COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

பகுதி 9
ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் போதனைகள்
அத்தியாயம் 28
மதாலஸா – ரிதுத்வஜன் மறுமணம்; மகன் பிறந்தான்
|| ஸ்ரீமத் கணேஷ தத்த குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் தத்த ரங்கஹா பிரசன்னோஸ்து || || பரஸ்பார்தேவோ பவ || || ஸ்ரீமத் கணேஷாயே நமஹா || || ஸ்ரீமத் சரஸ்வத்யாய் நமஹா || ஸ்ரீமத் குருப்யோ நமஹா || || ஸ்ரீமத் சீதா-ராமச்சந்திரே நமஹா || || ஸ்ரீமத் குரு-தத்தாத்ரேய: பிரசன்னோஸ்து || || ஸ்ரீமத் தத்த சமர்த்த ||
குரு வேத தர்மா தன் சீடன் தீபக்கிற்கு தொடர்ந்து கூறினார் ‘இவ்விதம், கணவனிடம் மிக்க அன்பு கொண்டவளான மதாலஸா மீண்டும் உயிர் பெற்றாள்; அவளைத் தெய்வ நாகங்கள் பேணிப் பாதுகாத்தன; பின்னர், அந்த நாகங்களின் தலைவனான மன்னர் அஸ்வத்தர், தன் மகன்களிடம் ‘உங்கள் நண்பனும் இளவரசனுமான ரிதுத்வஜனை நமது பாதாள உலகிற்கு அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்||1||
நீங்கள் உங்கள் நண்பனை தந்திரமாக நம் இல்லத்திற்கு வருகை தருமாறு அழையுங்கள்; மதாலஸா ஏற்கனவே இங்கு அவனுக்காக காத்திருக்கிறாள் என்றோ, அல்லது நாம் செய்த காரியங்கள் குறித்தோ அவனிடம் எதுவும் சொல்லி விடாதீர்கள் ||2||
அவள் உண்மையில் அவனைப் பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள்; அவள் மிகுந்த பக்தி சிரத்தையுடையவள்; அவளிடத்தில் துளியும் கள்ளமோ வஞ்சகமோ இல்லை; மேலும், இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு இதுவே மிகவும் பொருத்தமான காலமாகும்; என்று கூறி அனுப்பினார் ||3||
அதன் பின்னர், அந்த இரண்டு நாக இளவரசர்களும் யார்க்கும் தம்மை அடையாளம் கண்டு கொள்ளாமலிருக்க துறவிகள் போல வேடம் பூண்டு கொண்டு, இளவரசன் ரிதுத்வஜனிடம் சென்று கூறினார்கள் ‘எங்கள் தந்தை உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; தயவுசெய்து அவரைச் சந்திக்க தயக்கம் இன்றி எங்களுடன் வாருங்கள் || 4||
நாங்கள் உங்களுடனேயே இருப்போம்; உங்களை எங்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்வோம்; அங்கு எங்கள் தந்தையை நேரில் சந்திப்போம்; அதன் பின்னர், உங்களை மீண்டும் இங்கேயே பத்திரமாகத் திரும்ப அழைத்து வந்து சேர்ப்போம்; இது குறித்து உங்கள் மனதில் எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம் ||5||
தன் நண்பர்களின் அத்தகைய வேண்டுகோள்களைக் கேட்ட இளவரசன், எவ்விதத் தயக்கமுமின்றி அந்த யோசனையை ஏற்றுக் கொண்டான்; மிகுந்த அன்புடனும் மனமுவந்து எவருக்கும் தெரியாமல் அவர்களுடன்வெளிப்புற ப்பட்டுச் சென்றான் ||6||
இளவரசன் ரிதுத்வஜன் இவ்வாறு கூறினான் ‘சூழ்நிலைகள் எத்தகையதாக இருப்பினும், நம்மிடையே உள்ள அந்த மென்மையான, உண்மையான நட்புப் பிணைப்பு ஒருபோதும் அறுந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; நான் நிச்சயமாக உங்களுடன் வருவேன்; உங்கள் இல்லத்திற்கும், உங்கள் பெற்றோரைப் பார்க்கவும் வருவேன்; என் சார்பாகவும், நமது ராஜ்யத்தின் சார்பாகவும் அவர்களுக்குரிய மரியாதையைச் செலுத்துவேன் ||7||
சமஸ்கிருதச் செய்யுள்: ”ததாதி ப்ரதிக்ருஹ்ணாதி குஹ்யமாக்யாதி ப்ருச்சதி |
புங்க்தே போஜயதே சைவ ஷட்விதாம் ப்ரீதிலக்ஷணம்||”
இந்த செய்யுளின் அர்த்தம் என்ன என்றால் ‘ஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதும், அவரிடமிருந்து பெற்றுக் கொள்வதும்; தன் மனதின் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதும், மற்றவர் கூறும் ரகசியங்களைக் கேட்டுப் பாதுகாப்பதும்; தான் உண்பதோடு மற்றவர்க்கும் உணவளிப்பது ஆகிய இந்த ஆறு செயல்களும் ஒருவருக்கொருவர் இடையே உள்ள அன்பையும், உறவின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன’ ||8||
நட்பின் இந்த உயரிய பண்பை மனதில் கொண்டே, இன்று நான் உங்களோடு வர ஒப்புக் கொண்டேன்; இவ்வாறு தமது மனதை வெளிப்படுத்திய பின்னர் அவர்கள் அனைவரும் மன்னர் அஸ்வத்தர் அழைப்பின் பேரில் பயணத்தைத் தொடர்ந்தனர் ||9||
கோமதி நதிக்கரையை அடைந்ததும், அந்த நாக இளவரசர்கள் இருவரும் ரிதுத்வஜனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு, நதி நீருக்குள் இறங்கத் தொடங்கினர்; அந்த ஒரு கணத்தில், ரிதுத்வஜன் தன் மனதிற்குள் ஒரு விதத் திகைப்புக்கு ஆளானான் ||10||
எனவே, அவர்களைப் பற்றித் தான் முன்பு கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்று அவன் கருதினான்; மனதில் எழுந்த அத்தகைய சந்தேகங்களுடன், அவன் தன் நண்பர்களிடம் ‘தயவு செய்து இந்த முழு நிகழ்வின் பின்னணியில் உள்ள உண்மையை எனக்கு எடுத்துரையுங்கள்’ என்று வேண்டிக் கொண்டான் ||11||
அதைக் கேட்ட அந்தச் சகோதரர்கள் புன்னகைத்தவாறே ‘எங்கள் தந்தையாரின் பெயர் அஸ்வத்தர்; அவருடைய நண்பர் கம்பலர்; இவர்கள் இருவரும் பாதாள லோகத்தில் வசித்து வருகின்றனர்; அவர்கள் மிக்க தெய்வ பக்தி கொண்டவர்கள்; குறிப்பாக, எங்கள் தந்தை யோக மார்க்கத்தில் சிறந்த வல்லமை பெற்றவர்’ ||12||
மேலும் தொடர்ந்தார்கள் ‘நாங்கள் அவருடைய புதல்வர்கள்; நாங்கள் உங்களை எங்கள் பாதாள லோக இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறோம்; எங்களுடன் வருவதைக் குறித்து நீங்கள் சிறிதும் அஞ்சத் தேவையில்லை; அங்கே நீங்கள் எங்கள் வீரமிக்க தந்தையாரைச் சந்திக்கும் நற் பேற்றைப் பெறுவீர்கள்’ ||13||
ரிதுத்வஜனின் சந்தேகங்களை தெளிவுபடுத்திய பிறகு, தங்கள் யோக சக்தியின் மகிமையால், அவனை அவர்கள் நீருக்கடியில் இருந்த தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்; அவர்களது தந்தையாரின் விருப்பத்தின்படியே, அவர்கள் ரிதுத்வஜனுக்கும் அவர்களது தந்தையாருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்தனர் ||14||
அந்தப் பாதாள லோகத்தின் கட்டிடக் கலைச் சிறப்பைக் கண்ணுற்றதும், தான் அழைத்து வரப் பட்டிருந்த அந்த அற்புதமான மாளிகையை கண்டு வியந்து நின்றான்; தன் நண்பர்களின் தந்தையாரைச் சந்தித்ததும், அந்த இளவரசன் ரிதுத்வஜன் ‘நான் இப்போது சொர்க்க லோகத்தில்தான் இருக்கிறேனா?’ என்று வியப்புடன் வினவினான்||15||
தங்கள் நண்பரான அந்த இளவரசன் தங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்து, அவரை சந்திப்பதற்காக காத்திருப்பதாக மன்னர் அஸ்வத்தரிடம் அவருடைய புதல்வர்கள் தெரிவித்தனர்; அதைக் கேட்ட மன்னர் அஸ்வத்தர், ரிதுத்வஜனை இன்முகத்துடன் வரவேற்று ‘என் நீண்ட நாள் விருப்பத்தை நீ இன்று நிறைவேற்றி விட்டாய்’ என்று கூறினார் ||16||
அவனை பாசமிகு பெற்றோரைப் போலவே தழுவிக் கொண்டும் அவன் நெற்றியில் முத்தமிட்டும், அவனை வாழ்த்திய பிறகு அவர் கூறினார் ‘நீ நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வாயாக’ ||17||
அதற்கு அந்த இளவரசன் மிகுந்த மரியாதையுடன் பதிலளித்தான் ‘இன்று, இந்த ஒப்பற்ற, மிகச் சிறந்த மற்றும் மங்களகரமான இடத்தைக் காணும் பேறு எனக்குக் கிடைத்தது; இந்த நொடியில் நான் உணரும் நன்றியுணர்வை வெளிப்படுத்த என்னிடம் சொற்களே இல்லை||18||
நட்பின் வாயிலாகவே என்னால் இந்த பாதாள உலகப் பகுதிகளுக்கு வருகை தர முடிந்தது; உங்களைச் சந்தித்ததன் மூலம், நான் இரு மடங்கு ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்||18||
எங்கு தோண்ட வேண்டும் என்று அறிந்தால், மறைந்திருக்கும் புதையலை கண்டறிய முடியும் என்பார்கள்; அதை போலவேதான் நானும் இப்போது இங்கு வந்ததில் முழுமை பெற்றவனாக உணர்கிறேன்; இதற்கு மேல் நான் வேறு என்ன சொல்ல முடியும்?||19||
நாக மன்னன் அஸ்வத்தர் ( Atwater) பதிலளித்தார் ‘உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே என் இதயப் பூர்வமான விருப்பமாக இருந்தது; உண்மையில், நான் இந்த நாளுக்காகவே ஆவலுடன் காத்திருந்தேன்; இப்போது உங்களை நான் நேரடியாக பார்த்து விட்டதினால் என் மனம் அமைதி அடைந்துள்ளது||21||
என் மகன்கள் என் முன்னிலையில் உங்களைப் பற்றி விவரித்த அனைத்து நற்பண்புகளும் முற்றிலும் உண்மையே; நீங்கள் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்கிற மனப்பான்மை கொண்டவராக உள்ளீர்கள் ||22||
நீங்கள் என்ன வரம் கேட்க விரும்பினாலும், அதை நான் உடனடியாக உங்களுக்கு அருளுவேன்’ என்று கூறினார்; அதற்குப் பதிலாக அந்த இளவரசன், ‘நான் கேட்பதெல்லாம், எங்கள் அனைவர் மீதும் உங்கள் கருணைப் பார்வை பட வேண்டும் என்பது மட்டுமே’ என்று கூறினான் ||23||
உங்கள் அருளாலேயே எங்கள் ராஜ்யத்தில் எதற்கும் குறைவில்லை; என் மனம் எப்போதும் தர்மத்தின் வழியில் உறுதியாக இருக்கட்டும்; என் தந்தைக்கு நான் கடமையுணர்வுடன் சேவை செய்ய வல்லவனாக இருக்க வேண்டும் ||24||
மன்னர் பதிலளித்தார் ‘நீங்கள் உண்மையில் நீதி நெறி தவறாதவர்; உங்கள் பெற்றோரிடம் மிகுந்த பக்தி கொண்ட மகன்; சமூகத்தில் நற்பெயர் பெற்றவர்; இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் பெரிய அளவிலான நன்மைகளை அடைவீர்கள் ||25||
நீங்கள் எதை மிகவும் இழப்பதாக உணர்கிறீர்களோ, அதை இந்த கணமே என்னிடம் கேளுங்கள்’ என்று மன்னர் கூறினார். அதற்குப் பதிலளிக்க முடியாமல், எதைக் கேட்பது என்று தெரியாமல் கூச்சமுற்று நின்று இருந்த அந்த இளவரசன், அமைதியாகத் தன் நண்பனின் முகத்தை நோக்கினான் ||26||
அப்போது அந்த நண்பர்கள் தங்கள் தந்தையிடம், ‘இளவரசரின் மனைவி மதாலஸா (Madalas) அருகில் இல்லாததால், அவர் மனம் அமைதி இழந்திருக்கிறது; இரவும் பகலும் அவர் மிகவும் விரும்புவது அவளைத்தான்; இதைத் தவிர வேறு எதை அவர் உங்களிடம் கேட்க முடியும்?’ என்று கூறினார்கள் ||27||
நாக மன்னர் பதிலளித்தார் ‘அவள் உங்களுக்காகத் தன் உடலைத் தியாகம் செய்து புனிதத் தீயில் மறைந்து விட்டாள்; ஆயினும், நீங்கள் அவளைக் காண விரும்பினால், அவளைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு மாய உருவத்தை என்னால் உருவாக்க முடியும்; அந்த உருவத்தை இந்த கணமே உங்களுக்குக் காட்டவும் முடியும்||28||
ரிதுத்வஜனுக்கு இவ்வாறு அறிவுரை கூறிய பிறகு, அவர் சென்று மதாலஸாவை அழைத்து வந்தார்; ரிதுத்வஜன் அவளைத் தொலைவிலிருந்தே பார்க்குமாறு கூறினார்; மதாலஸாவை கண்ட இளவரசன் திகைத்துப் போய், ஒரு கணம் தான் இருக்கும் இடத்தையே மறந்து விட்டான்||29||
அவன் ‘ஓ என் அன்பிற்குரிய மதாலஸாவே’ என்று உரக்கக் கூவியவாறு, அவளை நோக்கி ஓடினான். ஆனால் நாகராஜன் அவனைத் தடுத்து நிறுத்திய பின்னர் அமைதியான குரலில் ‘அந்தத் தவறைச் செய்யாதே’ என்று கூறினார் ||30||
நான் இப்போதுதான் எனது மாய சக்தியைப் பயன்படுத்தி, உன் மனைவியின் உருவச் சிலையை உருவாக்கியுள்ளேன்; அதை தொலைவிலிருந்தே காண வேண்டும்; நீ அவளைத் தொட்டால், அந்த உருவம் மறைந்து விடும் ||31||
நீ தெளிவான மன நிலை கொண்டவன் ஆயிற்றே; நீ எவ்வாறு மாயையின் வலையில் சிக்கிக் கொள்ளலாம்? மாயை என்பது நிலையற்றது என்பதையும், அடுத்த கணமே அது நம் கண்முன் இருந்து மறைந்து விடும் என்பதையும் நீ நன்கு அறிவாயே ||32||
நாகராஜன் இவ்வாறு அறிவுரை கூறிய போதிலும், இளவரசனின் மனம் அமைதியடையவில்லை; அவன் மிகுந்த ஏக்கத்துடன் ‘என் மனைவியின் கையைப் பற்றிக் கொள்ள என்னை அனுமதியுங்கள்; வீணாகத் தடைகளை ஏற்படுத்தாதீர்கள்’ என்று கெஞ்சினான் ||33||
அதன் பிறகு ‘ஓ மதாலஸாவே என்று ஏக்கத்துடன் அழைத்தவாறே, அவன் மயங்கித் தரையில் விழுந்தான்; உடனே நாகராஜன் அவனைத் தூக்கி நிறுத்தி ‘உன் மனதின் கடிவாளத்தை உன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்’ என்று கூறினார் ||34||
சிவபெருமானின் திருவருளாலேயே, உன் மதாலஸாவை உனக்குக் காட்டும் பேறு எனக்குக் கிடைத்தது’ என்று கூறிய நாகராஜன், மீண்டும் அந்த இளவரசன் தன் மனைவியைக் காண அனுமதித்தார்; இம்முறை அவர் ‘நீங்கள் இருவரும் இன்புற்று வாழ்வீர்களாக’ என்று வாழ்த்தினார் ||35||
அதன் பின்னர், நடந்த அனைத்தையும் இளவரசனுக்கு விரிவாக விளக்கிக் கூறிய நாகராஜன், சாஸ்திர முறைப்படி மீண்டும் மதாலஸாவை ரிதுத்வஜனுக்குத் திருமணம் செய்து வைத்தார்; மேலும், அந்தத் தம்பதியினருக்குப் பொன்னான ஆபரணங்களையும் விலையுயர்ந்த ஆடைகளையும் பரிசளித்து, தன் அரச விருந்தினருக்குத் தான் அளிக்க வேண்டிய மரியாதைக்குரிய உபசரிப்பை முழுமையாகச் செய்து முடித்தார்||36||
இப்பணியை நிறைவேற்றுவதில் அன்னை சரஸ்வதி தேவி எங்களுக்குத் துணை நின்றார்; சிவபெருமானும் அதற்குரிய வரத்தை அருளினார்; என் புதல்வர்கள் மூலம் உன் துயர நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டதும், உனக்கு உதவ நாங்கள் முடிவெடுத்தோம்; இவ்வாறுதான் நாங்கள் இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்’ என்று நாகராஜன் கூறினார் ||37||
அந்த விரிவான நிகழ்வுகளும் சடங்குகளும் முடிந்த பிறகு, பேருள்ளம் கொண்ட அந்த நாக நண்பர்கள், அந்தப் புதுமணத் தம்பதியினரை மேலும் சில நாட்களுக்குத் தங்கள் விருந்தினர்களாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு அவர்களை நன்கு உபசரித்தார்கள்; பின்னர், அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்; அவர்களுக்கு அதன் மூலம் கிடைத்த புண்ணியத்தைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை ||38||
போகும் முன் இளவரசர் பதிலளித்தார் நீங்கள் எனக்குச் செய்த பேருதவியின் மகத்துவம் எத்தனை பெரிதென்றால், இந்தச் சிறந்த கடனை என்னால் எவ்விதத்திலும் ஈடுசெய்ய இயலாது; இத்தகைய கடனுணர்வை எவன் ஒருவன் மறக்கிறானோ, அவன் உண்மையில் நன்றி கெட்டவனாவான்||39||
சமஸ்கிருதச் செய்யுள்: ‘ஸ்வல்பமப்யுபகாரம் யோ ந வேத்தி மனுஜாத்ம:, கிருதக்ன: ஸ து விஜ்ஞேயோ பிரம்மக்னாத் அதிர்யச்சதே’
இதன் பொருள் என்ன என்றால் ‘எவன் ஒருவன் தனக்குச் செய்யப்பட்ட மிகச் சிறிய உதவியைக் கூட மதிக்காமல், அதை மறந்து விடுகிறானோ, அந்த மனிதன் நன்றி கெட்டவன் என்று அறியப்படுகிறான்; அத்தகையவன் பிரம்மஹத்தி தோஷத்தை பெற்று இருந்தவனை விட மேலான பாவியாகக் கருதப்படுகிறான்’ ||40||
அதன்பின், அவர்களிடம் மரியாதையுடன் விடை பெற்றுக் கொண்டு, இளவரசர் தன் மனைவி மதாலஸாவுடன் இணைந்து அங்கு அளிக்கப்பட்ட அமுதத்தை அருந்தினார்; அவர்கள் இருவரும் நாகராஜனை வணங்கி விட்டு, விவரிக்க இயலாத மன நிறைவுடன் அந்த அற்புதமான இருப்பிடத்தை விட்டுப்வெளிப்புற ப்பட்டனர் ||41||
மீண்டும் தன் இரு நண்பர்கள் மற்றும் மனைவியுடன் இளவரசர் ரிதுத்வஜன் அவரது ராஜ்யத்தின் எல்லைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்; அங்கிருந்து அவர் அனைவரையும் தன் தந்தையின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அங்கு கூடியிருந்தோர் அனைவருக்கும் அந்த நாகராஜன் செய்த உதவியைப் பற்றிய வியக்கத்தக்க நிகழ்வுகளை விவரித்துக் கூறினார் ||42||
மன்னர் சத்ருஜித் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தார்; அவர் வந்திருந்த அனைவரையும், போற்றி மதிக்கப்படும் விருந்தினர்களுக்குரிய முறைப்படி வரவேற்றார்; தன் மகனின் நண்பர்களைத் தழுவிக் கொண்டு ‘இன்றுதான் என் உண்மையான மகன் இல்லம் திரும்பியுள்ளான்’ என்று கூறினார் ||43||
மதாலஸா உயிரோடு அங்கே வந்ததை கண்டு அனைவரும் மெய் சிலிர்த்துப் போனார்கள்; அவளும் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தன் கண்ணோட்டத்தில் விவரித்துக் கூறி, அனைவரின் சந்தேகங்களையும் விலக்கினாள் ||44||
அவள் அதே வயதுடனும் அதே அழகுடனும் விளங்கினாள்; அதே இயல்புடனும் அதே குரலுடனும் பேசினால்; அவர்கள் அறிந்திருந்த மதாலஸாவின் அச்சு அசல் நகலாகவே அவள் தோன்றினாள்; இதுவே அவர்கள் அனைவரையும் மேலும் வியப்பில் ஆழ்த்தியது’ என்று தீபக்கிடம் குரு வேத தர்மா கூறினார் ||45||
வேத தர்மா மேலும் கூறலானார் ‘மன்னர் வினவினார் அவள் உயிருடன் இருப்பது எப்படிச் சாத்தியம்? அவள் சிதையில் புகுந்து விட்டாள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே; நீங்கள் அவளை எப்படிக் கண்டு பிடித்து இங்கே அழைத்து வந்தீர்கள்?; இது ஏதேனும் மாயையின் தோற்றம்தானா? ||46||
மன்னர் மீண்டும் அதுவரை நடந்திருந்த அனைத்தையும் விவரமாகக் கேட்டறிந்தார்; தன் அன்புக்குரியவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போன அவர், கண்களில் பெருகி வழிந்து ஓடிய நீருடன் தன் மகனைத் தழுவிக் கொண்டார்; உணர்ச்சிப் பெருக்கால் அவர் குரல் தழுதழுத்தது ||47||
அவர் கூறினார் ‘மகனே, உனக்கு என் பாராட்டுக்கள்; உனது அளவற்ற நல்வினையின் பயனே இந்த அற்புதத்தை நிகழ்த்தியுள்ளது; இவ்வுலகில் நீயே பெரும் புகழுடன் போற்றப்படுவாய்; உன்னோடு ஒப்பிட்டுப் பேச, ஈடு இணையற்ற வேறொருவரை என்னால் காணவே முடியவில்லை ||48||
நீ ஒரு தேவதையின் மகளை மணந்தாய்; விதி அவளை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றது. ஆனால் இப்போது நாம் மீண்டும் அவளுடன் இணைந்திருக்கிறோம்; இதன் மூலம் நாம் நிச்சயமாகப் பெரும் புகழை அடைவோம் ||49||
அப்போது குடிமக்கள் அனைவரும் மன்னருக்கு மரியாதை செலுத்த வந்தனர்; ஒவ்வொருவரும் மதாலஸாவை நேரில் கண்டு மகிழ்ந்தனர்; அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்து, இறைவனின் கருணை கண்டு வியந்து ராஜகுமாரரை மனதார மனதார வாழ்த்தினார்கள் ||50||
அவர்கள் தங்கள் ராஜ்ஜியம் முழுவதையும் அலங்கரித்தனர்; எங்கும் தர்மத்தின் அடையாளமாகத் திகழும் கொடிகளை ஏற்றினர்; தெருக்கள் தோறும் சந்தன நீரைத் தெளித்து, எங்கும் ஒரு விழாக் கோலத்தை உருவாக்கினர் ||51||
முரசுகளும் பிற இசைக் கருவிகளும் முழங்கின; இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் மீது நெற்பொறி வீசி விளையாடினர்; சிலர், மீண்டும் இணைந்த அந்தப் மேன்மையான தம்பதியினர் மீது மலர்களைத் தூவி வாழ்த்தினர் ||52||
நகரம் முழுவதும் இத்தகைய கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்க, இளவரசன் தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தார்; குடிமக்கள் அனைவரும் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவரும், எங்கும் நிலவிய மகிழ்ச்சிப் பெருக்கில் தன்னை மறந்து மகிழ்ந்தார் ||53||
அரண்மனைக்கு திரும்பி மீண்டும் தன் தந்தையை வணங்கி மரியாதை செலுத்தினான்; தன் நண்பர்கள் எவ்வாறு தங்களை அனைவரும் கடன்பட்டவர்களாக ஆக்கினார்கள் என்பதையும், அவர்களின் தாராள குணம் எந்த அளவில் இணையற்றதாகத் திகழ்ந்தது என்பதையும், அவர்கள் மீது தனக்கு எத்துணை அன்பும் நன்றியும் பெருகி நிற்கின்றன என்பதையும் ஆழ்ந்த பாசத்துடன் எடுத்துரைத்தான்||54||
அவன் காட்டில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த வேளையில், அந்த நாக இளவரசர்கள் அவனுடன் நட்பு பூண்டு இருந்தார்கள்; அவன் சிக்கிக் கொண்டிருந்த இக்கட்டான சூழலைக் கண்டு அவர்கள் அவன் பால் பரிவு கொண்டனர்; மேலும், அச் சூழலை மாற்றியமைக்க அவர்கள் மேற் கொண்ட செயல், காண்போர் அனைவருக்கும் தெளிவாகப் புலப்படும் வகையில் அமைந்திருந்தது ||55||
அவர்களின் தந்தையான நாக அரசன் அஸ்வத்தாரே, இமயமலைக்குச் சென்று தன் நண்பரான கம்பலனுடன் இணைந்து கடுந் தவம் புரிந்தார்; அவர்கள் அன்னை சரஸ்வதி தேவியையும், சிவபெருமானையும் மகிழ்வித்து, முன்னொரு காலத்தில் வரமாக அருளப்பட்டிருந்த மதாலஸாவை தங்களுக்கு மகளாக வேண்டிப் பெற்றனர் ||56||
அந்தத் தெய்வீக வரங்களின் விளைவாகவே மதாலஸா இன்று நம் அனைவர் மத்தியிலும் வீற்றிருக்கிறாள்; அனைத்தையும் முன்னின்று ஏற்பாடு செய்த அந்த நாக அரசனே, அவளை மீண்டும் எனக்குத் திருமணம் செய்து வைத்தார்; இச்செயல்பாடுகள் அனைத்திலும் அவர் ஆழ்ந்த பணிவுடனும், மிகுந்த மதிப்புடனும் கூடிய விருந்தோம்பலை தொடர்ந்து கடைப் பிடித்து வந்தார்’ என்ற செய்திகள் அனைத்தையும் ரிதுத்வஜன் கூறினான் ||57||
மெய் சிலிர்க்க வைத்த அவை அனைத்தையும் விரிவாகக் கேட்டறிந்த மன்னன் சத்ருஜித், உள்ளம் களித்து உண்மையான மகிழ்ச்சி அடைந்தான்; அந்த மூன்று நண்பர்களுக்கிடையே நிலவிய உணர்வுப் பூர்வமான நேர்மை கண்டு அவன் அடைந்த வியப்பு எத்துணை பெரிதென்றால், அவனது இதயம் அளவற்ற மன நிறைவாலும் ஆனந்தப் பெருக்காலும் நிரம்பி வழிந்தது’ என்று குரு வேததர்மர் கூறினார் ||58||
முற்காலத்தில், விண்ணு லோக தேவர்களின் காவலரான பிரஜாபதி தட்சனின் மகளாகப் பிறந்த சதி தேவி, சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டாள்; தன் தந்தையின் யாகத்தில் தன் உயிரைத் துறந்த அவளே, மீண்டும் இமயமலையின் இல்லத்தில் பார்வதி தேவியாக அவதரித்தாள் ||59||
அதன்பின், தன் தெய்வ கணவனை மீண்டும் அடைவதற்காகக் கடுந் தவம் புரிந்து, மீண்டும் சிவபெருமானை மிகுந்த ஆடம்பரத்துடனும் கொண்டாட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டாள்; அதே போன்று, மதாலஸாவும் மீண்டும் இளவரசன் ரிதுத்வஜனை திருமணம் செய்துகொண்டாள் ||60||
எங்கள் குலத்தை உயர்த்தியது அவளது தவமே ஆகும்; அவளது நற் பண்புகளின் செழுமையை உற்று நோக்கும்போது, புனித கங்கை நதியின் தூய்மையும் பக்திப் பண்பும் ஒருவருக்கு நினைவுக்கு வரும்||61||
மன்னன் சத்ருஜித் தன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை அப்படியாகவே வெளிப்படுத்தினான்; அகமும்வெளிப்புற மும் மகிழ்ந்தவன் ‘இப்போது நான் முதுமையடைந்து விட்டேன்; இனிமேலும் இந்த நாட்டை ஆளும் தகுதி எனக்கு இல்லை என்று எண்ணலானான் ||62||
எனவே அவன் தன் மகனை அழைத்து, ‘நீ எங்களுக்குப் பணிவும் நற்பண்புகளும் நிறைந்த, மிகவும் பிரியமான மகன் ஆவாய்; இப்போது நீ இந்த இராச்சியத்தில் தர்மம் தவறாத மன்னனாக முடி சூட்டிக் கொள்; நாங்கள் இனி காடு சென்று தவ வாழ்வை மேற் கொள்வோம்’ என்று கூறினான் ||63||
வீரர்களான ஷத்ரிய குலத்தாரின் மரபு அதுவே ஆகும்; தங்கள் கர்ம வினைகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளும் ஒரு படியாகும்; அது முக்தியை அடையும் நோக்கத்தோடு செய்யப்படுவதாகும்; அப்படியிருக்க, இத்தகைய உயரிய கடமையை நிறைவேற்றுவதில் ஏன் தாமதம் செய்ய வேண்டும் ? ||64||
மன்னன் சத்ருஜித், தனது மகன் ரிதுத்வஜனிடம் அவை அனைத்தையும் கூறிய பின்னர், முடிசூட்டு விழாவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான்; அதன்படியே முடிசூட்டு விழா சிறப்பாக நடைபெற்றது; அது புதிய மன்னனின் பாசமிகு பெற்றோர்களின் முன்னாள் மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் மிகுந்த மன நிறைவை அளித்தது ||65||
அதன்பின்னர், முதுமையடைந்த அந்த மன்னன் காடு சென்று, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட தவ முறைகளை மேற் கொண்டான்; விரைவில் அவன் தான் தேடிய ஆன்மீக ஞானத்தைப் பெற்றான்; இறுதியில், பேரின்பம் நிறைந்த நிர்வாண நிலையை அடைந்தான் ||66||
குவலயாஸ்வன் (ரிதுத்வஜன்) மன்னனாகப் பொறுப்பேற்று ஆட்சி செய்தான்; அவனது ஆட்சியில் தர்மத்திற்குப்வெளிப்புற ம்பான ஒரு செயல் கூடத் தென்படவில்லை; அவன் தன் குடி மக்களைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போலவே பாசத்துடன் கவனித்துக் கொண்டான்; அவனது செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ||67||
சிவபெருமானின் வரத்தினால், அரசி மதாலஸா எங்கும் நிறைந்திருக்கும் இறைத் தன்மையை உணர்ந்திருந்தாள்; அவள் தன் அகத்தில் ஒளிரும் ‘ஆத்மா ’விலேயே நிலைத்திருந்து, பற்றற்ற நிலையில் அரண்மனையில் வாழ்ந்து வந்தாள்||68||
ஒரு பக்தி மிக்க மனைவியாகத் தான் வாழ்ந்த கடந்த கால நினைவுகளை அவள் இழக்கவில்லை; இறைவனின் அருளாலேயே இது சாத்தியமாயிற்று; இறைவனை உணர்ந்த ஞானியாகத் திகழ்ந்த போதிலும், அவள் தன் கணவன் மீது ஆழ்ந்த அக்கறையுடனும் பாசத்துடனும் தொடர்ந்து விளங்கினாள்; அவளது இத்தகைய நன்னடத்தை, பிற பெண்கள் பின்பற்றத்தக்க ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்கிறது ||69||
ரிதுத்வஜன் தன் இராச்சியத்தை நல்லாட்சி செய்து வந்தான்; அவனது பக்தி மிக்க மனைவி மதாலஸா ஆவாள்; அவர்கள் ஒரு மகிழ்ச்சியான தம்பதியினராகவே வாழ்ந்து வந்தனர்; எனினும், சிவபெருமானின் அருளினால், மதாலஸா இறைத் தன்மையிலேயே அதிக ஈடுபாடும் நிலைத் தன்மையும் கொண்டிருந்தாள்||70||
விதிப்படி அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்; பிறந்த கணத்திலிருந்தே அவனுக்கு இவ்வாறு அறிவுரை கூறினாள் ‘நீ எதற்காக அழுகிறாய்?; யாருக்காக அழுகிறாய்?; வெறும் கண்ணீர் சிந்துவது வீணான செயலாகும் ||71||
நீ அடைய வேண்டிய இடம் வேறொன்று; ஆனால் வழியைத் தவறி, எண்பத்து நான்கு லட்சம் பிறவிச் சுழற்சிக்குள் நுழைந்து விட்டாய்; இப்போது, உன் கர்ம வினைக்கு ஏற்றவாறு, தகுந்த இருப்பிடத்தைக் கண்டடைந்து, மீண்டும் இப்பூவுலகிற்குத் திரும்பி வந்திருக்கிறாய்||72||
‘இறைவனைத் தியானிப்பதே மிகச் சிறந்தது; பெண்களின் அணைப்பை சுட்டெரிக்கும் இரும்பைக் கட்டிப் பிடிப்பதற்குச் சமமாகவே கருத வேண்டும்; உன் மனதின் போக்குகளைக் குறித்து மிகுந்த விழிப்புடன் இரு; இல்லையேல், மனப் போக்குகளில் ஏதேனும் ஒன்று உன்னை நீ இருக்கக் கூடாத இடத்திற்கு உன்னை இழுத்துச் சென்று விடும்||73||
பற்றற்ற நிலையுடன் நீ பிட்ஷை எடுத்து உண்டால், தகுதியற்ற எதையும் உண்ண மாட்டாய்; வீணான அழகின் கவர்ச்சியில் நீ மயங்கி விழாமல் இருந்தால், பிற் காலத்தில் உன் கண்கள் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படாது ||74||
நீ ஏற்கனவே எண்ணற்ற உயிரினப் பிறவிகளில் அலைந்து திரிந்து விட்டாய்; ஆயினும் உன் உண்மையான இருப்பிடத்தை நீ கண்டடையவில்லை; இப்போதுதான், உயர்ந்த ஆன்மீக நிலைகளை அடைவதற்கான நல் வாய்ப்பு உனக்குக் கிடைத்திருக்கிறது||75||
இனிமேலும் அழுது கொண்டிருக்காதே; மன அமைதியை அடைவாயாக; இல்லையேல், பயனற்ற கற்பனைகளில் மூழ்கிப் போகும் ஆபத்து மிக அருகில் உள்ளது; நீ உன் மனதை ஒருமுகப்படுத்தி சிந்திக்க வேண்டும்; உனக்கு மிகவும் பொருத்தமான ஆன்மீகப் பாதையை நீயே கண்டறிய வேண்டும் ||76||
பிறப்பு-இறப்பு எனும் தொடர் சுழற்சியைக் குறித்து நீ அழுது கொண்டிருக்கிறாய்; ஆனால், நீயோ அந்தத் தொடர் உறவுகளுக்கு அப்பாற்பட்டவன்; கர்ம வினையால் ஏற்படும் இந்தச் சலனங்கள் எவையுமே உன்னைத் தீண்டுவதில்லை; நீயோ தூய இறைத் தன்மையின் ஒரு அம்சமாகவே திகழ்கிறாய் ||77||
தாயின் கருப்பையில் புகுந்தவனே, இரத்தம் மற்றும் விந்துவில் ஊறிக் கிடந்தவனே, சிறுநீர், மலம் மற்றும் கழிவுப் பொருட்களால் சூழப்பட்டிருந்தவனே, உண்மையில் நீதான் உண்மையான நீயா ||78||
‘எலும்புகளாலும் தசைகளாலும் ஆன உடலைக் கொண்டே, நீ உன் அறியாமையின் காரணமாகப் பல முறை உன் பாதையைத் தவற விட்டு விட்டாய்; உன் உருவத்தை உருவாக்கிய இந்த உடல் கூறுகளுக்கு நீ முக்கியத்துவம் அளிக்கிறாய்; ஆனால் அவ்வாறு செய்வது வீணான செயல் அல்லவா? உண்மையில் நீதான் உண்மையான நீயா||79||
உன் தாய் யார்?; உன் தந்தை யார்?; உன் மனைவி யார்?; உன் மகள் யார்?; பல பிறவிகளாக, பல வழிகளில் நீ ஏன் இத்தகைய பொய்யான பற்றுதல்களுக்கு ஆட்பட்டு இருந்தாய்?; நிலையற்றதும் அழிந்து போகக் கூடியதுமான இவற்றுக்கு பின்னால் ஏன் ஓடிக் கொண்டிருக்கிறாய்?||80||
இது தசைநார்கள், நரம்புகள் போன்றவற்றால் தோலால் மூடப்பட்ட உடல்; உள்ளே உமிழ் நீர், சிறுநீர் மற்றும் கழிவுகள் உள்ளிட்ட பிற பொருட்களே உள்ளன; ‘இது நான்’, ‘என்றும் நான் மட்டுமே’ என்று நீ ஏன் நினைக்கிறாய்; அந்த மாயைக்குள் அடிபணியாதே||81||
இந்தக் கூறுகள் செயலற்றவை; மூச்சின்றி நாம் இல்லை; ரஜோ குணத்தால் அடக்கப்பட்ட நாம் செயலில் கட்டுண்டுள்ளோம்; நமது செயல் உறுப்புகளைத் தழுவி, உயிர் வாழ உணவும் தண்ணீரும் தேவை என்றாலும் கூட, நீ அவற்றுக்கு அப்பாற்பட்டவன் ||82||
ஐம் புலன் உணர்ச்சிகளினால் நமது மனம் ஒரு குரங்கைப் போல, கண்களால் பார்ப்பதில் இருந்து காதுகளால் கேட்பதற்கும், நாவால் சுவைப்பதற்கும் எனத் தாவிக் கொண்டே இருக்கிறது; ஒரு ஆசை அடங்குவதற்குள் மற்றொன்றைத் துரத்தத் தொடங்கி விடுகிறது; அவை அனைத்தையும் தள்ளி நின்று கவனிக்கும் ஒரு நிலை நமக்குள் உண்டு. அதுவே ‘சாட்சி உணர்வு’ அல்லது ‘ஆத்மா ‘ எனப்படுகிறது. ||83||
மனம் புலன்களை ஆள்கிறது; அது இடைவிடாமல் புரிந்து கொள்ள முயல்வதுடன், ‘எனக்குத் தெரியும்’ அல்லது’நானே செய்பவன்’ என்று தவறாகக் கூறிக் கொள்கிறது; விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகிய இம் மூன்று நிலைகளையும் உணர்ந்து, அவற்றுக்குள் சாட்சியாக விளங்குவதே உண்மையான ‘சுயம்’ ஆகும்||84||
‘நானே இந்தச் செயலைச் செய்கிறேன்’ (I am the doer) மற்றும் ‘இதன் இன்ப துன்பங்களை நானே அனுபவிக்கிறேன்’ (I am the enjoyer) என்ற எண்ணமே அகந்தையின் (Ego) வெளிப்பாடு; இந்த மாயையிலிருந்து விடுபடவும், உண்மையான ஆத்ம விடுதலையை (Liberation) அடையவும் தியானத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் ||85||
விரைவாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் உலகத் தொடர்புகளை உன்னால் அடக்கவே முடியா விட்டாலும், குழந்தாய், நீ கவலை கொள்ளாதே, உன் குறிக்கோளில் உறுதியாகக் கவனம் செலுத்து; இல்லையேல் பிறப்பு-இறப்பு எனும் சுழற்சி, முடிவின்றித் உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும் ||86||
முன்னர் குறிப்பிடப்பட்ட மூன்று நிலைகளுக்கும் (விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்) நீ ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கின்றாய்; நீ ஸ்தூல உடல் , சூட்சும உடல் (மனம்), மற்றும் காரண (ஆத்மா ) உடல்களுக்கு அப்பாற்பட்டவன் ; எங்கும் எதிலும் வியாபித்து இருக்கும் அந்த பரமாத்மனுடன் துவக்கத்தில் ஒன்றிணைந்திருப்பது சற்று கடினமானதே ||87||
அத்தகைய அறிவுரைகளை, தாய் மதாலஸா தன் மகனுக்கும் திரும்பத் திரும்பக் கூறி வந்தாள்; அதனால் தன் மகனை இருமை உணர்வுகளுக்கு (துவைதத்திற்கு) அப்பாற்பட்ட நிலைக்கு உயர்த்தினாள் ||88||
அதே சமயத்தில் தன் மகன் உயிர் வாழ்வதற்காகத் தனது பாலை கொடுத்து வளர்த்தாள்; அது மட்டுமின்றி, அவள் பாடிய பாடல்களிலும், தாலாட்டுகளிலும் கூட, அவனுக்கு வேத சாஸ்திர நூல்களில் காணப்பட்ட ஞானத்தைப் போதிப்பதிலேயே தன் கவனத்தைச் செலுத்தினாள் ||89||
அவள் மேலும் தனது குழந்தைக்கு கூறுவது உண்டு ‘மகனே சோம்பல் என்பது ஒரு மனிதனின் உடல் மற்றும் மன ஆற்றலை மெதுவாக அழிக்கும் ஒரு மெதுவான மரணம் போன்றது; அப்படிப்பட்ட தீய பழக்கங்களுக்கு நீ அடிமையாகி விடாதே ; சோம்பல் சிந்தனையை மழுங்கச் செய்து விடும்; அதன் பின் உன்னால் அறிவாற்றலை பெற முடியாது, இரக்க குணமும் இல்லாமல் இருப்பாய் ||90||
ஏன் நீ முகத்தைக் கவிழ்ந்தவாறு வைத்துக் கொண்டு படுத்திருக்கிறாய்?; ஏன் கோபத்துடன் கதறி அழுகிறாய்?; இப்படி நீ கண்ணீர் சிந்துவதால் உனக்கு என்ன பயன்? நீ என்ன நினைக்கிறாய் என்பதை எனக்குச் சொல்வாயாக ||91||
உண்மையில் நீ தூய அத்வைத (வேற்றுமையற்ற) சொரூபமாகவே இருக்கிறாய்; உனக்கு எவ்விதத் துயரமும் இல்லை. அப்படியிருக்க, ஏன் உன் உடலை இப்படிப்பட்ட முறையில் வருத்திக் கொள்கிறாய்?; இந்த உண்மைகளை அறிந்து கொள்ளாமல் நீ ஏன் அந்தத் தீய செயல்களுக்கு அடிமையாகிறாய்? ||92||
இந்த உடல், அதற்கான காலம் முடியும்போது மண்ணோடு மண்ணாகி விடும்; அது எரிக்கப்படவோ, புதைக்கப்படவோ அல்லது நீரில் மூழ்கி அழியவோ, அதன் விதிப்படி நடைபெறும்; அதை போலவே பற்றுதல்களும் நிலையற்றவை; அவை ஒரு நாள் மறைந்து விடும்; நீ உன் வெளித்த தெரியும் உடலோடும், உலகப் பற்றுதல்களோடும் உன்னை அதிகமாக அடையாளப் படுத்திக் கொள்வதாலேயே உனக்குத் துயரம் ஏற்படுகிறது ||93||
இந்த உலகில் உள்ள எவற்றினாலும் நீ சற்றும் பாதிக்கப்படாதவன் ஆவாய் எனும்போது உன்னை ஏன் நீ வெளித் தெரியும் உடலோடு அடையாளப் படுத்திக் கொள்கிறாய்?; துர்நாற்றம் வீசக் கூடிய இந்த உடல் அழிந்து போனாலும், நீ மட்டும் அழியாமல் நிலைத்திருப்பாய்; அப்படியிருக்க, நீ அழுது புலம்புவதால் உனக்கு என்ன பயன் விளையப் போகிறது?’ ||94||
நீ இந்த அகிலம் அனைத்தையும் படைத்தவருடன் ஒன்றானவன்; இந்த முழுப் பிரபஞ்சத்தையும் தன் திருமேனியில் கொண்டவருடன் நீ ஐக்கியமாகி இருக்கிறாய்; அப்படியிருக்க, உண்மையில் நீ யாருக்குச் சொந்தமானவன்?; குழந்தையே, ஏன் நீ இவற்றை எல்லாம் சிந்திக்காமல் துயரத்திற்கு ஆளாகிறாய்? ||95||
பஞ்ச பூதங்களின் (நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) சேர்க்கையால் உருவான இந்தத் தூல உடல்; இது உணவினால் உருவானது மற்றும் உணவினால் வளர்க்கப்படுவதால், ‘உணவு உறை’ (Sheath of Food) என்று அழைக்கப்படுகிறது; துயரமோ அல்லது வருத்தமோ வரும் வேளைகளில், நீ உன்னை இந்த உடலுடன் அடையாளப் படுத்திக் கொள்கிறாய்; துன்பம் அல்லது துயரம் வரும்போது, நாம் உணர்வுபூர்வமாக நம்மை அந்த உடலுடன் அடையாளப்படுத்திக் கொள்வதையே பற்று என்கின்றோம் ||96||
உன் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும் இந்த உடலைப் பார்; மூச்சுக் காற்று இல்லாத நிலையில் இது முற்றிலும் உயிரற்றதாகவே இருக்கிறது; அப்படியிருக்க, இது உணர்வுடையது என்றும், உயிருள்ளது என்றும் நீ ஏன் கருதுகிறாய்?; இது ஆற்றல் கூறுகளின் தற்காலிக சேர்க்கை மட்டுமே ||97||
நான் வளர்ந்து வருகிறேன் என்று நீ சொல்லலாம்; இன்பத்தையும் துன்பத்தையும் நான் உணர்கின்றேன் என்று நீ கூறலாம்; வெப்பத்தையும் குளிரையும் நான் உணர்கிறேன் என்று நீ கூறலாம்; அப்படியிருக்க, இந்த உடல் மட்டும் எவ்வாறு ஜடப் பொருளாக இருக்க முடியும்?’ என்றும் நீ கேட்கலாம் ||98||
அப்படியானால், கவனமாகக் கேள் ‘பிரம்மம்’ என்று அழைக்கப்படும் அந்தத் தெய்வீகத் தத்துவம், ‘சத்-சித்-ஆனந்தம்’ (இருப்பு-அறிவு-பேரின்பம்) என்ற தன்மைகளைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. அது தானாகவே வளர்வதோ அல்லது தேய்வதோ இல்லை; அது எப்போதும் பேரின்பத்தின் வடிவமாகவே நிலைத்திருக்கிறது ||99||
வீடுகளைக் கட்ட செங்கல் எவ்வாறு பயன்படுகின்றனவோ, அதேபோல நாம் உண்ணும் உணவு நம் உடலை உருவாக்குகிறது, வளர்க்கிறது; இந்த உடல் உணவால் ஆன ஜடப் பொருளாகவும் , ஆத்மாவின் உணர்வாகவும், இரண்டின் சேர்க்கையாகவே, விளங்குகிறது ||100||
இன்பம், துன்பம் மற்றும் நீ உணரும் பிற உணர்ச்சிகள் அனைத்தும் உன் மனதின் செயல்பாடுகளே ஆகும்; உடலை முழுமையாக ஆட் கொண்டிருப்பது மனமே என்பதால், அதுவே இத்தகைய உணர்ச்சிப் பெருக்குகளுக்கு உன்னை ஆளாக்குகிறது ||101||
மனம் என்பதும் ஒரு கருவியைப் போன்றதுதான்; அதுவே இன்பம், துன்பம் போன்ற நிலைகளுக்கு ஆட்படுவதற்குத் தேவையான உணர்வுத் திறனை தருகின்றது; உணர்ச்சிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது ஒரு வகையான பிழையாகும்; அறிவும், அறியாமையும் ஆகிய இரண்டும் அந்தத் தெய்வீக ஆற்றலின் இரு வேறுபட்ட முகங்களே ஆகும் ||102||
மனம் ஒரு கருவியாகச் செயல்பட்டு, புலன்கள் தரும் தகவல்களை ஆத்மாவிடம் சேர்க்கிறது; அவை ஆத்மா வை முழுமையாக ஆட் கொண்டு, உண்மையில் இல்லாத ஒன்றை, அதாவது தான் என்று கருதிக் கொள்ளும்படிச் செய்கின்றன; புத்தியின் செயல்பாடும் இத்தகையதே; ஒரு பொருள் வெப்பமாக இருக்கிறதா அல்லது குளிராக இருக்கிறதா என்பதை நீ தீர்மானித்து அறிந்து கொள்ள அதுவே உனக்கு உதவுகிறது ||103||
இது என் உடல் என்று சொல்கிறாய், ஆனால் அது எப்படி சாத்தியம்? நீ எவற்றினாலும் தீண்டப்படாமல், எவற்றுக்கும் கட்டுப்படாமல் பட்டற்று இருக்கிறாய் எனும்போது ஜடமான உடலினால் நீ எப்படி கட்டுப்பட்டு இருக்க முடியும் என்று சொல்? ||104||
தவறான அடையாளம்தான் அறியாமைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது; அதீத பற்றுதான் உன்னை உறவுகளில் பற்று கொள்ள வைக்கின்றது; இவை இரண்டும் எப்போதுமே உன்னை ஆட்டிக் வைத்துக் கொண்டு இருக்கும் கருவிகள் , அவற்றை எளிதாக வெல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் ||105||
நீ உண்மையாகவே தெய்வத்தின் ஒரு பகுதி ஆவாய்; உண்மையில், நீ தெய்வீக ஞானத்தின் ஒரு பகுதியாக உண்மையான விழிப்புணர்வுடன் இருக்கிறாய்; உடலும், அதன் அனைத்துக் கூறுகளும் இயல்பாகவே அமைந்திருக்கும் தன்மையினால் தூய்மையற்றவை ஆகும்; இதனைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்து, இதன் உண்மையினை உணர்ந்து கொள்வாயாக’ ||106||
குரு வேத தர்மா கூறினார்; ‘இது போன்ற ஞான நிலைக்கான அறிவுரைகளைத் தான் மதாலஸா தன் குழந்தைக்கு கூறியவாறு வளர்த்தாள்; அவனை முரண்பாடுகளுடன் கூடிய கூற்றுகளுக்கு அடிபணிய அனுமதிக்கவில்லை; மேலும் அவள் எடுத்துரைத்த உண்மைகளை அவனே அறிந்து கொள்ளும் வகையில் அவனைத் தொடர்ந்து ஊக்குவித்தாள் ||107||
II இதனுடன் பி. டெம்பே மகாராஜ் எழுதிய உரையின் இருபத்தெட்டாவது(28) அத்தியாயம் முடிவடைகின்றது ||
இது பணிவுடன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் சமர்பிக்கப்படுகிறது ||
OVI* பாடல்களின் விளக்க உரை: 107
முதலாவது அத்தியாயம் முதல் இருபத்தெட்டாவது(28) அத்தியாயம் வரை மொத்த பாடல்கள்:
107+2921=3028
*{Ovi (ஓவி) என்பது மராட்டிய இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான பாரம்பரிய கவிதை வடிவம் ஆகும்; ஓவி செய்யுட்கள் பொதுவாக நான்கு வரிகளைக் கொண்டவை, ஆனால் சில நேரங்களில் மூன்று வரிகளைக் கொண்டும் அமையும்}
……இதோடு பாகம் -9, அத்தியாயம் -28 முடிவடைந்தது
பாகம் -10, அத்தியாயம் -29 தொடர்கின்றது