திக்குவாய் முனிவர்

சொன்ன நீதிக் கதை – 1

சாந்திப்பிரியா

ஒரு பணக்காரக் கணவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்ஒரு குழந்தைகள் பிறந்தன. மூத்தவள் குழந்தையைப் பெற்று விட்டதும் மரணம் அடைந்து விட இளையவள் மீது குடும்ப பாரம் விழுந்தது.  தன் இரு மகன்களையும் இரு கண்கள் போலவே காத்து வந்தாள். அவர்கள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும்வரை  இரண்டு குழந்தைகளின் மீதும் ஒரே மாதிரியாகவே அன்பு செலுத்தி வந்தாள். குழந்தைகளை  பள்ளியில் சேர்த்தனர். பெரிய மனைவியின் மகன் நன்கு படித்து புத்திசாலியாக விளங்க இளையவனின் மகனோ சோம்பேறியாக திரிந்து படிக்காமல் இருந்தான். மூத்தவள் இறந்து விட்டதினால் அவன் மூலம் பிறந்த மகனிடம் தந்தைக்கு பாசம் அதிகம். தினமும் அவனை தனியே அழைத்து பேசிய பின்தான் தூங்குவார்.

ஒரு முறை பக்கத்து வீட்டுப் பெண்மணி அவளிடம் கேட்டாள்ää ‘முட்டாள்தனமாக இருவரையும் ஒன்றாகப் பார்க்கிறாயே, பெரியவளின் மகன் நன்கு படித்து அறிவாளி ஆகி விட்டால் புத்திசாலியான அவன் குடும்பத்தைக் காப்பாற்றட்டும்  என எண்ணி உன் புருஷனிடம் அத்தனை சொத்தையும் அவன் மீது எழுதி வைத்து விட்டால் என்ன செய்வாய்?  நீ அவனுக்கு அடிமையாகி விடுவாயே. அவன் உன் மகனை துரத்தி விட்டால் என்ன ஆகும்  என்றெல்லாம் கூறி பயமுறுத்தினாள்.

மனதில் விஷம் இறங்க இளையவள் அன்று முதல் தன் மூத்தவளின் மகனை கொடுமைப்படுத்தத் துவங்கினாள். அந்த சிறுவன் பாவம் என்ன செய்வான்?

அந்த ஊரில் ஒரு சன்யாசி தங்கி இருந்தார். எவருக்கேனும் பிரச்சனை என்றால் அவரிடம்தான் சென்று தீர்வு கேட்பார்கள். ஆகவே அந்த சிறுவனும் குருவிடம் சென்று அழுதான். குரு அவனுக்கு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி அன்று இரவு எப்போதும் போல ‘இன்று எப்படி இருக்கிறாய்” என  தந்தை கேட்க  பேச்சு வாக்கில் மூத்தவன் மகன் கூறினான் ‘ இரண்டு தந்தைகள் உள்ள எனக்கு இந்த வீட்டில் எனக்கு பிரச்சனைதான். என்ன செய்வது?. இரண்டு தந்தைகளா?….என்னடா உளறுகிறாய் எனக் கேட்க மகன் கூறினான்‘ நான் ஏன் அப்பா உளற வேண்டும் ? நான் உண்மையைத்தான் கூறுகிறேன்” எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.

அதைக் கேட்ட தந்தை துணுக்குற்றான். மேலும் என்ன கேட்பது? மனைவி மீது சந்தேகம் வந்தது. இரண்டாவது தந்தையா? யார் அவர்? மனைவி கள்ளத் தொடர்பு வைத்து உள்ளாளா?  மகனிடம் அதை எப்படி நேரில் கேட்பது? ஆகவே தனது மனைவி பற்றி தெரிந்து கொள்ள இரண்டாவது மகனிடம் ‘இன்று போஸ்மேன் வந்தானா? இன்று அந்த நண்பர் வந்தாரா? அவன் வந்து எதுவும் தந்தானா என மறைமுகமாக பல விஷயங்களை பற்றிக் கேட்டு, வீட்டிற்கு யார் யார் வந்தனர் எஎன்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தான் . அந்த சிறுவனோ  தான் வீட்டில் இருந்தால்தானே தனக்கு யார் வருகிறார்கள் போகிறார்கள் எனத் தெரியும் என்று கூறிவிட்டான்.  இது சிலநாட்கள் தினமும் தொடர்ந்தது.

தினமும் எந்த விதத்திலாவது தனது மூத்த மகனிடமும் அவன் தன் மனைவியின் நடத்தைப் பற்றி கேள்வியை மாற்றி மாற்றிக் கேட்டாலும் மகன் தந்தது ஒரே பதில்தான். அதனால் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட அதன் காரணத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போனவள் அந்த ஊரில் தங்கி இருந்த குருவிடமே சென்று அழுதாள்.

அவர் அவளுடைய குடுப்பத்தைப் பற்றி விஜாரிப்பது போல நடித்துவிட்டு உனக்கு ஒரு தோஷம் உள்ளது. உன்னுடைய இராசிப்படி உன்னுடைய  மூத்தவளின் மகன் மனம் மகிழ்வோடு இருக்குமாறு இருந்தால்தான் அந்த தோஷம் விலகி உன் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இல்லை எனில் மூத்தவளின் ஆவி உன்னை சபித்துக் கொண்டே இருக்கும். உனக்கு அமைதி இருக்காது என்றார். அவளும் மறுநாள் தனது மூத்தவளின் மகனை அழைத்து வந்து அவன் தன் பின்ளை எனவும், அவனுக்கு எந்த விதமான கஷ்டமும் இன்றி பாதுகாப்பேன் எனவும் சத்தியம் செய்து கொடுத்தாள்.

மறுநாள் முதல் மூத்தவளின் மகன் அவளால் எந்த துன்பத்தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே இரண்டொரு நாளில் மீண்டும் மகனிடம் வேறு மாதிரியாக அதே கேள்வியை தந்தைக் கேட்க மகன் எரிச்சல் அடைந்தது போல தன்னைக் காட்டிக் கொண்டு கூறினான் ‘ என்ன அப்பா, தினம் தினம் இதையே கேட்கிறீர்கள். நான்தான் கூறி விட்டேன் அல்லவா. இந்த வீட்டில் இரண்டு தந்தை உள்ளனர் என. என் அம்மாவின் கணவன் சாந்தமானவர், சித்தியின் கணவரோ கோபக்காரர். இருவருக்கும் இடையே நான் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுகிறேன்’ எனக் கூற புத்தியில் அடித்தது போல உணர்ந்த தந்தையின் சந்தேகம் தீர்ந்தது. வீட்டில் அமைதி நிலவியது.

நீதி:- பிறர் சொல்லைக் கேட்டு சுய புத்தியை இழக்காதே. எதையும் நன்கு சிந்தித்தே முடிவு செய். துன்பம் வராது.