தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு-5

சென்னை மயிலாப்பூர்

மல்லீஸ்வரர் ஆலயம்

சாந்திப்பிரியா

நம்மில் பலரும் அது நடக்கும், இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்கின்றோம். ஆனால் அங்கு அந்த ஆலயம் எப்படி வந்தது. அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அதன் தலவரலாற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான தல வரலாறு.

சென்னையில் காஸ்யபர், அகஸ்தியர், பிருகு போன்ற பல முனிவர்கள் வழிபட்ட சில முக்கியமான சிவஸ்தலங்கள் உண்டு. அந்த காலத்தில் இந்த இடம் தொண்டை மண்டலம் என அழைக்கப்பட்டதாம். மேலும் இங்குதான் சிவபெருமானிடம் பல முக்கியமான புராண நாயகர்கள் அருள் பெற்ற பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

ஒரு முறை சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார். பலமுறை பல்வேறு ரூபங்களிலும் அவதாரங்களிலும் சாப விமோசனம் அடைந்த பார்வதியை சிவபெருமான் மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் மணந்து கொள்ள வேண்டி இருந்தது. திருமணம் ஆனவுடன் ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கினார்கள். பார்வதி தேவி தனக்கு மல்லிகைப் பூ மிகவும் பிடிக்கும் எனக் கூறியதினால் தற்போது ஆலயம் உள்ள இந்த இடத்தில் வந்து தங்கினாராம். அந்த இடம் அந்த காலத்தில் மூழுவதும் மல்லிகை மலர்களைக் கொண்ட காடாகவே இருந்தது. அவள் தினமும் மல்லிகைப் பூக்களினால் ஆன மாலையை அணிந்து கொண்டு சிவபெருமான் முன் நின்று நடனம் ஆடுவாளாம். ஆகவே அவளை மல்லீஸ்வரி என அழைத்தாராம்.
அப்போது அயோத்தியாவில் பிரதான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகளுக்கு வெகு காலம் திருமணம் ஆகவில்லை. ஆகவே அவன் பிருகு முனிவருடைய அறிவுறையை ஏற்று மல்லீஸ்வரர் உள்ள இந்த இடத்திற்கு வந்து நாக தோஷத்தை விலக்கி அவளுடைய திருமணத் தடையை விலக்க வேண்டும் என சிவபெருமானைத் துதித்தபடி கடுமையான தவத்தில் இருந்தார். அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவர் முன் தமது மனைவியான பார்வதியுடன் காட்சி அளித்து அவருக்கு அருள் புரிய அந்த மன்னனின் மகளுக்கு திருமண பாக்கியம் கிடைத்ததாம்.

அது முதல் திருமணத் தடையிருந்தவர்கள் லிங்க உருவில் அங்கு இருந்த மல்லீஸ்வரர்களை (சிவன் -பார்வதி) வந்து வழிபட்டு திருமணத் தடைகளை விலக்கிக் கொண்டனர். அந்த ஆலயத்திற்கு திங்கள் கிழமை சென்று மல்லிகை மாலைப் போட்டு ஆறு திங்கள் கிழமைகள் மல்லீஸ்வரரை வணங்கினால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை துவங்கியது. வெகு காலத்துக்குப் பின்னர் அங்கு ஆலயம் அமைந்ததாம். மல்லீஸ்வரி என்கின்ற பார்வதியுடன் ஈசன் சேர்ந்து அங்கு இருந்ததினால் இருவர் பெயரையும் கொண்டு மல்லீஸ்வரி ஈசன் என்ற பெயர் ஏற்பட அதுவே மல்லீஸ்வரர் என பிற்காலத்தில் மருவியதாம். ஆனால் ஆலயம் அமைக்கப்பட்ட கால விவரம் தெரியவில்லை.