சாந்திப்பிரியா
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/04/murugan.jpg)
தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாண்டிக் குடி என்ற மலைப் பகுதி. அந்த மலையை ஜோதி மலை என்கிறார்கள். தேனியின் தாமரைக் குளம் அல்லது ஊட்டி-கொடைக்கானல் எனப்படும் ஊரில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முருகப் பெருமானின் தாண்டிக் குடி ஆலயம் . இல்லை என்றால் திண்டுக்கல் நகரை அடைந்து அங்கிருந்து திண்டுக்கல் பெரியகுளம் சாலையில் அமைந்து உள்ள வத்தலக் குண்டு என்ற ஊரில் இருந்தும் செல்ல முடியும். அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம். மலை மீது உள்ள இந்த ஆலயத்துக்குச் செல்ல நல்ல சாலை வசதி இல்லை என்பதினால் ஜீப் அல்லது பிற வாகனங்களில் இருந்தே அங்கு செல்ல முடியும்.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/04/idumban.jpg)
முருகப் பெருமான் சூரபத்மனுடன் சண்டைப் போட்டு அவனை வதம் செய்தப் பின் அவனது படையினரையும் அழித்தார். ஆனால் அதில் இடும்பன் மட்டும் தப்பி உயிர் பிழைத்து அகஸ்தியரின் சிஷ்யனாகி விட்டான். ஒருமுறை கைலாயம் சென்ற அகத்திய முனிவருக்கு இரண்டு மலைகள் பரிசாகக் கிடைத்தன. அதை எப்படி எடுத்துப் போவது என அவர் யோசனை செய்து கொண்டு இருந்தார். சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற அந்த இரண்டு மலைகளையும் தானே தூக்கிக் கொண்டு வருவதாக அவருடைய சிஷ்யனான இடும்பன் அகஸ்திய முனிவரிடம் கூறினான். அதைக் கேட்டு மகிழ்ந்த அகஸ்தியரும் அந்த இரண்டு மலைகளையும் அவன் தோளில் ஒரு காவடியைப் போல தூக்கிக் கொண்டு வருமாறு கூறினார். அந்த மலைகளை தோளில் சுமந்து கொள்ள வசதியாக அவற்றை அஷ்ட நாகங்களினால் அகஸ்திய முனிவரின் பிரும்ம தண்டத்தின் இரு முனைகளிலும் கட்டி அதை அவன் தோளின் மீது சுமந்து கொண்டு வருமாறு ஆணையிட்டார். அவர் கொடுத்த சக்தியினால் அவனால் எளிதாக அவற்றை தூக்கிக் கொண்டு முடிந்தது.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/04/idumban101.jpg)
அதற்கு முன்னால் இடும்பன் தான் முருகப்பெருமானைக் தரிசித்து அவருக்கும் சேவை செய்ய வேண்டும் வேண்டும் என்றும் அதற்கு அகஸ்தியர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு இருந்திருந்தான். அவரும் அதற்கு தன்னால் ஆனா உதவியை செய்வதாக வாக்களித்து விட்டு இடும்பனுக்கு காட்சி தர வேண்டும் என்று முருகனை வேண்டிக் கொண்டார். அந்த நேரத்தில் தனது பெற்றோர்கள் மீது கோபம் கொண்ட முருகப் பெருமான் பழனிக்குப் போகும் வழியில் தாண்டி மலையில் தங்கி இருந்தார். இடும்பன் மலைகளை சுமந்து கொண்டு செல்வதைக் கண்ட முருகப் பெருமான் இடும்பனுக்கு காட்சி தந்து அவனை தனக்கு சேவகனாக பழனியில் வைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தார். ஆனால் அவனை தானே சம்ஹாரம் செய்தால்தான் அவனது அசுர குணம் மறைந்து அவனும் தேவகணமாகி தனக்கு சேவகம் செய்ய முடியும் என்பதினால் வேண்டும் என்றே இடும்பன் முன்னிலையில் ஒரு மிகச் சிறுவன் உருவில் சென்று அவன் செல்லும் வழியில் படுத்துக் கிடந்தவாறு அவனை வம்புச் சண்டைக்கு இழுத்தார். அவன் மலை மீது தான் ஏறி நிற்க அவனால் அந்த பாரத்தைத் தாங்க முடியாமல் அவற்றைக் கீழே வைக்க வேண்டி இருந்தது.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/04/damdapurid.jpg)
அவன் கோபமடைந்து அந்த சிறுவன் யார் என அறியாமல் அவரை அடித்துத் துரத்தச் செல்ல முயல தற்போது உள்ள இடும்பன் மலை அருகே சென்றதும் அவனுடன் சண்டைப் போட்டு அவனை அங்கேயே வதம் செய்த பின் அவனுக்குக் காட்சி தந்தார். அந்த மலையைத் தாண்டிக் குதித்து முருகன் பழனிக்கு சென்றதினால் அந்த மலைப் பகுதியின் பெயர் அவர் தாண்டிக் குதித்துச் சென்ற இடமாக தாண்டிக் குதி என ஆகி அது பின்னர் மருவி தாண்டிக் குடி என ஆகிவிட்டது. இப்படியாக அகஸ்தியரின் மூலம் நடைபெற்ற நாடகத்தினால் அந்த இடம் முருகனின் ஆலயம் ஏற்பட காரணமாகி விட்டது.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/04/agasthiyar.jpg)
அதற்கு வெகு காலத்துக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டுகளில் ஒரு முறை தவத் திரு லஹரி ஸ்ரீ லா லா பன்றிமலை ஸ்வாமிகள் அவர்கள் கனவில் முருகனின் தோன்றி தனக்கு தாண்டிக்குடி மலைப் பகுதியில் ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டார். அவரும் அங்கு சென்று முருகன் தாண்டிக் குதித்துப் பழனிக்குச் சென்ற இடமான தாண்டி மலைப் பகுதியை அடைந்து அங்கு ஆலயம் அமைக்க சரியான இடத்தை தேடினார். ஒருநாள் அவருக்கும் அனைவருக்கும் அந்த மலை மீது ஒரு ஜோதி ஒளி தெரிந்ததாம். அங்கு சென்று பார்த்தபோது முருகனின் காலடி சுவடும், மயில் வாகனம் போன்ற சித்திரமும் அந்த மலையில் தெரிய அந்த இடத்திலேயே தாண்டிக்குடி ஆலயத்தை அமைக்க முடிவு செய்தாராம். பல பக்தர்களும் கொடுத்த நன்கொடைகளைக் கொண்டு அற்புதமான ஆலயம் அமைந்தது. பழனி மலை ஆலய அமைப்பிலேயே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இந்த ஆலயமும் உள்ளது.