
விவாகரத்தான பெண்கள், குழந்தைகள்-அவர்களது குலதெய்வம் யார் ?
-சாந்திப்பிரியா-
குலதெய்வம் குறித்து பல பண்டிதர்களிடம் பேசி பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்திருந்த என்னிடம் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பெண்மணி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த பெண்மணியின் கேள்வி இதுதான். தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இதற்கான விளக்கங்கள் கூறப்படுகின்றன:
”திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குலதெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம் எனும்போது
• திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்? அவள் விவாகரத்து பெற்ற கணவரின் குடும்ப தெய்வத்தை ஏற்க வேண்டுமா, தந்தை வீட்டு குலதெய்வத்தை ஏற்க வேண்டுமா, இல்லை புதிய தெய்வம் எதையாவது தமது குலதெய்வம் என ஏற்றுக் கொள்ளலாமா?
• விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அவளிடமோ அல்லது அவளது கணவரிடமோ தங்கி விடும் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?
இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும். பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குலதெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள். பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள். ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் சென்ற பின் இன்னொரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு பிறந்த வீட்டில் வணங்கி வந்திருந்த குலதெய்வ ஆராதனையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஒரு உதாரணத்திற்காக பெண் வீட்டின் குல தெய்வமும்,
பிள்ளை வீட்டின் குல தெய்வமும் தனித் தனியே காட்டப்பட்டு உள்ளன
சாஸ்திரங்களின்படி ஒரு குழந்தையை வளர்த்து வழி காட்ட வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உள்ளதினால் அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோர்களே (தாய் மற்றும் தந்தை) முதல் தெய்வம் ஆகிறார்கள். அதற்கு அடுத்துதான் குலதெய்வம் முதல் மற்ற அனைத்து தெய்வங்களும் வரும். ஆணோ அல்லது பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்களோடு ரத்த சம்மந்தம் கொண்டவை. அந்த அடிப்படை ரத்த சம்பந்தத்தை மாற்ற முடியாது. ஆகவே தாய் தந்தையோடு உள்ள அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது தந்தை மற்றும் அவருடைய பதிமூன்று முன் தலைமுறையினர் வழிபட்ட தெய்வமே அடிப்படை மற்றும் நிரந்தர தெய்வம் ஆகும். காரணம் அவர்கள் தந்தையின் கோத்திரத்தையும், அவரது வம்சாவளியையும் சேர்ந்தவர்கள் ஆகி விடுகின்றார்கள். குழந்தைகளின் பெற்றோர்கள் விவாகரத்து ஆனாலும் அந்த நிலை மாறாது. இந்த அடிப்படை நியதி அந்த வீட்டில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு திருமணம் ஆனாலும், இல்லை தனியாகவே இருந்தாலும், மாறாத நியதியாக இருக்கும்.
ஆனால் அந்த வீட்டுப் பெண்களுக்கு அந்த நிலை அவர்களுக்கு திருமணம் ஆகும் வரைதான் உண்டு. திருமணம் ஆகி விட்டால் அவர்கள் புகுந்த வீட்டு தெய்வத்தையே வணங்க வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
பெண்களுக்கான குல தெய்வம்
எதனால் பிறந்த வீட்டு குலதெய்வத்தை வழிபட்டு வந்திருந்த பெண்கள், திருமணம் ஆகிச் சென்றவுடன், அவள் புகுந்த வீட்டுக் குலதெய்வத்தை சாஸ்திரங்களின்படி ஏற்க வேண்டி உள்ளது என்பதின் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நமது திருமண சடங்கின் மூல அம்சத்தை தெரிந்து கொள்ள வேண்டும் .
நடைபெறும் அனைத்து திருமணங்களுக்கு தெய்வத்தின் சாட்சியாக, அக்னி மற்றும் கண்களுக்கு தெரியாத உருவில் திருமண சடங்கை கவனித்துக் கொண்டு உள்ள இரண்டு வீட்டினரின் குலதெய்வங்களே உள்ளன.

பெண்ணின் தந்தை தனது பெண்ணை காப்பாற்றி வாழ வைக்க வேண்டிய பொறுப்பை சம்பிரதாயமாக மாப்பிள்ளையிடம் ஒப்படைத்த பின்னர், பெண்ணின் கணவர் அவளை அக்னி சாட்சியாக தாலி கட்டி, மனைவியாக ஏற்றுக் கொண்டு, அக்னியை பலமுறை வலம் வந்து அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழிகளை எல்லாம் மந்திர உச்சாடனைகளாக ஓதி சத்திய பிரமாணம் எடுக்கின்றார்.
அவர்களது திருமணத்தில் கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு வீட்டாரின் குல தெய்வத்தின் ஆசிகளுடன் அக்னி சாட்சியாக தாலி கட்டியதும்,
அதுவரை அவளை அனைத்து நிலையிலும் பாதுகாத்து வந்திருந்த அவளது பிறந்த வீட்டின் குல தெய்வம் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு, அந்த பொறுப்பை அவள் புகுந்த வீட்டு குல தெய்வத்திடம் ஒப்படைத்து விடுகின்றது. அது முதல் அவள் மீதான அனைத்து அதிகாரங்களும் புகுந்த வீட்டு குல தெய்வத்தின் கையில் சென்று விடும்.
திருமணம் ஆகும்வரை பெற்றோர்களின் சொத்தாக இருந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டால் அவள் தாலி கட்டிய கணவரின் சொத்தாகி, புகுந்த வீட்டின் பெண்ணாகி விடுகின்றாள் என்பதினால் அவளது கோத்திரமும் புகுந்த வீட்டு கோத்திரம் ஆகி விடும் என்பது சாஸ்திர நியதி ஆகும்.

திருமணம் ஆகிவிட்ட பெண் புகுந்த வீட்டு குலதெய்வத்தை ஏற்கின்றாள்
தாலி கழுத்தில் ஏறியதும் ஒரு பெண் தனது சொந்த அதிகாரங்கள் உட்பட தன்னையும் கணவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுகின்றாள். அந்த நிமிடமே அவளும் புகுந்த வீட்டின் ஒரு அங்கம் ஆகி விடுகின்றாள். அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு முதல் தெய்வம் ஆகி விடுகிறார். திருமணம் ஆனது முதல் கணவருடன் அவளும் சிவசக்தி தத்துவம் போல சம பாதியாகி விடுவதினால் அனைத்து நிலைகளிலும் அவளுடைய துணையோடு அவர் வாழ்க்கை பயணிக்கின்றது. அவளும் கணவர் வீட்டின் ஒரு பிரஜை ஆகி விடுகின்றாள்.
அதனால்தான் புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்ணின் குல தெய்வமும் கணவன் வீட்டினரின் குல தெய்வம் ஆகி விடுகின்றது என்பது சாஸ்திரத்தின் தாத்பர்யம் ஆகும். இந்த அடிப்படை நியதியினால்தான் திருமணம் ஆகும் பெண்மணிகள் தமது பிறந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் உரிமையை துறந்து விட்டு புகுந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் நிலைக்கு சென்று விடுகின்றார்கள். ஒரு தேசத்தை சேர்ந்தவர் இன்னொரு தேசத்துக்கு சென்று அங்கேயே தங்கி அந்த தேசத்தின் பிரஜை ஆகி விட்டால் அந்த தேசத்தின் சட்ட திட்டங்களை அனுசரிக்க வேண்டும் எனும் நிலைபாடு போன்றதுதான் இதுவும்.
திருமணத்திற்குப் பிறகும், ஒரு பெண் தான் விரும்பும் எந்தத் தெய்வத்தையும், தனது பெற்றோர் குலதெய்வம் உட்பட, வழிபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் தினசரி பிரார்த்தனைகளில் கூட, அவள் வினாயகப் பெருமானை வணங்கிய பின்னர் முதலில் தன் கணவரின் குலதெய்வத்தை வணங்கி விட்டு, அதன் பிறகுதான் தனது பெற்றோர் தரப்பு
குலதெய்வத்தை வணங்க வேண்டும். குறிப்பாக, புகுந்த வீட்டில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கு மற்றும் விழாவில், முதல் பிரார்த்தனை வினாயகருக்கு அடுத்தபடியாக அவள் சார்ந்திருக்கும் குடும்பத்தின் குலதெய்வங்களுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். கணவனின் வீட்டிற்குள் நுழைந்த பெண், பிரிக்க முடியாதவர்களாகக் கருதப்படும் சிவபெருமானின் ஒரு பகுதியான பார்வதி தேவியைப் போன்றவள் என்பதால், ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் சடங்குகளிலும் பிரசாதங்களையும், பூஜைகளையும், பிரார்த்தனைகளையும் முதலில் கணவன் தரப்பு குலதெய்வத்திற்கே செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறாள் என்பதே சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ள நியதியாகும்.
திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் குல தெய்வம் கணவர் வழிபடும் குலதெய்வமாக மாறி விடுவதினால் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை, பிறந்த வீட்டு குல தெய்வம் அவளுடைய புகுந்த வீட்டினரின், அதாவது தனது சகோதர, சகோதர குல தெய்வத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்து விட்டாலும் அவளை தன்னை விட்டு முற்றிலும் விலக்கி விடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நிலை பிறந்த வீட்டு குல தெய்வத்தை முற்றிலும் துறக்கும் நிலை அல்ல என்பதையும், பிறந்த வீட்டு குல தெய்வம் அவளை நிரந்தரமாக கை விட்டு விட்டது என்ற அர்த்தமும் அல்ல என்பதையும் மனதில் ஆழமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விவாகரத்து பெற்ற பெண்களின் குல தெய்வம் யார்?
அந்த காலங்களில் நடைபெற்ற திருமணங்களில், ஒரு தம்பதியினர் இணைந்து வாழ முடியாத சூழ்நிலைக்கு சென்று விட்டால், திருமணம் ஆன அதே ஆலயத்துக்கு சென்று அங்கு தெய்வ சாட்சியாக, அனைவர் முன்னிலையிலும் இனி எங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லை என சத்திய பிரமாணம் எடுத்தப் பின் தாலியை கழுத்தில் இருந்து எடுத்து அதை தெய்வத்தின் முன்னிலையில் வைத்து விடுவார்களாம். அந்த தாலியின் சத்தியத் தன்மையும் அங்கேயே விலகுகிறது எனும்போது அப்போது அவர்கள் இருவரும் மாணவன் மனைவி எனும் அந்தஸ்தை இழந்து விடுகின்றார்கள். மணமான தம்பதியினர் பிரிந்து வாழும் நிலை அதாவது விவாகரத்து என்பது உடலால் மட்டும் பிரிவது அல்ல, உணர்வுகளாலும் பிரிக்கப்படுகின்றது எனும்போது அதில் அவர்கள் வணங்கிய குலதெய்வங்களும் அடங்கி இருந்தன. அப்படி தள்ளி வைக்கப்பட்ட பெண்கள் வாழ வேறு வழி இன்றி தந்தை வீட்டுக்கு சென்று வாழலானார்கள், விவாகரத்து என்ற நியதி இல்லாமல் இருந்தது. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல அந்த பழக்கம் மாறத் துவங்கி மந்திரம் ஓதி, சடங்குகள் செய்து தாலி கட்டும் பழக்கம் வந்து விவாகரத்து போன்ற நடைமுறை பழக்கங்களும், இருவருமே மறுமணம் செய்து கொள்ளலாம் எனும் நிலைபாடுகளும் வழக்கத்தில் வந்தன. ஆகவே விவாகரத்து போன்ற செயல்களை நிறைவேற்றி தரும் பொறுப்பு நீதி மன்றங்களில் நிறுவப்பட்ட நீதிபதிகள் மீது விழுந்தது. நீதி தேவதையின் (தெய்வம்) சார்ப்பில் செயல்படும் ஒரு நீதிபதியால் தம்பதியினர் பிரியும் வகையிலான விவாகரத்து எனும் தீர்ப்பு தரப்படுகின்றது என்பதினால் அதுவும் தெய்வம் கொடுக்கும் தீர்ப்பாகின்றது. ஏன் எனில் நீதிக்கு அதிபதி என்பவர்கள் தர்ம தேவதையின் நிழல்கள். நீதி தேவதையின் நியதிக்கு ஏற்ப முடிவு எடுப்பவர்கள். விவாகரத்து தீர்ப்பை கொடுக்கும் முன்னர் ஒரு நீதிபதி தனக்கு முன் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு அதாவது தெய்வ சாட்சியாக தான் கட்டிய கணவரை பிரிந்து வாழ விரும்புகின்றேன் என்று மனைவியும் அதை போலவே தான் தாலி கட்டிய மனைவியை பிரிந்து வாழ்கிறேன் எனக் கணவன் கூறுவதையும் கேட்ட பின்னரே அந்த சத்திய பிராமணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடையே இனி பந்தம் இல்லை எனும் பொருளிலான விவாகரத்தை தருகிறார்.
அந்த நிலையில் அங்கு கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு குல தெய்வங்களும் அதை ஆமோதிக்கும் வகையில் தமது கடமைகளை செய்கின்றன. விவாகரத்து பெறும் பெண்ணின், அதாவது புகுந்த வீட்டினரின் குல தெய்வம், மீண்டும் அவளை அவளது மூல குல தெய்வத்திடம் (பெற்றோர் வணங்கிய) ஒப்படைத்து விடுகின்றது. விவாகரத்து பெற்ற பெண் கணவனை பிரிந்து ஒன்று பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள், இல்லை தனியாகவே வாழத் துவங்குகிறாள்.

சில காலம் கடந்த பின் இன்னொரு கணவரை மணந்து கொண்டு விட்டால் அவருடைய குல தெய்வத்தை ஆராதிக்கத் துவங்க வேண்டும் என்பதும் நியதி என்பதினால் கணவனை பிரிந்து விடும் ஒரு பெண், இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் வரை அந்த இடைப்பட்ட காலத்தில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்? விவாகரத்து ஆன பெண் இன்னொரு திருமணமே செய்து கொள்ளாவிடில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்? இதில் குழப்பம் அடையத் தேவையே இல்லை. எந்த நிலையிலும் அந்த பெண்களுடைய அடிப்படை ரத்த சம்மந்தம், அதாவது அவளை பெற்று எடுத்த பெற்றோர்களோடு அறுபடுவதில்லை. எனவே, விவாகரத்து பெறும் பெண்களுக்கு நேரடி ரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தையே தற்காலிக குலதெய்வமாக மீண்டும் ஏற்க வேண்டும் என்பது நியதி ஆகின்றது. இந்த நிலை அவள் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதை பொறுத்தது. ஏன் எனில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் குல தெய்வம் மறு திருமணத்தின்போது மீண்டும் மாறி விடுகின்றது. அதே சமயம் விவாகரத்து ஆன பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தால் அவர்கள் வணங்கி கொண்டு இருக்க வேண்டிய குலதெய்வம் தந்தை வீட்டு குல தெய்வமே ஆகும்.
விவாகரத்தான பெண்களின் குழந்தைகளின் குலதெய்வம் யார் ?
சாஸ்திர விதிகளின்படியும் இந்து பாரம்பரியத்தின்படியும், திருமணமான தம்பதியினருக்குப் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகள் (திருமணத்திற்கு முன்பு வரை), தந்தையின் குலதெய்வத்தையே பின்பற்ற வேண்டும். ஏனெனில் அவர்கள் தந்தையின் கோத்திரம் மற்றும் வம்சாவளியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார்கள். விவாகரத்து பெற்ற தம்பதியரின் குழந்தைகளுக்கும் இதுவே பொருந்தும்; பெற்றோர்கள் விவாகரத்து பெற்று இருந்தாலும், அந்த குழந்தைகள் தாய் அல்லது தந்தையுடன் வசித்தாலும், அவர்கள் தந்தையின் குடும்பத்தின் குலதெய்வத்திற்கே கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனவே, விவாகரத்து பெற்ற தம்பதியரின் ஆண் குழந்தையும் திருமணம் ஆவதற்கு முன்னரோ அல்லது திருமணம் ஆன பின்னரும் கூட தந்தையின் குலதெய்வத்தையே தொடர்ந்து வழிபட வேண்டும். பெண் குழந்தை வழக்கம் போல் திருமணமாகும் வரை தந்தையின் குலதெய்வத்தை வழிபட்டு வருவாள். திருமணத்திற்குப் பிறகு அவளது குலதெய்வ வழிபாடு கணவரின் குடும்ப குலதெய்வ வழிபாடாக மாறி விடும். இதை எனது பின்வரும் இணையதளத்திலும் படிக்கலாம்:
https://santhipriya.com/2018/11/விவாகரத்தான-பெண்கள்-அவள.html