ஆதியில் இருந்தே அதாவது புராண காலங்கள் முதலே சர்ப்ப வழிபாடு எனும் பெயரில் பாம்புகளை தெய்வமாகக் கருதி வணங்குவது இருந்துள்ளது. ஆதி காலத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் அதாவது கொரியா, எகிப்து, இத்தாலி, மசோபோடமியா, கிரேக்க, சீனா, ஜப்பான் மற்றும் ஆப்ரிக்க நாடுகள் போன்ற இடங்களில் எல்லாம் கூட பாம்புகளை தெய்வமாகக் கருதி வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதினால் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் சர்ப வழிபாடு வியப்பை தருவது  அல்ல. இந்து, புத்த  மற்றும் ஜைன மதத்தினரும் பாம்பு வழிபாட்டைக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். சில இடங்களிலும் பாம்புகளுக்கு முக்கியத்துவம் தரும் ஆலயங்கள் உள்ளன.

இயற்கையிலேயே புற்றுக்களில், மண்ணில், தூசியில், மற்றும் பல்வேறு குப்பைக் கூளங்களில் பாம்புகள் உர்ந்து வந்தாலும், அங்கெல்லாம் வசித்தாலும் அவற்றின் அழுக்குகள் எதுவுமே அதன் உடலில் ஒட்டிக் கொள்ளுவது இல்லை என்பது வியப்பான செய்தியாகும். ஆகவே  ஆன்மீகவாதிகள் அழுக்குகள் ஒட்டாத பாம்பின் தன்மையை ஒரு உதாரணமாக சுட்டிக் காட்டி உலகின் எந்த சூழ்நிலையையும் தன்னை ஆக்ரமிக்காமல் எவன் ஒருவன் தனித் தன்மையோடு இருப்பானோ அவனே தன் மனதையும் எண்ணங்களையும் வென்று ஆத்மா ஞானம் பெறுவான் என்பதாக போதனை செய்வார்கள்.

காஷ்யப முனிவருடைய பன்னிரண்டு மனைவிகள் மூலமே பாம்புகள் பிறப்பு எடுத்ததாக புராணங்களில் கூறுவார்கள். மாமுனிவரான மாரிச்சி என்பவரின் மகனே காஷ்யப முனிவர். படைக்கப்பட்ட பாம்பு இனம் அனைத்துமே தெய்வப் பிறவிகள் அல்ல என்றாலும் பல சர்பங்களை தெய்வீக தன்மைக் கொண்டவையாக கருதுகிறார்கள். முக்கியமாக ராகு மற்றும் கேது போன்ற சர்பங்கள் பக்தர்களால் ஆராதிக்கப்படும் நவக்கிரகங்களில் ஒன்றாகும். புராணக் காலத்தில் இருந்தே பசுவிற்கு அடுத்தபடியாக பாம்புகளும் தெய்வீகத் தன்மைக் கொண்டவையாக கருதப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளன.

பாம்புகளில் அஷ்ட நாகங்கள் எனப்படும் எட்டு நாகங்கள் முக்கியமானவை. அவை ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன், பத்மா, ஐந்து தலை உள்ள பச்சை நிற மகாபத்மா, சந்திரனின் பிறையை தலையில் கொண்டுள்ள குளிகன், பாம்புகளின் தலைவன் வாசுகி, சங்கபாலா, தக்ஷக மற்றும் கார்கோடன் போன்றவை ஆகும். காலத்தால் மறைந்து விட்ட சரஸ்வதி நதிக் கரையின் அடியில் உள்ள பாதாள லோகத்தில் வாசுகி வசிப்பதாகவும், நேபால் நாட்டில் உள்ள தண்டக் எனும் நதியின் அடியில் பலகோடி வைர வைடூரிய அணிகலன்கள் இடையே கார்கோடன் வசிப்பதாககும் கருதப்படுகிறது. நேபாள நாட்டவர் அந்த சர்பத்தை வழிபடுகின்றார்கள். தெய்வீகத் தன்மைக் கொண்டதாக வணங்கப்படும் மற்ற  சில பாம்புகள்  பாதி மனித உடலைக் கொண்ட நீல நிற அஸ்திகா, சங்கபாலா, யமுனை நதிக்குள் வசிப்பதாக கூறப்படும் ஜுவாலமுகி, கலியன், கடக் மற்றும் வாசுகியின் சகோதரியான மனஸா போன்றவை ஆகும். நாகலோகம் முழுவதும் வைர வைடூரியங்கள் மற்றும் நவரத்தினக் கற்களின் குவியலாக இருக்கும் என்பது புராணங்களின் நம்பிக்கை செய்தியாகும். இப்படிப்பட்ட பாம்புகளுக்கு பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன என்றாலும் கேரளாவில் உள்ள ஒரு பாம்பு ஆலயமும் கன்யாகுமரியில் உள்ள நாகராஜர் ஆலயமுமே பெரும் புகழ் பெற்றவை. இவற்றில் முதன்மையானதும் புராதானமானதும் கன்யாகுமரியில் உள்ள நாகராஜர் ஆலயம் ஆகும்.

இந்த ஆலயம் குறித்த செய்திகள் மற்றும் வரலாறு சரிவரத் தெரியவில்லை என்றாலும் காலம் காலமாக வாய்மொழிக் கதையாகவே கூறப்பட்டு வரும் இரண்டு கிராமியக் கதைகளின் அடிப்படையிலே இந்த ஆலயத்தின் வரலாறு கூறப்படுகின்றது. 16 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் உள்ள கன்யாகுமரியின் பகுதிகள் அனைத்துமே முட் புதர்களும், செடிகொடிகளும் நிறைந்திருந்த, பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருந்த வனப்பிரதேசமாகவே இருந்துள்ளது. அங்கிருந்த மக்களும் ஏழ்மை நிலையில் இருந்தவர்கள். அப்போது சமுதாயத்தில் மேல் ஜாதி மற்றும் கீழ் ஜாதி எனும் பிளவு வேறு அதிகம் உண்டு. ஆகவே ஏழை மக்கள் தமது பிழைப்பிற்காக வனங்களில் சென்று மரங்களை வெட்டி விறகு கொண்டு வந்து அவற்றை விற்றும், செல்வந்தர்களின் வயல்களில்  கூலி வேலை செய்தும் காலத்தை ஓட்டி வந்தார்கள். அப்படி வனங்களில் சென்றும், வயல்வெளியில் வேலை செய்யும்போதும் தமக்கு அங்குள்ள பாம்புகள் மூலம் எந்தவிதமான தீங்கும் ஏற்படக்கூடாது என்பதினால் பாம்புகளை தெய்வமாகக் கருதி அதனிடம்  பாதுகாக்குமாறு வேண்டிக் கொள்வார்கள். அங்காங்கே கற்களில் பாம்புகளின் உருவத்தை வரைந்து செடிகொடிகளை விலக்கி விட்டு சுத்தம் செய்த இடத்தில் அந்த கற்களை வைத்து அதனிடம் பிரார்த்தனை செய்து கொண்ட பின்னர் வேலைக்கு செல்வார்களாம்.  இப்படியாகப் பிறந்தனவே சிறிய அளவிலான பாம்பு வழிபாட்டுத் தலங்கள். இந்த பின்னணியில்  நாகராஜர் ஆலயம் எப்படி பிறந்தது? அதன் கதை என்ன?

இந்த ஆலயம் குறித்துக் கூறப்படும்   முதல் கதையின்படி ஒரு நாள் ஒரு பெண் புல் புதர்களை வெட்டிக் கொண்டு இருந்தபோது தன்னுடைய அரிவாளில் ரத்தம் ஒட்டிக் கொண்டு உள்ளதை கண்டு பயந்து போனாள். உடனடியாக அங்கிருந்த புல் புதர்களை விலக்கி விட்டு உள்ளே எட்டிப் பார்த்தபோது புதருக்குள் ஒரு ஐந்து தலை நாகம் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்தவள் ஊருக்குள் ஓடிச் சென்று ஊர் ஜனங்களை அழைத்து வந்து அதைக் காட்ட அனைவரும் திடுக்கிட்டு நின்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவருக்கு சாமி ஏறி அவர் மூலம் பாம்புகளின் தலைவரான வாசுகி அருள் வாக்கு கொடுத்தார். அந்த அருள் வாக்கில் இறந்து போன அந்த பாம்பு தன்னுடைய அம்சமே என  வாசுகி கூறி அந்த சாபம் தீர தனக்கு அங்கேயே  ஒரு வழிபாட்டு  தலத்தை அமைக்குமாறு கட்டளை இட, ஊர் பெரியவர்களை கூட்டி ஆலோசனை செய்தபின் சாமியாடி மூலம் வாசுகி கூறியபடியே அந்த பாம்புக்கு அதே இடத்தில் குடிசையிலான ஒரு வழிபாட்டுத் தலத்தை நிறுவினார்கள். அருள் வாக்கில் கூறப்பட்டது போலவே அந்த குடிசையின் மேற் கூறையை பனை ஓலை போட்டு மூடி பாம்புத் தலைவரான வாசுகியை வழிபடலானார்கள். பிற்காலத்தில் அதுவே அந்த ஊர் மன்னனால் நாகராஜர் ஆலயம் எனும் பெயரில் பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.

இன்னொரு கதை என்ன எனில் ஒரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த வயல்வெளியில் அறுவடை செய்து கொண்டு இருந்த ஒரு வேலைக்காரன் தன் அரிவாளை தீட்ட ஒரு கல்லின் மீது அறிவாளை தேய்க்க அந்த கல்லில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடியவன் அனைவரையும் அழைத்து வந்து அதை காட்டினான். அப்போது எதேற்சையாக அந்த வழியே வந்து கொண்டு இருந்த ஜோதிடரான நம்பூத்ரி பிராமணர் ஒருவரை ஊர் ஜனங்கள் அழைத்து வந்து அதைக் காட்ட, அங்கேயே பிரசன்னம் போட்டு ஆராய்ந்தவர் அவர் அந்தக் கல் பாம்புகளின் தலைவரான வாசுகியின் சக்தியை உள்ளடக்கியது எனவும், வாசுகி தனக்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபட வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார். அந்த செய்தி அந்த நாட்டை ஆண்டு வந்திருந்த மன்னன் காதில் சென்று விழ அனைத்து உண்மைகளையும் நம்பூத்ரி பிராமணர் மூலம் கண்டறிந்து கொண்ட மன்னன் நாகங்களின் தலைவரான வாசுகியின் தெய்வீக சக்திகளை உள்ளடக்கி கொண்டிருந்த அந்த ரத்தம் பீரிட்ட கல் கிடைத்த இடத்திலேயே ஒரு ஆலயத்தை நாகங்களின் தலைவரான வாசுகிக்கு எழுப்பினார். அதுவே பிற்காலத்தில் நாகராஜர் ஆலயம் என அழைக்கப்பட்டதாம்.

பொதுவாகவே அம்மன் ஆலயங்களில் மட்டுமே பாம்புகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். மற்ற எந்த ஆலயங்களிலும் பாம்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு சன்னதிகள் அமைக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆலயத்திலோ பாம்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது. அதற்குக் காரணம் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வாசுகி கிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக தானாகவே விளை நிலத்தில் ஒரு சிலையாக அவதரித்ததுதான் காரணம் என்கின்றார்கள்.  அதை உறுதிப் படுத்தும் வகையில் கிருஷ்ணர் கூறியதாக பகவத் கீதையில் காணப்படும் வாசகம் இது ‘நாகங்களில் நானே வாசுகி ஆவேன்’ (சுலோகம் 10.28). பரமசிவனின் கழுத்தில் உள்ளதும்  வாசுகியே. இத்தனைப் பெருமைப் பெற்ற  அந்த நாகத்தின் சிலையை வழிபடுவதற்காக  அங்கு ஒரு ஆலயம் எழுப்பி அங்கு அந்த சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். ஆனால் ஆலயத்தின் மேல்கூறை மட்டும் ஏன்  பனை ஓலையினால் மூடப்பட வேண்டும் என்பதின் காரணம் சரிவரத்  தெரியவில்லை. அங்குள்ள மேல் கூறையை ஒவ்வொரு வருடமும் எடுத்து விட்டு புதிய கூறையைப் போடுவார்களாம். அந்த நிகழ்வின்போது எங்கிருந்தோ ஒரு பாம்பு சன்னதிக்கு வந்து சற்று நேரம் தங்கி விட்டு திரும்பச் சென்று விடுமாம். அது எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்கு சென்று மறைந்து விடுகின்றது என்பதோ யாருக்கும் தெரியவில்லை. இந்த அதிசயம் இன்றுவரை ஒவ்வொரு வருடமும் தொடர்கிறதாம்.

இந்த ஆலயத்தில் பிரதான தெய்வமாக நாகராஜர் ஐந்து தலையுடன் காணப்படுகின்றார். அந்த சன்னதியின் நுழை வாயிலில் காவல் தெய்வங்கள் எனப்படும் துவாரபாலகர்களாக தர்நேந்திரன் எனும் ஆண் பாம்பும், பத்மாவதி எனும் பெண் பாம்பும் காணப்படுகின்றார்கள். ஸ்வயம்புவாக அவதரித்துள்ள நாகராஜர் அந்த சன்னதியில் மண்தரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். ஆலயத்துக்கு செல்பவர்களுக்கு அங்குள்ள நாகராராஜரை சுற்றி உள்ள தரையில் இருந்து ஈர மண்ணை கையால் தோண்டி எடுத்து பிரசாதமாகத் தருகிறார்கள் என்றாலும் இன்றுவரை எத்தனை மண்ணை தோண்டி எடுத்தாலும் பூமியில் மண் குறைந்து பள்ளம் ஏற்படவில்லையாம். எப்போதுமே அதே அளவிலான மண் தரையே காணப்படுகின்றதாம். இதுவும் மிகப் பெரிய அதிசயமாக உள்ளது. இங்குள்ள ஆலயத்துக்கு பல்வேறு தன்மைகளைக் கொண்ட பாம்புகள் வருகை தருகின்றனவாம். ஆலயத்தில் தல விருட்சம் மருத்துவ குணம் கொண்ட ஓடவல்லி மரமாம். அந்த மரத்துக்கு வெண் குஷ்ட நோய் தீர்க்கும் குணம் உள்ளதாம்.

இந்த ஆலயத்தின் தூண்களில் முருகன், கிருஷ்ணர், பத்மநாபஸ்வாமி மற்றும் பார்வதி தேவியின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. மூல தெய்வமாக நாகராஜஸ்வாமி அமைந்திருக்க அவர் மனைவியான நாகம்மனும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றார். இரு தனி சன்னதிகளில் அனந்த கிருஷ்ணர் எனும் பெயரில் கிருஷ்ணரும், காசி விஸ்வநாதர் எனும் பெயரில் சிவபெருமானும் காணப்படுகின்றார்கள். மூலவருக்கு பூஜைகள் செய்தபின் உடனடியாக அனந்த கிருஷ்ணர் மற்றும் காசி விஸ்வநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன. அனுதினமும் தவறாமல் கிருஷ்ணருக்கு அர்த்தகால பூஜை செய்யப்படுகின்றது என்பதின் காரணம் இந்த ஆலயத்தில் கிருஷ்ணரே வாசுகியாக அமர்ந்து உள்ளார் என்ற நம்பிக்கையே. இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஆலயத்தில் உள்ள கொடி மரம் கிருஷ்ணருக்கு அர்பணிக்கப்பட்டு உள்ளது என்பது மட்டும் அல்ல அந்த கொடி மரத்தில் கருடன் இருக்க வேண்டிய இடத்தில் ஆமை உள்ளது என்பதும் இன்னொரு அதிசயம் ஆகும். புராணங்களின் கூற்றின்படி கருடனும் பாம்புகளும் பகையாளிகள் என்பதினால் கருடனுக்கு பதிலாக ஆமை வைக்கப்பட்டு உள்ளது என்று சிலர் கூறினாலும், அதற்கான இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. கடலில் இருந்து அமிர்தத்தை எடுக்க விஷ்ணுவின் அம்சமாக அங்கு ஒரு ஆமை கடல் மீது அமர்ந்து கொள்ள அதன் மீது கடையும் மத்தை வைத்து வாசுகி பாம்பை மதத்துடன் கட்டும் கயிற்றைப் போல உபயோகித்து  கடலைக் கடைந்தார்கள். அதனால் வாசுகியும் ஆமையும்  ஒன்றிணைந்து செயல்பட்ட தெய்வீகத்தை வெளிப்படுத்திக் காட்டவே அந்த ஆலயத்தில் கொடி மரத்தில் கருடன் இருக்க வேண்டிய இடத்தில் ஆமை வைக்கப்பட்டது என்பதாகக் கூறுவார்கள்.

15 ஆம் நூற்றாண்டில் இந்த இடத்தை ஆண்டு வந்த ஸ்ரீ வீர உதய மார்த்தாண்ட வர்மா எனும் மன்னன் தொழு நோயினால் அவதிப்பட்டார். ஆகவே அந்த வியாதி குணமடைய வேண்டும் என நாகராஜரை வேண்டிக் கொண்டு இந்த ஆலயத்துக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை வந்து வணங்கி விட்டுச் சென்றதும், மாயம் போல அவருடைய வியாதி விலகி விட்ட மகிமையைக் கண்டார்கள். அது முதல் இந்த ஆலயத்துக்கு ஞாயிற்றுக் கிழமையில் வந்து வேண்டுவது வழக்கம் ஆகியது. இந்த ஆலயத்து பூசாரியாக ஒரு நம்பூத்திரி பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவரே பரம்பரைப் பரம்பரையாக இருந்து வருகிறார்.

பல்வேறு பாபங்களினால் தமக்கு ஏற்பட்டு உள்ள தோஷங்களும், தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளும் விலக வேண்டும் என வேண்டிக் கொண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்குள்ள நாகாராஜரை வேண்டிக்கொள்ள பல பக்தர்கள் வருகை தருகிறார்கள். அப்போது அவர்கள் நாகராஜருக்கு (பாம்பிற்கு) பாலூட்டி அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

சிலர் அந்த ஆலயத்தில் உள்ள தூண்களில் ஜைன மத மகான்கள், மஹா வீரர் போன்றவர்களின் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளதினால் அது ஜைன மதத்தினரால் கட்டப்பட்டு உள்ள ஜைன ஆலயமான முன்னர் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் ஆலய நுழை வாயிலும் புத்தமத கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. ஆகவே அவற்றை சுட்டிக் காட்டி அது நிச்சயமாக பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும்  கூறுகிறார்கள்.

எது எப்படியோ புராண காலத்தில் இருந்து பாம்புகள் வழிபடப்பட்டு வந்துள்ளன என்பது இந்த ஆலயம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த ஆலயத்திற்குள் பலவிதமான பாம்புகள் அவ்வபோது வந்து போகின்றன. இதுவரை அந்த ஆலயத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவோ இல்லை பாம்பு கடித்ததாகவோ ஒரு செய்தி கூட இல்லை என்பது இன்னும் வியப்பான செய்தியே.

தெய்வீகத்தில் பாம்புகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்பட்டு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கடவுட்களும் அணிந்துள்ள அணிகலன்கள் மற்றும் அவர்கள் மீது காணப்படும் பிற  பொருட்கள் மூலம் அறிய முடியும். பரமசிவனின் கழுத்தில் வாசுகி எனும் பாம்பு.  கிருஷ்ண பகவானுக்கு குடையாகப் பாம்பு, விஷ்ணு பகவானுக்கு படுக்கையாகப் பாம்பு என இருக்க பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் உள்ள அம்மன்களுக்கு வெயில் தாக்கத்தில் இருந்தும் மழை நீரில் இருந்தும் பாதுகாக்கும்  விதத்தில் பாம்பு தலை விரித்துக் கொண்டு குடையாக நிற்கின்றன. பாம்பு உருவம் கொண்ட ராகுவும், கேதுவும் முக்கியமான நவகிரஹ தெய்வங்கள். அவர்களை வேண்டுவதின் மூலம் கிரஹ பாதிப்புக்களை விலக்கிக்  கொள்கின்றார்கள். விவசாயிகள் விவசாயம் செய்யும்போதும் அறுவடை காலத்தின் போதும் தாம் பாம்புகளினால் தீண்டபடக் கூடாது என்பதற்காக ஆண்டு தோறும் நாக பஞ்சமி விழா எடுத்து நாகங்களை பூஜிக்கின்றனர். சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அது வழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பல விதங்களிலும் பெருமைப் படுத்தப்பட்டு  பூஜிக்கத் தகுந்தவையாகவே உள்ளன.

புத்திர பாக்கியம் கிடைக்க ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டுமாம். பலப் பிராப்தி பெற தக்ஷ்யன், குணப் பிராப்தி பெற பத்மா, சூடினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற நாக ஷங்கபலா எனும் ஷன்ககர்னாவையும் வணங்கிப் பூஜிக்க வேண்டுமாம். பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப் பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டுமாம். இந்த ஆலயத்தின் விலாசம் கீழே தரப்பட்டு உள்ளது.

 -ஆலய விலாசம்-
அருள்மிகு நாகராஜா ஆலயம்
நாகர்கோவில்
கன்யாகுமரி மாவட்டம்– 629 702.
தொலைபேசி எண் : 04652 – 241270, 232420
ஈ மெயில் முகவரி : suchindrum@tnhrce.org