கோடையனல்லூர்
ஜெயவீர ஆஞ்சநேயர்
சாந்திப்பிரியா
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடையனல்லூர் என்ற இடத்தில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர்  ஆலயம் அந்தப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.  அந்த இடத்தை  தென்காசி அல்லது சங்கரன்கோவில்  வழியே சென்று அடையலாம் .  கிருஷ்ணாபுரத்து பஸ் ஸ்டாண்டில் இறங்கி சுமார் ஒரு கிலோ தொலைவில் உள்ளஆலயத்துக்கு  நடந்தே போகலாம்.  காரணம் அங்கு ஒரு முறை சென்றுவிட்டுத் திரும்பினால் வாழ்கையில் பெரும் மாற்றம் ஏற்படுகின்றது என்பது பொதுவான கருத்து.
இடது கையை தொடை மீது வைத்து  , வலது கையை அபாய முத்திரை கட்டும் விதத்தில்  வைத்து தெற்கு நோக்கி  நின்றுள்ள உள்ள ஆஞ்சநேயர்  வாலில் ஒரு மணி தொங்குகின்றது. பக்தர்களுக்கு கருணைப் பொழிந்து அவர்களைக்காத்து அருளுகின்றார் அந்த ஆஞ்சநேயர்.
அந்த ஆலயம் அமைந்த வரலாறு என்ன?
சிதையைத் தேடி வந்த ராமபிரான் வாலியை வதம் செய்த பின் கிஷ்கிந்தையை சுக்ரீவருக்கு  மீட்டுக் கொடுத்தார். அதன் பின் சுக்ரீவர்  ராமருக்கு உதவ தனது படைகளை அனைத்து இடங்களுக்கும் அனுப்பி சிதையை தேடச் சொன்னார்.  அதில் தெற்கு நோக்கிச் சென்ற பட்டாளத்தில் ஜாம்பவானும், ஆஞ்சநேயரும் இருந்தனர்.  எங்கு தேடியும் சீதை கிடைக்கவில்லை. அனைவரும் களைத்துப் போய் ஒரு அத்வானப் பிரதேசத்தில் தங்கினார்கள்.  தாகம் தொண்டையை அடைத்தது. என்ன செய்வது எனப் புரியாமல் அனுமாரைக் கேட்டபோது அவர்  அந்தப் பகுதியில் இருந்த ஒரு குகையைக் கண்டார். அந்த குகைக்குள் இருந்து ஒரு பறவை தண்ணீர் சொட்டச் சொட்ட வருவதைக் கண்டு  அந்த குகைக்குள் நுழைந்தனர். என்ன ஆச்சரியம். வெளியில்   காரிருள்  சூழ்ந்த  குகையாகத் தெரிந்ததின்  உள்ளே  அற்புதமான தோட்டங்கள், பழ மரங்கள்   நீர்நிலைகள் என  பலவட்ட்ரும் இருக்க  அதற்குள் ஒரு தபஸ்வினி இருந்ததைக் கண்டனர்.  அவளிடம் சென்று தமக்கு  உணவையும் , தண்ணீரும்  கிடைக்க உதவுமாறுக் கேட்டுப் பெற்றப் பின் அந்த குகையை ஏற்படுத்தியது பிரும்மாவின் அருளைப் பெற்ற மாயன் என்பதைப் புரிந்து கொண்டனர்.  ஆனால்  உணவு அருந்தியப் பின் வெளியேற வழி தெரியாமல் தவித்தனர். அத்தனை பெரிய குகை, அத்தனை புரியாத வகையில் அமைந்து இருந்த வழிகள்.  அதன்பின் அனைவரும் களைப்பை   போக்கிக் கொண்டப் பின்  அவர்களை  வெளியே அழைத்து வந்து மாயனின் மனைவி விட்டுவிட  அவர்கள் மீண்டும் சீதையை தேடித் போனார்கள்.  ராவணனை அழித்து விட்டு திரும்பிய  ராம லஷ்மணர்கள் ஹனுமாருடன் சேர்ந்து மீண்டும் அந்த குகைக்குச் சென்று அங்கு ஒரு யாகம் செய்துவிட்டு அயோத்திக்குப் புறப்பட்டனர்.  அதற்கு முன்னரே மாயனை ஒரு சாபத்தின் காரணமாக இந்திரன் அழித்து விட்டார்.  அவர் சாபத்தைப் போக்க சிவபெருமான் கங்கையை அங்கு ஓடச் சொன்னாராம்.
மாயனின் மனைவி அங்கயே தங்கி இருந்தாள்.   ராம லஷ்மணர்கள் ஹனுமாருடன் அந்த இடத்துக்கு திரும்பி  வந்தபோது  மாயனின் மனைவி  அந்த இடத்தை ஆட்சி செய்து கொள்ளுமாறு ஹனுமாரிடம்  கூறி விட்டுச்  தான் கிளம்பி வேறு எங்கோ சென்று விட்டாளாம்.  ஆகவே  ஹனுமான் ஆட்சி செய்யும் சிறப்பு வாய்ந்த , ராம லஷ்மணர்கள், இந்திரன் போன்றவர்கள் வந்து தங்கிய புனித இடமான அந்த குகைக்கு மேலே எழுப்பப்பட்டு உள்ளதுதான் ஜெயவீர ஆஞ்சேநேயர் ஆலயம். ஆலயக் குளத்தின் அடியே இரண்டு  குகைகள் உள்ளதைக் காணலாம்.