ரகுவம்சம்-5
– சாந்திப்பிரியா – 

அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம் 

ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும்  தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் தனது உடலையும், முகத்தையும் முழுமையாக மூடி இருந்த  சேலை வழியே பார்த்துக் கொண்டே நடந்து செல்கையில் அவள் கூட இருந்த அவளது தோழியோ அந்தந்த மன்னர்களையும், ராஜகுமார்களையும் குறித்த அருமைப் பெருமைகளைக் கூறியவாறு அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தபடி ஆவலுடன் கூடவே சென்றவண்ணம் இருந்தாள்.  அந்த மன்னர்களும், ராஜ குமாரர்களும்   இந்துமதி தம் அருகில் வரும்போது தமக்கே உரிய தோரணைகளை  வெளிப்படுத்தியவாறு இருந்து கொண்டு அவள் கவனத்தைக் கவர முயற்சி செய்தார்கள்.

ஒரு அரசன் தனது கையில் வைத்திருந்த ரோஜா மலரை சுற்றி சுற்றி சுயற்றியவண்ணம் அழகு சேட்டை செய்தபடி இருக்க, இன்னொருவன் தான் எத்தனை செல்வந்தன் என்பதைக் காட்ட தங்க இழைகளினால் நெய்யப்பட்ட தனது அங்கவஸ்திரத்தை   (ஒரு பக்க சட்டை மீது போர்த்திக்  கொள்ளும் துணி)  அவ்வபோது கையில் எடுத்தெடுத்து மீண்டும்  தன்னுடைய தோள் மீது போர்த்திக் கொண்டான்.  அதே போல தனது செல்வத்தைக்  கட்ட எண்ணிய இன்னொருவனோ தனது மார்பிலே கிடந்த மின்னும் வைர வைடூரிய மாலையை அலட்சியமாக வெளியில் எடுத்து தனது தோள்  மீது போட்டுக் கொண்டார். அவர்களை எல்லாம் கடந்து சென்றபோது இந்துமதியுடன் சென்ற தோழியோ சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் அவரவர் அருமை பெருமைகளை அவளுக்கு கூறிக் கொண்டே சென்றாள்.  இப்படியாக அவரவர்   இந்துமதியின் கவனத்தைக் கவர பல்வேறு சேஷ்டைகளை   செய்தபடி இருந்தாலும், அவர்களில் மாறுபட்டு அயன் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்ற இந்துமதியின் கண்களும், அயனுடைய கண்களும் நேருக்கு நேர் மோதின.  அவரது அமைதியான, அடக்கமான முகமே அவர் குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருக்க அவள் கூடச் சென்ற தோழியோ,  ‘ராஜகுமாரி அவர்களே மேலே செல்லலாமா’ என இந்துமதியை கேட்க அயன் முன் நின்று கொண்டிருந்த இந்துமதியோ  சற்றும் தயங்காமல் தனது கையில் இருந்த மாலையை அவர் கழுத்திலே போட பெரும் கரக ஒலி எழுப்பி அனைவரும் அதை வரவேற்றனர்.

தனது மகள் தேர்வு செய்த ராஜகுமாரனை நோக்கி ஓடோடி வந்த அரசரும், அவரை ஆரத் தழுவி, தன்னுடன் தனது இருக்கைக்கு அழைத்துச் சென்று அவரைக் குறித்த அனைத்து விவரத்தையும் விலாவாரியாக சபையில்  எடுத்துரைத்தப் பின் அனைவர் முன்னிலையிலும் தனது மகளுடன் அயனுக்கு திருமண நிச்சயம் செய்வித்தார். அங்கு அந்த சடங்கை செய்ய தயாராக அமர்ந்திருந்த புரோகிதர்கள் ஹோமக்கிரியை மூட்டி, அக்னி  சாட்சியாக அவர்களுக்கு திருமணம் செய்வித்தார்.  தனது சுற்றார்களுடன் விரைவில் மீண்டும் அங்கு வருவதாக உறுதி கொடுத்து விட்டு இந்துமதியை அழைத்துக் கொண்டு அயன் தனது நாட்டுக்கு திரும்பலானார்.

இந்துமதியின் தந்தையும் அயனுக்கு அநேக பொருட்களையும், பொன்னையும் தந்து அவருடன் மூன்று நாட்கள் அதாவது பாதி தூரம்வரை அவருடன் பயணித்தப் பின்னர் நாடு திரும்பினார். அதே நேரத்தில் இந்துமதி தமக்கு கிடைக்காத கோபத்தில் வழியில் படையினரோடு பதுங்கி இருந்த பல நாட்டு ராஜகுமாரர்களும் அயனை வழிமறித்து அவனுடன் போர் புரியத் துவங்கினார்கள்.  நான்குபுறமும் படைகள் சூழ்ந்து தம்மை தாக்கினாலும் அவர்கள் அனைவரையும் மூர்கத்தனமாக  அயன் தாக்கத் துவங்கினான். ஒரு கட்ட யுத்தத்தில் பிரியதர்சன் தனக்கு பாதுகாப்பாக இருக்கக் கொடுத்த  விசேஷ பாணம் நினைவுக்கு வர அதை அவன் எதிரிகள் மீது பிரயோகித்தான். அவ்வளவுதான் அந்த பாணம் பல மன்னர்களையும் அவர்களது படையினரையும் கொன்று குவிக்க அயனும் பாதுகாப்பாக இந்துமதியை அழைத்துக் கொண்டு நாடு திரும்பினார்.

அதற்கு இடையில் தனது மகன் அயன் வெற்றிகரமாக நாடு திரும்பி வந்து கொண்டிருந்த செய்தியைக் கேட்ட மன்னன் ரகுராமனும் மனம் மகிழ்ந்து அவர் வரவை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.  அயனும் இந்துமதியுடன் சென்று தாய் தந்தையரைக் வணங்கித் துதிக்க அவர்களும் அவனுக்கு அளவற்ற ஆசிர்வாதம்  .செய்தார்கள். அடுத்த நாளே அயனிடம் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் தந்துவிட்டு ரகுராமனும் முக்தி தேடி வனத்துக்கு சென்று விட்டார்.  அயனும் தனது தந்தை வழியிலேயே திறமையாக நாட்டையும் ஆண்டு வந்தார். மக்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க அயனும் அவ்வப்போது தமது பகைவர்களை ஒடுக்கி வந்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த அயனும் பிராணனை அடக்கி, யோகங்கள் செய்து  சித்திகள் பலவற்றையும் பெற்றார். தந்தை வழி பிழறாமல் நல்ல ஆட்சி தந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் அவரது தந்தை ரகுராமனும் தமது யோக சக்தியைக் கொண்டு மூச்சை அடக்கி முக்தி தேடிக் கொண்டார் என்ற செய்தி கேட்டு மிக்க துக்கம் அடைந்தார். தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை செய்து முடித்தப் பின் மீண்டும் ஆட்சியிலே கவனத்தை செலுத்தலானார். இடையிலே அவருக்கு சூரியனை ஒத்த புத்திரன் ஒருவன் பிறந்தார்.  பத்து திக்குகளும் போற்றும் அளவில் அழகுற இருந்த மைந்தனுக்கு தசரதன் என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

தொடரும்………. 6