ரகுவம்சம் -1

சாந்திப்பிரியா

காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி மற்றும் வடமொழியில் காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதார்ஜுனீயம், மாகரின் சிசுபாலவதம், மற்றும் ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் ஆகியவை முக்கியமானவை ஆகும். தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள அந்த ஐந்து நூல்களும் ஐம்பெருங் காப்பியங்கள் என போற்றப்படுகின்றன.

ரகுவம்ச காவியம் என்பது என்ன? ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகு வம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவைகளே ரகு வம்ச  காவியம் ஆகும். ரகு வம்சத்தின் மூலம் ராமபிரானுக்கு முன் காலத்திலேயே வசிஷ்ட முனிவர், கௌஷக முனிவர் போன்றவர்கள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

வடநாட்டில் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசன். அவர் பிறப்பும், வாழ்கையும் குறித்த செய்திகள் சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகிறது. கல்வி அறிவே இல்லாமலிருந்த காளிதாசன் ஒருநாள் உஜ்ஜயினி காளி தேவியின் கருணை பெற்று முறையாகக் கல்வி கற்றவர்களையும் மீறிய அளவில் சமிஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, நிகரில்லாத அறிவாற்றல் பெற்று, பல அற்புதமான காவியங்களை இயற்றினார். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன.  ரகு வம்ச  காவியத்தை எதற்காக காளிதாசன் எழுதினர் என்பது குறித்த செய்தி இல்லை. சமிஸ்கிருத மொழியில் காளிதாசனால்  எழுதப்பட்டிருந்த ரகு வம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. இதில் இரண்டு ஆச்சர்யமான செய்திகள்  என்னவென்றால் முதலாவதாக காளிதாசன் எழுதியதற்கு முன்னர் இருந்திருந்த ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதைக்  குறித்து  எவருமே எழுதியதாக தெரியவில்லை.  இரண்டாவதாக  காளிதாசனுக்கு எப்படி ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதும், அவர்களது வரலாறும் தெரிந்திருந்தது என்றும் விளங்கவில்லை.

இதில் இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டில் சமிஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டு உள்ள ரகு வம்சம் எனும் அந்த அற்புதமான காவியத்தை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளார்கள் என்பதும், அதை முதன் முதலில் தமிழில் எழுதியவர் இலங்கையை சேர்ந்த மன்னனான அரசகேசி என்பதைக் கேட்கும் போது  சற்று வியப்பை தரும். அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரிய சக்கரவர்த்தி எனும் பரராஜசேகரன் என்பவரே இந்த நூலை தமிழில் இயற்ற துணையாக இருந்து அதை எழுதியவரை ஊக்குவித்தார் என்றும் கூறுகிறார்கள்.  அது மட்டும் அல்ல தமிழில் அரசகேசரி எழுதிய ரகு வம்ச  காவியம் அந்த கால கட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரை ஆண்டு வந்திருந்த ரகுநாத நாயக்கர் எனும் அரசரின் சபையில்தான் முதன் முதலாக படிக்கப்பட்டு அரங்கேறியது என்றும் ஒரு செய்தி உண்டு.  இதில் இருந்து இன்னொரு விஷயமும் நமக்கு தெளிவாகிறது. இந்தியாவும், இலங்கையும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளன. தென் பகுதியில், இலங்கையையும் சேர்த்தே தமிழ் மொழி சிறப்புற்றுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தமிழில் எழுதப்பட்டு உள்ள பல  நூல்களைக்  காணும்போது தமிழ்நாட்டை விட இலங்கையில் அதிக தமிழ் படைப்புக்கள் படைக்கப்பட்டு உள்ளன, தமிழ்நாட்டை சேர்ந்த பகுதிகள் மற்றும் இலங்கையின் பகுதிகள் இரண்டையுமே தமிழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள் என்பதெல்லாம் கண்ணாடி பிம்பம் போல தெரிகிறது.

ரகு வம்சம் என்பதின் சாரம் என்ன என்றால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே முதலில் அவதரித்த மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை பூலோகத்தில் எடுத்து தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டு இருந்துள்ளது.  அந்த பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரத்தில் பிராமணப் பிரிவை சேர்ந்த பரசுராமனாக அவதரித்து ஷத்திரியர்களைக் கொல்வதும், ஏழாவது அவதாரத்தில் ஷத்திரியப் பிரிவை சேர்ந்த ராமனாக அவதாரம் எடுத்து பிராமணப் பிரிவை சார்ந்த ராவணனைக் கொல்வது,  மற்றும் கௌதம புத்தராக அவதரித்து தாழ்ந்த பிரிவினரையும் மற்ற பிரிவினருக்கு சமனானவர்களாக மாற்றுவது போன்றவை முக்கியமானவை. இதன் மூலம் பிரும்மா படைத்திருந்த நான்கு வர்ணங்களான பிராமணன், ஷத்ரியன், வைசியர், சூத்திரர் என்பதில் எந்தப் பிரிவினருமே உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. அனைவருமே தெய்வ நாடகத்தின் அங்கங்களே என்பதைக் காட்டும் நாடகம் ஆகும் .

நிற்க, மகாவிஷ்ணு அவதரித்த ராமாவதாரத்தை விளக்குவதே ரகுவம்சம் ஆகும். மகாவிஷ்ணு பூலோகத்தில் மானிடப் பிறவியான ராமராக அவதரிக்க எத்தனைப் பிறவிகள் காத்திருக்க வேண்டி இருந்தது, அதற்கு முன்னர் என்ன பிரிவுகளை அவர் உருவாக்க வேண்டி இருந்தது என்பதையெல்லாம் மறைமுகமாக விளக்குகிறது ரகு வம்சம். இதில் காளிதாசன் எழுதிய ரகு வம்சம் கதை அல்ல, அதற்கும் மேற்பட்டக் காவியம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தெய்வ அருளைப் பெற்று இருந்த காளிதாசன் அந்த தெய்வங்களின் அவதாரங்களை மனதார அறிந்திருக்கிறார், அதனால்தான் அவரால் ராமருடைய முன்னோர் மற்றும் சந்ததியினரின் வரலாற்றை காவியமாக எழுத முடிந்துள்ளது. காளிதாசன் இல்லை என்றால் ராமருடைய வம்சத்தைப் பற்றியும், அவருடைய அம்சத்தையும் குறித்து யாரால் அறிந்திருக்க முடியும்?

ராமபிரானின் பரம்பரையை அறிந்து கொள்ள ரகு வம்ச காவியத்தைப் படிக்க வேண்டும். ஆனால் ராமாவதாரத்தைப்  படிக்கும் முன்னர் ராமருடைய பரம்பரை அதாவது இஷ்வாகு பரம்பரை  தோன்றிய  துவக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் ஒவ்வொரு மனித அவதாரத்தையும் தெய்வங்கள் எடுத்தபோது என்னென்ன செய்து ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் அவர்கள் அவதரித்தார்கள் என்பதின் அர்த்தம் புரியும்.

விஷ்ணு புராணத்தின்படி  இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரும்மாவின் கட்டை விரலில் இருந்து தோன்றியவர் தக்ஷபிரஜாபதி   ஆவார்.   அவருடைய மகள்  அதிதி என்பவளின் மகனே சூரிய பகவான் ஆவார். சூரியனாருக்குப் பிறந்த மகன் மனு எனும் அரசன்.  அவர் தழைத்த வம்சம் சூரிய வம்சம் என அழைக்கப்பட்டது. சூரிய வம்சத்தின் பிரபலமானவர்கள் கங்கையை பூமிக்கு கொண்டு வந்த பகீரதன், வசிஷ்ட முனிவர், சத்தியத்தை காத்த ஹரிச்சந்திரன், முல்லைக்கு தேர் கொடுத்த  சிபி மன்னன் மற்றும்  சாகரா போன்றவர்கள் ஆவர். சூரியனின் மகன் மனுவிற்கு அறுபது மகன்கள் பிறந்து இருந்தாலும் அவர்களுக்குள்ளேயே  எழுந்த பகையினால் அவர்களில் ஐம்பது மகன்கள் மாண்டார்கள். மீதி வாழ்ந்திருந்த பத்து மகன்களில் ஒருவரே இஷ்வாகு என்பவர்.   இப்படியாக சூரிய வம்சத்தின் முதல் மன்னனாக பூமியிலே த்ரேதா யுகத்தில் சூரியனின் பேரரான இஷ்வாகு  எனப்பட்டவர் ஆட்சியில் அமர்ந்தார்.  அது முதல் இஷ்வாகுவை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களை  இஷ்வாகு பரம்பரை என்று அழைத்தார்கள்.  அவர்கள் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் என்றாலும்  இஷ்வாகுவை தொடர்ந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த பரம்பரையை  அவர் பெயரிலேயே அமைந்த இஷ்வாகு ராஜ வம்சம் என்றே அழைத்தார்கள். சராயு நதிக்கரையை ஒட்டி இருந்த கோசல நாட்டை ஸ்தாபனம் செய்து  அயோத்தியாவை அதன் தலைநகராகக் கொண்டு  ஆண்டார்  சூரிய வம்சத்தின் முதல் மன்னனான  இஷ்வாகு .

ராமபிரான் தோன்றுவதற்கு முன்னர்  ஆட்சி செய்த இஷ்வாகு வம்சத்தை சார்ந்த  மன்னர்கள் 118 பேர் ஆவர். அந்த 118 மன்னர்களுக்கு இடையில் ராமனுக்கு முன்னர் ஆண்டு வந்திருந்த, இஷ்வாகு வம்சத்தின் 58 ஆவது மன்னனாக முடிசூட்டிக் கொண்ட  திலீபன் என்ற மன்னனின் காலத்துக்குப் பின்னரே இஷ்வாகு என்ற வம்ச ஆட்சி  மறைந்து  அந்த இஷ்வாகு வம்சத்தின் ஒரு பிரிவாக ரகு வம்சம் என்ற புது வம்சம் துவங்கியது.

ரகு வம்ச  துவக்கம்:    திலீபன் தோன்றிய வரலாறு

ஆதியிலே மனு வம்சத்தை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் மகனும் அரசர்களுக்கெல்லாம் அரசராக விளங்கியவனுமான  வைவச்சுதன் எனும் அரசன் பூவுலகில் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அது  இஷ்வாகு வம்சம் எனப்பட்டது.  இஷ்வாகு வழி வந்த மன்னர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தாலும், அவர்களில் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைந்ததும், ஆட்சி செய்த அந்த சிலரில் ஒருவராக ஆட்சிக்கு வந்தவர்களில் முக்கியமானவர் திலீபன் எனும் மன்னன் ஆவார்.  காளிதாசன் தனது 30 ஆம் பாடலில்  கூறுகிறார்  ”மனு வம்சத்தில் திடீரென பால் கடலில் இருந்து எழும் பூரண சந்திரனைப் போல திலீபன் என்றொரு மன்னன் பிறந்து ஆட்சிக்கு வந்தார்”. திலீபன் பெற்றிருந்த பெருமையைப் போல வேறெந்த அரசரும் பெறவில்லை. அவரைப் படைத்தவர் அவர் தனித் தன்மைக் கொண்ட பெருமை வாய்ந்தவராக விளங்க வேண்டும் என நினைத்தே அவரை தனிப் பிறவியாக படைத்தாரோ என்னவோ! அவருடைய மனைவியின் பெயர் சுதக்கிணை என்பதாகும். அவர்களுக்கு குழந்தை பேறு கிடையாது. இத்தனைக்கும் திலீபன் உன்னதமான புருஷர், சாஸ்திரங்களிலும் புலமை, சாஸ்திர உணர்வுகளுக்கும் மரியாதை, இரக்க குணம், பகைவரானாலும் அதிலும் நல்லவர்கள் இருந்தால் அவர்களையும் மதிப்பவர் போன்ற பெருமைகளை உள்ளடக்கியவர். மகா பராக்கிரமசாலி, அவரைக் கண்டாலே எதிரிகள் அடங்குவர் என்பதெல்லாம் அவர் பெற்று இருந்த பெருமைகளாகும். அவருக்கு குல குரு வசிஷ்ட முனிவர் ஆவார்.

தமக்குப் பிறகு இந்த பூமியை ஆள்வதற்கு இஷ்வாகு வம்சத்தினர் யாருமே இல்லாமல் போய் விடுவார்களே என்ற கவலை கொண்ட திலீபன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ராஜ குரு வசிஷ்டரை சந்தித்தார்.  மனைவி அருந்ததியுடன் ஆஸ்ரமத்தில் இருந்த வசிஷ்டர் திலீபனை வாழ்த்தி விட்டு அவர் தன்னைத் தேடி வந்ததின் காரணத்தைக் கேட்க திலீபன் கூறினார்  ‘ஸ்வாமி உங்கள் மகிமையினால்தான் என்னுடைய அனைத்து துயரங்களும் நீங்குகின்றன, என் நாட்டில் களவு இல்லை, பஞ்சம் இல்லை, ஹோம குண்டங்கள் எரியும்போது மழையும் தானாகவே பொழிகின்றது. இத்தனை இருந்தும்   எனக்கு புத்திர பாக்கியம் இல்லை என்பதினால் என்னை இந்த பூமியில் உள்ளவர்கள் இகழ்கின்றார்கள். எனக்கு பின்னர் என் சந்ததியினருக்கு பிண்டம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். எனவே இந்த சீடனுக்கு நீங்கள்தான் தக்க அறிவுரை வழங்கி துயரைத் தீர்க்க வேண்டும். பிண்டம் கிடைக்காத முன்னோர் கொடுக்கும் சாபம் எம்மை தேவலோகத்தில் கூட வாட்டி வதைக்கும். இஷ்வாகுவின் குலத்தவருக்கு  பிண்டம் கொடுக்க முடியாத நிலையை என் மூலம் ஏற்பட  வைக்காதீர்கள். குருவே நாங்கள் அப்படி என்ன பாபம் செய்து விட்டோம்? தானங்கள் தரவில்லையா, தர்மம் செய்யவில்லையா? இல்லை எம் குடியினர் எந்த கஷ்டமும் அடையக் கூடாது என்பதற்காக நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவில்லையா? நீங்கள்தான் தக்க உபாயம் கொடுத்து எம் சந்ததியினர் வளர உதவ வேண்டும்’ என அழுது புலம்பினார்கள்.

அதைக் கேட்ட வசிஷ்ட முனிவர் அவர்களிடம் கூறினார் ‘திலீபா, உனக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் உனக்கு முன் ஒரு காலத்தில் காமதேனுப் பசுவினால் கிடைத்த சாபம்தான். ஒரு முறை நீ இந்திரலோகத்துக்குப் போய் விட்டு திரும்பும் வழியில் கற்பக மரத்தடியில் காமதேனுப் பசு படுத்திருந்ததைப் பார்த்தாய். ஆனால் எப்போது காமதேனுப் பசுவைப் பார்த்தாலும் அதற்கு வந்தனம் செய்து விட்டுப் சென்ற  நீ  அன்றைய தினம் அதைப் பார்த்தும் கூட அதற்கு வந்தனம் செய்யாமல் அதை அலட்சியப்படுத்துவது போல அவசரம் அவசரமாக கருத்தரிக்க இருந்த உனது  மனைவியைப் பார்க்க சென்றாய். அவள் உனக்கு ஒரு அற்புதமான புத்திரனைப் பெற்றுத் தருவாள் என்ற கனவுடனும் அவசரம் அவசரமாக நீ அரண்மனைக்கு சென்று கொண்டு இருந்தாய்.  தன்னை அவமரியாதை செய்து விட்டுப் போன திலீபனைக் கண்ட காமதேனுப் பசு வருத்தம் அடைந்து ‘அரசனே, என்னை அவமதித்து விட்டு உன் மனைவியைக் காண ஓடிக் கொண்டிருக்கும் உனக்கு என் சந்ததியை நீ வந்தனம் செய்யாத வரை,  எந்த சந்ததியும் கிடைக்காது’ என மனதார ஒரு சாபம் கொடுத்தது.  உன் மனைவி கருத்தரிக்க உள்ளதாக எண்ணிக் கொண்டு நீ சென்றாலும், அவள் கருத்தரிக்கவில்லை என்பதைக் கண்டாய். காமதேனுப் பசு கொடுத்த சாபத்தின் விளைவே இன்றுவரை உன் மனைவி கருத்தரிக்கவில்லை’ என்று கூறினார்.

அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். ‘குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ வேண்டும்’ என்று கேட்க வசிஷ்ட முனிவர் கூறினார் ‘திலீபா, அந்த சாபம் விலக வேண்டும் எனில் நீ செய்ய வேண்டியது அந்த காமதேனு பசுவின் கோபத்தைக் குறைப்பதுதான். ஆனால் இப்போது அந்த காமதேனுப் பசுவும் தேவலோகத்தில் இல்லை. அது வருண பகவான் செய்யும் ஒரு யாகத்தில் கலந்து கொள்ள பாதாளத்துக்கு சென்றுள்ளது. இப்போது அதன் மகளான,  சின்னக் கன்றுக் குட்டியாக உள்ள நந்தி எனும்  பசு தாய் காவல் இன்றி அங்கும் இங்கும் அலைந்தவாறு தனியாக தேவலோகத்தில் தவித்தபடி உள்ளது.  ஆகவே நீ தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்று காமதேனுப் பசு திரும்பி வரும்வரை அதன் கன்றான நந்தினிக்கு  சேவை செய்து கொண்டு அதற்கு பாதுகாப்பாக இருந்து வரவேண்டும். அப்போது காமதேனு பசு வந்து அந்தக் காட்சியை கண்டு மனம் மகிழ்ந்து உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க அருள் புரியும். ஆகவே உடனடியாக நீ தேவலோகத்துக்கு சென்று நந்தினிக்கு சேவை செய்ய வேண்டும். இதில் இன்னொரு நிபந்தனையும் உள்ளது. நீ அங்கிருக்கும்வரை தினம் தினம் நந்தினியை வனத்துக்கு அழைத்துச் சென்று அங்கு புல்லை மேய விட வேண்டும். அதற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். காமதேனு திரும்பி வந்ததும் அதை உன் மனைவி வரவேற்று வழிபட வேண்டும். மற்றபடி நீ பரிபூரண சுத்தத்துடன் இருக்க வேண்டும். நல்ல உணவை அருந்தாமல் வனங்களில் கிடைக்கும் காய், கனி வகைகளை உண்டபடி தர்பை பாயில் படுத்துக் கிடக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்’ என்றார்.

இவ்வாறு வசிஷ்ட முனிவர் கூறிக் கொண்டு இருக்கையிலேயே அங்கு நந்தினி வர, அதைக் கண்டு மகிழ்ந்து போன வசிஷ்டர், அதுவே நல்ல சகுனம் என்று கூறி, அதை பாதுகாத்து வரும் பொறுப்பை திலீபன் தம்பதியினரிடம் ஒப்படைத்தார்.  அதைக் கேட்ட திலீபனும் அவரை வணங்கி துதித்து விட்டு, அவரது ஆசிகளையும் பெற்றுக் கொண்டு சற்றும் தயங்காமல் மறுநாள் விடியற்காலை எழுந்து குளித்தப் பின் தனது மனைவியுடன் தேவலோகத்துக்கு கிளம்பிச் சென்றார். தேவலோகத்தை அடைந்த திலீபன் அங்கு நந்தினிக்கு பணிவிடை செய்யலானார். வனத்துக்கு அழைத்துச் சென்று புல் மேய விட்டு மாலை திரும்ப அழைத்து வந்தார். வனத்தில் புல் மேய்ந்த  பின்னர் மாலையில் அந்த கன்று வந்ததும் அதை அன்புடன் வரவேற்ற திலீபனின் மனைவி சுதக்கிணை அதற்கு தண்ணீர் கொடுத்து, தடவிக் கொடுத்து அதை வணங்கி துதித்தாள். தினமும் அந்த மாடு வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று அவருக்கு தேவையான பாலை அங்குள்ள பாத்திரத்தில் சுரந்து விட்டு வரும். திலீபனும் அதனுடன் சென்று அதை பத்திரமாக காட்டிற்கு திரும்ப அழைத்து வருவார்.   இப்படியாக சில நாட்கள் சென்றது. தெய்வப் பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு தெய்வீக சக்தியினால் அவர்கள் அங்கு வந்து தமக்கு சேவை செய்வதின் காரணமும் தெரிந்திருந்தது. இப்படியாக திலீபன் தம்பதியினர் நந்தினி எனும் அந்த பசுவிற்கு பணிவிடைகள் செய்து வந்தபோது இருபத்தி  இரண்டு நாட்கள் கழிந்தன. ஆகவே அது திலீபனின் உண்மையான பக்தியை சோதனை செய்து பார்க்க எண்ணியது. ஒருநாள் நந்தினியை வனத்துக்கு   ஓட்டிக் கொண்டு சென்ற திலீபன் அதை புல் மேய விட்ட பின்   சற்றே திரும்பி இயற்கையின் அழகை ரசிக்கலானார். அப்போது நந்தினி ஒரு குகைக்குள் நுழைந்தது.  அது குகைக்குள் நுழைவதை திலீபனும் சற்று தொலைவில் இருந்து பார்த்தார். அப்போது திடீர் என எங்கிருந்தோ பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று குகைக்குள் புகுந்து நந்தினியை தனது வாயில் கௌவிக் கொண்டு கீழே தள்ளி அதன் அருகில் நின்றது. நந்தினி அப்படியே சுருண்டு விழுந்தது.  ஒரு கணம் அதைக் கண்டு திகைத்துப் போன திலீபன்  அடுத்த வினாடியே அந்த சிங்கத்தைக் கொல்வதற்கு  தனது வில்லையும் அம்பையும் எடுக்க கைகளை  உயர்த்தினார். ஆனால் இரண்டு கைகளும் அசைக்க முடியாமல் அந்தரத்தில் அப்படியே நின்றன. எத்தனை முயன்றும்   வில்லையோ அல்லது அம்பையோ அவரால்  எடுக்க முடியவில்லை. என்ன செய்வதென திகைத்து நின்ற அரசனை நோக்கி அந்த சிங்கம் பேசத் துவங்கியது.  சிங்கம் ஒரு மிருகம் எனும்போது மனித பாஷையில் எப்படி பேசுகிறது என அந்த மன்னன் இன்னும் திகைத்து நின்றான்.

சிங்கம் கூறியது  ‘மன்னா, நான் உண்மையில் சிங்கம் இல்லை. நான் சிவபெருமானுக்கு சேவை செய்து வரும் கும்போதரன் எனும் பூதத் தலைவனாகும். சிவபெருமானின் சேவகர்களில் ஒருவரான நிகும்பாவின் நண்பன் நான். இதோ என் அருகில் உள்ள தேவதாரு எனும் இந்த மரத்தைப் பார். இது சிவபெருமானின் பத்தினியான உமா தேவி ஆசையுடன் வளர்த்து வந்த மரமாகும்.  ஆனால் ஒருநாள் இந்த மரத்தருகில்  காட்டு யானைகள் வந்து இதன் பட்டைகள் மீது தமது உடலை தேய்த்து தேய்த்து சொறிந்து கொள்ள இந்த மரத்தின்  மரப் பட்டைகள் அங்காங்கே வெட்டுப்பட்டு காயமுற்றன. அந்த வேதனையினால் இந்த மரம் முனகிக் கொண்டு  கிடக்க, அந்த சப்தத்தைக் கேட்ட உமா தேவி அங்கு ஓடோடி வந்து யானைகளை துரத்திய பின்னர் மரத்தைத் தடவிக் கொடுத்து ஆறுதல் கூறினாள்.  தன் பிள்ளையைப்  போல வளர்த்து வந்திருந்த மரத்தின் மரப் பட்டைகள் பெயர்ந்து கிடந்ததைக் கண்டு,   மதம் பிடித்த யானைகள் அந்த மரத்தை படுகாயப்படுத்தி விட்டனவே  என வருந்திய  பார்வதி தேவி அழுது கொண்டே சிவபெருமானிடம் ஓடினாள்.

சிவபெருமானிடம் சென்ற உமா தேவி அவரிடம் நடந்த அந்த சம்பவத்தைக் கூறி தான் ஆசையுடன் வளர்த்து  வரும் அந்த மரத்தைப் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டிக் கொண்டாள். ஆகவே சிவபெருமானும் என்னை ஒரு சிங்கத்தின் உருவில் இந்த வனத்தில்  இருந்தவாறு இந்த மரத்தைக் காப்பாற்றுமாறு ஆணையிட்டதினால்  நான் இங்கு சிங்கமாக வந்திருந்து இரவு பகலாக இந்த மரத்துக்குக் காவலாக இருக்கிறேன். ஆனால் என் நிலையைப் பாருங்கள்.  இந்த வனத்தில் தொலைதூரம் வரை எந்த பிராணியுமே வருவதில்லை.  எப்போதாவது அத்தி பூத்தாற்போல வரும் பிராணிகளே எனக்கு இரையாகக் கிடைக்கிறது.  மற்றபடி எனக்கு உணவு சரிவரக் கிடைப்பது இல்லை. எத்தனை நாட்கள்தான் இங்கிருந்தபடியே புல்லையும் காயையும், கனியையும் உண்டு இருந்தபடி வாழ்வது? அதனால்தான் என் பலமும் குறைந்து கொண்டே போகிறது. ஆகவேதான் இன்று எனக்கு எதேற்சையாக   கிடைத்துள்ள இந்த பிராணியை உண்ணலாம் என்று பார்த்தால் என்னைக் கொல்ல வில்லையும் அம்பையும் நீ எடுத்தால் அதை நான் அனுமதிக்க முடியுமா?  ஆகவே மீண்டும் உன் கைகள் சாதாரண நிலையை அடைய வேண்டும் என்றால், இங்கிருந்துக் கிளம்பிச் சென்றுவிடு. நான் இந்த பிராணியை உண்டு விட்டு ஒய்வு எடுக்க வேண்டும்.’ என்று கூற, திலீபனும் அதனிடம் வேண்டலானார்.

‘சிங்கமே, நான் சொல்வதைக் கேள்.  இப்போது வேண்டுமானால் நான் உன்னை ஒன்றும் செய்ய முடியாதவனாக உனக்கு தோன்றலாம்.  ஆனால் என் குருநாதர் வணங்கித் துதிக்கும் தெய்வம் இந்த உலகையே உருவாக்கி அழிக்கும் வல்லமையும் படைத்த சக்தி கொண்டது. அவரை வணங்கும்  என் குருநாதருக்கு எந்த இடைஞ்சலையும் நான் ஏற்படுத்தக் கூடாது என்பதினால் உன்னிடம் வேண்டுகிறேன், சிங்கமே, என்னுடைய குருநாதரின் ஆஸ்ரமத்துக்கு பால் தரும்  இந்த பசுவை விட்டு விடு.  அதனால் உனக்கும் பங்கம் ஏற்படாது.  என் குருநாதருக்கும் இடைஞ்சல் இராது.  அந்தப் பசுவை விட்டு விட்டு அதற்கு பதிலாக என்னை உணவாக ஏற்றுக் கொள். பசு இங்கிருந்து போகட்டும்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட சிங்கம்   சிரித்தது.  மன்னனிடம் கூறிற்று ‘மன்னா, நீ ஏன் அறிவை இழந்து பேசுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பசு இறந்தால்  உன் குரு ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் இழப்பு இல்லை.  அவருக்கு அந்த பசுவிற்கு பதிலாக நீ ஆயிரம் பசுக்களை தானமாகக் கொடுத்து அவர் துயரை தீர்க்க முடியும்.  ஆனால் ஒரு கணம் சிந்தித்துப் பார்.  நீ இறந்தால் உன்னால் பாதுகாக்கப்படும் உன் நாட்டின் அனைத்து மக்களும் அல்லவா சங்கடத்துக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு அதன் பின் பதவிக்கு வருபவர் பாதுகாப்பு  கொடுப்பார் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கும்?  நன்கு யோசனை செய்து பார்.  ஆகவே இந்த பசுவை உண்ணுவதற்கு  என்னை  அனுமதித்து விட்டு  உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ  திரும்பிச் சென்று விடு’.

அதைக் கேட்ட திலீபன் அதனிடம் கூறினார் ‘சிங்கமே , நீ என்னை தவறாக நினைத்து விட்டாய்.  இந்த உலகில்  ஒரு முதுமொழி உண்டு.  எவன் ஒருவன் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளவருக்கு  துரோகம் செய்வானோ, அவன் மரியாதை இழந்து  நம்பிக்கை துரோகி ஆகி விடுவான்.  உன்னை நம்பி இந்த மரத்தைப் பாதுகாக்க  உன்னை இங்கு அனுப்பி உள்ள சிவபெருமானை  ஏமாற்றி விட்டு மரத்தைப்  பாதுகாக்காமல் எங்காவது அலைந்து திரிந்து கொண்டு மீண்டும் அதன் மரப் பட்டைகளை விலங்குகள் நாசப்படுத்துவதை  தடுக்காமல் இருப்பாயா?  அது போலத்தான்  என்னை நம்பி இந்தப் பசுவை ஒப்படைத்து உள்ள என் குருநாதரும் இந்த பசுவிற்கு பதிலாக நான் எத்தனை ஆயிரம் பசுக்களை தந்தாலும் அதை நிராகரித்து விடுவார். அவருக்கே உரித்தான பசுவிற்கு பதிலாக அவர் ஏன் வேறு பசுக்களை  ஏற்க சம்மதிப்பார்?  மற்ற பசுக்கள் இந்த பசுவிற்கு ஈடாகி விடுமா?   இந்தப் பசு இல்லாமல் அவர் முன் நான் சென்று எப்படி நிற்பேன்? ஆகவே என் நண்பன் சிங்கமே என்னைப் பற்றிக் நீ  கவலைப்படாதே. உனக்கு பசிக்கிறதென்றால் என்னை உணவாக்கிக் கொண்டு இந்தப் பசுவை விட்டு விடு.  சிவபெருமானின் சேவகனே உன்னை என்னுடைய நல்ல நண்பனாகக் கருதி உன்னிடம் இதை நான் வேண்டுகிறேன். அந்தப் பசுவை விட்டு விடு’.

அதைக் கேட்ட சிங்கமும் ‘சரி, அப்படி என்றால் உன் ஆயுதங்கள் அனைத்தையும் பூமியிலே போட்டுவிட்டு, நிராயுதபாணியாக நீ என் அருகில் வந்து நில், இந்தப் பசுவை விட்டு விடுகிறேன்’ என்று கூற   திலீபனின் கைகள்  சுய இயக்கத்தைப் பெற்றது. திலீபனும் சற்றும் தயங்காமல் தனது ஆயுதங்கள் அனைத்தையும்  எடுத்து பூமியிலே போட்டு விட்டு சிங்கத்தின் முன்னால் சென்று ‘என்னை உணவாக்கிக் கொள்’  என்று கூறிவிட்டு அதன் காலடியில் நமஸ்கரிப்பது போல படுத்தார்.

அடுத்தகணம் தேவலோகத்தில் இருந்து அவர் மீது பூமாரி பொழிந்தது. ‘திலீபா எழுந்திரு’ என்ற  குரலைக் கேட்ட திலீபன் திகைத்துப் போய்  எழுந்திருக்க அவன் முன் சிங்கம் காணப்படவில்லை. மாறாக அங்கே  நின்று கொண்டு இருந்த நந்தினி கூறியது ‘மன்னா, உன்னுடைய குரு பக்தியை சோதிக்கவே  இந்த நாடகம் அனைத்தையும் நான் நடத்தினேன். உன்னுடைய குரு பக்தியும், என்னிடம் நீ காட்டிய சிரத்தையும் எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.  உனக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேள். என்னை சாதாரண பசு என்று யோசிக்காதே. காமதேனுப் பசுவின் சந்ததி நான். உனக்கு என்ன வரம் வேண்டும், அதைக்  கேள் ‘ என்றதும் மன்னன் கூறினான் ‘ அம்மா, எனக்கு என் குலம் தழைக்க, எனக்கு வாரிசாக உருவாக எனக்கு  ஒரு மகன் வேண்டும்’.

அதைக் கேட்ட நந்தினி கூறியது ‘நீ கேட்ட வரத்தை உனக்கு தருகிறேன் மன்னா, உனக்கு நல்லதொரு மகன் பிறப்பான். கவலைப்படாதே.  அதை  அடைய என் மடியில் இருந்து சுரக்கும் பாலை ஒரு தொன்னையில் கொண்டு சென்று அதை நீயும் உன் மனைவியும் குடிக்க வேண்டும்’ என்று கூறியதும் நந்தினியின் மடியில் இருந்த  பால் சுரக்கும் சுரப்பியில் இருந்து பால் கொட்டத் துவங்கியது. நந்தினி  கூறியது போல திலீபனும் சற்றும் தயங்காமல் இலையால் அவசரவசரமாக ஒரு தொன்னை செய்து அதில் அந்தப் பாலைப் பிடித்துக் கொண்டான். அவன் பாலை தொன்னையில் பிடித்துக் கொண்டதும் பால் சுரப்பது நின்றது.  திலீபன் நந்தினியை வணங்கித் துதித்தார்.  அதன் பின் திலீபனும் நந்தினியும் வசிஷ்ட முனிவரின் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்கள்.  தனது மனைவியை அழைத்துக் கொண்டு முனிவரை வணங்கிய திலீபன்  நடந்தது அனைத்தையும் அவரிடம் கூறி விட்டு அந்தப் பாலை அருந்த அவரிடம் அனுமதி கேட்டார்.  அவரும் திலீபனது குரு பக்தியை மெச்சி அவர்களை ஆசிர்வதித்தப் பின் அவர்கள் அரண்மனைக்கும் திரும்பிச் செல்ல அனுமதி தந்தார்.  அரண்மனைக்கு திரும்பிய திலீபனும் அவரது மனைவி  சுதக்கிணையும் மகிழ்ச்சியோடு அந்தப் பாலைக் குடித்தார்கள்.

………தொடர்கின்றது-2