அத்தியாயம் – 20

சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த  நமத்ஹரகா  அவரிடம் கேட்டார் ‘ ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு  என்ன நடந்தது?’

சித்த முனிவர் கூறலானார் ”நமத்ஹரகா முன்னர் ஷிடோல் எனும் இடத்தில் சோவ்னக் கோத்திரத்தை சேர்ந்த கங்காஹர் எனும் பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும்  பல குழந்தைகள் பிறந்தன. அனால் அவை அனைத்துமே அல்பாயுசில் எதோ காரணத்தினால் இறந்து போய் கொண்டே இருந்தன. அவர்கள் எத்தனை பூஜைகள் செய்தும்  அவர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. அதனால் கங்காஹருடைய மனைவி ஒரு நல்ல பண்டிதரை அணுகினாள். அவளது ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பார்த்த அந்த பண்டிதர் அவள் பூர்வ ஜென்மத்தில் கருகலைப்பு செய்து கொண்டாள் என்றும், அவள் சோவ்னக் கோத்திரத்தை சேர்ந்த ஒருவரிடம் வாங்கி இருந்த கடனை அவர் பலமுறைக் கேட்டும் கொடுக்காததினால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவருக்கு யாருமே சிரார்த்தம் செய்யாததினால் அவர் இன்னும் பிசாசாகவே அலைந்து கொண்டு இருப்பதாகவும் அந்த பாபங்களே அவர்களை இந்த ஜென்மத்தில் தொடர்வதாகவும் கூறினார். அதற்கு ஏதேனும் பரிகாரம் உள்ளதா அவர்கள் கேட்டபோது அந்த பண்டிதர் கூறினார் ‘ நீங்கள்   பிலாவாடி கிராமத்துக்குச் சென்று அங்கு ஐந்து நதிகள் சங்கமிக்கும் கிருஷ்ணா நதிக்கு  சென்று குளித்தப் பின் ஒரு மண்டல காலம் அதன் அருகில் உள்ள கருநெல்லி மரத்தடியில் உள்ள ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமியின் பாதுகைகளுக்கு பூஜை  செய்து அவர் அமர்ந்திருந்த கருநெல்லி மரத்தையும் ஆராதித்து வந்தால் உன்னுடைய கஷ்டங்கள் தீரும். அதற்கு முன் தற்கொலை செய்து கொண்டு விட்ட அந்த பிராமணனுக்கு  அந்த நதிக்கரையிலேயே திதி கொடுத்து விட்டு நூறு ரூபாயை அங்கு ஏதாவது ஒரு பண்டிதருக்கு தானம் செய்ய வேண்டும்’.

அதைக் கேட்ட கங்காஹர் தாமோ ஏழைகள், எப்படி நூறு ரூபாயைக் கொடுப்பது என்று குழம்பினார். ஆனாலும் பண்டிதர் கூறியது போல அவர்கள் கிளம்பி பிலாவாடிக்கு சென்று ஸ்வாமிகளின் பாதுகைகளை வணங்கி துதித்தப் பின் கருநெல்லி மரத்தையும் பிரதர்ஷணம் செய்து விட்டு அங்கேயே இரவு தங்கினார்கள்.  இரவில் அந்த தம்பதியினரின் மனைவியின் கனவில் இறந்து போன பிராமணனின் ஆவி வந்து அவளை பயமுறுத்தியது. பயந்து போய் எழுந்தவள் கருநெல்லி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகளை வேண்டினாள். அவரும் பிசாசாக அலைந்து கொண்டு இருந்த பிராமணனை அழைத்து இவள் என்னுடைய பக்தை. இனி இவளை பயமுறுத்தினால் உன்னை நரகத்துக்கு அனுப்புவேன் என  கோபத்துடன் கூறவும் பயந்து போன அந்த பிராமணனின் ஆவியும் கிருஷ்ணா நதியில் மூழ்கி அன்றுடன் மறைந்து போயிற்று.

காலம் சென்றது. அந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு உபநயனம் செய்யும் வேளை வந்தது. அதற்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபடத்  துவங்கியதும் மூத்த சிறுவன் அகால மரணம் அடைந்து விட்டான். பெற்றோர்களினால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை. அவன்  மரணம் அவர்களைப் பாதித்தது.  இதென்ன சோகம் தொடர்கிறது என அழுது புலம்பியவர்கள் நினைத்தார்கள், நான் பிலாவாடிக்கு சென்று இருந்தபோது நமக்கு ஸ்ரீ நருசிம்ம  ஸரஸ்வதி ஸ்வாமிகள் இனி உங்களுக்கு எந்த துயரமும் வராது என்றாரே. நமக்கு மீண்டும் புத்திர சோகம் அல்லவா வந்து விட்டது என்று  மீண்டும் பிலாவாடிக்கே இறந்து போன சிறுவனை எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளிடம் உயிர் பிச்சை  கேட்கச் சென்றார்கள். அந்த கிராமத்தினர் அவர்களுக்கு எத்தனை  கூறியும் அவர்களை எவராலும் தேற்ற முடியவில்லை. இறந்து போனக் குழந்தையின் தாயார் கதறினாள் ‘எங்களுக்கு அந்த மகான் கொடுத்த வாக்கு பொய்யாகி விடுமா? என்று அழுதபடி தன்னுடைய மார்போடு இறந்து போன சிறுவனை அணைத்து  வைத்துக் கொண்டு அவன் உயிர்  பிழைக்கும்வரை அங்கிருந்து நகரமாட்டேன் என திட்டவட்டமாகக் கூறினாள்.  கிராமங்களில் இருந்தப் பழக்க வழக்கங்களின்படி கிராமத்தில்  இறந்தவர் தகனம் ஆகும்வரை யாருமே உணவு அருந்தக் கூடாது. அதுவே சாஸ்திரம். அதனால்  என்ன செய்வது எனத் தெரியாமல் அனைவரும் குழம்பி நின்றனர். அப்பொழுது அந்த வழியாக  ஒரு சன்யாசி சென்று கொண்டு இருந்தார். அவருக்கு விஷயம் தெரிந்ததும் அந்த அம்மணிக்கு அறிவுரைக் கொடுக்க முயன்றார் (இத்துடன் அத்தியாயம் -20 முடிவடைந்தது).

………..தொடரும்