ஒரு கணம் சிந்திக்கிறேன்…………

நான் இந்த கட்டுரையை எழுதியதின் காரணம் வினோதமானது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சக பிரயாணி இந்த மஹான் குறித்த பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டு செல்கையில் இந்த மஹானைக் குறித்து அறிந்து கொண்டதும், அந்த புத்தகத்தை வாங்கி சற்று படித்துப் பார்த்தேன். அந்த மஹான் ஒரு சித்த புருஷர் என்பதாக அந்த வழிப்போக்கர் கூறினார். அந்த புத்தகம் சென்னையை சேர்ந்த பிரேமா பிரசுரம் என்பவர்களால் வெளியிடப்பட்டு இருந்ததாக நியாபகம் உள்ளது. ஆனால் அந்த புத்தகம் மீண்டும் எங்குமே கிடைக்கவில்லை. 2005 ஆம் வாக்கில் அந்த மஹானைப் பற்றியக் கதையை சில தமிழ் மாத இதழ்களுக்கு அனுப்பினேன். அவை பிரசுரம் ஆகவில்லை. அதன் காரணமும் தெரியவில்லை.

காலம் ஓடியது. நான் என்னுடைய வலைதளத்தில் ஆன்மீக கட்டுரைகளை எழுதத் துவங்கியதும் மறக்காமல் மனதில் ஓடிக் கொண்டு இருந்த அந்த மகானின் கதையை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டேன். பல இடங்களிலும் பல்வேறு வகைகளிலும் அவர் குறித்த படங்களைத் தேடியும் ஒன்று கூட கிடைக்கவில்லை. நான் பல சித்தர்களை பற்றி படித்து உள்ளேன் என்றாலும் இந்த மஹானைப் பற்றி அதுவரை படித்தது இல்லை. ஒருமுறை நாங்கள் திருவாரூருக்கு சென்று இருந்தபோது  இந்த மஹானுடைய சமாதிக்கு சென்று பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த சமாதி உள்ள இடத்தைக் குறித்து விஜாரித்தபோது சிலர் அதை விஜயபுரம் என்றும், சிலர் விடயபுரம் என்றும், மேலும் சிலர் அதை விசயபுரம் என்றும் கூறினார்கள்.  வண்டி ஒட்டி வந்தவரால் சரியான இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் மாயவரத்துக்கு திரும்பிவிட்டோம்.  இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது.  அந்த மஹானுடைய சமாதி உள்ள கிராமம் விடயபுரம் என்றும் அது குடவாசல் தாலுக்காவில் உள்ளது என்பதையும் அறிந்தேன். விஜயபுரம் என்பது திருவாரூர் தாலுக்காவில் உள்ள கிராமம்  ஆகும். இரண்டுமே வெவேறு  கிராமங்கள். அடுத்தமுறை அங்கு செல்லும்போது பார்க்கலாம் என கருதி மேலும் சில செய்திகளுடன் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை மீண்டும் ஆங்கிலம் மற்றும் தமிழில் இப்போது மறு வெளியீடு செய்ய முடிவு செய்தேன்.

சித்தர்களை பற்றி என்ன கூறுவார்கள் என்றால் அவர்கள் தாமாகவே விரும்பினால் ஒழிய அவர்களை பற்றி எழுத முடியாது. அதனால்தானோ என்னவோ விடயபுர மஹான் தன்னை பற்றி என்னை எழுத வைத்து இருக்கின்றார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சித்தர்கள் ஒருவகையில் துணை தெய்வங்களே. பல்வேறு காரணங்களினால் பூமியிலே மனிதராக பிறப்பு எடுக்கும் அவர்களுடைய ஆத்மாக்கள், சித்தர்களாக மாறியவுடன் மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைந்து விடுகின்றன என்பதினால்தான் அவர்களை புதைத்து வைத்துள்ள சமாதிகளில், அவர்களை தகனம் செய்த இடங்களிலும் அவருடைய ஆத்மாக்கள் அழியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் என்பது தத்துவார்த்தமான சத்திய உண்மை ஆகும். அங்கு வந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியபடி இருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் ஏழு பிறவிகள் எடுப்பதாகக் கூறுவார்கள். அந்த பிறவிகள் அடுத்தடுத்துக் கூட இருக்காதாம். முன் பிறவிக்கும் மறு பிறவிக்குமான காலம் அடுத்த யுகங்களாகக் கூட இருக்கலாம் என்பார்கள். இப்படியாக ஏழு பிறவிகள் எடுக்கும் ஆத்மாக்கள் எந்த பிறவியிலாவது சித்தர்களாக மாறிவிட்டால் அந்த சுற்று யுகங்களின் முடிவுவரை அவை மறு பிறப்பு எடுக்காது. ஒரு சுற்று யுகங்கள் முடிந்து புதியதாக மீண்டும் முதல் யுகத்தில் இருந்து பிரபஞ்சம்  துவங்கும்போது முன் யுகங்களில் அழிவில்லாமல் இருந்த ஆத்மாக்கள்   மீண்டும் புதிய பிறப்பு எடுக்கும். அப்படி புதிய யுகத்தில் எந்த உருவிலாவது பிறப்பு எடுக்கும் பழைய ஆத்மாக்கள் பிராப்தம் இருந்தால் மீண்டும் சித்தர்களாக மாறலாம், மாறாமலும் இருக்கலாம். இது தொடர்கதை.

சமாதிகளில் உள்ள சித்தர்களின் ஆத்மாக்கள் அந்த இடத்தில் மேல் பகுதியில் கண்களுக்குத் தெரியாமல் தியானத்தில் இருந்தவாறு அவரவர் வணங்கிய தெய்வங்களை ஆராதித்துக் கொண்டு இருப்பார்கள் என்றும், அதனால்தான் அவர்கள் உச்சரித்துக் கொண்டு இருக்கும் மந்திர உச்சாடனைகளினால் அந்த இடங்களில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடிவிடுவதினால் அமைதியும், தெய்வீகமும் நிறம்பிய இடங்களாக அவை இருக்கும் என்பதாகவும், அங்கு சென்று தியானிப்பவர்களுக்கு மன அமைதியும், ஆத்ம பலமும் அதிகரிக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.

இதனால்தான் அப்படிப்பட்ட சித்தர்களின் சமாதிகளை தரிசிக்கச் செல்கையில் நிறைய பூக்களை எடுத்துக் கொண்டு போய் ஊதுபத்தியும், விளக்கும் ஏற்றி வைத்து அங்கு பூஜிக்க வேண்டும் என்றும் அப்படி நிறைவாக செய்யும் பக்தர்களுக்கு தெய்வங்களின் அருளாசி கிட்டி மன அமைதியும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பதாக கூறுகின்றார்கள். விடயபுரம் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளும் அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவராகவே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

கதை

1880 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருவாரூர் அருகில் உள்ள விடயபுரம் எனும் கிராமத்தில் திரு சின்னசாமி அகமுடையார் என்பரின் மகனாகப் பிறந்தவர்தான் விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள் ஆவார். பிறந்த குழந்தைக்கு இராமசாமி என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. தந்தை வேளாண்மைத் துறையில் சிறந்து விளங்கியவர். சொந்த பந்த மக்களிடம் அவருக்கு பெரும் மரியாதை இருந்தது.

விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள் மாரியம்மன் மீது அதிக பக்தி செலுத்தினார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அன்னை மாரியம்மனே அவர்களுடைய குலதெய்வம் என்றாலும் அவர் ஏன் மாரியம்மனின் பக்தர் ஆனார் என்பதற்கான கதை சுவையானது. ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளுடைய பாட்டனார் ஒரு வேட்டைக்காரர். அவர் ஒரு நாள் உடும்பு ஒன்றைப் பிடிக்க அம்பை ஏவினார் (உடும்பு எனும் மிகப் பெரிய பல்லி போன்ற பிராணி சுவற்றில் ஏறிவிட்டு அதை அப்படியே பிடித்துக் கொண்டு விட்டால் அதை சுவற்றில் இருந்து எளிதில் பிரிக்க இயலாது. அது தானே தன்னை விலக்கிக் கொண்டால்தான் சுவற்றில் இருந்து அதை எடுக்க முடியும் என்பார்கள். போரில் கோட்டை சுவற்றின் மீது ஏற அதை பயன்படுத்துவார்கள்).  பெரும் பிராணியான உடும்போ  அருகில் இருந்த புதருக்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டது. அதை பிடிக்க சென்றவர் புதரை விலக்கிப் பார்த்த பொழுது அங்கு உடும்பு இல்லை. மாறாக இரத்தம் வழிந்து கொண்டு இருந்த ஒரு அம்மன் சிலைதான் இருந்தது. தான் தவறிழைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு பதறிப் போனவர் மனம் வருந்தி அம்மனிடம் வேண்டினார் ‘அம்மா, நான் தவறாக இந்த காரியத்தை செய்து உன்னைக் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடம்மா. இனி நீதான் எங்களுடைய குலதெய்வம்’ என மனமுருகிப் பிரார்தனை செய்து அந்த சிலையை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். என்ன அதிசயம். வீட்டில் நுழைந்ததும் அந்த சிலையில் வடிந்த ரத்தமும் காணவில்லை, அவர் அதை எடுத்து வந்தபோது ஏற்பட்ட ரத்தக் கறையும் அவர் மீது இல்லை. அனைத்தும் மறைந்து விட்டிருந்தது. அன்று முதல் அந்த சிலையையே தம் குலதெய்வமாக பூஜிக்கத் துவங்கினார். அதனால்தான் அந்த குடும்பத்தில் இருந்த ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளுக்கு அன்னை மாரியம்மன் மீது பக்தி அதிகம் இருந்தது.

இந்த சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஸ்ரீ சட்டாம்பிள்ளை அந்த ஊரில் இருந்த திரு அப்பாசாமி நாயுடு என்ற ஒரு பண்ணையாரிடம் வேலையில் அமர்ந்தார். அறுவடை செய்த நெல்லை பக்கத்து ஊரில் இருந்த அரவை மில்லில் கொண்டு போய் அரைத்து வருவதே அவர் வேலை. இந்த காலத்தில் உள்ளது போல அந்த காலங்களில் வாகன வசதிகள் கிடையாது. மாட்டு வண்டியில்தான் போக வேண்டும். ஒரு நாள் அறுவடை செய்த நெல்லை எப்போதும் போல மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று நெல்லை நீக்கிய அரிசியை ஊருக்கு திரும்பி எடுத்துக் கொண்டு வந்து இருந்தார். வழியில் ஒரு இடத்தில் திடீர் என மாடுகள் இரண்டும் மிரண்டு பிடித்து ஓடத் துவங்க வண்டி நிலை குலைந்து கீழே சாய்ந்தது. ஸ்ரீ சட்டாம்பிள்ளை கீழே விழுந்து விட்டார். ஆனால் சிதிதளவு கூட அவருக்கு காயம் இல்லை. அவர் கீழே விழுந்ததுதான் தாமதம், அவர் முன் எதோ ஒரு பெண் உருவம் தோன்றி அட்டகாசமாகச் சிரித்தது.

பயந்து நடுங்கினார் ஸ்ரீ சட்டாம்பிள்ளை. சாதாரணமாக இரவு வேளைகளில் மோகினிப் பிசாசுகள் தனியே வருபவர்களை பிடித்துக் கொள்வது உண்டு. ஆகவே மனதை திடப்படுத்திக் கொண்டவர் அன்னை மாரியம்மனை வேண்டத் துவங்கினார். ‘அன்னையே என்னைக் காத்தருளம்மா’ என உரத்தக் குரலில் புலம்பத் துவங்க அட்டகாசமான சிரிப்பு சப்தம் நின்றது. எதிரில் இருந்த உருவமோ ‘கவலைப் படாதே மைந்தா, கண்களை திருந்து பார். நீ துதிக்கும் அதே மாரியம்மன் நான். நான் உன்னை ஆட்கொள்ளத்தான் இங்கு வந்தேன். இனிமேல் நீ என்னை பிரதிபலித்துக் கொண்டு இருப்பாய்’ என்று கூற பயந்து போனவர் தன் சுய நினைவை இழந்து விட்டார்.

ஊருக்கு சென்றவர் திரும்ப வரவில்லையே என அவரைத் தேடி வந்தவர்கள் நினைவு இழந்து கிடந்த அவரை பேய், பிசாசு ஏதும் பயமுறுத்தி இருக்கும் என நினைத்து அவரை ஊருக்கு திரும்பி அழைத்துப் போய் மந்தரித்தனர். ஆனால் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தது போல ஸ்ரீ சட்டாம்பிள்ளை எழுந்தார். தன் வேலைகளை மீண்டும் செய்தவண்ணம் இருக்கத் துவங்கினார்.

காலம் ஓடியது. வயது ஏற ஏற அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது. ஒரு நாள் வீட்டில் இருந்த அனைவரும் ஊரில் நடந்து கொண்டிருந்த விழாவுக்குச் சென்று இருந்தனர். ஸ்ரீ சட்டாம்பிள்ளை வீட்டில் இருந்தார். அந்த வீட்டில் மற்றொரு இளம் பெண்ணும் திருவிழாவுக்குப் போகாமல் வீட்டில் இருந்தாள். இரவு வந்தது. ஸ்ரீ சட்டாம் பிள்ளை மனதில் எதோ ஒரு துடிப்பு, அந்தப் பெண்ணை அடைய துடித்தார். அவள் இருந்த அறையைத் தட்டியும் கதவைத் திறக்காததினால் வெறி கொண்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர்  அவளை நெருங்கிய பொழுது அந்தப் பெண் பரிதாபமாக குரல் எழுப்பிக் கதறினாள் ‘வெள்ளம் கிணற்றுத் நீரை அடித்துக் கொண்டு போவது இல்லை அய்யா. என்னை விட்டு விடுங்கள்.’  யாரும் துணை இல்லாமல் இருந்த அவள் கூறிய வார்த்தைகள் அவரை யாரோ மண்டையில் ஓங்கி அடிப்பது போல இருந்தது.  அசுத்தங்களை கலந்து வரும் வெள்ள நீர் வந்து கிணற்று நீருடன் கலந்து விட்டால் எது வெள்ளத்தினால் வந்த நீர் எது கிணற்று நீர் என தண்ணீரைப் பிரித்துப் பார்க்க முடியுமா ? கிணற்று நீரை அசுத்தங்கள் கலந்து வரும் வெள்ள நீர் அசுத்தப்படுத்தி விடாதா? நம்மிடம் உள்ள நல்ல குணத்தை அசுத்தப்படுத்திக் கொள்வது முறையாகுமா? தன்னுடைய தற்காலிக வெறிக்கு அவளை பலி கொண்டு விட்டால் அவள் வாழ்க்கை என்ன ஆகும்? நிர்மூலம் ஆகிவிடாதா? மனம் பதறியது. நடந்த செயலுக்கு அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

இனிமேல் இப்படியெல்லாம் தவறு நடக்காமல் இருக்க தன் மனதை புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணியவர் அயராது உழைக்கத் துவங்கினார். பண்ணையார் அவருடைய வேலைத் திறமையை மெச்சி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தார். காலம் உருண்டது. ஒரு நாள் அவருடைய கனவில் தேவி மாரியம்மன் தோன்றினாள். தனக்கு ஒரு ஆலயம் அமைத்து அதற்கு பக்கத்தில் குளமும் தோண்டி தன்னை ஆராதிக்கும்படிக் கட்டளை இட்டாள். ஆலயம் அமைக்கப் பணத்திற்கு எங்கே போவது? தானே கூலி வேலையில் இருக்கும்போது ஆலயத்தை கட்ட எங்கிருந்து பணத்தை திரட்டுவது? யாரிடம் நன்கொடை கேட்க முடியும்?

மறுநாள் ஒரு முடிவோடு நேரடியாக பண்ணையாரிடம் சென்றார். தான் கண்ட கனவைப் பற்றி அவரிடம் விரிவாகக் கூறினார். ஆலயம் அமைக்கத் தேவையான பணம் தனக்கு கிடைக்க அவர் யாரிடம் இருந்தாவது நன்கொடை வசூலித்துத் தந்து உதவ முடியுமா எனக் கேட்டார். ஆனால் பண்ணையாரோ ஒரு வார்த்தைக் கூட கூறாமல் ஸ்ரீ சட்டாம் பிள்ளைக்கு அந்த ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் தாமே செய்வதாகவும், யாரிடம் இருந்தும் நன்கொடை பெற வேண்டாம் எனவும் கூறிவிட்டு ஆலயம் அமைக்கத் தேவையான பணத்தையும் தந்தார். வேலைகள் துவங்கின, விரைவிலேயே ஆலயம் எழுந்தது. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது.

தேவி மாரியம்மன் அவருக்கு பலமுறை கனவில் வந்தாள். கட்டளை பிறப்பிக்கத் துவங்கினாள். ஆலயத்திற்கு பெரும் திரளான மக்கள் வரலாயினர். பூஜைகள் தொடர்ந்து நடந்தன. கோவில் மெல்ல மெல்ல புகழ் பெறத் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களுக்கு அன்னையின் பிரசாதம் என்ற பெயரில் கஞ்சி ஊற்றப்பட்டது. அங்கு வந்த மக்களுடைய மனதில் ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஒரு தெய்வீகப் புருடராகத் தோன்றவே தமது குறைகளை அவரிடம் கூறத் துவங்கினர்.

வந்தவர்களிடம் ‘ஆயி (தேவி மாரியம்மன்) உங்களை பார்த்துக் கொள்வாள் கவலைப்பட வேண்டாம்’ என ஆறுதல் கூறி அனுப்புவார். வீபுதி தருவார். வியாதிகள் குணமாகத் துவங்கின. அதன் பின் மெல்ல மெல்ல ஸ்ரீ சட்டாம்பிள்ளை வேறு பெயரில் அழைக்கப்படலானார். விடயபுரம் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகள் என்றும், விடயபுரம் மஹான் என்றும் அழைக்கப்படலானார். விடயபுர மகானுடைய புகழ் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் துவங்கியது. மக்கள் கூட்டம் பெருகியது. பலர் அவரிடம் வரலாயினர். அப்படி வந்து அவரிடம் குணம் அடைந்தவர்களில் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த மாயவரம் ராஜம் ஐயர் என்ற இசை மேதையும் அடக்கம். அந்த மகான் நாளடைவில் பல அபூர்வமான சக்திகளை பெற்றார்.

பல அறிய தெய்வீக சக்திகளை தனது சாதனாக்களினால் பெற்றார். அவரிடம் வந்தால் பாம்பு மற்றும் தேள்கடி போன்றவை நிமிடத்தில் குணமாயிற்று. பன்னிரண்டு வருடம் குளத்து நீரை மட்டுமே பருகி கடுமையான தவத்தில் இருந்தார். தண்ணீரைத் தவிர வேறு எந்த உணவையும் அந்த பன்னிரண்டு ஆண்டுகள் உண்ணவில்லை. பண விஷயத்தில் கண்டிப்பானவர். ஆத்தாளின் (தேவி மாரியம்மன்) பணத்தை முறையாக வைக்க வேண்டும் என்பார். எவரிடமும் தனிப்பட்ட முறையில் தனக்கோ ஆலயத்திற்கோ எந்த பண உதவியையும் பெற்றது இல்லை.

அவருடைய சக்திகள் எப்படிப்பட்டவைத் தெரியுமா ? ஒரு மந்திரவாதி அவர் ஊருக்கு வந்து அனைவரையும் தொந்தரவு செய்வது உண்டு. ஒருமுறை அவன் ஒருவருடைய வீட்டில் இறந்தவருக்கு வருட சடங்கு நடந்து கொண்டு இருந்த பொழுது சடங்கு முடியும் முன்னரே தனக்கு சாப்பாடு போடவில்லை என்பதற்காக தனது மந்திர சக்தியை பயன்படுத்தி அந்த சடங்கில் செய்திருந்த அனைத்து உணவையும் சாப்பிட முடியாத அளவு அசிங்கமாக்கி விட்டான். அதைப் பற்றி மகானிடம் சிலர் மனம் வருந்தி கூறினர். மற்றொரு முறை அந்த மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து மக்களை துன்புறுத்த முயன்றான். வந்தது கோபம் மகானுக்கு. நேராக அவன் இருந்த இடத்துக்கு சென்றார், அவர் அவனைப் பார்த்து கத்தினார் ‘இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் இந்த ஊரை விட்டு ஓடி விடு இல்லை எனில் நீ தலை வெடித்து இறப்பாய்’. அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்தில் அந்த மந்திரவாதியிடம் இருந்த அனைத்து சக்திகளும் அழிந்து போனது மட்டும் இல்லாமல் பைத்தியம் பிடித்து அந்த ஊரை விட்டே ஓடினான். பிறகு அவன் அங்கு வரவே இல்லை.

மற்றோரு சம்பவம். ஸ்வாமிகளைக் காண ஒரு பெண்மணி வந்துவிட்டு அவரிடம் வீபுதி பெற்றுக் கொண்டு சென்றார். ஊர் திரும்பும் வழியில் திருடர்கள் வழி மறித்து நகைகளைப் பறிக்க முயல அவர் மகானை நினைத்து உரத்தக் குரலில் பிரார்தித்தார். அவ்வளவுதான் அருகில் வந்த திருடர்கள் கால்கள் நடக்க முடியாமல், கைகளையும் அசைக்க முடியாமல், அவர்கள் இருந்த இடத்தில் இருந்து நகரவும் முடியாமல் பூமியிலே புதைத்து வைக்கப்பட்டிருந்த மரம் போல நின்று விட்டனர். பெண்மணி ஊருக்கு பத்திரமாகத் திரும்பினார்.

இன்னொரு சம்பவம். தொண்டையில் சதை வளர்ந்து பேச முடியாமல் இருந்த பெண்மணி ஸ்வாமிகளை தரிசனம் செய்துவிட்டு அவரை வணங்கி எழுந்ததும் வீபுதி தந்து நொடிப் பொழுதில் அவருடைய வியாதியை குணப்படுத்தினார். இறந்து போக இருந்த ஒருவருடைய உயிரை காக்க தன்னுடைய வாழ்க்கையில் ஐந்து வயதை குறைத்துக் கொண்டு அந்த ஐந்து வயதை அவருக்கு தந்து அவருடைய ஆயுளை ஐந்து ஆண்டுகள் அதிகமாக்கி பிழைக்க வைத்தார். இந்த உண்மையை பல முக்கியமானவர்கள் ஜாதகத்தை கணித்து வைத்துக் கொண்டு இருந்த ஒரு ஜோதிடர் வெளிப்படுத்தினார். தனது வாழ்வில் ஐந்து வருடங்களை தானம் கொடுத்து இருக்காவிடில் ஸ்வாமிகள் இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்ந்திருப்பார் என மக்கள் கருதினார்கள். தன்னை தரிசனம் செய்துவிட்டு பல மைல் தொலைவில் இருந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்த தன்னுடைய பக்தர் ஒருவர் லாரி மோதி இறக்க இருந்த சமயத்தில் மாரியம்மன் ஆராதனை நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்தவண்ணம் சூஷ்ம உருவில் அங்கு சென்று யாருடைய கண்களுக்கும் புலப்படாத வகையில் அவரை அப்படியே தூக்கி சாலையின் ஓரத்தில் இறக்கிவிட்டு அவருடைய உயிரை காப்பாற்றினாராம். அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பது ஒரு மர்மமாகவே இருந்தது.

இப்படி பலஅதிசயங்களை செய்து காட்டியவண்ணம் வாழ்ந்திருந்த அற்புதமான தெவீக மகான் 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதி அடைந்தார். இன்றைக்கும் விடயபுரம் சென்று அவருடைய சமாதியில் பிரார்தனை செய்யும் பக்தர்களைக் காத்தருளி வருகிறார்.

கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது. அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விடயபுரம் என்னும் ஊரில், பிடாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
 ============