அஸ்வாரூடா தேவி என்பவள் பார்வதியின் சக்தியான திரிபுரசுந்தரி தேவியின் சக்தியில் இருந்து வெளியான தேவி ஆவாள். அஸ்வாரூடா தேவி எதற்காக படைக்கப்பட்டாள்?

ஒருமுறை தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட பார்வதி தேவி அங்கு அவரால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள். இறந்து விட்ட மனைவியின்  உடலை தனது தோளில் சுமந்துகொண்டு உலகெங்கும் கோபத்துடன் சுற்றி ஒடத் துவங்கிய சிவபெருமானின் கோபத்தை தணிக்க எண்ணிய மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தினால் சிவபெருமானின் தோளில் இறந்து கிடந்த பார்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்த, அவள் உடலின் பாகங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் விழுந்தது. பின்னர் அவள் உடலின் பாகங்கள் விழுந்த இடங்களில் பார்வதிக்கு ஆலயங்கள் எழும்ப, அந்த ஆலயங்கள் சக்தி பீடங்களாயிற்று. அதனால் கோபம் தணிந்த சிவபெருமான் மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார். அதே நேரத்தில் விதியினால் ஏற்பட்டு இருந்த இந்த நிலை முடிவுற்றதும் தனது கணவருடன் மீண்டும் சேர வேண்டும் என்று எண்ணிய  பார்வதியின் ஆத்மாவும் ஹிமயமலையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டது.

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தபோது தேவலோகத்தில் சூரபத்மன் எனும் அசுரனின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டு இருந்தது.  உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்த சூரபத்மனுக்கு கிடைத்து இருந்த அபூர்வ வரங்களினால் சக்தி பெற்றவன் தேவர்கள் அனைவரையும் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு கொடுமைகளை செய்து வந்தான்.  தேவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகவே அவனால் துன்பமுற்ற தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று முறையிட அவரை தேடி அலைந்தார்கள். ஆனால் அவரை எங்குமே கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் வேறு வழி இன்றி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முயன்றார்கள். ஆனால் அவர் தவத்தை அவர்களால் கலைக்க முடியவில்லை என்பதினால் காதல் கடவுளான காமதேவன் எனும் மன்மதனை அனுப்பி அவர் தவத்தைக் கலைக்க வைக்க, அதனால் கோபமுற்ற சிவபெருமான் தனது தவத்தை கலைத்த மன்மதனை தனது மூன்றாம் கண்களினால் எரித்து விட்டார். அதைக் கண்டு பயந்து போன தேவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு அநியாயமாக மன்மதன் பலியாகி விட்டானே என வருத்தம் அடைந்து சிவபெருமானிடம் சென்று தங்களுடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எரிந்து சாம்பலாகிவிட்ட மன்மதனுக்கு மீண்டும் உயிர் பிச்சைக் கொடுக்குமாறு அவரிடம் வேண்டினார்கள். கருணைக் கொண்டு அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் எரிந்து சாம்பலாகி விட்ட மன்மதனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மன்மதனுடன் அந்த சாம்பலில் இருந்து பண்டாசுரன் என்ற இன்னுமொரு அசுரனும் வெளி வந்தான். அதுவும் பரமாத்மனின் விதியால் விளைந்த ஒன்றாகும். அவன் சூரபத்மனின் வம்சத்தை சேர்ந்தவன். எந்த ஒரு தாயின் கருவில் இருந்தும் வெளிவராத ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்ற வரத்தை பெற்று இருந்தவன். சாம்பலில் இருந்து வெளிவந்த அந்த அசுரனோ சூரபத்மனைவிட அதிக துன்பங்களை தேவர்களுக்கு தந்து அவர்களை பல தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். சூரபத்மன் போதாதென்று பண்டாசுரனின் அட்டகாசத்தினால் அவதிப்பட்ட தேவர்கள் மீண்டும் விஷ்ணுவை தேடிச் சென்று அவரிடம் பண்டாசுரனின் கொடுமைகளைக் கூறி தம்மை அவன் பிடியில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.

சூரபத்மனுக்கு அழிவு என்பது சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு பிறக்கும் மகனால் மட்டுமே நடக்கும், அதற்கான காலம் இன்னும் கனிந்து வரவில்லை என்பதை மகாவிஷ்ணு உணர்ந்தார். முதலில் பண்டாசுரன் மடிய வேண்டும், அதற்கு பின்னரே சூரபத்மனின் மரணமும் நிகழும் என்பது விதியாக இருந்ததினால் தேவர்களை பார்வதி தேவியிடம் சென்று அவளிடம் முறையிடுமாறு அறிவுரைக் கூறி அனுப்பினார். ஏன் என்றால் பண்டாசுரனை ஒரு பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்பதே விதியாக இருந்தது. பராசக்தியே படைப்பவள் மற்றும் தானே படைத்ததை அழிப்பவளும் ஆவாள் என்பதே பிரபஞ்ச தத்துவமாக இருந்தது (அவளே படைப்புக் கடவுள் பிரும்மனையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும் படைத்தவள் என்பதினால் இப்படியாகக் கூறப்பட்டது). அவர் கூறிய அறிவுரையின்படி அவர்களும் அக்னியை வளர்த்து பண்டாசுரனை வதைக்க பார்வதி தேவியை வேண்டி பிரார்த்தனை செய்ய, அவளும் பண்டாசுரனை அழிக்க அந்த அக்னி மூலம் தனது சக்தியில் இருந்து படைக்கப்பட்ட அதிஅற்புத சுந்தரியும், அழகில் நிகரற்றவளும், ஆறு சக்திகளை உள்ளடக்கியவுளுமான திரிபுரசுந்தரி எனும் ஒரு தேவியை அனுப்பி வைத்தாள். திரிபுர என்பது ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் என்பதினால்  ஆறு அபார சக்திகளை உள்ளடக்கிய அவளுக்கு திரிபுரசுந்தரி என்ற பெயர் வந்தது. அக்னியில் இருந்து வெளிவந்த திரிபுரசுந்தரி நேராக மன்மதனிடம் சென்று பார்வதியின் ஆணைப்படி அவரை மணந்து கொண்டாள்.

திரிபுரசுந்தரி மன்மதனை மணந்து கொண்டதும் தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று பண்டாசுரனை அழிக்குமாறு அவரிடம் வேண்டிக் கொள்ள, அவரும்  தனது மனைவியான திரிபுரசுந்தரியிடம் அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்ள, திரிபுரசுந்தரி அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி தந்தாள். அடுத்து பண்டாசுரனை எப்படி வதம் செய்யலாம் என அவள் யோசனை செய்தபோது அவளுக்கு முன்னொரு காலத்தில் நடைபெற்ற யுத்தம் ஒன்று நினைவுக்கு வந்தது.  அந்த யுத்தத்தில் சிவபெருமானுக்கு துணையாக பூமாதேவி அவருக்கு தேராக மாற, சந்திர சூரியர்கள் அந்த தேரின் சக்ரங்களாகவும், மேரு மலை வில்லாகவும், விஷ்ணு அதன் அம்பாகவும் மாறிக்கொள்ள, பிரும்மாவும் தேரோட்டியாக அமர்ந்து கொண்டார். நான்கு வேதங்களும் மந்திர சக்தி வாய்ந்த வெல்ல முடியாத குதிரைகள் ஆயின.  சிவபெருமானும் தமது உடலின் இருந்து வெளிவந்த சக்தியில் இருந்து பெரும் சேனையை வெளிவரச் செய்து அவர்களுடன் சேர்ந்து தேவர்கள் மற்றும் அனைத்து கடவுட்களின் துணையுடன் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற ரகசியம் அவளுக்கு நினைவுக்கு வர உடனடியாக தனது சக்திகணங்களை  உடலில் இருந்து பல துணை தேவதைகள் மற்றும் சேனைகளாக்கி வெளிவரச் செய்தாள். அப்படி வெளிவந்த தேவதைகள் அனிமா, மகிமா, பிராம்மி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மகிந்தரி, சாமுண்டி மற்றும் மகாலஷ்மி போன்ற பெயர்களைக் கொண்டவர்கள் ஆவர். அவர்களுக்கு அந்தப் பெயர்கள் வரக் காரணமான கதைகள் தனியானது. அவர்களைத் தவிர தனக்குத் துணையாக ஆவர்ண தேவதைகளையும் படைத்தாள். ஒரு சக்கரத்தில் நடுவில் அமர்ந்து கொண்டவளை சுற்றி முற்றிலும் பெண்களேயான தேவதை படையின் துணைக்கு யானை, குதிரை மற்றும் காலட் படைகளையும் தனது சக்தியினால் வெளிக்கொண்டு வந்தாள். யானைப் படையின் தலைவியாக சம்பட்கரி என்ற தேவி இருக்க திரிபுரசுந்தரியின் கையில் இருந்த பாசபாணம் எனும் பாசக் கயிற்றில் இருந்து திரிபுரசுந்தரிக்கு யுத்தத்தில் பெரும் துணையாக இருந்து வெற்றியை தரக்கூடிய தேவியாக அஸ்வரூடா எனும் தேவியும் வெளிவந்தாள். அக்னித் தீயில் இருந்து வெளிவந்த திரிபுரசுந்தரியின் உடலில் இருந்த சக்தியினால் வெளிவந்த அஸ்வாரூடை சிவப்பு நிற சேலையில் ஜொலித்தபடி காணப்பட்டாள். அவள் தலைமையில் பெரிய குதிரைப் படையும் வெளி வந்தது. குதிரைப் படைக்கு தலைமை தாங்கியபடி அஸ்வரூடா தேவியானவள் மிகப் பெரிய, கம்பீரமான, தூய வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து கொண்டு வெளிவந்தாள். அவள் கையில் தங்கக் கோல் ஒன்று மின்னியது. அது ஐம்புலன்களை மட்டும் அல்லாமல் அனைத்து புலன்களையும் அடக்கும் சக்தி கொண்ட தண்டம் ஆகும்.  வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.

யுத்தமும் துவங்கியது. உடனடியாக அஸ்வாரூடையும் தனது கையில் இருந்த தண்டத்தில் பண்டாசுரனின் அனைத்து புலன்களையும் சக்தியையும் உறிஞ்சிக் கொண்டாள். அவ்வளவுதான் பண்டாசுரனின் சக்திகளும், ஐம்புலன்களும் அவன் படையின் சக்தியோடு சேர்ந்து அவள் தண்டத்தில் புகுந்து அழிய சக்தியற்ற நிலையில் இருந்த பண்டாசுரனை திரிபுரசுந்தரி அவன் சேனையோடு அழித்தாள்.  இதன் தாத்பர்யம் என்ன?

ஒருவர் தன்னுடைய ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்வதின் மூலம் மனதில் தோன்றும் மற்ற அனைத்து சலனங்களையும் அழித்துக் கொண்டு விடுகிறார். அப்போது அவர்களின் முழு கவனமும் தம்மை மறந்த நிலையில் சென்று ஒரே நிலையை நோக்கியபடி இருக்கும். அப்போது மனதில் வேறு யோசனைகள் செய்ய இடம் இருப்பது இல்லை. இந்த நிலையை எடுத்துக் காட்டுவதே அஸ்வாரூடை தேவி அவளது தண்டம் மூலம் பண்டாசுரனின் ஐம்புலன்களையும் சக்தியையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அவனை சக்தியற்றவனாக்கி  அழிய வைத்த நிலை ஆகும்.

பண்டாசுரனை அழித்தது என்பது அவன் உடலை அழித்த நிலை ஆகும். அவன் ஆத்மாவை அல்ல. ஏன் எனில் அவனது அனைத்து புலன்களையும் உள்ளடக்கிய ஆத்மாவை தன் தண்டத்தில் முதலிலேயே இழுத்துக் கொண்டு விட்டத்தின்  மூலம் அவனை தன் வசம் இழுத்துக் கொண்டு விட்டாள் அல்லவா. அப்போதே அவன் ஒரு சக்தியும் இல்லாத ஜடமாகி விட்டான். ஒரு ஆத்மாவின் ஜனனமும் மரணமும் ஒரே இடத்தில்தான் அதாவது பராசக்தியிடம் உற்பத்தி ஆகி முடிவையும் பெறுகிறது என்பதை எடுத்துக் காட்டவே ஐம்புலன்களையும் கொடுத்து பண்டாசுரனை படைத்த அந்த தெய்வமே முதலில் அவனுடைய ஐம்புலன்களையும் தன்னுடைய இன்னொரு அவதாரமான அஸ்வாரூடா தேவி மூலம் தன்னிடம் திரும்ப எடுத்துக் கொண்டு  தன்னுடைய இன்னொரு அவதாரமான திரிபுரசுந்தரி எனும் தேவி மூலம் அழித்த நிலையைக் காட்டுவது ஆகும்.  அஸ்வாரூடா தேவி  என்பவள் யார்?  பராசக்தியின் உடலின் சக்தியில் இருந்து வெளிவந்த திருபுரசுந்தரியின் கையில் இருந்த   பாசக்கயிற்றில் இருந்து  வெளியானவளே அஸ்வாரூடா தேவி என்பதினால் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தன்  சக்தியில் இருந்து வெளிப்படுத்திய இன்னொரு சக்தியில் இருந்து வெளிப்படுத்திய அஸ்வாரூடா தேவி என்பவளும் பராசக்தியின் இன்னொரு அம்சமேயாகும்.  இப்படியாக படைத்தவளே பல்வேறு ரூபங்களில் தோன்றி தானே படைத்தவனை அழித்தாள். இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவார்த்த உண்மை என்ன?

ஆன்மீக ஞானம் பெற்று கடவுளிடம் முழுமையாக சரண் அடைந்து விட வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் முதலில் என்ன செய்ய வேண்டும்? தன் ஐம்புலன்களையும் அடக்கி, வேறு எந்த எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது சக்தி முழுவதையுமே அந்த கடவுளின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த நிலைக்கு தன்னை ஆளாக்கிக்  கொண்டதும் அவன் மனது வெறுமை ஆகி விடுகின்றது. வேறு யோசனை செய்யும் நிலையில் அவன் இருப்பதில்லை. அப்போதுதான் அவன் ஞானம் பெற்று மோட்ஷத்தை அடைவான். இந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்களையும் அழிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே பண்டாசுரன் மற்றும் அவனது சேனையின் ஐம்புலன்களையும் முதலில் தமது தண்டத்தில் அடக்கிக் கொண்டு அவர்களை அஸ்வாரூடை அழித்த நிலை ஆகும்.

பண்டாசுர யுத்தம் முடிந்தது முதல் உலகெங்கும் இருந்த மன்னர்கள் அடுத்த நாடுகள் மீது படையெடுத்து தம் ஆட்சியில் அந்த நாட்டை இணைத்துக் கொள்ள எண்ணியபோது முதல்படியாக அஸ்வமேத யாகத்தை செய்யலானார்கள். தாம் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அஸ்வமேத யாகம் செய்து, அந்த யாகத்தில் பிரதானமாக அஸ்வாரூடை தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு தனது நாட்டு கொடியுடன் கூடிய அஸ்வாரூட யாக தண்டத்தை யாக குதிரை மீது கட்டி அதை எந்த நாட்டைக் கைப்பற்ற எண்ணினார்களோ அடுத்த நாடுகளில் ஓட விடுவார்கள். அந்த குதிரை எந்த நாடுகளில் எல்லாம் தடை இன்றி ஓடிச் செல்லுமோ அந்த நாட்டு அரசர்கள் தாம் யுத்தம் செய்ய விரும்பவில்லை என சரண் அடைந்த நிலையை காட்டியது. ஆனால் எந்த நாட்டு மன்னன் அந்த குதிரையின் ஓட்டத்தை தடுத்து நிறுத்த முயல்வானோ அவர்கள் யுத்தம் செய்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நேரிட்டது.

அஸ்வாரூடை எப்படி பண்டாசுரனின் புலன்களையும் சக்தியையும் தமது தண்டத்தில் அடக்கிக் கொண்டு வெற்றி கொண்டாளோ அதைப் போலவே அஸ்வமேத யாகத்தில் அஸ்வாரூடையின் அருளைப் பெற்ற மன்னர்களும், எதிரி நாட்டு மன்னர்களின் சக்தியை யாக குதிரையின் மீது வைத்துள்ள அஸ்வாரூட தண்டம் தன்னுள் அடக்கிக் கொண்டு விடும், அப்போது அவர்கள் தமது பலத்தை இழந்து தம்மிடம் சரண் அடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டார்கள். முதலில் அஸ்வாரூடா யாகம் என்றே அழைக்கப்பட்டு வந்திருந்த யாகம் காலப்போக்கில் இன்னும் பல மந்திரங்களை உள்ளடக்கிய யாகமாகி அஸ்வமேத யாகம் என மருவியது என்பதாக சில பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். அஸ்வா என்பது குதிரையைக் குறிப்பதாகும்.

பண்டாசுரனின் அழிவிற்கு மூல காரணமே அவன் புலன்கள் அனைத்தையும் அஸ்வாரூடையின் தண்டம் ஆக்ரமித்துக் கொண்டு அவனது  மனதை  வேறு  எந்த யோசனையையும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுதான்.  மனது வெறுமை ஆகிவிடும்போது  ஒருவனுடைய அலைபாயும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட்ட நிலைக்கு சென்று அவன் உணர்வற்ற ஜடமாகி விடுகிறான். உணர்வும் உடம்பும் ஜடமாகி விட்டவன் மரண நிலைக்கு சென்று  விடுகிறான்.   இந்த நிலைக்கு  பண்டாசுரனை  அஸ்வாரூடை தேவி கொண்டு செல்ல, அந்த நிலையில் இருந்தவனை திரிபுரசுந்தரி  எளிதில் வீழ்த்தி அழிக்கின்றாள்.

பண்டாசுர வதத்தில் வெளிவந்த அஸ்வாரூடையின்  தோற்றத்தின்  மூலம் புலன்களை அடக்கும் மூல தத்துவத்தை  நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.  உணர்வுகள் ஜடமாகி விடத் துவங்கும்போது வாழ்கையின் இன்பமோ, துன்பமோ  அதன் நிகழ்வுகள் நம்மை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. மன பயம் விலகி எதையும் எதிர்கொள்ளும் ஆத்ம சக்தி பெறுகிறோம்.  மரணத்தை தொடும்வரை ஆத்ம சக்தி பெற்றவர்களது வாழ்கை எளிதாகி, இனிமையாகி விடும். அந்த நிலைக்கு சென்று விடும்போது மனவிடுதலை பெற்று ஆத்ம ஞானம் பெறுவார்கள்.  ஆத்ம ஞானம் பெற்றவன் இறைவன் அருளை பரிபூரணமாக பெற்று விட்டவன் ஆகிறான். ஆகவே நாம்  அலை பாயும்  நமது புலன்களை அடக்கிக் கொண்டு, ஆத்ம சக்தி பெற்று  வாழத் துவங்க வேண்டும் எனில் முதலில் ஐம்புலன்களையும் அடக்கவல்ல சக்தி தரும்  அஸ்வாரூடையின் அருளை முழுமையாகப்  பெற வேண்டும்.

ஆகவேதான் அஸ்வாரூடையை மனதார துதித்து வந்தால் அலைபாயும் மனது கட்டுப்படும், எண்ணங்கள் சீரடையும். எப்போது சீரான எண்ணங்கள் மனதில் தோன்றத் துவங்குமோ அப்போதே மனமும் அமைதி பெற்று உள்ளத்தின் ஆத்ம சக்தியும் பெருகும். தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபம் செய்தால் நமக்கு ஏற்ப்படும் தீமைகள் அழியும் என்பார்கள்.  அந்த ஸ்லோகம் இது:

அம்பிகா அனாதினிதன அஸ்வாரூடா அபராஜிதா
-:இந்த பிரார்த்தனையின் பொதுவான அர்த்தம் இது :-

”உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான் என் மனதை முழுமையாக சரணடைய வைக்கின்றேன்”.
(சிறு குறிப்பு:- : மேலே கொடுக்கப்பட்டுள்ள மந்திரங்களில் எழுத்துப் பிழை இருக்கலாம். பொதுவான மந்திரம் என்ன என்பதை மந்திரத்தின் அர்த்தத்துடன் வாசகர்களுக்கு தெரியப்படுத்தப்படுத்தவே எழுதி உள்ளேன். இந்த மந்திரங்களை பாராயணமாக உச்சரிக்கும் முன், பண்டிதர்களை அணுகி சரியான உச்சரிப்பைப் அறிந்து கொள்ள வேண்டும்.)

அதைப் போலவே அஸ்வாரூடை படத்தை வீட்டு வாயிலில் காவல் தெய்வமாக மாட்டி வைத்தால் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது. காரணம் அஸ்வாரூடை எதிரில் வரும் தீய சக்திகளின் அனைத்து சக்திகளும் அவள் கையில் உள்ள தண்டத்தில் அடங்கி விடுவதினால் தீய சக்திகளினால் வீட்டில் நுழைந்து தீமைகளை விளைவிக்க முடியாது.  அப்படி  நுழைந்தாலும் வீட்டில் உள்ளவர்களை அவற்றினால் ஒன்றும் செய்ய இயலாது போய்விடும்.

இதனால்தான் இன்றுள்ள நிலையில் அமைதி கிடைக்க பல காலம் மறைந்து  வந்திருந்த அஸ்வாரூட யாகங்கள் மற்றும் ஹோமங்கள் மீண்டும் அங்காங்கே நடக்கத் துவங்கி உள்ளன. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  வைகோம்  மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.