ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் – 7

சென்னை மயிலாப்பூரில்

முண்டகண்ணி அம்மன் ஆலயம்

சாந்திப்பிரியா

சென்னை மயிலாப்பூரில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற ஆலயம் முண்டகண்ணி அம்மன் ஆலயம். அந்த ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகின்றார்கள். முண்டகண்ணி அம்மனை சப்த கன்னிகைகளில் ஒன்றானவர் எனவும், ரேணுகா தேவியின் அவதாரம் எனவும் நம்புகிறார்கள். ரேணுகா தேவி மாரியம்மன்களில் ஒருவளாக கருதப்படுபவள். அந்த ஆலயத்தில் நாக வழிபாடும் விசேஷமாக உள்ளது என்பதினால் மாரியாம்மனான ரேணுகா தேவியே அவள் என்பது நம்புவதற்கு காரணமாக உள்ளது. ஆலய சன்னதிக்குப் பின்னால் பெரிய ஆலமரமும் அதன் அடியில் நாகங்களின் உருவங்களும் உள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் அங்கு சென்று அங்குள்ள பல விதமான நாகத்துக்கும் , அந்த ஆல மரத்துக்கும் மற்றும் அங்குள்ள பாம்புப் புற்றுக்கும் பால் ஊற்றி அபிஷேகம் செய்தது வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்பது இதீகமாக உள்ளது. பொதுவாகவே முண்டகண்ணி அம்மன் என்றால் பெரிய கண்களைப் பெற்றவள் என்ற அர்த்தம் உண்டும். அதற்கு ஏற்றாற் போலவே ஆலயத்தில் உள்ள தேவியின் கண்களும் பெரியதாகவே உள்ளன.
முண்டகண்ணி அம்மனும் ஒரு காலத்தில் கோல விழி அம்மனைப் போலவே கிராம தேவதையாகவே அந்த இடத்தில் இருந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது . ஆலயம் அங்கு எப்படி வந்தது என்பதற்கு சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. கிராம அல்லது ஊர் எல்லை அம்மன் கோவிலாக இருந்து அதை மக்கள் தம்மைக் காக்க வழிபாட்டு இருக்க வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். அந்த அம்மன் மிகவும் சக்தி வைந்தவலாகவே உள்ளாள் என்பது அங்கு வரும் கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும். ஆலயம் சிறிதாக இருக்கலாம், ஆனால் சக்தி பெரியது. மயிலை கபாலீஸ்வரர் அறுபத்து மூவர் உற்சவத்தில் ஊர்வலத்தில் முண்டகண்ணி அம்மனும் பங்கு பெறுகின்றாள். அந்த ஆலயத்தில் உள்ள தேவியின் வடிவம் எவரும் செதுக்கி உள்ளது போல இல்லை எனவும் அது ஸ்வயம்புவாகவே அப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதும் தெரிகின்றது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அந்த அம்மன் தமது வீட்டில் அம்மை நோய் இருந்தால் அதை நிவர்திப்பாள், தம்முடைய கஷ்டங்களைக் களைவாள், நோய் நொடிகளைத் தீர்ப்பாள் என்ற நம்பிக்கையில் வந்து வழிபடுகின்றனர். ஆடி மாதங்களில் பால் குடம் ஏந்தி வந்து பால் ஊற்றுவதும், பொங்கல் படைத்து வைப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தை மாதத்தில் கடைசி வெள்ளியன்று ஆலயத்தில் 1008 தீபங்கள் எலுமிச்சை பழங்களில் நெய் தீபமாக ஏற்றப்படுமாம். ஒரு காலத்தில் அங்கு தீ மிதிப்பு விழாவும் நடைபெற்றது உண்டாம். சாதாரணமாகவே மாரியம்மன் வழிபாடு தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. இந்த அம்மனும் மாரியம்மனைப் போன்றதே என்பதினால் அங்கு வேத முறை வழிபாடுகள் இல்லை. அம்மன் அருகில் செல்ல முடிகின்றது. பலர் தம் குழந்தைகளை அங்கு கொண்டு வந்து அம்மன் முன் கிடத்திவிட்டு எடுத்துச் செல்கிறார்கள்.