அவர்களே தென் பகுதிகளில் இருந்த ஆலய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தவர்களில் முக்கியமான பங்கு வகித்தவர்கள்.
  29. ஒன்றாம் நூற்றாண்டில் தென் பகுதி கிராமங்களில் தோன்றத் துவங்கிய வேத முறையிலான வழிபாட்டுத் தலங்கள் சிறு கிராம ஆலயங்களாக இருந்துள்ளன. அவற்றில் இருந்த தெய்வங்கள் கிராம தேவதைகள் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளன என்றாலும் அவற்றில் சிலவற்றில் மந்திரங்களை உச்சரித்து தெய்வத்தை வழிபடும் வேத முறையிலான வழிபாடு துவங்கப்பட்டு உள்ளதாக நம்ப இடமுள்ளது. வேத வழிபாட்டு முறைகள் என்பது, வேதங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் தெய்வங்களை வணங்குதல், யாகம், ஹோமம் போன்ற வழிபாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகும். ஆகவே வேத முறையிலான வழிபாடு கிராம தெய்வ வழிபாட்டுடன் கலந்து இருந்துள்ளது என்பது தெரிவதினால் ஆலயங்களின் தோற்றம் என்பது  கிராம வழிபாட்டு தலங்களில் இருந்தே வந்துள்ளன என்பதாக நம்ப இடமுள்ளது. அந்த நிலையில்தான்  சில கிராம தேவதைகள்  கிராம தெய்வங்கள் என அழைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.
  30. வடநாட்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் மூன்றாம் நூற்றாண்டில் ஆலயங்கள் தோன்றத்  துவங்கி  இருந்ததை போலவே  பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில் தென் இந்தியாவிலும் (அதாவது கி. பி 500 ஆம் ஆண்டு காலம்) ஆலயங்கள் கட்டப்படத் துவங்கி, பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் வேறு பல மன்னர்கள் ஆட்சியில் பெருமளவில் தொடரப்பட்டது . சோழ மன்னர்கள் ஆட்சியில் பல கிராம வழிபாட்டு தலங்களும்,  கிராம ஆலயங்களும் பெரிய  ஆலயங்களாக கட்டப்பட்டு உள்ளன என்பது தென் இந்திய பகுதியில் தெரிகின்றது.
  31. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தென் இந்தியாவை ஆண்டு வந்திருந்த சேர மன்னர்கள் ஆட்சியில் கிராம கோவில்கள் ஒரு முக்கிய அம்சமாக இருந்தன. அவர்கள் கோயில்களுக்கு நிலங்களை கொடையாக அளித்து, ஆலயங்களை கட்டி எழுப்பினார்கள். மேலும், கிராமங்களில் ஆலயங்களை சுற்றி பல சடங்குகள் மற்றும் பண்டிகைகள் நடைபெற்றன.
  32. சேரர்களின் காலத்தில் கிராம கோயில்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையங்களாக திகழ்ந்தன.
  33. சோழர் ஆட்சிக் காலத்தில் கிராம தேவதைகளின் வழிபாடு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட கிராம தேவதை அல்லது காவல் தெய்வத்தின் ஆலயம் சிறிய அளவில் இருந்தது.  அந்த தேவதைகள் கிராமத்தின் எல்லையைக் காப்பதாகவும், மக்களுக்கு நோய்கள் வராமலும், பயிர்கள் செழிப்பாக விளையவும் அருள் புரிவதாக நம்பப்பட்டது. சோழர்கள் காலத்தில் கிராமங்களில் பிடாரி மற்றும் காளி தேவியின் வழிபாடு அதிகம் இருந்துள்ளது. காளி தேவியை காவல் தெய்வமாக கருதி உள்ளார்கள். அதனால்தானோ என்னவோ சோழர்கள் காலத்தில் தஞ்சாவூரை சுற்றி கட்டப்பட்டு இருந்த சிறிய எட்டு காளி கோவில்கள் காவல் தெய்வங்களாக வணங்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகின்றது.   கிராம தேவதைகளின் வழிபாடு என்பது கிராம மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. சோழர் கால கல்வெட்டுகளில் கிராம தேவதைகளின் வழிபாடுகள், கிராம மக்கள் வணங்கிய வீரர்களின் நடுக்கல் போன்றவை  பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
  34. அப்படி என்றால் 5000 to 7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாபாரதம் அதன் பின்னர் எழுதப்பட்டுள்ள ராமாயணம் போன்றவற்றில், கூறப்பட்டு உள்ள தெய்வங்கள் பொய்யானதா என்ற கேள்வி எழலாம். இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தெய்வங்களின் உருவங்கள் வெளி வந்தது வேத காலத்துக்குப் பின்னர்தான். வேத காலத்தில் தோன்றிய தெய்வங்கள் பிரும்மா, விஷ்ணு, ருத்திரர், அக்னி, இந்திரன், வருணன், சூரியன், யமன் போன்றவர்கள் ஆவார்கள்.  ஆனால் அவர்களில் உருவ வழிபாடு மூலம்  வழிபடப்பட்ட தெய்வமாக ருத்திரர், விஷ்ணு போன்றவர்களே முதன் முதலில் இருந்துள்ளார்கள். அவர்களில் ருத்திரர் கூட சிவபெருமானே ஆகும். விஷ்ணு என்றால் இந்தந்த உருவங்கள், சிவன் என்றால் இந்தந்த உருவங்கள் என ஓவ்வொரு கடவுளின் வடிவங்களும் வேத காலத்துக்குப் பின்னரே வெளியில் தெரியத் துவங்கின.
  35. மஹாபாரத இராமாயண காலங்களில் தெய்வங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களின் உருவம் வேத காலம் தோன்றிய பின்னர்  வாழ்ந்திருந்த மானிடர்கள் மூலமே, அதாவது முனிவர்கள், ரிஷிகள் என்பவர்கள் மூலமே தெரிய வந்துள்ளது என்பதே ஆன்மீக பெரியோர்களின் கருத்தாகும். தெய்வங்களின் வடிவங்கள் வெளித் தெரிய வந்ததைக் குறித்த சர்ச்சை  பழமையானது. வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கால கட்டங்களில் பல்வேறு வடிவங்களில்  தெய்வங்களின் வடிவங்கள் வெளிப்பட்டன. தெய்வங்களின் தோற்றங்களை அந்தந்த மதப் பிரிவுகளின்  புராணங்கள் மூலமே அறிய முடிந்தது. அந்த புராணங்கள் வியாச முனிவர் எழுதிய மஹாபாரத நூலைத் தொடர்ந்து தோன்றியவை. ஆதி காலத்தில் குகைகளிலும், பாறைகளிலும் காணப்பட்ட வடிவங்களின் அடிப்படையில் எழுந்தவை.
  36. இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் தெய்வங்களுக்கு ஒரு உருவம் கிடைத்தது வேத காலத்துக்குப் பின்னர்தான். அதே நேரத்தில் இந்தியாவின் வடக்குப் பக்கங்களில் இருந்த இடங்களில் கிராம தேவதை வழிபாட்டுத் தலங்கள் இல்லாமல் வேத முறையிலான இந்து கடவுட்களின் ஆலயங்கள் மட்டுமே தோன்றத் துவங்கி இருந்தன.
  37. கிராமப்புறங்களில் நீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் கிராம மக்களால் வழிபடும் தெய்வங்களாக இருப்பவர்களே கிராம தேவதைகளும் தெய்வங்களும் ஆவார்கள். அவற்றில் சில  வேத காலத்திற்கு முன் கிராம மக்களால் வழிபடப்பட்ட கிராம தேவதைகளாக இருந்துள்ளார்கள். கிராம தேவதைகள்  அவற்றின் சொந்த வழிபாட்டு முறை மற்றும் தோற்றத்தைக்  கொண்டு இருந்துள்ளன.
  38. வேத காலத்தின் பின்னர் பிராமணர்களின் ஆதிக்கம் மேல் எழத் துவங்கியது. அதுவரை அவரவர் வாழ்கை நெறி முறையில்தான், கிராம மக்கள் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். மக்கள் இருந்த இடங்கள் குக்கிராமம் என்றும், பெரிய கிராமம் என்றும் அழைக்கப்பட்டு வந்தன. பொதுவாக பெரிய கிராமங்களில் செல்வந்தர்களும், குக்கிராமங்களில் ஏழ்மை நிலையில் இருந்தவர்களும் வாழ்ந்து வந்தார்கள். மத்திய காலப் பகுதியில் பல இடங்களிலும் மெல்ல மெல்ல ஜாதி, மத  பேதப் பிரிவுகள் தோன்றலாயின. அதனால் கீழ் நிலை மக்கள் அதிகம் இருந்த இடங்களில் பிராமணர்கள் வசிப்பதை தவிர்க்கலாயினர்.
  39. இந்த நிலையில்தான் கீழ் நிலை மக்கள் குடி இருந்த கிராமங்களில் அதிக அளவிலான கிராம தேவதை மற்றும் கிராம தெய்வ வழிபாடு துவங்கியது.  ஆனால் அதே கிராமங்கள் பின்னர் நகர் புறங்களாக மாறியபோது அந்த கிராம ஆலயங்களே நகர்புற ஆலயங்களாக உருமாறி பிராமணர்களும் ஆராதிக்கும் இடங்கள் ஆயின.
  40. முக்கியமாக தென் இந்திய பகுதிகளில் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில்தான் பிராமணர்கள் அதிகம் முக்கியத்துவம் பெறத் துவங்கினார்கள் என்பதினால் கிராம தேவதை ஆலயங்களுக்கு இணையாக ஆகம முறையிலான வழிபாட்டிலான ஆலயங்கள் தோன்றலாயின அல்லது கிராம ஆலயங்களில் முக்கியமானவை பெரிய ஆலயங்களாக மாறத் துவங்கின.
  41. ஆரியர்களது வருகைக்கு பின்னர் அந்தணர்கள் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார்கள். அதனால் மெல்ல மெல்ல ஜாதி பிளவுகள் அதிகரிக்கத் துவங்கின. கீழ் ஜாதிகள் எனக் கருதப்பட்டவர்களை அந்த காலத்தில் இருந்த அந்தணர் சமுதாயம் ஆலயங்களுக்குள் நுழைய விடவில்லை. மேலும் கருப்பு மந்திரங்கள் எனப்படும் தீய மந்திரங்கள் மூலம் பேய் பிசாசு போன்றவற்றை ஏவி மக்களை பயமுறுத்துதல் நடைமுறையில் இருந்தது. அதனால் ஆலயத்துக்குள் சென்று கடவுளிடம் வேண்டிக் கொள்ள முடியாமல் போன ஒடுக்கப்பட்ட ஊர் மக்கள் தமக்கு பாதுகாப்பிற்காக வேறு தெய்வங்களை வணங்கித் துதிக்கலானார்கள்.  அவைகளே கிராமப்புறங்களில் கிராம தேவதை, காவல் தெய்வ வழிபாட்டு இடங்கள் என ஆயின.
  42. அதனால்தான் இன்றைக்கும் தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திர மாநிலம் மற்றும் பிற மானிலங்களான ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் மற்றும் பீஹார் போன்ற மானிலங்களில் நகரங்களை விட கிராமங்களில், குறிப்பாக பழங்குடி மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே கிராம தேவதை வழிபாடு நிறையவே உள்ளதைக் காணலாம்.   குறிப்பிட்ட கிராமங்கள் அல்லது பிராந்தியங்களுடன்  தொடர்புடைய இந்த தெய்வங்கள்,  சமூகங்களின் அன்றாட வாழ்க்கையிலும் கலாச்சார நடைமுறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.
  43.  இன்றைக்கு பல முக்கியமான ஆலயங்களின் பின்னணி வரலாற்றை பார்த்தோம் எனில் அவை ஆலயங்களாக எழுப்பட்டதற்கு முன்னர் கிராம தேவதை வழிபாட்டு தலங்களாகவே இருந்துள்ளன என்பது தெரிய வரும். அப்படி இருந்த  கிராம தேவதை ஆலயங்கள் மீதே இன்றைக்கு நாம் காணும் பல பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன.
  44.   கிராம ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் மற்றும் கிராம தேவதைகள் இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் கிராம தேவதைகள் இரண்டாம் நிலைக் தெய்வங்கள் எனக் கருதப்படுகின்றன. அவர்கள் மூல தெய்வங்களின் அதாவது சிவன், விஷ்ணு, பார்வதி போன்றவர்களின் பூத கணங்கள் அல்லது அவர்களுடைய பரிவார தேவதைகள் எனக் கருதப்பட்டன. அதாவது அந்த மூல தெய்வங்களே கிராம தேவதைகளை படைத்தவர்கள் என்பதாக நம்புகின்றார்கள். அதனால்  கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை  தெய்வங்கள் என்று கூடக் கூறலாம்.
  45. ஆனால் தெய்வங்களில் இருந்த இரண்டாம் நிலையிலான கிராம தேவதைகள் தம்மையும் தமது சக்தியையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக கிராம மக்களை ஏதாவது ஒரு விதத்தில் பயமுறுத்தத் துவங்கினார்கள்.  கிராம மக்கள் சிலரின் கனவில் தோன்றி தான் இன்ன இடத்தில் புதைந்து உள்ளதாகவும், தன்னை வெளியில் எடுத்து வழிபட்டால் அந்த ஊரைக் காத்தபடி இருப்பேன் என கூறுவார்கள். அதன்படி அந்த கிராம மக்கள் கனவில் வந்த அந்த தேவதைகளைக் கண்டறிந்து சிறு வழிபாட்டு தலம் அமைத்து அவர்களை (கண்டறிந்த சிலைகளை) அந்த இடத்தில் வைத்து எழுப்பி வழிபடுவார்கள். அந்த தேவதையும் அந்த ஊரைக் காத்தபடி ஊர் எல்லைகளில் அமர்ந்து இருப்பார்களாம்.
  46. பல கிராமங்களில் ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையே அவற்றின் எல்லைகளைக் குறிக்கும் விதத்திலான கல் நடப்பட்டு இருக்கும். அதை எல்லை மாரியம்மன் என்ற பெயர்களில் அழைப்பார்கள். ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் கிராம மக்கள் அந்த எல்லை மாரியம்மன் கல்லை வழிபட்ட பின்னர் சற்று நேரம் அங்கேயே  ஒய்வு எடுத்துக் கொண்டு, அதன் பின்னர்தான்   அடுத்த ஊரில் நுழைவார்களாம். அதன் காரணம் அந்த எல்லை மாரியம்மனே அந்த பகுதியில் இரண்டு ஊர்களுக்கும்    காவல் தெய்வமாக விளங்குகின்றாள் என்ற நம்பிக்கைதான் காரணம் ஆகும்.
  47. ஒரு கிராமியக் கதையின்படி இராமாயண யுத்தத்தின்போது ஹனுமார் சீதையை தேடியவண்ணம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையை  அடைந்தார். அப்போது இலங்கையின் நுழை வாயிலில்  காவல் தெய்வமாக பாதுகாப்பில் இருந்த  இலங்காலக்ஷ்மி எனும் தேவதை அவரை இலங்கையின் உள்ளே விட தடுத்த போது அவளுக்கு தான் வந்த நோக்கத்தை விளக்கிய பின்னர் அவளைத் தாண்டிக் கொண்டு ஹனுமார்  இலங்கைக்குள் நுழைந்து விட்டாராம். யாராவது ஒருமுறை தன்னைத் தாண்டி உள்ளே சென்று விட்டால்  அந்த காவல் தெய்வத்தினால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதினால் ஹனுமார் தனது வேலையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றாராம்.
  48. தென் இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு மானிலத்தில் உள்ள கிராமங்களில் காணப்படும் முக்கியமான கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்கள் எனப்படுபவர்கள் கருப்பசாமி, சுடலை மாடன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பெரியாண்டவர், முனீஸ்வரன், ஐயனார், பெரியசாமி, பெரியண்ண ஸ்வாமி , மலையாள கருப்பு, கொல்லி மலை கருப்பு, பதினெட்டாம்படி கருப்பு, ஒண்டிக் கருப்பு, சங்கிலி கறுப்பர், பனையடி கருப்பு, கூத்தாண்டவர், சமயக் கருப்பசாமி, கழுவடியான், இருளப்ப சாமி, மாடசாமி, உத்தாண்ட சாமி, எல்லைக் கறுப்பு, மாதேஸ்வரர், மகாலிங்கா, ராஜவாயன், மதுரை வீரன், மாகா முனி, லாட சன்னாசி, வீரபுத்திர ஸ்வாமி, ஆந்திரமுடையார், சிதம்பர நாடார், தாடி வீரசாமி, பொன்னர், தூண்டி வீரன், கொன்றையாண்டி, வேம்புலி ஐயனார், மருது ஐயனார், விருமாண்டி, சீவலப்பேரி சிங்காரம், கலியாண்டி ஐயனார், சமணமலை ஐயனார், சிறை மீட்ட ஐயனார், குளத்து அய்யனார் , வீர முத்து ஐயனார், பிராண்டி ஐயனார், வீர பயங்கர ஐயனார், வீரப்பிள்ளை ஐயனார், இருளப்பர், காவல்காரன், நொண்டிக் கருப்பு, பாவாடைக்காரன், கிளுகிளுப்புக்காரன், மண்டக் கருப்பு போன்றவர்கள் ஆவார்கள்.
  49. புகழ்பெற்ற கிராம காவல் தெய்வமான காத்தவராயன், சிவபெருமானிடம் ஒரு சிறிய சாபத்தைப் பெற்ற முருகப் பெருமானின் அவதாரம் என்றும், பாவத்தைப் போக்க காத்தவராயனாகப் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
  50. இன்னொரு தெய்வத்தின் சாபத்தைப் பெற்று இருந்த மதுரை வீரன் மற்றொரு புகழ் பெற்ற காவல் தெய்வம் ஆவார். இவரை சில குடும்பங்கள் தமது குலதெய்வமாக வணங்குகின்றார்கள். அவரே மதுரை மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தையும், அவரை வழிபடும் மக்களையும் பாதுகாக்கிறார் என்பதாக ஐதீகம் உள்ளது.
  51. கிராம தெய்வங்களில் ஒருவரான அய்யனார் என்பவர் ஐயப்பனின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இவரும் சிலரது குலதெய்வமாக வணங்கப்படுகிறார்.
  52. கிராம மக்கள் வணங்கும் கிராம தேவதையான கருப்பசாமி யார்? முதலில் கிராம தேவதையாக கருதப்பட்டு இருந்த கருப்பசாமி காலப் போக்கில் ராமர் காட்டில் இருந்தபோது சீதைக்கு காவல் இருந்த முனிவரால் தர்பை மூலம் படைக்கப்பட்ட குழந்தை என்றும், யார் தன்னுடைய உண்மையான குழந்தை என்பதைக் கண்டு பிடிக்க ராமர் நடத்திய தீ பரீட்சையில் தீயில் கருகி எரிந்து போன தர்பைக்கு ராமரே மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப, தீயில் எரிந்ததினால் கருப்பாக மாறிய அவர் கருப்பசாமி ஆனார் என்றக் கதை உள்ளது.
  53. அது முதல் கருப்பசாமி ராமரின் வளர்ப்புக் குழந்தையானார் என்பது கிராமியக் கதை. முதலில் அவர் கிராம மக்களினால் ஆராதிக்கப்பட்டதினால் கிராம தேவதையாக இருந்தார். காலம் மாறிய பின்னர் அவரையும் ஒரு கடவுளாக ஏற்றுக் கொண்டு உள்ளதினால்தான் தமிழ்நாட்டில் கருப்பசாமிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவருக்கு மதுரை அழகர் ஆலயத்தில் தனி மரியாதையுடன் கூடிய சன்னதியே உள்ளது.
  54. நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் அவருக்கு கோவில் உள்ளது. அதில் அம்பாள் செல்லாண்டியம்மன் எனும் அன்னைக்கும் சன்னதி உள்ளது. மேலும் கருப்பசாமியை சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் ஆகம வழியிலான தெய்வமாகவே ஏற்றுக் கொண்டு நகரங்களில் ஆலயங்கள் அமைத்து வழிபடுகிறார்கள். அங்கெல்லாம் அவர் கிராம தேவதையாகக் கருதப்படுவது இல்லை.
  55. இன்னொரு கதையின்படி கருப்பசாமி கருப்பாக இருப்பதினால் சில காரணங்களினால் அவர் பிராமணர் அல்லாத யாதவர் குலத்தில் பிறந்து இருந்த கிருஷ்ணரின் அவதாரம் எனவும், மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற பூமியில் கிருஷ்ணரே கருப்பசாமியின் உருவத்தில் அவதரித்து உள்ளார் என்கிறார்கள்.
  56. ஐயனார் யார்? அவர் சிவன் மற்றும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு என்ற இருவர் மூலமும் படைக்கப்பட்டவர் என்று தமிழ்நாட்டில் கடலூரை சேர்ந்த தென்னம்பாக்கம் கிராமத்து முத்தையனார் கோவில் கதை உள்ளது. அங்குள்ள ஆலயத்தில் உள்ள ஐயனாருக்கு காவல் வீரபத்திரர் ஆவார். ஐயனாரை அங்கு அழகன் முத்தையனார் என்ற பெயரில் அழைக்கிறார்கள். அதே ஐயனார் கடலூர் மாவட்டத்திலேயே உள்ள இடைச்செருவாய் எனும் சிறிய கிராமத்தில் மஞ்சபத்திரய்யனார் எனும் பெயரில் கிராம காவல் தெய்வமாக இருக்கிறார். அது போலவே பாண்டிச்சேரி மானிலத்தில் உள்ள புதுப்பெட்டில் உள்ள மஞ்சனீச்வரர் எனும் ஆலயத்தில் பூரணா, புஷ்களா எனும் இரண்டு அம்பாள் சகிதமாக ஐயனார் காட்சி தருகிறார். ஐயனாரே பின்னர் ஐயப்பனாக அவதரித்தார் என்பதும் இன்னொரு புராணக் கதை.
  57. அடுத்த கிராம தெய்வம் வீரபத்திரர். அக்னி வீரபத்திரருக்கு மதுரை சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற கிராமத்தின் அருகில் உள்ள சூரக்குடி என்ற சிறு ஊரில் பிரபலமான ஆலயம் உள்ளது. அங்கு உள்ள ஒரு அரச மரத்தடியில்தான் வீரபத்திரர் வந்து தங்கி இருந்து தவம் இருந்து தோஷத்தைக் களைந்து கொண்டாராம். அது மட்டும் அல்ல அந்த நேரத்தில் அவர் அந்த கிராமத்தின் தேவதையாக இருந்து ஊரைக் காத்து வந்தாராம். அவரை யார் என்று தெரியாமல் வீரபத்திரர் என்ற பெயரில் கிராம தேவதையாக வழிபட்டு வந்தார்கள். ஆனால் அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பது பின்னர் தெரிந்தபோது அவருக்கும் ஆகம முறையிலான பூஜைகளை செய்யத் துவங்கினார்கள். கும்பகோணத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்திலும் அவருக்கு பெரிய ஆலயம் உள்ளது. அது முன்னர் கிராம தேவதை ஆலயமாக இருந்ததாம்.
  58. ஒரு கிராமியக் கதையின்படி முன்னொரு காலத்தில் மதுரை வீரன் எனும் வீராதி வீரன் வாழ்ந்திருந்தார். மன்னரின் படை வீரராக இருந்தாலும் அவர் தனது கிராம மக்களின் நலனின் அக்கறைக் கொண்டவர். ஒருமுறை அவர் நன்னடத்தையில் சந்தேகம் அடைந்த மன்னன் அவரை வஞ்சகமாகக் கொன்று விட மதுரை வீரனின் ஆவி மரணம் அடையாமல் கிராமத்தில் சுற்றிக் கொண்டு இருந்தவாறு மக்களைக் காப்பாற்றி வந்தார். ஆகவே அது முதல் பல கிராமங்களிலும்  மதுரை வீரன் கிராம தெய்வமாகவே போற்றப்படலானார்.
  59. கிராம தேவதை என கூறப்பட்ட முனீஸ்வரரை எடுத்துக் கொள்ளுங்கள். சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்படவராக கருதப்படும் அவர் சிவ முனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தர முனி, வாழும் முனி மற்றும் தரமா முனி என ஏழு அவதாரங்களை எடுத்தாராம். இலங்கையில் ஊறுகொடவத்தை என்ற ஊரில் கிராம ஆலயமாக இருந்த முனீஸ்வரர் வழிபட்டுத் தலம் இன்று மகா பத்ரகாளி ஆலயமாக மாறி உள்ளது. இப்படியாகத்தான் பல கிராம தேவதைகளும் தெய்வங்களுடன் இணைத்து பேசப்பட்டார்கள்.
  60. பிற் காலங்களில்தான் முன்னர் கிராம தேவதைகளாக இருந்த மதுரை பரிமேல் அழகர் ஆலயம், சபரிமலை அய்யப்பன், சமயபுரம் மாரி அம்மன், புன்னை நல்லூர் மாரி அம்மன், வீரபத்திரர் ஆலயங்கள்  முனீஸ்வரர் ஆலயங்கள் என பல கிராம தேவதை ஆலயங்கள் ஆகம விதியிலான வழிபாட்டு முறைகளை கொண்ட ஆலயங்களாக மாறி உள்ளன. தமிழ் நாட்டில் பல நகரங்களில் உள்ள பிரபலமான அம்மன் ஆலயங்கள், மாரியம்மன் ஆலயங்கள், முருகன், அம்பாள் ஆலயங்கள், ஏன் சில சிவாலயங்கள் கூட முன்னர் கிராம ஆலயங்களாகவே இருந்துள்ளன. நீங்கள் எந்த ஒரு பெரிய ஆலயத்துக்கும் சென்றாலும் ( நவீன காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் அல்ல, மாறாக புராதான பெருமை வாய்ந்த ஆலயங்கள்) அங்கு உள்ள பிராகாரங்கள் பலவற்றிலும் கிராம தேவதைகளின் உருவச் சிலைகளைக் காணலாம்.
  61. தென் இந்தியப் பகுதிகளில் வணங்கப்படும் முக்கியமான பெண் காவல் தெய்வம் அல்லது கிராம தேவதைகள் :-
    மாரியம்மா, மரம்மா, காளியம்மா, கங்கம்மா , சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, எட்டுகை அம்மன், கொல்லிப் பாவை, பாப்பாத்தி, கருப்பாயி, பாலம்மா, பத்ரகாளி, பூலங்கொண்டாள் அம்மன், பொன்னிறத்தாள் அம்மன், அங்காள பரமேஸ்வரி, கன்யகலம்மா, மந்தராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா, கௌரம்மா , கேலுவலம்மா, பெரண்டலம்மா, நீலி, பைரவி, மாடச்சி, அம்மாச்சி, பேராத்துசெல்வி, தளவாய்பேச்சி, பூங்குறத்தி, பெத்தம்மா, மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா, தீப்பாச்சி அம்மன் , இடைச்சியம்மன், கிச்சம்மா, தொட்டிச்சி அம்மன், பூலம்மா, சப்தகன்னிகை, துர்க்கை, உடலம்மா, உக்கிரமாகாளி, உச்சினமாகாளி, வாசுகோடி, ஈலம்மா, வானமாலம்மன், பேச்சியம்மன் போன்றவர்கள்.
  62. அங்காளம்மா எனும் தெய்வம் ஆந்திரா, கர்நாடகா மானிலங்களில் அதிகம் வழிபடப்படும் கிராம தேவதை ஆகும். தமிழ்நாட்டிலும் சில இடங்களில் அவர் கிராம தேவதையாக உள்ளார். அங்காளம்மா யுத்த தேவதைகளான சப்த கன்னிகைகளில் ஒருவர் என்ற நம்பிக்கை கிராமத்தார்களிடையே உள்ளது. அதனால்தான்   அவரை ஊரைப் பாதுகாக்கும் காவல் தெய்வமாக கருதுகின்றார்கள். அவரது சிலைகள் கிராமங்களில் மரத்தடியில் உள்ளன.  அந்த தேவதைக்கு நடைபெறும்  விழாக்களில் கோழி அல்லது ஆட்டுக் குட்டி வெட்டப்பட்டு தெய்வத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அவை  பக்தர்களுக்கு பிரசாதமாக  வழங்கப்படுகிறது. பின்னர் அவை உணவாக உட் கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் அங்காளம்மா பலரால் வழிபடப்படுகிறார்.
  63. சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள், கனகாம்பிகை அம்மன் போன்றவர்களும் கூட கிராம தெய்வங்களே ஆவர். சப்த மாதர்கள் எனப்படும் ஏழு கன்னிகைகள், கனகாம்பிகை அம்மன் போன்றவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா போன்ற மானிலங்களில் மட்டும் அல்ல ஸ்ரீலங்காவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்  கூட காவல் தெய்வங்களாக வணக்கப்படுகின்றார்கள். சப்த தேவதைகள் யுத்த தேவதைகள் என்பதினால் அவர்களை பூஜை செய்து ஆராதிப்பது இல்லை. அதனால்தான் அவர்களை தமது ஊரைக் காப்பவர்களாக உள்ளார்கள் என எண்ணி கிராமத்தினர் வணங்கித் துதிக்கின்றார்கள்.
  64. தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டு வகை சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று “சோழ சம்பு” என்னும் நூல் கூறுகிறது.
  65. காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டில் கிடைத்த  மாரியம்மன் சிலையை தமது கிராமத்தில் வைத்து அதற்கு   கண்ணனூர் மாரியம்மன்  என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். அக் கால கட்டத்தில் தென்னாட்டின் மீது படையெடுத்து  வந்த   விஜயநகர மன்னர்  அந்த   கிராம தேவதையான மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அந்த கிராம தேவதைக்கு  ஆலயம்  கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, ஆலயத்தைக்  கட்டினார்கள்.
  66. மராட்டிய மன்னனான வெங்கோஜி ராவ் என்பவர் ஒருநாள் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு  சென்று வழிபட்டு விட்டு   அன்றிரவு அங்கே தங்கினார். இரவில்  சமயபுரம் காளி அம்மன் தோன்றி ‘தான்  தஞ்சாவூருக்கு வெளியே உள்ள ஒரு காட்டில் தங்கி உள்ளேன். என்னை வந்து வழிபடு’ என்று கூறினாள்.   அதைக் கேட்ட மன்னன் அந்த கனவில் கூறப்பட்ட காட்டுப் பகுதியை  அடைந்து  அங்கிருந்த வெட்டி வீழ்த்த அதனுள் ஒரு   புற்று உருவில் இருந்த காளி தேவியை  கண்டு பிடித்தான். அந்த வனப் பகுதியிலேயே அவளுக்கு சிறிய வழிபாட்டு தலம் அமைத்தான். முதலில்  புற்று உருவில் காட்சி அளித்த அந்த கிராம தேவதையை  மாரியம்மன் என   கிராமத்தினர் வணங்கி வந்தார்கள்.   சதாசிவ ப்ரும்மமேந்திரர்  எனும் மஹான்  அந்த புற்றையே அம்மன் உருவாக மாற்றி அமைக்க,  அதுவே மந்திரங்களை ஓதி பூஜிக்கும் புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் ஆலயம் என்ற பெரிய ஆலயமாக மாறியது.
  67. அது போலவே தென் இந்திய பகுதிகளான தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மானிலங்களில் பல கிராமப் பகுதிகளிலும் இருந்த மக்கள் பாம்புப் புற்றுக்கள் மீதும், இன்னும் சில இடங்களில் உயிர் இழந்த பெண்களை புதைத்த அல்லது தகனம் செய்த இடங்களில் அமைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலும்  எதோ ஒரு வகையிலான உருவச் சிலைகளை அமைத்து அவற்றுக்கு காளியம்மா, கங்கம்மா, சௌடம்மா , பொலிமேரம்மா, கிகிரம்மா, வெங்கலியாம்மா, மரியம்மா, மைசம்மா, பேச்சியம்மா, ஐடம்மா, பொசம்மா, எல்லம்மா , சீதலதேவம்மா, கன்யகலம்மா, மன்த்ராலம்மா, ஜம்புலம்மா, ஜனம்மா, நண்டையலம்மா, திரௌபதம்மா, அன்னம்மா , கௌரம்மா , கேலுவலம்மா , பெரண்டலம்மா, பெத்தம்மா, மஞ்சலம்மா, மலசிசெம்மா, பகவடல்லி, மன்கலியம்மா, கோனியம்மா, துர்கம்மா, பப்பம்மா, சுன்குலம்மா, அங்கம்மா, திருபதம்மா, அன்காரம்மா, மாரியம்மா, விழியம்மா, கெம்பம்மா, தண்டம்மா எனப் பெயரிட்டு அவர்களையும் ஆகம வழிபாட்டு முறைகளில் அமைந்த ஆலயங்களில் உள்ள   தெய்வங்களுடன் சம்மந்தப்படுத்தி, அவர்களது பரிவார தேவதைகள், யுத்த கணங்கள் என்று வணங்கித் துதிக்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வணங்கப்படும் கிராம தேவதைகளாகவே இன்றைக்கும்  இருக்கின்றார்கள்.
  68. கர்நாடகாவின் மூல்பாகல் மற்றும் கோலார் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், கிராம தேவதைகளான நாச்சாரம்மா, ரணபேரம்மா மாரம்மா போன்ற  தேவதைகளை தம்மை பாதுகாக்கும் தெய்வங்களாகவும், பிளேக் போன்ற கொடுமையான வியாதிகளை தடுக்கும் தெய்வங்களாகவும் கருதி வழிபடுகிறார்கள்.
  69. கர்நாடகாவில் மாரியம்மன் குடும்பத்தை சார்ந்த கெம்பம்மா எனும் ஒரு தேவியை தொட்டம்மா, சுகஜம்மா, கங்கம்மா, எல்லம்மா மற்றும் லகுவம்மா என்ற பெயர்களில் அழைத்தாலும் அந்த காலத்தில் அவள் ஊருக்கு காவல் தெய்வமாக, கிராம தேவதையாக கருதப்பட்டு வணங்கப்பட்டவள். பொதுவாகவே  அம்மன்களின்  வழிபாட்டு தலங்களில் அம்மன்களை   அம்மை நோயில் இருந்து காப்பாற்றுபவள், ஊரைக் காப்பாற்றுபவள், பஞ்ச காலத்தில் மழையைப் பொழிய வைப்பவள்,  குழந்தைப் பேறு தருகின்றவள், குடும்பத்தைக் காப்பாற்றுபவள், நோய்களை விரட்டுபவள் என பலவாறாக நம்பி ஆராதிக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே கிராம தேவதைகள் அல்லது கிராம தெய்வங்களாகவே ஆராதிக்கப்படுகின்றார்கள். அவர்களை ஆகம விதிப்படி செயல்படும் ஆலயங்களில் துதிக்கவில்லை.
  70. கர்நாடகாவின் உலவும் கிராமியக் கதையின்படி பிசிலம்மா எனும் கிராம தேவதையின் வழிபாட்டு தலத்தில் மேல் கூறை இல்லாததின் காரணம், பல ஏழை குடும்பங்கள்  மேல் கூறை இல்லாமல். மரக்கிளைகளை உடைத்து அவற்றை மேற்கூறையாக வைத்து நான்குபுறமும் களிமண்ணால் ஆன சுவர்கள் கட்டிய இடங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதினால்தான்  தானும் வெய்யிலிலும் மழையிலும் நனைந்தவாறே மேல் கூரை இல்லாத வழிபாட்டு தலத்தில் அவர்களோடு தங்கி இருப்பேன் என  இருக்கிறாளாம். பிசிலம்மா பெரும் சக்திகளைக் கொண்டவர்; தம்மை வணங்கித் துதிக்கும் மக்களை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பவர். மேலும் அவர்களை எந்த விதமான தீய சக்திகளும்  தீண்டாமல் இருக்கும் வகையில் பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கைகள் உள்ளன.
  71. தூய தமிழில் மாரி என்பது ‘மழை’ என்றும், அம்மன் என்பது ‘தாய் தெய்வம்’ என்றும் பொருள். வரலாற்று ஆய்வாளர்களின்  கருத்தின்படி மாரியம்மன் வழிபாடு என்பது  3000 ஆண்டுகளுக்கும் முன்பானது.  இந்து மதம் தோன்றி இல்லாதபோதே  தென்னிந்தியாவில் பல கிராமப்புறங்களிலும் கிராமவாசிகள் மாரியம்மனை   வழிபட்டு வந்துள்ளார்கள். துவக்க காலத்தில் அவர்கள் அந்த தெய்வத்தை மழை பொழிய வைக்கும் தாய் தெய்வம் என்று மட்டுமே கருதினார்கள். காலம் செல்லச் செல்ல அவளது ஆசிகள் கிடைத்தால்  பெண்கள் கருவுறுவார்கள், கர்பிணிப் பெண்களுக்கு வலியற்ற பிரசவம் ஏற்படும்,  அவள் அம்மை மற்றும் பிளேக் போன்ற கொடுமையான நோய்களை அழிப்பவள்  என்று வழிபடப்படுகிறார்.
  72. அதே மாரியம்மனை படிப்படியாக, பிடாரி, காட்டேரி அம்மன், திரௌபதி அம்மன் போன்ற பெயர்களுடனும்  வழிபடத் துவங்கினார்கள்.  மாரியம்மனை  வட இந்தியாவில் சீத்தளா (அல்லது சீத்தலா) என்றும் தெலுங்கு மானிலத்தில் மைசம்மா என்றும் கூறி வழிபடுகிறார்கள்.
  73. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் மாரியம்மனை போலேரம்மா, மாதம்மா அல்லது எல்லம்மா என்று அழைத்து பூஜிக்கிறார்கள். அவளை நோய்கள் மற்றும் தீய சக்திகளுக்கு எதிராக தம்மைப் பாதுகாக்கும் கிராம தெய்வமாக (கிராம தேவதை) கருதி வணங்குகின்றார்கள்
  74. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களில் அவரவர் ஜாதிகளுக்கான கிராம தேவதைகளை காண முடிகின்றது.  பொதுவாக பல கிராமங்களில்  பேரன்தாலம்மா, போலேரம்மா, கங்னம்மா, போடுரஜு, அங்காளம்மா, திருப்பதம்மா, கனக புடலம்மா, நாகேந்திருது   மற்றும் மஹான்கலம்மா போன்ற கிராம தேவதைகள் வணங்கப்படுகின்றார்கள் என்றாலும் அவர்களில்  பேரன்தாலம்மா எனும் கிராம தேவதை 400 ஆண்டுகளுக்கும் மேலாகவே வணங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
  75. விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் போத்துராஜா  எனும் கிராம  தெய்வம் கங்கம்மா மற்றும் எல்லம்மா எனப்படும் கிராம தேவதைகளின் சகோதரராக கருதப்படுகின்றார். அவர் ஆலயங்களில் உள்ள தேவைகளை பாதுகாப்பவராகவும், தெய்வ ஊர்வலங்களின்   பாதுகாவலராக உள்ளவராகவும் கருதப்பட்டு  கிராம தேவதையாக  வணங்கப்படுகிறார். அவர் தென் இந்திய  பகுதிகளான ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டின் சில கிராமங்களில் மட்டும் அல்ல மகாராஷ்டிராவின் சில கிராமங்களிலும் கூட வழிபடப்படுகிறார்.
  76. தெலுங்கானாவின் கிராம தேவதைகள் சௌடம்மா (சௌடேஸ்வரி), மாரம்மா, திம்மம்மா  மற்றும் போச்சம்மா போன்றவர்கள் ஆவார்கள்.  பெரியம்மை நோயை குணப்படுத்துபவர், அதிர்ஷ்டங்களைத்  தருபவர் என்றெல்லாம் போச்சம்மா  எனும் கிராம தேவதை குறித்த நம்பிக்கை உள்ளது. அவள் ஒரு காலத்தில் ஒரு  கிராமத்தில் ஒரு இளம் பெண்ணாக இருந்தவளாம். தனது கிராமத்தை ஒரு தொற்று நோயிலிருந்து காப்பாற்ற தெய்வத்திடம் வேண்டிக் கொண்டு,   தன்னை உயிர் தியாகம் செய்து கொண்டு மரணம் அடைந்து விட, அவளை  அந்த கிராமத்தினர்  தெய்வமாக கருதி வழிபடத் துவங்கினார்கள்  என்பது நாட்டுப்புறக் கதை ஆகும்.  அம்மை நோயினை குணப்படுத்துபவள் என நம்பப்படும் இன்னொரு கிராம தெய்வம்  துர்கையின் அவதாரம் எனக் கருதப்படும்  முத்யாலம்மா என்பவள் ஆகும்.   மேலும் அவர் வறட்சி காலத்தில் மழையை பொழிவிப்பவளாகவும்,  தீய சக்திகளிடமிருந்து மக்களை பாதுகாப்பவளாகவும்  நம்புகிறார்கள்.
  77. முன்னர் கிராமப் பகுதியாக செகந்திராபாத் எனும் நகரம் இருந்தபோது அங்கு ஏழு பெண் தெய்வங்களை (சப்த கன்னிகைகளாக இருக்கலாம்) கிராம தேவதைகளாக வணங்கி வந்துள்ளார்கள். செகந்திராபாத் நகரமானதும் அந்த ஏழு சகோதரிகளுக்கும் ஆலயம் அமைக்கப்பட்டு அது ஒரு முக்கியமான ஆலயமாக மாறி விட்டது என்கின்றார்கள். அவர்களோடு சேர்ந்து மல்லண்ணா என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு ஆண் காவல் தெய்வத்தையும் வணங்குகின்றார்கள்.
  78. கால் நடைகளின் நோயை தீர்த்து அவற்றை பாதுகாப்பவராக கட்டமராஜு எனும் தேவதாவை (ஆண் கிராம தேவதை) ஆந்திராவின்  நெல்லூர் பகுதிகளில்  வேளாண்மையில் ஈடுபட்டுள்ள சில கிராமத்தினர் வணங்குகின்றார்களாம். ஆந்திர மானில கிராமங்களில் வழிபடப்படும் இன்னொரு கிராம தேவதையின் பெயர்   நூகாம்பிகை அம்மாவாரு என்பதாகும். அவர் குழந்தைகள் பேறு இல்லாத பெண்களை கருவுறச் செய்வாள் என்பது நம்பிக்கை ஆகும்.
  79. பெரும்பாலான வடக்குப் பகுதிகளில் உள்ள கிராம தேவதை ஆலயங்களில் காணப்படும் முக்கியமான கிராம தேவதை அம்மை நோய்களைக் குணப்படுத்தும் சீதள மாதா எனும் பெண் தெய்வம் ஆகும். வட மானிலங்களில் அவள் மாஹாமாயி, மாஹா அன்னம்மா, சாட் மற்றும் சீதலமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். அந்த தெய்வம் தென் இந்தியாவில் வழிபடப்படும் மாரியம்மன் குடும்பத்தை சேர்ந்த தேவிதான்.
  80. ஆந்திர மானிலத்தின் குண்டூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் போலேரம்மா, கங்கனம்மா, போட்டுராஜு, அங்காளம்மா, திருப்பதம்மா, கனக புட்லம்மா, மஹாங்களம்மா போன்ற கிராம தேவதைகள் வழிபடப்படுகின்றார்களாம்.
  81. ஒரிஸ்ஸாவின் பழங்குடியினருடன் இணைந்துள்ள கிராம தேவதைகள் ஸ்தம்பேஸ்வரி, சமலேஸ்வரி, மற்றும் நான்கு, ஆறு, எட்டு மற்றும் பத்து கைகளைக் கொண்ட துர்கை போன்ற பெண் தெய்வங்கள் என்கின்றார்கள். ஒரிசாவின் பல பழங் குடியினர் அவர்களை வணங்கி வருகின்றனர்.
  82. ஸ்தம்பேஸ்வரி எனும் கிராம தேவதையை  ஒரிஸ்ஸாவின் தென் மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள கிராம மக்கள்  சக்தியின் அவதாரம் என்று கருதி அவளை உருவமற்ற முறையில் ஒரு  நீண்ட பாறைக்  கல் அல்லது மரப் பலகையை  நட்டு வைத்து அதையே ஸ்தம்பேஸ்வரி என்று வணங்குகின்றார்கள். அவளை கம்பேஸ்வரி என்றும் அழைக்கின்றார்கள். (கம்பு என்றால் மரக் கம்பு  என்பது அர்த்தம்). அவள் மீதான நம்பிக்கையும், வழிபாடும்  அந்த கிராம தேவதையின் ஒரு நாட்டுப்புற கதையின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றது
  83. ‘பாணதுர்க்கை’ எனும் கிராம தேவதை ஒடிசா காட்டுப் பகுதிகளில் வசிக்கும் குடியினருக்கு ‘கிராமதேவியாக’ உள்ளார். அந்த தேவியே   கிராமத்தின் தலைமை தெய்வம்.  ஒவ்வொரு  பண்டிகை கொண்டாடப்படும் போதும் அந்த தேவிக்கே  முதல் பிரசாதத்தை சமர்பிக்கின்றார்கள். அதே ஒரிஸ்ஸாவில்தான் வேத வழிபாட்டு முறையிலான மிகப் பிரபலமான, பூரி ஜகந்நாதர் ஆலயமும் உள்ளது.
  84. மேற்கு வங்கத்தில் கிராம தெய்வங்களான ஸ்மசான் காளி மற்றும் ரக்ஷ காளி எனும் பெண் தெய்வங்களை தமக்கு பாதுகாப்பு அளிக்கும் தெய்வங்கள் எனவும்,  விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் இயற்கை சீற்றங்களான பெரும் மழை, மழை இல்லாத வறட்சி போன்ற காலங்களில் அவள் அருளினால்  பயிர்கள் காப்பாற்றப்படுவதாக  நம்புகின்றார்கள்.
  85. கொல்கத்தாவில்  மகா காளி அல்லது கொல்கத்தாவாலி காளி மா என்று அழைக்கப்படும் கிராம தேவி இருக்கிறாள். அவளது வழிபாட்டுத் தலம் அலிப்பூர் அருகே உள்ள கங்கை நதிக்கரையில் காளிகாட்டில் (Kalighat) உள்ளது. இன்னொரு கிராம தேவியானவள் மா தாகினேஷ்வரி காளி என்பவள் ஆகும். அவளது வழிபாட்டுத் தலமும்   கங்கை நதிக்கரையில்  உள்ளது, இருவருமே  கொல்கத்தாவை பாதுகாக்கிறார்கள் என்று நம்புகின்றார்கள்.
  86. தர்ம தாகூர்   எனப்படும் கிராம தேவதை மேற்கு வங்க கிராமத்தினரால் வழிபடப்படும் இன்னொரு பிரபலமான தெய்வம் ஆகும்.  தர்மத் தாகூருக்கு குறிப்பிட்ட வடிவமும் இல்லை என்பதினால் அவர் கற்களின் வடிவத்திலோ, மர  பலகையாகவோ அல்லது ஒரு ஜோடி மர செருப்புகள் தோற்றத்திலோ வணங்கப்படுகிறார் என்கின்றார்கள். அந்த கிராம தேவதை தீயவைகளிடம் இருந்து தமக்கு பாதுகாப்பை வழங்குவதாக நம்புகின்றார்கள். உல்லா   தேவி எனும் கிராம தேவதை தம்மை காலரா போன்ற கொடிய நோய்களிடம் இருந்து காப்பதாக நம்பி வணங்குகின்றார்கள்.
  87. வேத முறையிலான வழிபாட்டிலும் மஹான்களின், தெய்வங்களின் பாத வடிவங்களையும், அவர்கள் பாதங்களில் அணிந்திருந்த காலணி வடிவங்களையும்  வணங்கும் முறை   உள்ளன.  அவற்றை பாதுகை என்பார்கள். மஹான்களின் மற்றும் தெய்வங்களின் பாதுகைகளை வணங்குவது எனும் பழக்கம் பல மதப் பிரிவுகளிலும் உள்ளது. உதாரணமாக தத்தாத்திரேயரின் பாதுகை குஜராத் மாநிலத்தில் உள்ள கிரினார் எனும் இடத்தில் உள்ள  ஒரு மலை மீது உள்ளது என்று கூறுகின்றார்கள். அதே போல கர்நாடக மானிலத்தில்  கனகபூர் எனும் இடத்தில்  நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் பாதுகை வணங்கப்படுகிறது. அதே போல பல மஹான்களின் செருப்புக்கள் (பாதுகைகளும்) பல இடங்களிலும்  வணங்கப்பட்டு வருகின்றன.  ஆகவே   மேற்கு வங்க கிராமத்தில் சிலரால் வழிபடப்படும் செருப்புக்கள் அதிசயம் அல்ல.
  88. இப்படியாக பல கிராமங்களிலும் மெல்ல மெல்ல எழுந்த கிராம தேவதை ஆலயங்களில் இருந்த கிராம தெய்வங்களும், காவல் தெய்வங்களும் யார்? அவர்களின் பின்னணி என்ன?
  89. பொதுவாக இறந்து போனவர்களின் ஆவிகள் வானில் சுற்றித் திரிவதாக மக்கள் நம்புகிறார்கள். பெரும்பாலும் அப்படி சுற்றித் திரியும் ஆவிகள் கிராம எல்லைகளில் அதிகம் காணப்படும் புளிய மரங்களில் குடியிருக்குமாம். (புளிய மரத்தில் மட்டும் ஏன் அவை குடி இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் தெரியவில்லை). அந்த வழியே செல்லும் யாராவது உடலில் அந்த ஆவிகள் புகுந்து கொள்ள அவர்கள் விசித்திரமான முறையில் நடந்து கொள்வார்கள். ஊரில் சென்றதும் அவர்கள் சம்மந்தமே இல்லாமல் எதை எதையோ கூறத் துவங்க மக்கள் பயந்து விடுவார்கள். அப்படி ஆவி புகுந்தவரின் வாயில் இருந்து வெளிவரும் அறிவுரைகளை நம்பி விடுவார்கள். அவர் உடலில் எந்த மரத்தில் குடி இருந்த ஆவி புகுந்ததோ அந்த மரத்தை சுற்றி தடுப்புப் போட்டு அந்த பகுதியை புனிதப் பகுதியாக கருதி, அந்த மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.
  90. அப்படி செய்வதின் மூலம் அந்த மரத்தில் உள்ள ஆவி மகிழ்ச்சி அடைந்து தமது கிராமத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அப்படி செய்கிறார்கள். இப்படி செய்வதின் மூலம் அந்த மரமும் கிராம தேவதையின் இருப்பிடம் ஆகிவிடும்.
  91. புராணங்களில் தெய்வமாக விட்ட ஆவிகள், பூதங்கள் பற்றிய  விவரங்கள் காணப்படவில்லை என்றாலும், பல்வேறு பூதங்கள், ஆவிகள் கிராம தேவதைகளாகி விட்ட கதைகளை காலம் காலமாக நாம் கிராமியக் கதைகளாகவே படித்து வருகிறோம். அதைப் போல கிராம தெய்வங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு அமைத்துள்ள உருவங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள யாராவது ஒருவருக்கு கனவில் வந்து தோற்றம் தரும் என்பதாகவும் நம்புகின்றார்கள்.
  92. முன் காலத்தில் கிராமங்களில் இருந்த கிராமிய மக்கள் பல்வேறு காரணங்களினால் ஆவிகள், பூதங்கள் மற்றும் கிராம தேவதை போன்றவை தமது கிராமங்களுக்கு வருகை தருவதாகவும் அதற்குக் காரணங்கள் கீழுள்ளவை என்றும் நம்பினார்கள்:
  • அந்த கிராமங்களில் வாழ்ந்தவர்களின் ஆவிகள்
  • அங்கு வசித்து வந்தபோது அகால மரணம் அடைந்தவை
  • அந்த கிராமங்களில் அவர்களது நெருங்கிய சொந்த பந்தம் அல்லது விரோதிகள் வசித்து வந்துள்ளனர்
  • தமது அகால மரணத்துக்குக் காரணமானவர்களை பழி வாங்க அங்கு வருகின்றன
  • புராணங்களின் கூற்றின்படி ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் மீண்டும் அந்த  ஆத்மா மறு பிறப்பு எடுக்கும்வரை தமது நெருங்கிய சுற்றத்தாரைப் பாதுகாக்கவும், தமது பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்ளவும் தாம் வாழ்ந்த இடத்தில் வந்து தங்குகின்றன.
  1. இன்னென்ன பாவங்களுக்கு இன்னென்ன தண்டனை கிடைக்கும் என்றும் தீமைகளை செய்பவர்கள் தீய ஆவிகளாக மாறுவார்கள் எனவும் ஆகவே அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள பல்வேறு தெய்வங்களுக்கு பரிகார பூஜைகளையும், பிரார்தனைகளையும் செய்ய வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளன. வேத நியமங்களின்படி தீமைகளை செய்பவர்கள் ராக்ஷசர்களாகவோ அல்லது அசுரர்களாகவோ பிறந்து தனிமைக் காடுகளில் பசியோடு அலைந்து திரிவார்கள் என்றும், வேறு சிலர் தீய ஆவிகளாக மாறி பசியோடும், தாகத்தோடும் வானில் சுற்றித் திரிவார்கள் என்றும், பல்வேறு செய்திகள் காலம் காலமாக மக்களின் மனதில் ஒரு பய நிலையை தோற்றுவித்ததினால் கிராம மக்கள் தம்மை அப்படிப்பட்ட தீய ஆத்மாக்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள தக்க வழி முறைகளைத் தேடி அலைந்து கீழ் கண்ட காரியங்களை செய்யத் துவங்கினார்கள்.
  • கிராம தேவதைகளை, பூதங்களை, தூய ஆத்மாக்களை ஆராதித்தல்
  • ஆத்மாக்கள் அமர்ந்திருந்த பாறைகள் , நிழல் தரும் மரங்கள் போன்ற இடங்களை வழிபாட்டுத் தலங்களாக மாற்றி அமைத்து அங்கு வழிபடுவது
  • தாம் ஸ்தாபித்த கிராம தேவதைகளுக்கும், ஆத்மாக்களுக்கும் வருடாந்திர பண்டிகைகள் நடத்தி வழிபடுவது.
  1. இவற்றை எல்லாம் தாண்டி உள்ள நம்பிக்கை என்னவென்றால் நல்ல ஆத்மாக்கள் தமது கிராமங்களில் வந்து தங்கி இருக்கையில் அவை அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக இருந்து கொண்டு, பூர்வ ஜென்ம பாபங்களின் விளைவாக தீய ஆவிகளாகி வானுலகில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் ஆவிகள் அந்த கிராமங்களில் நுழைய முயன்றால் அவற்றை அடித்துத் துரத்துவதுடன் இயற்கையின் சீற்றங்களான புயல், பெரும் மழை மற்றும் வெள்ளங்களினால் ஏற்படும் தாக்கங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துகின்றன என கிராம மக்கள் நம்பினார்கள். அப்படிப்பட்ட நல்ல ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபட்டு துதிக்காவிடில் அவை கோபம் அடைந்து கிராமத்தில் தீராத நோய் நொடிகளை பரப்பி சொல்லொணா துயரங்களுக்கு தம்மை ஆளாக்கும் எனவும் பயந்தார்கள். இந்த காரணங்களினால் கிராம மக்கள் ஆவிகள் தத்தம் கிராமங்களில் தமக்கு உதவும் என நினைத்த கிராம தெய்வங்களை ஸ்தாபிக்களானார்கள்.
  2. கிராம மக்கள் களி மண்ணால் ஆன ஆண் மற்றும் பெண்களின் சிலைகளை செய்து அவற்றை கிராம எல்லைகளில் வைத்து கிராம தேவதைகளாக வழிபடலானார்கள். அப்படி செய்வதின் மூலம் அவை தமது கிராமத்தை பாதுகாக்கும் என நம்பினார்கள். இப்படிப்பட்ட நிலை கிராமங்களில் இருந்தாலும் தனிப்பட்ட முறையிலும் தமது வீடுகளில்   வேறு ஒரு வழிபாட்டு முறையையும் வைத்து இருந்தார்கள். தமது முதியோர்கள் மறு பிறப்பு எடுக்கும்வரை அவர்கள் ஆவிகளாக சுற்றித் திரிவதாக நம்பியதினால் அந்த ஆவிகளை வணங்கித் துதிப்பதின் மூலம் அவர்களது ஆசிகளைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் தமது வீட்டில் நன்மைகள் விளையும் என நம்பினார்கள். ஆகவே தமது வீடுகளில் சுவற்றில் சில குறிப்பிட்ட சின்னங்களை வரைந்து வைத்தோ அல்லது அந்த சின்னங்களைப் போன்ற பொருட்களை வைத்தோ  அதன் முன் ஒரு எண்ணை விளக்கு ஏற்றி வைத்து, பூ மாலைகளை சூட்டி தினமும் வணங்கித் துதித்தார்கள். அப்படி அவர்களுக்கு மரியாதை தராமல் அவமரியாதை செய்தால் அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகி தீராத நோய் மற்றும் வியாதிகள் வந்து தம் குடும்பத்தினர் அவதியுறுவார்கள் என நம்பியதினால் அந்த ஆவிகளுக்கும் தத்தம் வீடுகளில் மரியாதை செலுத்தலானார்கள்.
  3. இவற்றைத் தவிர அவரவர் வீடுகளின் வாயிலில் பசு சாணம் தெளித்து காய வைத்த தரையில் ஸ்வஸ்திக், வட்ட வடிவங்களின் நடுவில் பொட்டு போன்றவற்றை வரைந்து வைத்து அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பூசி வைத்தார்கள். பசுவின் சாணம் தெய்வீகம் மிக்கது, மஞ்சளும், குங்குமமும் ஆண் மற்றும் பெண்களின் சக்திகளைக் கொண்டவை மற்றும் வீடுகளில் வரையப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட சின்னங்கள் ஆண் மற்றும் பெண்களின் யந்திரங்கள் என்றும் அதில் அந்த தெய்வங்களின் சக்தி அடங்கி உள்ளது, சின்னங்களின் நடுவில் உள்ள போட்டு பொட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போன்றது என்றும் பயந்து எந்த ஆவிகளும் அவற்றைத் தாண்டிச் செல்லாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
  4. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு கிராம மக்கள் களி மண்ணால் ஆன சிலைகளை வடிவமைத்து அவற்றை தத்தம் கிராம எல்லையின் நுழைவிடத்தில் வைத்து அவற்றை காவல் தெய்வமாக வணங்கத் துவங்கினார்கள். பல கிராமங்களின் நுழை வாயிலில் இன்றும் கையில் கத்தி, வாள் மற்றும் பிற ஆயுதத்தை ஏந்திய ஆண் மற்றும் பெண்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காண முடியும். முருகப் பெருமானுக்கு துணைவராக கடம்பன் உள்ளது போல, அம்மனுக்கு துணையாக முனீஸ்வரன் காவலில் உள்ளதைப் போல தாம் வைத்துள்ள காவல் தெய்வங்களின் சிலைகளுக்குள் குடி உள்ள நல்ல ஆத்மாக்கள் தமது கிராமத்தை பாதுகாத்து, ஊருக்குள் நுழைய முயலும் தீய ஆவிகளை விரட்டி அடித்தவண்ணம் இருக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
  5. பல கிராமத்துக்குள் நுழையும்போது அவற்றின் நுழை வாயில் பகுதிகளில் களி மண்ணால் செய்யப்பட்ட உருவ சிலைகள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அருகில் ஏதாவது ஒரு மிருகமும் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். அவற்றில் சில உருவங்கள் கொடூரமான தோற்றத்தில், கையில் ஏதாவது ஆயுதத்துடனும், அவர்கள் பக்கத்தில் பெரும்பாலும் குதிரை அல்லது வேறு ஏதாவது மிருகத்துடன் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். குதிரைக்கு ஒரு விஷேச குணம் உண்டு. அவற்றுக்கு சற்று தொலைவில் நிற்கும் பேய் மற்றும் பூதங்கள் கூட தெளிவாக கண்களில் தெரியுமாம். ஆகவேதான் குதிரைக்கு முக்கியத்துவம் தந்து கிராம தெய்வங்களின் வாகனமாக அதை பல கிராமங்களிலும் வைத்து உள்ளார்கள். தூரத்தில் இருந்தே தீய ஆவிகளை அடையாளம் கண்டு கொள்ளும் கிராம தெய்வங்கள் அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு விரைவாக தீய ஆத்மாக்களின் அருகில் சென்று அவர்களை அடித்துத் துரத்தும் என்பது நம்பிக்கை உள்ளது.
  6. கிராம மக்களினால் வழிபடப்படும் சில தெய்வங்களின் கதைகள் சுவாரஸ்யமானவை. கிராமத்தில் இருந்த எதோ சிலர் மூலம் கொலை செய்யப்பட்டு இருந்தவர்களின் ஆத்மா அங்கு உலவியவாறு இருந்து கொண்டு இயற்கை அழிவுகளான வெள்ளம், புயல் போன்றவற்றை உருவாக்கும். அல்லது நதிகளின் அணைக்கட்டுக்களை உடைத்து வெள்ளத்தை உருவாக்கும் எனக் கருதி அவற்றின் சினத்தை தணிக்கும் வகையில் அவற்றை வணங்கி துதிக்கையில் அந்த ஆவிகள் கிராமத்துக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இப்படியாக ஒவ்வொரு கிராம தேவதை மற்றும் தெய்வங்களின் தோற்றங்களுக்கு  பல கதைகள் உள்ளன.
  7. அனைத்து கிராம தெய்வங்களின் சிலைகளும் குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு அமைந்தவை அல்ல. சில கிராமங்களில் காணப்படும் தெய்வங்களின் உருவங்கள் வெறும் கற்கள் (கிராம தேவதைகளாகக் கருதி) மட்டுமே. எந்த உருவமும் கொண்டிராத அந்த கற்கள் பாறைகளின் மீது வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. மேலும் சில கிராம தேவதைகளின் உருவங்களை பாறைகளின் மீதும் வரைந்து வைத்து உள்ளார்கள்.
  8. அனைத்து கிராம தேவதைகளும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவ அமைப்பைக் கொண்டதாகவும் இல்லை. சில கிராமங்களில் மறைந்தவர்களின் ஆத்மாக்கள் அமர்ந்து இருந்த பாறைகளை வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைத்து உள்ளார்கள். கண்களுக்கு தெரியாத பூதமோ, இறந்தவர்களின் ஆத்மாவோ அல்லது  கிராம தேவதையோ, அவர்களது உருவங்களாக கற்பனை செய்து வடிவமைக்கப்படும் பாறைகள் அனைத்திலும் அவர்களது ஆவிகள் குடி கொண்டு இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது என்பதினால் அந்த  கிராம தெய்வங்களின் சிலைகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு ஆராதிக்கிறார்கள். மலர் மாலைகளை சூட்டி வணங்குகிறார்கள்.
  9. மேலே குறிப்பிடப்பட்டு உள்ளவை அனைத்துமே கிராமங்களில் வாய் மொழி வழியே  காலம் காலமாக கூறப்பட்டு வரும்  நம்பிக்கைக்  கதைகள்தான். அதையே  சில கிராம ஆலயங்களில் உள்ள பூஜாரிகளும், ஆலய பண்டிதர்களும்  கூறுவார்கள்.
  10. இன்றும் பல கிராமங்களிலும் அந்த தேவதைகள் அல்லது தெய்வங்களை கிராம தெய்வம் என்றே அழைத்து சிறிய வழிபாட்டு தலம் அமைத்து, மரங்களின் அடியில் பிரதிஷ்டை செய்து வைத்து  மந்திர உச்சாடனைகள் இல்லாத வகையில் அவர்களை பூஜித்து துதிக்கின்றார்கள். பல இடங்களிலும் பூஜை சடங்கு முடிவில்  மிருக பலிகள் தரப்படுகின்றன, அல்லது பொங்கல் படையல் வைக்கப்படுகின்றன. சில   இடங்களில் தீ மிதித்தல் மற்றும் வாயிலும், மூக்கிலும் அலகு குத்தி    வழிபடும் முறைகளும் உள்ளன.
  11. காலம் மாறிக் கொண்டே இருக்க, ஆகம விதி ஆலயங்கள் தோன்றத் துவங்கிய காலத்தில் கிராம தேவதைகள் மற்றும் நகர தெய்வங்கள் என்ற பேதங்கள் மறையத் துவங்கி தெய்வங்களை கிராம தெய்வங்கள், ஆகம விதி தெய்வங்கள், இன தெய்வங்கள் என பிரித்துக் கூறலானார்கள்.
  12. நான் முன்னரே எழுதியது போல கிராமப்புறங்களில் இருந்த மக்களினால் ஒரு கட்டத்தில் கிராம தேவதைகள் என கருதப்பட்ட தெய்வங்கள் பின்னர் ஆகம தெய்வங்களாக ஏற்கப்பட்டார்கள். இதனால் கிராமப்புறங்களில் கிராம தேவதை அல்லது காவல் தெய்வ வழிபாடு இல்லை என்பது அர்த்தம் அல்ல. ஆகம முறையிலான ஆலயங்கள் இருந்தாலும் இன்றும் பல இடங்களிலும் கிராம தேவதை ஆலயங்கள் உள்ளன. அவற்றில் உள்ள கிராம தேவதைகள் மக்களால் வணங்கப்பட்டு வருகின்றன.
  13. கிராம தேவதை ஆலயங்களிலும் பொதுவாக பெண் தெய்வங்களையே அதிகம் வணங்கி உள்ளார்கள். அதற்குக் காரணம் ஒருவருக்குத் தேவையான அனைத்தையும் அன்பையும் தருபவள் ஒரு தாயார். தானியங்களிலும் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களின் விதைகளே செடியாகி முற்றி, அதாவது கருவுற்ற பெண் பிரசவிப்பதைப் போல, கனிந்தப் பின் காய் கனிகளைத் தருகிறது. ஆகவே தோட்டங்களில் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களே நிறைந்து இருப்பதினால் அவற்றைப் பாதுகாக்க பெண் இனத்தை சேர்ந்த கடவுளே சரியானதாக இருக்கும் என மக்கள் எண்ணினார்கள். அதனால்தான் அந்த தோட்டங்களைப் பாதுகாக்க பெண் இனப் பூதங்கள் வசிப்பதாகக் கருதப்படும் களிமண் அல்லது மூங்கில் கட்டைகளில் பெண் பூதங்களைக் குறிக்கும் பயங்கரமான உருவத்தைப் படைத்து அதை தோட்டங்களில் பெரிய கொம்புகளிலும், பரண்கள் மீதும் வைத்து விடுவார்கள். அவைகளும் காவல் தெய்வங்கள் எனப்பட்டது.
  14. இன்னொன்று என்ன என்றால் தெய்வீக சம்மந்தமான பல கதைகளை படித்தால் பெரும்பாலான அரக்கர்கள் மற்றும் அசுரர்களையும் அழித்தவர்கள் பெண் உருவில் இருந்த தெய்வங்களே என்பது புரியும். ஆகவே அசுரர்களையும், அரக்கர்களையும் அழிக்கச் சென்ற பெண் தெய்வங்களுக்கு யுத்தத்தில் உதவியாக இருக்க அவர்களது உடலில் இருந்து வெளி வந்த படையினர் பெரும்பாலும் பெண் கணங்களே. இதனால்தான் ஆண் தெய்வங்களை விட அதிக தெய்வங்கள் பெண்களாகவே இருந்துள்ளன. இதனால் பெண் தெய்வங்களுக்கு கிராமங்களில் அதிக ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்துமே அம்மன் ஆலயங்களாக உள்ளன.
  15. அதற்கும் மேலே ஒரு படி போனால் இன்னொரு உண்மை புரியும். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவள் பெண் தெய்வம் என்பதான நம்பிக்கை உள்ளது. மேலும் முக்கியமான மந்திர வழிபாட்டு வழிமுறையைக் பாருங்கள். அவற்றில் சுமார் 75% முதல்  80% சதவிகிதம் பெண் தெய்வங்களின் ஆராதனைகளாகவே இருக்கும். ஆகவே ஆண் தெய்வங்களை விட பெண் தெய்வங்களையே சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதி உள்ளார்கள்.  ஆகவேதான் ஆண் தெய்வ  வழிபாட்டை விட பெண் தெய்வ வழிபாடு அதிகம் உள்ளது.
  16. பல மலைவாழ் மக்களை உள்ளடக்கிய ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேச மானிலங்களில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல கிராமங்களிலும் பார்வதியின் அவதார கணங்களாக கருதப்படும் மோகினி மற்றும் யோகினி எனும் பூத கணங்களின் வழிபாடு நடைபெற்று வந்துள்ளது. மோகினியில் அறுபத்தி நான்கு வகைகளிலான மோகினிகள் உள்ளார்கள். அவர்கள் பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். அதில் சிலருக்கு மிருகங்களின் முகங்களும் அமைந்திருக்கும். இவற்றை ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள மோகினி ஆலயங்களில் காணலாம். மோகினி மற்றும் யோகினி எனும் பூதங்கள் இரவு நேரத்தில் அந்த ஆலயப் பகுதியின் மேற்பரப்பில் சுற்றித் திரியும் என்றும், அவை பல விசேஷ தந்திர மந்திர சக்திகளைக் கொண்டவை என்றும், அந்த யோகினிகளும், மோகினிகளும் தமது கிராமங்களை பாதுகாக்க வந்த கிராம தேவதை என அவற்றுக்கு சிலை வைத்து   வழிப்பட்டு வந்துள்ளார்கள்.
  17. மொத்தத்தில் கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்களும் நகர தெய்வங்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைதான். அதாவது அனைவரும் தெய்வீக நிலையில் உள்ளவர்கள். அவற்றில் சிலர் ஆகம வழி முறையில் வழிபடப்பட்டவர்கள். சிலர் ஆகம முறையில் வழிபடப்படாதவர்கள். சிலர் தெய்வங்களில் முதன்மை தெய்வம். சிலர் தெய்வீக கணங்கள், சிலர் பரிவார தேவதைகள். இதுவே உண்மை நிலை.

SOME OF THE REFERENCES WHICH HELPED IN THE STORY:-