![](https://santhipriya.com/wp-content/uploads/2014/02/33-48.jpg)
![](https://santhipriya.com/wp-content/uploads/2014/02/4a-12.jpg)
அத்தியாயம் – 7
நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ”மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு செய்து கூறுவீர்களா?” எனக் கேட்டதும் சித்த முனிவர் நகைத்தபடி கூறினார் ”நமத்ஹரகா, நான் இன்னும் நீ கேட்ட கேள்விக்கே பதில் கூறி முடிக்கவில்லையே. முதலில் கோகர்ணம் வந்தக் கதையை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதினால்தான் அதை முதலில் கூறினேன். அந்த மகிமை வாய்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என ஸ்ரீ பாதா முடிவு செய்ததற்கு இன்னொரு கதையும் சேர்ந்தே காரணம் ஆகும். அதையும் கூறுகிறேன் கேள்” என்று கூறிய பின் அந்தக் கதையைக் கூறலானார். நமத்ஹரகா பக்தி பூர்வமாக அவர் எதிரில் அமர்ந்து கொண்டு அவர் கூறியதை ஆர்வத்தோடு கேட்டபடி இருந்தார்.
முன்னொரு காலத்தில் இஷ்வகு வம்சத்தைச் சார்ந்த கல்மதபாக்ஷா என்ற மன்னன் ஒருவர் ஆட்சியில் இருந்தார். அவர் நல்ல பாண்டித்தியம் பெற்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்று அறிந்திருந்தார். அவர் பெரும் கொடையாளி மட்டும் அல்ல அனைவரிடமும் கனிவோடு நடந்து கொண்டவர். அனைவரிடமும் மரியாதை காட்டுபவர். ஒரு முறை அவர் காட்டில் வேட்டையாடச் சென்றபோது தூரத்தில் நெருப்பு ஜ்வாலையைப் போன்று காட்சி தந்து கொண்டு இருந்த ஒரு ராக்ஷசன் மரத்தின் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டார். ராக்ஷசர்கள் மனிதர்களை தின்பவர்கள் என்பதினால் அவர் அம்பெறிந்து அந்த ராக்ஷசனைக் கொன்று விட்டார். அப்போது இன்னொரு மரத்தில் பதுங்கி இருந்த அந்த ராக்ஷசனின் சகோதரன் அரசன் சென்றபின் காயமுற்று இறக்கும் தருவாயில் கிடந்த தனது சகோதரனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதபோது இறக்கும் தருவாயில் இருந்த ராக்ஷசன் கூறினான் ‘சகோதரா, என்னை இந்த நாட்டு மன்னன் கொன்று விட்டான். ஆகவே நீ அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும்’. அப்படிக் கூறிவிட்டு இறந்து போனான்.
சில வருடங்கள் கடந்தன. அரசனை பழிவாங்க சமயத்தை எதிர்நோக்கி ராக்ஷசன் காத்து இருந்தான். ஒரு முறை அரண்மனையில் ரிஷி, முனிவர்களைக் கௌரவிக்கும் ஒரு பெரிய விழா நடைபெற்றது. அதற்கு வெளியில் இருந்தும் சமையல்காரர்கள் வந்தார்கள். தனக்கு மழலை செல்வம் இல்லை என்பதினால் பெரிய பூஜை செய்து ரிஷி முனிவர்கள் மூலம் தெய்வத்திடம் இருந்து அதற்கான ஆசிகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தான் கல்மதபாக்ஷா. அதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு மாறு வேடத்தில் சமையல்காரனாக அந்த ராக்ஷசன் தானும் ஒரு சமையல்காரனாக சென்று விட்டான்.
அந்த விழாவில் அரசன் தன்னுடைய குல குருவான வசிஷ்டரையும் அழைத்து இருந்தான். வந்திருந்த ரிஷி, முனிவர்களுக்கு உணவு செய்ய துவங்கியதும் அதில் மனித மாமிசத்தை யாருக்கும் தெரியாமல் கலந்துவிட்ட ராக்ஷசன் அதை வசிஷ்டருக்கும் பரிமாற ஏற்பாடும் செய்து விட்டான். உணவு பரிமாறப்பட்டபோது தம் இலையில் மாமிசம் கலந்த உணவைக் கண்ட வசிஷ்டர் கோபமுற்று என்ன நடந்தது என்பதை யோசனை செய்யாமல் அந்த அரசன் தன்னை அவமதித்து விட்டதாகக் கருதி அவன் ஒரு பிரும்ம ராக்ஷசனாக மாறுமாறு சாபம் கொடுத்து விட்டார். மன்னன் தன்னை அறியாமல் நடந்த குற்றத்துக்கு மன்னிப்பை கோரினான். யாரோ ஒருவன் வேண்டும் என்றே செய்துவிட்ட தவறுக்கு தான் பொறுப்பல்ல என்றாலும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டும், வசிஷ்டரோ மக்கள் செய்யும் தவறுகளுக்கு மன்னனே பொறுப்பு எனக் கூறி அதை விலக்கிக் கொள்ள மறுத்தார்.
ஆனால் அந்த மன்னனின் மனைவியான தமயந்தி வசிஷ்டரின் காலில் விழுந்து கணவனுக்காக மன்னிப்புக் கேட்டாள். தமது குலகுருவை சாந்தப்படுத்தி சாபத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கேட்க அவரும் மனம் இளகி தான் கொடுத்த சாபத்தின் கடுமையைக் குறைத்தார். அப்படி அவர் மாற்றிய சாபத்தின்படி அந்த மன்னன் பன்னிரண்டு வருடங்கள் பிரும்ம இராட்சஷனாக இருந்தப் பின் மீண்டும் மனித உடல் பெற்று மன்னன் ஆவான் என்றும் அதன் பின்னரே அவர்களுக்கும் மழலை பாக்கியம் கிட்டும் என்றும் ஆசிர்வதித்தார்.
அந்த சாபத்தின்படி அந்த மன்னனும் பிரும்ம இராட்சஷனாக மாறி காடுகளில் உலாவத் துவங்கினான். அப்படி அவன் உலாவிக் கொண்டு இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய மனைவியுடன் அந்த வழியே சென்று கொண்டு இருந்த ஒரு பிராமணத் தம்பதியினரை பிரும்ம ராக்ஷசனின் இயற்கை குணத்தின்படி அவர்களை தின்பதற்காக சிறை பிடித்தான். அந்த பிராமணனின் மனைவியோ தன்னை முதலில் தின்று விட்டு தன்னுடைய கணவரை விடுதலை செய்து விடுமாறு அதனிடம் கெஞ்சினாள். அவள் மகா கற்புக்கரசி. தூய்மையான பதிவிரதை.