COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பாகம் -11 : அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 40
அரசி கர்பமுற்றாள்; கனவில் ஸ்ரீமத் தத்த பகவான் தரிசனம்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
நீதி நெறி வழுவாத யோக குருவான வேத தர்மா தன் சீடனான தீபக்கைத் தொட்டு, இவ்வாறு கூறினார் ‘ஸ்ரீமத் தத்த பகவானிடமிருந்து அந்த அரிய வரத்தைப் பெற்ற மன்னன் ஆயு, தன் ராஜ்யத்திற்குத் திரும்பினான்||1||
மன்னன் மிக்க அறிவுக் கூர்மை கொண்டவனாக இருந்தபோதிலும், ஏனோ அவன் வாரிசைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை; ஆகையால், இறைவனிடமிருந்து ஏதேனும் ஒன்றைப் பெற விரும்பும் பக்தர்களின் வகையிலேயே அவனும் சேர்க்கப்படுகிறான்; தன் விருப்பப்படியே அவன் அந்த வரத்தைப் பெற்றான்||2||
எத்தகைய நோக்கத்துடன் ஈடுபட்டிருந்தாலும் சரி, ஒருவன் இறைவனிடம் பக்தி செலுத்தத் தொடங்கினால், படிப்படியாக அவன் உயர்ந்து, வழிபாட்டின் மிக உயர்ந்த நிலையை அடைகிறான்; தன் ஆத்மா க்களை மீண்டும் தன்பால் ஈர்ப்பதற்காக இறைவன் கையாளும் உத்தி இதுவேயாகும் ||3||
ஒருவனிடம் போதிய நற் புண்ணியங்கள் சேமிப்பில் இல்லையென்றால், அவன் சிறிய தெய்வங்களிடமும் பிறரிடமும் பக்தி செலுத்துகிறான்; இது உலகப் பற்று எனும் பந்தங்களை மேலும் வலுப்படுத்தவே வழி வகுக்கிறது; அத்தகைய பக்தர்களுக்கு மறு பிறவிச் சுழற்சி ஒரு போதும் முடிவடைவதில்லை ||4||
மாறாக, ஒருவன் தன்னை முக்திக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் கொண்ட தெய்வத்தை பற்றி அறிந்து கொண்டு, மனதில் ஏதேனும் ஒரு விருப்பத்தை வைத்துக் கொண்டு அவர்களை நாடினால், படிப்படியாக அவன் உண்மையான பக்திக்கு தேவையான தகுதியை அடைகிறான்; அதன் வாயிலாக அவன் உலகப் பற்று எனும் பந்தங்களைக் கடந்து உயர்கிறான்||5||
ஒவ்வொரு நிலையிலும் தன் எதிர்பார்ப்புகளை கடந்து, பக்தியின் மிக உயர்ந்த நிலையை அடையும் அடியார்கள் அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகத் திகழ்கிறார்கள்; அத்தகைய சிறப்புடனே அவர்கள் உலகில் அங்கீகரிக்கப்படுகிறார்கள்; மன்னன் ஆயு தன் ராஜ்யத்திற்குத் திரும்பி, தன் அரசியைச் சந்தித்தான் ||6||
அவன் தன் அன்பு மனைவியிடம் இவ்வாறு கூறினான் ‘இறைவன் காட்டிய வழியின்படியே நான் சென்று, ஸ்ரீமத் தத்த பகவானுக்குச் சேவை செய்தேன்; இப்போது நமக்கு ஒரு வாரிசு பிறப்பது உறுதியாகி விட்டது; அவர் நான் விரும்பிய வரத்தை எனக்கு அருளியுள்ளார்; நீ ஒரு ஆண் மகனைப் பெற்றெடுப்பாய் ||7||
இப்போது நீ அந்தச் குழந்தையின் முகத்தைக் காணும் பாக்கியத்தைப் பெறுவாய்; அதுவே நம் இருவருக்கும் ஆன்மீக உயர்வையும் முக்தியையும் பெற்றுத் தரும்’ ; இவ்வாறு அரசியிடம் கூறியபடியே, இறைவன் அருளிய அந்தப் புனிதமான கனியை அவளிடம் அளித்தான் ||8||
சமஸ்கிருத செய்யுள்: ‘ப்ரமுக: ஸர்வ-தேவாநாம் ஸுமுக: புன்னுவா-காரின்நாம், நஉன்முக: ஸ்வபக்தாநாம் ச தத்தோ- அடாதிதம்ஃபலம்’; இதன் பொருள் என்ன என்றால் ‘அனைத்துத் தேவர்களுக்கும் முதன்மையானவராக போற்றப்படுபவரும், நற்பண்புகளும் புண்ணியமும் கொண்டவர்களால் தரிசிக்கப்படுபவரும், தன்னை உண்மையாகத் தேடும் பக்தர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துபவருமான தெய்வமே ஸ்ரீமத் தத்தர்; இவ்வாறு ராணியிடம் கூறிய பின்னர் உனக்காக இந்த வரப் பழத்தை அளித்துள்ளார் என்றார் ||9||
அவருடைய அருளைப் பெற்ற பிறகு, எனக்கு வாரிசு குறித்து இனி கவலையில்லை; இந்தப் பழத்தை நீங்கள் பக்தியுடன் உட் கொண்டாலே போதும், நிச்சயமாக உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும் ||10||
இனி நம் வம்சம் தழைத்தோங்கும்’; இவ்வாறு தன் அரசியிடம் அந்த நற் செய்தியைக் கூறி, அவள் அடைந்த மகிழ்ச்சியைக் கண்டதும், அவள் அந்த பழத்தை, அறிவுறுத்தப்பட்டபடியே பக்தியுடன் உட்கொண்டாள் ||11||
அதன்பின் அந்தத் தம்பதியினர் இன்பத்தில் திளைத்து மகிழ்ந்தனர்; அரசி தன் கணவனுக்கு உண்மையானவளாகவும் பற்றுள்ளவளாகவும் விளங்கினாள்; விரைவில் அவள் கருவுற்றாள்; தெய்வமான ஸ்ரீமத் தத்தரின் வரம் ஒரு போதும் வீணாகாதல்லவா?’ ||12||
தான் முழுமை பெற்றவளாக உணர்ந்த அரசி, தன் அந்தப்புரம் அறையில் உறங்கினாள்; அப்போது திடீரென அவள் கனவில், ஒரு மகத்தான தெய்வீக ஆத்மாவைக் கண்டாள்||13||
பேரொளிப் பிழம்பான தெய்வம் நான்கு திருக் கரங்களைக் கொண்டிருந்தது; அந்த தெய்வம் ஒளி வீசும் கை வளைகளாலும், தோள் வளைகளாலும் (கேயூரம்) அலங்கரிக்கப்பட்டிருந்தது; முத்துக்களால் ஆன ஒரு மாலை அவருடைய கழுத்தை அலங்கரிக்க, அவருடைய திருச் செவிகள் குண்டலங்களால் மின்னின||14||
தன் பக்தர்களுக்கு மட்டுமே காட்சி தருபவர் என்று புகழ் பெற்ற அந்தத் தெய்வம், முகத்தில் புன்னகையுடன் காட்சியளித்தது; அவருடைய தெய்வீகப் பிரகாசம் திசைகள் அனைத்தையும் ஒளி பெறச் செய்தது; அவருடைய திருமுடி மீது, ஆதிசேஷன் எனும் பாம்பின் தலைகள் ஒரு குடை நிழலை பரப்பி நின்றது ||15||
அந்தப் பாம்பின் தலைகள் மீது விலை மதிப்பற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன; அத்தகைய தெய்வீக பாம்பான ஆதிசேஷன் ‘அனந்தன்’ என்றும் அழைக்கப்படுபவன் ஆவான்; அரசி அந்தத் தெய்வீகக் காட்சியைக் கண்டு பரவசமடைந்தாள்; அங்கே அந்த தெய்வம் தம் திருக்கரங்கள் ஆசி வழங்கும் நிலையில் வைத்து இருந்ததைக் கண்டாள் ||16||
கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்ட விலை மதிப்பற்ற முத்துக்களை அவளுடைய கைகளில் அளித்தவரும், புனிதமாக்கப்பட்ட பால் நிரம்பிய ஒரு சங்கைக் கொண்டு அவள் மீது பாலைத் தெளித்தவரும் அந்தத் தெய்வமே ஆவார் ||17||
கனவு நிலையில் இருந்த அரசி, அந்த அரிய தெய்வீகக் காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனாள்; வியப்பில் ஆழ்ந்த அவள் உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையிலேயே, அந்தத் தெய்வீகக் காட்சி திடீரென மறைந்து போனது ||18||
இது அவளைத் தன் பரவச நிலையிலிருந்து திடுக்கிடச் செய்தது; அடுத்த கணமே அவள் விழித்துக் கொண்டாள்; சற்று முன் நிகழ்ந்ததை மீண்டும் மீண்டும் தனக்குள்ளேயே நினைவு கூர்ந்தவாறு, அவள் மிகவும் பணிவான குரலில் தனது கணவரிடம் இவ்வாறு கூறினாள்||19||
நான் என் கனவில் சற்று முன் தரிசித்த அந்தத் திருக் காட்சி, நிச்சயமாக இறைவனின் நேரடித் தரிசனமே ஆகும்; அந்தத் தரிசனத்தில் ஏற்பட்ட பேரின்பத்தை நான் சுவைத்துக் கொண்டிருந்த வேளையிலேயே, அந்த மங்கலக் காட்சி திடீரென மறைந்து விட்டது; உண்மையில் அங்கே என்னதான் நடந்திருக்க வேண்டும்? ||20||
நான் செய்துள்ள பாவங்கள் மிக அதிகமாக உள்ளன என்றே தோன்றுகிறது; அதனால்தான் இறைவன் தன்னை மறைத்துக் கொள்ளத் தீர்மானித்திருக்க வேண்டும்; என் மனம் பெரிதும் விரும்புவதாகத் தோன்றும் அந்தப் புலனின்பங்களை நாடி அலைவதை நான் இனி கை விட வேண்டும் ||21||
என் கனவில் தோன்றி, புன்னகைத்து என்னை ஆசீர்வதித்த அந்த இறைவன், ஏன் திடீரென மறைந்து போக தீர்மானித்தார்?; அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே என் உள்ளம் அன்பால் நிரம்பி வழிந்தது; அப்படியிருக்க, அந்தத் திருக் காட்சி ஏன் திடீரென மறைந்து விட்டது? ||22||
நான் அந்தத் திருக்காட்சியிலேயே முழுமையாக லயித்து போயிருந்தேன்; சுவர்பானுவின் மகளும், இந்துமதி எனும் பெயர் கொண்டவளுமான அந்த அரசி, இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஏதேனும் ஒரு சேவையைச் செய்ய இயலாமல் போனதை எண்ணி, இப்போது மிகுந்த மன வருத்தம் அடைந்தாள் ||23||
அவள் தன்னைச் சுற்றிலும் அனைத்துத் திசைகளிலும் தேடிப் பார்த்தாள்; ஆயினும், தான் தேடிக் கொண்டிருந்த அந்தத் திவ்ய ரூபத்தை அவளால் காண இயலவில்லை; இருப்பினும், சற்று முன் தான் தரிசித்த அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தவாறே, அவள் தொடர்ந்து ஒருவிதப் பரவச உணர்விலேயே திளைத்திருந்தாள் ||24||
இது வாசுதேவப் பெருமானின் திருவருளே,’ என்று அவள் உள்ளத்தில் எண்ணிப் பரவசமடைந்தாள்; பின்னர் மன்னன் ஆயுவிடம் ‘மெய்யாகவே, இன்று நான் கோவிந்தப் பெருமானைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்’ என்று கூறினாள் ||25||
ஆனால், அந்த உன்னதமான கனவிலிருந்து நான் விழித்தெழுந்ததும், அந்த எழில் மிகு வடிவத்தை என்னால் மீண்டும் காண இயலவில்லை என்று தன் அரசி கூறியதைக் கேட்ட மன்னனும், அவள் பெற்ற அந்தப் பாக்கிய தரிசனத்தைக் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான் ||26||
மன்னன் அவளிடம் ‘நாம் இனி உறங்க வேண்டாம்; நீ கண்ட அந்தப் புண்ணியக் கனவின் பலனை நாம் முழுமையாகப் பெற வேண்டுமெனில், விழித்திருப்பதே சிறந்தது; நாம் மீண்டும் உறங்கினால், இனி நிகழவிருக்கும் நற் பேறை நாம் இழக்க நேரிடலாம்’ என்று கூறினான் ||27||
இத்தகையதொரு கனவைக் காணும் பேறு உனக்குக் கிடைத்திருப்பது இறைவனின் கருணையாலேயே ஆகும்; ஆயினும், இதன் உட்பொருள் என்னவாக இருக்கும்? நாளை காலையில் நான் முனிவர்களை அணுகி இது குறித்து விசாரித்து, இதன் உண்மையான விளக்கத்தைப் பெற்றுத் தெளிவடைவேன்’ என்று மன்னன் கூறினான் ||28||
நீ கண்ட இக் கனவு ஒரு அற்புதத்திற்குச் சமமானது என்றே நினைக்கின்றேன்; எனவே, இன்றிரவு நாம் உறக்கத்தைத் துறந்து விழித்திருப்போம்’ என்று மன்னன் கூறியதைக் கேட்ட அரசி அதற்கு இசைந்தாள்; அவ்வாறே அவர்கள் இருவரும் விடியற்காலை வரை விழித்திருந்தனர் ||29||
அரசி தன் பொழுதை இறைவனது தியானத்தில் கழித்தாள். விடியற் காலை செவ்வொளி வானெங்கும் பரவியதை அவள் உணர்ந்தாள்; அமைதி தவழும் அந்த விடியல் புலர்ந்ததைக் கண்டதும், மன்னனும் அரசியும் நீராடி, அன்றைய நாளுக்கான கடமைகளை மேற் கொள்ளத் தயாராயினர் ||30||
காலைக் கடமைகளை முறைப்படி முடித்து, மங்கலப் பொருட்களைத் தரிசித்த பின்னர், மன்னன் ஒரு தூதுவனை அழைத்துச் சௌனக முனிவரை வரவழைத்தான்; முனிவரும் விரைந்து அங்கு வந்தடைந்தார்; மன்னன் அவரைப் பணிவுடன் வணங்கி, தனது மனதில் எழுந்த சந்தேகத்தைக் குறித்துக் கேட்டான் ||31||
மன்னன் கூறிய அனைத்தையும் கேட்ட முனிவர், அது ஒரு இறைவருள் என்பதை உணர்ந்தார்; அவர் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து ‘ஓ மன்னனே, நீ கண்ட கனவுகளிலேயே மிகச் சிறந்த கனவு அதுவே ஆகும்; நான் கூறுவதை நீ கூர்ந்து கேட்பாயாக’ என்று கூறினார் ||32||
உன் இதயத்தில் நிறைந்திருந்த பேராவலுடன், நீ ஸ்ரீமத் தத்தப் பெருமானைத் தேடிச் சென்று கண்டடைந்தாய்; அவரை முழு பக்தியுடன் வழிபட்டாய்; உன் வழிபாடு இப்போது பலனளித்துள்ளது; இதனை நான் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உனக்கு எடுத்துரைக்கிறேன்’ என்று முனிவர் கூறினார்||33||
உனக்கு இப்போது மிகப் பெரிய பெருமை கிடைக்க உள்ளது; உன் அரசி உட் கொண்ட அந்தப் பிரசாதத்தின் பலனாகவே அவள் இப்போது கருவுற்று இருக்கின்றாள்’ என்று முனிவர் விளக்கினார் ||34||
உமது முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன; கர்ப்பத்தில் காவல் தெய்வங்களின் ஒரு அங்கமான குழந்தை உள்ளது; இப்போது நிச்சயமாக ராணி ஒரு மகனைப் பெற்று எடுப்பாள்; ஓ, விசுவாசமும் பக்தியும் கொண்ட வைஷ்ணவ அரசனே, இந்த உண்மையை உறுதியாக நம்பு ||35||
சந்திர குலத்தின் மணி மகுடமாகத் திகழும், ஒளிமயமான, சமயக் கல்வியில் சிறந்த, நாராயணரைப் போல் புகழ் பெற்ற உனது இளவரசன், வலிமை மிக்கவனாகவும் வேத அறிவை அறிந்தவனாகவும் இருப்பான்||36||
அவன் நல்லவர்களை கௌரவிப்பான்; அவன் ஹுண்டாசூரன் எனும் அசுரனைக் கொல்வான்; அவன் சக்கரவர்த்தி அல்லது மன்னன் என்ற பட்டத்தால் கௌரவிக்கப்படுவான்; மேலும் அவன் தனது அனைத்து நற்குணங்களாலும் பிரகாசிப்பான் ||37||
அவன் ஊனமுற்றோர், ஏழைகள், பார்வையற்றோர் அல்லது நோயுற்றோர் என யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரிடமும் கருணை காட்டுவான்’ இவ்வாறு சௌனக முனிவர் மகிழ்ச்சியுடன் அரசனுக்கு அந்த நற் செய்தியைத் தெரிவித்தார்||38||
கருப்பையை நான்கு திசைகளிலிருந்தும் ஒரு தெய்வீக நெருப்பு காப்பது போலத் தோன்றுகின்றது; வருண பகவான், நீர் மூலக் கூறுகள் மற்றும் பனிக்குட நீரின் மூலம், பத்து மாதங்கள் வரை கருவை மரணப் பாசக் கயிற்றால் (பாதுகாப்பு வளையமாக) காத்து வந்துள்ளார் ||39||
இப்படியாக கூறிய பின்னர் ஆயு மன்னனை ஆசீர்வதித்த சௌனக முனிவரை மன்னன் வழிபட்டான்; அவனது வணக்கத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்ட முனிவர், தன் இருப்பிடத்திற்குச் திரும்பிச் சென்றார்||40||
சௌனக முனிவர் கூறிய கனவின் முக்கியத்துவத்தை தேவலோகத்தை சேர்ந்த தேவர்கள் அறிந்தபோது, அவர்களும் பரவசமடைந்தனர்; அவர்கள் மலர்களைத் தூவி கொண்டாடினர்||41||
அவர்கள் ‘சுஸ்வப்னம் ஜாதம்’ (கனவு உண்மையானது) என்று உச்சரித்தனர்; உண்மையில் அது ஒரு அழகான கனவு; அவர்கள் ஆனந்தமாகப் பாடினர்; கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ஹுண்டாசுரன் * என்ற அசுரனின் மகள் விண்ணுலகிற்குச் சென்றாள்
{* ஹுண்டாசுரன் என்பது பெரும்பாலும் அந்தகாசுரன் (Andhakasura) என்ற அசுரனை குறிக்கின்றது; சிவபெருமான் உமா தேவியுடன் கைலாய மலையில் இருக்கும்போது, பார்வதி தேவி விளையாட்டாகச் சிவனின் கண்களைத் தன் கைகளால் மூடினாள்; இதனால் உலகம் இருளில் மூழ்கியது; அப்போது பார்வதி தேவியின் கைகளில் தோன்றிய வியர்வையிலிருந்து அந்தகாசுரன் பிறந்ததாகக் கூறப்படுகிறது} ||42||
மன்னர் ஆயு தனது தவத்தைத் தொடங்க முடிவெடுத்த அதே தருணத்தில், ஹுண்டாசுரன் என்ற அரக்கன் பூமிக்கு வந்தான் ||43||
உலகத்தைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தியவனும், பல தேவர்களைக் கூட வென்றவனும் இவன்தான்; அவனது பராக்கிரமமும், துரோக எண்ணமும் எத்தகையதென்றால், தேவர்களின் குருவும் கோள் நாயகனுமான சுக்கிரனின் மகளையே இவனால் கடத்திச் செல்ல முடிந்தது ||44||
அத்தகைய நடத்தையைக் கண்டு சீற்றமடைந்த அவள், அந்த அரக்கனை நோக்கி ‘மன்னர் ஆயுவின் மகன் உன்னைக் கொல்வான்’ என்று சபித்தாள்; அவள் இவ்வாறு கூறிய மறுகணமே, அந்த அரக்கன் அவளைச் சிறையில் அடைத்தான் ||45||
அதற்கிடையில், அந்த அரக்கனின் மகள் விண்ணு லோகத்திற்கு சென்றாள்; தேவர்கள் இன்பமாக பொழுதைக் கழிக்கும் ‘நந்தனவனம்’ என்னும் தேவ வனத்தை அடைந்த அவள், அங்கு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவும் கொண்டாள் ||46||
அங்கு அவள் தற்செயலாக ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது; அரசவைப் புலவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘ஹுண்டாசுரன்’ மன்னர் ஆயுவின் மகனால் கொல்லப்படுவான் என்று கூறிக் கொண்டார்கள்; அந்தப் புலவர்களுக்கு அவள் அங்கு இருப்பதே தெரிந்திருக்கவில்லை||47||
எவ்விதக் கவலையுமின்றி, கவனக் குறைவாக உறங்குபவனை, சில சமயங்களில் மரணமே வந்து விழுங்கி விடும்; தேவர்கள் விதித்த விதியானது இத்தகையதே; இதை எவராலும் தவிர்க்க இயலாது ||48||
சமஸ்கிருதச் செய்யுள்: பிரசுப்தம் ச பிரமத்தம் ச கார்ய-அகார்ய-விதம் கலம் |ம்ருத்யு-கரிஷ்யதி க்ஷிப்ரம் தேவ-கோ-விப்ர-பீடகம்’
இதன் பொருள் என்ன என்றால் எவன் ஒருவன் அறியாமையில் மூழ்கி சோம்பேறியாகி இருப்பானோ, எவன் ஒருவன் தெய்வங்களுக்குரிய வழிபாடுகளைத் தடுப்பவனாகவும், சாதுவான பசுக்களையும், வேதங்களை ஓதும் அந்தணர்களையும் துன்புறுத்துபவனாகவும் இருப்பானோ, எவன் ஒருவன் அதர்ம வழியில் நடப்பானோ, எவன் ஒருவன் விவேகமின்றி இருப்பானோ அவனை மரணம் மிக விரைவில் விழுங்கி விடும் ||49||
அந்த அரக்கனின் மகள், புலவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த உரையாடலைக் கேட்டு விட்டாள்; உடனே அவள், தங்கள் தலைநகரான ‘காஞ்சன்புரம்’ திரும்பினாள்; அங்குத் தன் தந்தையான ஹுண்டாசுரனிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்தாள்||50||
அதைக் கேட்ட ஹுண்டாசுரனுக்கு கடந்த காலத்தில் அசோக சுந்தரி என்ற மங்கையால் தான் சபிக்கப்பட்ட நிகழ்வு நினைவுக்கு வந்தது; அதன் விளைவாக, அவன் ஓய்வெடுக்கும் நேரத்தில் கூட, தன் அருகிலேயே வில்லையும் அம்பையும் வைத்துக் கொள்ளத் தொடங்கி இருந்தான் ||51||
அந்த அரக்கன், அமைதி இன்றி திரிந்தான்; ஒரு நாள் மாறு வேடம் பூண்டு, மன்னன் ஆயுவின் தலை நகருக்குச் சென்றான்; அங்கு அவன் மன்னனின் அரசியைக் கூர்ந்து நோக்கினான்; அவள் கருவுற்றிருப்பதை அவன் உணர்ந்தான்; அவளது மார்பகங்கள் பால் சுரந்து கனத்திருந்ததைக் கண்டதும், அவனது கவலை மேலும் அதிகரித்தது ||52||
அரசியின் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பாருங்கள்; அவள் நிச்சயமாகக் கருவுற்றிருக்கிறாள்; எனவே, அவளுக்குக் கருச் சிதைவை ஏற்படுத்தும் வகையில், நான் ஏதேனும் ஒரு முயற்சியை மேற் கொள்ள வேண்டும் ||53||
அரக்கன் இவ்வாறு திட்டமிட்டுக் கொண்டிருந்தான்: கருச் சிதைவை ஏற்படுத்தி விட்டால், தன்னை அழிக்கப் பிறந்த எதிரி இவ்வுலகில் தோன்றாமலே போய் விடுவான்; அச்சமயத்தில், அவன் திவ்யமான சுதர்சனச் சக்கரத்தைக் கண்டான் ||54||
அச் சக்கரம் அரசியைச் சுற்றிலும் அனைத்துத் திசைகளிலிருந்தும் சூழ்ந்து கொண்டு இருந்தது ; அது அவளைச் சுற்றிச் சுழன்று, மின்னல் வேகத்தில் வலம் வந்தது; தாய்க்கும் சேய்க்கும் கிடைத்த இத்தகைய தெய்வீகப் பாதுகாப்பைக் கண்டதும், அரக்கன் அச்சத்தால் நடுங்கினான்; இனி என்ன நிகழப் போகிறதோ என்று எண்ணி அவன் கலங்கினான் ||55||
அரசியைத் தொலைவிலிருந்து உற்று நோக்கிய அரக்கன் அந்த அரசியை வலிமையாகப் பாதுகாப்பவர் யார்? அந்தப் பாதுகாப்புச் சக்தியை ஏன் கண்ணால் காண முடியவில்லை?’ என்று வியந்தான்; இறுதியில், அவளுக்குத் தீங்கு விளைவிக்க அவன் மேற் கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டன என்று அவன் முடிவு செய்தான் ||56||
அவன் மேலும் சிந்தித்தான் பூமி, விண்ணுலகம் அல்லது பாதாள உலகம் என எங்குத் தேடினாலும், என்னைப் போல வலிமை வாய்ந்தவர் எவரும் இல்லை. அப்படியிருக்க, இங்குள்ள இந்த அசைக்க முடியாத பாதுகாப்புச் சக்தி எதுவாக இருக்க முடியும்? ||57||
முன்னரே கணிக்கப்பட்ட விதிப் பயன் இப்போது நிறைவேறப் போவது போலத் தோன்றுகிறது; உலகத்தையே ஒளிரச் செய்யும் காலைச் சூரியனைப் போல, என் எதிரியும் என்னைக் கொல்லப் போகிறவனும் அவளது கருப்பையில் குடியிருக்கிறான்;இனி நான் என்ன செய்யப் போகிறேன்? ||58||
நான் அரசியைக் கொல்ல முயன்றாலோ, அல்லது அவளுக்குத் தீங்கு விளைவிக்க முற்பட்டாலோ, அவளைச் சுற்றி இடை விடாமல் வலம் வரும் இந்தச் சுதர்சனச் சக்கரம், நிச்சயமாக எனக்குப் பெரும் தடைகளை ஏற்படுத்தும்||59||
என் அறிவுத் திறன் அனைத்தும் இம்முறை என்னைக் கைவிட்டு விட்டது போலத் தோன்றுகிறது. என் வலிமை குறைந்து வருவது போலவும், என் ஆயுள் என்னும் கயிறு அறுபடப் போவது போலவும் உணர்கிறேன். அரசியின் கருப்பையில் ஏதோ ஒரு வலிமை மிக்க வீரன் குடியிருக்கிறான்||60||
இருப்பினும், என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் மேற் கொள்ளும் முயற்சிகளை ஒரு போதும் கை விட மாட்டேன்; என் முழு முயற்சியையும் மேற் கொண்ட பிறகும், மரணம் என்னை வந்தடைந்தால், அது என் தரப்பில் ஏற்பட்ட பிழையாகக் கருதப்படாது; இதுவே அற நூல்கள் கூறும் நியதியாகும் ||61||
ஒரு காரியத்தை நிறைவேற்ற முழுமையாக முயன்ற பின்னரும், அது கை கூடாமல் போனால், அதற்காக அந்த மனிதனைக் குறை கூற முடியாது என்ற ஞானத்தை உணர்ந்து கொண்ட அந்த அரக்கன், உறங்கிக் கொண்டிருந்த அரசிக்கு நுட்பமான முறையில் பயங்கரமான கனவுகளை உண்டாக்கினான் ||62||
அவ்வாறு, எதையும் சந்தேகிக்காத அந்த அரசி, தன் கரு கலைந்து துண்டு துண்டாக வெளியே விழுந்திருப்பதைக் கண்டாள்; அதற்குத் தலையே இல்லை, வயிறு வேறொரு இடத்தில் கிடந்தது; அத்தகைய பயங்கரமான காட்சிகள் அவள் கண்களுக்கு முன்னால் எழுந்தன ||63||
அதன் விளைவாக, அவள் பயத்துடன் திடீரென திடுக்கிட்டு போய் எழுந்தாள்; பின்னர் இந்தக் கனவுகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன? இவற்றுக்கு ஏதேனும் முக்கியத்துவம் உண்டா? இவை ஏதேனும் தீமையை முன்னறிவிக்கின்றனவா? என்று வினவிக் கொண்டாள்||64||
ஒரு நல்ல கணவனைப் பெற்றெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது; இறைவனின் அருளால் நான் இப்போது கருவுற்றிருக்கிறேன்; ஆனால் இப்போது தோன்றும் இந்தக் கொடூரமான காட்சிகள், எனக்கு எதை உணர்த்த முயல்கின்றன? ||65||
தன் கேள்விகளுக்குத் தானே விடையளிக்க இயலாமல் தவித்த அவள், அத்ரி முனிவரின் தெய்வீகப் புதல்வனை (ஸ்ரீமத் தத்தாத்ரேயரை) நினைத்துப் போற்றத் தொடங்கினாள்; விடியற் காலையில் கண் விழித்து, காலைக் கடன்களை முடித்துத் தூய்மை பெற்றபின், அவள் சூரிய பகவானை நோக்கி இவ்வாறு பிரார்த்தித்தாள் ||66||
கருணைக் கடலே, சூரிய பகவானே, சூரியனே, கம்பீரமான கிரணங்களை உடையவரே, அச்சத்தைப் போக்குபவரே, பேரொளி தருபவரே,தேவர்களுள் சிறந்தவரே, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய முத்தொழில் தத்துவங்களையும் தன்னுள் அடக்கியவரே, உமக்கு என் வணக்கங்கள் ||67||
நேற்றிரவு நான் மிகக் கொடூரமான கனவுகளைக் கண்டேன்; அத்தகைய கனவுகள் மீண்டும் தோன்றாமல் மங்கலமான கனவுகளே எனக்கு தோன்றுமாறும் செய்வீராக; நான் பணிவுடன் உன்னை வணங்குகிறேன்; துன்புற்றிருக்கும் என் மனதிற்குச் சற்று ஆறுதல் கிடைக்கச் செய்வீராக ||68||
யோக இறைவனால் எனக்காக அனுப்பப்பட்ட கனி உண்மையாகவே பலனளிக்கட்டும்; இந்த பிரசவம் எந்தத் தடையுமின்றி நடைபெறட்டும்; எங்கள் வம்சம் வளர்ந்து செழிக்கட்டும் ||69||
அந்தக் கொடூரமான கனவுகளைக் கண்ட பிறகு, என் மனம் பயந்து விட்டது; அதனால் நான் உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்; நீதான் எங்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்||70||
நாங்கள் உயிர் வாழ உணவை அளிப்பவர் நீரே; உலகங்களையும் அதன் உயிரினங்களையும் தோற்றுவிப்பவரும் நீரே, நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் மன்றாடுகிறேன்’ இவ்வாறு சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்தபோது, அவள் உள்மன ஆற்றல்களைத் தூண்டும் நம்பிக்கையை பெற்றாள் ||71||
ஆயினும், இறைவன் ஏற்கனவே அவளைக் கவனித்துக் கொண்டு இருந்ததை அவளால் காண முடியவில்லை; அவளையும் அவள் குழந்தையையும் பாதுகாக்கும் தெய்வீக சக்கரத்தை அவளால் காண முடியவில்லை; அதை அசுரனால் மட்டுமே காண முடிந்தது என்பதினால்தான் அவன் தீங்கு விளைவிக்கும் கொடூரமான முயற்சியாக அந்த பயங்கரமான காட்சிகளை ராணிக்குக் காட்டினான் ||72||
அந்த அசுரன் சக்கரத்தை நோக்கும் போதெல்லாம், அது அவனை விழுங்கத் தயாராக இருப்பது போல் தோன்றியது; இது அவனை மேலும் அச்சுறுத்தியது; அவன் நினைத்தான்; நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன போலிருக்கிறது, இப்போது என்ன செய்வது?||73||
அந்த அசுரனிடம் பல்வேறு மாய சக்திகள் இருந்த போதிலும், அவனால் ராணியின் கருக் கலைப்பை நிகழ்த்த முடியவில்லை; தாயும் குழந்தையும் அத்ரி முனிவரின் தெய்வீக மகனால் பராமரிக்கப்பட்டனர்; அவர் அளித்த வரம் வீணாகி விடக் கூடாது அல்லவா||74||
அந்த அசுரன் கொடியவனாக இருந்த போதிலும், அவன் அங்கேயே தங்கி, உணவைத் தவிர்த்து, இரவும் பகலும் மறைந்திருந்து கவனிக்க முடிவு செய்தான்; ஆனால், தன் எதிரியைக் கொல்லக் கூடிய ஏதேனும் ஒரு தந்திரத்தைக் கண்டு பிடிக்கத் தயாராக இருந்தான் ||75||
உயர்ந்த முனிவர்களால் தேடப்படும் தெய்வமான ஸ்ரீமத் தத்தாத்ரேயர் ராணியையும் அவளுக்குள் இருக்கும் குழந்தையையும் பாதுகாக்க முடிவு செய்து விட்டபோது வேறு யாரால்தான் அவர்களுக்கு தீங்கு செய்ய முடியும்?||76||
உண்மையான பேரின்பத்தை தேடி அலைபவர்களுக்கு உதவும், எல்லாம் வல்ல அந்த இறைவனை, எவ்வளவு முயன்றாலும், யாரால் ஏமாற்ற முடியும் ; அப்படி முயற்சி செய்தால் அது எப்படி வெற்றி பெற முடியும்? அவர்கள் எந்தவொரு தெய்வீக உபதேசத்தையும் கேட்டதில்லையா?||77||
சிறிது காலம் முயன்று பார்த்தும், தமக்கு சாதகமான நாள் வரவில்லை என்பதை அறிந்து கொண்ட அந்த அரக்கனும், களைப்புற்று, தமது முயற்சியில் விதி தனக்குத் துணையாக இல்லை என்பதை அறிந்து கொண்டு தன் தலை நகருக்குத் திரும்பினான்; அதன் பிறகு அரசி எஞ்சிய மாதங்களை அமைதியுடன் கழித்தாள்; அவளது கருப்பையில் வளர்ந்து கொண்டிருந்த சிசு நாளுக்கு நாள் வளர்ச்சியைப் பெற்றது||78||
முன்னரே திட்டமிட்டிருந்தபடி, மந்திரம் ஓதி புனித சடங்குகளை செய்ய அந்தணர்களில் மேன்மையான அந்தணர்களை மன்னன் வரவழைத்தான்; அவர்கள் முறைப்படி ‘பும்சவன’* சடங்கையும், உரிய காலங்களில் ‘சீமந்த’ மற்றும் ‘அனவலோபன’** சடங்குகளையும் நிறைவேற்றினர்; மேலும், ‘விஷ்ணு-பலி’ எனும் சடங்கின் வாயிலாகத் திருமாலுக்கு மகிழ்ச்சியுடன் படையலிட்டு வழிபட்டனர்
{* (i) பும்ஸவனம் (Pumsavanam) என்பது இந்து தர்மத்தின்படி, கருவுற்ற 3 அல்லது 4-வது மாதத்தில், குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல குணத்துடனும் பிறக்க வேண்டி செய்யப்படும் சடங்காகும்
(ii)** இது கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் ஒரு தூய்மைப்படுத்தும் மற்றும் பாதுகாப்புச் சடங்காகும்; அனவலோபனம் என்பது கருச் சிதைவைத் தடுத்து கருவைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது; பும்ஸவனம் மற்றும் அனவலோபன சடங்குகள் பெரும்பாலும் ஒன்றாகவோ அல்லது அடுத்தடுத்தோ செய்யப்படுகின்றன. } ||79||
தங்கள் வம்சத்தைத் தொடர்ந்து வழி நடத்திச் செல்லக் கூடிய ஒரு நற்பண்புகள் நிறைந்த வாரிசு தனக்குக் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருந்த மன்னன், கற்றறிந்த அறிஞர்களுக்குத் தாராளமாகப் பரிசுகளை வழங்கினான்; தன்னை நாடி வந்து எதைக் கேட்டவர்களுக்கும், அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து உதவினான்; இவ்வாறு தன் குடிமக்களின் தேவைகளை, அவர்களுக்குரிய மரியாதையுடனும் தேவையான பொருட்களுடனும் பூர்த்தி செய்து அவர்களைத் திருப்திப்படுத்தினான் ||80||
இவ்வாறாகப் பத்து மாதங்கள் கழிந்தன; ஆனால் அரசிக்குக் குழந்தை பிறக்கவில்லை; பிரசவ வேதனையும் ஏற்படவில்லை; இதனால் கவலையுற்ற மன்னன் ‘என்ன தவறு நேர்ந்திருக்கக்கூடும்?; இளவரசனைப் பெற்றெடுக்க அவளால் ஏன் இயலவில்லை?’ என்று எண்ணித் திகைத்தான்||81||
ஏதேனும் ஒரு தடை அவளைப் பாதித்திருக்கக் கூடும் என்று கருதிய மன்னன், புனிதமான, சிறந்த அந்தணர்களை வரவழைத்தான்; அவர்கள் அரசி மீது புனித நீரைத் தெளித்ததுடன், அவளுக்கு அருந்துவதற்கும் அந்த நீரை அளித்தனர்; மேலும் மன்னனிடம் ‘விரைவிலேயே அரசி மகிழ்ச்சியுடன் உங்கள் வாரிசைப் பெற்றெடுப்பாள்’ என்று உறுதியளித்தனர்’ ||82||
தங்கள் மன்னன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அந்த அந்தணர்கள், விண்ணுலக மருத்துவர்களான ‘அஸ்வினி குமாரர்கள்’ எனும் தெய்வங்களை மனத்தில் தியானித்தனர்; பின்னர், சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தேவையான புனித மந்திரங்களை ஓதினர்; அந்த மந்திரங்களின் ஆற்றலை அரசிக்கு அளித்ததின் மூலம், தங்கள் நீதியாளனான மன்னனின் அச்சத்தைப் போக்கினர் ||83||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘வாசோ தா: ச்ருணுதம் தஸ்ரௌ சப்தாவத்ரிம் ச முஞ்சதம் | நாத்மானம் ரிஷிம் பீதம் தசமாஸ்யம் யதா-சுகம்’;
இதன் விளக்கம் என்ன என்றால் பத்து மாதங்கள் கருவில் வளர்ந்து, காற்றினால் அசைக்கப்படும் கடலைப் போல அசைந்து கொண்டிருக்கும் குழந்தையே! (அஸ்வினி தேவர்களே!) நன்கு முதிர்ச்சியடைந்த அந்தக் குழந்தையை, சப்தாவத்ரி என்ற முனிவரை விடுவித்தது போல, தாயின் கருப்பையிலிருந்து எந்தத் துன்பமும் இன்றி சுகமாக வெளியே வரச் செய்யுங்கள்’; இந்த மந்திரம் பிரசவம் தடையின்றி சுகமாக நடக்க வேண்டி அஸ்வினி தேவர்களிடம் செய்யப்படும் பிரார்த்தனையாகும். ||84||
அந்த மந்திரங்களின் உச்சாடனங்கள் நிறைவடைந்த மறு கணமே, அரசி மீது தெளிக்கப்பட்ட புனித நீரும், அவள் அருந்திய நீரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தின; அரசிக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டது; அதிக சிரமமின்றி, அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் ||85||
அக் குழந்தையின் ஒளிரும் நெற்றியை நோக்கியபோது, அனைத்துப் பேரொளிகளும் ஒன்று கூடி, ஒரு மனிதக் குழந்தையாக உருவெடுத்து வந்திருப்பதைப் போலவே தோன்றியது; அந்த குழந்தையைக் கண்டவர்கள் அனைவரும், ஒரு வியக்கத்தக்க உண்மையை மிகத் தெளிவாக உணர முடிந்தது||86||
அந்த குழந்தை இவ்வுலகில் பிரவேசிப்பதற்குரிய ஒரு நல்ல நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததை போலவே தோன்றியது; ஐந்து கோள்களும் தத்தம் உச்ச நிலையில் வீற்றிருந்தன; எந்த கோளும் நீச நிலையில் இருக்கவில்லை; ஜாதகக் கணக்கீடுகளின்படி அமையக் கூடிய அனைத்துப் புனிதமான யோகங்களும் அங்கே ஒருங்கே அமைந்திருந்தன||87||
சர்வ வல்லமை படைத்த இறைவனின் திருவருளால் நள்ளிரவு வேளையில் குழந்தை பிறந்தது; அந்த குழந்தையின் பேரொளிக்கு முன்னால், அங்கே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் ஒளி எவ்விதத்திலும் ஈடாகாது என்றே தோன்றியது; அரசவை முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது||88||
யோகக் கலையின் தலைவனான இறைவனின் திருவருளே,அந்த குழந்தையை அரசனின் வாரிசாகப் பிறக்க வைத்து இருந்தது; அந்த செய்தியைக் கேட்டறிந்த பேரரசு முழுவதும், மிகுந்த மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் திளைத்தது||89||
சூரியன் வானத்தை ஒளிரச் செய்வது போலவே, அக்குழந்தை இளவரசனும் இவ்வுலகத்தை ஒளிரச் செய்தான்; சூரியனும் அந்த குழந்தையும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்களாகவே தோன்றினர்; இந்நிலையில், அரசர் ஆயு விரைந்து அரசியாரின் அந்தப்புரத்திற்கு வந்து சேர்ந்தார்||90||
நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த அந்தக் குழந்தையை திடீரெனக் கண்டதும், மன்னர் அளவற்ற மகிழ்ச்சியால் நிரம்பி, இவ்வாறு கூறினார் ‘இப்போதுதான் நான் என் முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் செலுத்த வேண்டிய கடனிலிருந்து விடுபட்டேன்; இங்கு கூடியுள்ள நீங்கள் அனைவரும் இதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்||91||
குழந்தை பிறந்ததைக் கண்டு மன நிறைவுற்ற மன்னர், முறைப்படி நீராடினார்; பின்னர் மேன்மையான அந்தணர்களை வரவழைத்து, குழந்தைக்குச் செய்ய வேண்டிய ‘ஜாதகர்ம’ சடங்கை நிறைவு செய்தார் ||92||
அந்தணர்கள் சூழ, முன்னோர்களுக்கான நாந்தி-சிராத்த* சடங்கு இனிதே நிறைவேற்றப்பட்டது; ஒரு பொற் கிண்ணத்தில் சில துளிகள் தேனும் நெய்யும் கலக்கப்பட்டு, அக் குழந்தைக்குச் சுவைப்பதற்காக ஊட்டப்பட்டது.
{*நாந்தி சிராத்தம் என்பது இந்து மத வழிபாட்டில் திருமணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), மற்றும் சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னால், மறைந்த நம் முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசியைப் பெறுவதற்காகச் செய்யப்படும் ஒரு மங்களகரமான சடங்காகும். ‘நாந்தி’ என்றால் ‘மங்களம்’ அல்லது ‘தொடக்கக் கொண்டாட்டம்’ என்று பொருள்} ||93||
இளவரசரின் பிறப்பால் அத்தகைய ஈடு இணையற்ற நல்ல பயனை அடைந்த மன்னர், தன் கருவூலத்தின் வாயில்களைத் திறந்து, இவ்வாறு கூறினார் ‘ஓ அந்தணர்களே,உங்களுக்குத் தேவையான அளவு செல்வத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்று என் மனம் அடைந்திருக்கும் அதே மன நிறைவை நீங்களும் அடையுங்கள் ||94||
ஜோதிட சாஸ்திரத்தில் வல்லுநர்களான அறிஞர்கள் விரைந்து வந்தனர்; குழந்தையின் பிறந்த நேரத்தையும் கிரகங்களின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தங்கள் கணிப்புகளைச் செய்தனர்; தங்கள் பணி முடிந்ததும், அவர்கள் மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினர் ‘மன்னரே, நாங்கள் கூறுவதை சற்றே கவனமாகக் கேளுங்கள்
||95||
இந்த இளவரசரின் ஜாதகத்தில் அமைந்துள்ளதைப் போன்ற, மிகச் சிறப்பான கிரக நிலைகளை நாங்கள் இதற்கு முன் எங்கும் கண்டதில்லை; விண்ணுலகத்தையே வெல்லக் கூடிய ஆற்றல் இவருக்கு உண்டு என்பது இவரது ஜாதகக் கணிப்புகளிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது||96||
சந்திரன் தனது பதினாறு கலைகளுடனும் முழுமையாகப் பிரகாசிப்பது போல, இந்த இளவரசர் அறுபத்து நான்கு கலைகளையும்* கற்றுத் தேர்ந்திருப்பார். பதினான்கு **வகையான கல்வித் துறைகளிலும் இவர் வல்லமை பெற்றுப் புகழடைவார்; எங்கும் எதிலும் இவருடைய புகழ் பரவி நிற்கும்
{*அறுபத்து நான்கு கலைகள் (64 Arts) என்பவை பண்டைய இந்திய மற்றும் தமிழ் மரபில் ஒரு முழுமையான மனிதன் அறிந்திட வேண்டிய அறிவுத் திறன்கள் மற்றும் நுட்பக்கலைகளின் தொகுப்பாகும். இவை
(i)கவின் கலைகள் (Fine Arts),
(11) கம்மியக் கலைகள் (Crafts),
(iii)மற்றும் வாழ்க்கை திறன்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை கல்வி, பண்பாடு மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் கலைகளாகப் போற்றப்படுகின்றன
**பொதுவாக வகைப்படுத்தப்படும் 14 முக்கிய கல்வித் துறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
(i) முன்பருவக் கல்வி (Pre-Primary Education) (Pre-Primary Education)
(ii)தொடக்கக் கல்வி (Primary Education)
(iii)நடுநிலைக் கல்வி (Middle School Education)
(iv)உயர்நிலைக் கல்வி (Secondary Education):
(v)மேல்நிலைக் கல்வி (Higher Secondary Education)
(vi)உயர் கல்வி (Higher Education)
(vii)தொழில் நுட்பக் கல்வி (Technical Education)
(viii)மருத்துவக் கல்வி (Medical Education):
(ix)தொழிற் கல்வி (Vocational Education)
(x)ஆசிரியர் கல்வி (Teacher Education)
(xi)சிறப்புக் கல்வி (Special Education)
(xii)தொலைதூரக் கல்வி (Distance Education)
(xiii)இணைய வழிக் கல்வி (Online / Digital Education)
(xiv)ஆராய்ச்சி கல்வி (Research Education} ||97||
நீங்கள் முற்பிறவியில் செய்த நற்செயல்களின் பயனாகவே, இத்தகைய மகனைப் பெறும் பேறு உங்களுக்கு கிடைத்துள்ளது; இவர் ஒரு வலிமை மிக்க, பெரும் புகழ்பெற்ற போர் வீரராகத் திகழ்வார்; கொடை வழங்குவதில் தாராள குணம் கொண்டவராகவும், அறநெறி தவறாதவராகவும் விளங்குவார் ||98||
இவர் சான்றோர்களைப் பாதுகாப்பார்; தீயவர்களைத் தண்டிப்பார்; ஆயினும், தனது சிறு வயதிலேயே இவர் தன் பெற்றோர்களுக்குத் துயரத்தை விளைவிக்கும் ஒரு காரணமாகவும் அமைவார் ||99||
இவருடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு வேறு எவரும் இல்லை; இவருக்கு இணையாக நினைத்துப் பார்க்கக் கூடிய வேறு எந்த மன்னரும் இல்லை; ஜோதிடர்களின் அப்படிப்பட்ட கணிப்பைக் கேட்ட மன்னர், அவர்களுக்குப் பரிசாக ஒரு முழு கிராமத்தையே வழங்கினார்||100||
அக்குழந்தை விரைவில் துயரத்தை விளைவிக்கக் கூடும் என்று கேள்விப்பட்டதால், அரசர் மன நிறைவு கொண்டிருந்த போதிலும், ‘இனி நமக்குத் துயரத்தை ஏற்படுத்தக் கூடிய காரணம் வேறு என்னவாக இருக்கக் கூடும்?’ என்று எண்ணி கவலையில் ஆழ்ந்தார் ||101||
தனது நிலையற்ற தன்மையை உணர்ந்த அரசர், மீண்டும் புனிதமான அந்தணர்களுக்கு அழைப்பு விடுத்து இவ்வாறு கூறினார் ‘நீங்கள் தர்ம நெறி சார்ந்த மந்திர பாராயணங்களிலும், யாகங்களிலும் ஈடுபடுங்கள்; அதன் மூலம் வரவிருக்கும் துயரத்தை நாம் வென்று விட முடியும் ||102||
எனது குறைகள் அனைத்தையும் பொருட்படுத்தாது மன்னித்து ஏற்றுக் கொண்டவரும், எனக்கு இந்த வாரிசை அருளியவரும், அத்ரி முனிவரின் திவ்ய புதல்வரான அந்தப் பரம்பொருள், எனது துயரத்தைப் போக்கிட எனக்குத் துணை நிற்கட்டும்||103||
நான் சுமக்கும் சுமைகள் அனைத்தையும் அவரது திருவடிகளிலேயே சமர்ப்பித்து இளைப்பாறுகிறேன்; சாட்சாத் ஸ்ரீமத் தத்த பகவானே எனக்கு அருள் பாலித்துள்ளார்; அவர் அளித்த வரங்களின் முழுமையான பலனை அவரே எனக்குப் பெற்றுத் தரட்டும்||104||
என்னால் இயன்ற அளவு முழுமையான பக்தியுடன் அவரது திருவடிகளைப் பற்றிக் கொண்டிருக்கிறேன்;’ இவ்வாறு மீண்டும் மீண்டும் பிரார்த்தித்தவாறே அவர் சிந்தித்தார்; இனி நான் அவரிடம் கேட்பதற்கு வேறு என்னதான் இருக்கிறது? ||105||
*ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸந்நிவிஷ்ட’ அதாவது நான் அனைத்து உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கிறேன்; இதுவே அவரது தெளிவாக அறிவிக்கப்பட்ட சத்திய வாக்கு ஆகும்; அவர் எல்லாம் அறிந்தவர்; அனைத்தையும், அனைவரையும் உள்ளிருந்தும் வெளியிருந்தும் அறிபவர் அவரே; அனைத்துத் துயரங்களையும் நீக்கி அருள்பவர் அவரே ஆவர்||106||
ஒரு பச்சிளங் குழந்தை, தனக்கு ஏதேனும் ஒரு நிவாரணம் வேண்டி எப்போதும் அழுது கொண்டே தன் தாயை நாடிச் செல்வதை நாம் காண்பதில்லையா? அதேபோல, தன் குழந்தையிடம் அளவற்ற அன்பு கொண்ட அந்த தாய், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மிகுந்த வாஞ்சையுடன் குழந்தையைத் தேற்றி ஆறுதல் அளிப்பதும் உண்மையல்லவா? ||107||
அவ்வாறே, பக்தர்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்று புகழ் பெற்ற எங்கள் இறைவனை நோக்கி, பக்தர்களாகிய நாங்கள் அனைவரும் உரக்கக் கூவி அழைக்கிறோம் ‘இறைவா, நீர் அளித்த வாக்குறுதிகளின்படியே தொடர்ந்து அருள் பாலிக்க வேண்டும்’ என்று அச்சம் கொண்ட அந்த அரசர் மனதார வேண்டிக் கொண்டார்||108||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் நாற்பதாவது (40) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 108
முதலாவது அத்தியாயம் முதல் நாற்பதாவது (40) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
108 + 4214 = 4322
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -11, அத்தியாயம் 39 முடிவடைந்தது
அத்தியாயம் 40 தொடர்கின்றது