சாந்திப்பிரியா
திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது எனக் கூறப்படும் ஸ்ரீ நாச்சியார் ஆலயம் திருச்சி நகரின் அருகில் உள்ள உறையூரில் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தாயார் கமலவல்லி நாச்சியார் எனும் லஷ்மி தேவியும், நின்ற கோலத்தில் அழகிய மணவாளன் எனும் மகாவிஷ்ணுவும் உள்ளார்கள். இந்த தலம் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்திலும் இடம் பெற்று உள்ளது. இந்த ஆலயத் தலப் பெருமை என்ன என்றால் இங்கு ஒவ்வொரு வருடமும்  ஸ்ரீரங்கத்தில் இருந்து எம்பெருமான் வந்து லஷ்மி தேவியை மணக்கின்றாராம். அந்த திருமணத்தில் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் வந்து தரிசனம் செய்ததாக ஐதீகமாக கூறப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த வரலாற்றுக் கதை சுவையானது.
ஒருமுறை வனங்களில் வசித்து வந்த ரிஷி முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை  தோன்றியது. அது என்ன என்றால்  ரிஷி முனிவர்களை அதிகம் மரியாதை செலுத்தி மதிப்பவர் யார்? சிவபெருமானா, பிரும்மாவா இல்லை விஷ்ணுவா? சர்ச்சை பெரியதாகத் தொடர அவர்கள் அனைவரும் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கான விடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பிருகு முனிவரும் அதற்கான விடையை தான் மூன்று லோகங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வந்து விரைவிலேயே கூறுவதாகக் கூறியப் பின்னர் அங்கிருந்து கிளம்பி முதலில் கைலாயத்துக்குச் சென்றார். அங்கு அவரை காவலார்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். சிவபெருமான் தவத்தில் அமர்ந்து உள்ளார் என்றும் அவரை சந்திக்க முடியாது என்றும் கூறி விட்டார்கள். ஆகவே மனம் வருந்திய பிருகு முனிவர் அடுத்து பிரும்ம லோகத்துக்குச் சென்றார். அங்கும் அதே கதைதான். ஆகவே முடிவாக வைகுண்டத்துக்குச் சென்றார். அவர் வரவைத்தான் விஷ்ணுவும் எதிர்பார்த்துக் காத்து இருந்தார். அது ஏன்? அதற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.

பூலோகத்தில் அப்போது உறையூரை தர்ம வர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த  சோழன்  என்பவர் ஆண்டு வந்தார். நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்த அந்த மன்னன் யாகங்களும், பூஜைகளும் செய்து வந்த ரிஷி முனிவர்களை  அரக்கர்களும், அசுரர்களும் துன்புறுத்தி  இடையூறு செய்யாமல் இருக்கும் வகையில் பல நேரங்களில் தானே அங்கெல்லாம் சென்று காவலுக்கு நின்று அவர்களைக் காத்து வந்திருந்தார். அத்தனை நெறிமுறைக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர்.  ஆனால் அவருக்கு  ஒரு மனக் குறை இருந்தது. அவருக்கு சந்ததி எனக் கூறிக் கொள்ள யாருமே இல்லை. ஆகவே அவர் மகாவிஷ்ணுவைக் வேண்டி யாகம் செய்து பூஜித்த போது விஷ்ணுவானவர் அவர் முன் தோன்றி தானே தக்க சமயத்தில் தன் மனைவியான மகாலஷ்மியை அவருடைய மகளாகப் பிறக்க வைப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்று இருந்தார்.

அது  போலவே அவருடைய மனைவியான மகாலஷ்மிக்கும் அவள் விஷ்ணுவை விட்டு சில காலம் பிரிந்து இருக்க நேரிடும் என்றும், அவள் பூலோகத்தில் பிறந்து விஷ்ணுவின் பிரிவால் மனம்  தவித்தப் பின் மீண்டும் அவரை அடைவாள் என்று ஒரு சாபத்தை சரஸ்வதி தேவியினால்  பெற்று இருந்தாள். ஆனால் மகாலஷ்மியோ எந்த நிலையிலும் விஷ்ணுவைப் பிரிய மனம் இல்லாதவளாக இருந்தாள். ஆகவே அவளை பூமிக்குச் சென்று பிறப்பு எடுத்து விரைவாக சாபத்தை  நீக்கிக் கொள்ள  எப்படி சம்மதிக்க வைப்பது? அவளோ அதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கின்றாளே என எண்ணிக் கொண்டு இருந்தவர் அதற்கான தக்க தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார் . ஆகவே பிருகு முனிவர் வருவதை தூரத்தில் இருந்தே புரிந்து கொண்டவர், வேண்டும் என்றே வைகுண்டத்தின் வாயிலுக்கு தன் மனைவியுடன் அவசரம் அவசரமாகச் சென்றார். லஷ்மி தேவிக்கு  அவர் ஏன் அத்தனை அவசரமாக வாயிலுக்குச் செல்கின்றார் என்பது புரியவில்லை.

வாயிலுக்குச் சென்றவர் அப்போதுதான் அங்கு வந்த பிருகு முனிவரை ஓடோடிச் சென்று அழைத்தார். அவர் கால்களில் வேண்டும் என்றே விழுந்து வணங்கினார். அதை பிருகு முனிவரும்  எதிர்பார்க்கவில்லை. லஷ்மி தேவியும் எதிர்பார்க்கவில்லை. தன் கணவர் ஒரு முனிவரின் காலில் விழுந்து வணங்குவதா என்று கோபம் அடைந்து தன்னை மறாந்து ‘ ஐயனே, முனிவர் என்றாலும் கூட பூஉலகில் உள்ளவரின் காலில் நீங்கள் விழுந்து வணங்கலாமா?’ எனக் கோபத்துடன் கேட்க தன் நிலையை மறந்த பிருகுவும் ‘என்னை அவமானப் படுத்திவிட்டாய் தேவி, நீயும் உடனடியாக பூ உலகில் சென்று என்னைப் போல மனித உருவில் பிறப்பாயாக’ என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்துச் உடனேயே கிளம்பிச் சென்று விட்டார். விஷ்ணுவின் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. கதி கலங்கி நின்ற லஷ்மியிடம் உடனே விஷ்ணுவும் ‘நீ உடனடியாக உறையூரை ஆண்டு வரும் தர்மவர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த சோழனின் மகளாகச் சென்று பிறப்பாயாக. உன்னை தக்க நேரத்தில் நான் அங்கு வந்து மணப்பேன்’ என்று கூறி விட்டு அவரும் மறைந்து விட லஷ்மி தேவியும் அடுத்த கணம் தர்மவர்மன் மனைவியின் கருவில் சென்று புகுந்து கொள்ள வேண்டியதாயிற்று.
இன்னொரு கதையின்படி லஷ்மி தேவி உறையூர் மன்னனின் அரண்மணை தடாகத்தில் ஒரு தாமரை மலர் மீது மிதக்க அவளை மன்னன் கண்டெடுத்து வளர்த்தார் என்று கூறினாலும், அவள் அவர் மனைவியின் கற்பத்தின் மூலமே தாமரை மலரைப் போலப் பிரகாசமான முகத்தைக் கொண்ட கன்னி பிறந்தாள் என்று இன்னொரு கதை கூறுகிறது. அதனால்தான் அவள் பெயரை கமலவல்லி என வைத்தார்கள்.  மன்னனுக்கு கிடைத்த/ பிறந்த லஷ்மி தேவிக்கு கமலவல்லி எனப் பெயரிட்டு மன்னன் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அவள் கேட்டது அனைத்தையும் அவளுக்குக் கொடுத்தார் . காலம் ஓடியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தவள் திருமணப் பருவத்தை எய்தினாள்.

அவள் தினமும் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் சென்று ஆடிப்பாடி திரிந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு சாப விமோசனம் பெற வேண்டிய வேளையும் வந்தது. ஆகவே அதை தெரிந்து கொண்ட விஷ்ணு அந்த நந்தவனத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தின் ஸ்வாமியைப் போல உருவம் கொண்டு ஒரு குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றார். அவரை  தூரத்தில் இருந்தே கண்ட கமலவல்லி அவர் அழகில் மயங்கி  அவர் மீது மையல் கொண்டாள்.  தான் பார்த்த அந்த அழகிய மணவாளரை தானே  மணக்க விரும்பினாள். அதை தன்னுடைய தந்தையிடமும் கூறினாள். ஆனால் அதைக் கேட்ட அவளுடைய தந்தை திடுக்கிட்டார். ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து ஸ்ரீரங்கநாதருடன் திருமணமா? அதை எப்படி செய்வது? குழம்பினார். மகளை பல வகைகளிலும் தேற்றிப் பார்த்தார். ஆனால் அவளோ எதற்கும் சம்மதிக்கவில்லை. மணந்தால் ஸ்ரீ ரங்கநாதரையே மணப்பேன் என உறுதியாகக் கூறினாள். அதனால் அவள் உடல் நலமுற்று படுக்கையில் வீழ்ந்தாள்.
மன்னன் தனது பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும்  ‘ஸ்ரீ ரங்கநாதரை கணவராக கமலவல்லி ஏற்றுக் கொள்வது என முடிவு செய்து விட்டதினால் பகவானின் சித்தப்படியே செய்யுங்கள். ஆனால் ஆலயத்தின் மூர்த்தியான ஸ்ரீ ரங்கநாதருடன்  மணமாகி விட்டாலும் அவரே அவள் கணவராகி விடுவார். அதற்குப் பிறகு பூ உலகில் வேறு யாரையும் அவளால் மணக்க முடியாது’ என்பதையும் கூறினார்கள். அவர்களுக்கு என்னத் தெரியும் நடப்பது அனைத்துமே நாராயணனின் சித்தம் என்று? மன்னன்  தீவீரமாக யோசனை செய்தப் பின் மனம் ஒடிந்த நிலைக்குப் போனவளை வேறு வழி இன்றி அந்த மன்னன் ஸ்ரீ ரங்கநாதார் ஆலயத்தில் உள்ள ஸ்வாமிகளுக்கு மனைவியாக திருமணம் செய்து தர சம்மதித்தார். இப்படியாக மஹாலஷ்மியின் பூர்வ ஜென்ம சாபத்தின் அனைத்துமே அதுவரை சரியாகவே நிகழ்ந்து வந்தன.
அடுத்து மன்னன் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து உற்சவ மூர்த்தியை உறையூருக்கு ஊர்வலமாக மாப்பிள்ளை அழைப்பைப் போல எடுத்து வரச் செய்து அங்கு மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து விட்டு அவளை அனைவருடனும் சேர்ந்து அழைத்துக் கொண்டு ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று  தாலி கட்ட ஏற்பாடு செய்தார்.  கமலவல்லியும் அங்கு சென்று ஸ்ரீ ரங்கநாதருக்கு மாலை சூடியதும் சாபம் களைந்து விட அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே அவர்கள் முன்னிலையிலேயே ஸ்ரீ ரங்கநாதாரின் சிலைக்குள் ஒளி போல பாய்ந்து சென்று மறைந்தாள். அனைவரும் திடுக்கிட்டார்கள். அதன் பின்னரே மன்னன் கனவில் மகாவிஷ்ணு தோன்றி நடந்த அனைத்தையும் கூற மன்னனும் மகளைப் பிரிந்த சோகம் இருந்தாலும் ஸ்ரீ ரங்கநாதார்-கமலவல்லிக்கு உறையூரிலேயே பெரிய ஆலயம் அமைத்து ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ அழகிய மணவாளர் (அழகு சொட்டும் மணமகன் என்பதே அந்தப் பெயரின் கருத்து) ரங்கநாதர்-கமலவல்லி நாச்சியாருக்கு (தாமரைப் போன்றவள், சோழ மன்னன் வம்சத்தில் பிறந்ததினால் நாச்சியார் எனப்பட்டவள்) திருமணம் நடைபெறும் வைபவத்தை நடத்தி வைக்கத் துவங்கினார்.

இந்த ஊரில்  இருந்த ஒரு  கோழி ஒரு பெரிய யானையுடன் சண்டைப் போட்டு அதை பறந்து பறந்து சென்று  கொத்திக்  துன்புறுத்த  அந்த யானை பயந்து போய் அங்கிருந்து  ஓட்டம் பிடித்ததாக ஒரு கதை உண்டு. அதனால்தான் அதற்கு திருக்கோழி என்ற பெயரும் வந்தது.
இந்த ஆலயம் திருச்சி நகரின் மையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது. ஆலயம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆலயத்தின் மூல தேவியானவள் கமவலல்லி நாச்சியார் ஆகும். மூலவர் அழகிய மணவாளர் என்கிறார்கள்.  இந்த ஆலயத்தின் ஒரு விசேஷம் என்ன என்றால் அனைத்து  ஆலயங்களிலும் உள்ள மூல மூர்த்திகள் கிழக்கு நோக்கியே அமர்ந்து இருப்பார்கள் . ஆனால் இங்குள்ள கமலவல்லித் தாயாரோ வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு உள்ளதினால் அந்த திசையில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தின் மூலவரான  ஸ்ரீ ரங்கனாதார் வரவை எதிர்நோக்கி பார்த்திருப்பதாக ஐதீகம் உள்ளது.
ஆலய விலாசம் கிடைக்கவில்லை. ஆனால் அங்கு உள்ள பட்டரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்:

S. K ரங்கராஜ  பட்டர்
 094433 07605
0431 2437605