ஆஞ்சனேயர் வால்
வழிபாட்டின் மகத்துவம்
சாந்திப்பிரியா

ஆஞ்சனேயர் வால் வழிபாடு
ஒரு கூற்றின்படி ஆஞ்சனேயர் சிவபெருமானின் அவதாரம் அல்லது அவரை பிரதிபலிப்பவர் என்றும், வேறு சிலர் அவரை விஷ்ணுவின் அவதாரம் என்றும், இன்னும் சிலர் அவர் வாயு பகவானின் மகன் என்றும் கூறுகின்றனர். மொத்தத்தில் ஆஞ்சனேயரைக் குறித்த பெரும்பாலான கதைகள் புராண நூல்களில் காணப்படுபவை.
ஆஞ்சனேயரின் அவதாரம் குறித்து ஒரு புராணக் கதை உள்ளது. ஒருமுறை பகவான் விஷ்ணு வேடிக்கையாக நாரத முனிவரின் முகத்தை ஒரு குரங்கின் முகம் போல மாற்றினார். தன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்திடாத நாரத முனிவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, அங்கிருந்த அனைவரும் அவரது முகத்தைப் பார்த்துக் கேலி செய்தனர். ஆகவே அவர் ஒரு தன் பிம்பத்தை குளத்து நீரில் பார்த்தபோது, குரங்கு முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவமானமடைந்த நாரத முனிவர், கோபத்தில் விஷ்ணு பகவானுக்கு சாபமிட்டார். அதன்படி , விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றில் அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு குரங்கின் உதவியை நாட வேண்டி இருக்கும். தெய்வீகச் செயல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின்படியே நடக்கின்றன. எனவே, விஷ்ணு பகவான் ராமனாக அவதரித்தபோது, ஆஞ்சனேயரும் அவருக்கு உதவியாக இருக்க குரங்கு வடிவத்தில் அவதரித்தார்.
இரண்டாவது கதை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். புராணங்களின்படி, பாதி குரங்கு வடிவம் கொண்ட அஞ்சனா தேவி, தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அதே நேரத்தில், இன்னொரு பக்கத்தில் அயோத்தி தசரத மன்னரும் அதே காரணத்திற்காக தவம் செய்து கொண்டிருந்தார். தசரத மன்னரின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து போன தெய்வம், அவருக்கு மகன்கள் பிறப்பதற்காக, அவரது மூன்று மனைவிகளும் பகிர்ந்து உண்ணும்படி தெய்வீக உணவை அனுப்பினார். அதே சமயம், அஞ்சனாவின் பிரார்த்தனையையும் ஏற்றுக் கொண்ட தெய்வம், அதே தெய்வீக உணவில் ஒரு பகுதியை வாயு பகவான் மூலம் அஞ்சனாவிற்கும் அனுப்பினார். அந்த உணவை உண்ட அஞ்சனா, தெய்வத்தின் அருளினால் ஆஞ்சனேயரை பெற்றெடுத்தார். ஆனால் ஆஞ்சனேயர் தனது தாய் அஞ்சனாவைப் போலவே குரங்கு வடிவில் பிறந்ததால், கருணையினால் வாயு பகவான் அவரை தன் சொந்த மகனாக ஏற்றுக் கொண்டார். இதனால்தான் ஆஞ்சனேயர் வாயு பகவானின் மகனாவார்.
முக்கியமாக ராமருக்குப் போரில் உதவவே ஆஞ்சனேயர் அவதரித்தார்; அவரது முக்கியத்துவம், வலிமை மற்றும் அவர் பெற்றிருந்த சக்தி ஆகியவை, ராவணனால் கடத்தப்பட்ட சீதா தேவியை மீட்க ராமபிரான் நடத்திய இலங்கை போரின் போது வெளிச்சத்திற்கு வந்தன. போர் முடிந்ததும், ராமர் இந்த உலகை விட்டு வெளியேறும் தனது திட்டத்தை வெளிப்படுத்தியபோது, மக்கள் ராமரின் பெயரைப் போற்றும் வரை தான் பூமியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆஞ்சனேயர் கேட்டுக்கொண்டார். ஏனெனில், மக்கள் ராமபிரானின் நாமத்தை உச்சரிப்பதை கேட்க அவர் விரும்பினார். ஆஞ்சனேயரின் கோரிக்கையால் மனம் மகிழ்ந்து போன ராமபிரான் , அவரது விருப்பத்திற்கு சம்மதித்து, ஆஞ்சனேயர் பிரபஞ்சத்தில் உள்ள பல ஆலயங்களிலும் தியான வடிவில் அமர்ந்து இருந்தவாறு, மக்கள் தனது (ராமபிரானின்) நாமத்தை உச்சரிப்பதை அமைதியாகக் கேட்டு மகிழ வேண்டும் என்று கூறினார்.
ஆஞ்சனேயர் எப்படி அசாதாரணமான வலிமையைப் பெற்றார்? ராமாயணப் போரின் போது, ஒவ்வொரு தெய்வமும் தத்தமது சிறப்பு தெய்வ சக்திகளை ஆஞ்சனேயருக்கு வழங்கினார்கள். அவரை எதிர்ப்பவர்கள் மனதில் அச்ச உணர்வையும், கண் சிமிட்டும் நேரத்தில் தனது உருவை பிரும்மாண்டமாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ உருமாற்றிக் கொள்ளும் தன்மையையும் பிரும்மா கொடுக்க, சிவபெருமான் அவருக்குப் பாதுகாப்பு கேடயத்தையும், கடலையோ அல்லது மலைகள் போன்ற பிற இடங்களையோ எளிதில் கடக்கும் சக்தியையும் வழங்கினார்; இந்திரன் வஜ்ராயுதத்தை வழங்கினார்; வருண பகவான், நீரினால் எந்த வகையிலும் ஆஞ்சனேயருக்கு ஆபத்து ஏற்படாது என்று உறுதியளித்தார்; நெருப்பு ஆஞ்சனேயரை எந்த வகையிலும் தீங்கு செய்யாது என்று அக்னி பகவான் அருள் புரிந்தார்.
இராவணனின் அசுரப் படைகள் ஆஞ்சனேயரின் வாலை தீயிட்டுக் கொளுத்தியபோது, அக்னி பகவான் தீயின் வெப்பத்தால் ஏற்பட்ட வலியிலிருந்து அவரை விடுவித்து, அவரது வாலை எந்த அளவிற்கும் நீட்டவும் சுருக்கவும், எந்த அளவிலான எடையையும் கஷ்டம் இன்றி தூக்கத் தேவையான வலிமையையும் வழங்கினார். நவகிரகங்கள் ஆஞ்சனேயருக்கு எந்தத் தீய விளைவுகளும் ஏற்படாமல் இருக்க அவரது வாலுக்குள் தங்கியிருந்தன. இவ்வாறாக ஆஞ்சனேயரின் வால் தெய்வீக சக்திகளால் நிறைந்து இருந்ததினால், அவரது உடலில் மிகவும் சக்தி வாய்ந்த உறுப்பாக அவரது வால் பகுதி மாறியது.
குபேரன், சூரியன், யமன் போன்ற தெய்வங்களிடமிருந்தும், சீதா தேவியிடமிருந்தும் ஆஞ்சனேயர் பல வரங்களைப் பெற்றார். இவை அனைத்தும் ஆஞ்சனேயரை யாராலும் தோற்கடிக்க முடியாதவராக ஆக்கின.
மந்தி, தந்திரங்கள் மற்றும் சூனியத்திற்குப் பெயர் பெற்ற மஹிராவணன் என்ற வலிமை மிக்க ஒரு அரசனை அழிக்கவே பஞ்ச முகத்தோடு ஆஞ்சனேயர் மாறினார் (தெற்கில் மயில் ராவணன் என்றும், அஹி ராவணன் என்றும் அழைக்கப்படுகிறார்). தனது மனைவியை மீட்க ஸ்ரீ லங்கா யுத்தத்தை ராமபிரான் துவங்கியபோது நடந்த சண்டையில், மஹி ராவணன், ஒரு கட்ட யுத்தத்தில் ராமபிரான் மற்றும் லட்சுமணரை கடத்திச் சென்று, நாகங்கள், தைத்தியர்கள் மற்றும் தானவா போன்ற அசுரர் குலத்தவர் பலரும் பொதுவாக வசித்து வந்திருந்த, பூமிக்கு அடியில் உள்ள ஏழு கீழ் லோகங்களின் கடைசி லோகமான பாதாள லோகத்தில் மறைத்து வைத்தான். தைத்தியர்கள் மற்றும் தானவாக்கள் எனப்பட்டவர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் இரண்டு முக்கியமான குலங்கள் ஆவர். இவர்கள் இருவருமே காஷ்யப முனிவரின் இரண்டு மனைவிகள் மூலம் தோன்றியவர்கள்; இவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படும் மற்ற அசுர இனங்களுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்கள்; அசுரர்கள், தமது ஆதிக்கத்திற்காக தேவ குலத்தவரை எதிர்ப்பவர்கள். பூமிக்கு அடியில் உள்ள பாதாள உலகத்தின் ஏழு லோகங்கள் அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ரசாதல மற்றும் பாதாள லோகங்கள் என அழைக்கப்படுகின்றன.
மஹி ராவணனின் உயிர் சக்தி வெவ்வேறு திசைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ஐந்து வண்டுகளில் இருந்தது, மேலும் அந்த ஐந்து வண்டுகளும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டால் மட்டுமே மஹி ராவணன் மரணமடைவான். என்பது விதியாக இருந்தது. வெவ்வேறு திசைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வண்டுகளில் தனது உயிர் சக்தியை வைத்து இருந்த மஹி ராவணனை வெல்ல, ஆஞ்சனேயர் ஒரே நேரத்தில் ஐந்து திசைகளிலும் செயல்பட வேண்டியிருந்தது. ராமபிரான் மற்றும் லக்ஷ்மணரை விடுதலை செய்து கொண்டு செல்ல, பாதாள லோகத்தில் மஹி ராவணனுடன் ஆஞ்சனேயர் உக்கிரமான போர் புரிந்து, ஒரே நேரத்தில் அந்த ஐந்து வண்டுகளையும் கண்டு பிடித்து, அவற்றைக் கொல்வதற்கு அவருடைய ஐந்து முகங்கள் உதவியாக இருந்தன. வேறு சில நாட்டுப்புறக் கதைகள் மஹி ராவணனின் உயிர் ஐந்து இடங்களில் எரிந்து கொண்டிருந்த ஐந்து விளக்குகளில் இருந்தன என்றும், மஹி ராவணனின் உயிரை முடிவுக்குக் கொண்டு வர அந்த ஐந்து விளக்குகளும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட வேண்டும் என்றும், அதற்காகவே ஆஞ்சனேயர் ஐந்து முக வடிவில் மாறினார் என்றும் கூறுகின்றது.
இந்தக் கதை புராண நூலாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப் படாவிட்டாலும், இது வாய்மொழி நாட்டுப்புறக் கதையாகச் சொல்லப்படுகிறது; இருப்பினும், அரக்க மன்னனை வெல்வதற்காக ஆஞ்சனேயர் ஏன் ஐந்து முகங்களை எடுத்தார் என்பதற்கு இது ஒரு விளக்கத்தை அளிக்கிறது. இதன் காரணமாகவே ஆஞ்சனேயரின் பஞ்சமுக வடிவம் ஒரு தாந்திரீக அம்சமாகக் கருதப்படுகிறது.
ஆஞ்சனேயர் வாலில் எப்படி மணி வந்தது ?
நாட்டுப்புறக் கதை ஒன்றின்படி, ராமபிரானாக தோன்றி இருந்த மகாவிஷ்ணு, ஸ்ரீ லங்கா யுத்தம் முடிந்து தான் உலகில் இருந்து மறைய இருந்த நேரத்தில், ஆஞ்சனேயர் முன் தனது உண்மையான ரூபத்தில் காட்சியளித்து, ஆஞ்சனேயரின் சக்திகள் அனைத்தையும் ஒரு சிறிய மணியில் செலுத்தி வைத்து, அதைத் தனது வால் நுனியில் கட்டிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதன் மூலம், அவரிடம் (ஆஞ்சனேயரிடம்) வரங்கள் வேண்டுபவர்கள், அவரது வாலில் கட்டப்பட்ட மணியை அடித்து அவரைப் பிரார்த்திக்க முடியும் என்றும், அந்த மணியின் ஓசை, ராம நாம உச்சரிப்பிற்கு இணையாக மிகவும் இனிமையாக இருக்கும் என்றும், அது ஆஞ்சனேயருக்கு எந்த விதத்திலும் தொந்தரவை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.
ஒருவேளை, தெய்வங்களின் அருளைப் பெறுவதற்காக ஆலயங்களில் மணி அடிக்கும் வழக்கம் இந்தக் கதையின் அடிப்படையிலே தொடங்கியிருக்கலாம். ஏனெனில், இந்தச் சம்பவத்திற்கு முன்பு எந்தப் புராண நூல்களும் ஆலயங்களுடன் தொடர்புடைய எந்த மணியைப் பற்றியும் குறிப்பிடவில்லை. மற்றொரு நாட்டுப்புறக் கதையின்படி, இலங்கை யுத்தத்திற்குப் பிறகு, ராமபிரானின் சேனையில் இருந்த சில வானர வீரர்கள் காணாமல் போயினர். போரின் போது விழுந்த ஒரு பெரிய மணியின் அடியில் அவர்கள் சிக்கியிருப்பதைக் ராமபிரான் கண்டறிந்தார். அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆஞ்சனேயர் தனது வாலை அந்த மணியில் கட்டி அந்த மணியை தூக்கியபோது, அந்த மணி ஆஞ்சனேயரின் வாலில் ஒட்டிக் கொண்டு, ‘ஸ்ரீ ராம’ என்ற நாமத்தை உச்சரித்தது. அதன் அடியில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டார்கள்
பொதுவான தெய்வ வழிபாட்டு முறைகள்
அனுமன் வால் வழிபாட்டின் முக்கியத்துவத்தை நாம் விளக்குவதற்கு முன், இந்து மரபில் நிலவும் பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளையும், குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களும் தனி நபர்களும் பின்பற்றக் கூடிய எளிமையான வழிபாட்டு முறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். தெய்வ வழிபாடு என்பது தமக்கோ அல்லது அவரவர்களின் குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஒரு வகையிலான வரத்தை வேண்டி செய்யப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
வழிபாட்டில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது, சிலை வழிபாடு அல்லது விக்கிரக ஆராதனை. இதில் யந்திரங்கள், சில குறிப்பிட்ட சின்னங்கள், மண், கல், உலோகம் அல்லது மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட சிலைகள், மற்றும் குறிப்பிட்ட தெய்வ படங்கள் ஆகியவை அடங்கும். சிலை வழிபாடானது தெய்வங்களின் உக்கிரமான வடிவங்கள் மற்றும் சாந்தமான வடிவங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. விக்கிரக ஆராதனையில் முக்கியமாக உக்கிரமான அல்லது க்ரோத (கோபமான) வடிவங்கள் என்று அழைக்கப்படும் தெய்வங்களை வழிபடுவதற்கு குறிப்பிட்ட சடங்குகள் தேவைப்படுகின்றன. இவை பெரும்பாலும் தாந்திரீக நடைமுறைகள் அல்லது குறிப்பிட்ட சாதனைகளுடன் தொடர்புடையவை. தெய்வங்களில் உக்கிரமான வடிவங்கள் உள்ளவர்கள் கைகளில் ஆயுதங்களைத் தாங்கியிருப்பவர்கள், மண்டை ஓடுகளை அணிந்திருப்பவர்கள், கையில் வௌவாலை வைத்திருப்பவர்கள், காலடியில் இறந்த மனிதனைக் கொண்டிருப்பவர்கள், அவர்களுக்கான யந்திரங்கள், இரத்தச் சிவப்புக் கண்களுடன், நீட்டிய நாக்கு, பெரிய மார்பகங்கள் மற்றும் ஆண்பால் தன்மை கொண்ட தேவியினர், அவர்களுக்கான யந்திரம், வாள் அல்லது நாவிலிருந்து இரத்தம் சொட்டும் காளி, இரண்யகசிபுவைக் கொல்லும் நரசிம்மர், உக்கிரமான வடிவில் உள்ள ஹயக்ரீவர், ஒரு அசுரனை அழிக்கும் மகிஷாசுரமர்த்தினி, பிரத்யங்கிரா தேவி, காலபைரவர் போன்றவர்கள் ஆவார்கள். அவர்களும் பாதுகாப்பு தரும் மற்றும் அழிவை தரும் அம்சங்களைக் கொண்டவர்கள்தான். இருப்பினும், அதே தெய்வங்கள், பயமுறுத்தும் அல்லது அழிவுகரமாகத் தோன்றும் அம்சங்களைத் தவிர, மென்மையான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளனர். நமது சாஸ்திரங்களின்படி அவை உபாசனை தெய்வங்கள் ஆகும். பிரார்த்தனை மற்றும் பூஜைகளுக்கு அவற்றை உட்படுத்தினால் நியமப்படி அவற்றை செய்ய வேண்டும்.
எனவே, அவர்களை ஆராதிப்பதில் தேவைப்படும் மந்திர சக்திகள் கடுமையானவை, தவறான சடங்கு முறைகள் அந்த தெய்வங்களை கோபப்படுத்தி அழிவை ஏற்படுத்துபவை என்பதினால் அப்படிப்பட்ட தெய்வ ஆராதனை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே அந்த சடங்குகளைச் செய்வது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. தெய்வத்தை முறையாக வரவழைத்து, எந்தவிதமான எதிர்மறை விளைவுகளும் ஏற்படாமல் சாந்தப்படுத்த உதவும் என்று நம்பப்படும் பீஜ மந்திரங்களையும் விரிவான சடங்குகளையும் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களால் எளிதில் செய்ய முடியாது. ஏனெனில் அந்த தெய்வங்களை முறையற்ற முறையில் வழிபடுவது எதிர்மறை விளைவுகளுக்கு வழி வகுக்கும்; உக்கிரமான தெய்வங்களின் வடிவங்களை – சிலை வடிவிலோ அல்லது படங்களாகவோ – வீட்டில் வழிகாட்டுதல் இல்லாமல் வழிபடுவது ஆபத்தானது என்று கருதப்படுகிறது, ஆகவே அத்தகைய வழிபாடு, குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு ஊக்குவிக்கப்படுவதில்லை, தவிர்க்கப்பட வேண்டும்.
பொதுவாக வீட்டின் பூஜை அறைகளில் கோபமில்லாத அதாவது உக்கிரஹ பாவனை இல்லாத தெய்வங்களையே வைத்து வணங்க வேண்டும் என்பதாக நமது சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சீதையுடன் உள்ள ராமர், பார்வதியுடன் உள்ள சிவன், லஷ்மியுடன் உள்ள விஷ்ணு அல்லது நரசிம்மர் , வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகன், பசுவுடன் கூடிய கிருஷ்ணர், வினாயகப் பெருமான், சரஸ்வதி, அமர்ந்த நிலையில் உள்ள லஷ்மி, வெங்கடாசலபதி, தத்தாத்திரேயர், கூப்பிய கரங்களுடன் அமர்ந்துள்ள அல்லது சுற்றிலும் ராமா, ராமா என்ற சொற்கள் இருக்க நின்ற நிலையில் காட்சி தரும் ஹனுமான், சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு செல்லும் ஹனுமான் மற்றும் பல தெய்வங்கள் உள்ள பட்டாபிஷேகம் போன்றவை உண்டு.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எண்ணெய் விளக்கேற்றி தீப வழிபாடு செய்வது உட்பட, சாந்தமான தெய்வங்களை வழிபட்டு அவர்களிடம் அருளைப் பெறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழிபாட்டை எந்தவொரு சாதாரண தனி நபரும் குருவின் உதவியின்றி செய்ய முடியும்.
உலகமெங்கும் உள்ள ஆலயத்திலும் வீட்டு பூஜை அறையிலும் ஆஞ்சனேயர் எனும் ஹனுமான் வழிபடப்பட்டு வருகிறார். பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் உட்கார்ந்த நிலையில் அல்லது நின்றுள்ள நிலையில் கைகளைக் கூப்பிக் கொண்டு ஒரே முகத்துடன் காணப்படும் ஹனுமானின் அடி வாலில் இருந்து நுனி வால் வரை சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு இட்டு தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டிக் கொள்வார்கள்.
சாந்த வடிவில் இருக்கும் ஆஞ்சனேயரை வழிபடுவதற்கும், ஆயுதங்களுடன் காட்சி அளிக்கும் ஆஞ்சனேயரை வழிபடுவதற்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் மன இருளுடனும் பல்வேறு தீய எண்ணங்களுடனும் வாழ்ந்து வருகின்றோம். எனவே ,அத்தகையவர்கள் முறையான சடங்குகள் இல்லாமல் ஒரு வகையிலான உக்ரஹ தெய்வமான பஞ்சமுக ஆஞ்சனேயரை வீட்டில் வழிபட்டால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதினால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆகவேதான் அதற்கு மாறாக, அமைதியான கோலத்தில் காணப்படும் ஆஞ்சனேயரின் வாலை வழிபடுவது ஊக்குவிக்கப்படுகிறது.
ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு உள்ள உக்கிர தெய்வமான பஞ்சமுக ஹனுமான் உபாசனை தெய்வம் ஆகும். அவரிடம் வேண்டுதல்களை வைக்கும்போது நியமப்படி பூஜித்து வணங்க வேண்டும். கண்டபடி எல்லாம் செய்யக் கூடாது. அதற்கு பல விதி முறைகள் உள்ளன. ஆகவே வேண்டுதல்களுக்காக பொட்டு இட்டு பூஜிக்காமல் பஞ்சமுக ஹனுமானை அவரது ஆலயங்களில் மட்டுமே சென்று வேண்டி துதிக்க வேண்டும். ஆலயத்தில் சென்று அவரை வணங்கும்போது அவர் நமக்கு வேண்டியதை தருகிறார். ஏன் என்றால் ஆலயத்தில் அவருக்கு முறைப்படி ஆராதனை செய்து பூஜிப்பதினால் அவர் சாந்தமாக இருப்பார்.
ஆஞ்சனேயரின் வாலின் சிறப்பு என்ன?
தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என விரும்புபவர்கள், ஆஞ்சனேயரின் வாலை பூஜிக்க வேண்டும் என்றும், அந்த பூஜை சடங்கின் முடிவில், ஆஞ்சனேயரின் வாலில் உள்ள மணியை அடிக்கும்போது, அதாவது அவரது வாலில் கட்டப்பட்டு உள்ள மணியின் மீது குங்குமப் பொட்டை வைக்கும்போது அது எழுப்பும் மணி ஓசையினால், தியானத்தில் உள்ள ஆஞ்சனேயர் கண்களைத் திறந்து பார்த்து தன்னை பூஜிப்பவர்கள் வேண்டிய வரங்களை வழங்குவார் என்று ராமபிரான் கூறினார். இது அவரது எல்லையற்ற ஆற்றல், சுறுசுறுப்பு மற்றும் ஆன்மீக வலிமையைக் குறிக்கிறது.
சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு காற்றில் பறக்கும் கோலத்தில், ஸ்ரீ ராமருக்கு முன் அமர்ந்திருக்கும் கோலத்தில், சிவபெருமானை வழிபடும் கோலத்தில் அல்லது சிவலிங்கத்தின் முன் தியானத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சியளிக்கும் ஆஞ்சனேயரின் படத்தில் உள்ள அவரது வாலிற்கு ஒரு சடங்கு போன்ற பூஜை செய்வதின் காரணம் இதுதான். ஆஞ்சனேயரின் வால் பூஜை அல்லது வால் வழிபாடு மற்ற பூஜைகள் அல்லது சடங்குகளிலிருந்து மிகவும் வேறுபட்டது.
பிரும்மச்சாரிகளின் கடவுளான ஆஞ்சனேயரை வழிபடுவது குறித்த கருத்துக்களும் பலவாக உள்ளன; குடும்பஸ்தர்கள் செய்யும் அதிக அளவிலான ஆஞ்சனேய வழிபாடு திருமணமான தம்பதிகளைக் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலக்கி வைக்கும் என்று சிலர் கூறுகின்றனர்; ஆஞ்சனேய வழிபாட்டை சில பூஜை சடங்குகளுடன் செய்யும் பிரம்மச்சாரிகளுக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் குறைவாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்த இரண்டு கருத்துகளுக்கும் முரண்பட்டதாக மற்றொரு கருத்து உள்ளது. அந்த கூற்றின்படி பிரம்மச்சாரிகள் சுய ஒழுக்கத்திற்கும் மன வலிமைக்கும் ஆஞ்சனேய வழிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
உண்மையில் ஆஞ்சனேயரின் வாலை வழிபடுவது முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவரது வால் பகுதி பல்வேறு தெய்வீக சக்திகளைக் கொண்டுள்ளது என்பதினால் ஆஞ்சனேயரின் வாலிற்கு பிரார்த்தனை செய்வதன் மூலம், பக்தர்கள் அதற்குள் அடங்கியுள்ள பல தெய்வ சக்திகளுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். ஆஞ்சனேய வாலின் வழிபாடு மூலம் அந்தத் தெய்வ சக்திகளுக்கும் மரியாதை செலுத்தி, அவர்களிடம் இருந்தும் அருளை பெற முடியும்.
ஆஞ்சனேயரின் வால் மீது பொட்டு வைத்து
வழிபடுவதற்கான காரணங்கள் என்ன?
1. தம்மை தாக்கும் தீய சக்திகளிடம் இருந்து விடுதலை கிடைக்க
2. சாபங்கள், பொறாமை, கண் திருஷ்டி மற்றும் மாந்திரீகத்தால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து விடுபட
3. குறிப்பிட்ட பிரார்த்தனை நிறைவேற
4. நவகிரக தோஷங்கள், குறிப்பாக ஏழரை சனி தோஷங்களிலிருந்து விடுபட
5. கல்வி, தொழில், ஞானம், புகழ் ஆகியவற்றில் வெற்றி பெற
6. பகை சக்திகளை எதிர்கொள்ள தைரியத்தையும் வலிமையையும் பெற
7. தேவையற்ற தடைகள் நீங்குவதற்கு
8. ஆன்மீக வளர்ச்சிக்கு
9. கணவன் மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர
ஆஞ்சனேயர் வால் மீது பொட்டு வைத்து
செய்யப்படும் வழிபாட்டு முறை என்ன?
1. முதலில் ஆஞ்சனேயர் படத்தில் அவருடைய வால் அவரது தலைக்கு மேல் வளைந்து நிற்கும் வடிவில் காணப்படும் படத்தை பயன்படுத்தவும் (மேல் காணப்படும் படத்தைப் போல); குறிப்பாக, வால் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கும் படத்தைப் பயன்படுத்தவும்.
2. காலையில் நீராடவும்.
3. தைரியத்தையும் வலிமையையும் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்படும் பிரார்த்தனை நிறைவேற குங்குமப் பொடி அல்லது சிந்தூரக் கலவையையும், பொதுவான வேண்டுதல்களுக்காக குங்குமத்தையும், ஞானம்/தொழில் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு வெண்ணெயையும் பயன்படுத்தவும். வெண்ணையினால் பொட்டு வைத்து விட்டு அதன் மீது சிறிது குங்கும பொட்டு வைக்கவும். வெண்ணையினால் பொட்டு வைத்து விட்டு அதன் மீது சிறிது குங்கும பொட்டு வைக்கவும்.
4. மேலே குறிப்பிட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, வால் மீது ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு புள்ளி வைக்கத் தொடங்குங்கள்.
5. ஆஞ்சனேயரின் உடலை ஒட்டியுள்ள வால் பகுதியின் கீழிருந்து தொடங்கி, ஒவ்வொரு நாளும் வால் மீது ஒரு சிறிய புள்ளி வைக்கவும் {விளக்கப் படம் 16ரை பார்க்கவும்}.
6. ஒரு நாளைக்கு ஒரு புள்ளி மட்டுமே வைக்க வேண்டும்.
7. புள்ளி வைத்த பிறகு, பின்வரும் ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரத்தை பத்து முறை உச்சரிக்கவும்.
ஓம் ஆஞ்சனேய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தன்னோ ஹனுமந்த ப்ரசோதயாத்
ॐ आंजनेय विद्महे
वायु पुत्राय धीमहि
थन्नो हनुमंत प्रचोथयथ
8. மந்திரத்தை உச்சரித்த பிறகு, உங்கள் பிரார்த்தனை வெற்றிபெற ஆஞ்சனேயரை வேண்டிக் கொண்டு, படத்தின் முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கவும்.
9. குங்குமப் பொடி, சிந்தூரம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு ஒரு புள்ளி வீதம் 48 நாட்களுக்கு இந்த பிரார்த்தனையையும் மந்திர உச்சரிப்பையும் தொடரவும்.
10. முந்தைய புள்ளிக்கு மேல் புள்ளி வைக்க வேண்டாம், மாறாக விளக்கப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஏற்கனவே வைக்கப்பட்ட புள்ளிக்கு மேலே புதிய புள்ளி வைக்கவும்.
11. நீங்கள் சடங்கின் இறுதி நாளை (48வது நாள்) அடையும்போது, மணி கட்டப்பட்டிருக்கும் வால் நுனியை அடைந்திருப்பீர்கள்.
12. 48 நாட்களுக்கு முன்பே, புள்ளிகள் வைப்பது வால் நுனியை அடைந்து விட்டால், கவலைப்பட வேண்டாம். பிரார்த்தனை காலம் முடியும் வரை மீதமுள்ள நாட்களுக்கு, கடைசி புள்ளி மீது, புள்ளிக்கு மேல் புள்ளி வைக்கவும். இது அனுமதிக்கப்படுகிறது.
13. இறுதியாக, வால் நுனியில் கடைசி சிந்தூரப் புள்ளியை வைத்த பிறகு, 48 ஆவது நாளன்று வாலில் கட்டப்பட்டிருக்கும் மணியின் மீதும் புள்ளி வைக்கத் தவறாதீர்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் மணியை அடித்து, தியானத்தில் இருக்கும் ஆஞ்சனேயரை எழுப்ப, அவர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் பிரார்த்தனை நிறைவேற அருள் புரிவார்.
14. இந்த ஆஞ்சனேயர் வால் பூஜையை செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் தொடங்குவது சிறந்தது. பெண்களின் மாதவிடாய் காலங்களில், தொடர்ச்சியாக பொட்டு வைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் அதைத் தொடரலாம். இருப்பினும், 48-வது நாளில், பூஜையைத் தொடங்கியவர் மட்டுமே அதை முடிப்பது அவசியம். எனவே, பெண்கள் 48-வது நாளில் மாதவிடாய் பிரச்சனை இல்லாமல் பூஜையை முடிக்கும் வகையில், ஆஞ்சனேயர் வால் பூஜையை தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
15. 48-வது நாளில், வாலின் மேல் முனையில் கடைசிப் புள்ளியை வைக்கும் செயல்முறை முடிந்ததும், பிரார்த்தனையை நிறைவு செய்வதற்காக அவருக்குப் நைவேத்தியம் வழங்கப்படுகிறது. அந்தப் படையல் சர்க்கரை கலந்த ஒரு குவளை சாதாரண பாலாகக் கூட இருக்கலாம். ஆஞ்சனேயருக்கு பிடித்தமான வெண்ணெய், வடை (வெங்காயம்/பூண்டு இல்லாதது), வெற்றிலை மாலைகள் போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பித்து, சடங்கை நிறைவு செய்யவும்.
16. நீங்கள் மீண்டும் ஆஞ்சனேயர் வால் பூஜையை செய்ய முடிவு செய்யும் வரை, அது சில மாதங்கள் கழித்து என்றாலும் கூட, ஆஞ்சனேயர் மீது வைக்கப்பட்ட பொட்டுகளைத் துடைத்து விட வேண்டாம். படத்தின் மீது வைத்து உள்ள பொட்டுக்களை அழிக்காமல் வைத்து இருங்கள்.

17. வால் வழிபாடு செய்வதற்கு ஏற்ற ஆஞ்சனேயர் படம் எளிதில் கிடைக்காததால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள படங்களை அச்சிட்டு, சட்டமிட்டு, ஆஞ்சனேயர் வால் பூஜைக்காகப் பயன்படுத்தவும்.

