அய்யா வழி தோன்றக் காரணம்

பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கலி யுகத் துவக்கம் ஏற்பட்டதாக நம்பப்பட்ட நேரம் அது. அப்போதுதான் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் பெருமளவு துவங்கியது. அவர்களின் முயற்சிகளினால் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஜாதிக் கொடுமைகள் நிகழ்த் துவங்கி இருந்தன. முக்கியமாக தென் இந்தியாவில் கன்யாகுமரி மற்றும் கேரளப் பகுதிகளான திருவனந்தபுரம், திருவான்கூர் போன்ற இடங்களில் மேல் ஜாதி மற்றும் கீழ் ஜாதி என்ற பிரிவுகள் தோன்ற ஜாதிக் கொடுமை மிக அதிகம் இருந்தது. கர்ம கலி தோஷத்தினால் ஒற்றுமையாக வாழ்ந்திருந்த மக்களை பல சாதிகளாக பிரித்து, ஜாதி கிளர்ச்சியை உண்டு பண்ணி கீழ் ஜாதியினர் எனப்பட்டவர்களிடம் கடுமையான வேலை வாங்கி, கடும் சுமையான வரிகளை விதித்து திருவாங்கூர் மன்னர்கள் மூலம் மக்களை அரசாளத் துவங்கினார்கள். கீழ் ஜாதியினருக்கு மட்டும் தாலி முதல் அனைத்து பொருட்களுக்கும் வரி வைத்து கொடுமை செய்தார்கள். ஜாதிக் கொடுமைகள் எந்த அளவு இருந்தது என்றால் உயர் ஜாதியினர் முன்னால் தாழ்ந்த ஜாதியினர் செருப்பு அணியக் கூடாது, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இடுப்புக்கு மேல் அவர்களது உடலை துணியால் மறைத்திருக்கக் கூடாது. திறந்த மார்புடன் இருக்க வேண்டும். உயர் ஜாதியினர் எந்த தாழ்ந்த ஜாதியினரையாவது கொன்றாலும் தண்டிக்க சட்டம் கிடையாது. கீழ் ஜாதியினர் எனக் கூறப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழையக் கூடாது. அவர்கள் தமது பெயர்களாக கடவுளின் பெயர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. உயர் ஜாதியினரிடம் பேசும் போது பத்தடி தள்ளி நின்று பேசவேண்டும். எந்த நிலையிலும் தலைப்பாகை கட்டிக் கொள்ளக் கூடாது எனப் பலவிதமான நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமாக நாடார்கள், சாணர்கள் போன்றோர் அப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். அதன் எதிரொலியாகப் பிறந்ததே அய்யா வழி எனும் இயக்கம். அந்த நிலையில் கன்யாகுமரிப் பகுதியில் அப்படிப்பட்ட அடக்கு முறைக்கு ஆளானவர்களின் பாதுகாவலராக அவதரித்தவர் அய்யா வைகுண்டர் என்பவர் . அவரை விஷ்ணுவின் அவதாரம் எனப் போற்றி வணங்குகின்றனர். அன்று நிலவி வந்த ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து நின்று தவித்திருந்த மக்களுக்குத் துணைவராக வாழ்ந்து மறைந்தார். அவர் குறித்த வாழ்க்கை வரலாறு அகிலத்திரட்டு அம்மனை எனும் நூலில் கூறப்பட்டு உள்ளது.

அய்யா வைகுண்டரின் ஒரு  ஆலயம் 

அய்யா வைகுண்டர் தோன்ற காரணமான பின்னணிக் கதை

உலகம் படைப்பதற்குப் முன்னரே பிரும்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பல தெய்வங்களையும் சக்தி படைத்தாள். அவர்கள் படைப்பினைத் தொடர்ந்து வேதங்கள், வானரங்கள், பிற அண்டங்கள் என அனைத்தும் தோன்றின. அந்த நேரத்தில் தீய எண்ணம் கொண்ட ஒருவனும் படைக்கப்பட்டான். அவன் ஆள ஒரு இராஜியமும் உருவாயிற்று. நல்லவர்களையும் தீயவர்களையும் படைத்தால்தானே பூவுலகில் உள்ளவர்கள் நன்மை தீமைகளை புரிந்து கொள்ள முடியும்.

அதற்காக ஈசன் எனப்படும் சிவபெருமான் ஒரு பெரிய யாகம் செய்தார். அந்த யாகத்தின் மூலம் ஒரு பொல்லாதவனைப் படைத்தார். அவனுக்கு குரோணி எனப் பெயர் சூட்டினார். மலைப் போன்ற சரீரத்தைக் கொண்டு மாமிசப் பிண்டமாகப் பிறந்த அசுரன் குரோணி பிறந்த பின் பல நாட்கள் உறங்கிக் கொண்ட இருந்தான். உறங்கிய பின் எழுந்தவனுக்குப் பசி தாளவில்லை. பயங்கரமான சப்தம் போட்டவாறே எழுந்தவன் எழுப்பிய ஓசை தேவர்களை நடுங்க வைத்தது. பசி எடுத்ததும் பூவுலகை நோக்கினான். அங்கு இருந்த அனைவரையும் கொன்று விழுங்கினான். அப்படியும் அவனுடைய பசி அடங்கவில்லை என்பதினால் கடல் நீர் முழுவதையும் குடித்துக் காலி செய்தான். அதுவும் போதவில்லை என்பதினால் கயிலையை வந்தடைந்து அதையும் முழுங்கினான். நல்லவேளையாக அப்போது ஈசன் அங்கு இல்லை. கைலாயத்தை விழுங்கியும் பசி அடங்காமல் வைகுண்டத்தை நோக்கி ஓடினான். அவன் வருவதைக் கண்ட விஷ்ணு அங்கிருந்துத் தப்பி ஓடினார். அவனிடம் இருந்து பிரபஞ்சத்தைப் பாதுகாக்க அவர் தவத்தில் இருந்த ஈசனை துதித்தார். கண் விழித்த ஈசனிடம் நடந்த அனைத்தையும் கூறி அந்த குரோணியை அழிக்க அவர் உதவ வேண்டும் எனக் கேட்க அவனை உடனே அழித்தால் போதாது. அவன் மீண்டும் மீண்டும் வருவான். ஆகவே அவனுடைய வம்சம் முழுவதையும் அழிக்க வேண்டும். இல்லை என்றால் வெவ்வேறு ரூபங்களில் அவன் தோன்றிக் கொண்டே இருந்து அனைவரையும் துயரில் ஆழ்த்துவான் என்றார். ஆகவே அவனை ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு அந்த துண்டுகளில் இருந்து அவனுக்குப் பிறக்கும் வம்சத்தினரை யுகயுகமாக ஆறு யுகங்களில் நல்லவராக அவதாரம் எடுத்து விஷ்ணு கொன்றால்தான் அவன் வம்சமே முழுமையாக அழியும் என்றார்.

அய்யா  வைகுண்டர்  திருவிழாக்களில் பக்தர்கள் 

சிவபெருமானின் ஆணைப்படி விஷ்ணுவும் சிவபெருமானின் ஆசி பெற்று குரோணியுடன் சண்டையிட்டு அவனை ஆறு துண்டங்களாக வெட்டிப் போட்டு அந்த துண்டங்களை ஒவ் ஒன்றாக உயிர் பிழைக்க வைத்து அவனையும் அந்த துண்டங்கள் மூலம் பிறந்த அசுரர்களையும் சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் போன்ற ஐந்து யுகங்களில் கிருஷ்ணர், இராமர், முருகன் எனும் சுப்ரமண்யர் போன்ற அவதாரங்கள் எடுத்து அழித்தப் பின் அவனது ஆறாவது துண்டத்தை ஆறாவது உகத்தில் அதாவது கலிகாலத்தில் கலியை அழிக்கப் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது.

இந்நேரம் தேவர்களின் வாக்கினால் ஈசுரர் தாமே குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில் கலியனாக பிறக்கிறான். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம் இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும், பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல் நீசனிடம் சென்று – “நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார். உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!” ஆகவே “பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும் செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே அட்டி செய்ய மாட்டேனென்று “ஆணையிட்டு தா” என்றார். அதற்க்கு கலிநீசனும் அப்படியே “ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்” என்று ஆணையிட்டான். இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு கொடுத்த வரங்களைப் பறிக்க நாராயணர் கலியுகத்தில் “நாராயண பண்டாரமாக” அவதரித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது.

“பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலையேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுதலுற்றேன்” – அரிகோபாலன் சீடர்

அய்யா வைகுண்டர் தோற்றமும் அவர் கதையும்

கலிநீசனானவன் இப்புவியில் வந்தவுடன் நல்லவை யாவும் மறைந்தன. இக்கலிநீசனானவன் கர்மக் கலிதோசத்தால் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்திருந்த நற்பல குலமக்களை பல சாதிகளாக பிரித்து, சாதிவாரியான கிளர்ச்சியை உண்டுபண்ணி தூறுபட வேலை வாங்கி, கடும்சுமையான வரிகளை வாங்கி மக்களை அரசாண்டான். இக்கொடுமைகளிலிருந்து நல் மக்களை இரட்சித்துக் காக்க, மக்களின் அபயத்திரங்கிய நாராயணர், இந்நீசக்கலியனுக்கு கொடுத்த வரங்களைப் பறித்து கலிநீசன்தனை அழிக்க, தர்மம் தனை வளர்க்க, மேலுக ஏழுலோகத்தார்களையும் சான்றோர்களாக இக்கலியுகத்தில் பிறவிச் செய்து, பின்னர் தானும் வியாச முனிவர் வகுத்த ஆதி ஆகமத்தின் படியே  கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தியதி (1st March C.1833) வெள்ளிக்கிழமை இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது அவதாரமாக திருச்செந்தூர் கடலில் மகர கருவறையில் அரூபமாய் ஆதிநாராயணருக்கும் திருமகள் மகாலெட்சுமிக்கும் மகனாக வால ராமசந்திர சூரிய நாராயணர் தானே மும்மூர்த்திகளும் தானாகி சர்வ அதிபதியாக வைகுண்டராக அவதரித்தார்.

“அலையிலே துயில் ஆதிவராகவர் ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில் முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின் உற்றதெச்சண மீதில் இருந்துதான் உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின் உவமை சொல்ல உகதர்மமாகுமே. திருமொழி சீதையாட்க்கு ஜெகதலம் புகழ எங்கும், ஒரு பிள்ளையுருவாய்த் தோன்றி யுகபர சோதனை பார்த்து திருமுடி சூடிதர்ம சீமையில் செங்கோல் ஏந்தி ஒருமொழி அதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்” – அகிலத்திரட்டு

வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில் இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரை யெனுமிடத்தில் பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி உடையும், கையதிலே மாத்திரைக் கோலும், கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, தலையில் தலைப்பாகையும் அணிந்து வைகுண்டர் என்ற பெயரோடு சுவாமி தோப்பை நோக்கி வந்தார்.

“ஆண்டாயிரத்து எட்டு மாசி மாதத்திலே, கடலின் கரையாண்டி ஸ்ரீமந்நாராயணராகிய நானே பண்டாரமாகத் தோன்றி தெட்சணாப்புரியில் கூடி தர்மமுற்று வைகுண்டராக பள்ளி கொண்டோம்”- அகிலத்திரட்டு

பின்பு ஆறு ஆண்டுகள் மக்களின் மேன்மைக்காகவும், கலியன்தனை அழிப்பதற்காகவும் சிவனை நோக்கி தவம் இருந்தார். அங்கே ஒரு பண்டாரம் போல் இருந்து கொண்டு பதினெட்டு சாதி மக்களையும் ஒருதலத்தில் வருத்தி, தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்த்தார். சந்ததியில்லாத பேர்க்கு சந்ததி கொடுத்தார். தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுத்தார். தீண்டாமை என்னும் இனவெறியால் பாதிக்கப்பட்டோருக்கும், அவர் அவர் தம் குறை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை அருள் பாலித்தார். ஆண்டவர் வைகுண்டரின் அருளினால் குருடர்கள் பார்வை பெற்றனர், ஊமைகள் பேசினர், செவிடுகள் கேட்கப் பெற்றனர், முடவர்கள் நடந்தனர், பிள்ளை வரம் வேண்டி வந்தவர்கள் பிள்ளைபேறு பெற்றனர். இப்படி எண்ணடங்கா அற்புதங்களை செய்த மண்ணளந்த மாயன் வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் இருந்தனர். இவர்கள் முந்தைய துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்ட பஞ்சவர்கள். இக்கலியுகத்தில் ஐந்துபேரும் சீடர்களாய் பிறப்பெடுத்தனர். இவர்களில் ஐந்தாவது சீடரான அரிகோபாலனால் எழுதப்பட்டதே அகிலத்திரட்டுஎனும் புனித ஆகமம் ஆகும்.

மகிமைகள்

உலகளந்த ஆண்டவராகிய வைகுண்டரின் அருள் பிரதாபங்கள் அவனி எங்கும் பரவிற்று. சாதி, சமய பேதங்களை கடந்து சாரைசாரையாக மக்கள் சுவாமிதோப்பை நோக்கி வந்தனர். வந்த மக்களுக்கு “மானிடரே! தர்மம் வைகுண்டம், தான் பிறந்தேன் இப்போது” என்று சொல்லி தர்மம் நினைத்து உலகம் பதினாலும் அறிய தர்மம் போதித்தார்.  “இன்றுமுதல் எல்லோரும் ‘இகபரா தஞ்சமென்று’ ஒன்றுபோல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ, காணிக்கை இடாதுங்கோ, ஆணுடன் பெண்ணும் கூடி ஆசாரம் செய்திடுங்கோ, மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ, வைகுண்டருக்கே பதறி வாழுவது அல்லாமல், பொய் கொண்ட மற்றோர்க்குப் புத்தி அயர்ந்து அஞ்சாதுங்கோ!”  என்ற உபதேசங்களை கூறி மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். மக்களறிய தர்மமிதை கூறிய எம்பெருமாள், துரிதமுடனே தொல்புவியில் வாழுகின்ற பட்சிபறவைகளுக்கும், பலசீவ செந்துகட்கும் தர்மம் போதித்தார். ஒடுக்கப்பட்ட ஆடவர்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது, அங்க வஸ்திரம், தலைப்பாகை அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் என்னை வழிபட வேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோத்ததுவ ரீதயாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார்.

தீண்டாமை என்னும் தீயசக்தியை ஒழிக்க திருமண்ணை எடுத்து தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த மொழியில் என்னை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வழிபடச் செய்தார். எளியோர், வலியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி அன்னம் கொடுத்து “சமபந்தி போஜனம்” நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். சமத்துவ கூட்டு வழிபாட்டு முறையை உருவாக்கி கொடுத்து “தர்மம் பெரிது தாங்கி இருங்கோ மக்காள், தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்” என்று தர்ம நெறிகளை போதித்தார்.

“மானமாக வாழ்ந்தால் மாளும் கலி தன்னாலே”

என்று கூறி மக்களுக்கு தன்மான உணர்வுகளை ஊட்டினார். வரும் தர்மயுகத்தில் “தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு, வாங்குகிற பேர்கள் இல்லை” என்ற நிலை வரும் எனவும், தர்ம யுகத்தை நீங்கள் எல்லோரும் அடைய வேண்டுமானால் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து வாழவேண்டும் எனவும், ஆடு, கிடாய், கோழி போன்றவற்றை பலி இட்டு இறைவனை வணங்கும் நம்பிக்கைகளை முற்றிலும் நீங்கள் துறக்கவேண்டும் என்று இறைவழி பாட்டிற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். இதனால் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் வளர்ந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர். 

வைகுண்ட சுவாமியின் உபதேசங்களாலும், ஆசிர்வாதத்தினாலும், வழிகாட்டல்களாலும் பல சாதி மக்களும் பயன் அடைந்தனர். இந்நிலை கலி வயப்பட்டோரின் கண்களை உறுத்தியது. தர்மத்தின் வளர்ச்சி மற்றும் பிரபலத்தால் சுவாமி தோப்பில் “சமதர்ம சாம்ராஜ்யம்” ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறதே என்று மனம் தவித்தவர்கள், திருவாங்கூர் மன்னனிடம் புகார் செய்தார்கள்.   

இதைக் கேட்ட மன்னன், ஏதோ ஒரு சூட்சம் தெரிகிறது என சாஸ்திரியை வருத்தி ஆருடம் கேட்க, அதற்கு சாஸ்திரியும் “அரசே! கர்மக் கலிதோசம் மண்டலம் ஏழும் சுற்றிப் பரந்தது, அதனால் கர்த்தர் அரிநாராயணர் கடிய கோபம் கொண்டு பூமியிலே வந்து பிறக்கிறார். கலி தோசத்தைத் தர்மத்தாலே அழித்து நற்பூமி ஆக்குகிறார். நாடெங்கும் சொல்லொன்றுக்குள் ஆள நாராயணர் மனுவாய் பிறந்து வைகுண்டம் என்று சொல்லி வருகிறார். நல்லோரை எல்லாம் நாடி மிக எடுத்து வரங்கள் கொ டுத்து ஆள வருகிறார், அவர் வரும் நாளிதுதான்” என்று சாஸ்திரியும் சாஸ்திரத்தைப் பார்த்து உரைத்தான். 

அதற்கு குறோணிதன் கொடியால் வந்த நீசனான சுவாதி திருநாள் மன்னன் “ஸ்ரீமன் நாராயணர் பிறக்க வேண்டுமென்றால் எப்படி தாழ்த்தப்பட்ட சாணார் குலத்தில் அவதரிக்க முடியும்?” என நினைத்து தனது சாவினை அறியாது சாடி படை ஏவி வைகுண்டரைப் பிடிக்க எண்ணினான். அப்போது யாதவ குலத்தில் பிறந்த கோனாரான பூவண்டர் குறிக்கிட்டு, அரசே! “ஆதிநாதன் எதையும் இழிகுலமென பார்க்கவே மாட்டார். அழிவது கலியுகத்தாச்சு என்றால் திட்டமாக வருவார்”. இருமூன்று யுகங்கள்தன்னில் ஒப்புடன் மனுப்போல் தோன்றி, உவமைகள் பலதும் செய்துள்ளார். 

சாணெனக் குலத்தில் மாயன் சார்வாரோ? என்றென்ன வேண்டாம். பாணனாய் தோன்றி நிற்பார்; பறையனாய் தோன்றி நிற்பார்; தூணிலும் தோன்றி நிற்பார்; தோலனாய் தோன்றி நிற்பார்; ஆணெனவும் தோன்றி நிற்பார்; அவருரு கேட்டறியவில்லையோ!

நாராயணர் குசவனின் குலத்தில் வந்தார், குறவனின் குலத்தில் வந்தார், மசவெனக் குலத்தில் வந்தார், மாடெனக் குலத்தில் வந்தார், விசுவெனக் குலத்தில் வந்தார், வேடெனக் குலத்தில் வந்தார், அசுவெனும் குலத்திலும் அவதரித்துள்ளார்; அவர் உரு கேட்டதில்லையோ!

எவ்விடமும் தானாய் மேவி இருப்பவர்க்கு எந்த சாதி? எவ்விடமும் ஆகாதென்று அவர் தள்ளமாட்டார். செம்மை ஆக்குவோன் சூட்சத்தை சொல்லி முடியாதையா! என்று புத்திமதி கூறினார். 

பூவண்டரின் அறிவுரையை கேட்க மறுத்த நீசன், “நன்கு கற்ற மேல்குலம் அதிலே மாயன் நற்குணமாகப் பிறக்காமல், சிறுகுலம் புக்குவாரோ? என நினைத்து வைகுண்டரை சிறை பிடித்து திருவனந்தப்புரத்தில் அமைந்துள்ள சிங்காரத்தோப்பு சிறையில் வைத்து கொடுமைகள் செய்தான். சாராயத்தில் விஷத்தைக் கலந்து குடிக்கக் கொடுத்தான். சுண்ணாம்பு காள வாயில் வைத்து நீற்றினான். விறகுகளை அடுக்கி கொளுத்தி நெருப்பாக்கி அந்த நெருப்பிலே நடந்துவர செய்தான். வைகுண்டரை விஷமோ ஒன்றும் செய்யவில்லை. நெருப்பின் கொடிய நாக்குகள் அந்த நெடியோனை தீண்டவில்லை. இது கண்டு மிரண்ட மன்னன் இறுதியாக காட்டுப் புலியை பிடித்து வந்து மூன்று நாள் பட்டினிபோட்டு புலியை அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் புலிக்கு இரையாக்க வைகுண்டரை தள்ளினான். பசித்த புலியோ இவ்வுலகைப் படைத்த இறைவனைக் கண்டதும் அந்த பரம்பொருளின் பாதார விந்தங்களை வணங்கி நின்றது. இந்நேரம் தன் மீது ஏவப்படும் கொடுமைகளைப் பார்த்து கலங்கிக் கொண்டிருந்த நல்மக்களைப் பார்த்து வைகுண்டர் கூறுவார்.

“நாட்டுக் கரிவிதிநான் நாராயணனும் நான், பட்சி பறவை பலசீவ செந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும் நான், மண்ணேழளந்த மாயப் பெருமாள் நான், விண்ணேழளந்த விஷ்ணு திருவுளம்நான்,

ஏகம் படைத்தவன் நான், எங்கும் நிறைந்தவன் நான், ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால் நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ, சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ,

இந்நீசரெல்லாம் என்னை அறியாவிடினும், இந்நிலத்தில் நான் படைத்த மிருகமறியாதோ..?”

கலங்க வேண்டாம் கண்ணுமக்காள் சான்றோர்களே என்றார். இந்த அற்புதங்களைக் கண்டதும், இந் நிகழ்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மன்னனும், மன்னனின் படைகளும் இவர் மனிதனே அல்ல, இவரே இந்த கலியுகத்தை முடிக்கும் பூரண இறை அவதாரம் என உணர்ந்தனர். உடனே உலகளந்த மாயனாகிய வைகுண்டரை 110 நாட்களாக கொடுக்கப்பட்ட சிறை தண்டனையிலிருந்து கொல்லம் ஆண்டு 1014 பங்குனி மாதம் 14-ஆம் தியதி (26th March C.1839) செவ்வாய்கிழமை விடுதலை செய்தனர். இவ் இகனைகளின் மூலம் பண்டாரத்தை சீண்டியதால் கலிநீசனின் வரங்கள் பறிக்கப்பட உள்ளதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

அய்யா வைகுண்டரின் குடுவை, கைத்தடி போன்ற பொருட்கள்

ஆலய கருவறை எனும் சன்னதி.  இதில்  அய்யா வைகுண்டருக்கு 
சிலை கிடையாது. அவர் பயன்படுத்திய பொருட்கள் 

மட்டுமே வைக்கப்பட்டு உள்ளன.

சோதனைகளை எல்லாம் வென்று மீண்டும் சுவாமி தோப்பிற்கு வர நினைத்த வைகுண்டர், உலகில் பலபெயர்களில் காவல் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பஞ்சதேவர்களை மனதில் நினைத்தார். உடனே பஞ்சத் தேவர்களான கருடன், சிமிழன், கத்திக்காரன், சிப்பாயி, முரடன் எனும் ஐந்து பேரும் வைகுண்டரிடம் வந்து சேர்ந்தனர். உடனே மண்ணளந்த மாயனாகிய வைகுண்டர் ஐந்துபேருக்கும் நல்வரமும் கொடுத்து தன்னுடன் ஏற்றுக்கொண்டார். இவர்கள் அன்றுமுதல் “சிவாய்மார்கள்” என்றழைக்கப்படுகின்றனர். சான்றோர்கள், சிவாய்மார், மற்றும் சீடர்கள் சூழ தெட்சணம் வந்த வைகுண்டர் தம் மக்களை தவவலிமை மிக்கவர்களாக்க எண்ணி பல நூறு குடும்பத்தார்களை துவையல் தவசு செய்யச் செய்தார். “தாணுமாலயனும் நானே, ஒரடியால் உலகளந்த உண்மைகளையும், பத்தவதாரம் பிறந்த பாதைகளையும் சொல் மகனே” என சீடர்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்து இவர்களின் மூலம் ஊர், ஊராக தம் வழிபாட்டு ஆலயங்களை ஏற்படச்செய்தார். அப்போது மாயவனார் ஆனந்தமே பெருகி நித்த திருநாள் இகனைதனை தம் “பதி”களில் நடத்தலுற்றார். 

தாணுமாலயனாகிய நாராயணர் “சிவநாரயணராக” இருந்து உலகில் உள்ள அனைத்து தெய்வசக்திகளையும் திருக்கல்யாண இகனை மூலம் தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். இனி இக்கலியுகத்தை அழித்து, தர்மயுகம் என்னும் புது யுகத்தை வருத்தி கலிநீசனின் வரங்களைப் பறித்து ஏழு யுகக்கணக்கையும் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்து ஆகாத பேர்களையெல்லாம் அழித்து நரகத்தில் தள்ளி நரக வாசலை அடைத்து விட்டு, நல்லோர்களை எழுப்பி நாலு வரமும் கொடுத்து சாகாத வாழ்வளித்து, தர்மமாகத் தரணியோர் குடைக்குள் ஆள சகலரும் புகழவரும் தர்மராசாவாக, சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டி பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டி துவாரகையில் மக்களை எல்லாரையும் வைத்து துவரயம் பதி இருந்து அரசு பாவிக்க தாம் வருவதாகவும், அதற்குண்டான காலத்தையும் தீர்க்கதரிசனமாக அருளினார்.

அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்றார்

சுமார் 166 ஆண்டுகளுக்கும் முன் அதாவது 1833 ஆம் ஆண்டு கலியுகத்தை அழித்து தர்ம நெறியை நிலை நாட்ட மனித உருவில் தோன்றிய திருமாலின் பிறப்புடன் ஆரம்பம் ஆயிற்று. 1839 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் ஸ்வாமித் தோப்பிற்கு கிளம்பிச் சென்று ஒரு இடத்தில் தங்கியபடி (தற்போது ஆலயம் உள்ள இடம்) தமது இயக்கத்தை தீவிரப்படுத்தினார். இவ்வாறு மக்களை இரட்சிக்க பண்டாரமாக அவதரித்த நாராயணர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி மாதம் 21-ஆம் தியதி (2nd June C.1851) திங்கள் கிழமை பூச நட்சத்திரத்தில் பகல் பன்னிரண்டு மணிக்கு வைகுண்ட லோகம் சென்றதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

அய்யா வைகுண்டர் வழி

முன் காலத்தில் கீழ் ஜாதியினர் சுத்தமாக இருந்தது இல்லை. கள் அருந்துவதும் புகையிலைப் போடுவதும் தொடர் பழக்கமாக அவர்களிடம் இருந்தது. மீன் இல்லாத உணவு தயாரிக்கப்பட மாட்டாது. ஆகவே அவர்களுடைய வாழ்கையின் முறைகளை மாற்ற அய்யா நினைத்தார். முதலில் அவர்கள் சைவ சாப்பாடு அருந்துபவர்களாக மாறினாலேயே சமுதாயாத்தில் அவர்களுக்கு மதிப்பு ஏற்படும் என நினைத்தார்.

ஆகவே துவையல் பந்தி என்ற பெயரில் கடலில் தினமும் மூன்று வேளைகள் குளிக்க வேண்டும், அவர்களுடைய துணிகளை உடனடியாகத் துவைத்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும, அந்த நேரத்தில் பச்சரிசி மற்றும் பருப்பை உப்புத் தண்ணீரில் சமைத்து அருந்த வேண்டும் ,ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும் என கடுமையானக் கட்டுப்பாடு வைத்த பயிற்சியைத் துவக்கினார்.

இப்படியாக வாகைப் பதி என்ற இடத்தில் ஆறு மாதம் துவயல் பதி என்ற பயிற்சி தந்தார். அதன் பின் முத்தப்பதிக்கு சென்று அங்கும் அதை தொடரச் செய்தார் . அந்த இடத்தில் அவர்கள் காய்கறிகள் மட்டுமே அருந்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் துவையல்காரர்கள் என அழைக்கப்பட்ட அவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று அய்யா வழி இயக்கத்தைப் பரப்பினர். அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பல பிரச்சனைகள் தோன்றினாலும் அனைத்தும் பனி விலகுவது போல விலகிக்கொண்டே இருந்தன.

இன்றைக்கு கன்யாகுமரி மாவட்டத்தில் ஸ்வாமித் தோப்பு என்ற இடத்தில் உள்ள அவரது ஆலயம் இந்து மதத்துக்கு உள்ளேயே ஒரு தனி மத இயக்கமாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, நாக்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி போன்ற பல இடங்களிலும் பரவலாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்து உள்ள மதமாக வளர்ந்து பெருமளவு பக்தர்களைக் கொண்டு உள்ளது. நாடெங்கிலும் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவருடைய பக்தர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அவருக்கு வழிபாட்டுத் தலங்கள் அமைந்து உள்ளன. இன்றும் கன்யாகுமரி, ,திருச்சங்கோடு, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் அய்யா வைகுண்டர் ஆண்டு விழாவின்போது அந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து அரசாங்கமே அவருக்கு பெருமை சேர்க்கின்றார்கள் என்பதில் இருந்து அவர் பெருமையைப் பரிந்து கொள்ளலாம். சூட்சும வடிவில் அவர் மக்களை அருள் புரிந்துக் காத்து வருவதாக நம்புகிறார்கள். இது தனித் தன்மைக் கொண்ட பக்தி நெறி இயக்கம். அய்யாவின் பிறந்த நாள் பெரும் விமர்ச்சையாகக் கொண்டாடப் படுகின்றது. அன்று பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் ஸ்வாமித்தோப்பு ஆலயத்துக்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

அய்யா வைகுண்டர் ஆலயம்

ஸ்வாமித் தோப்பு அய்யாவின் ஆலயத்துக்குச் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அங்குள்ள கிணற்று நீரில் குளிதப் பின்னரே ஆலயத்தில் நுழையலாம். என்றும் வற்றாமல் உள்ள அந்தக் கிணறு அய்யா வைகுண்டர் நிறுவியுள்ளதாம். அது புனித நீராம். அதில் குளித்தால் தீராத நோய்கள் நீங்குமாம். அது போல இந்த ஆலயத்துக்குச் செல்லும் ஆண்கள் தலையில் தலைப்பாகையைப் போல ஏதாவது துணியைக் கட்டிக் கொள்ள வேண்டும். மேல் ஆடை அணியக் கூடாது.

அய்யா வைகுண்டரின் கொள்கைகள்

1) உருவ வழிபாடு கூடாது
2) அன்னதானம் தரப்பட வேண்டும்
3) மக்கள் தங்கி இளைப்பாற நிழல் தாங்கல்கள் நிறுவப்பட வேண்டும்
4) மாமிசம் அருந்தக் கூடாது, மிருக பலி தரக் கூடாது
5) நெற்றியில் விளக்குத் திரி போல நாமம் இட வேண்டும்
6) உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்
7) கூட்டாக வழிபாடு செய்ய வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானை- நூல்

இறைவன் இந்த மண்ணில் அவதரிக்கும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அவனின் அவதாரத்தை அறிவதற்கு புண்ணிய இறைநூலை கொடுக்கிறான். ஸ்ரீமன் நாராயணர் எடுத்த வைகுண்ட அவதாரத்தை அறிவதற்கும், நல்வாழ்க்கை வாழ்ந்து கலியை கடர்வதற்க்கும் நமக்கு கிடைத்த புண்ணிய ஆகமம் அகிலத்திரட்டு. இப்புனித ஆகமமானது கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி (10th December 1841 CE) வெள்ளிக்கிழமை, ஆண்டவர் தனது சீடரான அரிகோபாலன் சீடரின் அகமிருந்து அருளி, சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டது. இவ் அகிலத்திரட்டு அம்மானை என்பது

 “தர்ம யுகமாக்கி தாரணியை ஆளுதற்கு கர்ம கலியில் கடவுளார் வந்தக் கதை”

மேலும், இப்புனித ஆகமமானது உலகத்தோற்றத்தையும், இதுவரை நடந்த நிகழ்வுகளையும், நாராயணரின் அவதாரங்களையும், இனி நடக்கப்போகும் நிகழ்வுகளையும் வரிசையாக கூறுகிறது.  ஆம், நாராயணரின் ராமவதாரத்தை அறிய ராமாயணமும், கிருஷ்ணவதாரத்தை அறிய மகாபாரதமும் உதவுவது போல வைகுண்டவதாரத்தை அறிய அகிலத்திரட்டு உதவுகிறது.

தான் முன் பிறவிகளில் எப்படி எல்லாம் பல்வேறு அவதாரங்கள் எடுத்து – இராமனாக, கிருஷ்ணராக, சுப்ரமண்யராக, நரசிம்மராக- வந்து தீயவர்களான இராவணண், துரியோதனன், சூரன் போன்றவர்களை அழித்தேன் என்ற கதையை தன் சீடரான இராமகோபால் என்பவர் மூலம் எழுதிய அகிலத்திரட்டு என்ற நூலில் விவரமாக அவர் எடுத்து உரைத்தார். அந்த நூலில் கூறப்பட்டு உள்ளவை பெருமளவில் புராணங்களில் எழுதப்பட்டு இருந்ததில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஆனால் அந்த நூலே அய்யா வழியினரால் வேத புத்தகமாகக் கருதப்படுகின்றது.

Please send your comments to the author on this article