தமிழ்நாட்டின் மாயவரம் மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் ஐந்து நரசிம்ம ஆலயங்கள் தோன்றக் காரணமே திருமங்கை ஆழ்வார் எனும் விஷ்ணு பக்தர்  ஆவார். அங்குள்ள ஐந்து ஆலயங்களின் வரலாற்றுப் பின்னணிக் கதை சுவையானது. அந்த ஐந்து உத்தமமான நரசிம்மத் பெருமாள் ஆலயங்களிலும் ஒரே நாளில் சென்று வழிபட்டால் கடன் தொல்லை குறையும், எதிரிகள் தொல்லை விலகும், தடைப்பட்ட திருமணம் நடைபெறும், மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.  ஓரிரு கிலோமீட்டர் தள்ளித் தள்ளி ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த ஐந்து ஆலயங்களும் திவ்ய தேசத்தில் காணப்படும் ஆலயங்கள் ஆகும்.

திருமங்கை ஆழ்வார் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஆவார். அவர் கள்ளர் எனும் பிரிவில் பிறந்தவர். சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் எனும் ஊரில் பிறந்தவர்.

சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது மங்கை மடம் எனும் பகுதிக்கு குறுநில மன்னராக திருமங்கை மன்னன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் உண்மையில் யார்?

சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்கறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அந்த நகரை நிர்வாகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு பகவான் விஷ்ணுவின் அருளினால் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்தக் குழந்தைக்கு நல்ல கல்வி அறிவை கொடுத்து வளர்த்தாலும், படை வீரர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை என்பதினால் அதற்கு பல்வேறு சண்டைப் பயிற்சிகளையும் கொடுத்து வளர்த்தார்கள். ஆகவே சிறு வயது முதலே அது யுத்தக் கலையில் சிறந்து விளங்கியது. அதனால்  ஒரே நேரத்தில் யானை, குதிரை, காலாட்டுப் படை என அனைத்து படைகளையும் திறமையுடன் அவரால் கையாள முடிந்தது. அவருடைய திறமையைக் குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் அவரை அழைத்து வந்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். அவர் யுத்தங்களில் எதிரிகளை சுலபமாக வீழ்த்தி கொன்று வந்ததால் அவரை காலன் என அழைத்தார்கள். காலன் என்பது அனைவர் உயிரையும் பறிக்கும் எம தர்மராஜரைக் குறிக்கும் பெயர். அவர் திறமையினால் அவர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள்.

திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர். அவருக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் பூமியில் மனிதராகப் பிறந்து வைஷ்ணவத்தை பரப்ப வேண்டும் என்றும், அதே நேரத்தில் அவர் பூமியில் மனித உருவில் அவதரித்து இருந்த இன்னொரு தேவ கன்னிகையின் சாபத்தையும் விலக்க வேண்டும் எனவும் தெய்வ நியதி இருந்தது. அந்த தேவலோக மங்கையோ ஒருமுறை தேவலோகத்தில் கபில முனிவருடன் இருந்த அவலட்ஷணமான தோற்றத்தைக் கொண்ட இன்னொரு முனிவரை பரிகாசம் செய்ததினால் கோபமுற்ற கபில முனிவரின் சாபத்தைப் பெற வேண்டி இருந்தது. தான் செய்த தவறுக்கு அந்த தேவ கன்னிகை கபிலரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதினால் அவர் தனது சாபத்தை மாற்றி அமைத்தார். அதன்படி அவள் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு பெண்ணாகப் பிறந்து அங்கிருக்கும் வேறொரு பிரிவை சார்ந்த ஒரு படைத் தலைவரை மணந்து கொண்டு அவரை ஆன்மீக உலகுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் மூலம் வைஷ்ணவத்தைப் பரப்ப வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவளுக்கு கிடைத்த சாபம் விலகும் என்றார்.

அந்த தெய்வ நியதியின்படி அவர்கள் இருவரும் திருமங்கை மன்னன் மற்றும் குமுதவல்லியாக பூமியில் பிறந்தார்கள். பல நிகழ்ச்சிகள் நடந்தேற அதன் இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  தெய்வ நியதிப்படி அவருக்கு அவள் ஒரு நிபந்தனை போட வேண்டி இருந்தது. அது என்ன எனில் குமுதவல்லி திருமங்கை மன்னனை மணக்க வேண்டும் எனில் திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.அவர்கள் கால்களை அலம்பி விட்ட பின் அந்த நீரில் சிறிது எடுத்து வந்து அவள்  தலை மீது தெளிக்க வேண்டும்.  அப்படி தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே அவளை திருமங்கை மன்னனால் மணக்க முடியும். திருமங்கை மன்னனும் அவள் கூறிய நிபந்தனையை ஏற்று அதை செய்து வர இருவருக்கும் திருமணம் நடந்தது. இப்படியாக ஆன்மீக உலகில் திருமங்கை ஆழ்வாரை ஆன்மீகத்தில் நுழைந்து விட்டால் அவர் மூலம் வைஷ்ணவத்தை பரப்பி அந்த ஷேத்திரத்தில் ஐந்து நரசிம்ம அவதாரத்தில் தானும் காட்சி தரலாம் என விஷ்ணு பகவான் எண்ணினார்.

திருமங்கை மன்னன் தினமும் ஆயிரம் விஷ்ணு பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்ததினால் அவருடைய கஜானாவும் காலி ஆயிற்று. சோழ மன்னனும் திருமங்கை மன்னன் தனக்குத்  தர வேண்டிய கப்பத் தொகையை தராமல் இருந்ததினால் மிச்சம் மீதி இருந்த அவருடைய செல்வத்தை அவர் நாட்டில் இருந்து  எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஆகவே பணம் இல்லாத நிலையை நிவர்த்தி செய்து கொள்ள திருமங்கை மன்னன் கொள்ளை அடிக்கத் துவங்கினார்.

திருமங்கை மன்னனின் நன் நடத்தையைக் கண்ட லட்சுமி தேவி அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணி  பகவான் விஷ்ணுவிடம் கேட்டபோது அவர் அவளை சற்று நாட்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கூறினார். அதன் பின் ஒரு சிறிய நாடகம் நடைபெற்றது. ஒருநாள் திருமால் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் புதியதாக மணம் செய்து கொண்ட தம்பதி போல உரு எடுத்து உடம்பில் பல்வேறு நகைகளை அணிந்து கொண்டு திருமங்கை மன்னன் ஆண்டு கொண்டு இருந்த இடத்தின் காட்டு வழியே சென்றார். அவர்களைக் கண்ட திருமங்கை மன்னன் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் போட்டிருந்த நகைகளைக் கொள்ளை அடித்தார். ஆனால் அந்த நகைகளை அவரால் எடுத்துக் கொண்டு செல்ல முடியாமல் அவை கனத்தன . அதன் காரணம் அந்த நகைகள் அனைத்துமே சில மந்திரங்களினால் கட்டடப்பட்டு இருந்தது என்பதே. ஆகவே அந்த மந்திரத்தை கற்றுக் கொண்டு நகைகளை எளிதில் எடுத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்த திருமங்கை மன்னனுக்கு அந்த மந்திரத்தை போதிப்பதாக மாற்று உருவில் இருந்த திருமால் கூற அதை காது கொடுத்து கேட்க அவர் அருகில் சென்ற திருமங்கை மன்னன் காதில் மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல தோத்திரங்களை பாடத் துவங்கினார். அதன் பின் சில காலத்திலேயே அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை இயற்றத் துவங்கினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெற ஹிரண்யகசிபுவின் வதமும் நிகழ்ந்தது. அதைக் கண்ட திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள். அவை உள்ள இடங்கள்:

  • குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள்
  • மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள்
  • திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்
  • திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்

(1) திருவாலியில் வில்வாரண்யம் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் லட்சுமி நரஸிம்ம தோற்றத்தில் காட்சி தரும் பெருமாளை திருவாலி நகரலன் அல்லது வரதராஜப் பெருமான் எனவும் அழைக்கின்றார்கள். அங்குள்ள தாயாரை அமிர்தவல்லித் தாயார் அல்லது அமிர்தகடவல்லித் தாயார் என அழைக்கின்றார்கள். ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின் நரசிம்மத் பெருமான் அடங்காத கோபத்துடன் இருந்தார். அவருடைய கோபத்தைக் தணிக்க உதவுமாறு தேவர்கள் அனைவரும் லட்சுமி தேவியை வேண்டிக் கொள்ள லட்சுமி தேவியும் நரசிம்ம அவதாரத்தில் இருந்த விஷ்ணுவின் வலது தொடையில் சென்று அமர, கோபம் தணிந்த நரசிம்மத் பெருமான் அவளை ஆலிங்கனம் செய்து கொண்டார். அந்த சம்பவம் நடைபெற்ற இடம் திருவாலி ஆகும். ஆகவே ஆலிங்கனம் எனப் பொருள்படும் விதத்தில் அமைந்த  திருவாலி என இந்த இடம் பெயர் பெற்றது. இந்த ஆலயத்தில்தான் லட்சுமி தேவி தொடையில் அமர்ந்திருக்க விஷ்ணு பகவான் தனது மனைவியுடன் கூடிய  ரங்கநாத பெருமானாகவும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தந்தாராம்.

(2) அங்கிருந்து சற்றே தூரத்தில் உள்ள குறையலூரில் நரஸிம்ம பெருமாள் உக்கிர நரஸிம்மராக காட்சி தந்தாலும், அவர் முகத்தில் அதீத கோபக்களை காணப்படவில்லை.

(3) அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மங்கை மடத்தில் பெருமாள் வீர நரஸிம்மராக காட்சி தருகின்றார்.

(4 & 5) திருநகரி எனும் இடத்தில் உள்ள  ஆலயத்தில் பெருமாள் இரண்டு நரஸிம்ம அவதார தோற்றத்தில் காட்சி தருகின்றார். இந்த ஆலயத்தில் அவர் யோக நரஸிம்மராகவும், ஹிரண்ய நரஸிம்மராகவும் காட்சி தருகின்றார். இந்த ஆலயம் த்ரேதா யுகத்தை சேர்ந்தது. ஒருமுறை பிரும்மாவின் ஒரு மகன் விஷ்ணு பகவானின் தரிசனம் கிடைக்க தவம் செய்தபோது அவர் காட்சி தரவில்லை. லட்சுமி தேவி வேண்டிக் கொண்டும் விஷ்ணு அவருக்கு காட்சி தரவில்லை. ஆகவே லட்சுமி தேவி தன் கணவரான விஷ்ணு பகவானின் மீது கோபம் கொண்டு அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள். அவளைத் தேடிக் கொண்டு திருநகரிக்கு வந்த விஷ்ணு தாமரை தடாகம் ஒன்றில் அவள் ஒளிந்து கொண்டு இருந்ததை அறிந்து கொண்டார். அந்த குளத்தில் ஐந்து தாமரை மலர்கள் இருந்தன. அங்கு சென்ற விஷ்ணு பகவான் தனது இடது கையை அவற்றை நோக்கிக் காட்டினார். அவர் இடது கையில் சந்திர பகவான் இருந்ததினால் நான்கு தாமரை மலர்கள் மலர்ந்தன. ஆனால் ஐந்தாவதில் லட்சுமி தேவி ஒளிந்து கொண்டு இருந்ததினால் அது திறக்கவில்லை என்பதினால் விஷ்ணு பகவானினால் லட்சுமி ஒளிந்து கொண்டு இருந்த மலரை எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. அந்த தாமரை மலரை கையில் எடுத்து திறந்து அதில் அமர்ந்திருந்த லட்சுமி தேவியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதனால்தான் திருமால் மீண்டும் அவர் மனைவியுடன் இணைந்த அந்த இடம் அதே பொருளைத் தரும் திரு நகரம் அதாவது திருநகரி என ஆயிற்றாம். இந்த ஆலயத்தின் விசேஷம் என்ன என்றால் ஒரே ஒரு கொடிமரத்தைக் கொண்ட மற்ற ஆலயங்களை போல இல்லாமல், இந்த ஆலயத்தில் இரண்டு கொடி  மரங்கள் உள்ளன. அதில் ஒன்று ஆலயத்துக்கும் இன்னொன்று திருமங்கை ஆழ்வாருக்கும் என்பதாக பண்டிதர் கூறினார்.

ஐந்து நரசிம்ம ஆலயத்தின்
சில புகைப்படங்கள்