சித்தாடி காத்தாயி

அம்மனின் தோற்றமும்

வரலாறும்

கட்டுரை: சாந்திப்பிரியா

-1-

சுமார் ஆறு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆண்டை சேர்ந்ததாக கூறப்படும் வள்ளி தேவியின் இன்னொரு ரூபமான அன்னை காத்தாயி அம்மன் ஆலயம் சித்தாடி எனும் கிராமத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் குடவாசல்   தாலுக்காவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்தாடி எனும் கிராமத்தில் உள்ள இந்த ஆலயம் மாயவரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும் கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் முடிகொண்டான் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தெய்வங்களைக் குறித்தும், அவர்களது தோற்றங்களைக் குறித்தும் பல நாடோடிக் கதைகளும், செவி வழிக் கதைகளும் உண்டு.  அதில் ஒரு நம்பிக்கைக்  கதையின்படி அன்னை காத்தாயி அம்மன் முன்னொரு காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட விளை நிலங்களை கொண்ட காவேரி டெல்டா  பகுதி  எனப்படும்  சோழ மண்டலத்தின் தஞ்சாவூர், மாயவரம், கும்பகோணம் மற்றும் சிதம்பரம் போன்ற பகுதிகளில் இருந்த கிராமங்களில் அன்று முதல் இன்றளவும் வணங்கப்பட்டு வந்துள்ள கிராம தெய்வமாக இருந்திருக்கலாம் என்பது புலனாகின்றது.  இன்னும் சில கருத்துக்களின்படி  சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் அதாவது 1500  முதல் 2000 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில் சில கிராமங்களில் அன்னை காத்தாயி வழிபாடு இருந்துள்ளதாக தெரிகின்றது. அதன் காரணம் சோழ மன்னர்களில் சிலர் அன்னை காத்தாயி அம்மனை வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதே.

சித்தாடியின் இந்த  இந்த ஆலய பகுதியில்தான்  முருகப் பெருமான் வள்ளி தேவியை மணந்து கொண்டதாகவும், அதனால்தான் அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் வள்ளி தேவி இங்கு எழுந்தருளி உள்ளதான கருத்தும் உள்ளது.  இதைப் போலவே ஸ்ரீ லங்காவில் உள்ள கதிர்காம ஆலயம் உள்ள பகுதியில் வள்ளி தேவி முருகப் பெருமானை மணந்து கொண்டதான கதைகளும் உண்டு. ஆகவே  காத்தாயி அம்மனின் திருமண பின்னணியை இங்கு விளக்குவது அவசியம் என்று நினைக்கின்றேன். 

புராணங்களின் கூற்றின்படி ஒவ்வொரு தெய்வமும் பல்வேறு நிலைகளில் அவரவர்கள் பெற்று   இருந்த சாபங்களை களைந்து கொள்ள பூலோகத்தில் பல பிறப்புக்களை எடுத்துள்ளன. அப்படி சாப விமோசனம் பெற வந்தவர்களில் தெய்வீக தம்பதிகளும் உண்டு.  அப்படி வந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட தமது கணவர்களை பிரிந்து வாழ வேண்டி இருந்தது.  இப்படியாக பிறப்பு எடுத்த தெய்வங்கள் சாப விமோசனம் பெற்றவுடன் மீண்டும் அவர்களது கணவர்களை (தெய்வங்கள்) திருமணம் செய்து கொண்ட கதைகள் பல உள்ளன. தெய்வங்களை பொறுத்தவரை விவாகரத்து போன்றவை கிடையாது என்பதினால் மீண்டும் மணம் என்பது என்ன என்றால் சாப விமோசனகளை நிவர்த்தி செய்து கொள்ள  தற்காலிகமாக அவரவர்களை விட்டு விலகி நின்ற ஆண் மற்றும் பெண் சக்திகள் மீண்டும் ஒன்றிணையும் நிலை ஆகும். சாப விமோசனம் அடைந்து அவை மீண்டும் ஒன்றிணையும் நேரத்தில் அதை பரிபூரணமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அதே தெய்வீகத்  தம்பதிகளுடைய பல திருமணங்கள் முன்காட்சிப் பதிவு போல மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளதென்று கற்றறிந்த பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.  சாப விமோசனங்களைப் பெற பிரிந்து சென்ற அனைத்து தெய்வீக தம்பதியினரும் மீண்டும் இணைந்தபோது திருமணம் என்ற முன்காட்சிப் பதிவை நடத்திக் காட்டியதற்கான  கதைகள் இல்லை. சில தெய்வங்கள் மட்டுமே அவற்றை வெளிப்படுத்தி உள்ளன. அதற்கும் ஒரு காரணம் உண்டு. பல முறை சில தெய்வீக தம்பதிகளின் திருமணங்களைக் காண முடியாமல் இருந்த ரிஷி முனிவர்கள் அவர்களது திருமணத்தை தாம் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு  தவம் இருந்தார்கள். அவர்களின் தவத்தை மெச்சி அவர்களுக்கு காட்சி தந்த தெய்வங்கள் அவர்களது ஆசைகளை பூர்த்தி செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் பேரிலும், எந்தெந்த பகுதிகளில் பிரிந்து சென்ற தெய்வங்கள் தவத்தில் அமர்ந்திருந்தனவோ அந்தந்த புனிதப் பகுதியிலும் தமது திருமண வைபவங்களை மீண்டும்  நடத்திக் காட்டினார்கள்  என்பதினால்தான் இன்றும் பல ஆலய வரலாறுகளில்  சிவபெருமான் பார்வதி தேவி, முருகப் பெருமான்-வள்ளி தேவி மற்றும் பகவான் மஹாவிஷ்ணு-லட்சுமி தேவி திருமணங்கள் அந்தந்த ஆலயத்தில் நடைபெற்றதான வரலாற்றுக் கதைகள் உள்ளன. இப்படியாகத்தான் பல ஆலய இடங்களில் தெய்வங்கள் தத்தம்  திருமணக் காட்சிகளை மீண்டும் மீண்டும் நடத்திக்  காட்டி உள்ளன. இந்த பின்னணியின் காரணமாகவே சூரனின் வதம் முடிந்ததும் சித்தாடியில் காத்தாயி அம்மனாக வீற்று இருக்கும் வள்ளி தேவியின் திருமணம் முருகப் பெருமானுடன் நடைபெற்றதாக கூறப்படுவதும் ஏற்கத் தக்க கருத்தாகவே உள்ளது.

கிராம தேவதைகள் மற்றும் கிராம தெய்வங்களைக் குறித்த மாறுபட்ட, மேன்மை மிக்க  நாட்டுப்புறக் கதைகளில் அன்னை காத்தாயி அம்மனைக் குறித்த சில கதைகளும் உள்ளன.  பண்டைய காலங்களில் பல கிராம தேவதைகளை வழிபட்டு வந்திருந்த கிராம மக்கள் தமது கிராமங்களை இயற்கை அழிவு மற்றும்  தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக காத்தாயி அம்மனையும் வழிபட்டு வந்திருக்க வேண்டும் என்பது பொதுவான கருத்தாகும். இதன் காரணம் காவேரி டெல்டா எனப்படும் இந்த பகுதியை சேர்ந்த சில கிராமங்களில் காணப்படும்  காத்தாயி அம்மனின் ஆலயங்களே. கிராம ஆலயங்களில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் கிராம தேவதையாகவே வணங்கப்படுகிறாள். பொதுவாகவே கிராம ஆலயங்களில் ஆகம வழிபாட்டு முறையிலான வழிபாடு இல்லாமல் பொது  வழிபாட்டு முறையே உள்ளது. ஆனால் சித்தாடியில் உள்ள ஆலயத்தில் மட்டும் அன்னை காத்தாயி அம்மன் ஆகம வழிபாட்டு முறையில் வணங்கப்பட்டு வருகின்றாள் என்பது இந்த ஆலயத்தின் தனித் தன்மையைக் காட்டுகின்றது. அதே சித்தாடி கிராமத்தில் உள்ள இன்னொரு சிறிய காத்தாயி அம்மன் ஆலயத்தில் அவள் கிராம தேவதையாகவே காணப்படுகிறாள்.

சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தின் சிறப்பை குறித்து கூற வேண்டும் என்றால் இன்னொரு முக்கிய செய்தியையும் கவனிக்க வேண்டும். காவேரி டெல்டா எனப்பட்ட பகுதிகளை சேர்ந்த சில கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மனின் ஆலய வரலாற்றையும், நாட்டுப்புறக் கதைகளையும் பார்க்கும்போது அவை அனைத்துமே சித்தாடி கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் ஆலயம் எழுந்த பின்னர், அதைத் தழுவியே அமைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று எண்ண நிறையவே காரணங்கள் உள்ளன.

சித்தாடி ஆலயத்தில் காணப்படும் நதிக்குள் இருந்து கிடைத்த கருங்கல்லில் செதுக்கப்பட்ட அன்னை காத்தாயி அம்மன் சிலையில் ஒரு கையில் தாமரை மலரை ஏந்தி நிற்க, லாவகமாக மடித்து வைத்துள்ள இடது கை,  இடது கால் தொடை மீது இருக்க, காலின்  கீழ் ஒரு முனிவர் காணப்படுகின்றார். மற்ற ஆலயங்களில் காணப்படும் அன்னை காத்தாயி அம்மன் சிலைகள் ஒரு குழந்தையை கையில் ஏந்திய நிலையிலோ அல்லது மார்பளவிலான காத்தாயி அம்மன் உருவ அமைப்பிலேயே, உள்ளூரில் செய்யப்பட்ட சிலைகளாகவே காணப்படுகின்றன. சித்தாடி காத்தாயி அம்மன் தோன்றிய வரலாற்றுக் கதை உள்ளதை போல அன்னை காத்தாயி அம்மன் ஸ்தாபிக்கப்பட்டு உள்ள மற்ற ஆலயங்கள் எதிலுமே ஆலயத்துடன் சம்மந்தப்பட்ட வரலாற்றுக் கதைகள் காணப்படவில்லை. அவை சில புராணக் கதைகளையும், நாட்டுப்புறக் கதைகளையும், மன்னர்களது கதைகளையும் மேற்கோள் காட்டி அன்னை காத்தாயி அம்மனின் புகழை கூறுகின்றன. மேலும் அந்த ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ள  காலம் கூட அதிகம் இல்லை.

சோழர்கள் ஆண்ட காலத்தில் அதாவது 1500 வருடங்களுக்கு முன்பாகவே ஆட்சியில் இருந்து வந்தவர்கள் ஆட்சியில்  சில கிராமங்களில் சிறிய அளவிலான அன்னை காத்தாயி அம்மன் ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயம் இல்லைதான். சோழ மன்னர்களில் சிலர் அன்னை காத்தாயி அம்மனை தமது குலதெய்வமாகவே வணங்கி வந்துள்ளனர் என்பது அதன் காரணம். முக்கியமாக ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த மன்னனான விக்ரம சோழன்-I அன்னை காத்தாயி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்துள்ளதாகவும், அவளை தமது குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளார் என்பதாகவும் செய்திகள் உள்ளன. இந்த செய்தி சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும் காட்டுமன்னார் காத்தாயி அம்மன் ஆலய வரலாற்று செய்தியில் இருந்து தெரிய வருகின்றது. அங்குள்ள அன்னை காத்தாயி அம்மன் நின்ற நிலையில் இருக்க, அவளை பூங்குறத்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதன் காரணம் அவள் குறத்தி வடிவில் சென்று சோழ மன்னனின் பிரச்னையை தீர்த்து வைத்ததினால் அவளை பச்சைவாழி அம்மனுடன் சேர்த்து பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். ராஜராஜ சோழனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சில மன்னர்கள் தாம் வழிபட்ட ஆலயங்களில் பச்சைவாழி அம்மன் எனும் காத்யாயினி (பார்வதி அம்மன்)  அம்மனுடன் அன்னை காத்தாயி அம்மனையும் சேர்த்தே  வழிபட்டு வந்துள்ளார்கள்  என்பதான சில குறிப்புக்கள் உள்ளன. பார்வதி தேவியின் பெரும்பாலான தோற்றங்களில் அவள் பச்சை புடவையுடன் காட்சி தந்தே வந்ததினால் அவள் பெயர் பச்சை வாழி அம்மன் என்று மருவி உள்ளதாகவும் தெரிகின்றது.

சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தில் மட்டும் எப்படி அவளுக்கு கருங்கல்லினால் ஆன சிலை அமைக்கப்பட்டு உள்ளது என்பதற்காக கூறப்படும் கருத்துக்கள் நம்பக் கூடியவையாக உள்ளன. ஒரு கருத்தின்படி சோழ மண்டலத்தில் சோழ மன்னர்கள் மற்றும் நாயகர்கள் ஆட்சி காலத்தில் பல பெரிய மற்றும் சிறிய ஆலயங்கள் கிராமபுறங்களில் அவர்களால் கட்டப்பட்டுள்ளன. அந்த ஆலயங்கள் பலவற்றில்  கருங்கல்லில் செதுக்கப்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. காவிரி டெல்டா பகுதிகளில் இருந்த அந்த ஆலயங்களில் சிற்பிகளினால், எந்த தெய்வத்தின் உருவம் எப்படி இருக்க வேண்டும் என்ற நியமங்களைக் கூறும் சில்ப சாஸ்திர முறைபடி சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன. பலமுறை இயற்கையின் சீற்றத்தினால் கிராமங்களும் மக்களுடைய இருப்பிடங்களும், ஆலயங்களும்  சேதமுற்று அழிந்துள்ளன.  அவற்றில் சில பூமியில் புதைந்து விட்டன, அங்கங்கே இருந்த நதிகளில் மூழ்கி விட்டன. காவிரி ஆற்றில் வெள்ளம் வந்து பல இடங்கள் மூழ்கி  சிதைந்து போனபோதும், அன்னியர்கள் படையெடுப்புக்களினாலும்  பல ஆலயங்கள் சேதம் அடைந்து அழிந்துள்ளன. காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள பல  இடங்களில் இதற்கு  ஆதாரமாக அழிந்து போன ஆலயங்கள் இன்றளவும் உள்ளன. அழிந்து போய் வெட்ட வெளியில் நிற்கும் ஆலய சிலைகள் கருங்கல்லில் செதுக்கப்பட்டவை ஆகும். அப்படி அழிந்து போன ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் அன்னை காத்தாயி அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்திருக்கலாம். அந்த சிலையே சித்தாடியில் கிடைத்து இருக்கலாம்.

இந்த பகுதியில் கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்டதாக கூறப்படும்  அழிந்து போன ஆலயங்களுக்கு என்ன ஆதாரம் என சிலர் கேட்கலாம். இன்று பிரபலமாக உள்ள வைத்தீஸ்வரன் ஆலயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஐந்து இடங்களில் இருந்துள்ளது. அவற்றில் கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்ட  மூல ஆலயங்கள் இரண்டு அழிந்து விட்டன. அழிந்து சின்னா பின்னமாகி கிடந்த ஒரு மூல ஆலயத்தின் சிலைகளைக் கண்டெடுத்து மண்ணிப்பள்ளம் கிராமத்தினர் புதிய வைதீஸ்வரன் ஆலயத்தை அமைத்து உள்ளார்கள்.  1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் இருந்த வைத்தீஸ்வர பகவான் ஆலயம் பல மைல் சுற்றளவில் கட்டப்பட்டு இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்களும் ஆலயத்தின் சிதைபாடுகளும் தொலைதூர அளவுக்கு பல இடங்களில் கிடைத்துள்ளன. அங்கிருந்த பல அற்புதமான கருங்கல் சிலைகள் திருடிச் செல்லப்பட்டு கேரளா மற்றும் பிற இடங்களில் உள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாம். இன்னொரு வைத்தீஸ்வரன் ஆலயத்தை சேர்ந்த மூல ஆலய மூர்த்தி (சிவலிங்கம்) சிதைந்த நிலையில் மணிப்பள்ளம்  என்ற கிராம பகுதியில் உள்ளே உள்ள ஒரு குக்கிராமத்தில் இன்றும்  கூரையினால் வேயப்பட்ட  ஒரு வழிபாட்டுத் தலத்தில் வைக்கப்பட்டு உள்ளதாகக்  கூறுகின்றார்கள். மணிப்பல்ல வைத்தீஸ்வரன் ஆலய வரலாற்றில் இந்த செய்திகள் காணப்படுகின்றது.

இரண்டாவதாக சிக்கல் சிங்காரவேலர் எனும் முருகப்  பெருமான் நிறுவியதாக கூறப்படும் ஆலயங்களின் செய்தியை கவனிக்கவும். சூரனை அழிக்கப் போகும் முன்னர் பார்வதி தேவி அவருக்கு வேல் எனும் ஆயுதத்தை தந்தார். அந்த வேலினை பெற்றுக் கொள்ளும் முன் ஒன்பது சிவன் ஆலயங்களில்  அவரை வணங்கி விட்டு வருமாறு பார்வதி தேவி கூற, அதனால் முருகப் பெருமான் தான் தங்க இருந்த  சிக்கல் (சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்) ஊரை சுற்றி இருந்த பெரும்கடம்பனூர், கடம்பரவாழ்க்கை, வல்லமங்கம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், திருத்தேவூர் மற்றும் ஓதியத்தூர் போன்ற கிராமங்களில் ஒன்பது சிவலிங்கங்களை நிறுவி சிவபெருமானை வழிபட்ட  பின்னர் பார்வதி தேவியை வழிபட்டு ஆயுதத்தை பெற்றுக் கொண்டு சூரனை அழிக்கச் சென்றாராம். உதாரணத்திற்கு கூற வேண்டுமானால்  கருங்கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு இருந்த சிலைகளைக் கொண்ட  அந்த ஆலயங்கள் பாழடைந்து   வழிபடமுடியாத நிலையில் இன்றைக்கும் கவனிப்பாரற்று கிடக்கின்றன. கீழே உள்ளது வல்லமங்கலம் கிராமத்தில் வெட்ட வெளியில் கிடக்கும் ஆலய சிலைகளும், பழுதடைந்த ஆலயத்தின் படமும் ஆகும்.

இந்த அடிப்படையில் இருந்து பார்த்தால் முருகப் பெருமானை மணந்து கொண்டதாக கூறப்படும்  சித்தாடியில்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அன்னை காத்தாயி அம்மன் வீற்று இருந்த ஏதாவது ஒரு ஆலயம் சேதம் அடைந்தோ அல்லது முடிகொண்டான் ஆற்றின்  வெள்ளத்தில் மூழ்கியோ இருக்கலாம். அங்கேயே தங்க விரும்பிய அன்னை காத்தாயி அம்மன் கஞ்சமலை முனிவர் மூலம் நடைபெற்ற நாடகத்தின் மூலம் தன்னை அங்கேயே வெளிப்படுத்திக் கொண்டு  தற்போது உள்ள ஆலயத்தில் குடி கொண்டு இருக்கலாம் என்பதற்கான அடையாளமே ஆற்றில் கிடைத்த, ­சித்தாடி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அற்புதமான சிலை என்று நம்பத் தோன்றுகின்றது.

சித்தாடி அன்னை காத்தாயி அம்மனின் சிலை இயற்கையாகவே உருவான சிலை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை என்று கருத்தப்படவும் கூட வலுவான காரணங்கள் உள்ளன. பல புராணங்களின் கூற்றின்படியும், கதைகளின்படியும் தெய்வங்கள் பலவும் தமது சாபங்களை விலக்கிக் கொள்ளவும், வேறு காரணங்களினாலும் பூமியில் அவதரித்து எவர் கண்களிலும் படாமல் தவத்தில் இருந்துள்ளன. அதை போலவே மானிட ரூபத்திலும் இருந்துள்ளன என்பது புராணக் கதைகள் மூலம் தெரிய வரும்.  பூமியில் வந்து தங்கி மனித உருவிலே வாழ்ந்து தமது சாபங்களை விலக்கிக்  கொண்ட தெய்வங்கள் பின்னர் தாம்  இருந்த அந்த மனித உடலை பூமிக்குள் புதைய  வைத்து விட்டே சென்றன. ஆனால் அந்த மனித உடலைத் துறந்து சென்றபோது தமது உண்மையான உருவத்தை அதற்குள் பதிய வைத்து விட்டே சென்றிருந்தன என்பதினால் பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் தெய்வீக உடல்கள் என்பதினால் சிதைவு ஏற்படாமல் எந்த ரூபத்தில் இருந்தனவோ அதே ரூபத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பூமியில் புதைந்து இருந்து,  அதே ரூபத்தில் கருங்கல் கற்களாகி விட்டன. இவற்றை பார்க்கும்போது காவிரி டெல்டா பகுதியில் முருகப் பெருமானை சித்தாடிப் பகுதியில் மணந்து கொள்ளும் முன் வள்ளி தேவியானவள் சித்தாடி கிராம பகுதியில் மூன்று கொண்டைகளுடன் கூடிய அன்னை காத்தாயி அம்மன் உருவில் தங்கி இருந்திருக்க வேண்டும்.  வள்ளி தேவி தேவலோகத்துக்கு திரும்பிச் சென்ற போது, கலிகாலத்தில் மக்களை வழி நடத்தி ஞான சக்தியிடம் ஒப்படைக்க  மீண்டும் தாம் அவதரிக்க வேண்டும் என்பதினால் மூன்று கொண்டைகளுடன் கூடிய தனது  காத்தாயி உருவை பூமியில் புதைத்து விட்டுச் சென்று விட காலபோக்கில் அந்த பகுதி மீது முடிகொண்டான் நதியும் இயற்கையாக அமைந்து விட அந்த  சிலையே முடிகொண்டான் ஆற்றில் மூழ்கி இருந்து வெளி எடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள  சித்தாடி காத்தாயி ஆலய சிலையாக இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்படியாக பூமியில் புதைந்து கிடந்த சிலைகள் கண்டறியப்பட்டு அவை இருந்த இடங்களிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்ட வரலாற்றுக் கதைகள் திருப்பதி வெங்கடாசலபதி முதல் கேதாரீஸ்வர், பத்ரிநாத் சிவாலயம் வறை பலவும் உண்டு.  

பொதுவாக ஆலயங்களில் வள்ளி தேவி முருகப் பெருமானுடன் சேர்ந்தோ அல்லது தனி சன்னதியில் வள்ளி தேவியாகவோ காட்சி தருவார்.  ஆனால் சில கிராம ஆலயங்களில் அவள் அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகின்றார். அன்னை காத்தாயி அம்மன் என்ற பெயரில் உள்ள வள்ளி தேவி எதற்காக கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி அளிக்க வேண்டும் ? உண்மையில் குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மன் சித்தாடி காத்தாயி அம்மனின் அவதாரமா  இல்லை வேறு ஒன்றா என்ற சந்தேகம்  உள்ளது. அதன் காரணம் கிராம கதையின்படி ஒரு இளம்பெண் தான் கற்புக்கரசி என்பதை நிலைநாட்ட தனது இளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு தீயில் பாய்ந்தாள். ஆனால் எங்கிருந்தோ அங்கு தோன்றிய ஒரு வயதான பெண்மணி தீயில் குதித்து  அந்தக் குழந்தையைக் காப்பாற்றி விட்டாள். அதன் பின் அவளைக் காணவில்லை. ஆகவே மாயமாய் மறைந்து விட்ட பெண்மணியை ஒரு தேவதை என எண்ணிய மக்கள் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நிற்கும் காட்சியில் ஒரு சிலையை வடிவமைத்து  குழந்தையைக் காத்த வயதான பெண்மணி என்பதைக் குறிக்கும்  வகையில்  அன்னை காத்தாயி எனப் பெயரிட்டு அவளை காத்தாயி அம்மன் என்ற தெய்வமாக பூஜிக்கலானார்கள். இதனால்தான் சில கிராமங்களில் உள்ள வழிபாட்டு தலங்களில் காணப்படும் அன்னை காத்தாயி அம்மன் எனப்படும் கிராம தேவதை கையில் குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறாள். ஆலய பின்னணிக்  கதைகளை நோக்கும்போது உண்மையில் கிராம மக்கள் அவளை முருகப் பெருமானின் மனைவி என்ற கோணத்தில் பார்க்கவில்லை. பிற்காலத்தில் சித்தாடி காத்தாயி அம்மனின் பெருமை அக்கம் பக்கத்து கிராமங்களில்   பரவத் துவங்கியபோது குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தந்த அன்னை காத்தாயி அம்மன் எனப்பட்ட  கிராம தேவதையையும்  முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியின் அவதாரம்  என்றே கருத்தலானார்கள். இதற்கான காரணம் என்ன என்றால்  சித்தாடி காத்தாயி அம்மனின் பெயரும்  குழந்தையைக் கையில் ஏந்தியபடி காட்சி தந்த கிராம தேவதையின் பெயர்களும் காத்தாயி  என்று இருந்ததே ஆகும்.

சிலர் அன்னை காத்தாயி அம்மனை பார்வதி தேவிக்கு காவல் இருந்த சப்த கன்னிகைகளில் ஒருவர் என்றும், இன்னும் சிலர் அவள் காத்யாயன முனிவரின் மகள் என்றும் குறிப்பிடுகின்றார்கள். இந்த இரு கூற்றுகளுக்கும் எந்த விதமான ஆதாரமும் புராணக் கதைகளில் கிடையாது.  காட்டு மன்னார் கிராமத்தில் உள்ள அன்னை காத்தாயி அம்மன் கையில் குழந்தையை ஏந்திய நிலையில் காணப்படுகிறாள். அந்தக் குழந்தை முருகப் பெருமான் என்று அங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றார்கள். ஆனால் முருகப் பெருமானை எதற்காக அன்னை காத்தாயி அம்மன் தனது இடுப்பில் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. இதனால்தானோ என்னவோ இடுப்பில் குழந்தையை கையில் ஏந்தியபடி  காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மனை  நாணல் புதரில் விழுந்து கிடந்த குழந்தையான முருகப் பெருமானை எடுத்து வளர்த்த சப்த கன்னிகைகளில் ஒருவர் என்று கூறுகிறார்கள் என தெரிகின்றது. ஆனால் சித்தாடி காத்தாயி அம்மன் முருகப் பெருமானின் மனைவியான வள்ளி தேவியே என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. 

குழந்தையை கையில் ஏந்தியபடி காட்சி தரும் அன்னை காத்தாயி அம்மனின் கோலத்தின் தத்துவம் என்ன என்பதை ‘எப்படி ஒரு குழந்தையானது மனதில் பயம், காமம், க்ரோதம், மற்றும் பொறாமை போன்றவை இல்லாமல் இயற்கையாக வாழ்கின்றதோ அந்த நிலையில் எந்த ஒரு மனிதன் தன்னை  வைத்திருப்பானோ அவர்களை தனது குழந்தையைப் போல பாதுகாத்து வருவேன் என்பதையே அந்த கோலத்தின் மூலம் அவள் குறிக்கின்றாள்’ என்பதாக பண்டிதர்கள் விளக்குகிறார்கள். இந்த செய்திகள் பலவற்றையும்  முன் காலத்தைய கிராம மக்களின் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், நாடோடிக் கதைகள்,  கும்மிப் பாடல்கள் போன்றவற்றின் மூலம்  உணர முடிகின்றது.

……………continued-2