அக்கா மகாதேவி
சாந்திப்பிரியா 
”பிச்சைப் பாத்திரத்தில் உணவு போட கிராமங்களே உள்ளன ,
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு கிணறுகளும், குளங்களும் உள்ளன,
படுத்து உறங்கவோ பாழடைந்த ஆலயங்களும் உள்ளன,
ஆனால் என்னுடைய இதயத்துக்கு துணை இருக்க
சென்னமல்லிகார்ஜுனா மட்டுமே இருக்கின்றார் ”
இப்படியான பொருளில் கவிதையை இயற்றியவர் கர்நாடகத்தில் இருந்த ஒரு பெண் துறவியான அக்கா மகாதேவி என்பவர். 1150 ஆம் ஆண்டு முதல் 1175 வரை வாழ்ந்து இருந்த அவர் ஷிமகோடா மாவட்டத்தில் உள்ள பானவாசி நகரின் அருகில் இருந்த உடுதாடி எனும் கிராமத்தில் அன்னம்மா பிரபு மற்றும் கின்னாரி பொம்மையா என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தவர். பிறந்த குழந்தையின் வளர்ப்பு பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவர் தன்னுடைய தாயாரின் அரவணைப்பில்தான் வயதுக்கு வரும்வரை வளர்ந்ததாக தெரிகின்றது.  இளம் வயதிலேயே அவர் ஆன்மீக நாட்டம் கொண்டவராகவே இருந்திருக்கின்றார். சிவகாமாச்சாரியார் என்பவரிடம் கல்வி பயின்ற அந்த அம்மையார் அந்த வயதிலேயர் கவிதைகளை எழுதுவது உண்டாம். சிவலிங்கத்தை வணங்கித் துதிப்பாராம். சிவபெருமானின் இன்னொரு பெயரான சென்ன மல்லிகார்ஜுனா எனப்படும் சிவன் உருவை அதிகம் ஆராதித்தவர். விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தியது இல்லை, மாறாக ஏதாவது எழுதுவாராம்.

அந்தக் காலங்களில் திருமண வயதான பெண்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். வயதுக்கு வந்த அக்கா மகாதேவிக்கும் அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அதை அவள் ஏற்கவில்லை. அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கவே விரும்பினாள். அந்த ஊரில் இருந்த கௌசிகா எனும் தனவந்தர் அவள் மீது ஆசை கொண்டார். அவளை மணக்க விரும்பினார். அவளுடைய பெற்றோர்களும் அவருடன் அவளை திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால் அக்க மகாதேவி அதை ஏற்கவில்லை. தன்னுடைய மானசீகக் கணவர் சென்ன மல்லிகார்ஜுனாதான் என்றே உறுதியாகக் கூறினாள்.

இதோ அவர் கவிதையை படியுங்கள்  :-
அம்மா, கேள்  …நான் அவரை நேசிக்கின்றேன்,
அவர் இந்த உலகில் உள்ளவர்களில் ஒருவர் மட்டுமே அவர்,
அவருக்கு இறப்பும் இல்லை, பிறப்பும் இல்லை,
அவருக்கு ஜாதியோ, பேதமோ ஒன்றும் இல்லை,
அவர் எங்கும் நிறைந்தவர், உருவமற்றவர், மாறாதவர் 
நம் எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட அழகைக் கொண்டவர்,
இந்த உலகில் ஆள்ள அனைத்துமே முடிவாக அழிந்து விடுபவை,
எனக்கு அவர்களில் ஒருவரும் வேண்டாம்
என்னுடைய நாயகனாக என்றுமே இருக்க உள்ளவர்
ஒன்றே ஒருவரான சென்னை மல்லிகார்ஜுனா மட்டுமே

இரு புறமும் எதிர்ப்பு வலுக்கவே அவள் வீட்டை விட்டு ஒருவரிடமும் கூறாமல் வெளியேறினாள். அக்கா மகாதேவியின் திருமணம் குறித்தும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் அவள் அந்த சிற்றரசரை மணந்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அவர் பெரும் பணக்காரர். ஆனால் அந்த வாழ்கை அக்காவிற்குப் பிடிக்காமல் அவரை விட்டு ஓடி விட்டார் என்று கூறினாலும், வேறு சிலர் அவள் திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும் கூறுகிறார்கள். தன்னுடைய பெற்றோர்களிடம் மீரா எப்படி கிருஷ்ணரையே தன்னுடையக் கணவராக ஏற்று இருந்தாரோ அப்படித்தான் தனது கணவர் சென்னமல்லிகார்ஜுனாதான் என்றே அவர் கூறி வந்துள்ளார்.

தனது திருமணம் குறித்து இதோ  அவர் எழுதிய ஒரு கவிதை :

இந்த உலகில் உள்ள அனைவருமே என்னுடைய பெற்றோர்கள்தான்,
ஒருவருக்கு ஒருவர் என்ற ஜோடியாக அவர்கள் என்னை சேர்த்தது
சென்ன மல்லிகார்ஜுனாவுடன்தான்.
அனைத்து நட்சத்திரங்களும் கோள்களும் பார்த்துக் கொண்டே இருக்க
என்னுடைய குருநாதர் வந்து என் கையைப் பற்றிக் கொண்டார்.
லிங்கமான சிவனே மணமகனாகியது,
நானோ அங்கு மணமகள் ஆனேன்.
ஆகவே என் கணவரான சென்ன மல்லிகார்ஜுனாவுக்கோ
அல்லது இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கு வேறு எந்த சம்மந்தமும் இல்லை.
அக்கா மகாதேவி 
சில கன்னட புராணக் கதைகளில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பார்வதியின் ஒரு ரூபமே எனக் கூறி இருந்தாலும், அவரது சன்யாச வாழ்க்கைக்கு முன்னர் வாழ்ந்த வாழ்கை வரலாறு குறித்த செய்திகள் எதுவும் எழுத்து வடிவில் எழுதி வைக்கப்படவில்லை. அவர் சன்யாசினி ஆகி வீர சைவர்கள் குழுவில் சேர்ந்த அவரைப் பற்றிய செய்திகள் அனைத்துமே வாய் மொழிக் கதைகளாகவே இருந்து உள்ளன.

வீட்டை விட்டு வெளியேறும் முன்னர் தான் ஒரு சன்யாசினியாக போக விரும்புவதாக தன்னுடைய பெற்றோர்களிடம் கூறினார். அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளை அவர்களால் தடுக்க முடியவில்லை. எது எப்படியோ, இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தபடி சிவபெருமானின் பெருமைகளை பரப்பி வந்தார். அந்த காலங்களில் பெண்கள் சன்யாசத்தை ஏற்பதை ஆச்சாரக் குடும்பத்தினர் எதிர்த்து வந்தார்கள். ஆகவே அவர்களது எதிர்ப்பை சமாளிக்க அவர் சிவ பக்தர்களான வீரசைவ பிரிவினருடன் சேர்ந்து கொண்டார். அவர் 400 ருக்கும் மேற்பட்ட கவிதைகளை இறைவன் மீது இயற்றி உள்ளார்.

அவர் பக்தியைக் கண்ட வீர சைவ துறவிகளான பசவண்ணா, சென்ன பசவண்ணா, அல்லமா பிரபு, கென்னாரி பொம்மையா போன்றவர்கள் அவளை புகழ்ந்து எழுதி உள்ளார்கள். தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கையில் அக்கா மகாதேவி தன்னுடைய வெளித் தோற்றம் மட்டுமே பெண் இனத்தை சேர்ந்தது, ஆனால் தன்னுடைய ஆத்மாவும், தானும் சிவனை சேர்ந்தவள் என்றே கூறிக் கொண்டார்.  ஒரு  முறை அக்கா மகாதேவி  ஒரு கூட்டத்தில்  அல்லமா பிரபுவின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எல்லாம் சற்றும் தாமதிக்காமல் சரியான பதில் தந்ததைக் கண்டவர்கள் அவரை அக்கா என அழைக்கலாயினர்.

படம் நன்றி:-http://sscheral.sulekha.com/albums/lordbasavaandsharanas/37977/slideshow/249951.htm

சன்யாசினியாக மாறிய அவர் ஆடைகள் அணியாத நிர்வாண நிலையிலேயே இருந்ததாகவும், கடவுளின் அருளினால் அவளுடைய உடம்பு முழுவதையுமே நீண்டு வளர்ந்து இருந்த அடத்தியான தலைமுடி ஒரு உடுப்பு போல மறைத்து வைத்தே இருந்தது என்பதே அவர் எந்த அளவுக்கு தெய்வீக சக்தி பெற்று இருந்தார் என்பதை விளக்கும். அக்கா மகாதேவி பார்வதியின் ஒரு அவதாரம் என்றும் சாப விமோசனம் அவர் பூமியில் வந்து பிறந்து இருந்தார் எனவும் ஒரு கிராமிய கதையும் உள்ளது .

படம் நன்றி:-http://sscheral.sulekha.com/albums/lordbasavaandsharanas/37977/slideshow/249951.ஹதம்
அவர் தன்னுடைய நிர்வாண நிலையைப் பற்றி எழுதிய ஒரு கவிதை இது 
இந்த உலகமே ஆண்டவனின் கண்களாக உள்ளபோது,
அவர் இந்த உலகில் உள்ள அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளபோது,

நீ உன்னிடம் உள்ள எதை  நீ அவரிடம்   மறைக்க  நினைக்கின்றாய்  

12 ஆம் நூற்றாண்டில் அவர் பெண்களின் விடுதலையில் பெரும் பங்காற்றினார். அங்கும் இங்கும் நடந்த ஆன்மீக விவாதங்களில் கலந்து கொண்டு தன தரப்பு வாதங்களை ஆன்மீகத்தின் பக்கம் எடுத்து உரைத்து ஆன்மீகப் பாதைக்கு வலு சேர்த்தார். பல இடங்களிலும் சுற்றிக் கொண்டு இருந்தவர் சென்ன மல்லிகார்ஜுனாவை போற்றித் துதித்தவண்ணமே இருந்தார். ஸ்ரீசைலம் பகுதியில் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சென்னமல்லிகார்ஜுனா ஆலயம் இருந்த காட்டுக்குள் சென்று அங்கிருந்த குகையில் தங்கி தவம் செய்தவாறு இருந்தார். அவருக்கு துணையாக இருந்தவை மரங்கள், செடி கொடிகள் மற்றும் வன விலங்குகளே.

அக்காவின் குகை மற்றும் குகைக்கு உள்ளே

அவர் புகழ் கன்னட நாடெங்கும் பரவியது. அந்த குகை தற்போது அக்கா மகாதேவி குகை எனப்படுகின்றது. அங்கு சில காலம் இருந்தப் பின் அவர் பானவாசிக்கே வந்து தங்கினார் என்கிறார்கள். அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்றாக ஜாதி பேதங்களை உடைப்பது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை ஒழிப்பதுமாக இருந்தது. ஒரு பெண்ணாக இருந்து அவர் அவற்றை பெருமையுடன், அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி செய்து வந்துள்ளார் என்பதைப் பார்த்து வியக்க முடியாமல் இருக்க முடியாது. அவர் நூறு வருடகாலம் அந்த குகையில் இருந்து உள்ளார் என்று சிலர் கூறினாலும் வெளி உலகிற்குத் தெரிந்து அவர் இருபத்தி ஐந்து ஆண்டுகளே உயிருடன் இருந்துள்ளார்.