சிவபெருமானின்   பிருமஹத்தி 
தோஷத்தை  களைத்த  ஆலயம்
சாந்திப்பிரியா   
 திருக்கரம்பனூர் உத்தமர் ஆலயம் எனும் பிட்ஷையாண்டவர் ஆலயம் திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆலயம் உள்ள ஊர் திருச்சி மற்றும் விழுப்புரத்துக்கு இடையிலான பகுதியாகும். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் இங்குதான் திரு மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா போன்ற மூவரும் வணங்கப்படுகிறார்கள். அது போலவே லஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி போன்றவர்களும் வணங்கப்படுகிறார்கள். இந்த ஆலயத்தை பற்றிய சுவையான சில கதைகள் உள்ளன.

இந்த இடத்தில் விஷ்ணுவானவர் சில காலம் தவம் செய்ய வந்து தங்கினார். அப்போது தன்னை மறைத்துக் கொள்ள கடம்பா மரம் போல உருவில் நின்று இருந்தார். ஆனால் விஷ்ணுவை தேடி வந்த பிரும்மா அவரை கண்டு பிடித்து விட்டார். கடம்ப மரமாக நின்ற விஷ்ணுவிற்கு தமது கமண்டலத்தில் இருந்து தண்ணீர் ஊற்றி அபிஷேகித்தார்.  அதைக் கண்ட விஷ்ணு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு அங்கேயே தரிசனம் தந்தார். கடம்ப மரத்தின் அடியில் விஷ்ணுவிற்கு அபிஷேகமாக  பிரும்மா ஊற்றிய நீர்  வழிந்து ஓடி ஒரு குளமாக மாறியது. அதையே பிரும்ம தீர்த்தம் என அழைகின்றார்கள். அதனால்தான் இங்கு பிரும்மாவும் விஷ்ணுவும் பூஜிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அந்த இடத்தில் சிவ பெருமானின் சன்னதி ஏன் வந்தது? ஒரு முறை பிரும்மா சிவனார் இருந்த கைலாசத்திற்கு அவரைப் பார்க்கச் சென்றார். அப்போது பிரும்மாவுக்கு  ஐந்து தலைகள் இருந்தன. வந்தவர் ஒரு இடத்தில் நின்று இருந்தார். அவருக்குப் பின்னால் வந்து நின்ற பார்வதியோ சிவனைத் தவிர வேறு யாருக்கும் ஒன்றுக்கும் மேலான தலை கிடையாது என்பதினால் அவரை சிவன் என நினைத்து அவர் பாதங்களை மட்டுமே பார்த்துக் கொண்டே பூஜிக்கத் துவங்கினார். பிருமாவோ தன்னை சிவனாக பாவித்து பார்வதி பூஜிப்பதை கர்வத்துடன் ஏற்றுக் கொண்டு நின்று கொண்டு இருந்தார். அவளிடம் தான் யார் என்பதைக் கூறவில்லை. அப்போது சிவன் அங்கு வந்தார். நடந்ததைக் கண்டு கோபமுற்று பிரும்மாவின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். அதைக் கண்ட லஷ்மி கோபமுற்று சிவனை சபித்தாள். ஆகவே பிரும்மஹத்தி தோஷம் ஒட்டிக் கொள்ள  அவர் கிள்ளிய தலை அவர் கையுடன் ஒட்டிக் கொண்டது. அதை எடுக்க முடியவில்லை. ஒட்டிய தலை கையில் இருக்க எப்படி உணவு அருந்துவது? அங்கும் இங்கும் சுற்றி அலைந்தார். தலையை கையில் இருந்து எடுத்து எறிய முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. தவித்தார். அந்த நிலையில்தான் அவர் திருக்கரம்பனூருக்கு வந்தார். அதைப் பார்த்த மகா லஷ்மி வருந்தினாள் . அவருக்கு பிட்ஷைப் போட்டார். அதைப் போட்டதும்  அவர் கையில் ஒட்டிக் கொண்டு இருந்த தலை கீழே விழுந்தது. சிவன் சாப விமோசனம் அடைந்தார்.

ஆகவே இந்த தலம் அனைத்து சாபங்களையும் விலக்கும் என்ற பெருமை பெற்றது.  அதனால் இங்குள்ள சிவனை பிட்ஷையாண்டார் என அழைகின்றார்கள். மேலும் இந்த தலத்தில்  உள்ள பிருமா ஒரு குருவாக பணி  புரிகின்றார். ஆகவே இங்கு வியாழன் கிழமைகளில் வந்து அவரை வணங்குவது விழேஷமாகக் கருதப்படுகின்றது.  ஆலயத்தைக் கட்டியவர்கள் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை ஆனால் பாண்டிய மற்றும் சோழர் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன.  ஆலயத்தின் மூல தெய்வம் புருஷோத்தமர். அவர் படுத்துள்ள நிலையில் காணப்படுகின்றார்.