ஆலய  பிரதர்ஷணம்

சாந்திப்பிரியா

நம்மில் பலரும் ஆலயத்திற்கு செல்கின்றோம். பிரதர்ஷணம் செய்கின்றோம்.  ஆனால் எதற்காக வலதுபுறத்தில் இருந்து இடப்புறமாகச் செல்ல வேண்டும்? சில ஆலயங்களில்  சில கட்டுப்பாடுகள் அதற்கு ஏன் என்பது பற்றியோ அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான கட்டுரை.

ஆலயத்தில் அல்லது எந்த பூஜைகளிலாவது வலதுபுறத்தில் இருந்து துவங்கி பிரதர்ஷணம் செய்யப்பட வேண்டும் என்பதின் காரணம் என்ன எனில் இறைவன் தன் வலக் கையைத் தூக்கியே நமக்கு ஆசிகள் தந்து அருள் புரிகின்றார். ஆகவே அவர் அருள் தரும் வலது புறத்தினை நோக்கியே எந்த நல்ல காரியத்தையும் செய்யத் துவங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகம். மேலும் எந்த ஒரு நல்ல செயலையுமே செய்வதற்கு -சாப்பிடுவது முதல் – மனிதர்கள் வலது கையையே பயன்படுத்துகின்றனர். இடது கை பழக்கம் உள்ளவர்கள் கூட இடது கையை வேறு செயலுக்கே பயன்படுத்துவார்கள். பூஜை செய்யும் போது பூக்களை வலது கையினால்தான் போடுவார்கள். உயிர் எழுத்துக்களைப் பாருங்கள், அவை அனைத்துமே வலது பக்கத்தை நோக்கியே செல்லும். இந்துக்கள் போட்டுக் கொள்ளும் பூணலின் மேல்புறம் வலப்புறத்தின் உச்சியிலேயே உள்ளது.  இடதுபுறத்தில் உள்ள இதயம் நின்று விட்டால் மனிதன் இறந்து விடுவான். ஆகவே இடதுபுறம் துயரத்தைத் தரும் இடம் என்பதினால் ஆண்டவன் உள்ள இடம் வலப்புறமாக கருதப்பட்டது. திருமணம் ஆனப் பெண்ணை வலது காலை வைத்து உள்ளே வா என புகுந்த வீட்டினர் அழைப்பார்கள். திருமணம் ஆனதும் பக்கத்துப் பக்கத்தில் நிற்கும் கணவன் மனைவியை வலது கைகளால் பிடித்துக் கொண்டு நின்றபடியே ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுவார்கள்.  மேலும் வினாயகருக்கும் முருகப் பெருமானுக்கும் ஏற்பட்ட சச்சரவில் இருவருமே வலப்புறத்தில் இருந்தே ஓடத் துவங்கினார்கள். வினாயகர் தமது பெற்றோர்களை வலப்புறமாகச் சென்று பிரதர்ஷணம் செய்து  வெற்றிக் கனியை பெற்றதினால் வெற்றிக்கு வலப்புறம் என்ற நம்பிக்கை வந்தது. இப்படி பல விதத்திலும் வலது பக்கமே முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்து இருந்துள்ளன. ஆகவே நல்ல காரியங்களை வலப்புறத்தில் இருந்தே துவக்க வேண்டும்,  வலப்புறத்தில் உள்ள ஆண்டவனை நம் வலக் கையினால் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்ற நம்பிக்கை அதனால்தான் பிரதர்ஷணத்திலும் உள்ளது.  ஆகவேதான் நாம் பிரதர்ஷணம் செய்யும்போது ஆண்டவனின் ஆசிகளைத் தரும் வலது கையை நோக்கிச் சென்று ஆசிகளைப்  பெற்றுக் கொண்டு அதற்கு நன்றியாக அவர் சரீரம் முழுவதற்கும் நம்முடைய பணிவான வணக்கங்களைத் தெரிவிக்க அவரை சுற்றிவிட்டு அவர் முன் வந்து நின்று நன்றி கூறிவிட்டுத் திரும்புகின்றோம்.