திருமீயச்சூர்
லலிதாம்பிகை ஆலயம்
சாந்திப்பிரியா
 

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். கருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் மீது ஐந்து அடி உயர லலிதாம்பிகை வலது காலை மடித்து வைத்துக்கொண்டுகம்பீரமாக அமர்ந்து உள்ளாள். ஆலயம் லலிதாம்பிகைக்கு என்றாலும், மூலவர் மேகநாதர் எனப்படும் சிவ பெருமானே.ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறு சுவையானது.

காஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. அவர் குழந்தை பேறு பெறுவதற்கு சிவபெருமானை துதித்து அவரிடம் இருந்து பிரசாதமாக முட்டைகளை பெற்றார். அதில் இருந்து காஷ்யப முனிவர் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட, பயந்து போன சூரியனார் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கூறியபடி திருமயிச்சூர் ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை துதித்து ஏழு மாதம் தவம் இருந்து சாப விமோசனம் அடைந்தார் என்பதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

அப்போது பண்டாசுரன் என்னும் அசுரனை வதைத்தப் பின் அந்த வெற்றி விழாவின் போது ஸ்ரீ புரம் என்னும் நகரத்தில் அவளுடைய அரண்மனையில் எல்லா தேவதைகளும் சூழ்ந்திருக்க தன்னுடைய கணவர் காமேஸ்வரருடன் லலிதாம்பிகை வீற்று இருக்கையில் ஒரு நாள் சூரியனார் துக்கம் தாங்காமல் அழுதவாறு ஓலம் எழுப்ப சிவபெருமானின் மனைவியான பார்வதி கோபமடைய, அதைக் கண்ட சிவபெருமான் அவளிடம் சூரியனின் அவஸ்தையைக் கூறி அவளை சாந்தப்படுத்தினாராம். அப்போது அவளது முகத்தில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்து நிற்க, அந்த தேவதைகளை நோக்கி தான் யார் என்பதையும் தன்னை பற்றிக் கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குமாறும், அந்த ஸ்லோகத்தை முறைப்படி கூறி தன்னை துதிப்பவர்களுக்கு, அந்த ஸ்லோகமே தன்னிடம் வந்தடையும் பாதையாக அமையட்டும் எனக் கூறினார். அதன்படி வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்த்ரமாக ‘லலிதா சகஸ்ரநாமம்’ ஸ்லோகத்தினை உருவாக்கினர். அப்படி அந்த தேவதைகள் பாடியபோது அதனால் சாந்தம் அடைந்த பார்வதி தேவி, அன்னை லலிதாம்பிகையாக உருமாறி உலகிற்கு காட்சி தந்தாள். வெளிவந்த வஸீனி முதலிய வாக்கு தேவதைகள் லலிதா சஹஸ்ரநாம தோத்திரத்தால் அம்பிகையைத் துதித்தனர். அதனால் மனம் சாந்தம் அடைந்த தேவி இப்படியாக கூறினாளாம். “என் கட்டளைக்கு ஏற்பவே இந்த தோத்திரத்தை வாக்கு தேவிகள் செய்துள்ளார்கள். என்னுடைய அருளை வேண்டி இதை படிப்பதுடன் பிற பக்தர்களிடமும் பரவும்படி செய்யுங்கள். பூஜையும் ஜபமும் செய்தாலும் செய்யாவிட்டாலும் எனது அருளை பெறுவதற்கு இந்த சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யவேண்டும்” அதனால்தான் அம்பிகையின் பேரருளை பெற வேண்டும் என என்று யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் லலிதா சஹஸ்ரநாமத்தைக் கூற வேண்டும் என்பதாக கூறப்படுகின்றது.

அவளை போற்றி வாக்கு தேவதைகள் துதித்தவைகளே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று என்பதாக கூறுகிறார்கள். லலிதா சஹஸ்ரநாமத்தின் மேன்மை எப்படி உலகிற்கு தெரிய வந்தது ? இந்த ஆலய வளாகத்தில்தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் திருப்பூர சுந்தரியின் ஸ்லோகத்தை அகஸ்திய முனிவருக்கு பகவான் ஹயக்ரீவர் போதனை செய்து உபதேசம் செய்தாராம். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரமான பகவான் ஹயக்கிரீவருக்கும், மாமுனிவரான அகத்திய முனிவருக்கும் இடையே நடைபெறும் சம்பாஷனையாக அதை சித்தரிக்கிறார்கள். பகவான் ஹயக்கிரீவர் அகஸ்திய முனிவரிடம் லலிதமகா திரிபுர சுந்தரியின் மகிமைகளையும் விளையாடல்களையும் கூறினார். ஸ்ரீ சக்கரத்தில்அமர்ந்து உள்ள அம்பிகையின் இருப்பிடமான ஸ்ரீபுறத்தின் மேன்மையை விவரித்தார், அம்பிகையை உச்சரிக்கும் மந்திரங்களின் மகிமையை கூறினார், அந்த ஸ்ரீசக்கரத்தில் உள்ள தெய்வ, தேவதைகளைப் பற்றி கூறினார். அந்த சம்பாஷணையில் அகஸ்திய முனிவர் பகவான் ஹயக்கிரீவரிடம் மீண்டும் மீண்டும் லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களை குறித்த மேன்மையை கூறினார். ஞானத்தின் அடையாளமான பகவான் ஹயக்ரீவர் நேரடியாக அகஸ்திய முனிவருக்கே லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார் என்பதில் இருந்தே அது எத்தனை மகிமையான சுலோகம் என்பது விளங்கும்.

லலிதா சஹஸ்ரநாமம் என்பது என்ன என்றால் அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கொண்ட ஸ்லோகங்கள். ‘சஹஸ்ர’ என்றால் ஆயிரம் மற்றும் நாமம்’ என்றால் பெயர்கள் என்பதினால் லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்களை சொல்லி அர்ச்சனை செய்வதை லலிதா சகஸ்ர நாம பூஜை என்கின்றார்கள்.

சகஸ்ர நாமாக்களில் உயர்ந்தது வாக்தேவிகளால் இயற்றப்பட்ட லலிதா ஸகஸ்ரநாமமாகும். இதில் உள்ள வார்த்தைகள் சத்தியமானவை, மந்திர சக்தியுடையவை. இது எல்லா நோய்நொடிகளையும் விலக்கும், செல்வத்தையும் நீண்ட ஆயுளும் தரும். ஸ்ரீவித்யா உபாசனையால் சாதகனுக்கு ஞானம், எதையும் வெல்லும் ஆற்றல், வாக்கு வல்லமை போன்றவை கிட்டி முக்தியும் கிடைக்கும்.

லலிதா ஸஹஸ்ரநாமம் என்பது பிரும்மானந்தபுராணத்தில் 36 ஆறாவது காண்டத்தில் காணப்படுகின்றது. பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், அந்த தேவியின் சரிதமும் அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான ஸ்தோத்திரம் உள்ளது என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. அதில் தேவியின் ஸ்வரூபம், அவள் தோன்றிய வரலாறு, அவளை வழிபட தக்க யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை பரமேஸ்வரியின் வாயில் இருந்து வெளிவந்த வாக்தேவதைகளே கூறுவதால் லலிதா சஹஸ்ரநாமம் வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

லலிதாம்பிகையின் இருப்பிடம் எது ? ஸ்ரீசக்கரம் எனும் அபார சக்தி கொண்ட சக்கரத்தின் மையத்தில் அவள் அமர்ந்து இருக்கின்றாள். ஸ்ரீ சக்கரம் எனும் ஸ்ரீபுரம் என்பதே அவளது வாசஸ்தலமாகும். அதை சுற்றி பல்வேறு தேவதைகளும் தெய்வங்களும் அவளுடைய பாதுகாப்பிற்காக காவல் புரிகின்றன. திரிபுர என்பது ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் என்பதினால் ஆறு அபார சக்திகளை உள்ளடக்கிய அவளுக்கு திரிபுரசுந்தரி என்ற பெயர் வந்தது. அவ்வாறு அம்பிகை தோன்றிய நாள் மாசி மாதம், மக நட்சத்திரம் கூடிய பெüர்ணமி தினம். அந்த தினத்தில்தான் அம்பிகை பண்டாசுரனை வதைத்து அமரர்களின் துயர் தீர்த்தாள். அம்பிகையின் வடிவங்களில் முக்கியமானது ராஜராஜேஸ்வரி எனப்படும் லலிதா தேவியாகும்.

ஜாதி பேதம் இன்றி இந்த நாமாவளியை யார் வேண்டுமானாலும் கூறி பூஜை செய்யலாம். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் அம்சமாகிய லலிதாவின் பெயரில் இந்த சஹஸ்ரநாமம் விளங்கினாலும்கூட எந்த அம்பாளையும் இதன் நாமாவளியை கூறி அர்சித்தாலோ, பூஜை செய்தாலோ அம்பாள் பெருமகிழ்ச்சி அடைந்து அருள் புரிவாள் என்பது ஐதீகம். ஸ்ரீ சக்ரம் அல்லது ஏதாவது ஒரு அம்பாளின் உருவப் படம், ஸ்ரீசக்ர மஹாமேரு ஆகியவற்றை வைத்து இந்த சஹஸ்ரநாமத்தைச் கூறி பூஜிக்கலாம்.

ஸ்ரீ சக்கரத்தில் உள்ள லலிதாம்பிகையை சுற்றி உள்ள பரிவார தேவதைகளாக வஸினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜெயினி, சர்வேஸ்வரி மற்றும் காளி எனும் எட்டு தேவதைகளும், யோகினி தேவதைகளாக வித்யா யோகினி, ரேசகா யோகினி, மோசிகா யோகினி, அம்ருத யோகினி, தீபிகா யோகினி, ஞான யோகினி, ஆப்யாயீனி யோகினி, வ்யாபீனி யோகினி, மேதா யோகினி, வ்யோமரூபா யோகினி, ஸித்தரூபா யோகினி மற்றும் லஷ்மி யோகினி போன்ற பன்னிரண்டு யோகினிகளும் உள்ளார்கள் என்பதையும் விளக்கினார். அந்த இருபது தேவதைகளைத் தவிர துவார பாலா தேவதைகளாக , நான்கு திசைகளில் உள்ள வாயிலிலும் கண்டா கர்ஷிணி, ரஸா கர்ஷிணி, ரூபா கர்ஷிணி மற்றும் ஸ்பர்ஸா கர்ஷிணி போன்ற நான்கு தேவதைகள் உள்ளார்கள். இவர்களைத் தவிர 16 விதமான ஷோடச நித்யாள் என்ற தேவதைகளும் அவளுக்கு காவலாக இருக்கின்றார்கள். இத்தனை சக்தி வாய்ந்த லலிதாம்பிகை வீற்று இருக்கும் இடமான ஸ்ரீ சக்கரம் எத்தனை சக்தி வாய்ந்த எந்திரமாக இருக்கும்?

அம்பாளின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ‘ஸ்ரீபுரம்’ என்ற இடத்தில் வசிப்பதாகக் கூறுகிறது புராணங்கள். அந்த ஸ்ரீபுரத்தில் திவ்யமான ராஜ கிருஹத்தின் நடுவில் நவரத்தின மயமான சபையில் சிந்தாமணியால் உருவாக்கப்பட்ட கோடி சூர்ய பிரகாசத்துடன் கூடிய, ஒப்புயர்வற்ற, அழகிய சிம்ஹாசனத்தில் அம்பாள் பரமேஸ்வரருடன் அமர்ந்திருக்கிறாள். அந்த ஸ்ரீபுரமே ஸ்ரீ சக்ரவடிவில் ஸ்ரீவித்யா உபாசகர்களால் பூஜிக்கப்படுகிறது. அந்த ஸ்ரீசக்கரத்தில் 9 சக்கரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சக்ரத்திற்கும் ஆவரணம் என்று பெயர். அதன் நடுவில் பிந்து வடிவமாக இருக்கும் இடத்தில் ஸ்ரீமாதா காமேஸ்வரருடன் சேர்ந்து அமர்ந்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழிலையும் செய்து வருகிறாள். அந்த ஸ்ரீசக்கரமே நம் உடல். 9 ஆவரணங்களும் நம் உடலிலேயே உள்ளன. ஸ்ரீமாதா நம்மிலேயே உறைகிறாள் என்பது இதன் பொருள். இந்த அம்பாளை ஸஹஸ்ராரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் தாமரையில் அமர்ந்திருப்பதாக தியானிக்க, தியானிக்க நமக்குள் எல்லையற்ற பேரானந்தம் உண்டாகிறது என்பது உண்மை. இத்தனை மகிமை வாய்ந்த லலிதாம்பிகை கொலுவீற்று உள்ள திருமயிச்சூர் ஆலயம் சென்று ஒருமுறையாவது லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்வது பெரும் பலனைக் கொடுக்குமாம் .

ஆலய விலாசம்:
அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் அஞ்சல்
வழி பேரளம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN – 609405