
குல தெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது
-சாந்திப்பிரியா-
ஒரு குலதெய்வம் என்பது ஒரு குடும்பத்தினரின் பதிமூன்று சந்ததியினர் தொடர்ந்து வழிபட்டு வந்திருந்த ஒரு குறிப்பிட்ட தெய்வம் ஆகும். அதை வம்சாவளி தெய்வம் என்றும் கூறுவார்கள். அந்த தெய்வமே அவர்களது குலங்களை பாதுகாத்து வழி நடத்தி வரும் தெய்வம் என்பார்கள். ஒருவருடைய குடும்பத்தின் குலதெய்வம் யார் என்று தெரியாத நிலையில் அவர்களது குலதெய்வம் யார் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
சில சமயங்களில், தொலைதூர உறவினர்கள், குறிப்பாக கிராமத்தில் வசித்து வரும் நமது மூதாதையர்களின் சொந்தக்காரர்கள் மூலம் அது குறித்து அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் கிராமத்தின் முன்காலம் தொட்டு இருந்து வரும் பிரதான தெய்வம் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதுவே உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். உங்கள் கிராமத்தில் எந்த ஆலயங்களில் மொட்டை அடித்தல் அல்லது திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் போன்ற குடும்ப சடங்குகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்திருந்தன என்பதை தெரிந்து கொண்டால் குல தெய்வத்தைக் கண்டு பிடிக்கலாம்.
அடையாளம் தெரியாத தமது குல தெய்வம் யார் என்பதை அறிந்து கொள்ள தமது ஜாதகத்தைக் கொடுத்து ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பார்கள்; சிலர் நாடி ஜோசியம் பார்ப்பார்கள்; சிலர் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பார்கள் என்றாலும் அவை இவற்றின் மூலமுமே சரியான விடை கிடைப்பது இல்லை. நான் அறிந்த வரை சுமார் 90 சதவிகிதத்திற்கு மேலானவர்களுக்கு சரியான விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
ஆகவே நமக்கு தெரியாத குலதெய்வம் யார் என்பதை அறிந்து கொள்ள அங்கும் இங்கும் தேவை இல்லாமல் அலைந்து கொண்டு பணத்தை விரயம் செய்வதை தவிர்த்து விட்டு, பண்டைய காலங்களில் அடையாளம் தெரியாத தமது குல தெய்வம் யார் என்பதைக் கண்டு பிடிக்க கிராமங்களில் இருந்த நம் மூதாதையர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த வழிமுறையை கடைப் பிடிப்பதில் மூலம் தெளிவான விடை கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.
முன் காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு நதிக் கரையில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். களி மண்ணே படைப்பு மற்றும் இறப்பின் சுயற்சியைக் குறிக்கும் ஒன்றாகும். நதிக் கரையில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்திருந்த களி மண்ணை பூஜை அறையில் பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தை இட்டு ‘தெய்வமே நீங்களே எமது அடையாளம் தெரியாத குலதெய்வம். நீங்கள் விரைவில் எனக்கு உங்கள் அடையாளத்தையும், நீங்கள் அமர்ந்து உள்ள ஆலயத்தின் இடத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அதுவரை நீங்கள் இங்கு எங்கள் குலதெய்வமாக இருந்து கொண்டு எங்கள் பிரார்த்தனைகளை இந்த பூஜை/ஆராதனை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். நமக்குத் தெரியாத குலதெய்வத்தை தெரிந்து கொள்ளும் பிரார்த்தனை முறையை எப்படி செய்வது?
அவர்கள் கடைப்பிடித்து வந்த வழிமுறையைக் கொண்டு அடையாளம் தெரியாத குல தெய்வத்தைக் கண்டு பிடிக்கும் பிரார்த்தனை முறை கீழே கூறப்பட்டு உள்ளது.
பிரார்த்தனை முறை
1. நமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செய்வாய் கிழமையில்தான் செய்யத் துவங்க வேண்டும். ஏன் எனில் செய்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.
2. சடங்கை ஆரம்பிப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் ஏதாவது நீர் நிலையில் இருந்து ஒரு கைப் பிடி களி மண்ணை எடுத்து வந்து அதை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருங்கள். அதை எங்கிருந்து கொண்டு வருவது என குழம்ப வேண்டாம். வீட்டின் அருகில் நீர் நிலை இல்லை என்றால், வீட்டு தோட்டத்தில் உள்ள மண் அல்லது ஏதாவது ஒரு ஆலயத்தின் உள்ளே உள்ள பிராகாரத்தை சுற்றி உள்ள இடத்தில் இருந்தும் மண்ணை எடுத்து வரலாம், ஆனால் தெருவில் இருந்து எடுத்து வரக்கூடாது.
3. பாதுகாப்பாக எடுத்து வந்திருந்த களி மண்ணை தண்ணீர் விட்டு நன்றாகக் பிசைந்து கெட்டியாக, பிள்ளையார் பிடிப்பது போல பிரமிட் வடிவில் செய்து காய வைத்து விடுங்கள்.
4. செய்வாய் கிழமை குளித்தப் பின்னர் ஒரு மரப் பலகை மீதோ அல்லது ஸ்வாமி பீடத்திலோ கோலம் போட்டு, அதன் மீது ஒரு சிறிய தாம்பாளத்தை வைத்து விட்டு, அதன் மீது பிடித்து வைத்து, காய்ந்து போய் இருந்த பிரமிட் வடிவிலான களிமண் உருண்டையை வைத்து விடவும் (அனைவர் வீட்டிலும் பொதுவாக ஸ்வாமி அறையில், பூஜைக்கென்றே சிறிய அளவிலான பித்தளை தாம்பாளம் இருக்கும்). தாம்பாளத்தில் வைத்துள்ள களிமண் பொம்மையை அடையாளம் தெரியாத உங்கள் குலதெய்வமாக மனதார எண்ணி அதற்கு சந்தனம் குங்குமம் இட்டு சிறிய மாலை ஒன்றை அணிந்து பிரார்த்தனையை ஆரம்பிக்க வேண்டும்.
5. எந்த ஒரு சடங்கையோ அல்லது பூஜையையோ துவக்கும் முன் முதலில் பிள்ளையாரை வழிபட்டு விட்டுத்தான் துவக்க வேண்டும். அவரே அனைத்து தடங்கல்களையும் களைபவர். அவரிடம் எங்கள் பிரார்த்தனை நல்ல முறையில் நடந்து முடிய உங்கள் ஆசிகள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிரார்த்தனையை துவக்க வேண்டும்.
6. உங்களுக்கு தெரிந்த மந்திரம் இருந்தால் அதை கூறவும். அப்படி தெரியாது என்றால் அதன் முன் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ ‘தெய்வமே நீங்களே எமது அடையாளம் தெரியாத குலதெய்வம். நீங்கள் விரைவில் எனக்கு உங்கள் அடையாளத்தையும், நீங்கள் அமர்ந்து உள்ள ஆலயத்தின் இடத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அதுவரை நீங்கள் இங்கு எங்கள் குலதெய்வமாக இருந்து கொண்டு எங்கள் பிரார்த்தனைகளை இந்த பூஜை/ஆராதனை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும்’ என்று வாயால் மூன்று முறை கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அதற்கு கற்பூர ஆரத்தி காட்டிய பின், அதை நமஸ்கரிக்க வேண்டும்.
7. தினமும் காலை இந்த பிரார்த்தனையை குளித்தப் பின் தொடர்ந்து செய்யவும். காலை மற்றும் மாலையில் அதை செய்வது நல்லதே. ஆனால் தினமும் அதற்கு மஞ்சள் குங்குமம் தூவி அர்ச்சனை செய்ய வேண்டியது இல்லை.
8. வாரம் ஒருமுறை அதாவது செய்வாய் கிழமை களி மண்ணிலான அந்த தெய்வத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு தாம்பாளத்தை சுத்தம் செய்து மரப் பலகையில் கோலம் போட்டு அன்று மட்டும் சந்தன குங்குமம் சிறிது தூவி பூஜை செய்யலாம். ஆனால் நம்பிக்கையுடன் செய்வது முக்கியம்.
9. மர பீடத்தின் முன் ஒரு உண்டியை வைத்து அதில் ஒரு ரூபாய் அல்லது நீங்கள் விரும்பும் காணிக்கைகளை போட்டு வைக்கவும்.
10. களிமண் பொம்மையை பத்திரமாக பாதுகாத்து வைக்கவும். எதோ ஒரு அஜாகிரதையினால் அல்லது வேறு காரணத்தினால் அது உடைந்து விட்டால் கவலைப்பட வேண்டாம். அந்த அடையாளம் தெரியாத தெய்வத்திடம் தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டு விட்டு, மீண்டும் அதே
களிமண் பொம்மையை முன் போல பிரமிட் வடிவில் செய்து அந்த பிரார்த்தனையை பழையபடி செய்யத் துவங்கவும். வேண்டும் என்றே நீங்கள் தவறை செய்யவில்லை என்பதினால் உங்கள் குலதெய்வம் உங்களை நிச்சயம் மன்னித்து விடும்.
11. நம்பிக்கையோடு ஆரம்பித்த பிரார்த்தனையை வெறுப்பினாலோ அல்லது யாராவது குறை கூறுகிறார்களே என்பதற்காகவோ நடுவில் கை விடாதீர்கள்.
12. உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரியும் வரை ஒவ்வொரு வருட முடிவிலும் எந்த செய்வாய்க் கிழமையிலாவது உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து அருகில் உள்ள ஆலயத்தின் உண்டியலில் அதை உங்கள் அடையாளம் தெரியாத குல தெய்வத்திற்கு காணிக்கை என சேர்க்கவும்.
13. இந்த பிரார்த்தனையை செய்யத் துவங்கிய உடனேயே குலதெய்வத்தை உதாசீனப்படுத்தினீர்கள் என்ற சாபம் உங்களை விட்டு விலகி விடும்.
14. நீங்கள் முழு மனதோடு பிரார்த்தனையை ஆரம்பித்த சில நாட்களிலேயே தன்னை அதுவரை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் உள்ள உங்கள் குலதெய்வம் அந்த களிமண் சிலையில் புகுந்து கொண்டு உங்கள் குடும்பத்தின் பாதுகாவலராக மாறி விடும்.
15. எந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு காட்சி தர வேண்டும் என்ற பிராப்தம் உள்ளதோ அப்போது அந்த தெய்வம் உங்கள் கனவில் வந்தோ, யார் மூலமாவது தன்னை அடையாளம் காட்டி விடும்.
16. ஆனால் நம்பிக்கையை இழக்காமல் எத்தனை வருடம் ஆனாலும் அந்த பிரார்த்தனையை தொடர வேண்டும். பிரார்த்தனையை துவங்கிய சில தினத்திலேயே உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளும், குழப்பங்களும் குறையத் துவங்குவதைக் காணத் துவங்குவீர்கள்.
17. பல வருடங்கள் ஆகியும் உங்களது குலதெய்வம் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் கூட கவலை வேண்டாம். அந்த களிமண் பொம்மை மூலம் உங்களது குல தெய்வம் உங்கள் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றும்.
18. மீண்டும் கூறுகின்றேன். இந்த வகையிலான பிரார்த்தனையை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செய்து வந்தால் உங்களுக்கு தெரியாமல் உள்ள உங்கள் குல தெய்வம் ஒரு நாள் வெளித் தெரியும்.
19. இதற்கு இடையிலேயே உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரிந்து விட்டால் அந்த களிமண் பொம்மையை எப்போது குலதெய்வ ஆலயத்திற்கு செல்வீர்களோ அப்போது அதை குலதெய்வ ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மரத்தின் அடியில் வைத்து விட்டு பிரார்த்தனையை நிறைவு செய்த பின் திரும்பலாம். அதுவரை அந்த களிமண்ணால் செய்த உருவமே உங்கள் குல தெய்வம் என்பதை மனமார நம்ப வேண்டும்.
20. இந்த முறையிலான வழிபாடு கண்டிப்பாக நிறைவேறும் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. காலம் காலமாக நம்பப்பட்டு செய்யப்பட்டு வரும் இந்த
வழிமுறை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் பலன் தரும் என்பது பெரியவர்கள் கூறும் வாக்கு ஆகும். நான் சில மஹான்கள், பண்டிதர்கள் மூலம் கேட்டதை என் இணைய தளத்தில் எழுதி உள்ளேன்.