-1-

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈச்சங்கரணை எனும் சிறிய கிராமத்தில் திருவடிசூலம் எனும் மலையின் அடிவாரத்தில், சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த பகுதியில், அமைதியான சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது அதிசயமான ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயம். சுற்றிலும் காணப்படுவது மலை முகட்டும், மரங்களுமே. ஈச்சங்கரணை கிராமம் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பைரவருக்கு எனத் தனி ஆலயத்தைக் காண்பது அரிதானது. எனக்குத் தெரிந்தவரை காசியில் உள்ள கால பைரவர் ஆலயத்தை தவிர மாயவரத்தின் அருகில் ஷேத்ரபாலா எனும் இடத்தில் மட்டுமே கால பைரவருக்கு எனத் தனியான ஆலயம் உள்ளது. அதற்கு அடுத்து ஈச்சங்கரணையில்தான் பைரவருக்கு என்றே தனியான அமைக்கப்பட்டு உள்ள ஆலயத்தைக் காண நேரிட்டது. பல ஆலயங்களிலும் பைரவர் சன்னதி இருக்கும். ஆனால் பைரவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவரையே பிரதான தெய்வமாக வைத்து பூஜிக்கப்படும் ஆலயம் இவை இரண்டு மட்டுமே என்றே நினைக்கிறேன்.

ஆலயத்தை சுற்றி  உள்ள இடம்  மற்றும்  ஆலயம்  செல்லும் வழி 

பைரவர் யார்? அவர் சிவபெருமானால் தன்னுள் இருந்து, தனது அவதாரமாகவே படைக்கப்பட்டவர். ஆகவேதான் அவரை சிவபெருமானின் அம்சம் என்பார்கள். எந்த சிவன் ஆலயத்திலும் சிவபெருமான் சன்னதியின் வடகிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதை பார்க்கலாம். சிவாலயம் சென்று விட்டு பைரவரை வணங்காமல் திரும்பி வந்தால் அந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்காது என்பது ஐதீகம் ஆகும். இவரையே தன்னுடைய மனைவியான பார்வதியின் ஆலயங்களிலும், பார்வதியின் அவதார ரூப ஆலயங்களிலும் தேவிக்கு காவல் தெய்வமாக இருக்குமாறு அமைத்தார்  என்பார்கள்.

நின்ற நிலையில் காணப்படும் பைரவரின் கோலம் பரதேசி கோலமாகும். அவரை பன்னிரு கைகளுடனுடனும், நாகத்தை பூணூலாக அணிந்தவராகவும், தலையில் சந்திரன் இருக்க, சூலாயுதம், பாசக்கயிறு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி நிற்கும் ரூபத்திலும் சிலைகளை வடிவமைத்து இருப்பார்கள். பைரவரே சனிபகவானுக்கு குரு. அவர் கட்டுப்பாட்டில் உள்ளவை பன்னிரண்டு  ராசிகள், எட்டு திசைகள், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள் போன்ற அனைத்தமே. அதனால்தான் அவரை காலத்தை கட்டுப்படுத்துபவர் என்பார்கள்.

பன்னிரண்டு ராசிகள் தோற்றத்தில் காலபைரவர் 

ஈச்சங்கரணை கால பைரவருடைய ஆலயத்தின் முக்கியமான மகத்துவம் மற்றும் விசேஷம் என்னவென்றால் இங்கு மட்டுமே இறந்தவர்களுக்கு போடப்படும் ‘வாய்க்கரிசிக்கு’ முக்கியத்துவம் தரப்பட்டு வாய்க்கரிசி எனும் பெயரில் அரிசி தானம் பெறுவதுதான். எந்த ஒருவருக்கும் தான் எப்போது மரணம் அடைவோம் என்பது தெரியாது. அந்த நேரத்தில் பூர்வ ஜென்ம ஊழ்வினைகளினால் அவதிப்பட்டு பலர் எண்ணற்ற மனத் துயரை அடைவார்கள். மாறி வரும் கால சூழ்நிலையில் தனக்கு யார் வாய்க்கரிசி போட உள்ளார்கள் என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. ஆகவே தனக்குத் தானே இந்த ஆலயத்தில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டால் அவர்களது பூர்வஜென்ம ஊழ்வினைகளை பைரவர் களைந்து விடுகிறார். ஏன் எனில் வாய்க்கரிசி போடப்படுவது பைரவர் ஆலயத்தில்.

வாய்க்கரிசி போடுதல் என்பது தனது வாயில் தானே அரிசியை போட்டுக் கொள்வது அல்ல. அப்படி என்றால் அதை எங்கு, எப்படி போடுவது என்பதை கடைசியில் விளக்கி உள்ளேன். வாய்க்கரிசிக்கு போடப்படும் அரிசியை நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும். கடையில் இருந்து வாங்கிக் கொண்டு செல்லக் கூடாது.

நாம் இந்த பிரபஞ்சத்தில் பிறப்பு எடுத்து வாழ்கையில் பல்வேறு பாப காரியங்களை அறிந்தும், அறியாமலும் செய்து வருகிறோம். அதன் காரணம் பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சிதான். பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சி மரண காலத்தில் பல்வேறு துன்பங்களைத் தருகிறது. அது மோட்ஷத்துக்கு செல்ல உள்ள ஆத்மாவை தடுத்து நிறுத்தும். ஆகவே அந்த அந்த பூர்வஜென்ம ஊழ் வினைகளின் தொடர்ச்சியினால் ஏற்படும் துன்பங்களைக் களைய இந்த ஆலயத்துக்கு வந்து தனக்குத் தானே வாய்க்கரிசி போட்டுக் கொண்டால் அவர்களது பூர்வஜென்ம ஊழ்வினைகளை அந்த நிமிடமே பைரவர் களைந்து விடுகிறார்.

இப்படியாக போடப்படும் வாய்க்கரிசியில் உள்ள தீமைகளும் இந்த பைரவர் சன்னிதானத்தில் களையப்பட்டு விடுவதினால் அந்த அரிசியைக் கொண்டு சமைத்த உணவு அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் அந்த உணவை உண்டு பசி தீர்த்துக்கொள்ளும் மக்களது ஆசிர்வாதமும்  வாய்க்கரிசி போட்டவர்களுக்குக் கிடைக்குமாம்.

ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தின் இரண்டாவது பிரதான சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தின் பைரவரை இன்னென்ன கிழமைகளில்தான் வணங்கித் துதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவரை இன்ன மாதிரியான பூஜாவிதிப்படித்தான் வணங்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ கிடையாது.

இங்குள்ள ருத்ர பால பைரவரை தரிசிக்க பன்னிரண்டு படிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு கிரஹத்தை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது என்கிறார்கள். அவர் கட்டுப்பாட்டில் உள்ளவை அந்த பன்னிரண்டு  ராசிகள் அடங்கி உள்ள படிக்கட்டுக்கள். ஆகவே அதன் மீது ஏறிச் செல்லும்போது அந்தந்த கிரகங்களினால் ஏற்பட்டு இருந்த தீய விளைவுகளை அந்தந்த கிரகங்களே திரும்ப கிரகித்துக் கொண்டு அங்கேயே அழித்து விடுகின்றன.  அதனால் பைரவரை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் அனைத்து ஊழ்வினைகளின் தீய பலன்களும் இந்த ஆலயத்துக்கு செல்லும்போது அழிகின்றன. மேலும் படிக்கட்டில், பைரவரை சுற்றிலும் என அனைத்து இடங்களிலும் ருத்திராக்ஷ மணிகளைக் கொண்ட மாலைகள் போடப்பட்டும், கட்டப்பட்டும் உள்ளன. சிவன் அம்சமான ருத்திராக்ஷம் அங்கு வந்து தரிசிப்பவர்களை சுற்றி உள்ள தீமைகளை அழிக்கின்றன. உடலில் உத்வேகத்தை தருகின்றன என்பது மட்டும் இல்லாமல் உக்ரஹ மூர்த்தியான பைரவரை சாந்த ரூபத்தில் வைத்து உள்ளன.
பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் 
பன்னிரண்டு படிக்கட்டுக்கள்

மூன்றாவதாக இந்த ஆலயம் எந்தவிதமான கட்டிடக் கலை நிபுணர்களின் வரைப்படத்தைக் கொண்டும்  கட்டப்படவில்லை. நடுத் தூணே இல்லாமல் அவ்வப்போது நேரடியாக பைரவரிடம் இருந்து பைரவ ஸ்வாமிக்கு ( இவர் யார் என்ற கேள்விகளுக்கு பதிலாக இவரைக் குறித்த செய்தி கீழே வருகிறது) பைரவர் மூலம் கிடைத்த நிர்மாணத் தோற்றத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.

நான்காவது அற்புதம் கூம்பு வடிவ கருவறை மேலே எழுப்பப்பட்டு உள்ள ஆடும் கும்ப கலசம் ஆகும். இது போன்ற ஆடும் கலசம் வேறு எந்த ஆலயத்திலும் காணப்பட முடியாதது. ஆடும் கலசம் என்பது எதற்காக அமைக்கப்பட்டது? இந்த பிரபஞ்சத்தில் தோன்றும் பல்வேறு இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த ஆடும் கலசம் நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் சுயன்று அந்த மாற்றங்கள் இந்த ஆலயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்குமாம்.

………..தொடரும்